Sunday 9 November 2014

யாப்புச்சூக்குமம் II – துலங்கும் உருவம்.

இதைத் தொடரும்முன் என் மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிற்கு நன்றி சொல்லிவிடுகிறேன். ஆசிரியர் என்பதற்கான  இலக்கணம் படித்திருக்கிறேன். உண்மையில் தம் மாணவரின் வளர்ச்சிக்கு உதவுவதும், தவறு காணும் போது திருத்திடச் சொல்வதும், அதே நேரம் மாணவர்கள் சோர்ந்து பின்தங்கும் போது கைதூக்கி விடுவதும், உயரச்சென்று அவன் மறந்து போகும் போதுகூட “இவன் என் மாணவன்“ எனக்கூறி பெருமைபட்டுக் கொள்வதும் எல்லா ஆசிரியர்களுக்கும் இயல்பானதுதான்.
நான் அவர் பெருமைப்பட்டுக்  கொள்ளும் அளவிற்கு உயரே சென்று விடவில்லை. நான் நன்றி சொல்லக் காரணம் நான் இந்த வலையுலகிற்கு வர அவர் காரணம் என்பது மட்டுமல்ல. என்னை அறிமுகப்படுத்தி விட்டோம். நம் வேலை முடிந்தது என்று அவர் இருந்துவிடவில்லை. என் ஒவ்வொரு பதிவிற்கும் சரியென்றும் தவறென்றும்  நியாயமான விமர்சனங்களை முன் வைத்தே இருக்கிறார். முந்தைய யாப்புச்சூக்குமம் என்னும் பதிவை அதிகப்பதிவர்களால்  பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்ற அவர் தளத்தில் அறிமுகப்படுத்தியதோடல்லாமல் என்தளத்தில் வந்து காணுமாறு சொல்லிவைத்தார். என் இலக்கணப் பதிவுகளுக்கு இத்தனை வாசகரை நான் கண்டதில்லை. இதற்கு வரும் பின்னூட்டங்களைக் கண்டபின்னர் 
( “வெளியிட வேண்டாம்“ என்றிடப்பட்ட பின்னூட்டங்கள் உட்பட) அவர் பெயரைக் காப்பாற்றுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு வருகிறது. 
“என்னை ஏதேனும் எழுதச் செய்தமைக்கு உள்ளத்தின் அடியாழத்திலிருந்து நன்றி அய்யா.“ என்பதன்றிநான் செய்யும் கைமாறு வேறு யாதுளது?“
என்னை அறிமுகப்படுத்திய அனைவருக்கும் நன்றி கூறியதுதான் எனது முதற்பதிவே என்றாலும் http://oomaikkanavugal.blogspot.com/2014/05/blog-post.html

எவரையும் என்றுமே நான் மறந்ததில்லை.



இனி கதை….,

மாயனூரில் இறங்கியதும் வெண்பா வகுப்புகளைப் பற்றி மறந்துவிட்டேன். வெண்பா சொல்லிக் கொடுக்கிறேன் பேர்வழி என்று நேரத்தைக் கடத்தியதால் அந்நேரத்திற்குள் முடித்திருக்கலாம் என நான் நினைத்திருந்த கணித ஒப்படைப்புகள் முழுமையடைந்திருக்கவில்லை. கணித வகுப்பு முதற்பிரிவேளையாய் இருந்தது. எனவே முடிக்காத என்னை வகுப்பிற்கு வெளியே நிற்குமாறு பணித்தார் மதிப்பிற்குரிய என் கணித ஆசான். அவரை என் கணித ஆசான் என்பதை விட “எண் கணித ஆசான்“ என்று சொல்வதுதான் தகும். பன்னிரண்டாம் வகுப்பில் ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்று அங்கு சேர்ந்திருந்த எங்களை வாய்ப்பாடுகளைக் கேட்டு அதிர்ச்சியூட்டியவர் அவர். அதிர்ச்சி என்றால் பேரதிர்ச்சி. 16 x 14 என்ன என்றால் அடுத்த நொடி விடையைச் சொல்லியிருக்க வேண்டும். யோசிக்க ஒரு நொடிக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் 2 முதல் 16 வரையுள்ள வாய்ப்பாட்டை 16 முடிய இருபது முப்பது என அவர் வாயில் எவ்வளவு வருகிறதோ அவ்வளவு முறை அடுத்த நாள் எழுதிவரச் சொல்லி இன்னொரு மாணவனிடம் வாய்ப்பாட்டைக் கேட்கப் போய்விடுவார் . 

என் மேல்மட்டுமல்ல என் வளர்ச்சியில் பேரன்பு பூண்டவர். வேறுயாராவது என்றால் அவரது தண்டனை முப்பது முறை எழுதச்சொல்வதைத் தாண்டாது . நான் சொல்லாமல் போனால் 50 முதல் 100 வரை எழுத வேண்டியிருக்கும். வசதி வாய்ப்புள்ளவர்கள் அதை எழுதிக் கொடுப்பதற்கென்றே ஆட்களை வைத்திருந்தார்கள். எனக்கோ அந்த அளவிற்கு வசதி இல்லை. எங்கள் ஆசிரியப்பயிற்சியின் முதலாமாண்டு முழுவதும் எங்களின் கணிதக்கற்பித்தல் கல்வி வாய்ப்பாட்டைத் தாண்டவில்லை.

மேக்குடி நரசிம்மன் அய்யாவை நினைத்து மிக வருத்தமாக இருந்தது. உண்மையில் இது போன்று இருப்பவர்களால் தமிழின் மரபு ஏதோ ஒரு மூலையில் உயிரூட்டப்பட்டு வருகிறது. கல்லூரிக்கல்வி, அதிலும் தமிழ்க்கல்வி பயின்றோர் கூட எழுதத்தடுமாறும் வெண்பாவில் ஓரிரு பிழை இருந்தால்தான் என்ன.? குடியா மூழ்கிப் போய்விடப் போகிறது? இது என் திமிர். எல்லாம் தெரியும் எனும்அலட்சியம், பெரியாரை மதியாமை…என்றெல்லாம் என் மனம் குறுகுறுத்துக் கிடந்தது.

பிரிவேளை முடிவதற்குள் ஒப்படைவை முடித்துக்காட்டியிருக்க வேண்டும் என்கிற எண் ஆசானின் கட்டளையை நிறைவேற்றப் பிடிக்கவில்லை. நிறைவேற்றாவிட்டால் அடுத்த வகுப்பில் நுழைய முடியாது. பரவாயில்லை.
வெளியே மரநிழலில் நின்றிருந்த நான் தொடர்வண்டியில் அங்கிங்குமாகக் கிறுக்கப்பட்டிருந்த  வெண்பாவை விளக்க எழுதப்பட்ட கிறுக்கல்களாய்க் காணப்பட்ட தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தி வேறு தாளில் எழுத ஆரம்பித்தேன். எண் கணித ஆசிரியர் ஓரக்கண்ணால் என்னை அடிக்கடி பார்த்தவாறே ஒப்படைப்பை மிகக் கவனத்தோடு செய்ய ஆரம்பித்த கீழ்ப்படிதலுள்ள மாணவனாக என்னை மாற்றிவிட்ட திருப்தியில் வகுப்பிலுள்ள மற்றவர்களிடம்  வழக்கம் போல் வாய்ப்பாட்டைக் கேட்டுக்கொண்டு இருந்தார்.
நானவெண்பா எனும் யாப்பில் தொடரை அமைக்க வேண்டிய விதிமுறைகள் எனும் தலைப்பில் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுக் கொண்டேன்.
( சென்ற பதிவைப் படித்தோர்க்கு இது ஒரு நினைவூட்டல்)

சொற்களைக் கூறிடுதல்

1. விதி-1.  சொற்களில் மெய்யெழுத்து வந்தால் எத்தனை மெய்யெழுத்துகள் வந்தாலும் அதனைச் சேர்த்து அங்கே ஒரு சிறு கோடிட்டு ஒரு கூறாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். (எ-கா) மகிழ்ச்சி   என்பதை மகிழ்ச் – சி என்று பிரித்தல்.

2. விதி-2. சொல்லைப் பிரிக்கும் போது குறிலைத் தனியாகப் பிரிக்கவே கூடாது. எப்போதும் அதன் அருகில் ஒரு எழுத்து இருக்குமாறு சேர்த்தே பிரிக்க வேண்டும். குறிலுக்குப் பக்கத்தில் வரும் எழுத்து குறிலாக இருக்கலாம். நெடிலாக இருக்கலாம். மெய்யெழுத்தாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு எழுத்து குறிலுக்கு அருகில் இருக்குமாறே பிரிக்கவேண்டும். அருகில் எந்த எழுத்தும் இல்லாமல் குறில் தனியாகச் சொல்லின்  கடைசியில் வருமானால் அப்பொழுது மட்டுமே அதனைத் தனியாக விடலாம். இது இரண்டாவது விதி.
 ( எ.கா- குருவி என்ற சொல்லில் மூன்றுமே குறில்தான். முதலில் உள்ள கு எனும் குறிலைத் தனியே விட முடியாது. எனவே அது அருகில் உள்ள ரு என்ற எழுத்தையும் சேர்த்து குரு – வி என்று பிரியும். வி என்ற எழுத்தையும் சேர்த்துக் குருவி என்று ஒரே பிரிவாக கொள்ளக்  கூடாதா? எந்த ஒரு கூறிலும் மூன்று எழுத்துகள் வருமாறு பிரிக்கக் கூடாது.
( அளபெடை என்னை மன்னிக்கட்டும்) 
இப்பொழுது முதலில் வந்த குறில் அருகில் வந்த இன்னொரு எழுத்தைச் சேர்த்துக் கொண்டது. ஆனால் கடைசியில் உள்ள வி என்ற குறிலுக்குத் துணையாக அந்தச் சொல்லில் இன்னொரு எழுத்து இல்லை. எனவே அதைத் தனியாக விட்டுவிட வேண்டியதுதான்.

3.   விதி எண்-3.  நெடில் தனியாக வருமானால் அங்கே ஒரு சிறிய கோடினை இட்டுப் பிரித்துக் கொள்ள வேண்டும்.  ( எ.கா- காற்றாடி. இதைக் காற்- றாடி எனப்பிரிப்பது முதல் விதி. காற்- றா- டி என அடுத்து வரும் றா என்னும்நெடிலைத் தனியே பிரிப்பது மூன்றாவது விதி.

மாடிகாலி இதில் வரும் குறில் டி மற்றும் லி என்ற இரு எழுத்துகள். கடைசியில் உள்ள லி என்னும் குறிலை அடுத்துச் சேர எழுத்துகள் இல்லை. அடுத்து நடுவில் வரும் குறில் தனியே வராது. எனவே  இதனை மா,டிகா-லி என்று அருகில் உள்ள நெடிலுடன் பிரிக்கவேண்டும் ( விதி 2 )
அடுத்து  மா என்கிற தனியாக உள்ள நெடிலை ஒரு கோடு போட்டுப் பிரிக்க வேண்டும்.( விதி 3 ) இப்போது  மா-டிகா-லி. (1 2 1)

4.   இப்படிப் பிரிக்கும் போது வெண்பாவின் கடைசிச் சொல் தவிர ஏனைய சொற்கள் எல்லாம் குறைந்த பட்சம் இரண்டாகவோ [(1 1), (1 2), (2 1), (2 2)  ] அல்லது மூன்றாகவோ [ வாய்ப்புகள்- (1 1 1), (1 2 1), (2 1 1), (2 2 1) ] பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வெண்பாவில் வரும் எந்தச் சொல்லும் இரண்டாகப் பிரிக்க முடியாத ஒரு சொல்லாகவோ (ஓரசை) மூன்றிற்கு அதிகமாகப் பிரிக்கப்பட்டோ இருக்கக்கூடாது. வெண்பாவின் கடைசிச் சொல்லில் மட்டும் பிரிக்க முடியாத ஓரசையில் உள்ள சொல் வரலாம். ( எ.கா. கண், தலை.. போன்ற சொற்கள். இச்சொற்களை நாம் கண்ட இதுவரை பிரிப்பதற்குக் கொண்ட விதிகளின் படிப் பிரிக்க முடியாது)

எண்ணிக்கை.

சொற்களை அடுத்த சொற்களோடு இணைப்பதில் வெண்பா சிலவிதி முறைகளைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது.

5.   இப்பொழுது கூறிடப்பட்ட சொல்லின் ஒவ்வொரு துண்டிலும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும். இப்படிக் கணக்கிடும் போது மெய்யெழுத்தின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுக்கக் கூடாது. ஒவ்வொரு கூறும் குறைந்த பட்சம் ஒரு எழுத்தினையும் அதிகபட்சம் இரண்டு எழுத்தினையும் கொண்டதாக இருக்கும். ஒரு எழுத்து வந்தால் ஒன்று எனவும் இரண்டு எழுத்து வந்தால் இரண்டு எனவும் வைத்துக்கொள்ள வேண்டும்.( 1 2 )

6.   இரண்டு கூறாக்கப்பட்ட சொற்கள் ஓரெழுத்தில் முடிந்திருந்தால் அடுத்து வரக்கூடிய சொற்கள் இரண்டு எழுத்திலும், இரண்டு கூறாக்கப்பட்ட சொற்களின் இறுதி இரண்டெழுத்தில் முடிந்திருந்தால்  அடுத்துவரக்கூடிய சொற்கள் ஓர் எழுத்திலும் தொடங்கப்பட வேண்டும்.  

  மூன்று கூறாக வரும் சொற்களின் இறுதியில் ஓரெழுத்தே (1 1 1),      (1 2 1), (2 1 1), (2 2 1 வர வேண்டும். மூன்று கூறாக்கப்பட்ட சொற்களின் அடுத்து வரும் சொல்லின் முதற்கூறும் ஓர் எழுத்து கொண்டதாகவே அமைய வேண்டும். வெண்பாவின் முதல் சொல் தொடங்கிக் கடைசிச் சொல்வரை இந்த முறையிலான இணைப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதனை

      இரண்டெனில் மாறும்
      மூன்றெனில் ஒன்றே ஒன்றும்“ 

எனச் சுருக்கமாக நினைவு வைத்துக்கொள்ளலாம்.

அடி வரையறை.

வெண்பா குறைந்தபட்சம் இரண்டு அடிகள் கொண்டதாக இருக்கவேண்டும். அதற்கு அதிகமாக எவ்வளவு அடிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதனுடைய ஒவ்வொரு அடியிலும் நான்கு சொற்கள் இருக்க வேண்டும். கடைசி அடி மட்டும் மூன்று சொற்களால் ஆனதாக இருக்க வேண்டும். அதிலும் கடைசிச் சொல் பிரிக்க முடியாததாகவோ( எ-கா. தாள், வேல் தலை செவி, ) அல்லது அதிக பட்சம் இரண்டாகப் பிரிக்கப்படக் கூடியதாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.( எ.கா. அரிது, ஆண்டு) அப்படி இரண்டாகப் பிரிக்கப் படும் போது அதன் இரண்டாம் பகுதி கு, சு, டு, து, பு, று- என்று முடிந்தால் நல்லது. ( உதாரணமாக சிறப்பு என்றசொல் வெண்பாவின் இறுதியில் வந்திருந்தால் அதை சிறப் – பு என இரு கூறாகப் பிரிக்கும் போது அந்த இரண்டாவது கூறின் இறுதி பு என்று முடிவது . )

சான்றாக ஒரு வெண்பா,

““உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி
எரிவது  அவியாதுஎன் செய்வேன் – வரியரவ
நஞ்சிலே தோய்த்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு““

இதைக் கொஞ்சம் பிரித்து ஒன்று இரண்டு எனச் சேர்கிறதா என்று பாருங்கள்.

அம்பிகாபதி எழுதிய வெண்பா என்று சொல்கிறார்கள்.

பிரித்துவிட்டீர்களா? தவறிருக்கிறதா? இருக்கக் கூடாதே? அவன் பெரிய கவிஞன் நிச்சயம் அவன் பாட்டில் தவறிருக்காது. தட்டச்சு செய்த நான்தான் தவறாக ஏதும் செய்திருப்பேன்.  சரியா தவறா என்பதை இறுதியில் பார்ப்போம்.

அதற்குமுன் இப்படிப்பிரிக்கும் போது சில போலிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நான் பெரிய மனிதன், பெரிய மனிதன் என்று சொல்வார்கள். ஆனால் பெரிய மனிதர்களா என்றால் இல்லை. அதற்கான தகுதி அவர்களிடத்தில் எப்போதும் இருப்பதில்லை.( பல நேரங்களில் இருப்பது போலக் காட்டிக் கொள்வார்கள்.)



நெடில் என்று சொல்லப்படும் ஐ எனும் எழுத்தும் ஔ எனும் எழுத்தும் அதுமாதிரிதான். இதைக்குறிலாக்க முடியுமா? முடியும்!. “ஐயா“ என்பதை “அய்யா“ என்றும் “ஔவை“ என்பதை “அவ்வை“ என்றும் எழுதிப்பாருங்கள். “ஐ“ நெடில் “ஔ“ நெடில். ஆனால் “அய்“ “அவ்“ என்று எழுதப்படும் போது இரண்டு மாத்திரை உள்ள எழுத்து ஒன்றரை மாத்திரை ஆகிவிடுகிறது. அதுவும் சொல்லின் முதலில் வரும் போதுதான். அதனால் இப்படி ஏமாற்றக் கூடிய எழுத்துகளைப் போலிஎழுத்துகள் என்கிறார்கள் இலக்கணக்காரர்கள். சந்தியக்கரம் என்பது இதற்கு அவர்கள் சூட்டும் இலக்கணப்பெயர்.

சரி. இனி நம் கதைக்கு வருவோம். இந்த இரண்டு எழுத்துகளும் உயிராகவோ உயிர்மெய்யாகவோ ( கை, சை, வை…… கௌ, வௌ….) ஒருசொல்லுக்கு முதலில் வரும்போது பிரச்சனையில்லை. அதனை நெடிலாகக்கருதலாம். இதில் ஔ பிரச்சனையில்லாத எழுத்து. எனவே அதனை விட்டுவிடலாம். ஏனெனில் அது சொல்லின் இடையில் வராது. 

இந்த ஐ சொல்லின் இடையில் வரும்போது அதனைக்குறில் என்றே கருத வேண்டும். எனவே குறிலுக்குள்ள விதிமுறைகள் இதற்குப் பொருந்தும். தனியாக வரக்கூடாது. அருகிலுள்ள குறிலுடனோ நெடிலுடனோ சேர்ந்தே வரவேண்டும்.

உதாரணம் பார்த்துவிடுவோமா?

ஐயையினிக் கண்டால் அறிவோம் இடைவந்தால்
மெய்யையுணர் நெஞ்சே குறில்

இது எத்தனையாவது குறள் என்று தேடாதீர்கள்! சும்மா நம்ம சரக்குதான். இங்கு முதல் சொல்லான “யையினிக்“ என்பதில் முதலில் வரும் “ஐ“ எனும் எழுத்தை நெடிலாகவும் இடையில் வரும் “யை“ எனும் எழுத்தைக் குறிலாகவும் கொள்ள வேண்டும். குழப்புகிறேனோ? 

ஐ சொல்லுக்கு முதலில் வந்தால் நெடில். சொல்லுக்கு இடையில் வந்தால்  குறில் . போதுமா?

“ஐயையினி“ என்பதில் யை என்பதை நெடில் எனக்கருதிப் பிரித்தால்  ஐ- யை- யினி எனப்பிரிந்து 1 1 2 என ஆகும். மூன்றாகப் பிரிக்கப்படும் (மூவசைச்) சொற்களின் இறுதி இரண்டில் முடியக்கூடாது என்னும் விதிக்கு மாறாய் அமையும். ஆகவே நன்றாக நினைவில் கொள்ள வேண்டியது.

 ஐ எனும் எழுத்து சொற்களுக்கு இடையில் வரும் போது அதைக் குறிலாகக் கொள்ள வேண்டும் என்பதே.

இப்போது இடையில் வரும் யை எனும் எழுத்தைக் குறிலாகக் கொண்டு ஐ – யையி -  னி எனப்பிரித்தால் 1 2 1 என சரியாகிவிடுகிறது. இதைப்  போலவே அடுத்த வரியில் உள்ள மெய்யையுணர் என்பதையும் பிரித்துப் பார்த்துவிடுங்கள்.

அடுத்து முக்கியமாக நான் பலமுறை தடுக்கி விழுந்து அடிபட்டு உதைபட்டு ஆயிரம் சமாதானம் சொல்லியும் எடுபடாமல் போனது குற்றியலுகரம் என்கிற பிசாசிடம்தான். நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய பிசாசு இது. ஏனென்றால் இது எழுத்தை விழுங்கிப் பசியாறும் பிசாசு.
இங்கே பாருங்களேன்.

எனக்கு இருப்பது எல்லாம்தா இல்லை
கணக்கை முடித்துவிடு வேன்“

இதை நீங்கள் பிரித்துப்பாருங்கள்

(2 1) – (2 2) – (1 1 1) – (1 1)-
(2 1) – (2 2 1) – (1)

“இரண்டில் மாறி மூன்றில் ஒன்றே ஒன்றி இருக்கிறது.“ வெண்பா இலக்கணம் சரிதான் என்று நாம் நினைத்து நம் முதுகில் தட்டிக் கொண்டிருப்போம். ஆனால்  குற்றியலுகரப்பிசாசு சில எழுத்துகளை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு நாம் இலக்கணப்படி எழுதியதாக நினைத்த வெண்பாவைச் சின்னாபின்னமாக்கி இருப்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். மரபறிந்தவர்கள் எளிதாக இது வெண்பா இல்லை என்று விடுவார்கள்.

அது எப்படி என்று பார்த்துவிடுவோம்!

தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி என்று ஒன்று இருக்கிறது. ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்வது! அது சொல்கிறது.

ஒரு சொல்லின் இறுதியில் உ என்னும் ஒலி வந்து அதற்கு அடுத்த சொல் ஏதேனும் உயிர் எழுத்தில் ஆரம்பித்தால் முதல்சொல்லின் இறுதியில் உள்ள என்னும் எழுத்து காணாமல் போய்விடுமாம். 
என்ன கண்ணைக் கட்டுகிறதா?
““ நினைச்சேன் !  எனக்கெல்லாம் இதெங்க வரப்போகுது?““என்கிறீர்களா? 

அப்ப உங்களுக்கு வந்து விட்டது!!

புரியலையா…..?

எனக்கு எல்லாம் என்பதை நாம் பேச்சு வழக்கில் “எனக்கெல்லாம்“ என்று சொல்வோமா இல்லையா? இதுதாங்க குற்றியலுகரப் புணர்ச்சி. அப்படித்தான் செய்யுளிலும் வரும் என்கிறது இலக்கணம். 

இப்படி, எனக்கு எல்லாம் என்பதைச் சேர்த்து எனக்கெல்லாம் என்று சொல்லும் போது எனக்கு + எல்லாம் என்பதில் கு என்பதில் வரும்   ( க்+உ)    உ என்ன ஆச்சுன்னு கவனிச்சிங்களா? 

இதே போல் எனக்கு என்பதுடன் எதுக்கு என்பதைச் சேர்ப்பதாக வைத்துக் கொள்வோம்.

எனக்கு எதுக்கு

(1 1)  (2 1)

வெண்பா இலக்கணப்படி இந்த இரண்டு சொற்களையும் இணைக்கலாம் இரண்டில் காந்தம் போல ( இரண்டில் இரண்டு இறுதியில் வர அடுத்து ஒன்றில் தொடங்கும் சொல் பெற்று ) மாறி வந்துவிட்டது சரிதானே?

ஆனால் இது புணர்ச்சியில் என்ன ஆகும் பாருங்கள்!

எனக் கெதுக்கு
(1)    (2 1)

இரண்டாவது சொல் மாறவில்லை.

ஆனால் முதல்சொல்லில் ஒரு பகுதியையே குற்றியலுகரப்பிசாசு கொன்று விட்டதைக் கவனித்தீ்ர்களா? 

இப்பொழுது நாம் முன்னர் பார்த்த, 
எனக் ( க்+உ) + எல்லாம்  = எனக் க் எல்லாம் = எனக்(க்+எ) ல்லாம் = எனக்கெல்லாம். 
என்று புணர்ச்சியில் இப்படி வரும் குற்றியலுகரம் நாம் இருப்பதாக நினைக்கும் எழுத்தை  நம்மை அறியாமல் கொன்று போடும்.


இதைப் பாருங்கள்,

“எனக்கு இருப்பது எல்லாம்தா இல்லை
கணக்கை முடித்துவிடு வேன்“

என்பதிலும் ( எனக் உ இருப்பது ) உள்ள உ எனும் எழுத்தைக் கொன்று தின்று குற்றியலுகரப் பிசாசு

“எனக் கிருப்ப தெல்லாம்தா இல்லை“

என்று மாற்றி நாம் சரியாகச் செதுக்கி வைத்திருக்கும் வெண்பாவைச் சீர்குலைத்துவிடும்.

எனவே குற்றியலுகரப் பிசாசிடம் வெகுகவனமாய் இருங்கள் கவிஞர்களே!


நாம் நினைவில் கொள்ள வேண்டியது, ஒரு தொடரைப் புணர்ச்சி விதிகளுக்கு உட்படுத்திச் சேர்த்த பின்னால் தான் நாம் அந்த பாடலுக்குரிய இலக்கணத்தோடு அது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.இந்த வரியை ,

“எனக்கு இருப்பது எல்லாம்தா இல்லை,

(2 1) – (2 2) – (1 1 1) – (1 1)-

நாம சரியாத்தானே பிரிச்சிருந்தோம்.

ஆனா அப்ப இந்த மாதிரி புணர்ச்சிவிதியோட சேர்த்து எழுதின பின்புதான் இதப் பிரிக்கனுமின்னு நமக்குத் தெரியாது.

இப்ப இதே வரிகளைச்சேர்த்து புணர்ச்சி விதிக்குட்பட்டு எழுதிப் பிரிச்சுப் பார்ப்போம்.
எனக் கிருப்ப தெல்லாம்தா இல்லை
( 1 )   (2 1)- (1 1 1)       -(1 1)

இப்ப என்னாச்சு பார்த்திங்களா? நாம பிரிச்சு எழுதின அதே வரி சேர்த்து எழுதுகிற போது முதல் சொல்லே தப்பாயிடுச்சு.

எடுத்த உடனேயே  ஒரே அசையில ஒரு சொல். இது வெண்பாவில் கடைசில வேண்டுமானால்  வரலாம். வேறெங்கயும் வரக்கூடாதில்ல?.

அடுத்து “கிருப்ப தெல்லாம்.“

இரண்டில் வேறாகனும். ஆனா இங்க “கிருப்ப தெல்லாம்“ என்பதில்  
(2 1) (1 1)

இரண்டில் வேறாகாம ஒன்று பக்கத்தில ஒன்று வந்து நம்ம காந்த விதிக்கு மாறா ஆயிட்டதில்லையா?

அப்ப நாம சரின்னு நினைச்ச அதே இலக்கணம் இப்ப தப்பாயிடுச்சு பார்த்திங்களா? எல்லாம் குற்றியலுகரப் பிசாசு செய்த வேலை!

நீங்க கவனமா இருக்க வேண்டிய இடம், நெடிலோடு இரண்டெழுத்தில வருகிற சொல்லோ ( எ.கா- ஆடு ) இரண்டிற்குமேல எழுத்துகள் சேரும் ஒரு சொல்லோ, கு, சு, டு, து, பு, று, இந்த ஆறு என்கிற ஒலியில் முடியும் எழுத்தோட எந்தச் சொல்லோட கடைசியிலாவது  வந்து,
( எ.கா- நாக்கு, மூச்சு, பாட்டு, வாத்து, தீர்ப்பு, காற்று ) அதற்கு அடுத்ததுபோல் உயிர் எழுத்து வந்திருந்தால் உங்க மூளையில ஒரு சிவப்பு விளக்கு எரியனும். இதைச் சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கேன். இன்னம் தெளிவாகப் புரியனுமின்னா இதப்பத்தி ஒரு தனிப்பதிவே இருக்கு அங்கப் போய்ப் பார்த்துக்கலாம்.

இப்ப அம்பிகாபதி பாட்டயும் அது நம்ம கிட்ட சிக்கிப் பட்ட பாட்டையும் பாருங்க,
அவர் சரியாத்தான் எழுதியிருந்தார்,
அதைப் புரிவதற்காகப்  பிரிச்சு எழுதினதுதான் சிக்கலாயிடுச்சு.

இப்படி,

““உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி
எரிவ  தவியாதென் செய்வேன் – வரியரவ
நஞ்சிலே தோய்த்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு““

இதைப் புணர்ச்சி விதிப்படிச் சேர்த்து எழுதிப்பாருங்க. இப்ப 1, 2 சொல்லிப் பாருங்க! சரியா வரும்! ஆக இந்தப் பாடலைப் பிரித்து முன்னர்க் காட்டியது போல எழுதலாம் தவறில்லை.
புணர்ச்சி விதிப்படிச் சேர்த்துப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் தவறுவரக்கூடாது. இதை வேண்டுமானால் இப்படிக் கொடுக்கலாம்.


“உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி
எரிவ(து)  அவியா(து)என் செய்வேன்? – வரியரவ
நஞ்சிலே தோய்த்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு““

ஏன் பாடலில் இடையிடையே அடைப்புக்குறி இடுகிறார்கள் என்று புரிகிறதா? புரிவதற்காகத்தான் இப்படிப் பிரித்திருக்கிறோம். இதை சொற்களைப் பிரிக்கும்போது கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. புணர்ச்சியில் இவ்வெழுத்துகள் மறைந்துவிடும் என்பதற்காகத்தான் அடைப்புக்குறிகளுக்குள் அந்த எழுத்தைக் கொடுக்கிறார்கள்!



அடுத்து ஆய்த எழுத்து. நீங்க இதப் பொதுவாப் பயன்படுத்தப் போறதில்ல. எப்பயாவது வெண்பாவில் பயன்படுத்தினிங்கன்னா இதை எப்பவும் மெய்யெழுத்து மாதிரியே நினைச்சுக்கங்க. கணக்கில எடுத்துக்க வேண்டியதில்லை.

போட்டுக் குழப்பிக்கனுமின்னு நினைக்கிறவங்க இதப்பாருங்க.

அளபெடை, குற்றியலிகரம் எல்லாம் நீங்க வெண்பா எழுதுறதுக்கு அவசியம் இல்லை. தெரிஞ்சுக்கனுமின்னா தெரிஞ்சிக்கலாம் தப்பில்லை.

  வெண்பாவைப் பொறுத்தவரைத் தொடக்கம் முதல் முடிவுவரை ஒவ்வொரு         சொல்லும் அடுத்துவருகிற சொல்லைத் தீர்மானிக்கும் .
இரண்டில் மாறியும் மூன்றில் ஒன்றே ஒன்றியும்“ இதை மறந்துவிடாதீர்கள்.

பின்னூட்டத்தில் முயன்றதைப் பதிந்தவர்க்கும், பதியாமல் முயன்றவர்க்கும் என் வாழ்த்துகள். வெண்பா எழுதத் தொடங்கிற எல்லாருக்குமே உங்களுக்கு வந்த அதே சலிப்பு சிரமம் எல்லாம் தொடக்கத்தில் வந்துதான் இருக்கும். அது திருவள்ளுவரோ புகழேந்தியோ காளமேகமோ  யாராயிருந்தாலும் இந்தமாதிரி எழுதி எழுதித் திருத்தித் திருத்தி இந்தச் சூக்குமம் பிடிபடுகிற வரை கொஞ்சம் கஷ்டம்தான் பட்டிருப்பாங்க!

ஆர்வமும் கொஞ்சம் முயற்சியும் இருந்தா அலட்சியமா வெண்பா இலக்கணத்தில சர்வ சாதாரணமா எழுதிகிட்டே போகலாம். எப்படி என்பவர்கள் இந்தப்பதிவில் தோழர் மதுவின் கருத்திற்கு நானிட்ட பின்னூட்டத்தைப் பாருங்களேன்.

அவ்வளவுதாங்க இலக்கணம். இப்ப வீட்டக்கட்டியாச்சு சுவர் கூரை கதவு   எல்லாம் வைச்சாச்சு. இது நம்ம வீடுதான். அப்ப அதைக் கொஞ்சம் அழகு படுத்த வேண்டாமா?

இப்ப இதோ அதுக்கான இரகசியம்.

எதுகை கேள்விப்பட்டிருப்பிங்களே?
முதல் எழுத்து அளவு ஒத்து இரண்டாவது எழுத்து ஒன்றாய் வருவது.

பேச்சு வழக்கில் நாம் இதைச் சாதாரணமாப் பயன்படுத்துவோம்.

அவன் கிட்ட வம்பு கிம்பு(?) வைச்சுக்காத!

கத்திய கித்திய(?) எடுத்துடுவான்.

ஏட்டிக்குப் போட்டியா பேசாத..

இதுதாங்க எதுகை.

ஏட்டிக்குப் போட்டி,

கத்திய கித்திய

வம்பு கிம்பு

இந்த வார்த்தையில பாருங்க, இரண்டாவது எழுத்து ஒவ்வொரு சோடியிலும் ஒண்ணா வருதா?

அது மட்டுமில்ல அதுக்கு முன்னாடி வருகிற எழுத்து குறிலாக இருந்தா அடுத்து வருகிற எழுத்தும் குறிலாக இருக்கு பாருங்க.
ம்பு – கிம்பு  இரண்டாவது எழுத்து ஒன்றாக வந்திருக்கிறது.

வம்பில்  என்பதும் கிம்பில் கி என்பதும் குறில். 

ட்டிக்கு போட்டி இதைப்பாருங்க. 

இரண்டாவது எழுத்து ஒன்றாக இருக்கு.

இரண்டு சொற்களிலும் முதல் எழுத்து நெடில் போ நெடில்.

இதைத்தான் முதல் எழுத்து அளவொத்து என்கிறோம். (பேச்சு வழக்கில் இதுமாதிரி இரண்டாவதா வரக்கூடிய சொற்களில் சிலவற்றை அர்த்தம் இல்லாமல் பயன்படுத்துவோம். ஆனால் பாட்டில் எழுதும்போது பொருள்தரக் கூடிய சொற்களைத்தான் பயன்படுத்தனும்.)

இரண்டாவது எழுத்து ஒன்றாக இருந்தா எதுகைன்னு சொல்லாம அளவொத்துன்னுஎதுக்காகச் சொல்ல வர்றேன்னா
“கட்டி – காட்டி“ இப்ப இந்த இரண்டும் எதுகைச் சொல்லான்னு கேட்டா இல்ல.
ஏன்னா இரண்டுக்கும் பொதுவான இரண்டாவது எழுத்து ஒன்றாக இருந்தாலும் முதல் எழுத்து அளவு ஒத்ததா இல்லை. ட்டி என்பதில் குறில் காட்டி என்பதில் கா நெடில் அப்ப எதுகையில இரண்டாவது எழுத்து ஒன்றாக இருப்பது மட்டுமல்ல பக்கத்தில அதற்கு முன்னாடி வரும் எழுத்து அளவொத்து இருக்கனும் என்பதையும் நினைவில் நிறுத்துங்க.
இப்ப இந்த எதுகை வெண்பாவில் எப்படிப் பயன்படுதுன்னு பார்த்திடுவோம்.
.
இது அழகுபடுத்தும் வேலைதான்.

          “காணாமல் வேணெதும் கத்தலாம் கற்றார்முன்
          கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
          பேச்சுபேச் சென்னும் பெரும் பூனை வந்தக்கால்
          கீச்சுகீச் சென்னும் கிளி“

இந்தப்பாட்டைப் பாருங்களேன். பொதுவாக வெண்பா என்றாலே இந்த வடிவத்தைத்தான் எல்லாரும் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நான்கு அடிகள் இருக்கின்றன. இரண்டாவது அடியில் மூன்றாவது சொல்லுக்குப்பிறகு ஒரு கோடு. அதற்குப்பிறகு ஒரு சொல். இதைத் தனிச்சொல் என்கிறார்கள். மற்றபடி எல்லாம் வெண்பா நாம் பார்த்த இலக்கணப்படிதான் இருக்கிறது.

இதை நேரிசை வெண்பா என்கிறார்கள். இப்பாடலில் நீங்க கவனிக்க வேண்டிய விஷயம், முதல் இரண்டடிகளிலும், தனிச்சொல்லிலும் ஒரே எதுகையும் ( காணாமல் – கோணாமல்- நாணாமல்) அடுத்த இரண்டடிகளில் இன்னொரு எதுகையும் ( பேச்சு – கீச்சு ) வந்திருக்கிறது. பயந்துவிடாதீர்கள் இதை இலக்கணக்காரர்கள்  இப்படிச் சொல்வார்கள்.
“இருவிகற்பத்தாலான நேரிசை வெண்பா.“

 நமக்கு அதெல்லாம் தேவையில்லை.

நீங்கள் செய்ய வேண்டியது இதுபோல முதல் இரண்டு அடி மற்றும் தனிச்சொல்லில்  ஒரு எதுகை இருக்குமாறும், அடுத்த இரண்டு அடிகளில் ஒரே எதுகை வருமாறும் பார்த்துக்கொள்ளுங்கள். முடியுமானால் இந்த ஐந்து இடங்களிலும் ஒரே எதுகை வருமாறும் அமைக்கலாம். அது உங்க சாமர்த்தியம்.

இன்னும் ஒரு பரிந்துரை,

வெண்பாவில் முதல் சொல்லை அமைக்கும் போது கவனமா இருக்கனும். சில சொற்களுக்கு எதுகை தேடுவது ரொம்ப கஷ்டம் , என்னோட ஊமை என்பதையே எழுத்துக் கொள்ளுங்களேன், ஆமை… மாமை…..அப்பறம் எதுகைச் சொற்களைத் தேடுவது கஷ்டமாகப் போய்விடும். அதே போல தமிழ் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் அமிழ், குமிழ் .. வேறு வார்த்தைகள் எதுகைக்குக் கிடைக்காமல் கஷ்டப்படவேண்டி வரும்.
அதனால் முதல் சொல்லை எழுதத் தொடங்கும் போது போதுமான அளவு எதுகை வாய்ப்பு உள்ள சொற்களாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக மோனை,

முதல் எழுத்து ஒன்றாக வருமாறு அமைப்பது.

வெண்பாவில் எல்லா அடிகளிலும் முதல் சொல்லையும் மூன்றாவது சொல்லையும் குறைந்தபட்சம் ஒரே எழுத்தா அமைத்தால் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும்.
அதே வெண்பாவைப் பாருங்களேன்,
          “காணாமல் வேணெதும் த்தலாம் கற்றார்முன்
          கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
          பேச்சுபேச் சென்னும் பெரும் பூனை வந்தக்கால்
          கீச்சுகீச் சென்னும் கிளி“

முதல் அடியின் முதல் சொல்  “காணாமல்“ மூன்றாம் சொல் “கத்தலாம்.“
கா –க  ( இப்படி அந்த எழுத்து என்றல்லாமல் அதன்  வரிசையிலும் மோனையை அமைக்கலாம்)

அடுத்த வரியில் முதல் சொல்  “கோணாமல்“ – மூன்றாவது சொல் “கூடாதே“ – (கோ – கூ)

அடுத்த வரியில் பேச்சு  -- பெரும்    ( பே  -- பெ)

கடைசி வரியில் கீச்சு – கிளி  ( கீ  - கி)

இப்படி அமைத்துக் கொண்டால் இன்னும் ஓசை சிறக்கும். எதுகையிலும் மோனையிலும் இன்னும் சில நுட்பங்கள் இருக்கின்றன.

அதனையும், இப்பொழுதுவரை நாம் வெண்பாவின் உருவத்தை எப்படிக் கட்டமைப்பது என்பதைத்தான் பார்த்திருக்கிறோம் அதில் கவிதையைக் கட்டிவைப்பது எப்படி என்பதையும் இனிவரும்  பதிவுகளில் பார்ப்போம்.

அதுவரை நீங்கள் வெண்பா  சிலவற்றைப் பிரித்துப் பாருங்கள்.
சொல்லப்பட்ட வடிவில் வெண்பாவை எழுதிப் பாருங்கள்.
மறந்து விடாதீர்கள் நாம்  எழுதுவது வெண்பாதான். கவிதையல்ல. கவிதையை அதற்குள் அடக்குவதைப் பிறகு பார்ப்போம். இப்போது உங்கள் தலையான பணி வெண்பா எழுதுவது…

எங்கே ,

“நடக்கட்டும் எல்லாம்!! நயமெல்லாம் பின்பு!
கடப்போமே வெண்பாக் கடல்“

ஐயமோ பிழையோ இருப்பின் சுட்டுங்கள்.
எழுதும் வெண்பாக்களை என்னோடும் பகிருங்கள்.

இந்தப்பதிவிற்கு நான் செலவழித்த மணித்துளிகளைத் திரும்பக் கொண்டு சேர்க்கும் அவை.

நன்றி‘!
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

95 comments:

  1. வெண்பா எழுத வேண்டும் என ஆசையுண்டு. தங்கள் பதிவை திரும்ப நன்கு படித்து உள்வாங்கி எழுதவேண்டும்.

    என்னில் தோன்றுவதையே எழுதிவந்திருக்கிறேன்.

    நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் உங்களுள் தோன்றுவதைத்தான் எழுத வேண்டும்.
      இது வெறும் வடிவம் மட்டுமே!
      முயன்றால் எளிதாகக் கைவரும் வடிவம்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
  2. கவிஞர் முத்து நிலவன் போற்றப்பட வேண்டியவர்
    தங்களின் எழுத்து ஈர்க்கிறது நண்பரே
    தொடருங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அதில் சந்தேகமில்லை கரந்தையாரே!
      என் எழுத்து ஈர்க்கிறதா ..?!!
      நன்றி அய்யா!!

      Delete
  3. மிகவும் விரிவான விளக்கம்! மீண்டும் ஒருமுறை பொறுமையாக படித்துத் தெளிய வேண்டும். படித்துவிட்டு முயன்று பார்க்கிறேன்! அதுவரை பொறுமை காக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      நானும் அதுவரை பொறுமை காக்கிறேன்.
      நன்றி

      Delete

  4. வணக்கம்!

    ஊமை விழிகளார் ஓதிய பாடத்தை
    ஆமை எனவடங்கி ஆழ்ந்தறிந்தேன்! - தீமையிலா
    வண்ணம் வடிவாக வார்த்திடலாம் வெண்பாக்கள்
    எண்ணம் பதிப்பீா் இதை!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தூண்டிலிது மீன்பிடிக்க! தாங்கள் திமிங்கலத்தை
      ஆண்டே அடக்கியவர் ஆதலினால் - வேண்டுவர்‘உம்
      ஆழியென வெண்பா அமுதங் கடைந்திடவே
      ஊழிபோ தாதே உரை!

      ( அமுதம் கடைவதற்கு எனல் ஒன்று
      அமுதங்கு அடைவதற்கு எனல் மற்றொன்று)
      நன்றி அய்யா!


      Delete

    2. வணக்கம்!

      பாட்டுக்குப் பாட்டளிக்கும் பாவலரே! உம்மிதயக்
      கூட்டுக்குள் கொஞ்சுதமிழ் கூத்தாடும்! - நாட்டுக்குள்
      காட்டுக்குள் பூத்தாடும் கண்மலரை, மின்வலையாம்
      ஏட்டுக்குள் தந்தீா் இனித்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    3. வேட்டை நடத்தவரும் வேற்றுமொழி எந்தமிழை
      வாட்டுவதோ என்றெழுந்த வன்மறவ‘! - தீட்டுகின்ற
      பாட்டெல்லாம் கேட்டுப் பழகுதமிழ் தன்னிதயக்
      கூட்டுள்‘உனை வைக்கும் குடி

      Delete

    4. மீண்டும் வணக்கம்!

      கொஞ்சும் தமிழில் கொடுத்திட்ட இவ்வெண்பா
      விஞ்சும் சுவையை விளைத்ததுவே! - மஞ்சத்துள்
      என்னைக் குடிவைத்த ஈற்றடியை என்னென்பேன்?
      உன்னை வணங்கும் உயிர்!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  5. நானெல்லாம் ஆழ்ந்து படிக்க வேண்டிய விடயங்கள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவு சென்ற பதிவை ஆழ்நது படித்தவர்கள் பயன்பெறத்தான் கில்லர்ஜி!
      ஏதேனும் புரியாமை இருந்தால் அறியத்தாருங்கள்!

      Delete
  6. வணக்கம் ஐயா!

    ஊமை விழிகளார் உள்ஞானம் கொண்டவர்!
    ஆமையென ஆற்றல் அடக்கியவர்! - தீமையிலாச்
    சிந்தனைச் சீராளர்! தேர்ந்தே தரும்பாடம்
    புந்தியிலே இட்டேன் பொறித்து!

    தீராத விளையாட்டுப் பிள்ளை பாடலில்
    ஓரிடத்தில் ”கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்” என்று வரும்.
    அதனை இங்கு ”கண்திறந்து வாய்மூடிக் கேட்டிருப்போம்” என
    மாற்றிய நிலை ஆயிற்று ஐயா!
    மிக மிகச் சிறப்பு! விளக்கம் துல்லியமாக இருக்கின்றது!
    நான் அதிகம் கோட்டைவிடுமிடம் நன்கு கண்டு கொண்டேன்..:)

    பகிர்விற்கு மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    தொடருங்கள்!...

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. வாரும் இளமதியே வாடா வலைப்பூவின்
      நீருற்றும் பின்னூட்டம் நீர்தரவே - வேர்பதிவர்
      தாகம் அடங்கியதில் தோய்ந்து பலபதிவாய்
      ஆகநீர் செய்வ தருள்!

      நீங்கள் கற்றுக்கொள்ள இங்கு எதுவுமே புதிதல்ல கவிஞரே..
      இருப்பினும் என்னை வாழ்த்த விரும்பி வருகிறீர்கள் இல்லையா.
      உங்களுக்கெல்லாம் எப்படியென் நன்றிக்கடனைத் தீர்க்கப் போகிறேன் எனத் தெரியவில்லை!
      நன்றியம்மா!

      Delete
    2. வணக்கம் ஐயா!..

      கற்றது கையளவு கல்லாத தோ’மீதம்
      உற்றேன் படித்திட உம்மிடமும்! - நற்றமிழ்
      காலமெலாம் என்னோடு கைவர வேண்டினேன்
      சாலமில்லை சத்தியமே தான்!

      ஒப்பற்ற சேவை செய்கின்றீர்கள் ஐயா!..
      இலக்கணத்தில் கற்றிட்டது நான் ஒரு புள்ளிகூட இல்லை...!
      மீண்டும் மீண்டும் எங்கு காணினும் அளப்பரிய
      அந்த நுட்பங்களை உள்வாங்கும் பேராவலுள்ளேன்.
      இங்கும் கற்கிறேன்..!

      நன்றிக்கடன் என்று அன்பைக் கணக்கிடலாமோ!..:)

      வாழ்த்துக்கள் ஐயா!

      Delete
  7. நம் நட்பு வட்டத்தின் வளர்ச்சியில் நிலவன் அண்ணாவின் பங்கு அசாத்தியமானது. உங்கள மாதிரி அப்பாடக்கர்கள் எனக்கு அறிமுகமாகவும் அவர் தான் காரணம். அண்ணனுக்கு ஒரு ஸ்பெஷல் thanks!!

    பதிவின் உள்ளடக்கம் பற்றி சொல்லும்முன் மற்றொன்று குறிப்பிட்டே ஆகவேண்டும். வந்த புதிதில் கறார் ஆசிரியராக இருந்த உங்கள் எழுத்துக்களில் இப்போ செம சேன்ஜ் ஓவர். அழகு காமெடிகள் சேர்த்து அசத்துகிறீர்கள்:))

    அட! நான் கூட அந்த பிழையை கண்டுபிடித்தேனே!! சூப்பர் அண்ணா! அவ்ளோ நல்லா சொல்லிக்கொடுத்துருக்கீங்க. மாலைவந்து என் ஒப்படைப்பை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 1 ஜனவரி 2014 அய்யா எங்கள் வீட்டிற்கு வந்தார். தமிழாய்வில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கின்ற ஒரு பெருமகனார் மற்றும் தமிழால் இணைந்த சிலருடன்..!
      அதற்குமுன் நான் அவரை நேரில் சந்தித்ததில்லை.
      அவர் வந்து சந்திக்கும் அளவிற்கு நான் பெரியவனுமில்லை.
      எங்கள் ஊர் கடந்து செல்லும் போது தேநீர் அருந்தும் இடைவெளியில் நிகழ்ந்தது அந்தச் சந்திப்பு!
      நானுற்ற பேறது..! வேறென்ன சொல்ல!
      பேச்சினிடையே முத்துநிலவன் அய்யா கேட்டார்,
      “வலைப்பூ எதுவும் வைத்திருக்கிறீர்களா..?,
      என் வீட்டின் பால்கனியில் செடிகள் உண்டு. நல்ல பூக்களும்!
      இது பூக்கும் செடியின் பெயர் என்ன என்று கேட்டு வாங்கி வைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
      தயவு செய்து இது காமடி என்று நினைத்துவிடாதீர்கள்!!
      அவ்வளவுதான் எனக்கிருந்த உலக அறிவு!!
      அய்யாவிற்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன்.
      “ அப்படின்னாங்கைய்யா“ என்று நான் கேட்டதும்.
      “இல்லை..இணையத்து இயங்குகிறீர்களா என்று கேட்டு அவர் இது பற்றி விளக்கியதும் எனக்கு நினைவிருக்கிறது.
      அப்புறம் பயிற்சி! அதற்கும் நினைவு கூர்ந்து என்னை அழைத்தார்.
      வலைப்பூவின் தொடக்க பொத்தானை அழுத்தி இதை ஆரம்பித்தவர் உங்கள் தோழர் மதுதான் சகோதரி!
      நான் வழக்கம் போலவே பெயர்பதிவாகவில்லை என்று நினைத்து சரி இன்னொரு பெயர் முயல்வோம் என்று எண்ணிப் பதிந்ததுதான் மனம்கொண்ட புரம்!
      காமடிகள் ...
      உங்களுக்குத் தெரியாத பல ரகசியங்கள் இருக்கின்றன!
      நீங்கள் எந்தப் பிழையைக் கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லவே இல்லையே!
      சொன்னால் திருத்த வசதியாயிருக்கும்தானே!
      புதுகையில் வெண்பாப் புயலினி வீசட்டும்!
      சரிதானே( இங்கப் பிரச்சனை இப்படி இருந்தா அடுதத் அடிய எழுத முடியாது. ஏன்னா வீசட்டும் ( 1 1 1) இதற்கு அடுத்து வரவேண்யது 2 இல்தான் தொடங்க வேண்டும்.
      ஏனென்றால் புதுகை என்ற முதல்சொல் 2 இல் தொடங்குவதால் அதற்கு எதுகைக்காக அடுத்த வரியும் 2 இல்தான் தொடங்க வேண்டும்.
      இப்ப ஒரு கேள்வி உங்களிடம்..!
      “புதுகையில் வெண்பாப் புயலினி வீசட்டும்“
      கடைசி சொல்லை வேறொன்றாக மாற்றாமலேயே அடுத்த வரியை சரியான எதுகையோடு அமைக்க முடியும்!
      இலக்கணம் மாறாமல்!
      எப்படி!
      வழக்கம் போல சரியான பதிலோடு வாருங்கள்!
      இன்னொரு வெண்பா ரகசியம் உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறது!

      Delete
    2. நண்பா, ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் ஆகாதய்யா.
      தங்களின் ஆய்வுக்கட்டுரை பற்றிய ஆய்வைப் பார்த்து, தொலைபேசி எண் தேடிப் பெற்று, பேசியபின் எப்போது சந்திப்போம் என்று -காதலியைப் பார்க்கப்போகும் காதலன் போல- நான் உங்களைப் பார்க்க வந்ததை இந்தப் பிறவியில் மறக்க மாட்டேன். பிறகு வலைப்பக்கம் நீங்கள் வரவேண்டி அழைத்ததில் சுயநலமும் இருந்தது. உங்கள் தமிழறிவு வலை உலகத்திற்குப் பயன்பட வேண்டுமென்று வருந்தி அழைத்தேன். முதன்முறை வரவில்லை... பின்னர் வந்ததும் வளர்ந்ததும் வெண்பா விளக்கம் விரிந்ததும்.. தெரிந்ததே. நிற்க. எதுகையில் என்று தொடங்கி புதுகையில் என்பதைத் தனிச்சொல்லாக்கிவிட்டால் போயிற்று... நான் எழுதலாமா?
      புதுவையில் பாரதி தாசப் புயல்போல்
      எதுகையில் மோனை இணைந்து - புதுகையில்
      வெண்பாப் புயலினி வீசட்டும், பாவகை
      அன்பாய்த் தருவீர் அடுத்து.
      இது எனது வேண்டுகோளும் கூட நண்பரே!

      Delete
    3. அய்யா,
      சகோதரியிடம் கேட்ட கேள்விக்குத் தாங்கள் பதில் சொல்லல் தகுமா?
      சகோதரிக்கான கேள்வி அப்படியே இருக்கிறது.

      “புதுகையில் வெண்பாப் புயலினி வீசட்டும்“

      என்பதை ஒரு தனி அடியாகக் கொண்டு அடுத்த அடியை

      எதுகையோடு எழுத வேண்டும்.

      இதில் புதிய எழுத்துக்களையோ சொற்களையோ சேர்க்கக் கூடாது.

      வெண்பாவின் இலக்கணம் பொருந்த வேண்டும்.

      புதிர் தீர்க்க வாருங்கள் சகோதரி!!!

      Delete
    4. அண்ணா!
      பத்து மணிக்கு மேல் தான் விடை உதித்தது!! அது சரியானு பாருங்க! குட்டு பட்டாலும் மோதிரக்கையால் தான் குட்டுபடப்போகிறோம் என்ற துணிவில் தான் எழுதுகிறேன்!!

      புதுகையில் வெண்பா புயலினி வீசட்டும்
      மாதுகைத் திறங்கொண்டு நற்றமிழ் பாடட்டும்
      ஏதுகற்ப தற்குவ ரம்பும் வயதும்-இனி
      வெண்பா தமிழால் பேசு!!
      ---------------------------------
      இனிதான் நிலவன் அண்ணாவின் பின்னூட்டத்தை படிக்கணும்!!

      Delete
    5. ஆங்!! சொல்ல மறந்துட்டேனே!! நானே நேத்து அண்ணாகிட்ட ஹெல்ப் கேட்கலாமா என நினைத்து பின் நானே முயன்றேன். அது அண்ணாவிற்கும் கேட்டுவிட்டது போல(டெலிபதி) அது தான் உதவ வந்திருக்கிறார் அன்பு அண்ணா! இல்லையா அண்ணா! ரெண்டு அண்ணன்களுக்கும் நன்றி!! நீங்கள் பதிவின் தொடக்கத்தில் போட்டு இறுதியில் அவிழ்த்த முடிச்சை தான் என் முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன் அண்ணா!

      Delete
    6. புதுகையில் வெண்பா புயலினி வீசட்டும்
      மாதுகைத் திறங்கொண்டு நற்றமிழ் பாடட்டும்
      ஏதுகற்ப தற்குவ ரம்பும் வயதும்-இனி
      வெண்பா தமிழால் பேசு!!


      முயன்று தவறித்தான் வெண்பா கற்க முடியும். ஆகவே முயற்சிக்கத் தவற வேண்டாம். சொற்களைத் தேடித் தேடி அடித்துத் திருத்திப் பொருத்தம் பார்ப்பது சிரமமாக எண்ணவோட்டத்திற்குத் தடையாக இருக்கிறதே என்று சலிப்பாக இருக்கிறதா?
      “சொலல்வல்லை சோர்விலை அஞ்சாய்“
      இன்னம் கொஞ்சம் முயற்சி போதும். நிமிர்ந்து விடுவீர்கள்.
      சரி பாட்டிற்கு வருவோம்.
      புதுகை என்பதற்கு மாதுகை என்பது எதுகை இல்லை.
      இந்தப் பதிவிலேயே விளக்கி இருக்கிறேன்.
      இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது சரி.
      ஆனால் முதல் எழுத்து அளவில் ஒன்றாக இருக்க வேண்டுமே?
      குறில் எனில் குறில் நெடில் எனில் நெடில் என்னுமாறு.
      இங்குப் புதுகை என்பதில் பு குறில்.
      மாதுகை என்பதில் மா நெடில் அல்லவா?
      எனவே புதுகை என்பதற்கு உரிய எதுகை மாதுகை என்பது ஆகாது.
      அடுத்து
      மாதுகைத் திறங்கொண்டு என்பது (1 2) (2 1 1)
      இரண்டில் வேறாக வேண்டுமே!
      மற்றபடி பாடல் சரிதான்.
      எதுகையும் மோனையும் இருந்தால் இன்னும் அழகுபடும்
      சரி இன்னும் உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.
      நீங்கள் “ஐந்துவால் குரங்கும் இருபதுகால் ஆடும்“ என்னும் பதிவின் புதிரை விடுவித்ததால்தான் இதைக் கேட்டேன்.
      சரி புதிருக்கு விடை காண்போம்.
      புதுகையில் வெண்பாப் புயலினிவீ சட்டும்!
      மதுரகவி வெள்ளத்தில் மூழ்கப் – புதியவர்கள்
      நீந்தட்டும்! எத்தளையும் நீங்கட்டும்!! வென்றெடுத்து
      மாந்தட்டும் வெண்பா மது!!!
      மூன்றாவது வரியில் நீங்களே இதை முயன்றிருக்கிறீர்கள்.
      “ஏதுகற்ப தற்குவ ரம்பும்“

      இங்கே சொல்லை உடைத்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா?
      இது போல் முதல்வரியில் வீசட்டும் என்றசொல்லை உடைத்துப் புயலினி என்ற முன் சொல்லுடன் சேர்த்து “புயலினிவீ சட்டும்“
      என்று மாற்றினால் பிரச்சனை தீர்ந்தது.
      சட்டும் என்பது (1 1) அடுத்துவரும் மதுரகவி (2 2 1) என்பதுடன் இரண்டில் வேறாகிச் சேர்ந்துவிடும். எதுகையும் சரியாகும்.
      இப்படி தளைதட்டும் போது எழுத்துகளையோ சொல்லின் பகுதிகளையோ உடைத்து அடுத்த சொல்லில் சேர்த்து எழுதுவதை இலக்கணங்கள் வகையுளி என்கின்றன.
      அடுத்த பதிவில்சொல்ல வைத்திருந்த விஷயம் இது.
      அதனாலென்ன..! சகோதரி இப்போதே தெரிந்து கொண்டால், விரைவாக வெண்பா எழுத வசதியாக இருக்குமே!
      நேரம் கிடைக்கும் போது வார்த்தைகளை இப்படி இணைத்து விளையாடுங்கள்.
      எதுகைச் சொற்களைத் தேடுங்கள்!
      வெண்பா வசமாகும். எல்லா மரபுவடிவங்களும்தான்!
      முழுமையான வெண்பா ஒன்று உங்களிடமிருந்து வரக் காத்திருக்கிறேன்.
      நன்றி!

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. ஆற தொடங்கும் வடுவை விரல்கொண்டு
      கீற கிளம்பும் சுகவலி வேண்டாது
      தேற தவிக்கும் உனது நினைவகற்றி
      மாற தவிக்கும் மனம். இது ரைட்டா????

      Delete
    9. ரைட்டு!!!
      ஆறா வறிவுதான் ஆறறிவோ? இம்முயற்சி
      கூறாக் கதைபலவும் கூறிடுதே! - மாறாத
      தொன்று உலகில்லை ஓயா முயற்சியது
      வென்றிடுமா? வெண்பா விடை!

      மரபுலகிற்குத் தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
      நன்றி!!!

      Delete
    10. ஆஹா அம்முக்குட்டி .......
      வந்திட்டாங்கையா வந்திட்டாங்க அதானே பார்த்தேன் இப்பவே பொறி பறக்குது. இணைய தளம் கலங்கப் போவது திண்ணம்.
      அசத்துடா அசத்து....

      வண்ணவடிவம் குன்/றா/மல் வெண்பாக்களை தாவிரைந்து!
      எண்ணத்தில் பே/ரவா கொண்டே காத்/திருக்/கிறேன்
      செந்/தமி/ழின் சீர்/சிறப்/பினை சொல்/லக் கேட்டுநான்
      சிந்தை மகிழவே !

      சரியோ தெரியலை
      பாராட்டுக்கள் அம்மு! மேலும் மேலும் படைப்புகள் பெருக பெறுக என் இனிய வாழ்த்துக்களை......!

      Delete
    11. உங்கள் வெண்பாவைச் சரிபார்த்துக் கொடுக்கும் பொறுப்பைப் புதிய வெண்பாக் கவிஞர் கையில் ஒப்படைக்கிறேன்!
      வாருங்கள் மகிழ்நிறை அவர்களே.....!

      Delete
    12. இனியாச்செல்லம் வாழ்த்திற்கு நன்றி!!!

      விஜூ அண்ணா - வாய்ப்புக்கு நன்றி. சரியா வீட்டுபாடம் செய்த மாணக்கரை கொண்டு பிற நோட்டுகளை திருந்தம் பார்க்கச்செய்யும் நம் இனவழக்கம்:)) இந்த வாய்ப்பு நம்பினால் நம்புங்கள் ஆசிரியர் பயிற்சி காலகட்டத்தில் தான் எனக்கு கிடைத்தது:)) ஸ்கூல் காலத்தில் நான் ஒரு wool gatherer:))

      இப்போ வார்த்தை பிரிக்கும் பயிற்சி, ஓகே வா?

      கொண்/டே காத்/திருக்/கிறேன் (1 1) (1 2 2) என வருகிறதே தோழி கொண்/டே/நான் என்று வந்தால் சரியாய் இருக்குமோ?

      கடைசி அடியில் மூன்று சொற்கள் வரவேண்டுமே?
      நானும் நான்காவது முறை தான் கொஞ்சம் தேறியிருக்கிறேன். வாங்க இனியாச்செல்லம் மீண்டும் மீண்டும் முயற்சிப்போம்:)

      Delete
    13. வெண்பாக்/களை தாவிரைந்து! - ( 1 1 2)
      காத்/திருக்/கிறேன் - (1 2 2)
      சீர்/சிறப்/பினை- ( 1 2 2)
      மூன்றில் ஒன்றே இறுதியில் வரவேண்டும் என்பதையும்,
      சொல்/லக் கேட்டுநான்( 1 1) ( 1 2)
      இரண்டில் வேறாக வேண்டுமென்பதையும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே சகோ!!!

      Delete
    14. உண்மையசொல்வதானால் கருத்தை நான் இப்போதான் கற்றுகொள்கிறேன். நான் என்பதை இடமாற்றலாமா என யோசித்தபடி இரண்டாவது விஷயத்தை மறந்துவிட்டேன்.:((( மீண்டும் முயல்கிறேன் அண்ணா!!

      Delete
    15. வண்/ணம் குன்/றா/மல் வெண்/பாக்/கள் தா/விரைந்/து!
      எண்/ணத்/தில் பே/ரவா கொண்/டே/னே ! நீ/வடிக்/கும்
      செந்/தமி/ழின் சீர்/சிறப்/பை சொல்/லிடக் கேட்/டுநான்
      சிந்/தை மகி/ழவே !

      இப்போது சரியா பாருங்கள் சகோ. இந்த அம்மு படு ஸ்மார்ட் இல்ல சகோ! ம்..ம்..ம்... இப்ப பார்க்கலாம்.

      அம்மு பரர்தும்மா கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க ok வா பாவம் இல்ல இனியா செல்லம். திருவிளையடல்ல கருமி புலம்புவது போல புலம்ப வச்சிட்டாங்கையா. என் பாட்டில் குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்கப் பாக்குதே எண்ட அம்முகுட்டி நான் யாருகிட்ட முறையிடுவேன். ஹாஹா சும்மா கிட்டிங் அம்மு dont worry ok வா இப்ப கண்டு பிடிம்மா குற்றம்.

      Delete
    16. அண்ணா இப்படி ரெண்டு தோழிகள் இடையே கலக்கம் வந்துவிட்டதோ?? இல்லை இனியா அப்படி பட்டவர் இல்லை:))

      இனியாச்செல்லம்
      வண்/ணம் குன்/றா/மல் - செல்லம் 1-1 அடுத்தும் 1;1;1 வருதே

      அப்புறம் அது தருமிடா கருமி இல்லை:))))
      நாம ரெண்டு பெரும் இப்போ விஜூ அண்ணா மாணவர்கள். அவ்ளோ தான் டா. ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க!!

      Delete
    17. முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு நாங்கள் எல்லோரும் முதலில் நன்றி சொல்ல வேண்டும்! தாங்கள் சுயநலம் கருதி அல்ல...பொது நலம் கருதித்தான் இந்த அறிவு ஜீவி ஆசிரியரை வலைத்தளத்தில் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் பரிசாக வழங்கி உள்ளீர்கள்! எப்பேர்பட்ட ஆசிரியர்! நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். நன்றி நன்றி!



      Delete
    18. முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு நாங்கள் எல்லோரும் முதலில் நன்றி சொல்ல வேண்டும்! தாங்கள் சுயநலம் கருதி அல்ல...பொது நலம் கருதித்தான் இந்த அறிவு ஜீவி ஆசிரியரை வலைத்தளத்தில் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் பரிசாக வழங்கி உள்ளீர்கள்! எப்பேர்பட்ட ஆசிரியர்! நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். நன்றி நன்றி!



      Delete
  8. Replies
    1. நன்றி சகோதரி!

      அட இதுவும் வெண்பா இலக்கணத்தோடு இருக்கிறதே?!!!!

      Delete
  9. அன்புள்ள அய்யா,

    முதல்வன் நீ !

    இணையத்தில் வெண்பா இலக்கணம் சொல்லி
    இணையில்லா உம்பணி இன்மரபை ஆக்கும்
    கவிஞரெலாம் உன்னிடம் கற்றதனைப் பாட்டில்
    புவிநிறையப் பாடுவார் கள்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. புவிநிறையப் பாடலாம்! பிற்காலம் நிற்கும்
      கவிபாடல் தானே கடினம்! - அவியாமல்
      ஏற்றும் குறளொளிபோல் என்றும் உயிர்வாழுங்
      காற்றாகச் செய்க கவி!!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணவையாரே!

      Delete
    2. எக்காலம் நிற்கும் எனயுரைக்க உன்போல
      முக்காலம் எண்ணும் முனிவனில்லை – திக்காமல்
      இக்காலம் உன்னால் இனிய மரபினிடும்
      இக்கோலம் ஆமோ இனிது.

      நன்றி.

      Delete
    3. இக்கோலம் கண்டே இனிதெனச் சொல்லேனேல்
      தக்கோலப் போரன்றோ தேடிவரும்? - திக்கற்றுப்
      போகுமொரு காற்றாடி பாதையினை யாரறிவார்?
      ஆவதறி யாதென் அறிவு!

      வெண்பாக்களின் மெருகு கூடிக்கொண்டே போகிறது மணவையாரே,
      வாழ்த்துகிறேன்!!

      Delete
  10. பயனுள்ளப் பதிவைத் தந்தமைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அய்யா!

      Delete
  11. பதின்ம வயதில் வெண்பா எழுத ஆரம்பித்த புதிது. ஐ - யை நெடிலாகவே நினைத்திருந்தேன். ஒருமுறை பாரதியின் " வீணையொலி என்நாவில் விண்டு." என்ற வெண்பா வரியைப் படித்தபின் அதிர்ச்சி (?) அடைந்தேன். பல இடங்களில் இந்த மாதிரி பிழையை(??) கண்டேன். என்ன இது வெண்பாவில் கனிச்சீர் வருகிறதே. பாரதி பிழை செய்வாரா, மாட்டாரே, எனவே இடையில் ஐ வந்தால் அதைக் குறிலாகக் கொள்ளலாம்.- இப்படித்தான் நான் கற்றுக் கொண்டேன்.
    அப்போதே உங்கள் அறிமுகம் கிடைத்திருந்தால் ...நன்றாயிருந்திருக்கும். சில வெண்பாக்கள் கிழிபடாமல் பிழைத்திருக்கும்.
    நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். விஜூ .

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      இன்று முத்துநிலவன் அய்யா, எங்கள் ஊர் வந்திருந்தார்.
      சந்திக்க நேர்ந்தது. தங்களைப் பற்றியும் கவிஞர். சுந்தர பாரதி அவர்களைப் பற்றியும் நிறைய அறிய நேர்ந்தது.
      இலக்கியச் சந்திப்பில் உங்களின் கவிதைகளின் அரங்கேற்றம்.
      நானோ கூச்ச சுபாவி.
      என்னைக் காலி பண்ண வேண்டுமென்றால் மேடையில் ஏற்றி ஏதேனும் பேசச் சொன்னால் போதும்.
      வெறும் வாசிப்பு கொண்ட புத்தகப்பைத்தியமாய்த்தான் இத்தனை ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன்.
      அறிமுகமில்லாதவர்களிடம் அண்டவும், பழகவும் உள்ள மனத்தடை.. இதை இன்று கூட முத்துநிலவன் அய்யாவிடம் நோய் எனக்குறிப்பிட்டேன்.
      இது போல எழுதுவது வசதியாய் இருக்கிறது.
      உங்களைப் போன்றவர்களின் அறிமுகங்கள் பிரமிப்பாய் இருக்கிறது.
      பதின்ம வயது வெண்பாக்கள் நீங்கள் படைத்துக் கொண்டிருந்த அவ்வயதில், நானோ நேர் நிரை என்று கோடுகிழித்துப் பழகிக்கொண்டிருந்திருப்பேன்.
      தங்கள் வருகை மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது அண்ணா!
      தயங்காது குறைகளைச் சுட்டுங்கள்!
      நன்றி!

      Delete
    2. முத்துநிலவன் அய்யா , சித்தப்பா சுந்தர பாரதியை நினைவுகூர்ந்தார்கள் என்பதைப் படித்ததுமே கண்ணீர் பொலபொலவெனக் கொட்டுகிறது. அவரின் மரபணு காரணமாய்த் தான் எனக்கும் கவி எழுத வருகிறது. நன்றி

      Delete

  12. ““உரு/கி யுடல்/கரு/கி யுள்/ளீரல் பற்/றி
    எரி/வ தவி/யா/தென் செய்/வேன் – வரி/யர/வ
    நஞ்/சிலே தோய்த்/த நளி/னவி/ழிப் பெண்/பெரு/மாள்
    நெஞ்/சிலே இட்ட நெருப்/பு““

    இதுவரை தான் வாசித்தேன்.மிகுதி நாளை தான் தொடர்வேன்.
    நன்றி! நன்றி! நன்றி! தொடர்ந்து வாசித்த பின் கருத்து இடுவேன்.
    வாழ்க வளமுடன். ...!

    ReplyDelete
    Replies
    1. இட்டத்தில் கோடொன்றை இட்டுப் பிரிப்பதற்(கு)
      இட்டமிலை என்றோ இருந்தீர் ? - சுட்டுத்
      தணியா நெருப்பில் தமிழ்ப்பாட்டுப் பாட
      இனியா எழுந்தருள்க இங்கு!
      எல்லாம் சரியதான் ,
      இட்ட நெருப்பு என்பதை
      இட்/ட நெருப்/பு என்று பிரிக்கவில்லையே ஏன்?
      வருக விரைவாக !
      நன்றி

      Delete
  13. நல்லவேளை ..என் ஆசிரியர் இதற்கெல்லாம் எனக்கு வேலை வைக்காமல்.எருமை மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று அப்போதே சொல்லி வைத்தார்..அவர் சொன்னது..அப்போதும் பலிக்கவில்லை..இப்போதும் பலிக்கவில்லை......

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை பலிக்கவில்லை வலிப்போக்கரே!
      உங்களைப் பார்க்கும் போது
      “ உருள்பெருந் தேர்க்கு அச்சாணிதான் “ நினைவுக்கு வருகிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. முதல் தொடரையே இப்போது தான் படித்து, கொஞ்சம், கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. அதற்குள்ளேயே இந்த பகுதியை படிப்பது என்பது சற்றே சிரமமான காரியம் தான். நான் தங்களின் வகுப்பில் கடைசி பெஞ்ச் மாணவன் ஆசானே.
    இந்த வாரத்தில் தான் இந்த பகுதியை படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. படிப்பதுடன் நில்லாமல் கொஞ்சம் படைக்கவும் முயலுங்கள் அய்யா!
      இப்பொழுதுதான் தங்களிடமிருந்து ஒரு கவிஞன் வெளியே குதித்திருக்கிறான்.
      பழைய இலக்கியங்களை மீளப்பதிப்பிக்கின்ற தங்களின் முயற்சிக்கு யாப்பறிவு மிக மிக மிக அத்தியாவசியமானது.
      ஒரு முறைக்கு இரு முறை படித்தால் விளங்குவதே இது.
      ஏதேனும் தெளிவு வேண்டின் தரத் தயாராயிருக்கிறேன்.
      நன்றி.

      Delete
    2. அந்த ஒரு சிறிய கவிதையை வைத்து எடை போட்டு விட வேண்டாம் ஆசானே.
      அது எப்படியோ தப்பித்தவறி வந்து விட்டது.

      கண்டிப்பாக படைப்பதற்கு முயற்சி செய்கிறேன். கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி முயற்சி செய்தால், முடியும் என்று நம்புகிறேன். அது தவறாக போனாலும், இருக்கவே இருக்கிறீர்கள் நீங்கள் திருத்துவதற்கு.

      Delete
  15. யாப்புச் சூக்குமம் - 01 இல்
    புகைவண்டியில் சென்ற யாப்பு
    உள்ளத்தில் ஊரும் வேளை
    யாப்புச் சூக்குமம் - 02 இல்
    புலவர் மாயனூரில் இறங்கியதும்
    "ஐயையினிக் கண்டால் அறிவோம் இடைவந்தால்
    மெய்யையுணர் நெஞ்சே குறில்

    இது எத்தனையாவது குறள் என்று தேடாதீர்கள்! சும்மா நம்ம சரக்குதான். இங்கு முதல் சொல்லான “ஐயையினிக்“ என்பதில் முதலில் வரும் “ஐ“ எனும் எழுத்தை நெடிலாகவும் இடையில் வரும் “யை“ எனும் எழுத்தைக் குறிலாகவும் கொள்ள வேண்டும். குழப்புகிறேனோ?

    ஐ சொல்லுக்கு முதலில் வந்தால் நெடில். சொல்லுக்கு இடையில் வந்தால் குறில் . போதுமா?" என
    வெண்பா இலக்கண விளக்கவுரை
    இனிதே தந்துதவி - எம்மையும்
    வெண்பா புனைய வைக்கிறாரே!

    ReplyDelete
    Replies
    1. என்னையு மோர்பொருட்டாய் எந்தமிழ் நல்லுறவால்
      பின்னும் எடுத்திட்டீர் பேர்விளங்க - அன்னையவள்
      மக்கள்நாம் என்போம் மதிவிளக்கும் எக்கதிரும்
      திக்கறுத் தாகும் துணை

      தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி அய்யா!

      Delete
  16. வணக்கம் ஐயா
    தெளிவான விளக்கம் தேனின் சுவையை எளிய எழுத்திலும் காண விருட்ச விதையை விளைத்த பெரும்பாக்யம் என்றும் உமக்கே ஐயா...

    எளிய வழிமுறை எனைப்போல் சிறார்க்கு
    உளியின் உணர்வை உரிதாய் கொடுத்து
    தெளிவின் நிலையினை தேட அளித்தாய்
    ஒளிரும் கதிரோன் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் தினேஷ, விஜூ எழுதிய குற்றியலுகரத்தை நீங்கள் மீண்டும் படிக்க வேண்டுகிறேன். சிறார்க்கு-உளியின், பிறகு எதுகை மோனை பற்றிய பகுதியையும் படிக்க வேண்டுகிறேன்.

      Delete
    2. வருக திரு தினேஷ் அவர்களே!
      முதலில் பாராட்டுகள்! மிகத்தாமதமாகத் தங்களின் பின்னூட்டத்திற்குப் பதிலளிப்பதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
      பாராட்டு வெண்பா வடிவை கூடுமானவரை இலக்கணப் பிழையின்றி முயன்றதற்கும் அடி தோறும் எதுகையைச் சரியாக அமைத்ததற்கும்!

      “வழிமுறை எனைப்போல்“ என்பதில் - ( 2 2) ( 2 1)
      இரண்டில் வேறாக வேண்டுமல்லவா?
      காந்தம். நினைவு வர வேண்டாமா?


      இரண்டாகப் பிரிக்கப்படும் சீரில் இரண்டிற்கு அருகே இரண்டு வந்துள்ளதை கவனிக்க வில்லை பாருங்கள்.
      இதை “ என்னைப்போல் “ என்று மாற்றினால் வெண்பா சரியாகிவிடும்.



      முத்துநிலவன் அய்யா சுட்டிக் காட்டியதைப் போல நீங்கள் குற்றியலுகரப் பிசாசிடம் ஏமாந்து விட்டீர்களே!!!!

      நான் படித்துப் படித்துச் சொன்னேனே...
      பரவாயில்லை. நானும் பலமுறை இப்படிச் சிக்கிக் கொண்டவன்தான்.
      பிரச்சனையை முதலில் பார்ப்போம்.
      முதல் அடியின் கடைசிச் சொல்,“சிறார்க்கு“.
      இது இரண்டாம் அடியின் முதல் சொல்லான “உளியின்“ என்பதோடு சேரும்.
      உளியின் சிறார்க்கு என்பது சேரும் போது குற்றியலுகரப்பிசாசு நாம் பதிவில கண்டது போல இவ்விரு சொற்களும் வந்திருப்பதால் சிறாரக்கு என்பதன் இறுதியில் வரும் உ எனும் எழுத்தைத் தின்று விடும்.
      இப்பொழுது இது “சிறார்க் குளியின்“ என்றுதான் புணரும்.
      மீண்டும் ஒரு முறை குற்றியலுகரத்தைப் பாருங்கள்.
      தெளிவு வேண்டின் கேளுங்கள்.
      இப்பொழுது “ சிறார்க்கு உளியின் “ - ( 2 1) (2 1) என நீங்கள் சரியாக அமைத்ததாக நினைத்திருந்த வெண்பா வடிவம்,
      புணர்ச்சி இலக்கணப்படி, “ சிறார்க் குளியின்“ -(2) (2 1)
      என்று மாறிவிட்டது.
      குற்றியலுகரம் ஒரு சொல்லின் ஒரு பகுதியைத் தின்று இரண்டு அசை உள்ள ( இரண்டு கூறாய் நாம் பிரித்து வைத்திருந்த) சொல்லின் ஒரு பகுதியைக் கொண்டு போய் விட்டது.
      இப்பொழுது “சிறார்க்“ என்கிற ஓர் அசைதான் இங்கு இருக்கிறது.
      இது வெண்பாவின் கடைசிச் சொல்லாகவன்றி இடையில் வரக் கூடாது.
      இந்த ஓரசைச் சொல்லை அடுத்த சொல்லோடு சேர்க்கவும் முடியாது.
      இப்படிக் குற்றியலுகரம் வரும் பெரும் பாலான இடங்களில் ஒரு ஏ சேர்ப்பதன் மூலமோ ஒரு ம் சேர்ப்பதன் மூலமோ குற்றியலுகரத்தின் வாயிலிருந்து இந்த சொல்லைக் காப்பாற்றி விடலாம்.
      இந்தச் சொல்லையே,

      “சிறார்ககே“ என்றோ
      “சிறார்க்கும்“ என்றோ
      மாற்றினீர்கள் என்றால் வெண்பா இலக்கத்தைக் குற்றியலுகரம் ஒன்றும் செய்ய முடியாது.
      வெண்பாவின் கடைசி அடியைக் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
      பதிவையோ பதிவரையோ பாராட்டி எழுதுவதை விடுத்து உங்களின் மனதில் தோன்றும் எதைப்பற்றியேனும் எழுதுங்கள்.
      ஆரம்பிக்கும் சொல்லிற்கு எதுகை வாய்ப்பை உறுதி செய்யுங்கள்.
      நீங்கள் அழகிய வெண்பா படைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
      மீண்டும் வாருங்கள்!
      நன்றி.

      Delete
    3. நானும் எனைப்போல் என்பதற்கு அருகில் சிறார் வந்துள்ளதைக் கவனிக்கவில்லை.
      எனவே இதை என்னைப்போல் என்று மாற்றினால் அது சிறார் என்பதுடன் இணைவதில் சிக்கலை உண்டாக்கும்.
      எனவே வழிமுறை என்பதை வழியால் என்று மாற்றலாம்.

      Delete
    4. வணக்கம் ஐயா இருவருக்கும்

      எங்கு தவறு செய்கிறேன் என்பதை உணர்த்தி எதனால் தவறு செய்கிறேன் என்ற நிலையை அறிந்து கொண்டேன் என் நிலை அறிய எனக்குதவிய அன்புள்ளம் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா

      சித்தம் கலங்குதே சற்று மயங்குதே
      மொத்தம் எழுத மறவுதே - நித்தம்
      நிலையின் பிடியிலே நானற்று மீளும்
      விடியலில் நீண்ட நாள்....

      எழுத நினைக்கையில் எல்லாம் மறந்தேன்
      எழுத்தை விளைக்கையில் என்றோ - உழுதேன்
      கருத்தை நெரிக்கையில் கன்றாய் நிலவு
      நிருத்தம் தனக்கில்லா ஓட....

      எளிய வழியால் எனைப்போல் சிறார்க்கை
      உளியின் உணர்வை உரிதாய் உடுத்த
      தெளிவின் நிலையினை தேட அளித்தாய்
      நெளிவு சுளிவினி நீங்கும்....

      Delete
    5. அன்பு தினேஷ்.
      முன்பை விட உங்களிடம் முதிர்ச்சி தெரிகிறது.
      ஆர்வமும் முயற்சியும் இருக்கிறது.
      வாழ்த்துகள்!
      நித்தம்
      நிலையின் பிடியிலே..
      என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
      இலக்கணச் சேர்க்கையுடன் பொருள் சேர்வதும் முக்கியமில்லையா?

      நிலையின் பிடியிலே நானற்று மீளும்
      விடியலில் நீண்ட நாள்....

      இவ்விரு அடிகளுக்குப் பொருத்தமான எதுகை கிடைக்கவில்லையா?
      வெண்பாவின் இறுதிச் சொல் பற்றிப் பதிவில் உள்ளவற்றை மீண்டும் படியுங்கள்!
      வெண்பா இலக்கணத்தோடு பொருளும் இருக்குமாறு அமையுங்கள்!
      புதிதாய் முயன்று வாருங்கள்!
      இம்முயற்சி வெற்றி தரும்.




      Delete
    6. சித்தம் கலங்குதே சற்று மயங்குதே
      மொத்தம் எழுத மறவுதே - நித்தம்
      நிலையின் பிடியிலே நானற்று மீளும்
      விடியலில் நீண்ட நாள்....

      அவன்மீது கொண்ட அன்பால் என் புத்தி சுற்றத்தின் மீது நிலைக்கொள்ளாது கலங்கி உன்மீதே திரும்புதே, அதனால் அனைத்தும் மயங்குதே நீயும் நானும் தவிர்த்து அக்கனம் கண்டது அத்தனையும் எழுத மறதியே மிஞ்ச தொடர்ந்து அந்த நிலையின் படியிலே தவழும் குழந்தையாய் தன்னையே அறியாத துறவு முடிவில்லாது நாளாய் நீண்டு போனது ....
      என்னும் பொருள் பொருந்தாது போனதா என்றெனக்கு தெரியவில்லை ஐயா

      தாங்கள் கூறியது போல முயல்கிறேன் மிக்க நன்றி மீண்டு வருவேன்

      Delete
    7. “சித்தம் கலங்க‘என் சிந்தை மயக்கிடும்
      பித்தம் அறியாப் பிழையோடு - நித்தம்
      வலைபட்ட மீனெனநான் வாடுமிப் புன்மை
      நிலைமாறும் உன்னை நினைந்து“

      இது நீங்கள் சொல்லும் கருத்திற்கு ஓரளவு பொருந்தி வருகிறதா திரு தினேஷ் அவர்களே..?

      நீங்கள் சொன்ன கருத்தை வெண்பாவில் கட்டமைக்கும் எனது சிறிய முயற்சி இது!
      தவறிருக்கலாம்.

      வேறொன்றுமில்லை.. இப்பொழுது நீங்கள் சொல்லும் இந்தப் பின்புலமில்லாமல் தங்கள் வெண்பாவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! அதற்கு என் பக்குவமின்மையும் ஒரு காரணம்.
      தவறாக நினைக்க வேண்டாம்!
      மீண்டும் வருக!

      Delete
    8. மன்னிக்கவும் தங்கள் நேரத்தை அதிகம் வீனாக்கி விட்டேன் தொடர்ந்து வருகிறேன் தாங்கள் தொடருங்கள் அன்பரே

      இன்னார்க்கண் காண்பினும் இன்னதென எண்ணுவார்தன்
      முன்னரென் தோற்றம் உணர்வு


      Delete
    9. நேர வீணாக்கல் என்பதெல்லாம் பெரிய வார்த்தை!
      நீங்கள் எழுதக் கற்றால் அதைவிட பெருமகிழ்வு வேறென்ன!
      ரொம்ப தத்துவமாக எழுதுகிறீர்களா..
      அதுதான் புரியவில்லை.

      Delete
  17. அருமையான விளக்கப்பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி தனிமரம் அவர்களே!

      Delete
  18. நண்பர் விஜூ, யாழ்பாவாணர் தனது தளத்தில் இந்த இரண்டு பதிவுகளையும் எடுத்துப்போட்டு இணைப்பும் தந்திருக்கிறார். பார்க்க -http://paapunaya.blogspot.in/2014/11/blog-post_10.html

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா!
      அவர் தளத்தில் சென்று பார்த்தேன் .
      கருத்திட்டேன்
      நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
      எல்லார்க்கும் பெய்யும் மழை.
      அறியத்தந்தமைக்கு நன்றி அய்யா!

      Delete
  19. அருமை இனிமை சிறப்புடன் கூறினாய்...சகோதரா...

    ReplyDelete
    Replies
    1. // அருமை இனிமை சிறப்புடன் கூறினாய் //

      வரியில் வெண்பா வசப்பட்டுவிட்டது கவிஞரே...!

      //முழுவடிவ வெண்பாவை எப்போ தருவதாக உத்தேசம்?//

      நாங்களும் இப்படிக் கேள்வி கேட்போமில்ல.....!!!!!

      Delete
  20. மிக மிக தாமத வருகைக்கு மன்னிக்கவும். மரபில் எழுதஆர்வம் மிக இருந்தும் . நேரமின்மை காரணமாக எழுத முடிவதில்லை. முதல் பகிர்வையும் படித்தேன். மிக எளிதாக அனைவருக்கும் புரியும் விதமாக இருந்தது. "ஐ"-யை நானும் நெடிலாகவே நினைத்திருக்கிறேன். மிக நுட்பமான விளக்கம் இங்கு காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி.

      Delete
  21. யாப்புச்சூக்குமம் துலங்கும் உருவம்.-- இன்னும் துலங்குவதால் அடுத்த பதிவு துவங்கவில்லையோ...திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!!

    ReplyDelete
    Replies
    1. அய்யா வலிப்போக்கரே..!
      உங்க வேகத்துக்க எம்ம உடம்பு தாங்காதைய்யா!
      எப்படித்தான் இவ்வளவு வேகமாப் பதிவிடுகிறீர்களோ போங்க!
      அது சரி!
      சட்டில இருந்தாத்தானேஅகப்பையில வரும்!
      மறு வருகைக்கு நன்றிங்க.

      Delete
  22. படிக்கிறேன். புரிவது போல உள்ளது. ஆனால் தொடர்ந்து படித்து கடைபிடிக்கமுடியுமா என்பது ஐயத்திற்குள்ளாகிறது. தொடர்ந்து படிக்கும்போது தெளிவு பிறக்கும் என நினைக்கிறேன். வாய்ப்பிருப்பின் இவ்வாறான பதிவுகளைத் தொகுத்து நூலாகக் கொணர முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகையும் கருத்தும் காண எப்போதும் மகிழ்ச்சிதான்.
      நூலாக்குவதை விட இது போல் பதிவிடுவது இன்னும் நல்லதென்று படுகிறது அய்யா!
      இன்னும் இந்தப் பதிவுகள் பிடிக்காமல் போக வேண்டுமானால் சொல்லுங்கள்..
      புத்தகமாகப் போட்டு மாணவர்களுக்குப் பாடமாக வைத்துவிடலாம்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  23. நண்பர் விஜூ அவர்களே உங்கள் இலக்கணப் பதிவு, இலக்கியப் பதிவுகளை விடவும் புயலாய் வீசிக்கொண்டிருக்கிறது போங்கள்..
    ரொம்ப மகிழ்ச்சி. புத்தகம் போட்டால், பின்னூட்டங்களை சேர்க்காமல் விடமுடியாது போலுள்ளதே! சகோதரிகள் வெளுத்து வாங்குகிறார்கள்! எனது வலையில் திரு ஜேம்ஸ் அவர்களுக்கும், திரு சிவக்குமார்ன வலையில் அவருக்கும் பின்னூட்டமிட்டதைப் பார்க்க வேண்டுகிறேன் நன்றி (கருத்து வேறுபடலாம்தானே?)

    ReplyDelete
  24. தங்களி்ன் வெண்பா தனைக்கண்டேன் ஆனாாலும்
    உங்களின் பார்வை உவப்பல்ல நிற்க,
    புலவர் குரலறிவீர், போய்பபார்க்க வேண்டி
    நிலவன் அழைக்கின்றேன் நின்று

    இணைப்புக்குச் செல்ல - (பின்னூட்டம் காண்க)
    http://www.pulavarkural.info/2014/11/blog-post_12.html

    ReplyDelete
    Replies
    1. உவப்பில்லா வெண்பா உடல்மட்டும் கொண்டு
      சவம்போல் மலர்மாலை சூட - தவமின்றிப்
      பெற்றயிப் பேறின் பெருமை யறியேன்நான்
      சுட்டெரிக்கும் உம்பா சுகம்!

      வகையுளி காட்டுதற்காய் அவ்வாறு அமைக்க நேர்ந்தது அய்யா!
      புலவர் குரலைச் செவிமடுத்தேன்.
      பதிலுரைத்தேன் .
      இவ்வாற்றுப்படுத்தல்தான் நீங்கள்!
      நன்றி

      Delete
  25. ஆசானே! தங்கள் பாடங்களை வாசித்தால் போதாதே! படிக்க வேண்டுமே! உள் வாங்க வேண்டுமே! கொஞ்சம் வீக்குங்க..

    இனிதான் படித்து முயல வேண்டும் ஆசானே! கொஞ்சம் டைம் கொடுங்கள்! படித்து முயன்று உங்களுக்கு அனுப்புகின்றோம். நிச்சயமாக முயற்சி செய்து அனுப்புகின்றோம்! நீங்கள் தான் திருத்தி எங்கள் அறிவை மேம்படுத்த வேண்டும்! நாங்கள் கடைசி பெஞ்சில் இருந்து கொள்கின்றோம் ஆசானே! இங்கு அறிவு ஜீவிகள் பலர் குழுமி உள்ளனர்.

    மிக்க நன்றி தங்கள் இலக்கணப் பாடங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. படித்து முயல வேண்டுமென்பதெல்லாம் இல்லை ஆசானே!
      புதுக்கவிதை படைப்பவர்களுக்கு மரபின் சிறு சன்னலைத் திறந்து காட்டும் முயற்சி!
      எட்டியும் பார்க்கலாம்.
      கதவைத் திறந்து வீட்டில் குடியும் இருக்கலாம்.
      அவ்வப்போது வந்தும் போகலாம்.
      எல்லாம் அவரவர் விருப்பம் போல..!

      நீங்கள் வந்து பார்ப்பதும் கருத்திடுவதுமே மகிழ்ச்சிதானே ஆசானே!

      நன்றியுடன் தங்களை நினைக்கிறேன்.

      Delete
  26. Enakkoru unmai therinjaaganum... Epdi neram kidaikkudhu ungalukku? theliva ivlo neela padhivu..viyakkiren naan..padikura kaalathula andrandraikku padiththu viduven, ippo .... Neenga paattukku syllabus mudikkereengale anna :-)

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா
      படிக்கிறதுக்குள்ள சிலபஸ் முடிஞ்சா பரவாயில்லை.
      எக்ஸாம் வைச்சு ரிசல்ட் போடவும் எக்ஸ்பட் ஆயாச்சு!
      பின்ன என்ன வாத்தியார் வேலைன்னா சும்மாவா?
      அதனால, பாடமே நடத்த வேண்டடிதில்லை என்பதுதான் ஹை லைட்.
      நன்றி

      Delete
  27. எளிமையாக புரிந்தது . நன்றி :)
    அஞ்சாத நெஞ்சன் அழகிய ஆஞ்சநேயனை
    துஞ்சாமல் எந்நாளும் பார்த்திரு.
    சரியா? :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே
      இரண்டு இடங்களை மட்டும் பாருங்கள்.
      ஆஞ்---சநே---யனை ------------------------( 1----2----2) அல்லது
      ( நேர்---நிரை--நிரை)

      வெண்பாவின் மூவசைச் சீரின் இறுதியில் இரண்டு வரக்கூடாது.
      மூன்றில் ஒன்றே ( அல்லது காய் முன் நேர்) வர வேண்டும்.
      இதை “ ஆஞ்சநேயன் “ என்று வைக்கலாம்.

      அடுத்து ஈற்றுச்சீர்.
      “பார்த்திரு.“ என்பது.
      வெண்பாவின் ஈற்றுச்சீர் ஓரசையால் வர வேண்டும்.
      இரண்டாய்ப் பிரிக்கப்படுவதானால், இரண்டாம் பகுதி “ கு, சு, டு, து, பு, று, என்னும் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடிய வேண்டும்.
      உங்கள் குறள் வெண்பாவின் ஈற்றுச் சீரின்( பார்த்---‘திரு‘ ) இரண்டாம் அசை,“ திரு“ என்று முடிகிறது.
      இதை “ பார்“ என்று மட்டும் வைத்துக் கொண்டால், வெண்பா சரியாகிவிடும்.

      இப்பொழுது பாருங்கள், உங்களின் குறள் வெண்பா,

      “அஞ்சாத நெஞ்சன் அழகிய ஆஞ்சநேயன்
      துஞ்சாமல் எந்நாளும் பார்“

      அருமையாக வந்து விட்டது.

      உங்களுக்கு வெண்பா வந்து விட்டது.
      முதல் வெண்பாவையே உங்கள் இஷ்ட தெய்வத்திற்காக ஆக்கிவிட்டீர்களா் போல......!
      இனி என்ன குறை? எல்லாம் நலமே!

      அஞ்சாத நெஞ்சன் அழகிய ஆஞ்ச நேயன்
      துஞ்சாமல் எண்ணித் துதிப்பார்க்கு - நெஞ்சத்தில்
      எல்லாம் நலமாகும்! ஏய்க்கும் பிணியற்ற
      வல்லானைப் பாடும்என் வாய்“

      உங்கள் குறள் வெண்பாவை நேரிசையாக்கி முடித்துவிட்டேன் நண்பரே!

      தங்களின் வெண்பாப் பயணம் தொடரட்டும்!!!

      நன்றி

      Delete
  28. இரண்டாவது பகுதியைப் படித்து வெண்பா எழுதியிருக்கிறேன். முதல் பிரசவம் குறைப்பிரசவம் ஆகிவிடக்கூடாது என்ற கவலையெனக்கு. இலக்கணம் சரியென்று சொன்னால் மகிழ்வேன். மோனை சரியாக வரவில்லை. இது வெண்பா தானே யொழிய கவிதையில்லை.
    வெண்பா சுழலில் கரைசேர்தல் வீண்கனவாம்
    நண்பர் பலரும் நவில்தல் வழக்கந்தான்;
    உன்னால் கிடைத்த துடுப்பைப் பிடித்தவுடன்
    என்னுள் விரியும் சிறகு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      முதலில் உங்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது.
      உங்கள் புரிதலும்.

      “““““இது வெண்பா தானே தவிர கவிதை இல்லை என்கிறீர்களே...““““““

      பொதுவாக இந்தப் புரிதல் என்பது அசாத்தியமானது.

      இருப்பினும், வெண்பாச் சுழல், துடுப்பு, சிறகு இவை இவ்வெண்பாவினைக் கவிதையினோடு அண்மைப் படுத்துகின்றன. அதற்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

      வெண்பா இலக்கணப் படி மிகச் சரியாகவே உள்ளது.
      அடித்துத் திருத்தப்பட்ட உங்களின் தாள்களையும், சொல்லை விலக்கியும் பொருத்தியும் சேர்த்த உங்கள் முயல்வினையும் என் மனக்கண்ணால் காண்கிறேன்:)

      பெருக்கல் வாய்ப்பாட்டை மனனம் செய்யும் முன் மறந்து போனதன் தொடர்ச்சியை விரல் விட்டு எண்ணிப் பார்த்துச் சேர்ப்பது போலத்தான் வெண்பா எழுதத் தொடங்குபவர் யாவராயினும் அவர்களின் முயற்சி இருக்கும்.

      எதுகை மோனை என்பவை வெண்பாவின் அழகூட்டிகள்.

      கவிப்பொருளில் தெளிவிருந்தால் அவற்றை ஓரங்கட்டி வைத்துவிடலாம்.

      அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

      http://oomaikkanavugal.blogspot.com/2015/01/blog-post.html

      இந்தப் பதிவினை அதற்குப் பரிந்துரைக்கிறேன்.

      உருவம் அறிந்தால் உள்ளடக்கத்தை அதனுள் அடைப்பது எளிதாகிவிடும்.

      மரபில் எழுதப்படுகின்ற வெண்பாக்களை வாய்விட்டு வாசித்தல் முயற்சியை எளிதாக்கும் சிறந்த பயிற்சி என்பது எனது தனிப்பட்ட கருத்து.

      ஓசை உளம் படும்

      மீண்டும் வாழ்த்துகள்.

      நன்றி.

      Delete
  29. அப்பா எனக்கு மயக்கத்தின் கலக்கத்தில்
    கண்ணெல் லாம்கட் டுதே
    சரியா அய்யா,
    கொட்டு வாங்க நான் தயார், தாங்கள் தானே கொட்டுவது,,,,,,,
    அதற்காக
    நன்றி.

    ReplyDelete