Sunday 3 August 2014

இமைக்கும் நொடி.




மரபிலக்கணங்களின் உரைகளை வாசிக்கும் போது அவை வாய்மொழியாக ஆசிரியரால் கற்பிக்கப்பட்டதன் எழுத்துப் பதிவுகள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். உரை என்றாலே உரைக்கப்படுவதுதானே! ஏனென்றால் ஒரு நூலைப் படிக்கும் போது நம்மனதில் தோன்றும் அல்லது நமக்கே தோன்றாத பல ஐயங்களை உரையாசிரியர்கள் எழுப்பி அவற்றிற்கான விடைகளை அளித்துச் சென்றிருப்பார்கள். அவை ஏதோ புத்திசாலி மாணவனால் அன்றைய வகுப்பறைச் சூழலில் எழுப்பப்பட்ட நல்ல கேள்விகளாக இருந்திருக்கும். அல்லது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவருக்கே தோன்றிய சந்தேகத்திற்கான பதிலாக இருந்திருக்கும்.

உரைகளைப் படிக்கும் போது,
“நல்லா கேட்டேப்பா கேள்வி“ ( நன்கு கடாயினாய் !)
“தெரியாம இப்படிக் கேட்கிறேப்பா “ ( அறியாது கடாயினாய்!)
“இதைப்படிச்சிங்களா? இப்ப இது உங்களுக்கான கேள்வி “( இது கடா)
“அதற்கு இதுதான் பதில் “

என்று ஆசிரியர் மாணவரிடம் சொல்லுவது போல் அமைந்த  இடங்கள் பல உண்டு. நூலை எழுதியவன் அதைப்பற்றிக் கவலைப் படுகிறானோ இல்லையோ பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் அதைப் பற்றிக் கவலைப் பட்டாக வேண்டும். அவர்தானே மாணவர்களிடம் மாட்டிக்கொண்டு பதில் சொல்ல வேண்டியவர்.

பழங்காலக் கல்வி மரபு, அறிவுப்புலம் போன்றவற்றை ஆராய நினைப்பவர்களுக்கு இந்த உரைகள் பெரும் கருவூலமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சரி சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.

இலக்கணங்களை விளக்கும்  ஆசிரியர் ( உரையாசிரியர் ) தன் விமர்சன நோக்கில் இரண்டு காரியங்களைக் கவனமாக ஆராய்ந்து சொல்ல வேண்டியது அன்றைய மரபாக இருந்தது.


1) முறைவைப்பு .(  Order )
2) எடுத்துக்காட்டுகள்.


இரண்டையும் ஒரு இலக்கண நூற்பாவிற்கான உரையைக் கொண்டு எளிதாக இப்படி விளங்கிக் கொள்ள முடியும்.


எழுத்துக்களை உச்சரிக்க ஆகும் கால அளவினை ( Unit ) இலக்கணங்கள் மாத்திரை என்னும். (இது மாத்ரா என்ற வடமொழியின் தற்சம வடிவம்).
அதனை அளவிடும் கருவியாக, கண்ணை இயல்பாக ஒருமுறை இமைக்கும் அளவும், விரலை ஒரு முறை நொடிக்கும் அளவும் சொல்லப்பட்டிருக்கும்.

இவை ஆரம்பக் கல்வியில் தமிழ்படித்தோர் அனைவருமே அறிந்தது தான்.

 “ இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை “ 

                         என்பது இதற்கான இலக்கணச் சூத்திரம். பண்டைய சூழலில் இதை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியனிடம் மாணவன் கேட்கிறான் “ அய்யா ஏன் கண் இமைப்பதையும், கை நொடிப்பதையும் சொல்ல வேண்டும் ? வேறு எதுவும் சொல்வதற்கு இல்லையா?   ( வடமொழியில் கையால் முழங்காலை ஒருசுறறு சுற்றுவதெல்லாம் மாத்திரை எனச் சொல்வார்கள் )

இலக்கண நூலை எழுதிய ஆசிரியன் தப்பித்துக் கொண்டுவிட்டான்.
பாடம் நடத்தும் ஆசிரியன் மாட்டிக் கொண்டான்.

உரைக்காரன் சொல்கிறான்.

“கண்ணை இமைப்பதைச் செவித்திறன் இல்லாதவன் பார்த்து ஒரு மாத்திரை அளவு எவ்வளவு என அனுமானிக்க முடியும் என்பதால் கண் இமைப்பதைச் சொன்னார்கள. இது காட்சி அளவை. 

கையை நொடித்தால் அந்த ஓசையைக் கொண்டு கண் பார்வை இல்லாதவன் ஒரு மாத்திரை அளவு எவ்வளவு எனக் கேட்டறிய முடியும் என்பதால்  கைநொடித்தலைச் சொன்னார்கள் அப்பா!“

இது தான் எடுத்துக் காட்டுகளை எப்படித் தேர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான விளக்கம்.

அப்பாடா எனச் சாய்ந்த ஆசிரியனை எழுப்பி அடுத்த மாணவன் கேட்கிறான்,

“ சரி அய்யா,  கண்ணை இமைப்பதை முதலிலும் கையை நொடிப்பதை இரண்டாவதாகவும் ஏன் சொல்கிறார்கள்? மாற்றிச் சொல்லக் கூடாதா?“

உரைக்காரன் நிமிர்ந்து உட்கார்கிறான்.

கண்ணை இமைத்தல் என்பது இயல்பாக இயற்கையாகத் தோன்றும் செயல்   ( அனிச்சைச் செயல் ) என்பதால் அதை முதலாவதாகச் சொன்னார்கள். கையை நொடிப்பது செயற்கையாகத் தோற்றுவிக்கப்படுவதால் இரண்டாவதாகச் சொல்லப்பட்டது.

இதுதான் சொற்கள் ஏன் குறிப்பிட்ட வரிசையில் சொல்லப்பட வேண்டும் என்கிற முறைவைப்பிற்கான விளக்கம்.

மூன்றாவதாக இன்னொரு மாணவன் எழுகிறான்.
 “அய்யா நான் கண்ணை மூடிக் கால்மணிநேரம் கழித்துத் திறந்தால் அப்பொழுது அது ஒரு மாத்திரை ஆகுமா?“

“ அறியாது கடாயினாய்! இலக்கண ஆசிரியர் இயல்பாக எழக்கூடிய மனிதரின் இமைத்தலைத் தானே குறிப்பிட்டிருக்கிறார். ( இயல்பெழு மாந்தர் இமை ) நீ சொல்வதைப் போல் உன் விருப்பத்திற்குக் கண்மூடித் திறப்பதைச் சொல்ல வில்லை அப்பனே! “


ஒரு உரையைப் படித்தால் அன்றைய கால வகுப்பறையில் எழுப்பப்பட்ட இவைபோன்ற அறியாமைக் கைகளால் அறிவின் கதவைத் தட்டும் பல குரல்களையும் நம்மால்  கேட்கவும், திறக்கும் புதிய உலகத்தில் வியப்பின் விழி உயர்த்தி அன்றைய மாணவரோடு மாணவராய் நாமும் இணைந்து பயணப்படவும் முடியும்.

மெய்ப்பாட்டியலை ஆரம்பித்துவிட்டு வேறேதோ பேசிக்கோண்டிருக்கிறானே என நினைத்தீர்கள் என்றால் இதை இங்குச் சொல்லக் காரணம் இருக்கிறது.

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என இந்த வரிசையில் ஏன் அமைக்க வேண்டும் என்பதற்கு உரையாசிரியர் கூறும் முறைவைப்புக் காரணம் அறியச் சுவையானது. மட்டும் அல்ல வடமொழியின் ரசக் கோட்பாட்டில் இருந்து,  தமிழ்ச்சுவைகள் எவ்வாறு வேறுபட்டிருக்கின்றன என்பதை அறியக் காரணமாய் அமைவது.
தொடர்வோம்!
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

19 comments:

  1. மாத்திரை அளவினைக் குறித்து பள்ளியில் தமிழ் இலக்கண வகுப்பில் கற்றதுண்டு. அத்தனை விளக்கங்களுடன் இல்லை! மாத்திரை அளவினைக் குறிக்க எத்தனை வகைகளை உரை ஆசிரியர் இங்கு உரைத்திருக்கின்றார்...மாணாக்கர் ஆனோம்!

    ReplyDelete
    Replies
    1. இது இடைச்செருகல் தான் அய்யா!
      எனது நடைகுறித்த ஐயம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.
      புரியும் படி எழுதி இருக்கிறேனா என்பதைத் தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete
  2. வகுப்பறையில் கவனிப்பது போல எனக்கு இருந்தது. நன்றாக பாடம் எடுக்கிறீர்கள். விளக்கம் அருமை.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வகுப்பறையில் தமிழ்ப்புத்தகத்தோடு போனால்
      தொலைத்துக் கட்டிவிடுவார்கள் நண்பரே!
      பாடம் எடுக்கிறீர்கள் என்பதில் கிண்டல் எதுவும் இல்லையே?
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  3. மிக சுவாரஸ்யமாக விளக்குகிறீர்கள் ! உங்களை போன்ற ஆசிரியர்களிடம் பாடம் படிக்கும் இன்றைய மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். முக்கியமாக வடமொழியுடன் ஒப்பீடு செய்வது அருமை.

    மாத்திரை பற்றிய விளக்கமும், ஆசிரிய மாணாக்க உரையாடல்களும் உங்கள் எழுத்து திறமைக்கு சான்று.

    நன்றி
    சாமானியன்.

    ReplyDelete
    Replies
    1. எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை அண்ணா!
      மாத்திரையும் விளக்கமும் எல்லாம் முன்னோர் சரக்கு.
      இன்றைய மொழிநடையில் கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே!
      நன்றி.

      Delete
  4. தெளிவாக விளக்கும் முறை அழகாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டமும் தான் கில்லர்ஜி!
      நன்றி!

      Delete
  5. வணக்கம் ஐயா!

    ’இமைக்கும் நொடி’ அருமையான விளக்கம் ஐயா!
    ஏதோ சொல்வழக்கு என்று இதனை ஆராயத் தலைப்பட்டதே இல்லை.
    உங்கள் விளக்கங்கள் எம்மை நன்கு சிந்திக்க வைக்கின்றன.
    இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா உங்களிடத்தில்.

    தொடர்ந்து தாருங்கள். வந்து படிக்கக் காத்திருக்கின்றேன்.
    இன்று நேரம் சிறிது முடையாகிவிட்டது. அதனால் வந்து பார்த்துக் கருத்திட இவ்வளவு தாமதமாகிவிட்டது.

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சொல்லுக்கான வழக்குதானே சகோதரி இவ்வளவும்!
      ஆராயாமலே சரியாகத்தானே சொல்லுகிறீர்கள்!
      “ யானுனைப் பணிந்து சிக்கெனப் பிடித்தேன்
      ...எங்கெழுந் தருளுவ தினியே!
      எனச் சிவனைத் தான் பற்றியமை குறித்துச் சொல்வான் வாதவூரான்.
      இந்தச் ‘சிக்கெனப் பிடித்தலுக்கு‘ மகாபாரதத்தில் சகாதேவன் கிருஷ்ணனைப் பிடித்த கதையைச் சான்றாய் நினைத்துக் கொள்வேன்.
      எதையும் உடனே சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் உங்களையும் உடன் நினைக்கிறேன் இப்போதெல்லாம் .....!
      நன்றி

      Delete
  6. ஆஹா சுவாரஸ்யமாகவே உள்ளது. விளக்கங்கள் அபாரம், மாத்திரை பற்றிய அளவுகள் இமைக்கும் நொடி, கை விரல் நொடிப்பது பற்றியும் அறிந்தேன் இன்னும் கற்றுகொள்ள ஆவலாகவே உள்ளேன்.ஆஹா எவ்வளவு அழகாக விளக்குகிறீர்கள் சகோ. தவறாமல் கற்றுக் கொள்கிறேன். தொடருங்கள் தொடர்கிறேன். பகிர்வுக்கு நன்றி !! வாழ்த்துக்கள் ....!
    Kaviyakavi புதிய பதிவு இட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
      ஸ்ரீ சாய் சஷ்டி கவசம் கண்டேன்.
      கருத்திட்டேன்.
      நன்றி!

      Delete
  7. இப்படி ஒரு கண்ணிமைக்கும் (?) படத்தைப் போட்டுக் கட்டுரையையும் போட்டால் என்னத்தப் படிக்கிறது? ஆனாலும் உங்கள் சோதனைகளுக்கு ஓர் அளவிலலையா அய்யா? (சரிசரி.. மீண்டும் வந்து அந்தக்கண்ணைப் பார்க்காமல் எழுதுறேன்...என்ன?) எங்கிருந்து அய்யா புடிக்கிறீங்க படங்களை? ம்..தொழில்நுட்பத்துல ரொம்பத்தான் தேறிட்டீங்க..அசையும் படமெல்லாம் போடறீங்க!)

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      ‘சொற்சோதனை‘ என்றொரு இலக்கணக் குறிப்பு உள்ளது.
      காரிரத்ன கவிராயர் பெருகக் கையாளுவார்.
      நீங்கள் கூறிய, “ ஆனாலும் உங்க சோதனைகளுக்கு ஓர் அளவில்லையா “ எனப் பலமுறை அது கண்டு நான் கேட்டதுண்டு.
      பதிவிட்டுச் சோதித்து விட்டேனோ உங்களை?
      தொழில்நுட்பமெல்லாம் ஒன்றும் தெரியாதைய்யா!
      கூகுள் தேடலில் கிடைத்தது தான் !
      நன்றி!

      Delete
  8. ஐயா வணக்கம். இன்றைய கற்பிக்கும் முறைக்கும் அன்றைய கற்பிக்கும் முறைக்கும் உள்ள வித்யாசத்தை உரையாசிரியர்களின் போக்கு நன்கு உணர்த்துவதைத் தங்களின் பதிவு காட்டுகிறது. மாத்திரை என்பது வடமொழிச் சொல்லா? " வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக் குறிப்பே" என நன்னூல் கூறும் இடத்தில் மாத்திரம் என்றும் பொருள் வருகிறது. மாத்திரை என்பது சார்த்தி அளத்தல். ஒன்றுக்கு மாற்றாகக் கூறப்பட்ட ஒரு அளவு தானே. முத்து வீரியத்தின் இலக்கணத்தை உலகோர் நன்கு வாசிக்க வேண்டும். மாத்திரை பற்றிக் கூறும் போது அப்படியே "உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே" எனும் நூற்பாவையும் எதிர் பார்த்தேன். ஏனென்றால் நம் மாணவர்கள் அரை மாத்திரை கால் மாத்திரை என்பவற்றை எப்படிக் கணிப்பீர்கள் என்று கேட்பதுண்டு. அப்போது கண்ணிமைத்தல் என்பதை விட கைந்நொடித்தலில் இந்த நுட்பம் உணரப் படுகிறது. இப்போதைக்கெல்லாம் ஆசிரியரும் மாணவர்களும் இப்படி விவாதப் போக்கில் ஈடுபட்டால் கல்வி நிலை எப்படி இருக்கும்? பார்ப்போம். உங்களின் மெய்ப்பாடு பற்றிய அடுத்தப் பதிவை எதிர் நோக்கி... கொ.சுப. கோபிநாத், லந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.

    ReplyDelete
  9. புலவர்க்கு வணக்கம்!
    நீங்கள் படித்தமையும் விமர்சிக்கின்றமையும் கருத்திடுகின்றமையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி!
    தமிழ் படித்தவர், இலக்கணப் புலமை மிக்கோர் என் தளம் வருவதும் கருத்துரைப்பதும் நான் பெரிதும் மகிழ்கிறேன்.
    பின்னூட்டத்தில் பதிலடித்து அடித்து பதிவை விட நீண்டதால் தனிப்பதிவாகவே இட்டு விட்டேன்.
    அங்குக் காண்க!
    நன்றி!

    ReplyDelete
  10. பள்ளிக்கூட காலத்தில் இந்த மாத்திரைகளை எல்லாம் ஏனோ தானோ என்று படித்ததுண்டு. இப்பொழுது தங்களால் சற்றே விரிவாகவும், இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடும் படிக்க முடிகிறது.

    ReplyDelete
  11. அன்றைக்கு இந்த மாத்திரைகள் எனக்கு வேலை செய்யவில்லை ,இன்றைக்கு உங்களால் வேலை செய்கிறது !

    ReplyDelete

  12. வணக்கம்!

    இமைக்கும் விழியழகாய் ஈந்தவுரை, இன்பம்
    சமைக்கும் தமிழைத் தாித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete