Friday 27 February 2015

“ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ்ப்புகைப்படங்கள்“

இரு வாரத்திற்குமுன் நூலகத்திற்குச் சென்றிருந்தபோது எதேச்சையாய் ஒரு  கட்டியான அட்டையுடன், கருப்பு நிறத்தில் புத்தகம் போன்ற, அதைவிடக் கனமான தொகுப்பு ஒன்றைக் காண நேர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஒரு பழைய புகைப்பட ஆல்பம். குறைந்தபட்சம் எழுபது ஆண்டுகாலப் பழமையாவது இருக்க வேண்டும் அதற்கு..! ஏனென்றால்  அதன் எல்லாப்படங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஒருவரை  எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றுத்தான் சட்டென நினைவுக்கு வந்தது. அதிலிருந்தவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஃபாதர். இருதயசாமி. அந்தப் புகைப்படங்களில் பெரும்பான்மை அவருக்கு இருபது இருபத்தைந்து வயதாக இருக்கும் போது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் படத்தில் இருந்ததும் அவராகத்தான் இருந்திருக்க வேண்டும். தரையில் குப்புறக் கிடந்து தலையைச் சற்று உயர்த்தி, வாயிலிருந்து எச்சில் கோடாய் வழிய கேமராவைப்பார்த்துச் சிரிக்கும் படம் அவருடையதுதான் என்பதை இறுதிவரை மாறாமல் இருந்த அவரது  கூரிய மூக்குச் சொல்லிற்று.

Sunday 22 February 2015

“முனைவர் ‘பசி‘பரமசிவம் அய்யாவின் கவனத்திற்குப் பணிவுடன்“


மதிப்பிற்குரிய அய்யா,
வணக்கம். முதலில் நீங்கள் தமிழில் முனைவர்(ப்) பட்டம் பெற்றிருப்பவர் என்பதால் மிகுந்த கவனத்துடனும், பணிவுடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
         நான் பதிவுலகிற்கு வந்ததன் நோக்கம் இதுவன்று என்றபோதும் உங்களின் தளத்தில் பின்னூட்டப்பெட்டி முடங்கி இருப்பதாலும்  தங்களைத் தனியே தொடர்பு கொள்ள மின்னஞ்சல் போன்ற வசதிகள் இல்லாமையாலும் என்னைக் குறித்து, என் பெயர் குறிப்பிடாமல் சில செய்திகள் மட்டும் கொண்டு மீண்டும் ஒரு பதிவு தங்கள் தளத்தில் வந்திருப்பதாலும் அவற்றின் கருத்துகளோடு நான் மாறுபடுவதாலும் என் தரப்பை விளக்க வேண்டிய அவசியம் கருதியே என் தளத்தில் நான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

Saturday 14 February 2015

நலம் பெற வேண்டும்.



 (நோயுற்றிருக்கும் நான் மிகமதிக்கும் வலைப்பதிவர் சகோதரி இளமதியாரின் நலனுக்காக )


வலைபுதிது கண்மீன் வசப்பட்டுத் துள்ளும்
நிலைபுதிது காணாத நட்பில் – மலைத்தேனோ?
உள்ளம் கனக்க உயிர்பட் டிதழ்விரிக்கும்
முள்ளின் இடைப்பட்ட மொட்டு!

Monday 9 February 2015

சுட்டது தமிழ்.




தமிழில் யார் வேண்டுமானாலும் எந்தத் தவறை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைத்துத் தமிழைப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் ஒரு புறம் , முன்னோர் இட்டுவைத்த சட்டதிட்டங்களின் படியே பேசவும் எழுதவும் வேண்டும் என்று சொல்லித் திரியும் சிறுபான்மையினரான மொழிக்காப்பாளர்கள் மறுபுறம் என்று தன் கடன் “பணி“ செய்து கிடப்பதே என்று இருக்கும் இருதரப்பினரையும் கொண்டு நம் மொழி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

Thursday 5 February 2015

கானக நாடன் சுனை.


அது ஒரு வித்தியாசமான சுனை. மிதக்கும் பொருள்களை மூழ்க வைக்கவும், மூழ்கும் பொருள்களை மிதக்க வைக்கவும் கூடிய தன்மை அதற்குண்டு. அதுதான் கானக நாடன் சுனை.

சுரையாழ அம்மி மிதப்ப ........“

எனத் தொடங்கும் இந்தப் பாடல் பற்றிச் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இது.

இப்பாடல்  தமிழ்ப்பாட நூல்களில், மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு எடுத்துக்காட்டாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது ஒரு பாடலில் பொருளைக் காணும்போது ஓரடிக்குள்ளாகவே சொற்களை இடம் மாற்றிப் பொருள் காண்பதற்கு எடுத்துக்காட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.

Monday 2 February 2015

கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்.



 நீங்கள் தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றால் நிச்சயமாய் இந்தப் பாட்டைக் கடக்காமல்  உங்களால் போயிருக்க முடியாது. எதிர்பாராத விதத்தில் நீங்கள் ஆசிரியராய், அதிலும் குறிப்பாய்த் தமிழாசிரியராய் இருந்துவிட்டால் இந்தப் பாடல் இன்றும் மாணவர்களுக்குப் பாடமாய் இருக்கிறது. அதை  நீங்கள் கற்பித்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைப் பொறுமையிழக்கச் செய்ய விரும்பவில்லை.
பாடல் இதுதான்,