Thursday 13 November 2014

வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்.



வெண்பாப்புலி மேக்குடி நரசிம்மன் அய்யாவின் பாடலில் பிழையிருக்கிறது என்று கூற யாராயிருந்தாலும் நேர் நிரை பற்றிய அறிவு மட்டும்  போதுமானதாய் இருக்கும்.
ஆனால் வெண்பா எழுதுவதற்கு வார்த்தைகளைத் தேடி நொந்த கதை எல்லாருக்கும் பொதுவானதுதான்.
சென்ற இரு பதிவுகளின் பின்னும் வெண்பா எழுதிப் பார்த்தவர்களும் பின்னூட்டத்தில் வந்தவர்களும் சிலரேனும் இருப்பார்கள். வெண்பா அறிந்த பலரும் ஒன்று இரண்டு என்று இவன் சொல்லுவது சரியா என்று சரி பார்த்திருப்பார்கள்!
எழுத முயன்று சொற்களைத் தேடித் தேடிச் சோர்ந்து போய்,
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்என்று விட்டவர்களும் சிலர் இருப்பர். தேவையில்லை எனிலும் தெரிந்து வைத்துக் கொள்வோம் என்று சிலர் இருக்கலாம்.
உங்களில் மிகப்பலர்க்கும் ஏற்பட்டு இருக்கிற வெறுப்பு எனக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
வெண்பாவைப் பிழையாக இப்பொழுதும் நான் எழுதுகிறேன்.
உன் கண் உன்னை ஏமாற்றினால்என்பது போலத்தான். கண் ஏமாற்றி விடுகிறது. தவறானால் என்ன ..? எனக்கு என்ன தவறு எனத் தெரியும்.
அதைத் திருத்தவும் முடியும் என்று நினைத்துவிட்டால் பின் பிரச்சனை இல்லை. தளை தவறி எழுதிவிட்டோம் என்பதற்காக என்ன தலையையா எடுத்துவிடப் போகிறார்கள்.
இந்த வெண்பாப் பித்து இருக்கிறதே உண்மையில் அது வித்தியாசமான பித்துத் தான்!
யாராலும் எழுதக் கடினமென்னும் ஒரு வடிவத்தை முயன்று பெற்ற பின்,
பந்தை எறிவது போல மாற்றி மாற்றி எறிந்து பின்னூட்டமென்ற பெயரில் விளையாடுவது இருக்கிறதே அது ஒரு சுகம் தான். இணையத்து இப்படி விளையாடிக் கொண்டிருப்பவர்களை வெகு எளிதாய் நீங்கள் கடந்திருக்க முடியும். ஆனால் அதற்குப் பின்னால் தொடக்கத்தில் அவர்கள் உழைத்த உழைப்பு அதை முயன்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பழகியபின் ஒரு நிமிடத்திற்குள் ஒரு வெண்பாவை எழுதிவிடலாம். மீண்டும் சொல்கிறேன் வெண்பாவை எழுதிவிடலாம். கவிதையை என்று சொல்லவில்லை.
நானும் இப்படி வெண்பாவிற்குப் பின்னூட்டமென்ற பெயரில் இன்னொரு வெண்பாப் பந்தைப் பிடித்து வீச நினைத்துப் பல சமயங்களில் பந்தைத் தவற விட்டிருக்கிறேன்.
நேற்று கூட ஒரு பந்தை மணவை ஜேம்ஸ் அய்யாவின் தளத்தின் பின்னூட்டத்தில் தவறவிட்டேன்.
இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தது பாருங்கள் தொலைபேசி அழைப்பு. நம்பினால் நம்புங்கள்…!
என்ன எம்பதிவோட பின்னூட்டத்தில வெண்பாவைத் தப்பாப் போட்டிருக்கிங்க? தளை தட்டுதே..!“ என்றார் எடுத்த உடனேயே..!
அவரோ தமிழாசிரியர் தளை தட்டுகிறது என்பதைத்  தலையை வெட்டும் பதட்டத்தோடு சொன்னது மாதிரித் தெரிந்தது.
தட்டுனா தட்டட்டும் சார்! “ காலைல பாத்துக்கலாம்என்றேன் பொறுமையாக!
இல்ல இல்ல தப்பு இருக்கக் கூடாதுஒன்னு ரெண்டு சொல்லிக் குடுத்திங்க. இப்ப  ரெண்டில ஒண்ணும் ஒண்ணும் சேரலாமா? “ என்றார் அவர். இரண்டில் ஒன்று பார்த்துவிடும் முடிவோடுதான் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.
சேரக் கூடாது சார். சேராத இடங்களிலே சேர வேண்டாமின்னு அவ்வையோ யாரோ சொல்லியிருக்காங்களே சார்என்றேன்  முனகலாய்த் தூக்கக் கலக்கத்துடன்!
.
 “ இல்ல நான் அதை அழிச்சிடுறேன். திருத்திப் போடுங்க
தூக்கம் கண்களை விட்டு நழுவத் தொடங்கி இருந்தது.
சரிங்க சார்! காலைல போடுறேனே!“ என்றேன் பயத்துடன். இப்பவே மாத்து என்றால் என்ன செய்வது?
இணையத்து இயங்கத் தொடங்குவதற்காகத்தான் தட்டச்சுக் கற்றுக் கொண்டேன். இப்போதோ எழுதுகின்ற பழக்கம் மெல்லக் குறைந்து விட்டது.
பின்னூட்டமெல்லாம்  பின்னூட்டப் பகுதியில் நேரடியாகத் தட்டச்சுச் செய்வதால் உன்னிப்பாக இலக்கணம் சரியாக உள்ளதா என்பதைப் பார்க்க முடியவில்லை. பலநேரங்களில் சொற்கள் நம்மை ஏமாற்றி விடுகின்றன. எழுதினால், சொற்களை அடித்தும் திருத்தியும்  ஓரளவிற்குப் பிழைகளைத் இனம் காண முடியும் என்றே நினைக்கிறேன்.
அதனால் என்ன ..
நானென்ன வினையின் நீங்கி விளங்கிய அறிவுள்ளவனா?“
தவறு செய்கிறேன். தவறு என்று தெரிந்தால் திருத்திக் கொள்கிறேன்.
அப்படித் தவறாக இவன் என்ன எழுதினான் என்று பார்க்க உங்களுக்கு ஆர்வம் இருக்கும் தானே! மணவையாரின் பின்னூட்டத்தில்
இதோ நான் தவறாக எழுதிய அந்த வெண்பா..

“நன்றி மறந்தகதை! நாயினிழி வானகதை!
கன்று, வளர்த்தபசு கொன்றகதை! - வென்றுவிடும்
ஆசை அழித்தகதை! ஆயிரம் உங்கள்கதை
பேசுமொழி கேட்டேன் புரிந்து.“


என்ன தவறென்று கண்டு பிடித்தீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள்!
ஆம்! அதே தான்!
இந்தக் கதைதான் என் தூக்கத்தைக் கெடுத்தது.
நான் திருத்தி எழுதிய வெண்பாவைக் காண இப்பதிவின் பின்னூட்டத்தைக் காணுங்கள்.

அடுத்து முத்துநிலவன் அய்யா!

இலக்கியச்செல்வர் மகாசுந்தர் அவர்கள்  என்னையும் முத்துநிலவன் அய்யாவையும், இந்தப்பக்கம் வந்துவிடாதீர்கள் என்று சொல்லி  தன் எண்ணப் பறவையில்  ஒரு புதிர் போட, அந்தக் கடுப்பில் நான் அவர்ப் பின்னூட்டத்தில் ஒரு கேள்வி கேட்கச்செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்என்ற அடிப்படையில் முத்து நிலவன் அய்யா எனக்கு மறு புதிர்போட, நானும் மண்டையை உடைத்து அதற்கு பதிலிட, பாதி பதில் சரிப்பா ? இரண்டு கேள்வி கேட்டேனே ஒரு பதில் இங்க இருக்கு .. இன்னொரு பதில் எங்க… ? என்று முத்துநிலவன் அய்யா கேட்க….. ஒரே களேபரம்தான்.
அவரது குறிப்பைக் கண்டதும் இரண்டாவது புதிருக்கும் விடையெனத் தோன்றியதைக்   கடகட என்று  தட்டச்சி அவர் தளத்தில் பதிந்து விட்டேன்.

மறுகணம் தொலைபேசி அழைப்பு பார்த்தால் நம்ப அய்யா தான்!
இரண்டாவது கேள்விக்குப் பதில்சொல்லவில்லை போலிருக்கிறதே!“ என்றார்.
சொல்லி விட்டேன் அய்யா!“
வர வில்லையே..!“
இப்பொழுதுதான் பதிந்தேன்! பாருங்கள் அய்யா வந்திருக்கும்என்றேன்.

வலைப்பக்கத்தைப் புதுப்பித்து விட்டுஆமாம் வந்து விட்டதுஎன்று சொல்லிச் சிரித்துக் கொண்டேஇப்படி இலக்கியப் புதிர்களைப் போட்டுப் படிப்பவர்களை நாம் நம் இலக்கியங்களின் பக்கமும் இழுக்க வேண்டும்என்று சொன்னார் அய்யா!
நல்ல முயற்சி ஆனால் நம்மை இழுத்துவிடாதீர்கள் அய்யாஎன்று மனதிற்குள் சொல்லிக்  கொண்டேன்.

வெளியே சொல்ல முடியுமா?

இந்த வாட்டியும் தப்பிச்சாச்சு. ச்ச்சூசூஅப்பா ….. இதுக்கே கண்ணக் கட்டுதேஎன்று நினைத்தபடிக் கணினியை அணைத்துவிட்டு, கொஞ்சம் வீட்டுப்பாடத்தையும் முடிப்போம் என்று, சமைக்கத் தேவையான பொருட்களை வாங்கக் கடைக்கு வண்டியை எடுத்திருக்க மாட்டேன்.
மீண்டும் நிலவன் அய்யாவின் அழைப்பு..!

எடுத்த உடனேயே கேட்டுவிட்டேன்..!

என்னங்கய்யா வெண்பாவில ஏதும் தப்பிருக்கா?“ இது கூடவா தெரியாது ... எவ்வளவு அடி வாங்கியிருப்போம்?

ஆமாம்! என்னக் குறைக்கனும்என்றார் அவர்.

என்னங்கய்யா குறைக்கனும்?“ இது நான்!

என்னக் குறைக்கனும்இதுஅவர்.

என்ன குறைக்கனுமின்னாலும் இப்பக் குறைக்க முடியாதுங்கைய்யா! வெளிய கிளம்பிவிட்டேன். வந்து....“

அவசரமில்ல.“

நான் அதை அழிச்சிடுறேன். வந்து என்னக் குறைங்கஎன்றார் அவர்.

வண்டி ஓட்டும் போதெல்லாம் இதுதான் ஞாபகம்.

அடடா அடடா அடடா இப்படித் தப்பாகிப் போச்சே……..!“

வந்த உடனேயே அவர் சொன்னது போல மாற்றி விட்டேன்

இதோ இது நான் தவறு செய்த வெண்பா,

குடும்ப விளக்கேற்றிக் கொள்ளு மறிவற்ற
இருண்ட வீடொன்றில் இருந்துதடுமாறி
இப்படி யானேன் இதனை அறியாதேன்
எப்படி ஆனால்தான் என்ன?“

அய்யா தவறென்று சொல்லித் திருத்தியிட்ட அந்தச் சரியான வெண்பாவைப் பின்னூட்டத்தில் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

அடுத்து சகோதரி இனியாவிடம் வாங்கிக் கட்டியது..

இது தனியஞ்சலில் நடந்தது என்பதால் இதை நீங்கள் அவர் பதிவில் காண முடியாது.
எப்படி வெண்பா இருக்க வேண்டும் தெரியுமா? இப்படிஎன்றபடி தலைக்கனத்துடன் ஒரு வெண்பாவைத் தட்டிவிட்டேன்.
நறுக்கென்ற குட்டுடன் போன வேகத்தில் பூமராங்காய்த் திரும்பி வந்தது என் புண்பா. மன்னிக்கவெண்பா“.
இதுதான் நீ வெண்பா சொல்லிக் கொடுக்கும் லட்சணமா..?“
முதலில் உன்னைத் திருத்தப்பா அப்பறம் ஊரைத் திருத்தலாம்என்ற வரிகள் அதில் இல்லாவிட்டாலும், அந்தத் திருத்தத்தில்  என்ன இதைக் கூடவா தெரிந்து கொள்ளாமல் இருப்பேன் நான்?.
சகோதரி இனியா என்ன எழுதியிருந்தார்கள் தெரியுமா?
நீங்கள் என்னைப் பரிசோதிப்பதற்காக  வேண்டுமென்றே தவறாக எழுதி அனுப்பியிருக்கிறீர்கள்
இதைவிட ஒரு அடி கிடைக்குமா எனக்கு?

ஆறாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம் எடுத்த ஆசிரியர் இருந்தார். தப்பும் தவறுமாக எழுதிப் போடுவார். சார்     Spelling mistakes Sir.. என்றால்   Very Good நீங்க அலாட்டா இருக்கிங்களான்னு பார்க்கத்தான் அப்படி எழுதினேன் என்பார்.
கொஞ்சநாள் பார்த்தோம். எதற்கு இவரை அலாட் பண்ண வேண்டுமென்று அசால்ட்டா இருந்து விட்டோம்.
எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் பாதிரியார் லாரன்ஸ் எங்கள் மதிப்பெண் அட்டையைக் கொடுக்க வந்த போது, குறும்புக்கார என் வகுப்புத் தோழன்பாதர் இதுக்கு மீனிங் என்ன பாதர்என அவர் தவறாக எழுதியிருந்த வார்த்தையைச் சரியாகக் காட்டிக் கேட்க. “உஷ் உஷ்எனப் பாதர் பின்னால் மறைந்து நின்றவாறே எங்கள் ஆசிரியர் அந்தக் காலத்திலேயே வடிவேல் பாணியில் வாயில் கீபோர்டு வாசித்து அடக்க முயற்சித்தார். ஏதோ தப்பு இருக்கிறது என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது. என்ன தப்பு என்பது தெரியவில்லை.
போர்டை பார்த்து பாதரின் கண்கள் சிவந்துவிட்டன.
“---------------------- என்ன man Spelling?“ என்ற பாதரின் கர்ஜனைக்கு முன் எங்கள் ஆசிரியர் வெலவெலத்து விட்டார். போர்டில் இருப்பது சரியா? தவறு என்றால் எது சரி என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லை.

மீட் மி இன் மை ஆபிஸ்.. நவ் லீவ் திஸ் கிளாஸ் இம்மீடியட்லி

மதிப்பெண் அட்டையை ஓரமாக வைத்துவிட்டுக் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த பத்தியில் இன்னும் மூன்று பிழைகளைத் திருத்தி அழகான உச்சரிப்புடன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார் பாதர். அன்று அடிவாங்காமல் தப்பித்த மகிழ்ச்சியில் நாங்கள் அனைவருமே அளவுக்கதிகமான ஆர்வத்துடன்  அவரைக் கவனிக்கத் தொடங்கியிருந்தோம்.
பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் அவர். ஆறாம் வகுப்பிற்குப் பாடம் எடுக்க எங்களில் ஒருவராக மாறினார். அந்த வகுப்பு முடியும் முன் அந்த Paragraph ஐப் பெரும்பாலான மாணவர்களை மனப்பாடமாகச் சொல்ல வைத்து விட்டார். தெளிவான உச்சரிப்பும் ஏற்ற இறக்கமும் கொண்ட அந்தப் பகுதியை இப்பொழுது கூடச் சட்டென என்னால் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்ல முடியும்.
அந்த ஆசிரியர் அதற்குப் பின்பு எங்களுக்கு வரவில்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் சகோதரி எழுதியதைப் பார்த்ததும் இந்த நிகழ்ச்சிதான் என்  எனக்கு நினைவுக்கு வந்தது.

இப்பொழுதுதான் வலைப்பக்கமே வந்திருக்கிறேன். அவர் போலக் காணாமல் போய்விடக் கூடாதல்லவா?

அம்மா தாயே! தவறு எனது கவனக்குறைவால்  நேர்ந்தது. நூறு தோப்புக்கரணம் வேண்டுமானால் போடுகிறேன்என்று பதிலளித்து விட்டுத்தான் நிம்மதியானேன். எனக்கு மட்டுமென்னதவறுகள் நேராதா?
இங்குச் சகோதரி இனியா அவர்களைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம் இரண்டு.
அவர்களின் பழமொழி அறிவு.
போகிற போக்கில் பழமொழி ஒன்றை வீசி விட்டுப் போவார்.( நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்.. இதற்கும் ஒரு பழமொழி தயாராய் இருக்கும்)
பல பின்னூட்டங்களில் அவரிடும் இதுபோன்ற பழமொழிகளைத் தொகுக்க வேண்டும் என்று பல முறை எண்ணி இருக்கிறேன். பல பழமொழிகள்( சும்மாச் சொல்கிறேன்.. ஒன்று கூட நான் அறியாதது. நம்புங்க சாமி ) புதியதாய் இருக்கும்.
இரண்டாவது அவர்களின் அயராத முயற்சி.
இதை நான் மட்டுமே அறிந்தவன்.
நானாயிருந்தால் நிச்சயம் சோர்ந்து போயிருப்பேன்.
சரி! சகோதரிக்கு நான் அனுப்பி இருந்த மின்னஞ்சலுக்குச் சகோதரி என் பிழையைச் சுட்டி அனுப்பி இருந்த இதுவரை வலைப்பதிவில் இடம்பெறாத வெண்பா பரம ரகசியமான வெண்பா இது,

வெண்பாக் களமாட வாருங்கள் நானுங்கள்
அண்மை இருக்கின்றேன் ஆதரவாய்!‘ - உண்மையிலே
எப்படி  விரைவாய் எழுதுகிறீர்? என்றெண்ணி
இப்படிச் சொன்னேன் இதை!“

அடுத்த பத்திக்குப் போகும் முன்நான் என்ன தவறு செய்தேன்?“( யாரோ சொன்னது மாதிரி இருக்கே?!) என்பதைக் கொஞ்சம் கண்டுபிடியுங்கள்!

இது இனியா அவர்கள் மேற்கொண்ட திருத்தம்,

வெண்பாக் களமாட வாருங்கள் நானுங்கள்
அண்மை இருக்கின்றேன் ஆதரவாய்!‘ - உண்மையிலே
எப்படி  நன்றாய் எழுதுகிறீர்? என்றெண்ணி
இப்படிச் சொன்னேன் இதை!“

இதை மின்னஞ்சலில் இருந்து எடுத்துத் தருகிறேன்.
இது போல் கவிஞர். பாரதிதாசனார், கவிஞர். இளமதி, மதிப்பிற்குரிய. இ.பு. ஞானப்பிரகாசனார் அய்யா, இவர்களின் வலைப்பூவில் நான் எழுதிய தவறான வெண்பாக்கள் பற்பல.
என் மீது கொண்ட அன்பினால், அவர்களுள் பலர் இதை வெளியிடாததாலும் தனிப்பட்ட முறையில் என் பின்னூட்டத்தில் தவறினைத் திருத்தி மீளப்பதியுங்கள் என்று சொன்னதாலும் தான் நான் செய்த தவறுகளை நீங்கள் அறிந்திட முடியவில்லை. சில பின்னூட்டங்களை நான் மீளக் காணும் போது தவறறிந்து திருத்தியதும் உண்டு. இதோ உங்களுக்கு விதிகளைச் சொல்லிக் கொடுக்கும் நானும் இன்னும் இந்த வெண்பாக் குழிகளில் விழுந்து இன்றுவரை விழுப்புண்களைப் பெற்றபடிதான் இருக்கிறேன்.
இதைச் சொல்லக் காரணம் .. வெண்பா எழுத முயலும் உங்களில் பலரும் தவறுகளுக்காகக் கவலைப் படாதீர்கள் என்பதற்காகத்தான்.
தளை தவறினால் யாரும் உங்கள் தலையை எடுத்துவிடப் போவதில்லை.
தவறை இனம் காணப் பழகுங்கள்.
தவறு செய்தால் அடுத்த முறை நேராமல் கவனமாயிருங்கள்.
செய்த தவறையே மீண்டும் செய்யாமல் ஏதாவது புதிய தவறு செய்யுங்கள்.( வெண்பா எழுதுவதில் செய்யும் தவறை மட்டும்தான் சொல்கிறேன்).
அதை அறிந்து திருத்தும் போது புதிய அறிவு கிடைக்குமே.

( என்னடா இது..வலைச்சர முகவரிக்கு மாறி வந்துவிட்டோமா…..?
இல்லை. வலைச்சர ஆசிரியனாக இவனேதும் பொறுப்பேற்றுக் கொண்டானா, அல்லது அதற்காக ஏதும் பயிற்சி எடுக்கிறானா என்ற சந்தேகம் எதுவும் உங்களுக்கு வரவில்லையே?! நானெல்லாம் இன்னும் அறிமுகப்படுத்தப் படவேண்டிய நிலையில்தான் இருக்கிறேன். இதுல ஆசிரியரா வேற ஆகுறதா?!)
மூன்று புதிய விஷயங்களை அறிவதுடன் இந்த வெண்பாப் பதிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என நினைக்கிறேன்.
சென்ற பதிவில் சகோதரி மைதிலி அவர்களிடம் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும் முதலில்,

புதுகையில் வெண்பாப் புயலினி வீசட்டும்
இப்படி இருந்தா அடுத்த அடிய எழுத முடியாது. ஏன்னா வீசட்டும் ( 1 1 1 ) இதற்கு அடுத்து வரவேண்டிய சொல்  2 இல்தான் தொடங்க வேண்டும்.
ஏனென்றால் புதுகை என்ற முதல்சொல் 2 இல் தொடங்குவதால் அதற்கு உரிய எதுகைக்காக அடுத்த வரியும் 2 இல்தான் தொடங்க வேண்டும்.
கடைசி சொல்லை வேறொன்றாக மாற்றாமலேயே அடுத்த வரியைச் சரியான எதுகையோடு அமைக்க முடியும்!
இலக்கணம் மாறாமல்!
எப்படி!
வழக்கம் போலச் சரியான பதிலோடு வாருங்கள்!
இன்னொரு வெண்பா ரகசியம் உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறது!


இதில் புதிய எழுத்துக்களையோ சொற்களையோ சேர்க்கக் கூடாது.

வெண்பாவின் இலக்கணம் பொருந்த வேண்டும்.

புதிர் தீர்க்க வாருங்கள் சகோதரி!!!


சகோதரியின் பதில்.

புதுகையில் வெண்பா புயலினி வீசட்டும்
மாதுகைத் திறங்கொண்டு நற்றமிழ் பாடட்டும்
ஏதுகற்ப தற்குவ ரம்பும் வயதும்-இனி
வெண்பா தமிழால் பேசு!!


இதற்கு என் விளக்கமாக,

முயன்று தவறித்தான் வெண்பா கற்க முடியும். ஆகவே முயற்சிக்கத் தவற வேண்டாம். சொற்களைத் தேடித் தேடி அடித்துத் திருத்திப் பொருத்தம் பார்ப்பது சிரமமாக எண்ணவோட்டத்திற்குத் தடையாக இருக்கிறதே என்று சலிப்பாக இருக்கிறதா?
சொலல்வல்லை சோர்விலை அஞ்சாய்
இன்னம் கொஞ்சம் முயற்சி போதும். நிமிர்ந்து விடுவீர்கள்.
சரி பாட்டிற்கு வருவோம்.
புதுகை என்பதற்கு மாதுகை என்பது எதுகை இல்லை.
இந்தப் பதிவிலேயே விளக்கி இருக்கிறேன்.
இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது சரி.
ஆனால் முதல் எழுத்து அளவில் ஒன்றாக இருக்க வேண்டுமே?
குறில் எனில் குறில் நெடில் எனில் நெடில் என்னுமாறு.
இங்குப் புதுகை என்பதில் பு குறில்.
மாதுகை என்பதில் மா நெடில் அல்லவா?
எனவே புதுகை என்பதற்கு உரிய எதுகை மாதுகை என்பது ஆகாது.
அடுத்து
மாதுகைத் திறங்கொண்டு என்பது (1 2) (2 1 1)
இரண்டில் வேறாக வேண்டுமே!
மற்றபடி பாடல் சரிதான்.
எதுகையும் மோனையும் இருந்தால் இன்னும் அழகுபடும்
சரி இன்னும் உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.
நீங்கள்ஐந்துவால் குரங்கும் இருபதுகால் ஆடும்என்னும் பதிவின் புதிரை விடுவித்ததால்தான் இதைக் கேட்டேன்.
சரி புதிருக்கு விடை காண்போம்.
புதுகையில் வெண்பாப் புயலினிவீ  சட்டும்!
மதுரகவி வெள்ளத்தில் மூழ்கப்புதியவர்கள்
நீந்தட்டும்! எத்தளையும் நீங்கட்டும்!! வென்றெடுத்து
மாந்தட்டும் வெண்பா மது!!!“
உங்கள் வெண்பாவின் மூன்றாவது வரியில் நீங்களே இதை முயன்றிருக்கிறீர்கள்.
ஏதுகற்ப தற்கு  ரம்பும்

இங்கே சொல்லை உடைத்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா?
இது போல் முதல்வரியில் வீசட்டும் என்ற சொல்லை உடைத்துப் புயலினி என்ற முன் சொல்லுடன் சேர்த்துபுயலினிவீ சட்டும்
என்று மாற்றினால் பிரச்சனை தீர்ந்தது.
சட்டும் என்பது (1 1) அடுத்துவரும் மதுரகவி ( 2 2 1 ) என்பதுடன் இரண்டில் வேறாகிச் சேர்ந்துவிடும். எதுகையும் சரியாகும்.
இப்படி தளைதட்டும் போது எழுத்துகளையோ சொல்லின் பகுதிகளையோ உடைத்து அடுத்த சொல்லில் சேர்த்து எழுதுவதை இலக்கணங்கள் வகையுளி என்கின்றன.
அடுத்த பதிவில்சொல்ல வைத்திருந்த விஷயம் இது.
அதனாலென்ன..! சகோதரி இப்போதே தெரிந்து கொண்டால், விரைவாக வெண்பா எழுத வசதியாக இருக்குமே!
நேரம் கிடைக்கும் போது வார்த்தைகளை இப்படி இணைத்து விளையாடுங்கள்.
எதுகைச் சொற்களைத் தேடுங்கள்!
வெண்பா வசமாகும். எல்லா மரபுவடிவங்களும்தான்

பின்னூட்டங்களைப் படிக்காதவர்களுக்காக வகையுளி என்பதை விளக்கவே  இதைக் கூறினேன். கூறியது கூறலாகக் கருதாதீர்கள்.


இரண்டாவது,

இந்த வெண்பாவின் வகைகள்.
இரண்டு அடிகளில் அமைத்தால் அதை குறள் வெண்பா என்கிறார்கள்.
(     குறள்ன்னாலே இரண்டுங்க ) மூன்று வரிகளில் இருந்தால் அது சிந்தியல்.( சிந்தியல் என்றால் மூன்று)
நான்கு வரிகளில் இருந்து இரண்டாவது அடியின் இறுதிச் சொல்லைத் தனியே ஒரு கோடு போட்டுப் பிரித்துக் காட்டியிருந்தால் அது நேரிசை வெண்பா.
இது தான் பெரும்பாலும் எல்லாராலும் எழுதப்படுவதும் பின்னூட்டமாய் இடப்படுவதும் ஆன வடிவம்.
அதே நான்கு அடிகளில் தனிச்சொல் இல்லாமல் சேர்த்தே எழுதினால் அது இன்னிசை வெண்பா.
ஐந்து அடிகளில் இருந்து பன்னிரண்டு வரிகள் வரை இருந்தால் அது பஃறொடை வெண்பா.
பன்னிரண்டு அடிகளுக்கு மேல் உங்கள் விருப்பப்படி எத்தனை அடிகளை நீங்கள் எழுதிக்கொண்டு போனாலும் அதற்குப் பெயர் கலிவெண்பா.

எல்லா வெண்பாவிற்கும் இறுதி அடி மூன்று சொற்களால்தான் அமைய வேண்டும் என்பதையும் அதன் இறுதிச் சொல் எப்படி அமைய வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். மறந்து போனால் முந்தைய பதிவைப் பாருங்கள்.
அம்புட்டு தாங்க வெண்பாவின் வகை.
( மயூரவியல் சமநிலைன்னெல்லாம் ஒரு கூச்சல் கேட்கும். நானே கூட முன்னாடிக் கூவி இருக்கேன். அதை வெண்பா எழுத முயற்சிப்பவர்கள் கண்டு கொள்ள வேண்டாம்.
வெண்பா வசமான பின் அது பற்றி நிச்சயம் விவாதிக்கலாம்.
கட்டக் கடைசியாக,

மோனைக்கான சில வாய்ப்புகள்.

அகரமொடு ஆகாரம் ஐகாரம் ஔகான்
இகரமொடு ஈகாரம் எஏ -- உகரமோ(டு)
ஊகாரம் ஒஓ; ஞந,மவ தச்சகரம்
ஆகாத அல்ல அநு.

இவ்வளவு நேரம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது என்கிறீர்களா?
, , ,
, , ,
, , , என்னும் உயிரெழுத்துகளுள் ஏதேனும் இரண்டு சொல்லின் முதலில் ஒன்றிவந்தாலோ அல்லது இவை மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து,
, கா, கை, கௌ
கி, கீ, கெ, கே
கு,கூ, கொ, கோ
, பா, பை, பௌ
எனுமாறு வந்தாலோ அதை மோனை எழுத்தெனக் கொள்ளலாம்.
காலும் கையும் ஆட்ட ஆட்டும்என்று சொல்லும்போது, காகை என்னும் இரண்டு எழுத்துகளையும் மோனை எனக் கொள்ளுகிறார்கள்.
இதைப் போலவே கீழ்க்கண்ட எழுத்துகள் வேறாக இருந்தாலும் சொல்லின் முதலில் இவை வந்தால் ஒன்று போலக் கொள்ள வேண்டுமாம்.
,
,
,
தொல்லை அளித்த சொல்லினைஎன்று சொல்லும்போது தொ- சோ என்கிற இரு எழுத்துகளையும் மோனை என்கிறார்கள்.
ரொம்பவும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
எழுத ஆரம்பித்து விடுங்கள்.
( இந்நிகழ்வுகள் எதுவும் நடந்தவை என்பதற்கும் வெறும் சுவாரசியத்திற்காகச் சொல்லப்பட்டவை எதுவும் இல்லை என்பதற்கும் நான் மதித்துக் குறிப்பிட்டிருக்கும் அனைவருமே சாட்சி!
எமது அடுத்த வெளியீடு

அந்தக் காலத்தில் காப்பி இருந்தது

காத்திருங்கள்.


படஉதவி - கூகுள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

60 comments:

  1. அண்ணா
    மூன்றே பதிவில் எழுதலாம் வெண்பா!!
    என்ற நம்பிக்கையை விதைத்திருகிறீர்கள்!! கொஞ்சம் பேராசை தான் என்றாலும் பெரிதினும் பெரிது கேட்க பழக்கப்பட்ட நான் உங்களால் தரமுடியும் என்ற தைரியத்தில் கேட்கிறேன், வழக்கில் உள்ள அருகிவரும் பிற பாவகைகளையும் சொல்லித்தாங்களேன். இப்போ எல்லாம் பேசும்போதே சொற்களை பிரிக்கத்தொடங்கிவிட்டேன். நல்ல பயிற்சியாக இருக்கிறது!!
    பாருங்க ஒரு விஷயம் மறந்துட்டேன். உங்களுக்கு இன்னும் பல நன்றிகள் பற்று வைத்துள்ளேன். ஒன்றை எனக்காக தோழி இளமதியின் கவிதை பின்னூட்டத்திலும், மற்றொன்றை சிவகுமார் அண்ணா அவர்களின் பக்கத்தின் பின்னூட்டத்திலும் இருந்து வசூல் செய்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்:))

    ReplyDelete
    Replies
    1. தோழர் மது ஏற்கனவே சொல்லிவிட்டார்,
      “வலைப்பூவில்(லுமா) வாத்தியார் வேலை...?
      நிஜமாகவே யோசிக்க வைத்த பின்னூட்டம்!
      அருகிவரும் பாவகைளின் விருத்த மாதிரிகளின் ரகசியத்தைக் கைச்சொடுக்கில் அவிழ்த்துக் காட்டிவிட்டுப் போய்விட்டாரே..கவிஞர் இளமதியாரின் தளத்தில் உங்கள் ஊர் நிலவர்!!!
      அவரிருக்க பயமேன்?
      வெண்பாதான் அடிப்படை....இதன் நுட்பம் பிடிபட்டுவிட்டால் மற்ற பாவடிவங்களை ஒருகை பார்த்துவிடலாம்!
      ( தெரியாதின்னா தெரியாதுன்னு சொல்லேன்டா.! அதுக்குப் பதிலா ஏன் இவ்வளவு பில்டப்------சகோ இனியாவின் குரல் போல இருக்கே........? )
      இதைப் பழகுங்கள்,
      நித்தம் நடையும் நடைப்பழக்கம்...!
      உங்களின் நன்றிப்பற்றினேன்.
      கவனம் தேவை..!
      குத்திவிட்டு வருவது ஒரு குண்டூசியானாலும் பரவாயில்லை. ஏனெனில் பெருவாட்கள் “கிணிங் கிணிங்“ என்று மோதிக்கொண்டிருக்கிற தளங்கள் அவை. நாம் அட்டைக் கத்திகளுடன் போய்க் களமாடக்கூடாது.
      அப்பறம் தளை தப்பினால் தம்பிரானாலும் காப்பாற்ற முடியாது.

      நாம் என்று என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

      நீங்கள் சொல்லியதை நம்....ம்பி நான் வசூல் செய்யலாம் என்று போனால் இருவரும் என்னிடமிருந்தல்லவா வட்டியும் முதலுமாக வசூலித்து விட்டனர்.

      அதே நேரம் முயலாமை வேண்டாம்.

      நான் சொன்னதற்காக மீண்டும் போய் சிவகுமாரன் அண்ணாவின் தளத்தில் நீங்கள் பாய்ச்சி வந்திருப்பது
      குண்டூசியல்ல.
      குறுவாள்!

      அதை அண்ணனும் அறிந்திருப்பார்.

      வாழ்த்துகள்!!!!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

      Delete
    2. ***ஏனெனில் பெருவாட்கள் “கிணிங் கிணிங்“ என்று மோதிக்கொண்டிருக்கிற தளங்கள் அவை***
      கான முயலெய்த அம்பினில் யானை
      பிழைத்தவேல் ஏந்தல் இனிது.:))

      பயிற்சிக்கு மட்டுமே வெண்பா எனினும்
      முயற்சிப்ப தென்றால் இனியங்கு தாஎனவே !!
      அண்ணா வழிகாட்ட தோழி தளந்தனிலே
      பண்ணாமல் போவேனோ பா !!

      Delete
    3. மட்டுமே என்பது மட்டும்தான்
      என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன் அண்ணா!

      Delete
    4. இத இத இதத்தான் சொன்னேன்.. கிணிங்.. கிணிங்..என்று விஜூ தட்ட...அதை முயல்கொண்டு முட்டும் சொல்லாற்றல்தான் வெண்பாக் கல்வியின் விளைச்சல்.. மைதிலீ... அப்படியே புகழேந்தியின் “நளவெண்பா“வையும், கலித்தொகைப் பாடல்களில் கிடக்கும் வெண்பா நயங்களையும் கொஞ்சமே எடுத்துப் பார். இணைப்பிற்கு-http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0015.html பிறகு நீ எழுதும் புதுக்கவிதைக்கு ஒரு புதியவெளிச்சம் கிடைப்பதை உணர்வாய்.. வெண்பாவே எழுதிக்கொண்டு இருப்பதற்காக வெண்பாப் பயிற்சியிலலை. அதைத் தெரிந்து மீறி வெல்லவும், புதியன சொல்லவுமே என்பதுதான் என்கருத்து, நண்பர் விஜூவும் அப்படித்தான் கருதுவார் என்றே நினைக்கிறேன். என்ன விஜூ?

      Delete
    5. நிலவன் அண்ணா
      விஜூ அண்ணாவும் இந்த உங்களால் பரிந்துரைத்தாக பட்டதாக கூறி, என்னை அங்கே பயிற்சி எடுக்க சொன்னார்கள் அண்ணா! நிச்சயம் செல்கிறேன். சற்றேனும் உங்கள் இருவர் மனமும் திருப்தி தரும் வகையில் ஏதேனும் எழுத முயற்சிக்கிறேன் அண்ணா! தங்கள் இருவரின் அன்புக்கும் நன்றி!! ஏனோ Pygmalion கதை நினைவுக்கு வருகிறது:)))

      Delete
  2. வெண்பாவும் வெண்பாவும் கதை கதைத்தால் புதிய வெண்பா தோன்றட்டும்......

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை!
      இந்த வெண்பாக் கதையெல்லாம் இப்ப எதுக்கு என்று கேட்பீர்களோ என்று நினைத்தேன் வலிப்போக்கரே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  3. வணக்கம் ஐயா!

    வெண்பாவாற் கண்ட விழுப்புண்ணே ஆகிடினும்
    பண்பாக இங்குரைத்தீர் பாவலரே! - நன்றாமெம்
    கன்னற் கனிமொழியின் யாப்பினைத் தந்துதவி
    உன்னிடச் செய்தீர் உவந்து!


    இனிய நினைவுகள் இங்கிணைத்து வெண்பா
    அணியினைச் சொன்னீர் அழகு!

    வெண்பா இலக்கணப் பயிற்சிப் பட்டறை மிகவும் அருமை!
    கண்போல அனைவரும் காப்பாரிதை!

    // கவிஞர். பாரதிதாசனார், கவிஞர். இளமதி, மதிப்பிற்குரிய. இ. பு. ஞானப்பிரகாசனார் அய்யா, இவர்களின் வலைப்பூவில் நான் எழுதிய தவறான வெண்பாக்கள் பற்பல. //….

    நானும் இன்னும் கற்பவள்தான் ஐயா! அத்துடன்
    உங்களைப் போன்று பெரிய விற்பனர்கள் எழுதுவதை
    ஒப்புக்காகவேனும் இலக்கண வழுவோ தளை தட்டுவதனையோ
    பார்க்கும் பழக்கமே இல்லை!..

    ஒருவேளை கண்ணிற் கண்டால் இது தவறாக இருக்காது.
    நான் இன்னும் தெளிவாகக் கற்கவேண்டும் என்று போய்விடுவேன்!
    சரியோ தவறோ இது என் பழக்கமாயுள்ளது.

    மோனை சரியாக அமைத்து எழுத வேண்டும் என்று
    கவிஞர் ஐயாவின் வழிகாட்டலால் இதுவரை அதனைக் கடைப் பிடிக்கின்றேன். அதுதான் சில இடங்களில் சிலரின் வெண்பாக்களில்
    காணப்படாத இடத்துக் கொஞ்சம் தவிப்பது உண்டு..!
    ஆனாலும் நாவடக்கம் எனது இயல்பானதால் பேசுவதில்லை..:)
    இன்றிங்கு மோனை எழுத்துக்கள் அறிமுகமும் மிகவும்
    என்னை மகிழ்வித்தது உண்மையே!..:)

    இனி எங்கும் குறள்களும் வெண்பாக்களுமாகத் திகழப் போகிறது!

    கவிஞராக விளைவோர்க்கு ஊக்கம்தரும்
    அருமையான முயற்சி ஐயா!

    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்! இன்னும் தொடருங்கள்!...

    த ம.2

    ReplyDelete
    Replies
    1. ஐயா!

      நன்றியினைக் கூறிட நான்மறந்து போவேனோ?
      சென்றிடுமுன் நன்றியென்றேன் சேர்த்து!

      அருமையான பயிற்சிப் பதிவிற்கு உளமார்ந்த நன்றி ஐயா!

      நேரங்கிட்டின் எனது வலைப்பூவிலும்
      பசுமை பரட வேண்டியுள்ளேன் பாருங்கள்!

      http://ilayanila16.blogspot.de/2014/11/blog-post_44.html

      அதற்கும் சேர்த்து நனி நன்றி ஐயா!

      Delete
    2. உன்னிடச்செய் தேனோ? உவந்தாரோ? நானறியேன்!
      என்னிடம் உள்ளதிங் கெல்லார்க்கும் - மின்னலென
      ஓர்நொடியே வாழ்ந்தாலும் ஓங்கு மிருள்கிழித்துத்
      தீர்வதுதான் என்றன் திடம்!

      கவிஞரே...யாராயிருந்தாலும் சொல்வோரைக் காணாது சொல்லப்படுவது சொல்லுந் தரமாயிருக்கிறதா என்று பாருங்கள்.. அது எனது தாழ்மையான வேண்டுகோள்.

      ““““உங்களைப் போன்று பெரிய விற்பனர்கள் எழுதுவதை
      ஒப்புக்காகவேனும் இலக்கண வழுவோ தளை தட்டுவதனையோ
      பார்க்கும் பழக்கமே இல்லை!..““““““
      இதுதான் பிரச்சனை!
      எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள் காண்க!
      அதை நீங்கள் சொல்வதும் சொல்லாததும், நீங்கள் சொன்னால் அதை ஏற்பதும் ஏற்காமலிருப்பதும் அவர்கள் விருப்பம்.
      குறைந்தபட்சம் இது சரி இது தவறு என்று உங்கள் அறிவுக்காவது தெரியுமல்லவா?
      அடுத்தவரைப் பற்றி நான் பேச வரவில்லை.
      எனது பதிவுகளில் ஏதும் பிழைகள் இருக்கிறதா எனப் பாருங்கள்.
      அறிந்தால் தெரிவியுங்கள்.
      என்னை வளர்ப்பதில் இனி உங்கள் பங்கும் இருக்கட்டும் என எதிர்பார்க்கிறேன்.
      தவறில்லையே.
      வலைப்பூவில் உங்களின் புதிய பதிவு பற்றி அறியவில்லை.
      வந்து பின்னூட்டமிட்டு விட்டேன்.
      நன்றி

      Delete
    3. வணக்கம் ஐயா!..

      நாடு வளர்வித்து நாமும் வளர்வோமே!
      பாடுவோம் பாக்கள் படைத்து!

      ஏற்று மகிழ்ந்தேன் உங்க இனிய கருத்தினை!
      கூறுங்கள் எனக்கும் என் தவறுகளைத் தைரியமாக!..

      மிக்க நன்றி ஐயா!

      Delete
    4. சூரியன் மேற்கே உதிக்கட்டும் அப்போது
      கூறிடுவேன் உங்கள் குறை

      உங்கள் குரு அய்யா அவர்கள் என்ன குறை கூறப்போகிறாரோ?

      எப்படி சகோதரி இப்படி உடனடி வெண்பாக்களை இயற்றி அளிக்கிறீர்கள்?
      அந்த ரகசியத்தைச் சொன்னால் எனக்கும் உதவியாய் இருக்கும் தானே?
      நானும் பாரதிதாசன் அய்யாவிற்குத் தூதெல்லாம் அனுப்பிப் பார்த்தேன்.
      அய்யா மசிவதாய் இல்லை.
      நீங்களேனும் அந்த ரகசியத்தைக் கூறுங்களேன்.
      யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.
      போதுமா...........?
      நன்றி

      Delete
    5. ஐயா!..
      உங்களுக்குப் பதில் எழுதிவிட்டு தொலைபேசி ஒன்றிற்கு பதில் கூறி வருவதற்குள் என்னிடம் கேள்விப் பந்து பறந்து வந்திருக்கிறதே..:)

      சூரியன் மேற்கில் உதித்தாற்தான் என் தவறுகள் திருத்தப்படுமோ?.. ஐயோ! தப்பாச்சே!..:))
      தாங்காரே கவிஞர்கள் இதனை!..

      எ(உ)ங்கள் ஐயா குறை கூறார்..! தவறினைச் சுட்டுவார் அவ்வளவே!..:) அதுவும் என்போல் கற்றுக்குட்டிகளிடம் மட்டுமே..!!

      எழுத எழுத வரும் தேர்ச்சிதானே ஐயா!..
      ஆசிரியர் உங்களுக்கே நான் பாடம் நடத்துவதா?..:))

      எந்த ரகசியமும் இல்லை!. ஒன்றை நினைத்தால்
      நான் அதுவாகவே அதனோடேயே (வாழ்ந்து) மனதிற் தோன்றத் தோன்ற எழுதிவிடுவேன். குறித்துக் கொள்வேன்!
      பின்னர்தான் சரி தவறு பார்ப்பேன். அவ்வளவே!

      குறளிற்கும், வெண்பாக்களுக்கும் சொற்கோர்வைதானே தேவை! அதன் இலக்கணத்தை என்னோடு இருக்க வைத்துள்ளேன்!.. அது உண்மை!

      கருத்திடும்போது அவ்விடத்தில் தேவையான கருத்து கோர்வையாக வந்திட்டாற் போதும்...:) உடனேயே எழுதிவிடலாம்!.. (கவனத்துடன்!!!)
      ஆனாலும் சொற்பஞ்சம் எனக்கு நிறையவே இருக்கிறது.
      ஆங்காங்கே பிச்சையாகவும் பொறுக்கி எடுப்பதும் உண்டு..:(

      இதுதான் நீங்கள் கேட்ட ரகசியம்..:)
      போதுமா ஐயா பிரசங்கம்?..:)

      உங்களாலும் எல்லாம் முடியும் ஐயா!..
      அங்கங்கே அசத்தியுள்ளீர்கள்! அறிவேன்!

      ஆனாலும் இத்தனை தன்னடக்கம் உங்களிடம்.. !
      அதுதான் தாங்கவில்லை..:))

      நன்றி ஐயா!

      Delete
  4. நண்பர் விஜூவுக்கு வணக்கம்.
    நம் உரையாடலின் கட்டளைக் கலித்துறை பற்றி அடுத்து வருமா? நிற்க.
    கலிவெண்பா, வெண்பா வகையுள் வருவது பற்றி நிறையக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதுபற்றியும் ஆய்வுசெய்து எழுதுங்கள். (நல்ல உதாரணம் பாரதியின் குயில்பாட்டு) 10ஆம் வகுப்புத் தமிழ்இலக்கண நூலில் வெண்பா வகையில் கலிவெண்பா இல்லை. இதுபற்றி நம் இணை-இயக்குநர் பாண்டுரங்கன் அய்யாவிடம் விவாதித்தேன். உங்கள் முடிவுதான் என்முடிவும் என்றாலும் இலக்கண நூல்களில் இதுபற்றிய தெளிவு மிகக்குறைவு.
    எனவே தங்களின் அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வானா யிருக்கும் வளர்தமிழ் வாசலை வந்தணுகத்
      தானாய்க் கதவுந் திறக்குமோ தங்கள் கருணையினால்
      யானா நடாத்துகின் றேனெக்கே யின்று நகைதருமால்
      ஆனா அறிவீர் அகலாமல் ஆதரித் தாண்டருளே!


      மதுதான் மயக்கி மனங்கொல் மருட்டி யெனவறிவேன்!
      புதிதாய் இணையப் புயலினைப் பாரிது நல்லதென்றே
      இதுதான் கடலெனத் தள்ளினை கப்பலின் பாய்விரிய
      மதுதான் இதுதான் அதுதான் மனகொண்டு போனதுவே!!

      கலிவெண்பா வெண்பாவின் வகை என்ற நிலைப்பாட்டில் தான் நானிருக்கிறேன்!
      இல்லை இது வெண்கலி என்று இலக்கப்போலி ஆக்குகிறார்களா? ஆக்கட்டும்.
      எந்தப் பேரில் இருந்தாலும் வெண்பா யாப்பில் இம்மியும் பிசகாது அமைவதை வேறென்னவாய்ச் சொல்வது?
      பன்னிரு வரிகளுக்கு மேல் வெண்பா பாடினால் அதற்குப் பெயர் கலிவெண்பா என்பதை ஏற்பார்களா?

      தமிழ்ப்புத்தகம் - அது வல்லான் வகுத்த வாய்க்கால். அதை என்னைவிடத் தாங்கள் நன்கறிவீர்கள்.

      பொதுவாக
      நமது நால்வகைப் பாக்களில் குறைந்தது இவ்வளவு வரிகளாவது இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் உண்டு.
      எ.கா - வெண்பா குறைந்த பட்சம் இரண்டடி.
      ஆசிரியப்பா - குறைந்த பட்சம் மூன்றடி.

      ஆனால் அதிக பட்சம் எவ்வளவு அடிகளில் பாடவேண்டும் , இந்த முதன்மைப் பாவடிவில் வெண்பா தவிர வேறெதற்கும் சொல்வதில்லையே..!

      அவைகளுக்கு அடிவரையறை வேண்டுமா?அதற்கெனவே இருக்கின்றன தாழிசை, துறை, விருத்தமென....! வெண்பாவிற்கும் இவை உண்டே!
      ஆசிரியம் - கலிப்பா- வஞ்சி இம்மூன்றிலும் அதிகபட்ச அடிவரையறை இல்லை.
      வெண்பாவிற்கு மட்டும் 12 வரிகளுக்கு மேல் பாடக்கூடாதென்ற நியதி இருப்பதாகக் கூறுகிறார்கள்.
      கலிவெண்பா என்ற வடிவில் கலி இருப்பதால் இவர்கள் கொள்ளும் மயக்கம் இது என்றே படுகிறது.
      என் கருத்தும் தங்கள் கருத்தேதான்.
      12 அடிகளுக்கு மேல் வெண்பா யாப்பில் எழுதப்படுவது கலிவெண்பா.
      வெண்பா இலக்கணம் எல்லாம் பொருந்த எழும் இந்தப் பாவடிவத்தை எப்படிக் கொண்டு போய்க் கலியில் தளைப்பது?
      புலிக்குப் பிறப்பதைப் பூனை எனப் பெயரிட்டு அழைத்தாலும் புலி புலிதானே?
      இப்படியெல்லாம் சொல்லாமல் ஆதாரம் கேட்டால் நிச்சயம் கொடுப்போம் அய்யா!



      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வழிகாட்டலுக்கும் நன்றி அய்யா!

      கட்டளைக் கலித்துறை சரிதானே அய்யா?
      அல்லது கொட்டு வாங்கப் போகிறேனா?

      Delete
    2. கலிவெண்பாப் பற்றிய தங்கள் கருத்தே என் கருத்தும். அதைமாற்றி, அப்படி ஒரு பாவகையே இல்லாதது போலவே 10ஆம் வகுப்புத் தமிழ்இலக்கணம் வந்திருக்கிறது.(2010ஆம் ஆண்டு வந்து, இப்போதும் இருக்கிறது. அந்த நூல்படியை வாங்கிப் பார்க்க வேண்டுகிறேன் இறுதிப்பகுதி) நானும் இயக்குநர் வரை முட்டிப்பார்த்துவிட்டேன். பயனில்லை. தங்களின் விளக்கம் அதை மாற்றினால் மகிழ்வேன். நன்றி.
      “யானா நடாத்துகின் றேனெக்கே யின்று நகைதருமால்“ -ஓர் எழுத்தைக் காணவில்லையே? “றேனெனக்கே“?
      இரண்டாவது க.க.வின் ஈற்றடியிலும்..“ம்“ காணவிலலை.
      நீங்கள் பின்னூட்டப் பகுதியிலேயே தட்டச்சுச் செய்வதை விடுத்து, தனி வேர்டு கோப்பு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு அதில் தட்டச்சி..வெட்டி ஒட்டுவதை வழக்கமாக மாற்றிக்கொண்டால் இந்தச் சிக்கல் வராது. அப்புறம் விஜூ, இலக்கணம் சரிதான் என்றாலும் கட்டளைக் கலித்துறை நடுவில் விளங்காய்ச்சீர் வருவது பெரும்பான்மையில்லை. ஐந்தாய் விளங்காய் அமைதலே நன்றென் றமைத்தனரே. இதற்காக, “அபிராமி அந்தாதி“யை மீண்டும் புரட்டுக.

      Delete
    3. அய்யா,
      மன்னிக்க வேண்டும். தவறைத் திருத்திப் பதிந்து தவறான பின்னூட்டத்தை அழிக்க நினைந்து திருத்தப்பட்ட பின்னூட்டத்தை அழித்துவிட்டேன்.
      மின்னஞ்சலில் பின்னூட்டத்தைத் தொடர்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.
      இறுதியன்றி வேறெங்கேனும் விளங்காய் வந்துள்ளதா அய்யா!
      என் கண் என்னை ஏமாற்றுகிறது பல நேரங்களில்.
      தங்களின் திருத்தத்தை உளங்கொள்கிறேன்.

      உயரதிகாரிகள் கேட்கிறார்களோ இல்லையோ நம் கருத்தைக் கூறி வைப்போம்.
      மீள் வருகைக்கு நன்றி.

      Delete
    4. வணக்கம் விஜூ.
      'யானா நடாத்துகின் றேனெக்கே யின்று நகைதருமால்' எனில் விளங்காய் வரவில்லைதான். ஆனால், “றேனெக்கே“ என்பது “றேனெனக்கே“ என எழுத்துப்பிழையின்றி வந்தால் அந்த இடத்தில் விளங்காய் வருமல்லவா? அதைத்தான் சொன்னேன். மற்றபடி உங்கள் வலைப்பக்க வரவேற்பில் உள்ளதுபோல “றேனென் றெனக்கே“ எனில் பிழையில்லை.

      Delete
  5. வெண்பா பயிலும் ஆசையில் வெண்மேகம் போல
    வெளிநாட்டில் இருந்து வேர்தேடி வந்தால்
    வெற்றிகொடி போல பல வேர்ச்சொல் கற்றேன்.
    வென்றிடுவேன் இனி வெண்பாவில் வேந்தே!

    ReplyDelete
    Replies
    1. ஒரு வெண்பாப் பின்னூட்டமிட்டால் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருக்குமே திரு. தனிமரம் அவர்களே..!!!!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  6. கலிவெண்பா பற்றித் தெரியாதிருந்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      பல்லோரும் ஏத்திப் பணியும் சிவபுராணம் படித்திருக்கிறீர்கள்தானே..?!!
      இந்த யாப்பல்லவா அது?
      படித்திருப்பீர்கள் வடிவ வகைமை ஒரு வேளை நினைவிற்றங்காமல் போயிருக்கலாம்.

      Delete
    2. உண்மை. சிவபுராணம் எனக்கு மனப்பாடம். சொல்லாத நாளில்லை. ஆனால் என்ன பாவகை எனத் தெரியாது.
      இன்னும்பல கவிதைகளை என்ன இலக்கணம் என்று தெரியாமலேயே எழுதி இருக்கிறேன். ஆறு சீர் இருந்தால் அறுசீர் விருத்தம் , எட்டு இருந்தால் எண்சீர் விருத்தம் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.உதாரணத்திற்கு இந்த கவிதைகள் எல்லாம் எந்த வகையில் சேர்த்தி என்று எனக்குத் தெரியாதுhttp://sivakumarankavithaikal.blogspot.com/2012/01/blog-post.html
      http://sivakumarankavithaikal.blogspot.com/2010/09/blog-post.html.
      நம்ப மாட்டீர்கள், பயிற்சியினால் அல்ல, பரமனருளால் தான் எனக்கு கவியெழுத வருகிறது. ( நிலவன் அய்யா சிரிப்பது எனக்குக் கேட்கிறது)

      Delete

  7. வணக்கம்!

    மாமறவர் மார்பேந்தி வாங்கும் விழுப்புண்போல்
    பாமறவர் பட்டிடுவார் பாட்டடிகள்! - நாமறவர்
    நல்கும் நறுந்தமிழாய் நம்சோசப் சீருரைத்தார்!
    பல்கும் பயன்கள் படர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்.

      வேர்மறந்து வாழும் மலர்கள் அறிவதில்லை
      “நீர்“தரும் ஊக்கம் ! “நிலைநிறுத்தல்“ - போரிடவே
      பெற்றவிழுப் புண்ணால் பெருமைதான் அஃதன்றோ
      கற்றநதி காக்கும் கரை?

      நன்றி அய்யா!

      Delete
  8. ஆகா மின்வெளியில் ஒரு வெண்பாப் புரட்சியை துவக்கியிருக்கிரீர்
    வாழ்த்துக்கள்
    இது பெரும் தமிழ் சேவை.

    ReplyDelete
    Replies
    1. வெண்பாப் புரட்சி ஒரு தமிழ் இலக்கியக் கால கட்டத்தில் நடந்தோய்ந்து போனது தோழர்.
      இன்று ஆங்காங்கு நாம் காண்பது அதன் எச்சங்களைத்தான்...!
      இது வெறும் அறிதல்!
      பாட்டன் வைத்து விட்டுப் போன பழைய பானையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஒரு ஆசை!
      ஒரு வேளை இன்றைக்கும் சில தருணங்களில் அதனுள் இருப்பது பயன்படலாம்.
      “பழம்பொருளுக்கு“ எப்போதும் ஒரு மதிப்பிருக்கிறதுதானே ? வெண்பாவிற்கு இருப்பதும் அது போன்ற மதிப்புத்தான்!உங்களைப் பொன்றோரின் உரைநடைகள் தான் தற்காலத் தமிழுக்கு அத்தியாவசியத் தேவையும் , பெரும் சேவையும்..!
      நன்றி தோழர்!!

      Delete
  9. அருமை நண்பரே
    தங்களின் தமிழ்ப் பணி போற்றுதலுக்கு உரியது

    ReplyDelete
    Replies
    1. அறிந்ததைப் பகிர்தல் அவ்வளவே நண்பரே!
      அது நம் கடமையல்லவா?
      வருகைக்கும்கருத்திற்கும் நன்றி!

      Delete
  10. அன்புள்ள அய்யா,

    வெண்பாவில் பட்ட விழுப்புண்கள் எல்லாமும்

    என்பேரும் சேர்த்தே இணைத்திட்டீர்! - நன்றாகக்

    கூறும் வழிபலவும் கேட்கும் செவி..தமிழில்

    தேறும்! அறிவேன் தெரிந்து.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெண்பாவில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் மணவையாரே!
      இனி அலகிடுதல் நடத்தும் போது உங்களின் வெண்பாவை மாணவரைப் பிரிக்கச் சொல்லிக் கற்பிக்கலாம்.
      குறைந்த பட்சம் ஆர்வமுள்ள ஒரு மாணவனுக்காவது இந்த வெண்பா வடிவத்தை அறுத்துப் பார்க்க மட்டுமன்றி, படைத்துப் பார்க்கும் வரத்தைக் கொடுங்கள்.
      இது என் வேண்டுகோள்தான்..!
      இதை விட மகிழ்ச்சி நமக்கு வேறன்ன?

      தங்களின் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் நன்றி பல!

      Delete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. படித்துக்கொண்டே...... இருக்கிறேன் நண்பரே, நன்றியோடு.

    ReplyDelete
    Replies
    1. முடித்து வாருங்கள் ஜி!
      நன்றி

      Delete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. தோல்வியே கண்டு துவளாதே நீயங்கே
    கேள்வியே கேட்டே தெளிந்திடு.

    என்னையும் சோ்த்துங்கப்பா. வெண்பா விளையாட்டில் ... எங்களுக்காக இப்படி நீங்கள் தவறு செய்ததாக சொல்வதை நம்பிவிட்டோம். குட்டினாலும் சரி மரபை கற்கும் ஆவலில் இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தோல்வியே கண்டு துவளாதே நீயங்கே
      கேள்வியே கேட்டே தெளிந்திடு.

      இதை இப்படி மாற்றினால் சரியாக வருமா?

      தோல்வியே கண்டு துவளாதே நீயென்றும்
      கேள்வியே கேட்டே தெளி!

      வெண்பாவின் இறுதிச் சீர் பற்றிச் சென்ற பதிவில் சொல்லியதை நேரமிருக்கும் போது பார்த்துவாருங்கள்.
      வெண்பா உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
      உங்களது பாடலைப் பார்த்தால் ஏற்கனவே மரபுக்கவிதை எழுதுவீர்கள் போலத் தெரிகிறதே...!
      ஒரு வேளை என்னைச் சரிபார்க்க பந்தெறிகிறீர்களோ?
      எதுவாய் இருந்தாலும் உங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சிதான்!
      நன்றி சகோதரி!

      Delete
  16. அடுத்த பாடத்திற்காக காத்திருக்கிறோம். நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. பாடம் முடிந்துவிட்டதே..!
      இனி எல்லாம் வீட்டுப்பாடம்தான்!
      நன்றி!

      Delete
  17. தொடர்ந்து படித்து வருகிறேன்! பயிற்சி எடுக்க நேரம் வசமாக வில்லை! விரைவில் வெண்பாவோடு வருகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வெண்பாவிற்காகக் காத்திருக்கிறேன்.
      திரு. சுரேஷ் அவர்களே!
      வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி!

      Delete
  18. ஒரு வெண்பாப் புரட்சியே நடத்தி விட்டீர்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகை மகிழ்ச்சி!

      தங்களது பாராட்டிற்குத் தகுதியுடையவனாக நிச்சயம் முயல்வேன் அய்யா!

      நன்றி.

      Delete
  19. வணக்கம் ஆசானே!

    உள்ளோம் ஐயா! வகுப்பிற்குத் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு! விடுமுறை எடுத்ததற்கு கடிதம் எங்கள் வலைப் பகுதியில் கொடுத்திருந்தோம் ஆசானே!!! ஹஹாஹஹ்.

    பள்ளியில் தமிழ் கற்கும் வகுப்பு போன்ற அருமையான பதிவு ஆசானே! அப்போதெல்லாம் எழுதிப் போடுவார்கள்..இல்லை என்றால் குறிப்பெடுப்போம். ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல...இப்போது இந்த உங்கள் வகுப்பில் நாங்கள் இதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து கொள்கின்றோம். பின்னே ஒரு முறை வாசிக்கும் போதே மண்டையில் பதிந்து விடுகின்றதா என்ன...

    மிக நல்ல வகுப்பு. இதைப் போன்று நாங்கள் படித்ததே இல்லை ஆசானே! கொடுத்துவைத்தவர்கள் தங்கள் மாணாக்கர்கள்! ஆங்கிலமும் இப்படித்தானே கற்பிப்பீர்கள்! வலை உலகம் நல்ல வகுப்பறையாக மாறியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே..

      இதென்ன மன்னிப்பு என்றெல்லாம்....?!!!

      உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் நான் என்ன கைம்மாறு செய்வேன்?
      ஆங்கிலத்திற்கு அடுத்த பதிவை ஆரம்பித்து விடலாமா?
      தமிழே இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன்.
      கடலளவு இருக்கிறது !
      கரையேறுவேனா என்றுதான் கவலை!
      நீங்கள் எல்லாம காப்பாற்றிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
      உங்களின் வருகையை எதிர்பார்த்தேன்.
      நன்றி!

      Delete
    2. எங்கள் வருகை கண்டிப்பாக உண்டு ஆசானே! என்ன இப்போது கொஞ்சம் தாமதமாகிவிடுகின்றது. இருவரும் சேர்ந்து இல்லை கீதா துளசிக்கு வாசித்துக் கொடுக்க வேண்டியுள்ளது. அதை இரவில் தான் செய்ய முடிகின்றது. அதனால் தாமதம். நாங்கள் எல்லாம் உள்ளோம் ஆசானே!

      ஆங்கிலமும் ஆரம்பித்தால் ஆயிற்று! நாங்கள் கை தூக்கி விட்டோம்!

      Delete
  20. பாடம் முடிந்துவிட்டால் அடுத்த வகுப்பில் நான் ஆஜர் ...........

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வகுப்பும் உங்களுக்குப் பிடிக்காத வகுப்பாகவே அமைந்துவிட்டது வழிப்போக்கரே!

      வருகைக்கு நன்றி

      Delete
  21. வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தங்களின் அன்பிற்கு நன்றி!

      Delete
  22. செய்யும் தவறை அழகாக சொன்னீர்கள்
    மெய்யை கவரும் பழம்பாட்டு சித்தனே
    கொய்யாப் பழமினிக்க பெய்யும் மழைதேனே
    பொய்யாய் தவமிருக்கேன் நான்

    நல்ல பாடம் ஐயா தெளிந்தேனா என்பது தான் தெரியவில்லை எனக்கு திரும்ப திரும்ப படிக்கிறேன் திருத்த தினமும் முயல்கிறேன் சமயம் சரிவர கிட்டுவதில்லை ஐயா

    ReplyDelete
    Replies
    1. அன்பு தினேஷ்
      வெண்பா எழுதக் கற்று விட்டீர்கள்!
      மோனையை அடிகளில் அமைத்தால் வெண்பா இன்னும் அழகு படும்.
      நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி வார்த்தைகளைப் பூட்டிப் பாருங்கள்.
      பொருள் படத் தோன்றும் சொல்லாடலும்,
      பொருள் பொதிந்து நிற்கும் சொல்லாடலும்,
      கொண்டு வெண்பா அமையுங்கள்!
      உங்களைக் கவர்ந்த வற்றை உங்களைப் பாதித்தவற்றை இந்த வடிவிற்குள் அடைக்க முயலுங்கள்.

      உங்கள் முயற்சி, ஆர்வம், இது மட்டுமே மரபின் செறிவிற்கு உங்களைச் செழுமைப்படுத்தும்.

      பிழையற்ற வெண்பா வடிவிற்கு வாழ்த்துகள்!!!

      Delete
  23. "தளை தவறினால் யாரும் - உங்கள்
    தலையை எடுத்துவிடப் போவதில்லை.
    தவறை இனம் காணப் பழகுங்கள்." என்ற
    வழிகாட்டலைப் பட்டறிவோடு கலந்து
    வெண்பாப் புனைகையில் கற்றுத்தேறென
    முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்தி
    சின்னப்பொடியன் எனக்கும் நன்றே பயிலென
    வழிகாட்டும் தங்களை நினைத்து நினைத்து
    என்றும் நன்றே பாபுனைய முயல்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. யாப்பறிந்து பாப்புனையும் பாவாணரே உங்கள் வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் நன்றி!!!!

      Delete
  24. என்ன நம்ம பெயர் எல்லாம் அடிபடுது. ஓஹோ இப்போ என்ன குரு தட்சிணை தானே தந்தாப் போச்சு கட்டை விரல் தானே வேணும். என்ன எல்லா விரலுமே வேணுமா ? இது கொஞ்சம் ஓவரா இல்ல ம்..ம்..ம்.. கேட்டாலும் கேட்பீங்க சகோ ! அம்மு help me...

    இதோ உங்களுக்கு விதிகளைச் சொல்லிக் கொடுக்கும் நானும் இன்னும் இந்த வெண்பாக் குழிகளில் விழுந்து இன்றுவரை விழுப்புண்களைப் பெற்றபடிதான் இருக்கிறேன்.
    இதைச் சொல்லக் காரணம் .. வெண்பா எழுத முயலும் உங்களில் பலரும் தவறுகளுக்காகக் கவலைப் படாதீர்கள் என்பதற்காகத்தான்.
    தளை தவறினால் யாரும் உங்கள் தலையை எடுத்துவிடப் போவதில்லை.
    தவறை இனம் காணப் பழகுங்கள்.
    தவறு செய்தால் அடுத்த முறை நேராமல் கவனமாயிருங்கள்.

    ஆஹா இப்படி ஒரு ஆசானிடம் கல்வி கற்பது என்பது ஒரு வரப் பிரசாதமே அது நமக்கு கிடைத்துள்ளது. இதற்குத் தான் \\தாரமும் குருவும் தலை விதிப்படி// என்பார்களோ. ம்..ம்.. 1. 2 ஐ வைத்தே இடியப்பச் சிக்கலை அவிழ்த்து விட்டாரே இலகுவாக அம்மாடியோ கில்லாடிதான் நான் தேறினேனோ இல்லையோ நம்ம அம்மு தேரறிட்டாங்கல்ல அது போதும்

    ஆனைக் கடிசறுக்கும் அஞ்சாம லேஎழுந்து
    பூனையென ஓடப் புறப்படுவேன்! வெண்பாசொற்
    போரில் துவளாது முன்னேறிச் சென்றிடலே
    வேராளும் என்வெற்றி வித்து!

    வெண்பா படைக்கின்ற திண்ணம் பெறவேண்டி
    கண்ணும் உறங்காக் கருத்தாக உண்ணாமல்
    எண்ணித் திருத்தி எழுதக் கிடைத்து’உம்
    கண்ணில் தெரியும் கவி!

    தேறிட்டனா என்ன இல்லையா சரி இன்னும் முயற்சி செய்கிறேன் குருவே ! வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வளமுடன் ....!

    ReplyDelete
  25. இப்பொழுது தான் இந்த பதிவை படித்து முடித்தேன் ஆசானே.
    உங்களைப் போன்றோர் ஒரு சிலரின் பதிவுகளை என்னால் தாமதமாகத்தான் (நிதானமாக) படிக்க முடிகிறது. அதற்காக மன்னிக்கவும்.

    தவறுகளை திருத்திக்கொள்வதும், பெரிய மனிதர்களுக்கு அழகு தான். அதிலும் தனிப்பட்ட மின்னஞ்சலில் வந்த செய்திகளையும், சபையில் வெளியிட்டு அந்த தவறை மற்றவர்களின் முன்பு ஏற்றுக்கொண்டதும், தங்களின் பெருந்தன்மை வெளிப்படுகிறது.

    ReplyDelete