Wednesday 13 May 2015

உலகாயதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்.


கடவுள் இருக்கிறான் என்றொரு கூச்சல் வலுப்பெற்று, மதத்தின்பால் மக்களின் ஒரு கூட்டம் ஈர்க்கப்பட்டது எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ ஏறக்குறைய அதே அளவிற்குக் கடவுள் இல்லை என்ற கொள்கையுடன் அதை எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல், மிகுந்த எதிர்ப்பிற்கு மத்தியில் முழங்கிய கூட்டமும் பழங்காலத்தில் நம் மத்தியில் இருந்தது.



ஒருபுறம், ‘இது என் தெய்வம், அதன் வல்லமையைக் காண்!’ என்றெல்லாம் பக்தியின் பரவசத்தில் ஒரு தரப்பு, மக்களை வசீகரித்த போது,

இன்னொரு புறம் எதையும் கேள்வி கேட்டு,  ‘நீ சொல்வதை அப்படியே நான் ஏன் ஏற்கவேண்டும்?’ என்ற அறிவிற்கே உரிய ஆண்மையோடு மிகச்சிலர் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து அவர்கள் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கினர்.

அதுவே உலகாயதம்.

உலகாயதத்தின் குரல் – கடவுளைக் கொன்றவனின் குரல்.

கடவுள் இருந்தால்தானே கொல்ல முடியும் ?

அப்படியானால் கடவுள் இருக்கிறார் என்று உலகாயதர் ஒப்புக்கொள்கிறார்களா என்று கேட்டால், மதவாதம் பேசிச் சமயிகள் படைத்த கடவுளைத் தம் கேள்விக் கணைகளால் கொன்றவர்கள் அவர்கள்.

லோக  அயதாம் என்பதன் பொருள் உலகே நிலை என்பது.

நாம் காணும் இந்தக் காட்சியே முதன்மை. நமது இந்தப் புலன்களால் அறியும் அறிவே அறிவு என்று முழங்கியவர்கள் இவர்கள்.

தம் கொள்கைகளை விளக்கும் தனித்த நூலொன்றை இவர்கள் எழுதவில்லையே தவிர, ( எழுதினாலும் அது ஏற்கப்பட்டிருக்காது என்பது வேறு) அவர்கள் கொள்கைகள் ஆழமானவை என்பதையும் அவற்றை மறுக்க அவைதிக வைதிக சமயங்கள் எந்த அளவுக்குப் போராடி இருக்கின்றன என்பதையும் அந்தச் சமயச் சார்பான நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.

தமிழில் காப்பியங்களும் சைவசித்தாந்த சாத்திரங்களும் ஆங்காங்கு மல்லுக்கட்டிக்கொண்டு இவர்கள் கொள்கைகள் எப்படி எல்லாம் குறையுடையவை என்று காட்டும் இடங்களில் இருந்துதான் நாம் உலகாயதரின் கொள்கைகளை வடிகட்டிப் பெற முடிகிறது.

நமக்குக் கிடைக்கின்ற காப்பியங்கள் பெரிதும், சமயச்சார்பானவை. அவை ஒரு சமயக் கருத்தினைக் கதைகளின் ஊடாகச் சொல்லவோ அல்லது இன்னொரு சமயக் கருத்தினை மறுக்கவோ எழுந்தவை.

ஆனால் இந்தச் சமயப்பெருமக்கள் மௌனமாய் இன்னொன்றையும் செய்தனர். அது அன்றளவும் இருந்த பொதுவான இலக்கியங்களைத் தொகுத்து, தங்கள் கடவுளின் நாமகரணத்தை அதற்குச் சூட்டித் தம் சமயம் சார்ந்த நூல் போல ஆக்கிவிடுவது.

சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது,  அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களின் முன்னால் ஒட்டப்பட்ட கடவுள் வாழ்த்து முத்திரைகள் இப்படிப் பொதுவான இலக்கியங்களைத் தம் சமயவழிப் படுத்த நினைந்ததன் முயற்சியாகத்தான் படுகிறது. திருக்குறள் இவர்களிடம் சிக்கிப் பட்ட பாடு சொல்லிமாளாது.

பண்டைய காலத்தில் எந்த விதமான ஆதரவும் தங்களுக்கு இல்லாத சூழலில் மக்கள் முன் சமயாவாதிகளிடம் அவர்கள் முன் வைத்த கேள்விகள் என்ன அவர்கள் எப்படிப் பட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருந்தனர் என்பதைப் பற்றியதே இந்தப் பதிவு.

இதன் தொடர்ச்சியாக, பௌத்தம், சமணம் எனப் பண்டைய நம் மரபில் இருந்து இன்று பெரிதும் வழக்கொழிந்து போன சமயக் கொள்கைகள் குறித்தும் சற்றுப் பகிர்ந்திட நினைக்கிறேன். தமிழில், பாடப்புத்தகம் தாண்டி இவற்றின் கொள்கைகள் பற்றி அறிந்திடுதலில் நிறையச் சிரமம் இருக்கிறது. (உலகாயதம் குறித்துப் பாடப்புத்தகங்களில் இருக்கிறதா எனத் தெரியவில்லை)

சிந்தாமணியைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட உ.வே.சாமிநாத ஐயர், அதில் கூறப்பட்ட சமணக் கருத்துகள் புரியாமல் எந்த அளவிற்குத் திண்டாடினார் என்பதை  அவரது என் சரித்திரத்தில் கூறியிருப்பார்.

தமிழ் இலக்கிய, இலக்கண வாசிப்பில் அக்காலத்தில் நிலவிய வைதிக அவைதிக சமய மறுப்புக் கொள்கைகளின் தாக்கம் எவ்வாறு இருந்திருக்கிறது என்பதை அவதானிக்க, அவை பற்றிய புரிதல் உதவும் என்கிற நோக்கில் இப்பதிவுகளை அமைக்கிறேன்.

அன்றி,

இங்குச் சொல்லப்படும் எந்தக் கருத்தும் எனது கருத்தல்ல. இக்கருத்தினோடு எனக்குள்ள உடன்பாடு மற்றும் உடன்பாடின்மை என்பது என்னோடு இருக்கிறதே அன்றி அதை ஒரு சார்பாய் இப்பதிவுகளில் எங்கும் வெளிப்படுத்திடவில்லை.

இந்தப் பதிவை எழுதி நீண்டநாள் ஆன பின்பும், இத்தயக்கத்தினால்தான், இதை வெளியிடத் தாமதித்தேன்.

சரி இனி உலகாயதரின் கொள்கைகளுக்கு வருவோம்.

அழியாமல் என்றும் இவ்வுலகில் இருப்பவை நிலம் , நீர், நெருப்பு, காற்று என்பவையாகும். இதன் இயல்புகள் முறையே, திண்மை, தண்மை, வெம்மை, சலனம் என்பன. இவை குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட சூழலில் சேர்வதனாலேயே உலகில் நாம் காணும் எல்லாப் பொருட்களும் தோன்றுகின்றன. உயிர்களை எடுத்துக்கொண்டால் இந்த நான்கின் கூட்டத்தில் பிறந்த உயிரின் வளர்ச்சி  நிலையில் ஐம்புலன்களும், அவற்றின் உணர்ச்சியும், அறிவும் தோன்றுகின்றன.

பூதங்களின் சேர்க்கையால் தோன்றுபவை உடலும் உயிரும் என்பதால் அவற்றிற்கு அழிவும் உண்டு. இந்தச் சேர்க்கை குலையும்போது அவை அழிந்து போக ஆரம்பிக்கின்றன. பின் அத் தோற்றத்திற்கு முன்பு இருந்த நிலையை அடைகின்றன. ( பஞ்ச பூதங்கள் என்று நாம் இன்று சொல்லித் திரிவதில் ஆகாயத்தை உலகாயதர் ஏற்கவில்லை. இன்றைய அறிவியலும் ஆகாயம் என்ற ஒன்று இல்லை என்று சொல்வதைப் பார்க்க வேண்டும்)

உயிர் முதலில் தோன்றுகிறதா உடல் முதலில் தோன்றுகிறதா என்ற கேள்விக்கு அவர்களின் பதில் உடல்முதலில் தோன்றுகிறது என்பதுதான். உடல் தோன்றிய பின்னர்தான் உயிர் தோன்றுகிறது என்பதே அவர் கருத்து.

இந்த நான்கு பூதங்களையும் பற்றி அவர்கள் சில கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.

நாம் காண்பனவற்றில்,

பூதங்களே நிலையானவை.

அவை யாராலும் படைக்கப்பட்டவை அல்ல.

யாதொன்றின் துணையில்லாமல் ஒன்றோடு ஒன்று கலத்தல் அந்த பூதங்களின் அடிப்படை இயல்பு ஆகும்.

அந்தக் கலத்தலின் தன்மை, வேறுபாடு இவற்றின் அடிப்படையிலேயே உலகில் பொருட்களும் அவற்றின் இயல்புகளும் உண்டாகின்றன.

‘அது எப்படி வெவ்வேறு தன்மைகள் சேர்ந்து முற்றிலும் வேறான ஒன்றாக மாறமுடியும்?’ என்று கேட்பவர்களுக்கு உலகாயுதர் காட்டும் உதாரணம், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும்.

வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் வெவ்வேறு நிறத்தில் இருந்தாலும் அவை கூடும் போது சிவப்பு நிறம் உண்டாவது போல வெவ்வேறு தன்மையை உடைய இந்தப் பூதங்களின் சேர்க்கையில், புதிய பண்புகளை உடைய சடமும் உயிரும் இதுபோற் பிறவும் பிறக்கின்றன என்று பதிலளிக்கிறார்கள் அவர்கள்.

இதற்குமுன் அளவைகள் பற்றிய பதிவைப் பார்க்காதிருந்தால், அதைப் பார்த்துவிட்டுத் தொடர்வது இனித்தொடர்வதன் புரிதலுக்கு உதவியாக இருக்கும்.

அவர்கள் வெறும் பிரதியட்சப் பிரமாணத்தை மட்டுமே கொண்டு, ஏனையவற்றை மறுக்கின்றனர் என்று அவர்களது கொள்கைகளைக் குறுக்கிக் காட்ட முற்படும் சமயவாதிகள், அவர்கள் காரண காரியங்களுங்கு உட்பட்ட பொதுவிதிகளை ஏற்றுக் கொண்டதை வசதியாக மறைப்பர்.

உங்கள் அனுமானங்களை எல்லாம் ஏற்க முடியாது  என இறை கொள்கையுடையாரிடத்து உலோகாயுதர் கூறுவது, காட்சி அளவைக்கு உட்படாத நம்பிக்கை மட்டுமே சார்ந்த அனுமானங்களையும், வேதம், சுருதி பிரமாணங்கள் முதலியவைகளுமே.

நாம் காணும் காட்சிகள் ஆறுவிதமானவை.

1)   ஐயக்காட்சி – இதுவா அதுவா என்று தீர்மானமற்ற அறிதல். பாம்பா கயிறா அங்கு கிடப்பது என்று எண்ணித் துணியாத நிலை.

2)   வாயிற்காட்சி – புலன்களின் வாயிலாக நாம் பெறும் அறிவு. உதாரணமாகக் கண் என்னும் புலன் வாயிலாக நாம் காணும் காட்சிகளைக் கொள்ளலாம்.

3)   விகற்பக்காட்சி- புலன் வாயிலாக நாம் காண்பனவற்றின் இனம், தன்மை போன்றவற்றை அறிந்து கொள்ளுதல். தீ என்பதைப் பார்க்கும் போது அதன் இயல்பு சுடுதல் என்று அறிவது  இவ்வகைக் காட்சியாகும்.

4)   அந்வயக்காட்சி - புலன்களை வாயிலாகக் கொண்டு பகுப்பது. உதாரணமாக, கண்ணால் காணும் பொருட்களை இது முக்காலி , இது நாற்காலி என வேறுபடுத்தி அறிவது

5)   வெதிரேகக்காட்சி - புலன்கள் வாயிலாகக் கொண்டவற்றைப் பகுத்து, அவற்றிலிருந்து புதிய உண்மைகளை அனுமானித்தல். (நாம் இன்று மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளுக்கெல்லாம் இதுவே அடிப்படையாவது.)

6)   திரிவுக் காட்சி – ஒன்றை இன்னொன்றாய் நினைத்து மயங்குவது.
இருளில் மரத்தை மனிதனாய்  நினைப்பதைப் போன்றது.

இவை அனைத்தும்  வாயிற்காட்சியை அடிப்படையாகக் கொண்டு அனுமானிப்பதற்கு உதவும் பகுப்புகளாகும்.

கடவுளை வலியுறுத்துவோர், நிர்விகற்பக் காட்சி என்று ஒன்றை வலியுறுத்துவார்கள். நிர்விகற்பக் காட்சி என்பது, ஒன்றின் குற்றத்தைக் காணாமல் குணத்தை மட்டுமே காண்பது.

இதை வைத்துக் கொண்டு எப்படி உண்மையைக் காண முடியும் என்று வாதிடும் உலகாயதர், குற்றத்தையும் குணத்தையும் காணும் விகற்பக் காட்சியை ஏற்றுக் கொள்கின்றனர். இதுதான் உலக இயல்பினைக் கண்டு, கடவுளைக் குறித்த கேள்விகளை எழுப்ப அவர்களைத் தூண்டுவதாய் அமைவது.

சமயிகள் கூறும் கன்மம், உயிர், இறைவன் என்பதை உலோகாயதர் ஏற்கவில்லை.

1)   ஒருவன் செய்த வினை அவன் இறந்தபின்னும் அவனைத் தொடரும் என்பது அபத்தம்.

2)   உயிர் என்பது உடலுக்குரிய ஒரு பண்பு. அது அழியாது என்பது பொய்.
உடலின் தொடர்பால் தோன்றும் உயிர் உடல் அழிந்ததும் தானும் அழியும் இயல்பினை உடையது.

3)   உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு, விளக்கிற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பினைப் போன்றது. விளக்கு இல்லாவிட்டால் ஒளி இல்லை.

4)   நன்மை தீமை என்பன ஊழ்வினையால் விளைவன அல்ல. அவை தொடரவும் தொடரா. அவை இயற்கையின் விளைவுகளே ஆகும்.

பூதங்கள் நிரந்தரமானவை
அவை தாமாகவே இயங்கும் இயல்பினை உடையவை.

எனவே அவற்றை இயக்கும் இறைவன் என்றொருவன் இல்லை.

அறிவென்பது பூதங்களின் சேர்க்கை மற்றும் நீக்கம் பற்றி அறிவதே

இறைவன் உருவமற்று அருவே உருவானவனாய் ( உருவம் இல்லாதவனாய் ) இருக்கிறான் என்பது சமயிகளின் கட்டுக்கதை.


இறைவனுக்கு  உரு இருக்கிறது என்பதையும் உலகாயதர் ஏற்பதில்லை.

அப்படி இறைவனுக்கு உரு இருந்தால் அதுவும் பூதங்களின் சேர்க்கையால் உருவானதே ஆகும். அப்படி உருவான கூட்டம் நிச்சயம் அழிவிற்குரியது. எனவே உருவின் தோற்றம் எப்படியோ அப்படியே அதன் அழிவும் உறுதிப்படுகிறது.

இறைவன் உருவும் அருவுமாய் இருக்கிறான் என்றால், இருளும் ஒளியும் ஒரே இடத்தில் எப்படி இருக்க முடியாதோ அதுபோல இரண்டு முரண்பட்ட பண்புகள் ஓரிடத்தில் இருக்கமுடியாது எனக் கூறி அதை மறுப்பர் உலகாயதர்.

இதை எல்லாம் கேட்டுச் சும்மாவா இருப்பார்கள் சமயிகள்..?

அவர்கள் கேட்கிறார்கள் “வினை…. வினைப்பயன் இல்லை என்றால், ஏன் ஒருவன் ஏழையாகப் பிறக்கிறான்…? இன்னொருவன் பணக்காரனாய் இருக்கிறான்..? ஒருவன் உடற்குறைபாட்டுடன் பிறக்கிறான். இன்னொருவன் ஆரோக்கியத்துடன் பிறக்கிறான்..?

இவ்வேறுபாட்டுகளுக்கு முன்வினையன்றிக் காரணம் என்ன….?

உலகாயதன் தன் கைவிரல் ஐந்தினையும் விரித்துச் சிரித்துக் கொண்டே சொல்கிறான்,

“ஆம் இந்த ஐந்துவிரல்களுள் ஒவ்வொன்றும், சென்ற பிறவியில் வெவ்வேறு கன்மங்களைச் செய்திருக்கின்றன.

அதனால்தான் ஒவ்வொன்றும் வேறுபாட்டுடன் அமைந்திருக்கின்றன..!”

இதை எப்படிச் சமயிகள் மறுக்கின்றனர்…?

இதுமட்டுமன்று, இன்னும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பிச் சமயவாதிகளைத் திகைக்கச் செய்ததொரு அறிவுப் புலம் நம்மிடையே இருந்திருக்கிறது என்பதையும் சமய நூல்கள் சொல்லும் ஒரு சில செய்திகள் வாயிலாகத்தான் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் இதன் உச்சகட்ட சோகம்.

சரி,

சமணம் பௌத்தம் ஆகிவற்றின் கொள்கைகள் என்ன..?

தொடர்வோம்.


( இப்பதிவில், சமயிகள், சமயவாதிகள் என்னும் சொற்கள் உலகாயதர் அல்லாதாரைக் குறிக்கப் பயன்படுத்தப் படடவை. )

பட உதவி.- நன்றி. https://encrypted-tbn0.gstatic.com/

51 comments:

  1. அருமையான பதிவு நண்பரே
    ஒரு முறைக்கு இரு முறையாய் ரசித்துப் படித்தேன்
    தொடருங்கள் நண்பரே
    அடுத்தப் பதிவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்
    நன்றி
    தம 2

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற்கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி கரந்தையாரே!

      Delete
  2. இறைவன் இல்லை என அறிவால்..மிக அதிக அறிவால் வாதிடுவோரின் மனதின் ஆழத்தில் இறைநம்பிக்கை மறைந்தே ஆனால்...இருக்கிறது என நான் நினைக்கிறேன். எனக்கு தோன்றிய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன்.


    நீங்கள் மிக விரிவாய்,தெளிவாய்,அழகாய்,ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்
    சகோ பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    தம 2

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்தை இங்குப் பதிவு செய்தமைக்கு நன்றி சகோ.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. தொடர்கிறேன்............

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா,

    ‘உலோகாயுதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்’- நன்றாக ஒலிக்கிறது. நான்கு பூதங்களையும் பற்றி அரிய கருத்துகள்.
    பூதங்களே நிலையானவை. அவை யாராலும் படைக்கப்பட்டவை அல்ல என்ற
    கருத்து நியாயமாகவும் உண்மையாகவும் கருத இடம் இருக்கிறது.

    இறைவன் என்பதை உலோகாயுதர் ஏற்கவில்லை என்பதற்கு அவர்களின் நான்கு கருத்துகள் ‘நச்’சென்று நெத்தியடியாக உள்ளன.

    வினை விதைத்தவன் வினையறுப்பான் - யார் விதைத்தது? ஒருவனின் வினை இறந்தபின்னும் தொடரும் என்பது சந்தேகமில்லாமல் அபத்தம்தான். விலங்குகள் இறந்தால் எப்படியோ அப்படியே மனிதன் இறப்பதும்!

    உயிர் உடல் அழிந்ததும் தானும் அழியும் ... நாய்க்கும் நரிக்கும் போலத்தான்!

    உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு, முறையே விளக்கிற்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பு போல என்பது சரியே!

    நன்மை தீமை என்பன ஊழ்வினையால் விளைவன அல்ல. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது.

    சாமியின் பெயரைச் சொல்லி... ஆசாமிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    கடவுள் மனிதைப் படைத்தான் என்று சொல்லிக் கொண்டு இவனே கடவுளைப் படைத்துவிட்டு ... கல்லையும்...மண்ணையும்...பொன்னையும்...அதில் சிலைவடித்து...அந்த உருவத்திற்கு சக்தியிருப்பதாக பறைசாற்றிக் கொண்டு மக்களை இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்களோ நாட்டிலே...!

    சாமியார்கள்...? நித்திய கண்டம் பூர்ண ஆயுசு... மாமியார்கள்... பூசாரிகள்... ஆச்சாரிகள். ... கபட வேடதாரிகளாய் நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்...!

    சமயவாதிகளைத் திகைக்கச் செய்ததொரு அறிவுப் புலம் நம்மிடையே இருந்திருக்கிறது என்பதையும் சமய நூல்கள் சொல்லுவதை அனைவரும் அறியத் தாருங்கள்...! அறிவுச்சுடர் ஏற்றுங்கள்...!

    நன்றி.
    த.ம. 2.





    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.
      தங்களின் கொள்கைகளை நான் அறிவேன்.
      இது பண்டைய தமிழ் நூல் வாசிப்பிற்குச் சற்றுதவும் என்ற நோக்கில்தான் எழுதிப் போகிறேன்.
      சமணமும் பௌத்தமும் கூறும் கொள்கைகள் படிக்கச் சுவையானது.

      தாங்கள் தொடர்கின்மைக்கு நன்றி.

      Delete
  5. உங்களிடமிருந்து உலகாயதம் (MATERIALISM) பற்றிய. ஒரு புதிய தொடர். நிறைய சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    // இங்குச் சொல்லப்படும் எந்தக் கருத்தும் எனது கருத்தல்ல. இக்கருத்தினோடு எனக்குள்ள உடன்பாடு மற்றும் உடன்பாடின்மை என்பது என்னோடு இருக்கிறதே அன்றி அதை ஒரு சார்பாய் இப்பதிவுகளில் எங்கும் வெளிப்படுத்திடவில்லை.//

    என்று தாங்கள் இப்படி சுற்றி வளைத்துச் சொல்வதை விட வெளிப்படையாகவே நான் ஒரு ஆத்திகன் என்றோ அல்லது நாத்திகன் என்றோ வெளிப்படுத்தி, நான் உலகாயதம் (MATERIALISM) பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. இது ஒன்றும் தவறில்லை.

    எனவே வாதப் பிரதி வாதங்கள் செய்ய உங்கள் தளத்திற்கு நிறைய பேர் வருவார்கள். அவர்களுள் விதண்டாவாதிகளும் உண்டு. (இது எனது அனுபவம். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்) நீங்கள் அவர்களுக்கு கட்டுரையாளர் என்ற முறையில் உலகாயதத்திற்கு ஆதரவாக மறுமொழிகள் கொடுப்பீர்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள்! தொடருங்கள். (த.ம.7)

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      உலகாயுதம் பற்றிய தொடர் அன்று இது. அது பற்றிய சிறிய அறிமுகம்.

      அடுத்து பௌத்தம் பற்றியும் சமணம் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

      பொதுவாக என்பதிவில் இருந்து நீங்கள் மேற்கோள்காட்டிய பகுதியைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
      இது உலோகாயுதரின் கோட்பாடுகள் பற்றிய சிறு அறிமுகம் என்ற நிலையில் இருந்து காணவேண்டிய பதிவே ஒழிய அதைப் பதிவரின் கோட்பாடாகக் காணுதலும் விவாதித்தலும் தவிர்க்கவே இப்படி எழுதிப் போனேன்.

      அடுத்துச் சமணம் பற்றி எழுதும் போதும் பௌத்தம் பற்றி எழுதும் போதும் அதை என் கொள்கையாகப் பாவிக்கக் கூடாது என்பேன்.

      //தாங்கள் இப்படி சுற்றி வளைத்துச் சொல்வதை விட வெளிப்படையாகவே நான் ஒரு ஆத்திகன் என்றோ அல்லது நாத்திகன் என்றோ வெளிப்படுத்தி, நான் உலகாயதம் (MATERIALISM) பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. இது ஒன்றும் தவறில்லை. //

      என்னைக் குறித்த அடையாளங்களையே நான் வெளிப்படுத்தத் தயங்குகின்ற போது சமயம் பற்றிய எனது தனிப்பட்ட கொள்கைகளோ, அல்லது அரசியலோ பதிவில் எங்கும் வரவேண்டாம் என்றே விரும்புகிறேன். அது என் நிலைப்பாடும் கூட.


      அடுத்ததாய்,

      இந்த வாதப் பிரதிவாதங்கள்...............

      நிச்சயமாய் அதை நான் செய்யப்போவதில்லை.

      ஒருவேளை அடுத்து அவைதிகம் பற்றிய இடுகைகளில் அவர்கள் அக்கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தால் அதைக் குறிப்பிடுவேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  6. உலோகாயிதம் தான் மார்க்சிசத்தின் அடிப்படையாய் அமைந்தது என்பதையும் சுட்டிக் காட்டலாமே :)

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றி யெல்லாம் சேர்த்திருந்தேன் பகவானே.........

      நீண்டு போய், தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் அதுவும் ஒன்று.

      இன்னும் பெரிதாய் விரிந்துபோனது அந்தப் பகுதி....!

      உங்களிடம் மறைக்க முடியுமா))

      நன்றி வருகைக்கும் வாக்கிற்கும்.

      Delete
  7. பல்லாண்டுகளாக ஒலிக்கும் குரல் என்னுடையது என்று என் பதிவொன்றின் பின்னூட்டத்தில் எழுதி இருந்தது இது ப்ற்றியதுதானா. உங்கள் மறு மொழி கண்டபின் என் கருத்துக்களைக் கூறுவேன் வணக்கம் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      நீங்கள் பதிவிற் கூறியவற்றில் பல கருத்துகளைக் கண்ட போது உலோகாயுதத்தின் கருத்துகள் நினைவில் வந்தன.
      அதையே அங்குச் சொல்லிப் போனேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

      Delete
  8. //பண்டைய நம் மரபில் இருந்து இன்று பெரிதும் வழக்கொழிந்து போன சமயக் கொள்கைகள் குறித்தும் சற்றுப் பகிர்ந்திட நினைக்கிறேன்.//- - நல்லதோர் முயற்சி அய்யா.
    //சிந்தாமணியைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட உ.வே.சாமிநாத ஐயர், அதில் கூறப்பட்ட சமணக் கருத்துகள் புரியாமல் எந்த அளவிற்குத் திண்டாடினார் என்பதை அவரது “என் சரித்திரத்தில்” கூறியிருப்பார்//
    ஆமாம் அய்யா. ‘பவிய சீவன்’ என்று சமயக் கற்றறிவு உடைய குடும்பத் தலைவியிடம் இருந்து அவர் பட்டம் பெற்றதையும் இங்கு நினைவில் கொள்கிறேன். மெய்ப்பொருள் காண்பது நன்று. தொடருங்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா,

      உண்மைதான் அந்தப் பவிய சீவன்...எனக்கு நினைவு வரவில்லை. வீட்டின் உள் மறைந்திருந்து ஐயரின் வினாக்களுக்கு விடையிறுத்த அந்தக் குரல் எனக்கு நானே கேட்டாற்போல பசுமையாய் நினைவிருக்கிறது.

      நிறையப் படிக்கிறீர்கள்....

      பதிவிடலாமே..!

      தொடர்வதற்கு நன்றிகள்

      Delete
  9. வணக்கம்
    ஐயா
    தங்களின் பதிவு வழி நிறைய விடயங்களை கற்றுகொள்ள வாய்ப்பாக உள்ளது அறிய முடியாத விடயங்களை.. மற்றும் விளங்கி கொள்ளமுடியாத விடயங்களை தெளிவாக எடுத்துரைப்பதில் தங்களுக்கு யார் நிகர்... அருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.ரூபன்.

      Delete
  10. அருமையான நல்ல விவாதம். உலோகாயுதம் என்பது உலகாயுதம் என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நீங்கள் சொல்வது சரிதான்.

      பிழை பொறுக்க.

      லோக ஆயதாம் என்பதனைத் தற்சமப் படுத்தி நினைந்ததால் இப்பிழை நேர்ந்தது.

      திருத்திவிட்டேன்.

      வேறேதும் பிழையிருப்பினும் சுட்டிக்காட்டுங்கள்.

      பௌத்தம் பற்றி எழுதுதற்குத் தங்களைத் தொல்லை செய்வேன் என்று நினைக்கிறேன் :))

      வேறு வழியில்லை.

      நெறிப்படுத்துங்கள்.


      நன்றி.

      Delete
  11. விரிவாக... விளக்கமாக... ஆறு காட்சிகளோடு... தொடர்கிறேன்...

    ReplyDelete
  12. பகிரும் பட்டைகள் + வாக்குப்பட்டை என்னவாயிற்று...?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      Settings இல் உள்ள Search Preferences என்பதை ஆக்டிவேட் செய்தால் இந்த பகிரும்பட்டகளும் வாக்குப் பட்டைகளும் காணாமற் போய்விடுகின்றன.

      நீங்கள் சொன்ன பிறகு டி ஆக்டிவேட் செய்து பார்த்த போது மீண்டும் வந்துவிட்டன...

      இது காணாமற் போகாமல் Search Preferences என்பதைச் சேர்க்க ஏதேனும் வழியுண்டா.....?

      நன்றி.

      Delete
    2. http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speed-Wisdom-2.html

      இந்தப் பதிவில் விளக்கங்கள் உள்ளன... எடுத்துக்காட்டுகளை சொடுக்கிப் பார்க்கவும்... அன்பர்கள் Copy & Paste செய்து இருந்தால் மாறி இருக்கலாம்...!

      Search Preferences என்பதை ஆக்டிவேட் செய்வதால் வாக்குப்பட்டைகள் போவதற்கு வாய்ப்பில்லை... google template தவிர வேறு template பயன்படுத்தி இருந்தால் இப்படி ஆகலாம்... அவ்வாறு போனாலும் மீண்டும் இணைத்துக் கொள்ளலாம்... இணைத்தும் கொடுக்கிறேன்...

      dindiguldhanabalan@yahoo.com
      09944345233

      Delete
  13. தெய்வம் இருப்பது எங்கே ?

    http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html

    பாடல் வரிகளைப் (DD Mix) பற்றியும் தங்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வந்தேன். கருத்திட்டேன்.
      சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.

      Delete
  14. ஐயா வணக்கம் .முதலில் இந்த பொறுப்பு துறக்கும் வாக்கியங்கள் ஏன்.?நீங்கள் இன்னார் என்று அறியப்பட்டுவிடுவீர்கள் என்னும் அச்சமா>என் பதிவு நீதி கேட்கிறேன் -ல் நான் எங்கும் கடவுள் மறுப்பு பற்றி கூறவில்லை. உண்டு இல்லை என்னும் இருமையை மீறி தெரியாது என்னும் நிலைப்பாட்டுடையவன். ஆனால் கடவுளின் பெயராலும் மதங்களின் பெயராலும் அநீதிகள் இழைக்கப் படுவதை நான் சாடி எழுதி இருக்கிறேன் இறைஇயல் நமக்கு நல்ல இலக்கியங்களைத் தந்திருக்கிறது மறுக்க முடியாது.இராமாயண காலம் முதற்கொண்டேநாத்திக வாதம்( ஜாபாலி) இருந்து வந்திருக்கிறது திரு இளங்கோ சொல்வது போல் உலகாயுதம் என்பது MATERIALISM என்று பொருள் கொள்வதாயிருந்தால் அது எனக்கு உடன்பாடே. ஆனால் அதுவே கடவுள் மறுப்பு என்று சொல்வதானால் நிறைய சிந்திக்க வேண்டியதே

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள்.

      அவ்வாக்கியங்களைப் பயன்படுத்தியமைக்கான காரணம் குறித்துத் திரு தமிழ் இளங்கோ ஐயாவின் பின்னூட்ட மறுமொழியிலேயே கூறிவிட்டேன்.

      உங்களின் பதிவு காண எனக்கு உலகாயுதம் குறித்து நானறிந்த கருத்துகள் தோன்றின. அது என் பார்வைக் கோளாறினாலோ அல்லது என் கருத்தின் பிழையாலோ நேர்ந்திருக்கும்.

      உலகாயுதம் என்பதைச் சமயிகள் எடுத்து மறுப்பதை நோக்க நான் முதன்மையாகக் கண்டது அவர்கள் இறைமறுப்பாளர்கள் என்பதனையே...!

      அதை வலியுறுத்த அவர்கள் பொருள்முதல்வாதத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


      Delete
  15. உலகாயுதம் - கடவுளைக் கொன்றவனின் குரல் என்ற
    தலைப்பு என்னை அதிர வைத்தது
    சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!

      Delete
  16. திருப்புகளைப் போலுண்மை எங்கும் இல்லை
    .........தீந்தமிழைப் போல்மொழியும் எங்கும் இல்லை
    கருக்கொண்டு பிறக்காமல் உயிர்கள் இல்லை
    .........காற்றோடு கலக்காமல் மணமும் இல்லை
    விருப்போடு தெய்வத்தை வணங்கும் மக்கள்
    .........வீணாகப் போனதடம் எங்கும் இல்லை
    கருத்துக்கள் பலவாக இருக்கும் போதும்
    ..........காண்கின்ற மனநிறைவே வாழ்வின் எல்லை !


    நன்றாகவே இருக்கிறது பாவலரே தங்கள் பதிவு உலகாயுதம் பற்றிய கருத்துக்களை வரவேற்கும் முன்னே சொல்லிட்டீங்க "" நான் அவனில்லை என்று "" என்னா ஒரு முன் எச்சரிக்கை ஆகா ஆகா சந்தோசம் சமண பௌத்த பதிவினையும் பார்க்க ஆசையாக உள்ளேன்
    விரைவில் பதிவிடுங்கள் நன்றி

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே!

      உங்கள் வருகைக்கும் விருத்தத்திற்கும் நன்றி.

      உங்கள் கருத்தினை மதிக்கிறேன்.

      இப்பதிவினூடாக அது பற்றிய செய்திகளைச் சொல்வதே என் நோக்கம்.

      என் குரலென்றோ என் கருத்தன்றோ எதையும் அடையாளப்படுத்துவது அல்ல.

      எனவேதான் அப்படிக் கூறிப்போனேன்..

      தாங்கள் தொடர்கின்றமைக்கு நன்றிகள்.

      Delete
  17. தொடர்வேன்!

    ReplyDelete
  18. 'உலகாயுதம்- கடவுளைக் கொன்றவனின் குரல்' - தலைப்புச் சூட்டுவதில் அரசன் ஐயா நீங்கள்!

    இப்படி ஒரு பதிவை நான் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. மிகவும் அருமை! நான் கடவுள் ஏற்பாளனுமில்லை, மறுப்பாளனுமில்லை; வெறுப்பாளன்! [இது நானே உருவாக்கியிருக்கும் புதுக் கட்சி. ஒரே ஒருவரை மட்டுமே உறுப்பினராகக் கொண்டிருக்கும் இக்கட்சியில் இணைய ஆர்வலர்கள், ஆர்வமில்லாதவர்கள் என அனைவருமே அன்போடு வரவேற்கப்படுகிறார்கள்! :-))] கடவுள் நம்பிகை பற்றிக் காரசாரமான தொடர் ஒன்று எழுத வெகுநாட்களாக எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், தாங்கள் தங்களுக்கே உரிய பாணியில் தமிழ்ச் சமூகத்தில் இறை மறுப்புக் கொள்கை எப்படி இருந்தது என ஒரு தொடரே தொடங்கி விட்டீர்கள். அருமை ஐயா! அருமை!

    'உலகாயுதம்' எனும் சொல் கேள்விப்பட்டது போலத்தான் இருக்கிறது. ஆனால், அதன் பொருள் தெரியாது. அந்தக் காலத்திலேயே அறிவை எப்படியெல்லாம் நுட்பமாகப் பிரித்து அதன் அடிப்படையில் கடவுள் மறுப்பைக் கூறியிருக்கிறார்கள் என அறியும்பொழுது வியப்பாக இருக்கிறது. மேலும், 'பஞ்ச பூதங்கள்' என்றே நாம் காலங்காலமாக வழங்கி வரும் நிலையில், பண்டைத் தமிழ் அறிவுச் சமூகம் வானத்தை ஓர் ஆற்றலாக ஏற்கவே இல்லை என்பதும், இன்றைய அறிவியலும் அதை ஒத்துப் போவதும் மிகுந்த வியப்புக்குரியவை. இப்படி ஒரு தொடருக்காக மிகவும் நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் உங்கள் கருத்துகளுக்கும் பதிவில் இருந்த பொருந்தா நிறுத்தற்குறியொன்றினை நீக்கிடச் சொன்னமைக்கும் நன்றிகள்.
      நீக்கிவிட்டேன்.

      நம்முடைய மரபுவழித் தமிழ்க் கல்வி மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்தது.

      நிகண்டு, இலக்கணம், தர்க்கம் என்பவையே அவை.

      இன்றைய தமிழ்க்கல்வியில் அகராதியும், உரையிலக்கண நூல்களும், நிகண்டின் இடத்தையும், இலக்கணத்தின் இடத்தையும் ஓரளவிற்கு நிரப்பி இருந்தாலும், இந்த தர்க்கம் பற்றிய அறிவை இன்றைய தமிழ்க்கல்வியில் முற்றிலுமாக நாம் இழந்துவிட்டோம்.

      ஆனால் அதன் கூறுகள் பலவற்றைப் பொருள் விளக்கப் பண்டைய இலக்கியங்களுக்கு/இலக்கணங்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள் காட்டிக் கொண்டே போவார்கள்.

      அன்றைய கல்வியில் தர்கத்தைப் படித்தவர்களுக்கு அதைப் புரிந்து கொள்ளச் சிரமம் இருந்திருக்காது.

      இன்று அதைப் புரிந்து கொள்வது என்பது மிகுந்த சிரமாக இருக்கிறது.

      மிகப் படித்தவர்கள், பழைய மரபுக் கல்வியோடு இன்றும் நம்மிடையே இருக்கும் வெகுசிலர் அவ்விடங்களைப் புரிந்து கொள்ளக் கூடும்.

      என்னைப் போன்றவர்கள் தடுமாறித்தான் போகிறோம்.

      அறிந்ததைப் பகிரும் சிறு முயற்சியே இது.

      தங்களைப் போன்றோர் தொடர்வது கண்டு மகிழ்ச்சியே!

      நன்றி.

      Delete
  19. தலைப்பே வியப்பே ! விபரங்களும் அவ்வண்ணமே உள்ளது. ஆண்டவனுக்கே சோதனைகள் நாம் எல்லாம் எம்மாத்திரம். ம்..ம் எத்தனை விடயங்களை அறியத் தருகிறீர்கள். என்னைப் போன்றோர் இவ்விடயங்களை எல்லாம் அறியாமலே மடிந்திருப்போம். நீங்கள் வலைக்கு வராதிருந்தால். முத்துநிலவன் அண்ணாவிற்கும் ஏனையோருக்கும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். அனைவர்க்கும் நன்றி ! பதிவுக்கும் நன்றி ! வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
    Replies
    1. அம்மா வணக்கம்.

      நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா.

      என்னை வலைத்தளத்தில் கொண்டுவந்தோருக்கும், உங்களைப் போல அன்புடன் ஊக்குவிப்பவர்களுக்கும் நான் என்ன கைம்மாறு செய்ய....?

      பெரிதாக நான் ஒன்றும் சொல்லிவிடாத போதும், நீங்களெல்லாம் வந்து படிப்பதும் கருத்திட்டு ஊக்குவிப்பதும் என்னை இன்னும் கவனமுடன் எழுதவும், தொடரவும் துணை செய்யும்.

      அதற்கு என் நன்றிகள் என்றென்றும்.

      Delete
  20. சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களின் முன்னால் ஒட்டப்பட்ட கடவுள் வாழ்த்து முத்திரைகள் இப்படிப் பொதுவான இலக்கியங்களைத் தம் சமயவழிப் படுத்த நினைந்ததன் முயற்சியாகத்தான் படுகிறது. திருக்குறள் இவர்களிடம் சிக்கிப் பட்ட பாடு சொல்லிமாளாது.
    இதைத் தான் நான் சொல்ல வந்தேன். தான் கடந்து வந்த பாதையை மறக்க இயலாது என்று வாதிட்டீர்கள்.
    தாங்கள் சொல்ல வந்ததை பிறர் கேட்கனும் என்று அல்ல தன் அதிகாரத்தை நிலைநாட்ட,
    எதனுள் சமயம் தினித்தால் வளரும் எனக் கண்ட கூட்டம் கட்டம் போட்டது.
    நான் சிலப்பதிகாரம் ஓர் ஆரிய மாயை என்று ஒரு புத்தகம் வாசித்தேன்.
    அதைபின் கூறுகிறேன்.
    இன்னும் பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்பிச் சமயவாதிகளைத் திகைக்கச் செய்ததொரு அறிவுப் புலம் நம்மிடையே இருந்திருக்கிறது என்பதையும் சமய நூல்கள் சொல்லும் ஒரு சில செய்திகள் வாயிலாகத்தான் நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் இதன் உச்சகட்ட சோகம்.
    தாங்கள் சொல்ல வருவதை வெளிப்படையாகச் சொல்லலாம்,
    வரும் ஆனா வராது என்பது போல் வேண்டாம்.
    தாங்கள் எதூம் தவறாக நினைக்கவேண்டாம், என் மனம் பட்டதைச் சொன்னேன். நன்றி, காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      “““““சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை போன்ற இலக்கியங்களின் முன்னால் ஒட்டப்பட்ட கடவுள் வாழ்த்து முத்திரைகள் இப்படிப் பொதுவான இலக்கியங்களைத் தம் சமயவழிப் படுத்த நினைந்ததன் முயற்சியாகத்தான் படுகிறது. திருக்குறள் இவர்களிடம் சிக்கிப் பட்ட பாடு சொல்லிமாளாது.
      இதைத் தான் நான் சொல்ல வந்தேன். தான் கடந்து வந்த பாதையை மறக்க இயலாது என்று வாதிட்டீர்கள். ““““““

      இதைத்தான் நான் சொல்லவந்தேன் என்று ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை பற்றிய உங்கள் இலக்கணப் பதிவிற்கு நான் அளித்த மறுமொழியைப் பற்றிச் சொல்கிறீர்களா...........?!

      அதை நீங்கள் இன்னும் மறக்கவில்லையா...?!! :))

      இங்கு நான் சொல்லும் பொது நூல்களுக்குத் தம் பெயர் இடுதல் ஒரு வழக்கம் என்றாம், தம் சமயம் சார்ந்த நூல்களைத் தம் சமயத்தவர்க்காக எழுதிக் கொள்ளும் வழக்கமும் நம்மிடையே இருந்தது என்பது தாங்கள் அறியாததா?

      நூலை மாற்ற முடியாதபோது, தம் அறிவின் உதவியால் அந்நூல் சொல்லாத கருத்துகளையும் நூலாசிரியனின் கருத்துப் போல ஏற்றிச் சொன்ன பரிமேலழகியம் போன்ற உரை நூல்கள் பற்றியும் நீங்கள் படித்திருப்பீர்களே!

      நூல் நுவலும் கருத்தினைப் பார்க்காமல், பிற சமயத்தவர் எழுதிய இலக்கண நூல் நமக்கெதற்கு...? நம்மவரில் அறிவுப் புலமில்லையா....நாமே நமக்குரிய நூல் எழுதுவோம் என்றெழுந்ததுதானே.. மாறன் அகப்பொருள் அலங்காரம் போன்ற நூல்கள்..?!
      .............

      என் அடையாளம் தவிர்த்துப் பதிவில் நான் சொலல வந்ததை வெளிப்படையாகச் சொல்லி இருப்பதாகவே நினைக்கிறேன்.

      நிச்சயம் உங்களைத் தவறாக நினைக்க வில்லை.

      சிலப்பதிகாரம் ஆரிய மாயை பற்றி எழுதுங்கள்.

      காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
  21. அருமையான பதிவு தோழர்...
    உங்கள் பதிவுகளை மின்நூலாக்கினால் என்ன என்று நீண்ட நாட்களாக நினைத்து வந்திருக்கிறேன்...
    செய்வோம்
    தம +

    ReplyDelete
    Replies
    1. இதுபோல் வருவதும் கருத்திடுவதுமே நிறைவு தோழர்.

      அதெல்லாம் எதற்கு..?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  22. வழக்கமாக தாங்கள்தான் தாமதமாக வருவீர்கள் 2 தினங்களாக வரமுடியவில்லை தொடர்கிறேன்
    தமிழ் மணம் என்றும் 16

    ReplyDelete

  23. வணக்கம்!

    உலகா யுதத்தினர் ஓர்ந்த நெறியைப்
    பலகால் படித்தேன் பணிந்து!

    ReplyDelete
  24. மெட்டீரியலிசம் என்பதற்கு உலகாயுதம் என்ற புதிய சொல்லாட்சியை அறிந்து கொண்டேன். இது பற்றிய செய்திகள் நான் அறிந்திராதவை. காட்சிகளை ஆறு விதமாக வகைப்படுத்தியிருப்பதும் அருமை. பஞ்ச பூதங்கள் என்பதில் ஆகாயம் என்பது இல்லை என்பது வியப்புக்குரிய செய்தி. இன்றைய அறிவியல் சொல்லும் உண்மையோடு ஒத்துப்போதல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. கடவுள் எதிர்ப்பாளர்கள் தங்கள் வாதங்களை எழுதி ஆவனப்படுத்தியிருந்தாலும் அது நிச்சயம் சமயவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும். புத்த, சமண கருத்துக்களை அறிந்திடவும் ஆவல். தொடருங்கள்.

    ReplyDelete
  25. உலகாயுதம் தானே உலோகாயுதம் இல்லைதானே? சரி உலகாயுதம் என்பது மெட்டீரியலிசம் என்றால் மெட்டீரியலிஸ்டுகளாக இருப்பவர்கள் கடவுளை நம்புவதில்லை என்பதா? ஆனால் உலக வழக்கில் அப்படி இல்லையே. மெட்டீரியலிஸ்ட் என்பவர்களும் கடவுளை நம்புபவர்களாகத்தானே இருக்கின்றார்கள்...இல்லை எங்களின் புரிதல் தவறோ.....இதை மீண்டும் வாசிக்க வேண்டும் . 3 முறை வாசித்துவிட்டோம்....

    கடவுள் மறுப்பாளர்கள் என்றால் அவர்கள் இதிகாச காலம் தொட்டே இருக்கின்றார்கள் என்பது பல புராணங்களிலும் இருக்கின்றதே.....பஞ்ச பூதங்களை நம்பினாலே கடவுளை நம்புவதுபோலத்தானே.....பூதங்களை ஒரு சிலர் கடவுள் என்று சொல்வது அது ஒரு வார்த்தைதானே . கடவுள் என்றால் உருவம் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லைதானே. பூதங்களை யாராலும் வெல்ல முடியாதுதானே... அப்படி இருக்கும் போது நமக்கும் மீறி ஒரு சக்தி இருப்பதாகத்தானே உள்ளது...அதில் ஆகாயம் எப்படி இல்லை என்றானது? ஆகாயம் என்பது ஸ்பேஸ் என்பதாலா? அதை உலகாயத்தோர் பார்ப்பது சற்று புரியவில்லை...மீண்டும் வாசிக்க வேண்டும்...

    கர்மா போன ஜென்மம்....இதெல்லாம் அவர்கள் சொல்லுவது சரியாகத்தான் இருக்கின்றது.....ஆனாலும் சில இயற்பியல் விஞ்ஞானிகள் இதற்கும் சில விடைகள் கொடுக்கின்றனர்...

    உலகாயுதத்தார் தொன்று தொட்டே இருந்து வருகின்றனர் அதுவும் கேள்விக் கணைகளுடன் என்பதும் விஞ்ஞானத்துடன் ஒத்து போவதால்....

    அடுத்த தொடரை வாசிக்க ஆவலுடன்.....

    ReplyDelete
  26. இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் -
    தங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  27. வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா தங்கள் பதிவை அறிமுகப்படுததியது கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  28. இன்றைய GMB ஐயா பதிவில்...

    இணைப்பு : http://gmbat1649.blogspot.com/2019/08/blog-post.html

    ReplyDelete