Saturday 29 November 2014

தி இந்து நாளிதழின் கட்டுரையும் எழுத்துத் திருட்டும்.

நேற்றைய தமிழ் இந்து நாளிதழின் ( 28-11-2014) கருத்துப் பேழை பகுதியில்எழுத்து ஒரு சொத்தா?“ என்னும்  தலைப்பில் மு. இராமனாதன் என்பவரின் கட்டுரை இடம் பெற்றிருந்தது. இன்றைய காலத்தில் படைப்பாளர்களிடையே சற்றே புத்திசாலித்தனமாகக் கையாளப்படும் எழுத்துத் திருட்டைப்பற்றி அவர் அதில் விவாதித்திருக்கிறார். கட்டுரையில் அவர் சொல்லும் மையக்கருத்து இதுதான். “ எழுத்தாளர்களை மதிக்காத சமூகத்தில்தான் காப்புரிமை அதிகமாக மீறப்படுகிறது.“

அவரது கட்டுரையில் இருந்து சில பத்திகளை அப்படியே தருகிறேன்.

“………….இப்போது நான் கணினியில் உள்ளிடுகிற இந்த எழுத்துக்கள் என்னுடைய சொத்தா? இப்படியொரு கேள்வி எழக் காரணம், சமீபத்தில் படித்த கட்டுரை. கடந்த ஜூலை மாதம் மொரிஷியஸில் வெளிநாட்டுத் தமிழர்களுக்காக ஒரு மாநாடு நடத்தி, அந்தச் சமயத்தில் ஒரு மலரையும் வெளியிட்டிருக்கிறார்கள். அது எனக்கு வாசிக்கக் கிடைத்தது. அயலில் வசிக்கும் தமிழர்கள் எழுதியிருக்கிறார்கள். ஓர் அமெரிக்க அன்பர் அமெரிக்கத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழ்கிற தமிழர்களை உள்ளடக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஹாங்காங் குறித்த பகுதி எனக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது. அது ஹாங்காங்கைப் பற்றியது என்பதனால் அல்ல, அதில் இரண்டு பத்திகள் நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இணையப் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. அன்பர் ஒன்றிரண்டு மாற்றங்களைச் செய்திருந்தார். 'ஹாங்காங்' என்பதை 'ஆங்காங்' என்றும், '70 இலட்சம் மக்கள்தொகை' என்று நான் எழுதியிருந்ததை '72,35,043 மக்கள்தொகை' என்றும் மாற்றியிருந்தார். மற்றபடி, நான் எழுதியிருந்த இரண்டு பத்திகள் கிட்டத்தட்ட அப்படியே இடம்பெறுகின்றன.

இப்படியான சம்பவத்தை இதற்கு முன்னரும் எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது நான் செய்யக்கூடியது ஒன்றுதானிருந்தது. எழுதுவதை ஏறக்கட்டிவிட்டுப் பாடங்களைப் படிப்பது….“

எழுத்துக் காப்புரிமை என்பதற்கான போராட்டம் நடத்துவதற்கான பணவிரயம், கால விரயம் பற்றிப் பேசும் அவர் ஒரு படைப்பின் மீதுள்ள உரிமையை நீதிமன்றமல்ல சமூகத்தில் நிலவும் சட்டத்தின் மாட்சிமைதான் பெற்றுத்தரவேண்டும் என்றும் எழுத்தை மதிக்கும் சமூகங்களில் அப்படித்தான் நடக்கிறது என்றும் சொல்கிறார். எழுத்தை மதிக்கும் சமூகத்தில் இந்த எழுத்துத்திருட்டு கண்டறியப்பட்டால் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இரு சான்றுகளை முன் வைக்கிறார்.

ஒன்று பரீத் சக்காரியா என்னும் இந்திய அமெரிக்கர்துப்பாக்கிக் கட்டுப்பாடுபற்றிய கட்டுரை ஒன்றை ஜில் லேப்போர் என்பவரின் கட்டுரையில் இருந்து எடுத்திட்டது கண்டுபிடிக்கப்பட்டபோது சக்காரியா மன்னிப்புக் கேட்டதும், டைம் இதழ் அவரைப் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யதும்.


இரண்டு, காவ்யா விஸ்வநாதன் என்ற இந்திய அமெரிக்கர், எழுதிய நாவல் லிட்டில் பிரவுன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதும், பின்பு அந்நாவலுக்கும், அதற்கு முன் மெகன் மெக்காபர்டி என்பவர் எழுதிய நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் கண்டுபிடிக்கப்பட்ட உடனே வெளியிட்ட பதிப்பகம் சந்தைப்படுத்தியிருந்த காவ்யாவின் அத்தனை நூல்களையும் திரும்பப் பெற்று அழித்ததோடு அல்லாமல் அவருடன் இடப்பட்டிருந்த மூன்று கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை உடனடியாக  ரத்து செய்ததும்.


இவ்விரண்டு நிகழ்வுகளுமே மேலைநாட்டில் நடந்திருப்பதும், இவ்விரு நிகழ்வுகளின் படைப்பாளிகளும் இந்திய மரபினர் என்பதும் எதேச்சையானதா திட்டமிடப்பட்டுக் காட்டப்பட்டதா என்பது ஒருபுறமிருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டியது, இந்த எழுத்துத் திருட்டைப் பற்றிய மேலைநாட்டினரின் பார்வை. அதை அம்மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? நம் எழுத்துத் திருடர்கள்.. பதிப்பகங்கள் எப்படி எடுத்துக் கொள்கின்ற என்பதைத்தான்.

நம்பங்கிற்கு  நம்மிடமிருந்து மேலை நாட்டினர் இப்படி எழுத்துத் திருட்டில் ஈடுபடவில்லையா? ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்குச் சான்று காட்டலாம்.
தமிழ்ப்பல்கலைக்கழகம் 1987 இல், உருவாக்கி வைத்திருந்த சங்க இலக்கியச் சொல்லடைவு, சென்னை ஆசியவியல் நிறுவனத்தால் தாமஸ் லேமென் ( Thomas Lehmon) தாமஸ் மால்டன் ( Thomas Malton ) எனும் இரண்டு ஜெர்மானிய அறிஞர்களின்சொந்த முயற்சியில்உருவாக்கப்பட்டதாய் ‘ A Word Index for  Chankam Literature‘ என்னும் பெயரில் 1992 இல் வெளியிடப்பட்டது.
சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களில் உள்ள சொற்களை, வருமிடங்களை, அதன் பொருளைத் தொகுத்து ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் அவர்களே அதை எழுதியிருக்கக் கூடாதா என்னும் சந்தேகம் நியாமானதே! அவர்களும் அதையே முன்வைத்தனர்.


பிரச்சனை என்னவென்றால், தமிழ்ப்பல்கலைக்கழகத் தட்டச்சுப்படியில் உள்ள அதே பிழைகள் அறிஞர்களின் பதிப்பிலும் மாறாமல் இருந்ததுதான். இந்த ஈயடிச்சான் காப்பிக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர்கள் நாட்டில் இப்படிச் செய்யவேண்டுமானால் கொஞ்சம் யோசித்திருப்பார்கள்,
நம் நாட்டைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர்களால் இதைச் செய்தபின்னும் எவ்விதச் சட்டச் சிக்கலுமின்றி, சர்வ சுதந்திரமான உலகம் பேசப்படும் அறிஞர்களாய் இன்னும் உலா வர முடிகிறது. பல்வேறு அறிஞர்கள் இராப்பகலாய் பல்கலைக்கழகத்தின் ஊதியத்தில் பாடுபட்டுச் சேர்த்த சொத்து இவ்விருவரின் பெயரால் அறிவுலகத்தில் அறியப்படுகிறது. நூல்கள் தடைசெய்யப்படவும் இல்லை. அறிஞர்களின் சேவை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வாழ்க தமிழ்

சரி சரி நம் பிரச்சனைக்கு வருவோம்.



அந்தக்காலத்தில் காப்பி இருந்தது“ என்ற முந்தைய பதிவில்  இலக்கணத்தை மட்டுமே காட்ட முடிந்தது. பின்முன்னோர் மொழி பொருள், பொன்னே போல் போற்றுஎன்னும் அமைதியையும்!

இலக்கியத்தில் இதுபோல் காப்பி அடித்திருக்கறார்களா ?

அடித்திருக்கிறார்கள் என்பதைச்  சொல்வதற்காகவே இந்தப்பதிவு. அதிலிருக்கும் நியாயங்களை கடைசியில் பார்க்கலாம்.

ஆராய்ச்சி என்றாலே சங்க இலக்கியத்தையும், தொல்காப்பியத்தையும் ஆராய்வதுதான் ஆராய்ச்சி என்கிற மனப்பாங்கு  தமிழ் படித்தவர்களிடத்தில் இருக்கிறது.

நானும் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேனே..!

அதனால் சங்க இலக்கியங்களில் இருந்து நம் காப்பியை வடித்திறக்குவதுதானே சரி!

இப்போ,

சங்க இலக்கியப்பாட்டொன்று,

ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென்
மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண. 

     முதிர மலை நாட்டு மன்னன் குமணன். அவனை நாடி வந்த பெருந்தலைச் சாத்தனார் அவனிடத்து தனது வறுமையை விளக்குவதாய் அமைந்த புறநானூற்றுப் பாடல் ( புறம் -164 )இது.
பொருள் இதுதான்

எங்கள் வீட்டில்,  தீமூட்டாத அடுப்பு தனது தொழில் என்ன?  நாம் எதற்காக  இருக்கிறோம் என்பதையே மறந்து நீண்ட நாளாயிற்று. சூடு இல்லாத குளிர் புகுந்த அதன் உட்புறம் காளான் பூத்து நிறைந்திருக்கிறது.
(அடுப்பு வயிறு என்றும்  காளான் பெருகும் பசி என்றும் இதை  அர்த்தப்படுத்தினீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை)
சமைக்க எதுவுமில்லை. உண்ண உணவுமில்லை. என் குடும்பம் உடல் மெலிய,  பசி எங்களை மெல்ல உண்கிறது. பால் குடி மாறாப் பச்சிளங் குழந்தையொன்று எமக்கு! அது எமக்கா வந்து பிறக்க வேண்டும்? தன் தாயின் வெறும் தோல்மட்டுமே வற்றிக் கிடக்கின்ற, பால் இல்லாததால் தூர்ந்து போன மார்பைச் சுவைத்துச் சுவைத்துப் பார்க்கிறது. அதிலிருந்து ஒன்றும் காணாமல், கண்களில் நீர் நிறைய அழுதவாறு பசியின் கதறல் பெருகத் தன் தாய் முகத்தை நோக்குகிறது.

தன் பசி பற்றிய கவலை சிறிதும் இல்லாமல், தன் பிள்ளையின் பசி போக்கும் வழியில்லாமல், என் மனைவி என் முகத்தை நோக்குகிறாள். நானோ உன் முகம் நோக்க  என் பிணி தீரும் என்று உன்னை நம்பி வந்திருக்கிறேன் குமணா!“

[அருஞ்சொற்பொருள் ஆடு எரிஉயர்ந்து எரியும். கோடு உயர்மூன்று பக்கமும் உயர்ந்த ஆம்பிகாளான், தேம்பு பசிஉடலை உருக்கும் பசி
இல்லி தூர்தல் – (மார்பில் பால்வரும் துளை) அடைதல்]

பொருளைச் சுவைக்காய்ச் சற்றுக் கூட்டிக் குறைத்துச் சொல்லியிருந்தாலும் பாடலின் மையக்கருத்து இதுதான்.

சரி இதன் காப்பியைப் பார்ப்போமா?

ஒப்பிலாமணிப் புலவர் என்றொருவர். பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராய் இருக்கலாம். நிச்சயமாய்க் குமணனை இவர் பார்த்துக் கூட இருக்க மாட்டார்.

அவர் பெயரில் உள்ள பாடலைப் பாருங்கள்,

ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
சுவைதொறும் சுவை தொறும் பால் காணாமல்
குழவி தாய் முகம் நோக்க யாமும்
நின் முகம் நோக்கி வந்தனம் குமணா!

இது எப்படி இருக்கு……?

சரிங்க நியாயத்தைப் பார்த்திடுவோமா?

ஒப்பிலா மணிப் புலவர்  நம்ம சுஜாதா மாதிரி ஆளுங்க செய்ற மாதிரி இந்த சங்கப்பாடலை எளிமைப் படுத்தி இருக்கார்ன்னு வேணுமானால் வைச்சுக்கலாம். பல தமிழறிஞர்கள் இது போல செஞ்சிருக்காங்க.

ஆனா அவர் பெயரில போட்டது……?

அவரே எழுதி இருந்தாலும், அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அவர் பெயரில் போட்டிருந்தாலும் நாம் ஏற்கனவே சொன்னதைப் போல்  அந்தக் கால மரபில் இது குற்றம் என்ற பார்வையெல்லாம் இல்லை

ஒரு பாடலை காலச்சூழலுக்கு ஏற்ப எளிமைப்படுத்தும் முயற்சியே இது.

அந்தக் கால நியாயங்களை இன்றைய அறிவு மரபோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. ஏனெனில் இந்தக் காலத்தில் அறிவு ஒருவனுக்கு உரிமையுள்ள சொத்தாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு விலை இருக்கிறது.

ஆதாயமற்ற பயன்பாடெனின் அதன் உரிமையாளரின் பெயர் குறிப்பிடுவதோ அல்லது ஒரு நன்றி என்பது கூட அதற்குரிய குறைந்த பட்ச விலையாக இருக்கலாம்.

எனவே இன்று  இது போன்று எளிமைப்படுத்தக் கருதுகின்றவர், நிச்சயம் மூலவடிவத்தையோ எழுதியவர் பெயரையோ குறிப்பிட்டு அதை எளிமைப்படுத்தியவராகத் தன் பெயரைக் குறிப்பிடல் என்பதே சரி. அதை எதையும் குறிப்பிடாமல் தம் பெயரில் போட்டுக் கொண்டால் இதுவும் இன்று எழுத்துத் திருட்டுதானே  ?

காப்பிகள் தொடரும்..!

படஉதவி - கூகுள். 
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

68 comments:

  1. அருமையான பதிவு ஐயா!

    ஆனால், ஒரு சிறு மாற்றுக் கருத்து ஐயா! ('அதுதானே பார்த்தேன்' என்று நீங்கள் நினைப்பது இங்கு எதிரொலிக்கிறது). சுஜாதா தன் உரையில்தானே பாடல்களை எளிமைப்படுத்தினார்? இவர் பாடலையே எளிமைப்படுத்தி, தான் எழுதியிருப்பது போல் போட்டதற்கும் அதற்கும் தொடர்பில்லையே?

    ஆனால், நெஞ்சை உருக வைக்கும் பாடல்!

    "தமிழ்ப் பல்கலைக்கழகத் தட்டச்சுப்படியில் உள்ள அதே பிழைகள் அறிஞர்களின் பதிப்பிலும் மாறாமல் இருந்ததுதான்" என்ற வரிகளைப் படித்தபொழுது 'மாட்டினானுங்களடா' என்று நினைத்தேன். ஆனால், கடைசி வரை அவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காததும், இன்றும் அவர்கள் அறிஞர்கள் எனும் பெருமையோடு உலா வருவதும், இன்னும் அந்த நூல்கள் அவர்களின் பெயரால்தான் அறியப்படுகின்றன என்பதும் வயிற்றை எரிய வைத்தன; வைக்கின்றன! தமிழ்தானே! பத்துக் கோடிப் பேரின் தாய்மொழியாகவும், பத்தாயிரம் ஆண்டுத் தொன்மை வாய்ந்ததாகவும் இருந்தாலும், ஒரு நாட்டின் உள்ளூர் மொழிதானே! "ஆற்றுத் தண்ணீர்தானே? அண்ணா குடி! அம்மா குடி" என்ற பழமொழி தாங்கள் அறிந்ததே! ஆனால், இன்று ஆறுகள் கூட அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாகி விட்டன. ஆனால், தமிழ் கேட்பாரற்ற கைப்பிள்ளைதானே?

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தங்களின் மாற்றுக் கருத்தினை வரவேற்கிறேன்.
      சுஜாதா சங்கப்பாடல்களை எளிமைப்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் தனது பாடல்கள் என்று சொல்லவில்லை.
      சங்கப்பாடலையும் கொடுத்து அதற்குத் தன் எளிய வடிவிலான கவிதையையும் (?) கொடுத்திருக்கிறார். அதையே சங்கப்பாடல்களை எளிமைப்படுத்தும முயற்சி என்று குறிப்பிட்டேன். இல்லாவிட்டால் இந்த ஒப்பிலாமணிப்புலவனுக்குப் பதிலாக, “சுஜாதாவின் காப்பி எப்படி இருக்கு?“ என்றல்லவா பதிவைப் போட்டிருப்பேன்.
      உயிர்மைப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த,
      401 காதல் கவிதைகள்- குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம். என்ற நூல் ஒரு சான்றிற்கு மட்டுமே!
      இது போன்ற எளிமைப்படுத்தலை பாரதிதாசன் உட்படப் பலரும் செய்திருக்கின்றனர்.
      வெள்ளிவீதியின் பாடலும் ( இது கொல்லன் அழிசி என்பானால் பாடப்பட்டது என்ற கருத்தும் உண்டு. சுஜாதா கொல்லன் அழிசி என்பவர் ஆசிரியர் என்று கொள்கிறார். ) அதற்குச் சுஜாதா அவர்களின் மறு ஆக்கமும் வருமாறு,

      கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
      நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு,
      எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
      பசலை உணீஇயர் வேண்டும்
      திதலை அல்குல் என் மாமைக் கவினே

      சுஜாதாவின் ஆக்கம்-

      யாருக்கும் பயனில்லை
      --------------------------------------

      கன்றும் உண்ணாமல் கறக்கவும் கறக்காமல்
      நிலத்தில் வழியும் பசுவின் பால்போல்
      எனக்கும் இல்லாமல்
      என் தலைவனுக்கும் உதவாமல்
      என் அழகு வீணாகிறது!

      சங்கப்பாடல்களைக் குறிப்பிட்டு இதுபற்றிய எனது புரிதல் என்றோ எனது மறுவுருவாக்கம் என்றோ குறிப்பிடுவது தவறில்லை.
      இது நமது இன்றைய புரிதல்.

      அன்றைய காலத்தில் ஒப்பிலாமணிப்புலவர் இது போன்று எளிமைப்படுத்திய வடிவம் என்று கொள்வதில் நியாமுண்டென நினைக்கிறேன். மூல வடிவத்தைக் குறிப்பிடாதது அக்கால மரபாக இருக்கலாம்.
      இதுவும் “நினைக்கிறேன் ...... இருக்கலாம் தான்..“
      தானெழுதிய பாடல் என்று சொல்லித் திரிந்தாரென்றால் அது தவறுதான்.
      இது போன்று இன்றும் வாழும் நம்நாட்டு தமிழ்ப் பேரறிஞர்கள் இருப்பவர்களின் கொஞ்ச காலம் முன்பு இருந்தவர்களின், கட்டுரைகளைச் சிறிதும் கூச்சமின்றி எடுத்துத் தங்கள் பெயரில் போட்டுக் கொண்ட கதை நிறையவே தமிழுலகில் இருக்கிறது அய்யா!
      இந்த இரு ஜெர்மானிய அறிஞர்கள் , தமிழ்நாடுதானே ... தமிழ்தானே என்று செய்யும் அலட்சியம்.. நிச்சயமாய்க் கவனிக்கப்பட வேண்டியது.
      உண்மையில் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. தங்கள் தளத்தில் கருத்திடுவதில் இஃது ஒரு வசதி ஐயா! ஏதாவது கேள்வி கேட்டால், மாற்றுக் கருத்து உரைத்தால், அதற்குத் தாங்கள் தரும் விளக்கமே இரண்டு, மூன்று தனிப் பதிவுகளுக்கு நிகரான தரமும் சுவையும் கொண்டதாக இருக்கும்! மிக்க நன்றி ஐயா!

      Delete
    3. அய்யா,
      வணக்கம். நீங்கள் எல்லாம் எனது தளத்தைப் பார்வையிடுகின்ற போது நான் இன்னும் இன்னும் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. எனது பொறுப்பும் அதிகரிக்கிறது.
      எந்தத் தவறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவனமாக இருந்தாலும் பிழைகள் வந்து விடுகின்றன.
      நீங்களோ சரியாக அதைப் பிடித்து விடுகிறீர்கள்.
      அப்புறம் இது போலச் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
      எப்படியோ பெரிது பெரிதாகப் பின்னூட்டத்தை இடுகிறேன் என்பது தெரிகிறது.
      இப்பொழுதெல்லாம் குறைத்துக் கொண்டிருக்கிறேன் அய்யா!
      தோழர் மதுவும் இதுவே கூறினார்.
      இன்னும் கவனமாய் இருக்கத் தங்களின் கருத்து நிச்சயம் துணைசெய்யும்.
      தங்களின் மறுவருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    4. ஐயா! தங்களுடைய இந்தக் கருத்தை மின்னஞ்சலில் படித்துவிட்டு, யாரைப் பற்றித் தாங்கள் இந்த அளவுக்கு எழுதியிருக்கிறீர்கள் என்று வியந்து, பார்க்க வந்தேன். எனக்கா இப்படி ஒரு கருத்து இட்டிருக்கிறீர்கள்?! என்னவோ போங்கள்!

      எப்படியோ, தங்களுடைய இப்படிப்பட்ட வார்த்தைகள் என் பொறுப்புணர்வை, இத்தகைய வார்த்தைகளைத் தாங்குவதற்குண்டான தகுதியை வளர்த்துக் கொள்ளும் ஊக்கத்தை அளிக்கின்றன.

      Delete
  2. பதிவுத்திருட்டு இப்ப சரவசாதாரண நிகழ்வாகப்போச்சு

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் !
      திருடுகிறோம் என்ற எண்ணம் இல்லாமல் இயல்பாக அடுத்தவரின் சொத்திற்குச் சொந்தம் கொண்டாடும் படித்தவர் திருட்டு!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனிமரம் அவர்களே!

      Delete
  3. இன்று என் தளத்தில் நான் சுட்டு எழுதிய பதிவு. வாசித்து சிரிக்க அழைப்பு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சுட்டிருந்தாலும் பதிவு சுடவில்லை. ரசிக்கவும் சிரிக்கவும் வாய்த்தது.
      இந்தப் பதிவைப் பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்ப வில்லையா அய்யா?
      தங்களின் வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி!

      Delete
  4. பிறரின் எழுத்துக்களை இடக்கூடிய சூழல் வரும்போது அவரின் பெயரைக் குறிப்பிடுவது தொழில் தர்மம் மட்டுமல்ல இதை எழுதியவரின் பெயரையும் உயந்தவனாய் உயர்த்தி விடும்.

    சி(தி)றந்த அலசல் பதிவுக்கு நன்றி கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே கவிஞரே என்று யாரைச் சொல்கிறீர்கள் கில்லர்ஜி!
      அதைவிட நண்பரே என்றதே நன்றாய் இருந்ததே!
      ஆம் நண்பரே!
      நாணயம் இல்லா உலகில் இதெல்லாம் வெகுசாதாரணம்தான்!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. கவிஞரே எமது எழுத்துக்கள் என்றுமே பொய்யுரைப்பதில்லை.

      Delete
  5. இப்போது வலையுலகில் அடிக்கடி பேசப்படும் பொருள் எழுத்து திருட்டுதான். பார்த்து பார்த்து காப்பி அடித்தவர்கள் கூட இப்போது மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு நகல்/ஒட்டு (COPY & PASTE) தொழில் நுடபம் வந்துவிட்டது. இதனாலேயே வலைப்பதிவில் நான் முன்பு போல அதிகம் என்னை வருத்திக் கொண்டு எழுதுவதில்லை.

    நீங்கள் கட்டுரையின் இறுதியில் சொன்னது போல, எதுவாக இருந்தாலும், “ மூல வடிவத்தையோ எழுதியவர் பெயரையோ குறிப்பிட்டு அதை எளிமைப்படுத்தியவராகத் தன் பெயரைக் குறிப்பிடல் என்பதே சரி.” என்பதே எனது கருத்தும் ஆகும்.
    த.ம. ? – வாக்களித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா, நகல் ஒட்டு ஒரு புறம் இருக்கட்டும். அதற்காக உங்களது பணியைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.
      நீங்கள் இந்த வயதில் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்துத்தான் சோம்பிக் கிடக்கும் எங்களுக்கு உற்சாகம் வருகிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  6. எழுத்துத் திருட்டு, நூல்களில் மட்டுமல்ல, வலைப் பூவிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது நண்பரே
    இதை எப்படித் தடுப்பது

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா! அது பற்றிய விழிப்புணர்வு வேண்டும்!
      தொழில்நுட்பம் அறிந்தவர்கள்தான் இதைத் தடுக்கும் வழி முறைகள் இருக்கின்றதா எனக் கூற வேண்டும்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  7. திருக்குறளுக்கு பலரும் அவரவர் பாணியில் உரை எழுதி இருந்தாலும் ,மூலவர் திருவள்ளுவர்தானே?எல்லாப் புகழும் வள்ளுவருக்கே :)
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. உற்சவர்கள் மூலவர்களை மறந்து தம்மை மூலவர்களாக நினைத்துக் கொள்வதால் வரும் சிக்கல்தானே இது பகவானே?
      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  8. எழுத்துத்திருட்டு பரவலாக பெருகிக் கொண்டுவருவது வேதனையாக செய்தி. தங்களின் ஆதங்கம் அனைவருடைய ஆதங்கமே.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் அய்யா!

      Delete
  9. பிரபல எழுத்தாளர்கள், மற்றும் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு இதற்கென்றே ஊதியத்துடன் கூடிய உழைப்பாளிகள் உண்டாம் அய்யா. இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றாலும் திருட்டு விசிடி போல இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விரிவாகப் பின்னூட்டமிட ஆசையிருந்தும் இயலாத நிலையில் எனது பாராட்டுகளுடன் த.ம.(4)

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா. ஆங்கிலத்தில் Ghost Writer என்கிறார்கள். தமிழில் இவர்களுக்கு என்ன பெயர் என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழின் பெரும் திரைப்படக் கவியாளுமை ஒருவர்க்கு அப்படிப்பட்ட ஒரு குழுவே உண்டு. என் நண்பரும் அதில் ஒருவர். எழுதும் பாடல்களைச் சற்றுச் செப்பனிட்டு படத்திற்குக் கொடுத்துவிடுவாராம். தன்பெயரில் இடும் கவிதைத் தொகுப்புகளிலும் அவர்கள் பங்கு உண்டு. பிரபலமான அவரது பல பாடல்களில் இரண்டு முழுக்க முழுக்க என் நண்பருடையது. அதற்கு அவருக்குக் கிடைத்த ஊதியம் மூன்றாயிரம் ரூபாய். இன்னும் சில பாடல்கள் அவர் குழுவில் உள்ளரால் எழுதப்பட்டது என்பார்.
      எப்படியாவது தனியே பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கும் என்று அக்குழுவில் இருப்பவர்கள் திரைத்துறையைச் சேர்ந்த யாரோடாவது தொடர்பு கொண்டதை அறிந்தால் உடனே துரத்தி விட்டுவிடுவாராம். சம்பந்தப்பட்ட நபர்களையும் உடனே அழைத்து எச்சரித்துவிடுவாராம்.

      நறுந்தமிழ்க்கவிஞர்.

      “ மண்மீதில் உழைப்போரெல்லாம் வறியராம் - உரிமைகேட்டால்
      புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்“

      என்ற பாரதிதாசனின் வரிகளைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா‘!

      Delete
  10. தடுக்க முடியாது என்பதுதான் உண்மை

    ReplyDelete
  11. தடுக்க வழியில்லை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை்க்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  12. சிறந்த ஆய்வு..சங்கப்பாடல் காப்பியை நியாயப்படுத்தியதும் ஏற்க கூடியதாகவே உள்ளது சகோ...நிச்சயம் தடுக்கப்படவேண்டும்..இன்றைய காப்பி.....

    ReplyDelete
    Replies
    1. நியாயப்படுத்தும் முயற்சி என்பதை விட அது இன்னொரு பார்வை என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன் கவிஞரே!
      பிறருடைய படைப்புகளைத தமதென்னும் எண்ணம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நனறிகள்!

      Delete
  13. வெவ்வேறு கட்டுரைகளிலிருந்து காப்பியடித்து அவை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று கூறாமல், குறைந்த பட்சம் Quotation marks கூடப் போடாமல் கட்டுரை, கட்டுரையாக எழுதித் தள்ளிய பலர் தமிழ்மணத்திலும் இருந்தனர். என்னுடைய பதிவுகள் பல அப்படியே பல சில இணையத்தளங்களில் வந்துள்ளன. அதை அவர்களுக்கு யாரோ மின்னஞ்சலில் அனுப்பினார்களாம். அட, நான் உளறுவதைக் கூடவா காப்பியடிப்பார்கள், என்று நினைத்து சிரிப்புத் தான் வரும். :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் நன்றி திரு.வியாசன் அவர்களே!
      சுயசிந்தனைகளை இப்பணிகள் முடக்கிவிடும் என்பது ஒரு புறமிருந்தாலும், அடுத்தவர் எழுத்தைத் தனதாய்க் காட்டுவது தவறென்ற எண்ணம் உருவாகாத வரை இதைத் தடுக்க முடியாது என்று தோன்றுகிறது. காப்புரிமை என்பதெல்லாம் ஓரளவிற்குத்தான்.
      இன்று பெறக்கூடிய முனைவர் பட்டங்களில் பெரும்பாலானவை கீழே துளசிதரன் அய்யா சொல்வது போல, காப்பி வடிகட்டிகளில் வடிகட்டப்பட்டால் அவர்களது சரக்கு எங்கே என்று கேட்க வேண்டிய நிலை வரும்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  14. அடேங்க்ப்பா! அன்றைய காலகட்டத்திலும் இந்தச் சுடல் இருந்திருக்கின்றதே! ஆச்சரியம்தான்...அப்போது நடந்த சுடலை நீங்கள் கண்டுபிடித்தது உங்கள் ஆழ்ந்த ஆராய்ச்சித் திறமையையும் இங்கே சுட்டிக் காட்டுகின்றது. ஒப்பிலா மணி ஒப்பு இலா மணியாகிப் போனாரோ?!!
    நம் வலைத்தளங்களில் சுடல் மிகவும் சூடாக நடக்கின்றது...(நல்ல காலம் எங்கள் பதிவுகள் காந்தி, லிங்கன் அல்ல ஆதலால் சுடப்படுவதில்லை)

    நம்மூர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரும்பான்மையானவை அப்படியே க்செராக்ஸ் எடுத்தது போல் காப்பிக் கட்டுரைகளே! மேலை நாட்டவரின் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அப்படியே காப்பி அடிக்கப் படுகின்றன. பட்டம் வாங்குவதற்கும் அதே! பட்டமும் கிடைத்து விடுகின்றது! அதனால் தானோ என்னவோ நமது ஊர் பட்டங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் அங்கீகரிக்க மறுக்கின்றன....அங்கு சேர விரும்பும் மாணவர்கள் நமது ஊர் மாணவர்கள், ஸ்டேட்மென்ட் ஆஃப் பர்ப்பஸ் எழுதுவது கூட, தங்களைப் பற்றியக் குறிப்புகள், தங்கள் ஆர்வம் பற்றி எல்லாம் எழுத வேண்டியதைக் கூட இணையத்தில் தேடிக் காப்பி அடித்து அனுப்பி விடுகின்றனர்....ம்ம் வேதனையானது. ப்ளக்கெரிசம் கண்டு பிடிக்க என்று இருக்கும் மென்பொருளை உபயோகித்துத்தான் அங்கு பரிசீலிக்கின்றனர். ம்ம் நம்மூரில் பட்டப் படிப்பிற்கு ஆய்வுக்கட்டுரைகளை அப்படிப் பரிசீலிக்காமல் பட்டம் கொடுக்கின்றனர்..... இதிலிருந்து தெரிவது என்னவென்றால்... சுயமாகச் சிந்திக்கத் தெரியாத, அறிவிலிகள், மனிதர்கள் பெருகி வருகின்றார்கள். அதை நம் கல்வி முறையும் ஆதரித்துப் பெருக்குகின்றது என்பதே.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆசானே நீங்கள் கூறியது உண்மைதான். அப்படிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை நான் கண்டிருக்கிறேன். திரியைப் பற்ற வைத்தால் பலரின் டாக்டர் பட்டம் பறிக்கப்பட்டு விடும்.
      மேலை நாட்டில் இதற்குள்ள மென்பொருள்கள் குறிப்பிட்ட சதவிகதம் வரை இந்த காப்பியை அனுமதிக்கின்றன என்று அங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்ட என் நண்பர் கூறினார். துறைசார்பான அனைத்து ஆராய்ச்சிகள் கட்டுரைகள் ஆய்வேடுகள் இதழ்கள் இணைய தள வெளியீடுகள் என அனைத்தையும் சேமித்து வைத்திருந்தால் மட்டுமே இப்பரிசீலனை சாத்தியம்!
      தாங்கள் இறுதியில் சொன்னது உண்மை.
      நம் கல்வி முறை அது தான் SOP எழுதுவதைக் கூட காப்பியடிக்கச் செய்கிறது.
      வெளிநாடுகளில் பள்ளி அளவிலிருந்தே இதற்குப் பயிற்சி உண்டு.'' Writing essays for dummies'' படித்திருப்பீர்களே ஆசானே?
      தங்களின் வருகைக்கும் ஆய்ந்த கருத்துகளுக்கும் நன்றி!

      Delete
  15. வணக்கம் ஐயா!

    திருட்டுக்கள் கண்டு திடுக்குற்றுப் போனேன்!
    சுருட்டுவதோ சொத்தினைச் சுட்டு!

    சங்க இலக்கியப் பாடல் சரித்தது என் உள்ளத்தை..!
    மனம் கனத்து விட்டது ஐயா! வறுமை, பிணியை
    எத்தனை ஆழமாக எடுத்தியம்பியுள்ளனர்.
    வரிக்கு வரி உணர்ந்து படிக்க அப்பப்பா...! சோகம்
    தொண்டைவரை வந்து அடைத்தது! துலாபாரம் படத்தில் வரும்
    ’பூஞ்சிட்டுக் கன்னங்கள்’ சோகப் பாடல் காட்சி நினைவில்
    சட்டென்று வந்து நிழலாடியது.. .
    நல்ல இலக்கியப் பாடல்! அறியத் தந்தமைக்கும்
    பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா!

    இலக்கியப் பாடல் திருட்டும்..! திகைக்க வைத்தது!

    அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே!
      எப்படியோ உங்கள் பின்னூட்டத்தால் என்னையும் அவ்வப்போது வெண்பா என்ற பெயரில் ஏதோ எழுத வைத்துவிடுகிறீர்கள்!

      “குருடர்கள் கண்முன் கொளுத்துவிளக் கென்றால்
      அறிவின்மேல் ஆகாதோ அய்யம்? - இருகண்கள்
      உள்ளோரும் காணட்டும் உண்மை உணரட்டும்
      வெள்ளோட்ட மாய்விடுத் தேன்!

      உண்மையில் அது மிகுந்த துயரமுள்ள சித்திரம் தான் சகோதரி! புலமையின் வறுமை கொடூரமானது. இரந்து வாழும் புலமை.. கொடுமையில் கொடுமை!
      தங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோ!

      Delete
  16. திருடனாப் பார்த்து திருந்தா விட்டால்...

    ReplyDelete
    Replies
    1. தக்க தண்டனை கிடைக்கட்டும் தக்க தண்டனை கிடைக்கட்டும்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  17. அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது எழுத்து தீருட்டு என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அது எல்லாக் காலங்களிலும் இருந்தே வருகிறது சகோதரி.
      வருங்காலங்களிலும் இருக்கும்.

      Delete
  18. அன்புள்ள அய்யா,

    எழுத்துத் திருட்டு பற்றி எழுதியிருந்ததைப் படித்து அறிந்தேன்.
    தமிழ்ப்பல்கலைக்கழகம் 1987 இல், உருவாக்கி வைத்திருந்த சங்க இலக்கியச் சொல்லடைவு, சென்னை ஆசியவியல் நிறுவனத்தால் தாமஸ் லேமென் ( Thomas Lehmon) தாமஸ் மால்டன் ( Thomas Malton ) எனும் இரண்டு ஜெர்மானிய அறிஞர்களின் “சொந்த முயற்சியில்“ உருவாக்கப்பட்டதாய் ‘ A Word Index for Chankam Literature‘ என்னும் பெயரில் 1992 இல் வெளியிடப்பட்டது என்றும்... வெளிநாட்டுக்கார ஜெர்மானியானியரின் திருட்டுப் பற்றி கூறியிருப்பது கண்டு... அந்தச் செயல் கண்டு நொந்து போனேன்.

    சங்ககாலப் புலவர்கள் இலக்கியப்பாடலொன்றைக் காப்பியடிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள்...

    “ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின்
    “ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்
    ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்
    ஆம்பி பூப்பத் தீம்பசி உழல
    இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
    இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை
    சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி
    சுவைதொறும் சுவை தொறும் பால் காணாமல்
    மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ
    நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண.“
    குழவி தாய் முகம் நோக்க யாமும்
    நின் முகம் நோக்கி வந்தனம் குமணா!“

    நல்ல திருட்டை நாட்டிற்கு கண்டுபிடித்து கொடுத்தீர்கள்.
    இன்றைய திருட்டிற்கும் அன்றையத் திருட்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே நினைக்கின்றேன்.
    'ஹாங்காங்' என்பதை 'ஆங்காங்' என்றும், '70 இலட்சம் மக்கள்தொகை' என்று நான் எழுதியிருந்ததை '72,35,043 மக்கள்தொகை' என்றும் மாற்றியிருந்தார். இரண்டும் ஒன்றதானே... அந்தக் காலம்... இந்தக் காலம்... திருட்டு திருட்டுதானே... ஒன்றாகத்தானே இருக்கிறது.
    அந்தக் கால மரபில் இது குற்றம் என்ற பார்வையெல்லாம் இல்லை. இந்தக் கால மரபில் இது குற்றம் என்ற பார்வைமட்டுமே இருக்கிறது! ‘ நன்றி ’என்ற குறைந்த பட்ச விலையைக் கூட கொடுத்தால் பரவாயில்லை!?
    ஒரே ஒரு காப்பி குடித்தால் போதுமா? போதாதய்யா... போதாது!
    பாடலைக் காலச்சூழலுக்கு ஏற்ப எளிமைப்படுத்தும் முயற்சியாக... கவியரசு கண்ணதாசன் திரைப்பாடல்களில் நெறைய கையாண்டுள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் அதைத் தெளிவுபடுத்தினால் எல்லோருக்கும் நல்லது...!
    தெளிவுபடுத்துவீர்ளா? இது என்ன கேள்வி என்றா கேட்கிறீர்கள்...? தெளிவுபடுத்துங்கள்... ஆமா...! அவ்வளவுதான்.
    நன்றி.





    ReplyDelete
    Replies
    1. மணவையாரே என்ன என் வியாதி உங்களைப் பிடித்துக் கொண்டதா?

      இவ்வளவு நீளமாாாாாாாாாாாாாாாாாாாாா பின்னூட்டம்!

      கண்ணதாசன் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார் அய்யா!

      பண்டைய இலக்கியத்தைச் சாமானியர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இலக்கியத் தேனி... என்பாதாய்ச் சொல்லியதானப் படித்திருக்கிறேன்.
      இன்றைய பல கவிஞர்களும் அதைச் செய்கிறார்கள்.

      திரைப்படப்பாடலில் அதைச் சொல்ல முடியாதே தவிர, கண்ணதாசன் உட்படப் பலரும் தங்களின் தனித்த பேட்டிகளில் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

      பாட்டன் சொத்து ..?

      அது எல்லார்க்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதை மீண்டும் விளக்க வேண்டுமா அய்யா?
      நம்பணி தெரியாத காப்பிகளை அறிமுப்படுத்துவதாய் இருக்கட்டுமே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  19. சங்க இலக்கிய பாடல் அருமை! அதை ஒப்பிலா மணி புலவர் எளிமை படுத்தியவிதம் சிறப்பு! ஆனால் உரிமை கொண்டாடி இருந்தால் தவறுதான்! இப்போது இணையத்தில் இருந்து பல பதிவுகள் படைப்புக்கள் களவாடப்படுகின்றன. இருந்தும் இதை முழுவதுமாக தடை செய்ய என்ன வழி என்று தெரியவில்லை! நல்லதொரு பதிவு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் அய்யா சொல்லியிருப்பதையும் வலிப்போக்கன் அவர்கள் சொல்லி இருப்பதையும் பாருங்கள் அய்யா!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  20. இணையத்தின் மூலம் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கிறது. அதே சமயம், படைப்புத் திருட்டும் ஏராளமாய் நடக்கிறது. எல்லோரும் சொல்வது போல், குறைந்த பட்சம் அந்த படைப்பாளியின் பெயரையாவது சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் சுயநலமிக்க இன்றைய உலகில் அவ்வாறு எல்லாம் எதிர் பார்க்க முடியாது.

    கடைசியில் காப்பிகள் தொடரும்னு வேற போட்டுட்டீங்க.. இன்னும் எத்தனை காப்பிகள் வெளிவரப்போகிறதோ?

    ReplyDelete
    Replies
    1. பாரதி அடித்த காப்பியே இருக்கிறது அய்யா!
      அவர் வேண்டுமென்றே செய்தார் என்கிறார்கள்!
      அவரையறியாமல் அந்தப் பாடலின் பாதிப்பினால் எழுந்தது என்கிறார்கள்..

      இப்படி நிறைய இருக்கின்றன.

      இடைவெளிகளில் தொடர்வோம் அய்யா!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  21. 66கோடியே.... 65 லட்சம் அடித்த திருட்டைவிட..அறிவுத் திருட்டு அவ்வளவு மோசமானதாக இல்லை....இந்த அறிவு கூட எங்கிருந்து வந்தது அவர்களுக்கு என்று தனியாக வந்ததாக இல்லை ....இந்த சமூகத்திலிருந்து வந்தது. சமூகத்திலிருந்து தோன்றிய தனியுடமையால் அறிவும் தனியுடையாகிப்போனது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் வலிப்போக்கன் அவர்களே !
      நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது.
      அவரவரால் முடிந்ததை அவரவர் செய்கிறார்கள்!
      அப்படித்தானே செய்யவும் முடியும்!
      அறிவைப் பொதுவில் வைத்ததைத்தான் சென்ற பதிவில் பார்த்தோமே!
      பொதுவுடைமை இல்லா இச்சமுதாயத்தில் இன்று இது சரியா தவறா என்று பார்த்தால் தவறுதானே?
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  22. அண்ணா,
    நம்மவர்கள் மனிதர்களையே மதிக்காதவர்கள். மனிதர்களின் எழுத்தை மட்டும் மதித்துவிடுவர்களா என்ன? ஆண்டுகணக்காய் அறவழியில் அணுவுலை எதிர்த்தும், ஈழதுயருக்காகவும், காவிரி நீருக்காகவும் நாம் செய்த போராட்டம் கண்டுகொள்ளபடவே இல்லை. ஆனால் குஜார்கள் உடனடியாக கவனம் பெறுகிறார்கள். இப்போதெல்லாம் நான் என் வகுப்புகளில் சத்தியாக்கிரகம் பற்றி பேசுவதில்லை. பாரதியின் ரௌத்திரம் பழகு மட்டுமே கற்பிக்கிறேன். முறையான, சரியான கோபம் பற்றி தான், நான் திசைமாறிவிட்டேன். இதோ பதிவிற்கு வருகிறேன்.

    பெரும்பான்மையான குடும்ப, க்ரைம் நாவல்கள், நெடுந்தொடர்கள் பிறர் படைப்பை அல்ல தனது படைப்பையே காப்பி அடித்துக்கொடுத்துவிடும் காலம் இது. இது வாசகர் மீதான இலக்கிய மேதைகளின் அசிரத்தை, அதன் தொடர்ச்சிதான் இவ்வாறான காப்பிகளும்.
    அந்த ஜேர்மன் மேதைகளின் இந்த அரும்பெரும் சாதனைக்கு நம் பல்கலைகழக பெருமக்கள் செய்த உதவி வழக்கம் போலவே மறைக்கப்பட்டுவிட்டது பார்த்தீர்களா!! பாவம் அவர்கள். பிரதிபலனாய் என்ன பெற்றார்களோ??? வழிப்போக்கன் சொன்னது செம நச் கமென்ட் இல்லையா அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. காப்பியில் பலவகை இருக்கிறது சகோ!
      நீங்கள் சொல்வது அதில் ஒரு வகைதான்!
      தன் படைப்பையே காப்பியடிப்பது.
      பலபேச்சாளர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
      தங்கள் அண்ணன் ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
      அவர் மகள் படிக்கின்ற கல்லூரிக்கு ஒரு பேராளுமை(?) பேச அழைக்கப்பட்டாராம். ( பெருந்தொகை பெற்று. அதில் தவறில்லை. தமிழ்ப் பேச்சுகளுக்கு இவ்வளவு தொகை கிடைக்கிறது என்று தெரிந்தால் மக்கள் நீயா நானா என்று களத்தில் இறங்கி விட மாட்டார்களா? )
      மாணவ மாணவியர் அவரது வருகையை எதிர்நோக்கி யு டியூபில் அவரது பேச்சைப் பார்த்து எப்படிக் கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் தயார் செய்து வைத்திருந்தார்களாம்.
      ஆனால் வந்த அந்த பிரபலம் மாணவர்கள் யு டியூபில் கண்ட அதே பேச்சை மீண்டும் நீட்டி முழங்கச் சீ என்று ஆகிவிட்டதாம்.
      ஆனால் அறிஞர் அண்ணாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
      தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் அவர் குறைந்தது பத்துகல் தொலைவுள்ள ஒவ்வொரு இடமாக நின்று சொற்பொழிவாற்றிக் கொண்டே போவாராம்.
      உதாரணமாக மணப்பாறையில் இருந்து திண்டுக்கல்லுக்கென்றால் ஒரு ஆறேழிடத்தில் ..!
      மக்கள் மிதிவண்டியிலோ பேருந்திலோ ஓரிடத்தில் அவர் பேச்சை முடித்ததும் , அடுத்து பேசும் இடத்திற்கு விரைவார்களாம்.
      அதாவது மணப்பாறைக்காரர் ஒரு கட்டத்தில் அண்ணாவோடே நகர்ந்து நகர்ந்து திண்டுக்கல் சென்றிருப்பார்.
      ஓரிடத்தில் பேசியதை ஒரு போதும் அவர் இன்னொரு இடத்தில் பேசியதில்லை.
      புதிது புதியாய் கொட்டும் சொல்லின் பொழிவு..!
      நானும் திசைமாறிவிட்டேன்.
      வலிப்போக்கர் சொன்னது நச் கமெண்ட்தான்!
      அதனால் தான் அவரால் சமூகத்தின் வலிகளைப் போக்க முயலவேனும் முடிகிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!

      Delete
  23. பல புதிய தகவல்களை அறிந்தேன்.எந்தக் காலத்திலும் திருடர்கள் உண்டு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  24. பகிர்வு அருமை அய்யா!
    தாங்கள் கருத்தாக இட்டதை
    தங்களுக்கே சுட்டுகிறேன்.சுட்டுவதில் தவறில்லை!
    தன் படைப்பாய் இடுவதில் தான் தவறு என்பேன்.
    நன்றியை உரைப்பதிலும் உயர்ந்தவர் யார்?
    தாழ்ந்தவர் யார்? என்று பார்க்கும் பாழும் உலகம் அய்யா நாம் வாழும் உலகம் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. என்னைச் சுடுவதில் தவறில்லை நம்பி!
      எண்ணையில் சுடுவதுதான் ஒரு கட்டத்திற்குப் பின் ஆகாது என்கிறார்கள்!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  25. எனது சித்தப்பா சுந்தரபாரதியின் கவிதைகள் இது போல் பல திருடப்பட்டிருக்கின்றன. இன்றும் அவரது பாடல்களை சிலர் மேடையில், தொலைக் காட்சியில் தான் எழுதியது போல் பாடக் கேட்டிருக்கிறோம்.
    நீங்கள் குறிப்பிட்ட திரைக் கவிஞரிடம் வேலை?) பார்க்கும் வாய்ப்பு 20 வருடங்களுக்கு முன்பு எனக்கும் வந்தது. இப்போது திரைக் கவிஞராய் இருக்கும் ஒருவர் நீங்கள் குறிப்பிடுபவருடன் பணியாற்றியவர். அவர் மூலம் வந்த அந்த வாய்ப்பை நான் மறுத்திருக்கிறேன். ( அது தவறோ என்று சில சமயம் யோசித்தும் இருக்கிறேன். )
    நல்ல பதிவு விஜூ.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ,
      வலைத்தள வடிவமைப்பு மாறிய பின் உங்களிடமிருந்து முதல் பின்னூட்டம் வருவது மகிழ்வளிக்கிறது. தங்கள் சிற்றப்பாவைக் குறித்து முத்துநிலவன் அய்யா கூறக் கேட்டிருக்கிறேன்.
      அவர் கவிதைகளை வாசித்ததில்லை. முத்து நிலவன் அய்யா கூறுகிறார் என்றால் நிச்சயம் சமுதாயச் சிந்தனையுள்ள கவிஞராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
      என்ன என்ன புரிந்து கொண்டீர்களா...???
      ஹ ஹ ஹா..
      அண்ணா,
      இத்தனைக்கும் நான் அன்னாரின் பெயரைச் சொல்லவே இல்லையே..
      யாராவது யார் என்று கேட்டால் என்னடா செய்வதென்னு நினைத்தேன்.
      நிச்சயம் நீங்கள் செய்தது தவறில்லை அண்ணா!
      நீங்ககள் எல்லாம இதைப் போன்ற ஆட்களிடம் சிக்கனால் அவ்வளவு தான்!

      தங்களது கவிதை பேசப்படுகிறது. இன்னும் எங்கும் பேசப்படும் நாள் வரும்.
      நன்றி அண்ணா!

      Delete

  26. வணக்கம்!

    நாட்டைச் சுருட்டும் நரிகளைப் போன்றுலவும்
    ஏட்டைச் சுருட்டும் எலிகளும்! - சாட்டையால்
    சாற்றி உடலுரித்தால் மாற்றி வழிநடப்பார்!
    துாற்றி உமிழ்வோம் தொடர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கூட்டிப் பெருக்கிவெளி கொண்டெறியும் குப்பைசில
      காற்றில் பறந்தொட்டும் கோபுரத்தில்! - “ஆற்றலறி!
      இங்கென்போல் யாருயரம்? என்றவுரை எள்ளுவதேன்?
      அங்கடுத்த காற்றே அதற்கு‘!

      அய்யா வெண்பாவில் கொஞ்சமாவது தேறி வருகிறேனா..?

      Delete

    2. ஐயா வணக்கம்!

      என்னென்பேன்? ஏதென்பேன்? இங்கொளிரும் வெண்பாவைப்
      பொன்னென்பேன்! பூவென்பேன்! போற்றி..நான் - என்றென்றும்
      பாடிக் களிக்கின்றேன்! பைந்தமிழ்த் தேனாற்றை
      நாடிக் குளிக்கின்றேன் நான்!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    3. தங்களின் வெண்பாப் பாராட்டிற்கு நன்றி அய்யா!

      Delete
  27. அட கிறுக்கு பயலுகளா அந்தக் காலத்திலும் உல்டா வேலை பண்ணி இருக்கிறாங்களே ..அப்போ தற்போதைய கணணி உலகில் கொடிகட்டிப் பறக்குமே இந்த திருட்டு ... என்ன ஒரு நாதாரித்தனம் இது..!

    வறுமையின் வலியை எவ்வளவு அழகாய் சொல்லி இருக்கிறார் ஒரு கணம் உள்ளம் நொந்துதான் போகிறது ! இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் சொன்னதுபோல் பலரது டாக்டர் பட்டம் பறிபோனாலும் பாவம் இல்லை ....!


    அறிஞன் அனுமதி அல்லா தெடுத்தல்
    தறிக்கும் சுயத்தை தடுத்து - அறிவில்
    கடுகள வாயினும் காரம் இருக்க
    கொடுகவி கொஞ்சும் உலகு !

    ( இது கவிதைகள் சுடுவோருக்கு )

    மேலும் தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!
      வெகு இயல்பான நடையில் வந்து விழுகின்ற உங்களின் பின்னூட்டம் காணும் போதே மனம் துள்ளுகிறது.
      உங்கள் வெண்பாவுக்குப் பதில் வெண்பா போடுவதா..?
      வேண்டாம் அய்யா!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும நன்றிகள்!

      Delete
  28. வலைத்தள நுட்பம் தெரிந்ததால்..தாங்கள் வலைதளத்தை மாற்றிவிட்டீர்கள். எனக்கு தெரியாததால் மாற வில்லை.... நன்றி! வெள்ளை என்பது வெள்ளை மனதுக்கு அறிகுறியோ....????

    ReplyDelete
    Replies
    1. வலைத்தள நுட்பம் ஒன்றும் நானும் அறியாதவன் தான் வலிப்போக்கரே!
      இச்சிக்கலைப் போக்க சில நல்லுள்ளங்கள் உதவின.
      வெள்ளை மனதிற்கு அறிகுறியா?
      “பின்புலத் துணையின்றி “எழுத்துகளை அதன் இயல்பில் பதியலாமே என்பதற்காகத்தான் வலிப்போக்கரே!

      பின் உங்கள் தளத்திற்கென்ன.. ?
      அதுதான் அருமையாக இருக்கிறதே..., உங்கள் எழுத்துகளைப் போலவே!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  29. திருட்டை அறிந்து திகைகின்றேன்.
    ஒரு பொருட்டாய் எண்ணாது
    தொடர்வதை எண்ணி வலிக்கிறது

    வறுமையின் கொடுமையை உணர்த்தும்
    பாடலும் வரிகளும் சிறப்பே!

    என்ன ஒரே படமாகத் தான் இருக்கிறது இப்பொழுதெல்லாம் கவிதைகள் எதையும் காணவில்லையே ஏன் சகோ ! வாத்தியராக மட்டும் இருப்போம் என்று ஏதாவது விரதமா என்ன ? ஹா ஹா .....

    ReplyDelete
  30. வலைத்தளம் வெள்ளையாகி இருப்பது மிகவும் நன்றாக இருக்கின்றது! வெளிச்சத்திற்கு வருகின்றீர்கள் என்பதைச் சொல்லுகின்றதோ!!

    ReplyDelete
  31. ஆஹா,,,,,,,,,,,
    வைரமுத்து தங்கள் நண்பரோ,,,,,,,,,,,,,,,
    இந்த எழுத்து திருட்டை கேட்க கரந்தையார் வந்த போது தான் எனக்கு வலைதளம் உருவாக்கி கொடுத்தார். அவரின் சுதைச்சிற்ப புகைப்படம் வேறு ஒருவர் ஆக்கம் என்று பெண்கள்மலர் பத்திரிக்கையில் வந்ததைத் தேடி,,,,,,,,,,,,,,,
    நீங்க தான் சொல்வீர்களே( நன்னூல்) முன்னோர் சொல்லை பொன்னேபோல் போற்ற,,,,
    அதான் இவர்கள் தம் பெயரில் போற்றுகிறார்கள்.

    ReplyDelete