Sunday 16 November 2014

யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!

அடுத்த பதிவுஅந்தக் காலத்தில் காப்பி இருக்கிறதுஎன்று சொல்லி  விட்டேன். உண்மைதான்.என்ன கொஞ்சம் சூடாக இருக்கிறது. அது ஆறும் வரை சும்மா இருக்காமல் நூலொன்றிற்கு உரைபார்க்க உட்கார்ந்தேன். மிகுந்த மலைப்புத்தான். என்ன செய்வது. புரிவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே..!

வெண்பா வகுப்போ முடிந்தது. என் பாவைப் பாடலாம் என்று எழுதினால் அதுவும் வெண்பா யாப்பில் மட்டும்தான் வருகிறது இப்போதெல்லாம்இது என் குருவிற்கு எழுதியதாக வைத்துக் கொள்ளலாம்.

இது வெண்பாவின் தளைகளோடு இலக்கணப்படி இருந்தாலும் பாட்டின் ஒவ்வொரு கடைசிச் சொல்லும் ( ஈற்றடியின் ஈற்றுச்சீர்) கருவிளம் என்று முடிவதால் (2 2) முழுவெண்பா வடிவில் இல்லை. எனவே அறிஞர் பெருமக்கள் இதன் வடிவம் பற்றி விளக்க வேண்டும். வெண்பாவின் இனங்களுட் படுத்தலாமா?



1)     தடையுடை ,வீறு  நடைபடை ! நெஞ்சு
      புடைபடச் சொல்லும் விடையிடை - நாங்கள்
      இடையிடை கற்க வழிபடை! உன்றன்
      மடையுடை! ஆற்றும் அருள்படை!



2)   புயலிடைத் துள்ளுங் கயலுடைச் சின்னப்
     பயலிவன் கற்கக் கவிபடை! – கொல்லும்
     மயலிடைப் பட்ட மதியுடை! செஞ்சொல்
     அயலிடைமீட்கும் அருள்படை!


3)   துயரிடைத் தோய்ந்த வயலிடை வாழும்
     பயிரினைக் காக்கு முரமுடை! – சொல்லின்
     உயிரிடை பாவின் உடலுடை! உள்ளத்
     தயிர்கடைந் தாக்கு மருள்படை!


4)   இடியுடை! மின்னல் ஒளியுடை! வெண்பாக்
     கொடியுடை! கொள்கைப் பிடியுடை!- நெஞ்சின்
     மடியுடை! வீழும் மரபினும்  வாழ
     அடியவர் கற்க அருள்படை!


5)   கனியிடைப் பட்ட தமிழிடை மண்டும்
     களையிடை காக்கும் கரமுடை! - கொல்லத்
     துணிவுடை! வீரத் தழும்புடை! வெல்லும்
  அணிபடை! நாங்கள் அதற்கிடை!

இன்னொரு பாடலுக்கு உரைபார்க்க உட்கார்ந்த எனது நிலைமை கடைசியில் நானெழுதியதற்கே உரையெழுதுமாறு ஆகிப் போனதுதான் சோகம். இல்லாவிட்டால் இது வெறும் ஓசை விளையாட்டு என்று ஆகிவிடுமே…!!!

“பாடலைப் படித்ததே போதுண்டா ஆளைவிடு“ என்பவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இனி தொடர்ந்தால் ஒருவேளை என்னைத் தேடிக் கொல்லலாம் என்று நினைத்தாலும் நினைத்துவிடுவீர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
1. தடையுடைதடையை உடைத்து எழுகின்ற
வீறு நடைபடைவெல்லும் எழுச்சி மிக்க உம் நடையை நாங்கள் கொள்ள            எமக்குப் படைப்பாயாக!
நெஞ்சு புடை படச் சொல்லும் விடை  - (எம்மொழியின் ஐயங்களை அறியாது உம்மை அணுகுங்கால் அதற்கான விடையை எம்மொழி எவ்வளவு இனிதென விம்மிதமுற்றுச் சொல்லும்) உம் பதிலால் எம் நெஞ்சம் திமிறித் தறுகண் கொண்டு புடைக்குமாறு – ( ஆமாங்க! இப்படித்தான்சொல்லனும் )
இடையிடை கற்க அருள் படைஇடையிடையே எங்களுக்குச் சொல்லிக் கொடு.
உன் மடையுடைஉன் மடையைத்திற!
ஆற்றும் அருள் படை - அதைப் பயன்கொண்டு ஆற்றும் அறிவையும் எமக்கு அளித்தருள். (…..இதுக்குப் பாட்டே பரவாயில்லையே???..இதுக்கே இப்படின்னா இதுக்குள்ள இன்னொரு அர்த்தமும் இருக்கே!!)

2)     புயலிடைத் துள்ளும் கயல்வாழ்வுப்புயலில் சிக்கி மீனான
சின்னப்பயல் கற்கக் கவிபடைசிறியவனான நான் கற்கும் பல கவிதைகளையும் படைத்தருள்.
      கொல்லும் மயல்அறியாமையாகிக் கொல்லும் மயக்கம்
      பட்ட மதியுடைஅந்த மயக்கத்தில் சிக்கிய அறிவை உடைக்கின்றவன்.
செஞ்சொல் அயலிடைசொல்வளம் மிக்க மொழி இன்று அயல்      மொழிக்கிடையில்( வாட அதை)
மீட்கும் அருள்படைஅதை மீட்கும் அருளை எமக்கு அளிப்பாய்.

3)     துயரிடைத் தோய்ந்த வயலிடைதுயரத்தில் தோய்ந்த வயலில் ,
வாழும் பயிரினைக் காக்கும் உரமுடைவாழும் பயிரினைக் காக்கும் திண்மை பொருந்தியவனே,
சொல்லின் உயிரிடை பாவின் உடலுடைசொல்லாகிய உயிரைப் பாவாகிய உடலுக்குப் பொருத்தமாகக் கொண்டவனே!
உள்ளத் தயிர்கடைந்தாக்கும் அருள்படைஉள்ளத்தில் என்னவென அறியாது நன்மை தீமையென நிறைவனவற்றுளிருந்து நன்மையைக் கடைந்தளிக்கும் அருளினை அளி!!


4)     இடியுடை மின்னல் ஒளியுடைபேச்சின் முழக்கமும்( இடி) கருத்தின் தெளிவும்.( அறியாமை இருள் கிழித்து எழும் மின்னல் )
வெண்பாக் கொடியுடைதூய பாவடிவத்தையும்  கொடியாக        உடையவனே!
கொள்கைப் பிடியுடைகொள்கைப் பிடிப்பு உள்ளவனே( இன்னொரு பொருளும்    இருக்கிறது )
நெஞ்சின் மடியுடைமனதில் கொண்ட சோம்பலை உடை.
வீழும் மரபினும் வாழ அடியவர் கற்க அருள்படைவீழும்நம் மரபுகள் வாழச்செய்ய அடியவராகிய நாங்கள் அதனை முதலில் கற்க அருள் படை.

5)   கனியிடைப் பட்ட தமிழிடை- இனிமையில் நிறைந்த தமிழில்,
மண்டும் களையிடை காக்கும் கரமுடைபெருகும் களைகளிலிருந்து காக்கும் கரமுடையவனே!
கொல்லத் துணிவுடைஅவற்றைக் கொல்லும் துணிவை உடைவனே!
வெல்லும் அணிபடைவெல்லும்அணி யொன்றை உருவாக்கு!
நாங்கள் அதனிடைநாங்கள் நிச்சயம் அதனுள் ஒருவராயிருப்போம்.

( இதை எதற்குத்தான் இவ்வளவு சுத்தி வளைச்சுச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா? அதைத்தானய்யா தமிழ்ப்புலமை என்கிறார்கள்!!! )



1
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

69 comments:

  1. அருமை. தங்களிடம் தான் திருப்புகழ் கற்க வேண்டும். அதில் இருக்கும் சந்தம் அப்படியே தங்கள் கவிதைகளில் . உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

    ReplyDelete
    Replies
    1. வஞ்சப்புகழ்ச்சி இல்லையே அண்ணா?
      நனோ பட்டினத்தாரைக் கடக்காதவன்
      அருணகிரி பார்க்கச் சொன்னால் பார்க்கிறேன்.
      ஏறச்சொன்னால் என்னால் எப்படி முடியும்?!
      வடமொழிச் சொற்களை அதிகம் கலந்து குறையொன்றிருப்பது அருணகிரியார் குறித்து நான் படித்தது. முருகன் அருளியதாய் அவர் பற்றிய சில புராணங்களும்!
      பிடித்தது,
      அவரது முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண“ ( இது மட்டும் தான் தெரியும் )
      தத்தத்தன தத்தத் தனதன தத்தத்தன தத்தத் தனதன ..எனும் சந்தக் குழிப்பில் அமைந்த வஞ்சித்துள்ளல் தானே அண்ணா அது?
      இது போன்ற வெண்பா யாப்பில் பாவேதும் அமைத்துள்ளாரா?
      பார்த்துச் சொல்ல வேண்டுகிறேன்.
      நன்றி

      Delete
    2. விஜூ, சிவக்குமாரன் இருவருக்கும். என் கல்லூரிக்காலத்தில் வெண்பாவாகவே பேசித்திரிந்து, அவரவர் முகவரியைக்கூட வெண்பாவிலேயே எழுதிக் கொணட காலத்தை நினைவு படுத்தி விட்டீர்கள்...
      1977இல் எழுதி, எனது “புதிய மரபுகள்“ நூலில் இடம்பெற்ற
      “தெருப்புகழ்” இது அய்யா. அருணகிரியார் மன்னிக்க.
      அப்புறம் முருகனைப் பற்றிக் கவலையில்லை.
      அவன் நம்மாளுதானே?

      கல்லத்தனை உள்ளத் தவரிடம்
      எள்ளத்தனை கஞ்சிக் கெனவெயர்
      வெள்ளத்தினில் தள்ளா டியகொடும் நிலைமாறி,

      வெட்டிப்பயி ரிட்டுப் புனலென
      சொட்டித்திடு பச்சைக் குருதியை
      விட்டுத்தினம் வைத்துப் பயிரிடும் உழவோனே

      தத்தம்உரி மைக்குப் பயிரினை
      வித்திட்டதன் மொத்தப் பலனையும்
      ஒத்துக்கொளும் இந்தக் கனவினி நினைவாக

      ஒட்டும்வயி றிங்கிவ் வுழவனை
      எட்டும்பொழு தில்லை எனஒளிர்
      பட்டப்பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே!

      (1977இல் எழுதி, எனது “புதிய மரபுகள்“ நூலில் இடம்பெற்ற “தெருப்புகழ்”)
      இந்தப் பதிவுபற்றிய கருத்தைப் பின்னர் இடுவேன் விஜூ.

      Delete
    3. அய்யா,
      வணக்கம். சிவகுமாரன் அண்ணாவின் பின்னூட்டம் கண்டதும் உண்மையில் தெருப்புகழ் என்று எங்கோ படித்தோமே எங்கு எங்கு என நினைத்துக் கொண்டே இருந்தேன். உங்களின் புதியமரபுகளில் என்பது நீங்கள் சொன்னதும் தான் நினைவுக்கு வந்தது.
      வர வர மறதி அதிகமாகிறது.
      எனது ஆசிரியர் இப்போதும் கூட தனது ATM அட்டையின் ரகசிய எண்ணை குறள் வெண்பாவில் நினைவு வைத்திருக்கிறார்.
      நான்கு எண்களை நினைவில் வைப்பதைவிட ஏழு சீர்களை நினைவில் வைப்பது எளிதென்பதிலிருந்துதான் தொடங்குகிறது வெண்பாவின் வரலாறு.
      தொல்காப்பிய பாவடிவங்களுள் மிகப்பிற்பட்ட வடிவம் இது.
      ஏறி இறங்கும் சந்தக் குழிப்புகள் இசையோடு தொடர்புடைய வண்ணங்கள், அசைகளிலிருந்து தம்மை சுத்திகரித்த வடிவங்கள்.....இவற்றை நீங்கள் கற்றுவிட்டீர்கள் என்பதைத்தான் இந்தத் தெருப்புகழ் காட்டுகிறது.
      நாங்களும் கற்றதும் நிச்சயமாய் விட்டுவிடுகிறோம் அய்யா!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    4. என் சித்தப்பா சுந்தரபாரதியும் தாங்கள் எழுதியது போலவே திருப்புகழை மாற்றி எழுதிக் காட்டியிருக்கிறார்கள். திருநீற்றுப் பதிகத்தைக் கேலி செய்து திருச்சோற்றுப் பதிகம் எழுதி இருக்கிறார்கள்.
      உங்கள் இருவரிடமும் மாட்டிக் க்கொண்டால் என் கதி அதோகதி தான்.
      நன்றி அய்யா நன்றி விஜூ,

      Delete
    5. உங்கள் சித்தப்பாவும் நானும் ஒத்த சிந்தனை உடையவர்கள் சிவக்குமாரன். எனவே எங்களிடம் மாட்டினால் உங்கள கதி அதோ! கதிதான்... க-கம்பன், தி-திருவள்ளுவன் தானே? அப்படியெனில் சரிதான். சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்

      Delete
  2. வணக்கம் ஐயா!

    மடையுடை கொண்டுபெரு மா..நிலம் பாய்ந்து
    தடையுடைக்கும் உன்பாக்கள் தான்!

    இதென்ன தொடர்பில்லாமல் ஏதோ சொல்லிப் போகிறாளே
    என எண்ணாதீர்கள்!..
    வந்தேன் பார்த்தேன் என மட்டும் இப்போ பதிவிட்டுச் செல்கிறேன்!
    (வீட்டில் சற்று நலக்குறைவு!..:(.. )
    சரியாக உங்கள் பதிவை உள்வாங்கி
    மீண்டும் இங்கு கருத்திட வருவேன் ஐயா!

    வாழ்த்துகிறேன்!..
    த ம.1

    ReplyDelete
    Replies
    1. அவசரமில்ல சகோ?
      இன்னமும்
      “மழைக் காலமானாலும் மந்தி கொம்பிழக்கப் பாயாது“
      என்பதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
      சில இலக்கியக் காட்சிகளை இணைக்க அற்புதமான சில அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன.
      எப்படியோ இன்றிரவு என் தூக்கத்தைக் கெடுத்துவிட்டீர்கள்.
      அருள் கூர்ந்து உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்!
      அவசரமில்லை.
      வாரம் கழித்தும் வரலாம்.
      நன்றி

      Delete
    2. வணக்கம் புலவர் ஐயா!..

      வார்த்தைகள் எதுவும் வசப்படவில்லை எனக்கு!
      சேர்த்திடுகின்றேன் சிந்தும் மணிகளை நான்!

      நலக் குன்றல் எனக்கல்ல.. வீட்டிற்தான்!.. புரிந்திருக்கும்..!
      இப்போதுதான் ஓயமுடிந்தது.

      உங்கள் தடை உடை படை காதில் எதிரொலிக்க மீண்டும் வந்து என்னவெனப் பார்த்தேன்.
      பேச ஏதும் தெரியாமல் திகைத்துப் போகின்றேன்……!!!
      “சட்டியில் இருந்தாற்தானே அகப்பையில் வரும்”….:))
      வல்லுனர்கள் வந்து பகிரும் பதில்காண மீளவும் வருவேன்!

      மிக்க நன்றி ஐயா!

      Delete
  3. படிக்கத்தொடங்கி விட்டேன் நண்பரே,,, நானெல்லாம் ஆமை ஜாதி விபரம் கம்மி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் கில்லர்ஜி அவர்களே!
      ஸ்ரீபூவூ ஞானிகளின் அருளிருக்கத் தங்களின் ஞானத்திற்குக் குறைவேது?
      கலைஞானியே உங்களை அழைத்துப் பேசினார் என்றால் இப்போதுதான் தங்களைப் பற்றி அறிந்தேன்.

      பேச்சாளர்கள் சொல்வதுதான்.
      ஆமைஜாதியாய் இருக்கலாம் தப்பில்லை.

      முயலாமை தானே இருக்கக் கூடாதது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  4. #என்னைத் தேடிக் கொல்லலாம் என்று நினைத்தாலும் நினைத்துவிடுவீர்கள்.#
    டை டை என்று முடித்து இருப்பதற்கும் ,இதற்கும் சம்பந்தம் இல்லைதானே :)
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜி,
      தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.
      என் உரையாக்கப் பணிக்கு உங்கள் உதவி தேவை!
      நாம் சேர்ந்து இப்படிப் பல உரைகள் படைத்துக் கலக்க வேண்டும்!
      டை டை என்பதற்கும் இதற்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது.
      இந்த நுண்பொருள் எல்லாம்

      “ உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே “ (The meaning of the poem depends upon the adroitness of Learner) என்று தொல்காப்பியம் சொல்லவில்லையா? அதுபோல் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லாமல் விட்டேன்.

      இதில் நீங்கள் காட்டிய இரண்டு die களின் அர்தத்தை மட்டும் நீங்கள் கேட்டுக் கொண்டதற்காகச் சொல்கிறென்.
      முதல் die இதை எழுதிய நான் அவர்கள் கையில் சிக்கினால்.
      அடுத்த die என்னடா சொல்லவரான் என்று என்னைத் தேடித் தேடி அலைபவர்களுக்கு!
      இன்னும் ஒவ்வொரு டைக்கும் அர்த்தம் சொல்வோம் ஜி!
      ஹ ஹ ஹா!!!

      Delete
  5. பயனுள்ளப் பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  6. **இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இனி தொடர்ந்தால் ஒருவேளை என்னைத் தேடிக் கொல்லலாம் .***
    எப்புடீ!!! மிடில வாத்தியாரே!!
    உங்க வாத்தியாருக்கு டெடிகேட் பண்ணினா இந்த எல்லா பாட்டையும், நான் உங்களுக்கு டெடிகேட் பண்றேன் பாஸ்!!(எஸ்கேப் மைதிலி !! இல்ல இதையே ஹோம் ஒர்க் கா கொடுத்திடப்போறார்:))

    ReplyDelete
    Replies
    1. இப்பதான மனசில இருக்கறது தெரியுது..!

      இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!

      நான் ஒண்ணும் சொல்லலைப்பா!

      நன்றி

      Delete
    2. ஆமா பாஸ் !! என் மனசுல உங்கள என் வெண்பா வாத்தியார் னு குறித்து வைத்திருப்பதை குறித்து தானே சொன்னிங்க!!

      Delete
  7. விளக்கமும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வலைச்சித்தரின் வரவிற்விற்கும் வாழ்த்திற்கும் நன்றி பல.

      Delete
  8. அருமை நண்பரே
    தங்களின் வெண்பா திறம் வியக்க வைக்கின்றது
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  9. சுத்தி வலை(ளை)த்து சொல்வதுதான் தமிழ் புலமை.. வெண்பாவிலிருந்து ..பாலைக்கு செல்லும் தங்களின் தொடர் ஓட்டம் வெற்றி பெற வாழ்த்தக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாலைஎன்று ஒரு காலத்தில் இருந்தவைதான் இன்று சோலையாகி விட்டதே வலிப்போக்கரே!
      ஏதாவது “ சம்பாதிக்க “ பாலைக்குப் போகிறவர்கள் போலத்தான் நானும் ஓடுகிறேன்.
      தவறில்லையே..!
      நன்றி

      Delete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. மடைதிறந்த வெள்ளம் போலவே உடைத்திட்டே
    படைத்திட்ட பாக்கள் அனைத்தும் -ஒளிரும்
    புடம்போட்ட பொன்போலவே மின்னும் யாரும்
    வடம்கொண்டி ழுத்தாலும் வாராது!

    சரியா சகோ தேறாது என்று தோன்றுகிறதோ விடாப் பயிற்சி வெற்றி தரும் இல்லையா சகோ பார்க்கலாம் இதைதான் \\ பாடை ஏறினும் ஏடது கைவிடேல் ///

    ஆஹா விடையேறியோன் கொடுத்த வரமோ
    இப்படி படை எடுத்து வருகிறதே டை எல்லாம் குருவுக்கா டெடிகேட் பண்ணுகிறீர்கள் எங்கேயோ இடிக்குதே குருவே ( இதுக்கு தான் சொல்கிறது குருவிக் கேத்த கொண்டை வேண்டு மென்று உன்னால முடியுமா இன்னும் என்ன செய்கிறாய் இங்கு அம்மு சொன்னது போல எஸ்கேப்). வருகிறேன் குருவே. ஹா ஹா ...நன்றிகள் பல ! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. ஆகா சகோதரி,
      இந்தக் களேபரத்தில் உங்களை மறந்து போனேனே.
      ம்ம்.
      விடா முயற்சி ...வேண்டும்.
      விடையேறியோன் கொடுத்த வரம்...
      “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடி“க் கொடுத்த வரம் இளமதியாருக்கல்லவா..??
      எனக்கு வினாக்களைத்தானே கொடுத்திருக்கிறான்.
      குருவுக்கு டெடிக்கேட் பண்ணினதுக்கே இப்படி..
      நீங்க வேற என்னை வம்புல மாட்டி விட்டிடுவிங்க போல இருக்கே!
      ““பாடை ஏறினும் ஏடது கைவிடேல்“““
      என்னை எல்லாம் ““இங்கயும் இத விடுறானா பாரு..
      வைச்சுப் புதைடா அவனோடயே இந்தக் கருமத்தை என்று தான் சொல்வார்கள் ““என்னுடன் இருப்பவர்கள்.
      குருவி கூடத் தலைபின்னிக் கொண்டை இடுமா என்ன.. ஹ ஹ ஹா
      பழமொழி மழை..!
      எங்கப் பக்கம் சொல்வார்கள், “ கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம் “ என்பார்கள்.
      எனக்கும் இப்போது சரிதானோ என்று தோன்றுகிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!

      Delete
  12. அய்யா எனக்குத் தெரிந்து இது வெண்பா வகையுள் வராது.
    வெண்பாவின் ஓசையைக் கொண்டு, முடுகு ஓசையில் வரும் வெண்டாழிசை எனலாம். தங்களளவிற்கு எனக்கு இலக்கணப் பயிற்சியில் ஆர்வமில்லாதவன். படித்த ஞாபகம்தான்.
    கலிங்கத்துப் பரணியில் இரண்டடியில் வரும் சந்தம் போல.
    எவ்வாறாயினும், வெண்பாவின் இன்றியமையாத ஈற்றடி ஈற்றசை இலக்கணமில்லாததால், வெண்பா வகையுள் வராது.
    மற்றபடி நல்ல வண்ணம் எழுதப்பட்ட நல்ல வண்ணப்பா.
    (ஆனால், இப்படி ஓசையில் கெட்டதுதான் மரபு அழிவின் தொடக்கம். என்பதை மறக்க வேண்டாம். கருத்தைப் பின்னே தள்ளி, சொல்லழகில் சொக்கவைத்த திசைதிருப்புதல்தான் திருப்புகழ் என்பது என் கருத்து. தவறாகப் படலாம்.இன்றைய அடுக்குமொழி அலங்காரப் பேச்சில் கருத்தைக் கோட்டைவிட வைத்த கதைதான் உங்களுகு்குத் தெரியுமே?) எனவே இதைத் தெரிந்து வைத்திருக்கத் தடையில்லை. பழைய பாடல்களை ரசிக்கலாம். இப்போதும் ஒன்றிரண்டு எழுதிப்பார்க்கலாம். தொடருதல் வீணே. இளைய கவிஞர்களை இழுத்துப்போனீர்கள்..வாழ்த்துகிறேன். ஆனால் இந்த வழி நல்லதன்று இளைய கவிஞர்களை அச்சுறுத்தும் அல்லது திசைதிருப்பும் என்பதே என் தனிப்பட்ட கருத்து. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். உங்களது பதிவுகளை விட உங்கள் பின்னூட்டங்களை இன்னும் ஒரு படி மேலாக நான் விரும்புகிறேன்.
      இலக்கணக்கடல், தி.வே.கோ. வை ஆசிரியராகத் திருவையாறில் பெற்றவர் என்று அறிந்ததாலும் , உங்கள் புதியமரபுகளைப் படித்ததாலும், சில முறை தங்களோடு தொலைபேசியில் பேசி இருப்பதாலும் உங்கள் இலக்கணப் பயிற்சியும், ஆர்வமும் பற்றி நான் நன்கறிவேன். என் பயிற்சியின் அளவும் குறைவென்பது எனக்குத் தெரியும்.
      ஆகவே தங்களின் “ஆர்வமும் பயிற்சி இன்மையும்“ பற்றிய இக்கருத்தை ஏற்பதில் தடையுண்டு.

      அடுத்துத் தங்களின் கருத்துக்களுக்குள் புகுமுன், தொல்காப்பியம் கூறும் அறுவகைப்பாக்களின் வகைப்பாடன்றி, அதன் பின் தோன்றிய, பாக்களுக்கு இனங்களாகக் காட்டப்பட்ட தாழிசை, துறை, விருத்தங்கள், “பொருந்தா“ என்றும் அவை “ நிரம்பா இலக்கணத்தன “ என்றும் கூறிய நச்சினார்க்கினியரின் கூற்றினோடு தங்களுக்குள்ள உடன்பாட்டையும் மறுப்பையும் அறிய விரும்புகிறேன்.

      உடன்படுவீர்களாயின், பின் வந்த கம்பராமாயணம் உட்பட இன்றுவரை வளர்ந்து வந்துள்ள பல இலக்கியங்களின் வடிவங்களை நீங்கள் புறந்தள்ள வேண்டியிருக்கும். மரபின் வளர்ச்சியைத் தடுத்து அதை “உறைய வைத்தல்“ புதிய மரபுகளைப் படைக்கத் தூண்டும் உங்களுக்கு உடன்பாடாய் இருக்காது என்றே நம்புகிறேன்.

      மறுப்பீர்களாயின் இந்தப்பாக்களின் இனங்களையும் குறிப்பாக வெண்பாவின் இனங்களையும் நீங்கள் ஏற்க வேண்டி இருக்கும்.

      சீர் வரையறையோ தளைவரையறையோ இல்லாத இரு அடிகளாலானது குறட்டாழிசை - இதில் வெண்பாவின் இலக்கணங்கள் ஆகப் பிறழ்ந்து போகின்றன.

      வெண்டாழிசை என்னும் வடிவம் ஈற்றடி மூன்று சீராய், நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாட்டோடு முடியினும், வெண்பாவிற்குரிய தளைகளன்றி பிற தளைகளும வருவது. ஆசிரியத்தளையும் கலித்தளையும் பெருவரவிற்று அதனுள். .

      என் பதிவில் காட்டிய வடிவம் முழுதும் வெண்பாவிற்குரிய தளைகளை மட்டுமே அதிலும் குறிப்பாக இயற்சீர் வெண்டளையை மட்டுமே பெற்று வந்தள்ளது. எனவே இதனைத் தாங்களுரைப்பது போல் வெண்டாழிசையில் அடக்க முடியாது.

      இனி வெண்டுறை, அதுவும் சீர் வரையறையற்றது. அடிக்கு நான்கு சீர்தான் வரவேண்டும் என்கிற நியதியெல்லாம் அதற்கு இல்லை. மட்டுமல்லாமல் ஈற்றடியில் சீர்கள் ஒன்றோ பலவோ குறைந்தும் வருவது. ஈற்றுச் சீர் மூன்றாய்த்தான் இருக்க வேண்டும் என்ற விதி இதற்கில்லை.

      இறுதியாக வெளிவிருத்தம்,
      அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது.
      ஐந்தாம் சீர் ஒரு சொல்லாய் இருக்கலாம். ஏன் சொற்றொடராய்க் கூட இருக்கலாம்.

      இதற்கும் அடிவரையறையோ தளைவரையறையோ இல்லை.
      இறுதியாக எனது கேள்வி அப்படியே இருக்கிறது.
      அது வெண்பாவின் வகையுள் இதனை உள்ளடக்குவதல்ல.
      அது வெண்பாவின் இனங்களுள் இதனை உட்படுத்தலாமா என்றே கேட்கிறது.

      இங்குக் கண்ட வெண்பா இனங்களில்,

      சீர் வரையறை இல்லை. ஐந்து சீர்க்கும் அது அனுமதி தருகிறது.

      வெண்பாவிற்கு அத்தியாவசியமென்னும் தளைவரையறையும் இல்லை. அது ஆசிரியத்தளையையும் கலித்தளையையும் உட்புக அனுமதிக்கின்றது.( வெண்டாழிசை)

      ஈற்றடி எத்தனை சீர் கொண்டு முடியவேண்டும் என்பதும் இல்லை. ( வெளிவிருத்தம்)
      இப்படி வெண்பாவின் இனங்கள் இத்தனை நெகிழ்வுடன் இருக்க, வெண்பாவின் இலக்கணங்கள் யாவும் பொருந்த,அமைந்த வடிவத்தின் இறுதிச்சீரின் ஓர் அசை மட்டும் மாறுவதால் இதனை வெண்பாவின் இனம் என்று கொள்ள முடியாது எனத் தாங்கள் சொல்வதன் காரணம் என்ன என்பதுதான் எனக்கு உண்மையில் விளங்கவில்லை. அல்லது வெண்பாவின் ஈற்றுச்சீர் மற்றும் இலக்கணத்துடன், ஓரசையாகவோ , ஈரசையாயின் இறுதி குற்றியலுகரமாக இருந்து பிற சீரும் தளையும், எப்படியும் இருக்கலாம் என்பதை வெண்பா இனங்களின் இலக்கணமாகக் கொள்ளலாமா?

      கலிங்கத்துப்பரணியின் பாடல்கள் கலித்தாழிசையில் அமைவன. பதிவில் காட்டப்பட்ட வடிவிற்கும் அதற்கும் பெருத்த வேறுபாடுண்டு. பரணியின் வடிவம் கூடத் தொல்காப்பித்தில் கூறப்படாமல் பிற்கால யாப்பிலக்கண நூல்களால் காட்டப்பட்டதே!

      நீங்கள் கூறியது போல் இது அலங்காரம் தான். வெறும் சொல்லலங்காரம். ஒருபோதும் நான் அதை மறுக்கவில்லை.
      எனது கேள்வி வடிவம் சார்ந்து இதனை வெண்பாவின் இனங்களுட் படுத்தலாமா என்பதே ! ( வகைகளுள் அல்ல)

      நிச்சமாய்ப் புதியவர்களை அச்சுறுத்துவதோ திசைதிருப்புவதோ என் நோக்கமில்லை. எப்பொழுதுமே!

      அது, மரபில் சில புதிய வடிவ சாத்தியங்களை முயன்று பார்ப்பதே!
      தங்களது கருத்துகளை எப்பொழுதும் போல் வரவேற்கிறேன்.
      பாராட்டுகளை விட விமர்சனங்களிலும் தவறுகளிலுமிருந்தே நான் அதிகம் கற்றிருக்கிறேன் நன்றி!

      Delete
    2. வெளிவிருத்தம், வெண்டாழிசை இலக்கணத்திற்குள் நான் போகவில்லை. (எனக்கு இந்தக் கடுநடைப் பயிற்சியும் இல்லை. சும்மா நண்பர்கள உசுப்பேத்த தெருப்புகழ் எழுதினேன். அவ்வளவுதான்.) புதியன காண்பதில் நடையே தடையாக இல்லை என்று நீங்கள் நம்பினால் சரிதான்.
      இந்தப் புதிய(?) இன ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் விட, நல்ல கருத்துகளை இன்னும் எளிமையாகச் சொல்லலாம் என்பதே என் வழக்கம். அறுசீர், எண்சீர் விருத்தங்களையே கனமாக நினைத்த பாரதி, “எளிய பதம் எளிய சொற்கள்..அதற்குப் புதிய மெட்டு” தேடி பாஞசாலிசபதம் எழுதியதாக முன்னுரையில் சொ்ல்கிறான். நீங்கள் ஏன் எளிய பாவகைகளைக் காண வழிகாட்டாமல், வெண்பாவினும் கடினமான சந்தத்தில் புகுந்து அதற்குப் பெயர்வைக்க முயற்சி செய்கிறீர்கள் என்று எனக்குப் புரியவிலலை. இது எனக்கு அச்சமூட்டுவதாகவே உள்ளது.
      தங்களின் பொறுமையாக ஆழமான பதிலுக்கு என் நன்றி. ஆனால் என் நோக்கம் நடை எளிமையாக வேண்டுவதே! அதற்கு ஏதேனும் இலக்கணம் கண்டுசொன்னால் உங்களை வணங்குவேன். அல்லது அதுவரை வாதாடவே செய்வேன்.

      Delete
    3. ஐயா வணக்கம்!

      கவிஞா் முத்துநிலவன் ஐயா எழுதிய சில கருத்துகளுக்கு நான் மாறுபடுகின்ற இடங்களை எழுதுவது என் கடன் என்று எண்ணுகிறேன்.

      "ஓசையில் கெட்டதுதான் மரபு அழிவின் தொடக்கம்"

      நான்கு வகைப் பாக்களைக் கண்டுணர்ந்த நம் முன்னோர் யாப்பில் அதற்கு மேல் என்ன என்ற தேடலின் விளைவுதான் வண்ணக் கவிதைகள். அவைகளை வெறும் சொல்லழகு என்று சொல்லி ஒதுக்குவதோ, அவைகளை அழிவின் வழி என்று சொல்வதோ. தவறின்றி வண்ணம் எழுதும் ஆற்றல் உடையவரே புலமையின் உச்சத்தை அடைந்தவா் என்பது என் கருத்து.

      மகாகவி பாரதி பாட்டில் நடையும் கருத்தும் மிகவும் எளிமையுடையன. ஆனால் பாட்டின் வகை மிகவும் கடினமானது. பெரும்பான்மையான பாக்கள் வெண்டளையைப் பெற்றிருப்பன. [சின்னஞ் சிறுகிளியே]

      எந்த வகைப் பாட்டாக இருந்தாலும், இக்காலத்தில் உரையின்றிப் புரியும் வண்ணம் இருக்கவேண்டும். இவ்விடத்தில்தான் பாரதியார் வெற்றி பெற்றார்.

      புதிய வகை மரபுப் பாக்களை நாம் உருவாக்கலாம்.[ இன்று நாம் புதியதாக உருவாக்கும் பாக்களைப் புதுக்கவிதை என்று அழைக்கலாம்]

      சிறந்த புதிய வகை மரபுப் பாக்களை உருவாக்குவது மிக மிகக் கடினம். முடியாது என்று கூடச் சொல்லலாம்.

      முன்பே உள்ள மரபின் இலக்கணத்தில் பிழையாக எழுதப்பட்ட பாட்டையே நாம் புதிய மரபு என்று கண்டு பிடிப்போம்.

      நம் முன்னோர் பல வகையான யாப்பு வடிவங்களைக் கண்டுணர்ந்து சிறந்த ஓசையுடைய பாக்களுக்கு இலக்கணம் உரைத்தனர். சிறப்பில்லா வடிவங்களை விட்டொழித்தனர். இன்று நாம் புதியதாக கண்டு பிடிக்கிறோம் என்று, முன்னோர் சிறப்பின்றி விட்டொழித்த சிலவற்றைக் கண்டுணரவும் வாய்ப்புண்டு.

      தடையுடை ,வீறு நடைபடை ! நெஞ்சு
      புடைபடச் சொல்லும் விடையிடை - நாங்கள்
      இடையிடை கற்க வழிபடை! உன்றன்
      மடையுடை! ஆற்றும் அருள்படை!

      இப்பாடலை வெண்பாவின் இனமாக ஏற்க முடியாது. புதிய வகை என்றும் ஏற்க முடியாது

      கருவிளம் தேமா கருவிளம் தேமா

      என்ற சீா் அமைப்பில் நான்கு அடிகளைப் பெற்று ஈற்று அடியில் ஒரு சீா் குறைகிறது.

      இப்படி முன்னோர் அளித்துள்ள யாப்பு வடிவங்களில் ஒரு சீரைக் குறைத்தோ அல்லது ஒரு சீரைக் கூட்டியோ புதிய வகை என்று சொல்வது சரி?

      இன்னிசை வெண்பாவுக்கும் கலி விருத்தத்திற்கும் பேதஞ் சிறிதே. வெண்பாவின் நான்காமடி நான்கு சீராகப் பாடுவோமானால் அது கலிவிருத்தம் அன்றோ? வெண்டளை பெற்று அத்தகைய கலிவிருத்தங்களில் பல சந்தம் பெற்று சந்தக் கலிவிருத்தங்கள் எனவும் கூறப்படும். இக்கருத்தை விருத்தப்பாவியல் 19 ஆம் பாக்கத்தில் காணலாம்.

      முன்னோர் கண்டுரைத்த கலிவிருத்தத்தல் ஈற்றடியில் ஒரு சீரை நீக்கிவிட்டுப் புதிய வகை என்றும் வெண்பா இனம் என்றும் சொல்ல வேண்டாம்.

      முத்து நிலவரும் மூத்தமொழி சோசப்பும்
      கொத்து மலராய்க் குவித்தனரே - முத்தமிழை!
      நானும் படித்து நலமுற்றேன்! சிந்தனையில்
      தேனும் சுரக்கும் திரண்டு!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    4. அய்யா,
      வணக்கம். தங்களின் வரவை மிக எதிர்பார்த்தேன். தாங்களும் தி.வே.கோ. அவர்களிடமும், திருமுருகனார் அவர்களிடமும் பாடம் கேட்டவர்கள்.உங்களைப் போன்றோர் என்தளம் வருவதும் பதிவுகள் படிப்பதும் விமர்சனங்களை முன்வைப்பதும் நானுற்ற பேறுதான்.அது போன்ற வாய்ப்புகள் எதுவுமில்லாத,வெறும் வாசிப்பு மட்டுமே கொண்ட நான் உங்களைப் போன்றோரையே ஆசிரியராக நினைக்கிறேன். வாழ்த்து மட்டுமல்லாமல் இது போன்ற வளமான பின்னூட்டம் நிச்சயம் நான் கற்கப் பெருந்துணை செய்யும்.
      கேள்வி கேட்கும் மாணவனை “என்னைக் கேட்க நீயார் வெளியே போ“ என்று சொல்லாமல், அவனது அய்யங்களுக்கு, தடை விடைகளுக்கு, தக்க விடை கூறி அறிவார்ந்த விவாதத்தை முன்னெடுத்துச் சென்று அறியாமைகளைத் தெளிவிக்கும் ஆசிரியராகவே தங்களைப்போன்றோரைக் கண்டு தங்கள் கருத்துகளின் தோன்றும் அய்யப்பாடுகளை முன்வைக்கிறேன்.

      முத்துநிலவன் அய்யாவின் கருத்துகளோடு நீங்கள் முரண்படும் இடங்கள் குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. அது அய்யாவின் கருத்து. இது உங்கள் கருத்து. அவரவர் கருத்தைச் சொல்ல அவரவர்க்கு உரிமை உண்டு.

      அடுத்து உங்களின் கருத்திற்கு வருகிறேன்.

      //“புதிய வகை மரபுப் பாக்களை நாம் உருவாக்கலாம்.[ இன்று நாம் புதியதாக உருவாக்கும் பாக்களைப் புதுக்கவிதை என்று அழைக்கலாம்] //““

      சொல்லும் தாங்களே அடுத்த வரியில்

      //சிறந்த புதிய வகை மரபுப் பாக்களை உருவாக்குவது மிக மிகக் கடினம். முடியாது என்று கூடச் சொல்லலாம்’’// என்று கூறியிருப்பது மாறுகொளக் கூறல் அல்லவா?

      அல்லது இதனை இப்படி அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா?

      புதிய வகை மரபுப்பாக்களை நாம் உருவாக்கலாம்.
      ஆனால் சிறந்த வகை மரபுப்பாக்களை உருவாக்க முடியாது.
      அல்லது புதியவகையாக நாம் உருவாக்கும் பாக்கள் சிறந்த வகையாகாது. இப்படிச் சொல்வது மீண்டும் மரபினை அப்படியே தேக்கி நிறுத்துதல் ஆகாதா?

      //’’மரபின் இலக்கணத்தில் பிழையாக எழுதப்பட்ட பாட்டையே நாம் புதிய மரபு என்று கண்டு பிடிப்போம்.’’//
      இதைத்தானே நச்சினார்க்கினியனும் “ நிரம்பா இலக்கணம்“ என்றும் ‘’பொருந்தா மரபின’’ என்றும் கூறிப்புறந்தள்ளினான்?

      மீண்டும் அதே கேள்விதான் வெண்பாவின் இனங்களை ஏற்க மறுத்த நச்சினார்க்கினியரின் கூற்றினொடு தங்களுக்கும் உடன்பாடுண்டா? இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பின் இதனை ஈற்றுச் சீர் குறைந்த கலிவிருத்தம் என்று நீங்கள் கொள்ள முடியாது.கலிவிருத்தமும் இக்கொள்கை உடையோர்க்கு ஏற்புடையதல்ல.

      அடுத்தது,

      //“நம் முன்னோர் பல வகையான யாப்பு வடிவங்களைக் கண்டுணர்ந்து சிறந்த ஓசையுடைய பாக்களுக்கு இலக்கணம் உரைத்தனர். சிறப்பில்லா வடிவங்களை விட்டொழித்தனர். இன்று நாம் புதியதாக கண்டு பிடிக்கிறோம் என்று, முன்னோர் சிறப்பின்றி விட்டொழித்த சிலவற்றைக் கண்டுணரவும் வாய்ப்புண்டு.’’//

      தொல்காப்பியர் காலத்திலேயே பரிபாடல் என்னும் பாவடிவம் அருகிவிட்டது.
      அதை ஆள்வாரும் இலர். ஆனால் தொல்காப்பியன் பரிபாடலுக்கும் இலக்கணம் எழுதி இருக்கிறான் . என்றால் உங்கள் கூற்றுப்படி அது சிறந்த ஓசையுடையதாய் இருந்திருக்க வேண்டும். எனில் அது ஏன் அழிந்து போனது? ஏன் விட்டொழிக்கப்பட்டது?

      சிறப்பில்லா வடிவம் எனக் கருதியிருந்தால் தொல்காப்பியன் தாங்கள் கூற்றுப்படி ஏன் அதை விட்டொழிக்காமல் இலக்கணம் கூற வேண்டும்.?


      அடுத்து,

      //முன்னோர் அளித்துள்ள யாப்பு வடிவங்களில் ஒரு சீரைக் குறைத்தோ அல்லது ஒரு சீரைக் கூட்டியோ புதிய வகை என்று சொல்வது சரியா?//

      யாப்பு வடிவத்தின் ஒரு சீரைக் குறைத்தோ கூட்டியோ வருவது புதியவகையாகாது என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?
      அதை முன்னோர் செய்தால் சரி. பின்னோர் செய்தால் தவறு என்பதில்லையே. யார் செய்தாலும் தவறு தவறுதானே?

      ஆசிரியப்பாவின் வகைகளை நீங்கள் அறிவீர்கள்.

      ஈற்றயலடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் அமைவது அதன் பொது இலக்கணம். நேரிசை ஆசிரியப்பா என்று சொல்கிறார்கள்.

      ஈற்றயலடியில் மூன்று சீர்களுக்குப்பதில் அங்கு ஒரு சீரைக் கூட்டுவதால் அது நிலைமண்டில ஆசிரியப்பாவாக மாறுகிறது என்றும் ஆசிரியப்பாவின் பொது வகைகளுள் அது வேறுபட்டது என்றும் கொண்டதும் நம் முன்னோர் தானே?

      இப்போது மீண்டும் உங்கள் கேள்வியை முன்வைக்கிறேன்.

      ////முன்னோர் அளித்துள்ள யாப்பு வடிவங்களில் ஒரு சீரைக் குறைத்தோ அல்லது ஒரு சீரைக் கூட்டியோ புதிய வகை என்று சொல்வது சரியா?//

      ஒரு சீரைக் கூட்டினால் அதன் பா வகை மாறும், அப் பாவின் வேறு ஒரு வகையாகும் என்று முன்னோர் கொண்டது சரியானால், சீரை விடக் குறைந்த அசை ஒன்று கூடுவதை வெண்பாவின் வகையெனக் கொள்ளத் தடையென்ன? தளையும் சீரும் எல்லாம் முற்றிலும் மாற்றிக் கொண்ட அதன் இனத்தினுள்ளும் இது படாதெனல் எங்ஙனம்?.....

      Delete
    5. மாறாக

      “ஒரு சீரைக் கூட்டுவதாலோ குறைப்பதாலோ ஒரு வடிவம் மாறாது“ எனத் தாங்கள் கருதுவீர்களானால் ,சீரைவிடக் குறைந்த ஒரு அசை மட்டும் இவ்வெண்பா யாப்பில் கூடிவந்திருப்பதால் இதை வெண்பா அல்ல எனக் கூற வேண்டியதில்லையே? ஒரு சீரைக் கூட்டி இதை நீங்கள் கலிவிருத்தமாகக் கொள்வதை விட அதைவிடச் சிறிதான ஒரு அசையைக் குறைத்து இதை ஏன் வெண்பா இனத்தினுட் படுத்தக் கூடாது.?.....
      மாற்றங்கள்…. ஆம் . நாம் அதை அலட்சியப்படுத்த முடியாது.
      உச்சிமேல் புலமை கொள் நச்சினார்க்கினியனின் கூற்றை உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. புதுமையின் பெரு நீரோட்டத்தில் அவன் குரல் அடித்துக்கொண்டு போகப்பட்டது. தொல்காப்பியன் சொன்ன வடிவங்களை விடக் காலந்தோறும் மாறிய பல வடிவங்களுக்கு இலக்கணம் அமைத்துத் தமிழ் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தாங்கள் மேற்கோள் காட்டிய வீரபத்ர முதலியார் உட்படப் பலரும் அவர்கள் காலம் வரை வந்துள்ள வடிவங்களுக்கு இலக்கணம் காண முற்பட்டவர்களே! இன்றைய புதுக்கவிதை உட்பட மரபு எல்லா வடிவங்களையும் உட்செரிக்கிறது.
      ஒரு வாழும்மொழி அப்படித்தான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.......
      மீண்டும் நான் தங்களிடம் கேட்கவிரும்பும் கேள்வி,“கலிவிருத்தத்தில் ஒரு சொல்லைக் குறைத்து இதை வெண்பா வடிவம் எனச் சொல்ல வேண்டாம்“ எனத் தாங்கள் கருதும் போது, “வெண்பாவில் சொல் கூட அல்ல, அதன் சிறுபகுதியான அசை இறுதியில் சேர்க்கப்பட்டவடிவம் இது“ என நான் சொல்லத் தடையென்ன?
      அன்றியும் நான் இது வெண்பா வடிவம் என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை. சீர், தளைகளில் நெகிழ்ச்சி பெற்ற அதன் இனங்களுட்படுத்தலாமா என்பதே என் வினா!..

      “உற்றுப் படிப்பதுவும் ஊன்றி அறிவதுவும்
      கற்றவர்க் கல்லால் கவினில்லை – வெற்றுரையோ?
      வாழும் கருத்துளதோ? வாடேன்நா னெப்போதும்
      சூழும் உளிகொள் சிலை!!!!“

      நன்றி.

      Delete
    6. பதிவின் நான் ஏற்கவேண்டிய இடத்தைக் குறிப்பிடாமல் விட்டேன்.
      அது,
      // எந்த வகைப் பாட்டாக இருந்தாலும், இக்காலத்தில் உரையின்றிப் புரியும் வண்ணம் இருக்கவேண்டும்.//
      உண்மைதான்.
      பொருளற்ற வெறும் ஓசைக் கூட்டு என்று கருதிவிடக் கூடாதென்பதற்காகத்தான் பொருளுரைக்க நேர்ந்தது.
      நிச்சயம் இன்றைய எந்த இலக்கிய வடிவமானாலும் அது புரியும் படி படைக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
      நன்றி

      Delete

    7. ஐயா வணக்கம்!

      சுருக்கம் கருதி நான் எழுதிய கருத்துரை தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை என்று எண்ணுகிறேன்.

      //சிறந்த புதிய வகை மரபுப் பாக்களை உருவாக்குவது மிக மிகக் கடினம். முடியாது என்று கூடச் சொல்லலாம்’’// என்று கூறியிருப்பது மாறுகொளக் கூறல் அல்லவா?

      யாப்பின் வகைகளையும் இனங்களையும் எழுதும் நுட்பம் அனைத்தும் அறிந்து தெளிந்த சிறந்த புலவா்களால் புதிய வகை மரபுக் கவிதையை உருவாக்க முடியும். என்போன்ற குறைந்த அளவு யாப்பிலக்கணத்தைக் கற்றவர்களால் முடியாது என்று சொன்னேன்.

      கூவிளம்+மா+ மா அரையடிக்கு என்ற முறையில் நான் புதிய விருத்தத்தை உருவாக்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் உருவாக்கிய புதிய வகை விருத்தம் முன்னே உள்ள விளம் +மா+ தேமா என்ற வகைக்குப் பிழையாக எழுதப்பட்டது என்றே கற்றோர் கருதுவார்.

      //வெண்பாவின் இனங்களை ஏற்க மறுத்த நச்சினார்க்கினியரின் கூற்றினொடு தங்களுக்கும் உடன்பாடுண்டா?//

      உடன்பாடு இல்லை என்ற பதிலையே இன்றைய என்னறிவின் பதிலாக இருக்கட்டும்.

      நீங்கள் எழுதிய பாடலை ஈற்றுச் சீா் குறைந்த கலிவிருத்தம் என்று நான் சொல்லவில்லை.

      கலிவிருத்தத்தில் ஈற்றடியில் ஒரு சீரைக் குறைத்துவிட்டு வெண்பாவின் புதிய இனம் என்று நீங்கள் சொல்கின்றீா்.என்று எழுதியுள்ளேன்.

      வெண்பா இனமாக ஏற்போம் எனில், முன்னோர் படைத்த வெண்டளையால் அமைந்த பாடல்கள் அனைத்திலும் ஒரு சீரைக் கூட்டியோ குறைத்தே புதிய வகைக்கும் இனங்களுக்கும் வழிதரும் நிலை ஏற்படும்.

      ஈற்றயலடியில் முச்சீா் பெற்றுவரும் நேரிசை ஆசிரியப்பா போன்று, இரண்டாம் அடியில் மட்டும் முச்சீா் பெற்றுவரும் புதிய ஆசிரியப்பாவை நாம் உருவாக்கலாமா? முன்னோர் செய்துள்ளனரே! நாம் செய்தால் என்ன? பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

      அழகான பாதையை மேடு பள்ளங்களாக ஆக்குவதா? அழகான சந்தத்தில் அமைந்த கருவிளம்+தேமா+கருவினம் +தேமா கலிவிருத்தத்தில் ஈற்றில் ஒரு சீரை உடைத்துவிட்டுப் புதிய வெண்பா இனம் என்று சொல்வதா?

      இலக்கியத்திற்கு இலக்கணங்களை உருவாக்குவதில் முதன்மையாக இரண்டு வகைகளை நான் உணருகிறேன். 1. சிறந்த பாட்டிற்கு இலக்கணத்தைப் படைத்தல். 2. புலவா்களால் அதிகமாக எழுதப்பட்ட பாட்டிற்கு இலக்கணம் அமைத்தல். பரிபாடல் ஏன் அழிந்தது? ஏன் இன்று நாம் சிறப்பாக எழுதுகின்ற பாக்கள் வருங்காலத்தில் இல்லாமல் போகலாம். இதற்குக் கரணம் என்ன? இரண்டு பதில்கள் தெரிகின்றன. 1 பழையன கழிதலும் புதியன புகுதலும் 2. வருங்காலத்தில் உருவாகும் யாப்பின் எளிமையும், இனிமையும், செம்மையும்.

      முன்னோர் கண்டுணர்ந்த பா வகைகளிலும் இனங்களிலும் ஒரு சீரைக் கூட்டியோ ஒரு சீரைக் குறைத்தோ புதிய பாவை உருவாக்கக் கூடாது. அது சிறப்பாகவும் இருக்காது. தேவையுமில்லை என்பதே என் கருத்து.

      முன்னோர் கண்டுணா்ந்த வகை, இனம் கோட்பாடுகளை நன்குணா்ந்து புதிய வகையையோ இனத்தையோ உருவாக்கலாம்.

      அன்று முதல் இன்று வரை, ஏன் இனிவரும் காலத்திலும், சிறந்த யாப்பின் வகைகளைக் கற்றோர் போற்றிப் பாதுகாப்பார். காலச் சூழலால் இலக்கணம் எழுதப்பட்டாலும் சிறப்பில்லாப் பா வகைகள் மறையும்.

      யாப்பின் கட்டுப்பாடுகள் நிறைந்த வெண்பா வகைகளை நாம் எழுதிக் குவிக்கின்றோம். கட்டுப்பாடு குன்றிய வெண்பா இனங்களைக் மிக மிகக் குறைவாகவே எழுதுகிறோம்.நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரே ஒரு குறள் வெண்செந்துறை இடம் பெற்றுள்ளதை எண்ணும்பொழுது இலக்கணம் இருந்தாலும், இலக்கணப் பிறழ்ச்சியில் அமைந்த பா இனம் காலத்தால் ஆளுமையின்றிக் குறையும். அல்லது மறையும்.

      ஓசையைக் கொண்டும், பா அடிகளைக் கொண்டும் யாப்பின் வகைகளும் இனங்களும் உருவாக்கப்பட்டன.

      ஈற்று அடியில் முச்சீா் வந்து, வாய்பாட்டுச் சீரில் முடிவனவற்றை வெண்பாவின் வகையாக முன்னோர் கொண்டனா். இந்த அடிப்படைக் கோட்பாட்டிற்குப் நீங்கள் எழுதிய பாடல் பொருந்தாமல் இருப்பதால் வெண்பா வகையாக ஏற்க முடியாது.

      தளையும் சீரும் எல்லாம் முற்றிலும் மாற்றிக் கொண்ட அதன் இனத்தினுள்ளும் இதை ஏற்க முடியாது. ஏன் என்றால் உங்கள் பாடல் முற்றிலும் மாறாமல்,99 விழுக்காடு வெண்பா யாப்பைப் பெற்றுள்ளது.

      ஓா் சீா் குன்றிய கலிவிருத்தமாகவும் ஏற்க வழியில்லை.
      ஒரு சீரைக் கூட்டி அழகிய சந்தக் கலிவிருத்தமாக ஏற்க வழியுண்டு.

      யாப்பு வகையுணர்ந்து காப்புப் பலபோட்டேன்!
      தோப்புக் கனிச்சுவைத் துாயவரே! - மூப்புமதி
      மின்னும் வகையினில் பின்னிக் கருத்தளித்தீா்!
      இன்னும் இசைப்பீா் இனித்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    8. அய்யா வணக்கம்.
      தங்களின் மறுமொழி என்மேல் உள்ள அன்பையும் தங்களிள் யாப்பறிவையும் காட்டுகிறது. பொதுவாக இப்பதிவின் அறிஞர்களின் கருத்துரைகளுக்குப் பதிலளித்துப் பின்னூட்டமிட்டு, மாற்றுக் கருத்துகளின் போது மீண்டும் அதற்குப் பதிலளித்து இதை வளர்த்த வேண்டாம் என்றே கருதி வளாயிருந்தேன்.
      ஆனால் தங்களின் வெண்பாவின் ஈற்றடி “ இன்னும் இசைப்பீர் இனித்து “ என்றிருப்பதால் ஒரு வேளை தங்களின் கருத்துக்குக் மறுமொழி கூறுமாறு சொன்ன கட்டளையாய் அது இருக்குமோ என்றெண்ணியே தங்களின் மறுமொழிக்குப் பதில் சொல்லத் துணிகிறேன். நல்ல விவாதங்கள் என்னை நல்வழிப்படுத்தும் என்று நம்புகிறேன்.
      இப்பின்னூட்டம் இன்னொரு பதிவாகும் அளவிற்குப் பெரிதாய் அமையும் என்றெனக்குத் தோன்றுவதால் பின்னூட்டங்கள் துண்டுதுண்டாவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
      //யாப்பின் வகைகளையும் இனங்களையும் எழுதும் நுட்பம் அனைத்தும் அறிந்து தெளிந்த சிறந்த புலவா்களால் புதிய வகை மரபுக் கவிதையை உருவாக்க முடியும். என்போன்ற குறைந்த அளவு யாப்பிலக்கணத்தைக் கற்றவர்களால் முடியாது //
      என்று தாங்கள் சொல்லியிருப்பது என்னைக் குறித்தானது எனவே நான் கொள்கிறேன். நீங்களோ பலவாயிரம் பாடல்களை யாப்பில் படைத்தவர். நான் இன்னும் அதில் தேர்ச்சி பெறாது பெற முயன்று கொண்டிருப்பவன். என் துறையும் அதுவன்று. எனக்குள்ள யாப்பிலக்கணப் பயிற்சி மிகக் குறைவானதே! தமிழிலக்கியப் பெரும்பரப்பில் நடக்கின்ற மிகவிரைவு ஓட்டத்தில் நான் கடந்த சில நொடிப்பார்வை மட்டுமே எனக்கு மரபின் மீது உண்டு. நீங்கள் கூறியது போல் புதியவகை மரபுக்கவிதையை உருவாக்குவதில் இங்குச் சிக்கலில்லை.( என் கருத்து, பழைய யாப்பிலக்கண மரபே புதுக்கவிதை உட்பட எல்லா வடிவங்களுக்கும் இடம்கொடுத்து நிற்கிறது என்பதே) சிக்கல் பழைய மரபு வடிவங்களுள் ஒன்றில் இதை உட்புகுத்துவது.. அதிலும் எந்த வடிவங்களில் இதனை உட்புகுத்துவது என்பதில்தான்!
      நான் இதை வெண்பாவின் இனங்களுட்படுத்தலாமா என்று கேட்டதற்கான நியாயங்களை இந்தப் பின்னூட்டத்தின் இறுதிப்பகுதியில் கூற நினைக்கிறேன். அதற்கு முன் தங்களின் கேள்விகளுக்குள் செல்ல நினைக்கிறேன்.
      //கூவிளம்+மா+ மா அரையடிக்கு என்ற முறையில் நான் புதிய விருத்தத்தை உருவாக்குகிறேன் என்று வைத்துக் கொள்வோம். நான் உருவாக்கிய புதிய வகை விருத்தம் முன்னே உள்ள விளம் +மா+ தேமா என்ற வகைக்குப் பிழையாக எழுதப்பட்டது என்றே கற்றோர் கருதுவார்.//
      நிச்சயமாக அவ்வாறு கருதமாட்டார்கள் என நான் கருதுகிறேன்அய்யா.
      அது அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தினை எழுதுவதற்கான இன்னொரு வாய்பாடு. அதன் சிறப்பும் சிறப்பின்மையும் இரண்டாம் கட்டத்தில் ஆராயப்படும். முதலில் அறுசீர் விருத்தத்தை அமைப்பதற்கான இன்னொரு வாய்பாடு என்றவரை அது சரிதான். வெறும் வாய்பாட்டை விட அத்தகு வடிவத்தில் அமைந்த பாடல் ஒன்றைக் கொண்டே நீங்கள் இதை விளக்க முடியும் என்பதால் அப்பாடலின் ஓசை அழகு இவற்றை உளங்கொள்வோர் அதை ஏற்கவோ மறுக்கவோ செய்வர். ஆகவே அதைப் பிழை என எப்படிக் கருத முடியும்?
      வெண்பாவின் இனங்களை ஏற்க மறுத்த நச்சினார்க்கினியரின் கூற்றினொடு தங்களுக்கும் உடன்பாடில்லை என்பதால் தொல்காப்பிய மரபினையொட்டி
      யும் அதனை மீறியும் எழுந்த யாப்பருங்கலவிருத்தியும் காரிகையும் , தாங்கள் மேற்கோள் காட்டியிருந்த விருத்தப்பாவியல் வரையான யாப்பிலக்கண நூல்களின் அடிப்படைகளை ஏற்கிறீர்கள் என்று கருதி இதைத் தொடர்கிறேன்......

      Delete
    9. //நீங்கள் எழுதிய பாடலை ஈற்றுச் சீா் குறைந்த கலிவிருத்தம் என்று நான் சொல்லவில்லை.//
      மன்னிக்க வேண்டும் அய்யா! நீங்கள் “கலிவிருத்தத்தின் ஈற்றுச்சீரைக் குறைத்து விட்டேன்“ என்றே கூறி இருந்தீர்கள்.

      //கலிவிருத்தத்தில் ஈற்றடியில் ஒரு சீரைக் குறைத்துவிட்டு வெண்பாவின் புதிய இனம் என்று நீங்கள் சொல்கின்றீா்.என்று எழுதியுள்ளேன்.//
      என் பதிவின் எந்த இடத்திலும் கலிவிருத்தம் என்ற சொல்லையே நான் கையாளவில்லை அய்யா! இது உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் கூறியிருப்பதே!
      //வெண்பா இனமாக ஏற்போம் எனில், முன்னோர் படைத்த வெண்டளையால் அமைந்த பாடல்கள் அனைத்திலும் ஒரு சீரைக் கூட்டியோ குறைத்தே புதிய வகைக்கும் இனங்களுக்கும் வழிதரும் நிலை ஏற்படும்.//
      முன்னோர் இப்படி ஒரு சீரை கூட்டியோ குறைத்தோ கொள்வதைத்தானே அய்யா இனங்களின் பாற்படுத்தினர்.?. முத்து நிலவன் அய்யாவின் பின்னூட்டத்தில் இதைக் குறிப்பிட்டேன்.
      ஒரு அடியில் ஒரே சொல்லைக் கொண்ட வெண்பா கூட, முன்னோர் மரபில் இருக்கிறது.
      “உதுக்காண்,
      சுரந்தானா வண்கைச் சுவரன்மாப்பூதன்
      பரந்தானாப் பல்புகழ் பாடி - இரந்தார்மாட்
      டின்மை அகல்வது போல இருணீங்க
      மின்னும் அளித்தோ மழை“ ( தொல்- இளம்- 356.மேற்.)
      ஒரு அடியில் ஐந்து சீர் கொண்ட வெண்பாவையும், ஈற்றடி அல்லாமல் இடையே மூன்று சீர் வருகின்ற வெண்பாவையும் முன்னோர் மரபிலிருந்தே என்னால் காட்ட முடியும். புறனடையென்றோ விதிவிலக்கென்றோ நீங்கள் அதைச் சொல்வீர்களாயின் அவ்வடிவம் இருந்திருக்கிறது. இலக்கண நூல்கள் அதற்கும் அமைதி கூறி இருக்கின்ற என்பதையும் ஏற்க வேண்டிவரும்.

      //ஈற்றயலடியில் முச்சீா் பெற்றுவரும் நேரிசை ஆசிரியப்பா போன்று, இரண்டாம் அடியில் மட்டும் முச்சீா் பெற்றுவரும் புதிய ஆசிரியப்பாவை நாம் உருவாக்கலாமா? முன்னோர் செய்துள்ளனரே! நாம் செய்தால் என்ன? பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.//
      பதிலை நான் எப்படி அய்யா சொல்வது?

      “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
      பெரியகட் பெறினே
      யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
      சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
      பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
      என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
      அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
      நரந்த நாறுந் தன்கையாற்
      புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
      அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
      இரப்போர் கையுளும் போகிப்
      புரப்போர் புன்கண் பாவை சோர
      அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
      சென்றுவீழ்ந் தன்றவன்
      அருநிறத் தியங்கிய வேலே
      ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
      இனிப்
      பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப்
      பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
      சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
      றீயாது வீயு முயிர்தவப் பலவே.“
      இது அதியமானைக் குறித்து அவ்வை பாடிய புறநானூற்றுப்பாட்டு. இதில் இரண்டாம் அடியில் இரண்டு சீர் வருகிறது. ஆசிரியத்தின் வரம்பு கடந்து ஐந்து சீர்கள் வருகின்றன. ஒரே சீர் மட்டுமே கொண்டு ஒரு அடி வருகிறது. இது ஆசிரியப் பா வகைமையாகவே ஏற்கப்பட்டும் இலக்கண நூல்களால் எடுத்துக் காட்டப்பட்டும் வருகிறது. இரண்டாம் அடியில் இரண்டு சீரைக் கொண்டும் ஆசிரியப்பாவை முன்னோர் ஆக்கித் தந்துள்ளனரே அய்யா?
      //அழகான பாதையை மேடு பள்ளங்களாக ஆக்குவதா? அழகான சந்தத்தில் அமைந்த கருவிளம்+தேமா+கருவினம் +தேமா கலிவிருத்தத்தில் ஈற்றில் ஒரு சீரை உடைத்துவிட்டுப் புதிய வெண்பா இனம் என்று சொல்வதா?//
      தொல்காப்பியன் வகுத்தளித்த பாதை அழகானதுதான். அதிலேயே பயணித்துக் கோண்டிருந்தவன் தான் கல்லும் முள்ளும் திருத்தி அழகான பாதையைக் கண்டான். விருத்தி எழுந்தது. அதைவிட அழகாகக் காரிகை எழுந்தது. தொல்காப்பியனை நினைத்துக் கொண்டே புதிய பாதையில் நாம் பயணத்தை மாற்றிவிட்டோம். இது மேடு பள்ளமாக இருக்கலாம். ....

      Delete
    10. அதைத் தங்களைப் போன்றோர்தான் இது போன்ற விவாதங்களால் சரிசெய்ய வேண்டும்.
      இலக்கியத்திற்கு இலக்கணங்களை உருவாக்குவதற்கும் பரிபாடல் அழிந்து போனதற்கும் தாங்கள் கூறிய காரணங்களை மனங்கொள்கிறேன்.
      //முன்னோர் கண்டுணர்ந்த பா வகைகளிலும் இனங்களிலும் ஒரு சீரைக் கூட்டியோ ஒரு சீரைக் குறைத்தோ புதிய பாவை உருவாக்கக் கூடாது. அது சிறப்பாகவும் இருக்காது. தேவையுமில்லை என்பதே என் கருத்து.//
      பாவகைகளில் அப்படி மாற்றம் செய்ததால் தானே அய்யா பாவினங்கள் தோன்றின.
      //முன்னோர் கண்டுணா்ந்த வகை, இனம் கோட்பாடுகளை நன்குணா்ந்து புதிய வகையையோ இனத்தையோ உருவாக்கலாம்.//
      நானறிந்தவரை அது முடியாதென்றே தோன்றுகிறது. இன்றைய புதுக்கவிதை உட்பட கவிதைசார் வடிவத்தின் எல்லா இலக்கணத்தையும் யாப்பு தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. இனியெழும் எவ்வகைமையையும் அதனுள் இருக்கும் இலக்கணத்தின் உள்ளடக்க இயலும்.
      //யாப்பின் கட்டுப்பாடுகள் நிறைந்த வெண்பா வகைகளை நாம் எழுதிக் குவிக்கின்றோம். //
      தாங்கள் காட்டிய வீரபத்ரமுதலியாரின்,“தமிழிலக்கண அறிவு மிகக்குறைந்த அளவே உள்ள, தமிழ் யாப்பிலக்கணம் அறிந்த ஒருவர் சர்வ சாதாரணமாய் வெண்பாவை எழுதிவிட முடியும்(( பக். 3 ,விருத்தப் பாவியல்)“ எனும் கூற்று எனக்கும் ஏற்புடையதுதானய்யா!!
      //இலக்கணம் இருந்தாலும், இலக்கணப் பிறழ்ச்சியில் அமைந்த பா இனம் காலத்தால் ஆளுமையின்றிக் குறையும். அல்லது மறையும்.//
      அப்படித் தோன்றவில்லையே அய்யா! பாவினத்தைத் தாங்கள் இலக்கணப் பிறழ்ச்சியாகக் கொண்டால், ஆசிரியப்பாவின் இனமான விருத்தத்தின் செல்வாக்குக் குறையவோ மறையவோ இல்லையே! இதை இலக்கணப்பிறழ்ச்சி என்பதைவிட இலக்கண நெகிழ்ச்சி எனக் கொள்ளுதல் சரி என்பதே என்கருத்து.
      //ஈற்று அடியில் முச்சீா் வந்து, வாய்பாட்டுச் சீரில் முடிவனவற்றை வெண்பாவின் வகையாக முன்னோர் கொண்டனா். இந்த அடிப்படைக் கோட்பாட்டிற்குப் நீங்கள் எழுதிய பாடல் பொருந்தாமல் இருப்பதால் வெண்பா வகையாக ஏற்க முடியாது.//
      அளவடி நான்கில் இரண்டாம் அடியில் ஐந்துசீர் வருகின்ற, ஈற்றடி நான்கு சீரால் ஆகிய, ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஈரசைச்சீராய் உகரத்தில் முடியாத முன்னோரின் வெண்பா ஒன்றை என்னால் சான்று காட்ட முடியும். இலக்கணங்கள் அப்படிப் பாட அனுமதி தருமானால், மேலும் உதாரணத்திற்கு, வெண்பா மரபென நாம் கொண்டிருக்கும் ஈற்றடிக்கே மூன்று சீர் என்பதை மீறி, இரண்டாம் அடியில் மூன்று சீர் மட்டுமே வரும் அளவடி வெண்பாவையும் சான்று காட்டினால் இப்பதிவின் பாடலை வெண்பா என்றல்ல, நான்கு சீர்களைக் கூட இறுதி அடியில் இருக்க அனுமதிக்கும் ( வெண்செந்துறை) வெண்பாவின் ஏதேனும் ஓர் இனத்திலேனும் உட்படும் என்று ஏற்பீர்களா அய்யா?

      //தளையும் சீரும் எல்லாம் முற்றிலும் மாற்றிக் கொண்ட அதன் இனத்தினுள்ளும் இதை ஏற்க முடியாது. ஏன் என்றால் உங்கள் பாடல் முற்றிலும் மாறாமல்,99 விழுக்காடு வெண்பா யாப்பைப் பெற்றுள்ளது.//
      தளையும் சீரும் முற்றிலும் மாற்றிக் கொண்ட என்று சொல்வதை விட பெரும்பான்மை அம்முதன்மைப் பாவின் இலக்கணம் பெற்று நெகிழ்ச்சி கொண்டிருக்கின்ற வடிவமே பாவினம் என்பதாய் நான் காணுகிறேன் அய்யா!


      //ஓா் சீா் குன்றிய கலிவிருத்தமாகவும் ஏற்க வழியில்லை.
      ஒரு சீரைக் கூட்டி அழகிய சந்தக் கலிவிருத்தமாக ஏற்க வழியுண்டு.//
      இல்லை அய்யா. இதைக் கலிவிருத்தமாகக் கொள்ளத் தடையுண்டு. கலிவிருத்தத்தில் ஈற்றுச்சீர் நான்கடிக்குக் குறைந்து வருதல் இல்லை.
      இன்னுமோர் முக்கிய வேறுபாடு, கலிவிருத்தம் வெண்பாவின் தளைகளில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.
      சான்று,
      “கூகா வென்று குரைப்பதல் லாற்சமன்
      வாவா வென்னின் வரேமென வல்லீரே!
      தேவே சன்பயில் தில்லையின் எல்லையில்
      சேர்வி ரேலது செய்யவும் வல்லீரே“ ( சிதம்பரம் செய்யுட் கோவை-75)

      ஐயா, மீண்டும் என் கேள்வியை முன்வைக்கிறேன். இதை வெண்பாவின் இனங்களில் கொள்ள வழியுண்டா?
      இப்பின்னூட்டமே இவ்வளவு நீண்டுவிட்டதால் இதை வெண்பாவின் இனமெனக் கொள்வதற்கு என்தரப்பு நியாயங்களைத் தனிப்பதிவாக இடலாமா?
      இப்பின்னூட்டத்திற்குத் தங்களின் மாற்றுக் கருத்தினை வேண்டி நிறைகிறேன். நன்றி

      Delete
  13. பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும்போது “உனக்கென்ன இங்கு வேலை” என்று என்னுள் கேள்வி எழுகிறது. இருந்தாலும் பண்டிதப் பெருமக்கள் பதிவுலகில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் என்றும் தெரிகிறதுபாடல் எழுதி அது புரியாது என்று தெரிந்து உரை எழுதியும் காட்டும் உங்கள் தளம்ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்.
      //பாடல் எழுதி அது புரியாது என்று தெரிந்து உரை எழுதியும் காட்டும் உங்கள் தளம்// என்ற உங்களின் ஒரு வரியில் சுட்டப்பட்டுவிட்டது என் அபத்தம்.

      சில வடிவ சாத்தியங்களை முனையும், மரபுகளின் “மதுரகவி“ என்போரின் போர்வையில் களமிறங்கிய என்னைத் தற்காத்துக் கொள்ள போட்டுக் கொண்ட கவசம்தான் அந்தஉரை.

      மரபுக் கவிதைகளிலும் கவிஞரிலும் நான்கு வகை உண்டென்கிறார்கள்.

      ஆசு கவி - எழுத்தோ சொல்லோ பொருளோ கொடுத்து யாப்பின் எவ்வடிவத்தையும் சொல்லி அவ்வடிவில் எழுதச் சொன்ன மறுகணமே அதை எழுதிக் கொடுத்துவிடுபவர்கள்.

      சித்திரக்கவி - எழுத்துக்ளைப் பிரித்தும் சேர்த்தும் வளைத்தும் நெளித்தும் ஆக்கப்படும் கவிவடிவம். இவ்வகைக் கவிதையில் அதன் மையம் அதன் உடலில் இருக்கிறது. உள்ளடக்கம் வேண்டும் தான். ஆனால் அது இரண்டாம் பட்சமானது.

      வித்தாரக்கவி - காப்பியங்கள் போன்ற நெடுங்கதைகளையோ அல்லது பலநூறு வரிகளைக் கொண்ட பாடலையோ பாடுவது.

      கடைசியாக,
      மதுரகவி வைக்கப்படுகிறான்.

      அது ஓசையில் உணர்வைப் பூட்டுவது.

      இசையில் உறைதல் போல் இசையற்ற பாடலின் ஓசையில் கேட்போரை லயிக்கச்செய்வது.

      தமிழில் இந்நான்கு பிரிவினரும் இருந்து வந்துள்ளனர்.

      இந்நால்வருக்கும் தமிழ் இலக்கணம் வைத்திருக்கிறது.

      சித்திரக் கவிகளுக்கும் மதுர கவிகளுக்கும் பொருள்

      பிரதானமானதல்ல.

      அதற்காக இவை எந்த பொருளற்றும் நிற்பவை என்பதும் அல்ல.

      ஓசையை உளங்கொண்டு ஒன்றிய மரபும் தமிழில் இருக்கிறது.

      இன்று இசையின் சாத்தியங்களில் பாடலை

      மெருகேற்றுகின்றன.

      மதுர கவிகள் இசையற்ற ஓசை லயத்தில் மனதைக்

      கட்டியவர்கள்.

      இப்பதிவு

      உண்மையில் இதையெல்லாம் திட்டமிட்டு


      எழுதப்படவில்லை.

      எழுதி முடித்த போது வெண்பா யாப்பைக் கண்டு எனக்கு எழுந்த

      சந்தேகங்களே இப்பதிவின் தலைப்பாக அமைத்தேன்.

      நான் பண்டிதன் அல்லேன்.

      தவறுகளை ஏற்கவும், திருத்திக்கொள்வும், அதிலிருந்து

      கற்கவும் நினைக்கின்ற சாதாரணன்.

      அதை மனங்கொண்டு தாங்களும் உரிய விளக்கம் அளிக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. பாலைக்கு அடுத்து முல்லை, மருதம் என்று எதிர்பார்க்கலாமா...??? திரு .ஊமைக்கனவுகள் அவர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. இல்லை இல்லை,

      பாலைக்கடுத்தது சோலைதான் வலிப்போக்கரே!!!

      முல்லைக்கும் மருதத்திற்கும் நீங்கலில்லாமலா போகப்போகிறேன்.
      எல்லார் வலியையும் போக்கும் தங்களின் வலியையும் போக்க வேண்டும் தானே?
      நன்றி

      Delete
  15. கடந்த மூன்று ஆண்டுகளாக தேவாரமும், திவ்யப் பிரபந்தமும் பொருளுடன் படித்துவருகிறேன். படிக்க ஆரம்பிக்கும்போது புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. நாளடைவில் புரிய ஆரம்பித்தது. அவ்வாறே தங்களின் பதிவுகளும் ஆரம்பத்தில் சிரமமாகத் தோன்றின. படிக்கப் படிக்க தமிழ் மீது இன்னும் ஆசை வந்துவிட்டது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவருக்கு வணக்கம்.
      திருமுறைகள் மற்றும் பிரபந்தங்களின் யாப்பு வடிவங்கள் அற்புதமானவை.
      அனுவித்திருந்தீர்களானால் அவை “பொருளைப் புரிந்து கொள்ளும் முன்பே“ உங்களை உள்ளிழுத்துப் போட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள்.

      அதனை ரசித்தப்பின் நாம் காண்கின்ற அப்பாடலின் பொருளாழம் போகப் போக நீள்வது.

      உங்களின் அனுவம், அறிவு, ஆராய்ச்சி இவற்றின் தன்மைக்கேற்ப பல்வேறு தளங்களில் நீங்கள் அதன் பொருளை விரித்துக் காண முடியும்.

      படிக்கப் படிக்க வரும் ஆசை அது எனக்கும் நிறைய இருக்கிறது.
      இல்லாமல் இருக்க முடியாது என்னுமளவிற்கு இருக்கும் ஒரு வகை போதைதான்அது.
      அது உங்களுக்கும் இருப்பதை அறிய மகிழ்ச்சிதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

      Delete
  16. அன்புள்ள அய்யா,

    இதனை வெண்பாவின் இனங்களுட் படுத்தலாமா என்பதே !வகைகளுள் அல்ல

    தங்களின் கேள்விக்கு பதில் ....?

    கேள்வியின் நாயகனே ...தங்களின் கேள்விக்கு பதிலென்ன தெரியவில்லையே!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      வெண்பாவை “ இனங்களுள்“ வகைப்படுத்தியது குறித்து திரு. தினேஷ் அவர்களின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதக் காண வேண்டுகிறேன்.

      கேள்விக்கு பதிலெனக் கேள்வி கேட்டால் எப்படி?

      ஏதாவது சொல்ல வேண்டாமா?

      நன்றி

      Delete
  17. பாட்டும் விளக்கமும் அருமை இன்னும் பின்னூட்ட விவாதம் அருமை ஐயா தங்களை தேடிக்கொண்டு தான் இருக்கேன் சமயம் வரும்நேரம் சந்திக்கலாம் ஐயனே

    கட்டுக்குள் வைத்து காட்சி கொணரவா?
    மெட்டுகள் பூவான சாட்சி உணரவா?
    சிட்டுகள் தேன்தந்த ஆட்சி அமையவா?
    கொட்டுகள் கூன்தந்த வீழ்ச்சி அடையவா?

    மனதில் படர்ந்ததை கோர்த்து வைத்தேன் அவ்வளவு தான் வேறொன்றும் இல்லை இவ்வடிகள் ...

    ReplyDelete
    Replies
    1. அன்பு தினேஷ்,
      வணக்கம். முதலில் உங்களிடம் நான் வேண்டிக் கொள்வது “ஐயனே...“ என்றெல்லாம் என் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இடாதீர்கள் என்பதே!
      வெண்பாவைக் கூட அந்த ஒளிவட்டம் தான் இவ்வளவு செறிவாக்கி அந்தப் புனிதத்தில் எல்லாவற்றையும் எரிக்கிறதோ என்றெல்லாம் உங்கள் விளி காணச் சந்தேகம் வருகிறது எனக்கு!
      வெண்பாவை அந்தணப்பா என்றும் அது பிறதளைகளுடன் மயங்கி வடிவக் கேடுறுதல் ஆகாதென்றும் தொல்காப்பித்தின் முதல் உரையாசிரியராகத் தற்போது அறியப்படும் இளம்பூரணர் காலத்திலேயே சொல்லி இருக்கின்றனர்.
      தொல்காப்பியச் செய்யுளியல் 101 ஆம் சூத்திரத்தில் இளம்பூரணர் ஒரு சார் ஆசிரியர் “பயன் நோக்கி “ ஓதியதாக இப்படிக் கூறுகிறார்.
      ““வெண்பாவாவது பிறதளையோடு மயங்காமையானும் மிக்குங்குறைந்தும் வாராத அடியான் வருதலானும் அந்தணர் நீர்மைத்தென முற் கூறினார். அதன்பின் அந்நிகர்த்தாகிப் பிறதளையும் வந்து இனிய ஓசையையுடைத்தாய்ப் பரந்துவருதலின் அரசத் தன்மையது என்பதனால் ஆசிரியப்பாக் கூறினார். அதன்பின் அந்நிகர்த்தாகிச் சிறுபான்மை வேற்றுத்தளை விரவலின் வணிகர் நீர்மைத்தெனக் கலிப்பாக் கூறினார். அதன் பின் வஞ்சிப்பா அளவடியான் வருதலின்றிக் குறளடியுஞ் சிந்தடியுமாய் வந்து பல தளையும் விரவுதலின் வேளாண்மாந்தரியல்பிற்றென வஞ்சிப்பாக் கூறினார். ஆகப் பாக்களுக்கும் சாதி கற்பித்து வைத்திருந்த ஒரு ஆளுமை கடந்துதான் தமிழ் வந்திருக்கிறது.
      பின் வந்த பாட்டியல் நூல்கள் இன்னும் ஒருபடி மேல்போய் எழுத்திற்கும் சாதி கற்பித்தன. இது பற்றி
      இருட்டில் மறைந்த விளக்கு

      எனும் என் முந்தைய பதிவொன்றிலேயே விளக்கி இருக்கிறேன். நேரம் வாய்க்கும் போது கண்டு கருத்திடுங்கள்.
      உங்கள் பாடல் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமென்றால், ஏதோ உங்கள் மனதிலோடும் ஓசையைக் கொண்டே நீங்கள் இது போன்ற மரபுவடிவங்களை முயல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பலரும் அப்படிச் செய்வதுண்டு.
      மரபு அறிவு அதைக் கூர்மைப்படுத்தும். அழகாய்ச் செதுக்கும். அது கடினம் என்று கற்பிக்கப்படுவது. உண்மையில் எளிதானது. எப்போதுமே உங்கள் மனதில் படுவதை, உங்களுக்குப் பிடிப்பதை எழுதுங்கள். நிறைய படியுங்கள்.
      நிறைய மரபுக் கவிதைகளைச் சத்தமாய் வாசியுங்கள். வடிவம் வசப்படும்.
      அவ்வளவுதான்.
      நன்றி.

      Delete
  18. அன்புள்ள அய்யா,


    கேள்விக்கு பதிலெனக் கேள்வி கேட்டால் எப்படி?

    ஏதாவது சொல்ல வேண்டாமா? என்றீர்கள்.

    ‘இருட்டில் மறைந்த விளக்கு’

    தமிழ்வெளிச்சத்தைக் கண்டேன்...

    விட்டிலானேன்... பாவொளியில்

    விழுந்தேனா? எழுந்தேனா? மகிழ்ந்தேனா?

    மலைத்தேனா? களித்தேனா? மடிந்தேனா?

    சொக்கிப்போனேன் அய்யா...



    பாட்டுக்குப் பாட்டு....

    உரைக்கு(ம்) உரை....தெளிவுரை...

    இருந்தாலும் ...இருந்தாளும் ...

    உன் தமிழாளும் ஆழம் தெரியல..!.


    அப்பா...நீ எடுத்துகாட்டிய வெண்பா கண்டு

    மலைப்பா இருக்குதப்பா...!



    ‘ கேள்வியை நான் கேட்கட்டும்மா...அல்லது நீ கேட்கிறாயா?’
    -என்று நான் கேட்க முடியாது!

    கேள்வி கேட்கத்தான் முடியும்...பதில் தர நீங்கள் இருக்கின்றீர்களே!
    ‘இப்படிப்பட்ட சுவையான சித்திர கவிகளில் பலவகை இருக்கின்றன’

    சும்மா சொன்னால் போதுமா? எடுத்துக்காட்டினால்தானே தெரியும்..!

    சும்மா எடுத்து விடுங்கள் அய்யா...!

    நாங்கள் படித்து இன்புறுகிறோம்....!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      நீங்கள் கேட்டு நான் சொல்லாமல் இருப்பேனா?

      எடுத்துக்கொள்ளுங்கள்..

      “ ‘பருவ மாக விதோகன மாலையே
      பொருவி லாவுழை மேவன கானமே
      மருவு மாசை விடாகன மாலையே
      வெருவ லாயிழை பூவணி காலமே’““

      இதுவும்

      இருட்டில் மறைந்த விளக்கு

      போல் தான் அய்யா!



      ஆனால் இது வேற மாதிரி!!!!


      ““தெரிந்தவர்கள் சொல்லுங்கள்““


      ( என்னடா இது திரும்பவும் மொதல்ல இருந்தாவா....?)

      உங்களுக்கு மட்டும் சொல்லி விடுகிறேன்.

      காதைக் கொடுங்கள்
      ( .......................................................................) அவ்வளவுதான்.

      விடுவிப்பவர்களுக்காக விடப்பட்ட ஒரு பின்னூட்டப் புதிராக இருந்துவிட்டுப் போகட்டுமே!



      நன்றி

      Delete
  19. “பாடலைப் படித்ததே போதுண்டா ஆளைவிடு“ என்பவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இனி தொடர்ந்தால் ஒருவேளை என்னைத் தேடிக் கொல்லலாம் என்று நினைத்தாலும் நினைத்துவிடுவீர்கள்.//

    ஆசானே இது கொஞ்சம் உங்களுக்கே ஓவராகத் தெரியல?!!!!! என்ன ஆசானே! இப்படி எல்லாம் வேறு யார் எங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்! படித்து மண்டையில் ஏற்றிக் கொண்டிருக்கின்றோம்! ஆசானே! தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்! இதுதான் எங்களுக்குத் தமிழ் வகுப்பு! தொலை தூர, இணைய வழிக் கல்வி என்பார்களே அது போன்று! எனவே தயவு செய்து தொடருங்கள்! நாங்கள் தமிழில் விற்பன்னர்கல் அல்லர். எனவே ரசித்து கற்போமே தவிர அதைப் பற்றி விவரித்து விவாதம், விளக்கம் செய்யும் அளவு புலமை இல்லை ஆசானே! தொடருங்கள் எனபதே எங்கள் வேண்டுகோள்!

    ReplyDelete
    Replies
    1. தொலை தூரக்கல்வி என்றெல்லாம் சொல்லி என்னைத் தொலைத்துக் கட்டிவிடாதீர்கள்.
      நானும் தங்களைப் போலத்தான் ஆசானே!
      பெரிய விற்பன்ன்ரெல்லாம் இ்லலை.
      படித்ததை, படைப்பதை அடித்து விடுகிறேன். அவ்வளவே!
      தங்களின் வருகையே மகிழ்ச்சி தானே?
      நன்றி

      Delete
    2. படித்ததை, படைப்பதை அடித்து விடுகிறேன்.//

      ம்ம்ம் புத்தகங்களோடு வாழ்கின்றீர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளுங்களே ஆசானே! எங்களால் எல்லாம் அது முடியவில்லையே! காந்திஜி "புத்தகங்கள்தான் நண்பன்"சொன்னது போல தாங்கள் புத்தகங்களை நண்பர்களாகக் கொண்டதால் இங்கு எத்தனை நண்பர்கள், ஆர்வலர்கள்,தங்களின் எழுத்தை ரசிப்பவர்கள் என்று கூட்டம் உருவாகி இருக்கின்றது!

      Delete
  20. அய்யா. நான் ஒரு ஓரமாக உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கிறேன். கண்ணீர்மல்க கைதட்டுகிறேன், ஒரு ரசிகனாய் அவ்வளவே முடியும் என்னால். வெண்பா இலக்கணம் மட்டுமே தெரியும். உங்கள் புதிர் புரியவில்லை. புரியவும் வாய்ப்பில்லை. ஒவ்வொரு முறை தங்கள் ,வலைக்கு வரும் போதெல்லாம் என் தலையில் சுமந்து கொண்டிருந்த ( நானே ஏற்றிய ) கிரீடங்களை ஒவ்வொன்றாக இறக்கிவைத்து விட்டுப் போகின்றேன். நன்றி விஜூ

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      வெண்பா இலக்கணம் இந்த அளவு முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் அதுவே யாப்பின் அரிச்சுவடி.
      அதைக் கையாள கற்றுக் கொண்ட ஒருவன் யாப்பின் சகல வடிவங்களையும் ஒருகை பார்த்து விட முடியும்.
      புதிர் பொருளைப் பார்க்காதீர்கள் அண்ணா!
      இது சித்திரக் கவி.
      புதிரை விடுவிக்கும் சாவியை அது தன் உடல் மீது போர்த்தியிருக்கிறது.
      உங்களிடமிருப்பது கிரீடங்கள் அல்ல.
      நீங்கள் சொன்னது போல் கவசகுண்டலங்கள்.
      அவற்றைக் கேட்க நான் கிருஷ்ண பரமாத்மா அல்ல.
      சாதாரணனே!
      நன்றி அண்ணா!!!

      Delete
  21. //பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும்போது “உனக்கென்ன இங்கு வேலை” என்று என்னுள் கேள்வி எழுகிறது. இருந்தாலும் பண்டிதப் பெருமக்கள் பதிவுலகில் கொடி கட்டிப் பறக்கிறார்கள் என்றும் தெரிகிறது//

    ஜி எம் பி ஸாரின் இந்த வரிகள்தான் எனக்கும் தோன்றியது. ஒன்றும் தெரியாமல் நான் என்ன பின்னூட்டம் இட?

    பதிவையும், பின்னூட்டங்களையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்,
      நீங்கள் வருவதும் கருத்தொன்றைப் பதிந்து செல்வதும் மகிழ்ச்சியே.
      உங்களைப் போலத்தான் நானும் பலவிஷயங்களில் இருக்கிறேன்.
      தமிழ்த்தட்டச்சுச் செய்வோரைக் கண்டு ஆறுமாதத்திற்கு முன்பு வரை நான் அதிசயித்ததுண்டு.
      இப்பொழுது அவர்களால் என்னால் போட்டி போட முடியும்.
      இது ஆறு மாதத்திற்குள் சாத்தியமானது.
      இந்த அனுபவத்திலிருந்து என்னால் ஒன்றைச் சொல்லமுடியும்.
      தமிழ் , தட்டச்சுக் கற்பதைவிடவும் எளிமையானது.
      இனிதானதும் கூட.
      தேவை முயற்சியும் ஆர்வமும் மட்டுமே!

      வாருங்கள் இணைந்து கற்போம்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  22. அட!! இங்கிலீஷ் ல கூட palindromes என சொல்வோமே அதை தான் சொல்லிருகீங்க!! இப்போ நிலவன் அண்ணா சொன்ன மாதிரி ஒரு வாசான்கோலி. இருங்க கொஞ்ச நேரத்தில் வருகிறேன்:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.
      அவர்கள் வார்த்தையில் வியப்பதை நாம் வெண்பாவிலேயே அமைத்துவிட்டோம்.
      அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே!!!
      வருகைக்கு நன்றி!

      Delete
  23. சித்திரகவியின் மாலைமாற்று பாடல் ஒன்றை கேட்டிருகிறீர்கள் என்றே கருதி கீழ் காணும் விடையை உங்கள் முன் வைக்கிறேன்:)


    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் மாலைமாற்றுத் திருப்பதிகத்தில் 10 மாலை மாற்றுத் திருப்பதிகங்களும் ஒரு மாலைமாற்றுத் திருக்கடைக்காப்பும் உள்ளன.

    கீழ்வரும் பாடல் அவற்றுள் ஒன்று.

    யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
    இருட்டில் மறைந்த விளக்கு பதிவில் சித்திர கவியின் மற்ற வடிவங்களை கேட்டிருந்தீர்கள் இல்லையா
    எழுத்துவர்த்தனம் என்பது சித்திரக்கவி வகைகளில் ஒன்று. பாடலில் எழுத்தின் விரிவு வளரும்.

    எடுத்துக்காட்டு
    மாத்திரை ஓரெழுத்துச் சொல்லும்,மற் றொன்று
    நிரப்பிட நீரிற்பூ ஒன்றாம் – நிரப்பிய
    வேறோர் எழுத்துய்க்க வீரரா சேந்திரனாட்(டு)
    ஆறாம் எனவுரைக்க லாம்.
    அட்டநாக பந்தம் என்பது ஓவியப்பா வகைகளில் ஒன்று.
    எட்டு நாகப்பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருப்பது போலப் படம் வரையப்படும்.
    பாடல் (கவிதை) ஒன்று அந்தப் பிணைப்பினூடே நுழைந்து படிக்கும்போது பாடல் பொருந்தி வருமாறு ஓவியப்பா அமைந்திருக்கும்.
    பாடலைப் பாம்பின் தலையில் தொடங்கி வால் வரையில் சென்று படித்துக்கொள்ள வேண்டும்.

    சொல்வளம் மிக்கவர் இதனைப் பாடுவர். ஓவியப் பாவைச் சித்திரக்கவி என்பர்.
    இதனைப் பொருத்திப் பார்த்து அறிந்துகொள்க

    நாரணனை நாடு
    பூரணனைக் கொண்டாடு
    ஒரு disclaimer
    சத்தியமா இது எல்லாம் wiki யில் சுட்டது. ஆனா முயன்றேன் அதைமட்டும் சொல்கிறேன். இப்போகூட இதை தான் கேடீங்கலானு தெரில:)))

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      நீங்கள் சொன்னது சரிதான்.
      இது அந்தச் சித்திரக்கவியின் வகைதான்.
      ஆனால் இது மாலையோ பாம்போ தேரோ இல்லை.
      வேறு.
      இந்த முயற்சி இருக்கிறதே அது போதும் . நீங்கள் முன்னேற!
      அது சரி விக்கி...?!
      அங்கே என்னவெல்லாம் கிடைக்கும்?
      இதையெல்லாம் சொல்லி யிருப்பார்களா?
      உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்.
      வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி!
      பதில் வந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.
      பதிலில் கண்டிப்பாய் ஒரு வியப்பு இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாய்க் கூற முடியும்!
      நன்றி

      Delete
  24. அன்புள்ள அய்யா,

    செவிவழியே செய்தியைச் சொல்லிய வெண்பாக்
    கவிஞருக்கு நன்றி உரித்து.

    ReplyDelete
    Replies
    1. “சொல்லிய யாரிடத்தும் சொலல்வேண்டா! மற்றவரின்
      வெல்விடை காண்போம் விரைந்து“

      சும்மா இருந்தாலும் வெண்பாவால் விளாசுகிறீர்களே அய்யா!
      கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்!

      வருகைக்கு நன்றி மணவையாரே!

      Delete
  25. ஊமைக் கனவுகளுக்கு நான் மீண்டும் வருவேன் என்று எதிர் நோக்கி இருக்க மாட்டீர்கள். என்ன செய்வது ?பொருள் தெரிய முடியாத கவி ஒன்று இயற்றிப் பலரது காதுகளை ரட்சித்தாராம் அருண கிரியார். இந்தப் பாடல்தான் அது.

    திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
    திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
    திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
    திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

    இது குறித்து ஒரு பதிவு நவம்பர் 2012-ல் எழுதி இருந்தேன். இதுவும் ஏதாவது விதிகளுக்கூட்பட்டதாகத்தானே இருக்கும். உங்கள் பின்னூட்டத்திற்கான மறு மொழி பார்த்தபின் மதுரகவி யோ என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். தங்களை விட வயதிலும் பதிவனுபவத்திலும் மிக இளயவன்நான்.
      உங்கள் பதிவில் நீங்கள் காட்டிய பாடலை நான் கண்டதில்லை.
      தங்கள் தளம் வருவதும் தொடர்வதும் தற்பொழுதே!
      இது மதுரகவி இல்லை அய்யா!
      மணவையாரின் கேள்விக்குப் பதிலாய் நான் இட்டிருந்த தொடர்புடையது இது. இது சித்திரக்கவி.
      இலக்கணத்தில் இது “ ஓரினத்தெழுத்தால் உயர்ந்த பாட்டு“ என வகைப்படுத்தப்படுவது.
      காளமேகப் புலவரால் இயற்றப்பட்டதாய்ப் பெரிதும் சொல்லப்படுகின்ற, அவரது காலத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் இலக்கண நூலில் சான்று காட்டப்பட்ட

      “"காக்கைக்காகாகூகை கூகைக்காகாகாக்கை
      கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
      காக்கைக்குக் கைக்கைகா கா!"

      என்னும் பாடலும்

      “தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
      துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி
      தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
      தெத்தாதோ தித்தித்த தாது“

      எனும் இருபாடல்களுமே இந்தச் சித்திரக்கவிதையின் பால் அடங்குபவை.
      பொருளைவிட வடிவத்திற்காய்ப் பேசப்படுபவை.
      தங்களின் மறு வருகைக்கு நன்றி!!!

      Delete
  26. எனக்குகவிதை பற்றியும் யாப்பு பற்றியும் பேசும் அருகதை இல்லை. பலரும் பொருள் தெரியாமலேயே அருணகிரியாரின் “முத்தைத்திரு” என்னும் பாடலையும் ஔவையாரின் விநாயக அகவலையும் படிக்கிறார்கள்/ஓதுகிறார்கள். பொருள் தெரிந்து வேண்டினால் நன்றாயிருக்குமே என்னும் ஆதங்கத்தில் இவ்விரு பாட்டுகளுக்கான பொருளை நான் அறிந்து பதிவாயிட்டேன். அந்தத் தேடலில் சிக்கியதே இந்தக் காது காத்த பாடல் மற்றபடி பின்னூட்டத்தைப் படித்த போது எழுந்த ஐயமே கேள்வியாயிற்று. நீங்கள் சொன்னால் சரியாய்தான் இருக்கும். நன்றி.

    ReplyDelete
  27. அருகதை தமிழ் பேசும் எல்லார்க்கும் இருக்கிறது அய்யா!
    தவறாக நினைக்க வேண்டாம். திருமுறைகளுக்கும் ஆழ்வார் பாசுரங்களுக்கும் ஓசையே பிரதானம்.
    தெய்வ மொழி எனப்பட்ட சமஸ்கிருதத்திற்குப் போட்டியாக நிகழ்ந்த தமிழ்ப்புரட்சியே அது.
    அதனால் தான் வைணவர்கள் பிரபந்தத்தைத் திராவிட வேதம் என்றார்கள்.
    மந்திரத்திற்கு ஓசையின் வெளிப்பாடே பிராதனம்.
    அதுதான் சக்தியைத் தருகிறது என்கிற நம்பிக்கை அதை எழுதியவர்களிடத்தே இருந்தது.
    படிப்பவர்களிடத்திலே இருந்தது.
    கேட்பவர்களிடத்திலே இருந்தது.
    அவை ஓதப்பட்டவை.
    கற்பிக்கப்பட்டவை அல்ல.
    சைவமரபில் திருமுறைகளுக்குப் பொருள் எழுதக்கூடாது என்கிற எண்ணம் பலநூறாண்டுகளாகக் வேரூன்றி நின்றதற்கு அது அருளப்பட்டது, பொருளை எழுதி அதன் புனிதத்தைக் குலைத்திடக்கூடாது என்ற எண்ணம் தான் காரணம்.
    சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தியாகராச செட்டியார் வரை இந்த எண்ணம் இருந்தது.
    அதற்காக அவற்றுள் பொருள் இல்லை என்றல்ல.
    மிக ஆழமான பொருள் வளம் நிறைந்தவை அவை.
    நீச்சல் குளத்தில் பல்வேறு ஆழங்களைப் பயிற்சிபெறுவோர்க்கு
    என அமைத்திருப்பார்களே அது போல.
    நான் அதன் ஓசையில் விழுந்திருக்கிறேன்.
    திருவாசகத்தின் பொருள் புரியும் முன்னே அதன் ஓசையின் வயப்பட்டு ஜி.யு. போப் விழுந்திருக்கிறான்.
    உள்நுழைந்து பார்த்தல் அதற்கப்பறம்தான்.அது தான்கலந்து வாசிக்கும் அனுபவம் என்பார்களே அது.
    அவரவர் ஆழத்திற்கேற்ப நீந்திக்கொள்ள வேண்டும்.
    திருமுறைகளின் பிரபந்தங்களின் வடிவத்தை மீட்டெடுப்போமானால் இலக்கணங்கள் சொல்லாத சில அருமையான வடிவங்களை இனம் காண முடியும் என நான் கருதுகிறேன்.
    பின் அதன் தன்மையை ஆராய்ந்து யாப்பின் ஏதேனுமோர் வடிவ சாத்தியத்தில் அதனை உள்ளடைக்கலாம்.
    தங்களிடம் நான் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்று உண்டு.

    யார் சொன்னாலும் அது சரியாய் இருக்கும் என்று நினைத்துக் கூட விடாதீர்கள்.
    ஏனெனில் அது பல நேரங்களில் நம் சிந்தனையை முடக்கிவிடும்.
    எனது பின்னூட்டத்தில் நான் காட்டிய பாடல்கள் சித்திரக்கவி என்பதும் காளமேகப்புலவரால் இயற்றப்பட்ட்தில்லை என்பதும் என் கருத்து.
    ஏனென்றால் ,
    இதில் முதற்பாடல் என் பத்தாம் வகுப்பில் பாடமாய் இருந்தது.
    நான் பெரிதும் மதிக்கும் என் ஆசிரியர்தான் இதைக் காளமேகத்தின் பாடல் எனக்கற்பித்தார். நல்ல் தமிழறிவு வாய்க்கப்பெற்றவர் அவர்.
    பாடப்புத்தகத்திலும் அவ்வாறே இருந்தது.
    பின் பல ஆண்டுகள் கழித்தே இது காளமேகத்தின் பாடலாய் இருக்க முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.அதை இப்பொழுதே நிரூபிக்கவும் முடியும்.
    என் ஆசிரியர் கூறியது சரி என்று விட்டிருப்பேனாகில்,
    இன்றும் தவறான புரிந்துகொள்ளலோடுதான் இருந்திருப்பேன்.
    நான் சொல்வதெல்லாம் சரியல்ல என்ற நினைப்பில் எக்கருத்தையும், இக்கருத்தையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.யார் சொல்வதிலும் மெய்ப்பொருள் காணவேண்டுமென்துதானே குறளுணர்த்தும் பாடம்.
    இது எல்லார்க்குமான என் வேண்டுகோள்!

    தங்களின் மீள் வருகைக்கு நன்றி அய்யா!!!!!!!

    ReplyDelete