Saturday 15 August 2015

கிளிப்பாம்பு


கொஞ்சு மனக்கிளிகள் கூவு மொருபெயராய்க்
     கோடை மழைப்பெருக்கின் கோப முகக்குறியாய்ப்
பிஞ்சு உயிர்துடிக்கப் பேணு பிறைமடியாய்ப்
     பித்த னெனைப்பிடித்துப் போனவுன் மாயமென்ன?
பஞ்ச உறைவிதைகள் பாழில் கிடந்துழலப்
     பார்வை நிலம்விதைத்துன் பாதம் நடைபயில
நெஞ்ச மலர்வனத்தில் நீயும் பொழிகையிலே
     நேர முறைந்து‘இன்னும் நேற்றி லிருப்பதென்ன?

சாயத் தோள்களில்லை! சாகும் கொடுமையினும்
     சாபத் தனிமையெனும் சர்ப்ப விடக்கடியின்
காயத் தழும்புகளில் கண்ணீர்க் கறைபடிந்த
     கனவுத் தலையணையில் காதல் முகம்புதைக்கும்!
போய்வா பெருநதியே! புற்று மணல்‘அணைநான்!
     பொங்கும் உனைநிறைக்கப் போதும் வலிமையில்லை!
ஆய்வாய்! உனைத்தடுக்கும் ஆற்றல் இலையெனினும்
     ஆழத் துனதுயிரின்  அடித்துக ளாயிருப்பேன்!

பட உதவி - நன்றி http://worth1000.s3.amazonaws.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

52 comments:

  1. வித்தியாசமான தலைப்பு! ஒரு மெல்லிய சோகமான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

      Delete
  2. சோகத்திலும் சுகமாக இருக்கிறது கவிதை. வாசிக்க வாசிக்க இதமாக இருக்கிறது அந்த அழுகு நடை என்ன சொல்ல அவ்வளவு சுவையும் பொருளும் நிறைந்து உள்ளது. கண்கள் அகல மறுக்காமல் மீண்டும் மீண்டும் முணுமுணுத்து மடிகிறது உங்கள் ஒவ்வோர் அடியிலும். கவிதைகளையும் கொஞ்சம் எழுதுங்கள் தொடர்ந்து ஆவல் மிகுகிறது காண மேலும்.
    நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வேதனை நிறைந்த வரிகள் சோகத்தையும் நிறைக்கிறது நெஞ்சில்.
      அம்மாடி தாங்கலை ....

      Delete
    2. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா.

      Delete
  3. வணக்கம்
    ஐயா
    வித்தியாசமான படத்துடன் கவிதை அசத்தல் நன்று.த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்கின்றமைக்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.

      Delete
  4. இந்த படத்தை எங்கே பிடித்தீர்கள்!!! அய்யோ பாவம் பாடல்தலைவி:((

    அண்ணா!!!! மரபில் இத்தனை உருக்கமான எனக்கும் புரியும் வகையில் காதல் கவிதை புரியும் உங்கள் திறனே திறன்!!! என்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறீர்கள்!!!

    ** போய்வா பெருநதியே! புற்று மணல்‘அணைநான்!
    பொங்கும் உனைநிறைக்கப் போதும் வலிமையில்லை!
    ஆய்வாய்! உனைத்தடுக்கும் ஆற்றல் இலையெனினும்
    ஆழத் துனதுயிரின் அடித்துக ளாயிருப்பேன்!**

    வரிகளில் தெறிக்கும் துளிகளின் சிலிர்ப்பில் நினைவில் வந்து மோதி கரைகிறது ஆடிப்பெருக்கு காவிரி பெருவெள்ளமென மனம்கொண்டபுரத்து வீதிகளும்.......

    எப்போதும் திக்கற்ற காட்டில் என் கிளி
    பறந்து கொண்டேயிருக்கின்றது….
    மாமிசம் உண்டு பழக்கப்பட்ட
    என் கிளி...
    பசித்த பொழுது
    பறக்கின்றது
    இதயக்கனி சுவைத்து
    என்கிற எப்போதோ படித்த நண்பரின் ஒருவரின் (முகநூல் என நினைவு) படிமக்கவிதை நினைவுபடுத்துகிறது இந்த மரபுக்கவிதை:)
    

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி சகோ..!

      உங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது.

      நன்றி.

      Delete
  5. மனதில் பதிந்த கவிதை. நன்றி.
    வித்தியாசமான புகைப்படம்.
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. அன்புள்ள அய்யா,

                மயக்கிவிட்டாய்!


    கொஞ்சும் கிளிமொழியும் கூவும் குயிலொலியும்

       கோயில் சிலையெனவே கோல எழிலழகாய்

    நெஞ்சில் இடம்பிடிக்க நேச மனக்குறிப்பை

       நேயர் விருப்பமென நேற்றே இடம்பிடித்தாய்!

    பஞ்சும் நெருப்பினையும் பற்றி எரியவைத்தாய்

       பாழும் மனத்தினையும் பாடாய்ப் படுத்திவிட்டாய்

    மஞ்சம் இடம்கொடுக்க முள்ளில் வலிபுகுத்தி

       மகுடி ஒலிகேட்ட பாம்பாய் மயக்கிவிட்டாய்!



    ‘கிளிப்பாம்பு’ படம் பிடித்தது... அருமை!
    பாடல் காதல் வலியின் வலிமை...!

    நன்றி.
    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      மரபிலும் கலக்கத்தொடங்கிவிட்டீர்கள்.

      வாழ்த்துகள்.

      தொடருங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  7. வணக்கம் ஐயா!

    விஞ்சும் துயர்வடிய வேதனை பீறிட
    நெஞ்சைத் துவைத்ததே நின்பாக்கள்! - கொஞ்சும்
    கிளியும் கிளர்ந்திடும் கோலம்! சிலையும்
    உளிசிதைக்கக் கண்ணீர் உகும்!

    மனதினைக் குடைந்திட்ட பாக்கள் ஐயா!

    தங்களின் வித்துவத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      உகுமென் மொழிப்பேழை உள்ளடக்கும் மௌனம்
      பகுமென் துயரெல்லாம் பார்த்து - நகுமனத்தில்
      நல்ல மனமுண்டு நற்புலமைப் பாவலர்நீர்
      சொல்லுதமிழ் எல்லாம் சுகம்.

      தொடர்வதற்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  8. // போய்வா பெருநதியே! புற்று மணல்‘அணைநான்!//

    மணல் அணையே வலிமையில்லாதது. அதுவும் புற்று மணல் அணை என்றால்?
    நினைத்துப் பார்க்கமுடியாத கற்பனையை இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete

  9. நெஞ்சக் கூடடையாக் நேயக் காத்திருப்பு
    நீளும் மௌனத்தில் நுழைய தினந்தவித்து
    அஞ்சிச் சாகுமந்த அன்பின் பரிதவிப்பை
    அணைக்க மனமில்லா காதல் கூப்பாடு
    மிஞ்சும் வலியதனை மென்று விழுங்குமந்த
    வெற்றிக் களிப்பினிலே வெடித்துச் சிதறுமிந்த
    பிஞ்சு மனத்தவிப்பின் பிதற்றல் கவிதைகளோ?
    பெருகும் வேதனையை ஆற்றும் வழியிதுவோ?

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கவிதை அருமை கவிஞரே!

      வருகைக்கும் கவிதைப்பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. உங்கள் பதிவை எழுதப் படிக்க மட்டுமே தெரிந்த என் போன்றோரும் வாசிக்கிறோம் . பதவுரை பொழிப்புரை தேடினேன் கிடைக்கவில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ஐயா.

      புரியும்படி எழுத இனி முயல்கிறேன்.

      நன்றி.

      Delete
  11. வணக்கம் அய்யா,
    ஜி,எம்,பி அய்யா தேடியதைத் தாருங்கள்,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      ஜி. எம். பி ஐயா கேட்டதில் நியாயம் இருக்கிறது.

      ஆனால் ஒரு தமிழ்ப்பேராசிரியர் இப்படிக் கேட்பது நியாயமில்லை.

      நன்றி

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. வணக்கம் பேராசிரியரே!


      இதன் பொருளை நிச்சயம் உங்களின் வாசிப்பில் அறிவீர்கள் என்ற நம்பிக்கையில்விளையாட்டாகத்தான் இப்படிக் குறிப்பிட்டேன்.
      .

      தங்களின் மனதினைப் புண்படுத்தி இருப்பேனாகில் மிக வருந்துகிறேன்.

      நன்றி.

      Delete
    4. அய்யா இது என்ன??????
      அய்யோ நான் எதுவும் வருத்தப்பட்டு இங்கு அழிக்கவில்லை, விளக்கம் வேண்டாம் என்று தான், எனக்கு தங்களைப் பற்றி தெரியாதா? வருத்தம் எல்லாம் வேண்டாம். இப்போ தான் பார்த்தேன் பல வேலைகள் காரணமாக என்னால் வரஇயலாமல் போனது.
      நான் தான் மன்னிப்பு கேட்டவேண்டியவள்.
      நன்றி.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. பித்த னெனைப்பிடித்துப் போனவுன் மாயமென்ன?

      ,,,,, இதுபோன்ற வரிகளைக் காண கவிஞர்கள் காத்திருக்கிறார்கள்,, (நானிலப்பா)
      வாருங்கள் வார்த்தைக் கொண்டு ,,,,,

      ஒரு கவிஞன் தன் ,,,

      நன்றிகள்.

      Delete
  12. சாயத் தோள்களில்லை! சாகும் கொடுமையினும்
    சாபத் தனிமையெனும் சர்ப்ப விடக்கடியின்
    காயத் தழும்புகளில் கண்ணீர்க் கறைபடிந்த
    கனவுத் தலையணையில் காதல் முகம்புதைக்கும்! மனதை நெகிழ வைக்கும் வரிகள்! பாராட்டுக்கள்! தலைப்புக்கேற்ற பொருத்தமான படம்!

    ReplyDelete
  13. # நன்றி http://worth1000.s3.amazonaws.com/#
    உண்மையில் ஆயிரம் பெறும்:)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையை விடவா? ;)

      நன்றி பகவானே.

      Delete
  14. //பார்வை நிலம்விதைத்துன் பாதம் நடைபயில// - அடடா!

    //கண்ணீர்க் கறைபடிந்த
    கனவுத் தலையணையில் காதல் முகம்புதைக்கும்!// - அபாரம்!

    நீங்கள் திரைப்பாடலாசிரியராய்ப் போனால் பல பேர் வேலையிழக்க வேண்டி வரும்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      அதற்குமுன் முதலில் நான் வேலை இழக்க வேண்டிவரும் :)

      தங்களின் நீண்ட இடைவெளிக்குப் பின்னான வருகை மகிழ்வு.

      நன்றி.

      Delete
  15. ஆஹா! சோகமானது என்றாலும் அழகான வரிகள்....மனதைக் கட்டிப் போட்டன...மீண்டும் மீண்டும் வாசித்தோம்...புரிந்துகொள்ளவும், ரசித்ததாலும்.....உங்கள் தமிழைச் சொல்லவும் வேண்டுமா சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பினுக்கு நன்றி சகோ.

      Delete
  16. படம் அருமை! கிராஃபிக்சும் கற்றுக் கொண்டுவிட்டீர்களே....

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் நமக்கெங்கே தெரியும்?

      இணையத்தில் இருந்து எடுத்ததுதான்.

      நன்றி.

      Delete
  17. தங்களின் அழைப்பிற்கு நன்றி ஐயா.

    விழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  18. ஐயா, வணக்கம்.
    வாடும் இம்மனதை வந்து வருடிவிடும்
    வசந்த காலத்தின் வீசும் இளந்தென்றல்!
    கூடும் சொற்சுவையில் கொள்ளை கொண்டுமனம்
    கோடி இன்பங்கள் பெற்றுக் கொண்டாடும்!
    பாடும் பைங்கிளிகள் நாளும் சிறகடித்துப்
    பறக்கும்! விழிப்புற்றுத் துன்பம் தவிர்த்தோடும்!
    ஈடும் இணையுமற்ற கவிதை “கிளிப்பாம்பு”
    இன்பத் தமிழ்மொழிக்கு இனிமை சேர்த்தோங்கும்!
    உங்கள் சொல் அழகில் சொக்கி விட்டேன் ஐயா.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. வணக்கம் பாவலரே !

    பூவின் மதுவடியப் பொய்கை மணம்பரப்பும்
    ...........பொழுதைப் புனைந்துகவி பூக்கும் பாவலனே
    நாவின் சுவைகூட்டும் நல்ல வரிகளுக்குள்
    ,,,,,,,,,, நேசக் குயில்சுமந்த நெஞ்சக் கருவறையால்
    சாவின் விளிம்புவரை சாகா(து) இனித்திருக்கும்
    ............சங்கப் பெருநதியின் சாயல் வருடியொரு
    நோவின் வலிமறக்க நூற்பா கடைந்தளித்தீர்
    ...........நோக்கும் விழியெல்லாம் நொய்ந்து வலிக்குதையா !

    அருமையான கவிதை பலமுறை படித்தேன் இன்னும் இனிக்கிறது இதயத்தில் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    காலம் தாழ்த்திய கருத்துரைக்கு வருந்துகிறேன் மன்னியுங்கள் பாவலரே

    ReplyDelete
  21. தலைப்பாகத்தில் கிளி உருவம் இருந்ததால் கிளிப்பாம்பு என்று வந்ததோ....???? பச்சைபாம்பு ம் பறக்கும் என்பார்கள்...

    ReplyDelete
  22. தலைப்பாகத்தில் கிளி உருவம் இருந்ததால் கிளிப்பாம்பு என்று வந்ததோ....???? பச்சைபாம்பு ம் பறக்கும் என்பார்கள்...

    ReplyDelete