Saturday 25 April 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?



“ கண்ணைத் திறந்து கொண்டே யாராவது குழியில் விழுவார்களா?” தன் மனக்குமுறலைக் கொட்டிய அவனிடம் நண்பன் கேட்ட கேள்வி இது.

”கண் என்று ஒன்று இருந்ததால்தான் எனக்கு இப்படி ஆனது! அது இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்” எனப் பதிலளிக்கிறான் அவன்.

“யாரோ ஒருத்தியைப் பார்த்தேன். பார்த்த உடனே அவள்மேல் காதல் வயப்பட்டேன் என்கிறாயே..! உன்னுடைய அறிவு எங்கே போயிற்று?
கண்போகிற இடத்தில் எல்லாம் போக விடாமல் அதைத் தடுத்து, நன்மை எதுவோ அந்த வழியில் போகச் செய்யத்தானே அறிவு?


சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்பதைப் படித்தால் மட்டும் போதாது. இது போன்ற தருணங்களில் கற்றதன்படி நிற்கவும் வேண்டும் ” என்கிறான் நண்பன்.

“ உலகத்தில் அறிவுரை சொல்வதுதானே மிக எளிதானது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். உன்னிடம் அறிவுரை கேட்க வந்தேன் பார். என் புத்தியை……” என இன்னும் புலம்புகிறான் பாதிக்கப்பட்டவன்.

“ சரி சரி ..

அந்த அருவியைப் பார்!

எவ்வளவு உயரத்தில் பெருமிதத்தோடு வந்தது சரிவைப் பார்க்காமல் ஓடி ஓலமிட்டு விழுவதைப் பார்த்தாயா?

காதல் என்று அந்தப் பெண் பின்னால் அலைந்தால் உன் மதிப்பு இது போல உயரத்தில் இருந்து பாதாளத்தில் வீழ்ந்துவிடும்.

அந்த இரைச்சலை கவனித்தாயா?

எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டானே என உன்னை மதித்த பெரியவர்கள் அனைவரும் ஊர் முழுவதும் உன் நிலைமை பற்றித் தமுக்கடித்துவிட மாட்டார்களா?”

என்கிறான் நண்பன்.

காதலிப்பது அவ்வளவு பெரிய தவறா? என்று கேட்கிறான் அவன்.

ஆமாம் அப்பனே…!

அதுதான் எப்படிப்பட்ட அறிவாளியையும் முட்டாளாக்கிவிடுகிறதே! உன் இந்த நிலையைப் பார்த்தாலே அது தெரியவில்லையா ? அதனால் நீ தலையில் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருப்பதை விட்டுத்தொலை. அது முட்டாள்தனமானது என்கிறான் அவன் நண்பன்.

நண்பன் சொல்வதில் ஏதோ நியாங்கள் இருப்பது போலத்தான் தெரிகிறது. அதற்காக இதை அப்படியே விட்டுவிட முடியுமா என்ன…?!!!

இனிப் பாடல்,

பெருவரை மிசையது நெடுவெள் அருவி 
   
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் 
   
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
   
நோதக் கன்றே காமம் யாவதும்
           
நன்றென உணரார் மாட்டும்
   
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.


 நக்கீரர்
குறுந்தொகை - 78

                                                                                                                                                                   
( பெரிய மலையின் பெருமிதத்தில் இருந்து திடீர் சரிவில் சிக்கி ஓலமிடுகின்றது அருவி.

அதன் இரைச்சல் அறிவுரைகளைக் கூறும் பெரியவர்களின் தம்பட்ட ஒலியைப் போலத் தோன்றும்.

அத்தகைய அருவிகள் உள்ள நாட்டை உடையவனே!

நீ கொண்ட காதல்,

எப்படிப்பட்ட அறிவாளியையும் முட்டாளாக்கி விடக் கூடியது.
அதனால்தான் அறிவுடையவர்களால் அது வெறுக்கப்படுகிறது.
எனவே இக்காதல் உனக்கு வேண்டாம்.  )

இனிக் கொஞ்சம் சொல்பொருள் ஆராய்ச்சி

பெரு வரை மிசையதுபெரிய மலையின் உச்சியில் இருக்கும்
நெடு வெள் அருவி  –  நீண்ட வெண்ணிற அருவியானது
முது வாய் கோடியர்அறிவுரை கூறும் தகுதியை உடைய கூத்தர்களின்,
முழவின் -  தம்பட்டத்தைப் போல
ததும்பி - ஒலித்து
சிலம்பின் இழிதரும்சரிந்து வீழும்
இலங்கு மலைவெற்ப - விளங்குகின்ற மலைகளையுடைய நாடனே!
 காமம் - காதலானது
யாவதும் - கொஞ்சம் கூட
நன்றென உணரார் மாட்டும் - இது நன்மையென உணராதவர்களிடத்தும்
சென்று நிற்கும் - சென்று தங்குகின்ற,
பெரும் பேதைமைத்து -பெரிய அறிவின்மையை உடையது
நோதக்கன்று - வெறுக்கத்தக்கது.


இங்கு இந்தக் காதல் நன்று தீது எனப் பிரித்தறியாத அறிவில்லாரிடத்தும் இருக்கிறது என்பதால், அதைப் பிரித்துணரும் அறிவு பெற்ற உன்னிடத்தும் இருக்கிறது என்று வலிந்து பொருள் கொள்ள நேர்கிறது.

ஆனால் இந்த இடத்தில், உணரார் மாட்டும் என்றிருப்பது, உணர்வார் மாட்டும் என்று இருந்தால் பொருள் இன்னமும் வலிமை பெறும். இப்பாடலுக்கு ஏற்பப் பொருத்தமுடையதாக இருக்கும்.

ஆனால் நம் விருப்பப்படியெல்லாம் அப்படிப் பொருளுக்காகச் சொல்லை மாற்ற முடியாதே..?

மனம் சொல்கிறது அப்படிக் கொள்வதே சிறப்பு என்று. அதனால் மட்டுமே இதைச் சொல்லிப் போகிறேன்.

அடுத்து,

பேதைமை,

என்னும் சொல், “செய்யவேண்டியதையும் தவிர்க்க வேண்டியதையும் அறியாமல் இருத்தல்” என்பதைக் குறிக்கிறது.

திருவள்ளுவர் இதனை, துன்பம் விளைவிப்பதை ஏற்றுக் கொண்டு இன்பம் தருவதை இழத்தல் என்கிறார்.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல் ” (  குறள்- 831 )

பெரும் பேதைமை என்று ஏதேனும் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டால், இருக்கிறது.. அது தன் நலனுக்கு ஆகாத ஒன்றை மிகவும் விரும்பி மேலும் மேலும் செய்தல் என்று கூடுதல் விளக்கம் அளிக்கிறார்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.  ( குறள் – 832 )

இங்கு நண்பன் கூறிய பேதைமை .. பெரும்பேதைமை இரண்டும் காதலுக்குப் பொருந்துகிறதா…?

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் அவன் என்ன மறுமொழி கூறப்போகிறான்..?

பார்ப்போம்.

( சங்க இலக்கியப் பதிவுகளின் தொடர்ச்சி )

படங்கள் - நன்றி -https://encrypted-tbn3.gstatic.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

43 comments:

  1. அன்புள்ள அய்யா,

    ’எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?’ காதல் - காதலிப்பது பற்றி சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையில் நக்கீரரின் பாடலுக்கு நல்லதொரு விளக்கம் கூறினீர்கள்.

    ‘ஆறிலிருந்து அறுபது வரை’ அனைவருக்கும் பிடித்த பாடல்...

    கண்மணியே காதல் என்பது கற்பனையோ
    காவியமோ கண் வரைந்த ஓவியமோ
    எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
    பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

    மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
    நேரமும் வந்ததம்மா
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
    இந்தப் பாவையின் உள்ளத்திலே
    பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
    ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

    (கண்மணியே)

    பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்
    தேவையை நானறிவேன்
    நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
    இளம் வயதினில் வந்த சுகம்
    தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
    ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

    நன்றி.
    த.ம. 2.




    ReplyDelete
    Replies
    1. அய்யா உங்கள் வருகைக்கும் பாடலொன்றைத் தொடர்பு படுத்திப் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றிகள்.

      பாடலைக் கேட்டிருக்கிறேன்.

      ஆனால் இப்படிப் படித்து உள்வாங்குவது போல் உள்வாங்கியதில்லை.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. மறுமொழிக்காகக் காத்திருக்கின்றேன் நண்பரே
    தம 2

    ReplyDelete
    Replies
    1. ஓரிரு பதிவுகளுக்குப் பின் தொடர்வோம் அதைக் காணலாம் அய்யா!

      தங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  3. பழைய நூல்களின் பாடல்களுக்கு தாங்கள் தரும் விளக்கமும் பாடலும் நன்றாக இருக்கிறது. தொடரட்டும் தமிழ் தொண்டு.
    த ம 4

    ReplyDelete
  4. காதலில் வெற்றி அடைந்தவர்களிடமும் தோல்வி அடைந்தவர்களிடமும் கேட்டால் இன்னும் நிறைய அனுபவங்கள் வந்து விழும்...

    ReplyDelete
  5. மலைநாட்டுக்கு சொந்தகாரன், மலைநாடானது, அழகிய ஆர்பரித்து கீழ் விழும் அருவியை உடைய,
    சரி இங்கு, பிரித்தரிய முடியாத என்று வலிந்து பொருள் கொள்ள வேண்டிய வகை அல்ல,
    உணராதவர்களும் கூட,
    காதலும், காமம் ஒன்றா?
    காதலே துன்பம் தானே,,,,,,,
    தங்கள் பதிவு அருமை,

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் நன்றி சகோதரி!

      Delete
  6. ஆசிரியரின் அடுத்த மறுமொழி என்னவோ?
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. நான் தேட வேண்டாமா அய்யா :))

      காத்திருங்கள்.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  7. பொல்லாதது எனச் சொன்னாலும் கேளாதது.....என்ற பாடலை நினைவுப்படுத்தும் பகிர்வு.

    அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  8. #காதல் என்று அந்தப் பெண் பின்னால் அலைந்தால்#
    அலைச்சல் இன்றுவரை ஓய்ந்த பாடில்லை .எந்தப் பெண்ணுமே அலைந்ததாய் தெரியவில்லையே :)

    ReplyDelete
    Replies
    1. அது கூடாதது என்று இலக்கணங்கள் சொல்வது தாங்கள் அறியாததா பகவானே..!!

      ஆனாலும் புறனடைகள்...!!

      நன்றி

      Delete
  9. அலைந்தே திரிவது ஆண் பாணி
    அலைய விடுவது பெண் பாணி
    இந்த அம்மணிகளுக்குள்
    அடங்குவது அம்பானியும் கூட

    தமிழ் மணம் 10

    ReplyDelete
    Replies
    1. உம்பாணி நன்றாக இருக்கிறது நண்பரே!

      நன்றி

      Delete
  10. ஓ! காதல் நல்லது என்று உணராமல் காதலிக்க மாட்டேன் என்று இருப்பவர்களிடமும் காதல் சென்று சேரும் அல்லவா? என்ன இப்படி காதல் நல்லது இல்லை என்று சொல்லிவிட்டீர்களே :)

    ReplyDelete
    Replies
    1. ““““என்ன இப்படி காதல் நல்லது இல்லை என்று சொல்லிவிட்டீர்களே““““““

      நான் அப்படிச் சொல்வேனா :)

      இது நண்பன் சொன்னதல்லவா..?

      பின்னால் ஏதாவது கஷ்டம் என்றால் “ நான் அப்பவே சொன்னேனில்ல? கேட்டியா? “ என்று சொல்வதற்குத் தற்காப்பிற்காகச் சொல்லி வைப்பதுதானே..!

      அவன் தானே உதவப் போகிறவன்.

      நீங்கள் அறியாததா :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. //நான் அப்படிச் சொல்வேனா :)//
      :) சரி அண்ணா , குட் :)

      Delete
    3. ஒ! அப்டி போகுதா கதை:))))

      Delete
  11. \\\\( பெரிய மலையின் பெருமிதத்தில் இருந்து திடீர் சரிவில் சிக்கி ஓலமிடுகின்றது அருவி.///அப்போ மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து பேரிரைச்சலோடு விழவில்லை அருவி அவலத்தின் உச்சத்தில் ஓலமிடுகிறது அருவி பாவம் அல்லவா. ம்..ம் எப்படி இருந்த நான் இப்படி யாகி விட்டேன். நல்ல பொருத்தமான தலைப்பே . காதலுக்கு கண் இல்லை என்பார்கள் இப்போ அறிவே இல்லை என்றாகிவிட்டது .

    காதலில் வீழ்ந்தவுடன் பேதமையில் மூழ்கிடுவர்
    சாதனையே என்றெண்ண சாய்த்துவிடும் கற்பனையில்
    வேதனையை வாங்கும் விலையாக வென்றிடவே
    போதனை வேண்டிமா யும் !
    மேலும் அருமையாக சொல்லிச் செல்லுகிறீர்கள் அனைத்தையும். அடுத்து என்ன சொல்லப் போகிறீகள் அறிய ஆவலோடு தொடர்கிறேன்
    பதிவுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. பேதைமை என்ற சொல்லைப் பார்த்தீர்களா?
      எவ்வளவு அழகும் பொருளாழமும் உள்ள சொல்.
      ரொம்ப நேரமாக அதனைக் கடக்க முடியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  12. குறளுக்கு குரல்...! ஆகா...!

    அடடா...! மணவை ஐயா அருமையான பாடலை சொல்லி விட்டாரே... அவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என்ன டிடி சார்,

      நீங்கள் ஏதேனும் குறள் சொல்வீர்கள் என்று பார்த்தால் :(

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  13. தலைப்பும் சங்கப் பாடல்களை விளக்கும் உங்கள் சிறப்பு நடையும் அட்டகாசம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டிற்கு நன்றி அய்யா!

      Delete
  14. காதல் என்பது கண்டவுடன் ஏற்பதும் infatuation என்னும் அளவில்தான் சங்க காலத்தில் அறியப் பட்டதோ? ஆனால் இன்றும் அதையே காதல் என்று சொல்லிப்பேசியும் பாடியும் திரிகிறோம் .

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா.

      பார்த்ததும் அந்த முதற்பார்வையிலேயே பிடித்துப் போய்விட வேண்டும்.

      அதுதான் காதலின் தொடக்கப்புள்ளி.

      அதன் பயணம் அதன்பின் தான்.

      எப்போதுமே..!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  15. மேலே “கண்டவுடன் ஏற்படும்” என்றிருந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  16. சிறப்பானவிளக்கம்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும மிக்க நன்றி திரு. தளிர். சுரேஷ் அவர்களே!

      Delete
  17. அய்யா,
    பாடலின் பொருளை நேர்த்தியாகப் பதிந்துள்ளீர்கள்.
    உங்கள் உழைப்பில் சங்கப்பாடல்கள் எங்களுக்கு புரிகின்றது.
    மறுமொழி எப்பொழுது?
    செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ
    யுற்றா ரறிவதொன் றன்று. ( கு-1255)
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      மறுமொழிதானே ....... இதோ அளித்துவிட்டேன் . :))

      இந்த முறை அருமையான குறளோடு வந்துவிட்டீர்கள்.

      ஏன் அவன் செற்றார் ஆனான்?

      பெருந்தகைமை எது..?


      காமநோய் உற்றார் அறியாதது எது..?

      இதைப் பற்றியே ஒரு பதிவிடலாம் போல இருக்கிறதே..!!

      மிகப் பொருத்தமான குறளை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி.

      தங்களின் தொடர்ச்சிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் படியான பாடலின் விளக்கம் மிகவும் நன்று. கூடுதலாக பேதைமை பற்றிய விளக்கமும் அறிந்துகொண்டேன். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் தொடர்வதற்கும் கருத்துரைப்பதற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete

  19. வணக்கம்!

    மனத்தை மயக்கி மணக்கும் தலைப்பு!
    தினத்தை இனித்திடச் செய்யும்! - வனம்போன்று
    பொங்கும் அழகில் பொலிகின்ற இக்கட்டுரை
    தங்கும் உளத்துள் தழைத்து!

    ReplyDelete
    Replies
    1. இக்கட் டுரையெல்லாம் இன்றமிழை உம்போலத்
      திக்கெட் டுரைப்பார்க்கே ஈடாமோ? - சிக்கிப்போம்
      நற்கவிதை யாக்கும் நறுந்தமிழப் பின்னூட்டம்
      சொற்கனலிற் செய்த சுடர்.


      வருகைக்கும் வாக்கிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  20. ஆயிரம் சொல்லுங்க !! அது யானையை வீழ்த்திய மதி அல்லவா??? மதி மூழ்க்கும் நதியல்லவா?? அந்த நண்பன் பாவம், கொஞ்ச நாள் கழிச்சு " இன்னும் நண்பர்கள் பேரசொல்லி ஊரு சுத்தாதீங்க , ஒழுங்கா குடும்பம் நடத்துங்க:னு அந்த பொண்ணு அவனுக்கே ஆப்புவைக்க போறது தெரியாம என்னம்மா பீல் பண்ணுறார்!! பேதைமை --வள்ளுவர் வள்ளுவர் தான். விஜூ அண்ணா விஜூ அண்ணா தான். இன்றைய நாளின் சிந்தனைக்கு இது போதும்!!!!:)

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா!

      வாருங்கள் சகோ!

      என்ன பதிலெழுத எனத் தெரியவில்லை.

      எங்கே நம் நட்பைக் கெடுத்திடுவாளோன்னு பயந்துதான் நண்பன் இப்படிச் சொல்றானோ..!

      பார்ப்போம்.

      தொடர்வதற்கு நன்றி.

      Delete
    2. // இன்னும் நண்பர்கள் பேரசொல்லி ஊரு சுத்தாதீங்க , ஒழுங்கா குடும்பம் நடத்துங்க:னு அந்த பொண்ணு அவனுக்கே ஆப்புவைக்க போறது // ஹாஹா எப்படி மைதிலி!! :))
      இது நடந்தாலும் தோழன் பாவம். இல்லை, வாயில் வேண்டியும் தூது சொல்லவும் அலையப் போகிறானே, அதனாலும் பாவம். ஆக மொத்தம் தோழன் பாவம் :))
      விஜு அண்ணா, நான் ஜூட்.

      Delete
  21. அருமையான விளக்கங்கள்
    நன்றி செல்வேன்

    ReplyDelete