Saturday 29 November 2014

தி இந்து நாளிதழின் கட்டுரையும் எழுத்துத் திருட்டும்.

நேற்றைய தமிழ் இந்து நாளிதழின் ( 28-11-2014) கருத்துப் பேழை பகுதியில்எழுத்து ஒரு சொத்தா?“ என்னும்  தலைப்பில் மு. இராமனாதன் என்பவரின் கட்டுரை இடம் பெற்றிருந்தது. இன்றைய காலத்தில் படைப்பாளர்களிடையே சற்றே புத்திசாலித்தனமாகக் கையாளப்படும் எழுத்துத் திருட்டைப்பற்றி அவர் அதில் விவாதித்திருக்கிறார். கட்டுரையில் அவர் சொல்லும் மையக்கருத்து இதுதான். “ எழுத்தாளர்களை மதிக்காத சமூகத்தில்தான் காப்புரிமை அதிகமாக மீறப்படுகிறது.“

அவரது கட்டுரையில் இருந்து சில பத்திகளை அப்படியே தருகிறேன்.

“………….இப்போது நான் கணினியில் உள்ளிடுகிற இந்த எழுத்துக்கள் என்னுடைய சொத்தா? இப்படியொரு கேள்வி எழக் காரணம், சமீபத்தில் படித்த கட்டுரை. கடந்த ஜூலை மாதம் மொரிஷியஸில் வெளிநாட்டுத் தமிழர்களுக்காக ஒரு மாநாடு நடத்தி, அந்தச் சமயத்தில் ஒரு மலரையும் வெளியிட்டிருக்கிறார்கள். அது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. அயலில் வசிக்கும் தமிழர்கள் எழுதியிருக்கிறார்கள். ஓர் அமெரிக்க அன்பர் அமெரிக்கத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழ்கிற தமிழர்களை உள்ளடக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஹாங்காங் குறித்த பகுதி எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது. அது ஹாங்காங்கைப் பற்றியது என்பதனால் அல்ல, அதில் இரண்டு பத்திகள் நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையப் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. அன்பர் ஒன்றிரண்டு மாற்றங்களைச் செய்திருந்தார். 'ஹாங்காங்' என்பதை 'ஆங்காங்' என்றும், '70 இலட்சம் மக்கள்தொகை' என்று நான் எழுதியிருந்ததை '72,35,043 மக்கள்தொகை' என்றும் மாற்றியிருந்தார். மற்றபடி, நான் எழுதியிருந்த இரண்டு பத்திகள் கிட்டத்தட்ட அப்படியே இடம்பெறுகின்றன.

இப்படியான சம்பவத்தை இதற்கு முன்னரும் எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது நான் செய்யக்கூடியது ஒன்றுதானிருந்தது. எழுதுவதை ஏறக்கட்டிவிட்டுப் பாடங்களைப் படிப்பது….“

Monday 24 November 2014

பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு…!

பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுகிறோம், அதற்குத் தமிழில் இலக்கணம் இருக்கிறதா என்று மணவையார் சென்ற பதிவில் கேட்டிருந்தார். ஒரு பேச்சிற்காய் இருக்கிறது என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தால் மீண்டும் எப்பொழுது சொல்வீர்கள் என்று கேட்டு விட்டார். தினமும் பார்க்க வேண்டியவர். இனித் தப்பிக்க முடியாது என்று நினைத்து முதலில், பல பிரபலப் பதிவர்களின் தளங்களுக்கு உள்ளே போய்ப் பின்னூட்டங்களை மட்டும் படித்துத் தேவையானதை நகலெடுத்து அப்படியே கணினியில் சேமித்துக் கொண்டிருந்தேன். அடுத்த “காப்பி“ வருவதற்குள் இதை முடித்துவிடவேண்டும்.

பதிவர்களின் பெயர்களையோ பதிவுகளையோ, பின்னூட்டங்களையோ இங்குக் குறிப்பிடாமல், நான் கண்ட அந்தப் பின்னூட்டங்களின் இயல்புகள் இப்படி இருந்தன என்று பார்த்து அவற்றை ஏதேனும் பொது வகைமையின் கீழ்க்கொண்டு வரமுடியுமா? ஏதேனும் இலக்கணக் கொள்கைகளை இதற்குப் பொருத்திக் காண முடியுமா என்று பார்ப்பதற்கு ஒரு நாளாயிற்று.  நான் பார்த்த பின்னூட்டங்களின் அடிப்டையிலும், எனக்குத் தெரிந்த இலக்கணக்கொள்கையின் அடிப்படையிலுமே இவற்றை ஒழுங்கு படுத்துகிறேன். இந்த வரம்பு தாண்டி எவையேனும் இருக்குமானால் கூடுதல் செய்திகளைக் கூற நமது நண்பர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்களே என்ற நினைப்பில் பொதுமையைப் பகிர்கிறேன்.

Friday 21 November 2014

அந்தக் காலத்தில் காப்பி இருந்தது.


         சமீபத்தில் இணையத்தில் அடுத்தவரின் பதிவை அப்படியே எடுத்து ஒரு நன்றி கூடச் சொல்லாமல் ஒரு வலைப்பூவையே நடத்திக் கொண்டிருந்தவர் குறித்து மாறி மாறிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பலரும் தங்களுடைய படைப்புகள் திருடப்பட்டுள்ளனவா என்று வேகமாய்ப்போய்ப் பார்த்ததுபோல் நானும் பார்த்தேன். அடுத்தடுத்துப் பல பதிவுகளையும் அவர் தளம் போய்ப்பார்த்துவிட்டு வெளியே வந்து சிலமணி நேரத்தில் மீண்டும் சென்றபோது அவருடைய தளப்பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது! அட.. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இப்படியும் ஒரு வழியிருக்கிறதா என்று நான் சற்று வியந்தது உண்மை.

Sunday 16 November 2014

யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!

அடுத்த பதிவுஅந்தக் காலத்தில் காப்பி இருக்கிறதுஎன்று சொல்லி  விட்டேன். உண்மைதான்.என்ன கொஞ்சம் சூடாக இருக்கிறது. அது ஆறும் வரை சும்மா இருக்காமல் நூலொன்றிற்கு உரைபார்க்க உட்கார்ந்தேன். மிகுந்த மலைப்புத்தான். என்ன செய்வது. புரிவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே..!

வெண்பா வகுப்போ முடிந்தது. என் பாவைப் பாடலாம் என்று எழுதினால் அதுவும் வெண்பா யாப்பில் மட்டும்தான் வருகிறது இப்போதெல்லாம்இது என் குருவிற்கு எழுதியதாக வைத்துக் கொள்ளலாம்.

Thursday 13 November 2014

வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்.



வெண்பாப்புலி மேக்குடி நரசிம்மன் அய்யாவின் பாடலில் பிழையிருக்கிறது என்று கூற யாராயிருந்தாலும் நேர் நிரை பற்றிய அறிவு மட்டும்  போதுமானதாய் இருக்கும்.
ஆனால் வெண்பா எழுதுவதற்கு வார்த்தைகளைத் தேடி நொந்த கதை எல்லாருக்கும் பொதுவானதுதான்.
சென்ற இரு பதிவுகளின் பின்னும் வெண்பா எழுதிப் பார்த்தவர்களும் பின்னூட்டத்தில் வந்தவர்களும் சிலரேனும் இருப்பார்கள். வெண்பா அறிந்த பலரும் ஒன்று இரண்டு என்று இவன் சொல்லுவது சரியா என்று சரி பார்த்திருப்பார்கள்!
எழுத முயன்று சொற்களைத் தேடித் தேடிச் சோர்ந்து போய்,
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்என்று விட்டவர்களும் சிலர் இருப்பர். தேவையில்லை எனிலும் தெரிந்து வைத்துக் கொள்வோம் என்று சிலர் இருக்கலாம்.
உங்களில் மிகப்பலர்க்கும் ஏற்பட்டு இருக்கிற வெறுப்பு எனக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
வெண்பாவைப் பிழையாக இப்பொழுதும் நான் எழுதுகிறேன்.

Sunday 9 November 2014

யாப்புச்சூக்குமம் II – துலங்கும் உருவம்.

இதைத் தொடரும்முன் என் மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிற்கு நன்றி சொல்லிவிடுகிறேன். ஆசிரியர் என்பதற்கான  இலக்கணம் படித்திருக்கிறேன். உண்மையில் தம் மாணவரின் வளர்ச்சிக்கு உதவுவதும், தவறு காணும் போது திருத்திடச் சொல்வதும், அதே நேரம் மாணவர்கள் சோர்ந்து பின்தங்கும் போது கைதூக்கி விடுவதும், உயரச்சென்று அவன் மறந்து போகும் போதுகூட “இவன் என் மாணவன்“ எனக்கூறி பெருமைபட்டுக் கொள்வதும் எல்லா ஆசிரியர்களுக்கும் இயல்பானதுதான்.
நான் அவர் பெருமைப்பட்டுக்  கொள்ளும் அளவிற்கு உயரே சென்று விடவில்லை. நான் நன்றி சொல்லக் காரணம் நான் இந்த வலையுலகிற்கு வர அவர் காரணம் என்பது மட்டுமல்ல. என்னை அறிமுகப்படுத்தி விட்டோம். நம் வேலை முடிந்தது என்று அவர் இருந்துவிடவில்லை. என் ஒவ்வொரு பதிவிற்கும் சரியென்றும் தவறென்றும்  நியாயமான விமர்சனங்களை முன் வைத்தே இருக்கிறார். முந்தைய யாப்புச்சூக்குமம் என்னும் பதிவை அதிகப்பதிவர்களால்  பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்ற அவர் தளத்தில் அறிமுகப்படுத்தியதோடல்லாமல் என்தளத்தில் வந்து காணுமாறு சொல்லிவைத்தார். என் இலக்கணப் பதிவுகளுக்கு இத்தனை வாசகரை நான் கண்டதில்லை. இதற்கு வரும் பின்னூட்டங்களைக் கண்டபின்னர் 

Wednesday 5 November 2014

யாப்புச் சூக்குமம்.



ஆசிரியப் பயிற்சியின் போது திருச்சியிலிருந்து மாயனூருக்குத் தினமும் செல்லும் புகைவண்டிப் பயணங்கள் இப்பொழுது எண்ணினாலும் இனிமையானவை. புகைவண்டி திருச்சியிலிருந்து புறப்படுவதால் பெட்டி காலியாகவே இருக்கும். எனக்குப்பிடித்தச் சன்னலோர இருக்கைக்குப் போட்டி இருக்காது. காவிரியும் பச்சைபசேல் வயல்களும் ஓவியம் போல் இருமருங்கிலும் கிடக்கப் புகைப் பெருமூச்சு விட்டபடி ஓடும் இரும்புக் குதிரையின்  சவாரியில் முன்பின்னாய் மேல்கீழாய்ச் சுழலும் தியானானுபவத்தை நினைக்கும் போதெல்லாம்  சட்டென விழுந்துவிடும் மனம்.
பலபல மனிதர்கள்..பலவித அனுபவங்களுடனான இருவருட இரயில் அனுபவத்தில், மேக்குடி நரசிம்மன் அவர்களால்  எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இது. அந்த வண்டியில் அந்தக்காலத்தில் என்னோடு பயணம் செய்த பலருக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். நம் மக்கள் தொகையில் மிகுதியாக உள்ளவர்களைப் போல அவர் ஒரு கவிஞர். அல்லது அப்படி அழைக்கப்பட வேண்டுமென ஆசைப்படுபவர். குறிப்பாய், அந்தப் பெரும்பான்மையுள் சிறுபான்மையாய் இருக்கின்ற மரபுக் கவிஞர். அதிலும் ஆகக் கடினமென்னும் வெண்பாப்புலி.