Monday 23 June 2014

கவி ஈர்ப்பு மையம்.






குழி விழுந்தவொரு யானையின்
இறுதிநாள் குறித்து,
அதீதப் பிளிறலோடு
வாசிக்கப்பட்ட மருத்துவ சாசனத்தின்
மூன்று மாதக் கெடுவை,
சலனமற்ற நதியாய்க்
கேட்கக் கூடிற்று உனக்கு...!

துடுப்பொன்றை அண்ணனிடத்தும்,
திசைகாட்டியை அம்மையிடத்தும் கொடுத்த பின்,
" எனக்கு..........................."
 எனக்கேட்டு நீண்ட என் கைகள் ,
இறுகப் பிடித்தொரு முத்தம்!

ஓட்டை விழுந்த களஞ்சியங்களிலிருந்து,
நீ ஒழுகிக்கொண்டிருப்பதை
அடைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர்,
அண்ணனும் அம்மாவும்!

ஒருவழி மூட இருவழி திறக்கும்
மர்மம் அறியா வேதனையூடே,
கையில் கிடைப்பதெல்லாம் கொண்டு
தீரத் தொடங்கியிருந்த உன்  
மீதமேனும் சேர்த்துவைக்கப்
பிரயத்தனப்பட்டனர் அவர்கள்!

சேறுற்ற நெடுங்குளத்தில்,
பசிமுற்ற உன்னைப் பிடித்து,
சுழற்றியவாறே உள்ளிழுக்கும்
முதலையின் வாய்க்குள் 
மெல்லப் போய்க்கொண்டிருக்கும்போதும்,
கலங்கும் எம் கண்கள் குறித்தே
கவலை கொண்டிருந்தாய் நீ!

உறங்குவதாய்த்
தலையணை நனைத்துக்கிடந்த
பாவனை இரவொன்றில்,
அதிசயமாய் 
அன்று உறங்கிப்போன அம்மாவின் 
உறக்கம் கலைந்திடக் கூடாதென
சிரமறுக்கும் வலிபொறுத்துப்
பற்கடித்தழுத உன் வேதனை
பார்த்திடப் பொறுக்கவில்லை எனக்கு!

எத்தனையோ முறை
நான் ஏறிவிளையாடிச்
சாய்ந்துகிடந்த மார்பின்,
உள்ளிருக்கும் இதயம்
உறங்காமலிருக்க,
என்ன செய்யட்டும் நான்?

கடைசியாய்,
காற்று,
நீரெனத் திரண்டு
சுவாசப்பை பாய்ந்தது போன்றொரு அவஸ்தையில்,
குமிழ் வெடிக்கத் தீர்ந்ததுன் பாடுகள்!

மரணத்தூரிகை
நெருக்கத் தெழுதிய
விதம் கேட்க வருமொரு கூட்டம்
 “ கண்திறந்த பொழுதுகள்  “
பற்றிக் கேட்டவாறே
கைபிடித்துக் கலையும்!

இருக்கும் போதைய
அருமையுணராமல்,
இல்லாதானபின் சொல்லித்திரிய,
எல்லாரிடத்தும் இருக்கின்றன
இதுபோன்ற நூறாயிரம் கதைகள்!

ஆனாலும் அப்பா,

என் பன்னிரு பிராயத்தில்,
வாசிக்கக் கிடைக்காதொரு புத்தகம் குறித்து,
வருந்திக்கிடக்க,
கோவையில் கிடைப்பதாய் அறிந்து
வாங்கிவந்து
என் கண்படும் இடத்தில் வைத்து
என் கண்ணீர் ரசித்த
உன் அன்பினில்
ஒரு துளியளவேனும்
திரும்பக் கொடுத்ததில்லை நான்!

எப்பொழுதும்,
என் கலக்கம் காணச் சகியாது உனக்கு!

இரு நாட்களாய்,
என்ன எழுத...... “,    
எனக் கலங்கிக்
கண்ணிறைந்திருந்த போது
என்னை எழுதேன்” என
உன்னைக் கொடுத்துவிட்டுப் போகிறாய் 
இப்பொழுதும்!


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

41 comments:

  1. வணக்கம் சகோதரரே!

    உறைந்த உணர்வுகள் ஓலமிடக் காண
    மறைக்கிறது கண்ணீர் மிகுத்து!

    பேச நா எழவில்லை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி.

      Delete
  2. பன்னிரு பிராயத்தில் வாசிக்க புத்தகம் கேட்டு ஒரு பாலகன் வருந்தக்கூடும் என்றால் அந்த தந்தையின் நட்பும், வழிகாட்டலும் எத்தகையதாய் இருந்திருக்கும்,?!! அப்பாக்கள் எந்நாளும் மகள்களுக்கே ஹீரோ. அவர்கள் வயதை தொடும் போது தான் மகன்களுக்கு அப்பாவை புரியும் என்கிறது உளவியல். ஆனால் அரிதான சில அப்பா மகன்கள் இப்படியான புரிதல்களோடு இருப்பதே சுவாரசியமான கவிதைதான். நெகிழ்த்துகின்றன வரிகள்!! பொழுது வாய்த்தால் படித்து பாருங்கள் என் தந்தைக்கான என் பதிவை http://makizhnirai.blogspot.com/2014/02/ii-father-and-daughter.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!
      உங்களின் தற்பொழுதைய பதிவுகளைப் பார்த்தே வருகிறேன். நிறைய பக்குவப்பட்ட நடையாளுமைகள் உள்ள பலரும் இணையத் தியங்கிடக் கண்டு வியப்புறுகிறேன். இன்னொரு உலகம் இது. இன்னும் எதை எவ்வாறு கூறுவது என்று அறியாமல்தான் இருக்கிறேன் நான்.
      புத்தகமன்றி இது போல் இணைய வெளியில் இவ்வளவு வாசிக்கக் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியாது. அல்லாமல் இது போல் இதுவரை வேறெங்கும் எழுதியதும் இல்லை.
      என்னை இதிற் கொணர்ந்தோர் நினைத்தற்குரியோர்.
      தங்களின் பதிவினைப் பார்க்கிறேன் நிச்சயமாய்!
      வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி!

      Delete
    2. திருமிகு மைதிலி, ஜோ.விக்கு தமிழே தெரியல பாத்தீங்களா..
      //நினைதற்குரியோராம் //...வார்த்தையை பார்த்தீர்களா இவர் பரிதிமாற்கலைஞர் காலத்தில் ரிப்வான் விங்கிளின் கசாயத்தை குடித்து தூங்கிவிட்டு இப்போது எழுந்து வந்திருக்கார்ன்னு நெனைக்கேன்...
      சரிதானே..

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி அய்யா!

      Delete
  4. நண்பரே !

    உணர்ச்சி மேலோங்கியதால் விரிவாய் பின்னூட்டமிட வார்த்தைகள் இல்லை ! நிச்சயமாய் மீன்டும் வருவேன் !!

    ( தங்கள் பெயரை ஒரு சுழற்சி முறை பதிவில் இணைத்துள்ளேன்... விபரங்களுக்கு என் வலைப்பூ பக்கம் வாருங்களேன் ! நன்றி )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  5. ஐயோ சாமான்யன்,
    திரும்பவும் முதல்ல இருந்தா................................?

    ReplyDelete
  6. இல்லை தோழரே !

    அப்ப‌டியெல்லாம் ஆரம்பித்துவிடமாட்டேன் !!!

    தாங்கள் எனது கடைசி பதிவுக்கு இட்ட பின்னூட்டத்தை பிரசுரிக்கவில்லை ! ஆனால் எனக்கு உங்களின் பதில்கள் அனைத்தும் மிக சுவாரஸ்யமாக படுகிறது. எனக்கு பிரசுரிக்க விருப்பம்... ஆனால் உங்கள் சம்மதம் தேவை, நீங்கள் விரும்பினால் ! ( உங்களின் மின்னஞ்சல் இல்லாததால் இதனை இந்த பதிவின் கருத்தில் பதிக்கிறேன் )

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. பிரசுரிக்கலாம். அதற்கு முன் உங்கள் மின் அஞ்சல் அனுப்பினால் பழைய பதிவினை அதன் முழுவடிவோடு அனுப்பிடக்கூடும்.

      Delete
  7. " இருக்கும் போதைய
    அருமையுணராமல்,
    இல்லாதானபின் சொல்லித்திரிய,
    எல்லாரிடத்தும் இருக்கின்றன
    இதுபோன்ற நூறாயிரம் கதைகள்! "

    உலக நியதியை முகத்தில் அறையும் வரிகள் !

    " ...என் பன்னிரு பிராயத்தில்,
    வாசிக்கக் கிடைக்காதொரு புத்தகம் குறித்து,... "

    பிள்ளையின் அறிவுப்பசிக்கு அயராது தீனிபோடும் அப்பாக்கள் குறைவுதான் !

    மொத்தத்தில் நெகிழவைக்கும் மிக அருமையான கவிதை தோழரே !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது மின்னஞ்சல் : saamaaniyan74@gmail.com

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் இதுவும் கவிதை என்றதற்கும் நன்றி நண்பரே!
      உங்களை அண்ணன் என்றுதான் அழைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
      மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.
      எழுத்துருக்கள் மாறி உள்ளனபோல் தெரிகிறது. உங்கள் பின்னூட்டப் பகுதியிலிருந்து அதை எடுத்துக் கொள்ளலாம்.
      நன்றி.

      Delete
  8. எத்துனைப் படிமங்கள்,

    இந்த வரிகளின் எதார்த்தம்
    // இருக்கும் போதைய
    அருமையுணராமல்,
    இல்லாதானபின் சொல்லித்திரிய,//

    ஜோ.வி சில மாதங்களில் சிகரம் தொடப் போகிறீர்கள்
    முன்தேதியிட்ட வாழ்த்துக்கள் ஜோ.வி.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ தோழர்,
      நிறையத்தான் கற்பனை செய்கிறீர்கள்.
      இதை இப்படிச் செய்யலாம்/ சொல்லலாம் என்ற கருத்தைத் தான் உங்களைப் போன்றோரிடத்திருந்து எதிர்பார்க்கிறேன்.
      உங்களின் பின்னூட்டங்களுக்கான என் கருத்துக்களை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை போலும்.
      நேரமிருப்பின் காண்க.
      நன்றி.

      Delete
    2. பார்த்துட்டேன்...

      Delete
  9. விளையும் பயிரை முளையிலேயே தெரியும் என்பார்களே. அது அவருக்கு( தந்தைக்கு) அப்போதே தெரிந்து விட்டதுபோலும். 12 வயதிலேயே தணியாத தாகத்தோடு இருந்திருக்கிறீர்கள் என்றால் ....நிச்சயம் வெகு சீக்கிரத்தில் உச்சத்தை தொடத்தான் போகிறீர்கள். சகோதரர் மதுவின் கூற்று நிஜமே .ஒவ்வொரு தடவையும் உணர்வேன் நேற்றைய பதிவில் தெளிவாயிற்று. வாழ்த்துக்கள் சகோதரரே!
    தேக்கி வைத்த வேதனை எல்லாம்
    கவியில் வடித்தீர்கள்.
    கரைந்திடும் துன்பம் இனி
    விரையுங்கள் கவிதை வழி !

    ReplyDelete
  10. நேற்று கருத்திடும் போது இதை எழுதிவிட்டு நான் அனுப்பவில்லை. ஏனெனில் நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் என்ற எண்ணமே.

    நான் ராணியாக இருந்திருந்தால் நிறைய பொற் காசுகள் தந்திருப்பேன். ஆஸ்தான பண்டிதராக அமர்த்தியிருக்கலாம். இல்லையேல் பட்டமாவது தந்து கௌரவித்திருக்கலாம். எதுவும் செய்ய முடியவில்லை என்று உண்மையில் கவலை யாக இருக்கிறது.
    என் சிறிய ஆறிவுக்கே என்னவோ புலப்படுகிறது . விபரித்து சொல்லமுடியவில்லை ஆனாலும் தோணுகிறது. மது சொல்வது போல் நிச்சயம் சிகரத்தை தொடத் தான் போகிறீர்கள். அயராது செயல்படுங்கள். வாழ்த்துக்கள் ...! ( இதை பிரசுரிக்க வேண்டியதில்லை சகோதரரே! ) தவறாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் சரி தான். இது வரை நான் பார்த்த கவிதைகள், பதிவுகளில் தங்கள் பதிவுகள் வித்தியாசமானவை யாகவும் தரமானவையாகவும் தான் நான் காணுகிறேன். நன்றி ! அதிகம் எழுதிவிட்டேனோ. மனதில் பட்டத்தை சொல்லிவிட்டேன். மன்னித்துவிடுங்கள் சகோ அதிகப் பிரசங்கி போல் தெரிகிறதோ?

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரி,
      தவறான புரிந்து கொள்ளல் ஒருபோதும் இல்லை என்பதற்காகவே இதை வெளியிடுகிறேன். சிறு வயது முதலே நான் அமைத்துக்கொண்ட ஒரு உலகு. நண்பர்கள் என நான் கருதிய கை விரலினும் குறைந்தோா். அவரோடும் வேடிக்கைப் பேச்சில்லை. விளையாட்டில்லை. நான் இப்படித் தொலைத்தது எவ்வளவோ. அப்படி இழந்ததன் வலி எப்போதும் என்னிலுண்டு. இன்றும் புதியவர்களோடு என்னால் சகஜமாய்ப் பேசமுடிந்ததில்லை. அவர் கருத்துத் தவறெனும் போதும் மறுத்துரைத்ததில்லை. எழுத்து அதையெல்லாம் சாத்தியமாக்கி இருக்கிறது. முகம் தெரியாமல் என்மீது அன்பு கூர்பவர்களை அலட்சியப்படுத்தக் கூடவில்லை என்னால்.
      அறிந்த புத்தகங்களை விட அறியாத உங்களை எல்லாம் பெயர் பெயராக ஆராதிக்கிறேன் நான்.
      எனவே இது மாதிரி என்னை இன்னும் கலாய்க்கலாம் சகோதரி

      Delete
    2. போனது போகட்டும்
      தொடரட்டும் வலைப்பூ பணி..

      Delete
  11. அருமை....உங்கள் வலைதளத்தினை என் வலைதளத்தில் இணைத்துள்ளேன்...பார்க்கவும்....http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அன்பிற்கும் நன்றி சகோதரி

      Delete
  12. " ஐயோ சாமான்யன்,
    திரும்பவும் முதல்ல இருந்தா................................? "

    என நீங்கள் முதலிலேயே முட்டுக்கட்டை போட்டதால் அடக்கி வாசித்தேன் ! ஆனால் மது, இனியா போன்றவர்களின் பின்னூட்டங்கள் நான் நினைத்ததையே குறிப்பிட்டதில் பெருமகிழ்ச்சி !

    கவிதையும் இசையை போன்றது ! ஒரு நல்ல இசையின் அதிர்வு அது நின்றபின்னும் மனதில் ரீங்கரமிடுவதைபோல, வார்த்தைகளிலிருந்து நம் கண்கள் விலகிய பிறகும் அதன் வீரியம் புத்தியில் நிலைத்திருந்தாலே அது நல்ல கவிதை !

    யானை, துடுப்பு, திசைகாட்டி, களஞ்சியம் என எத்தனை படிமங்கள்... இந்த கவிதையை படிக்கும்போதேல்லாம் அந்த நிகழ்வு என் மனைதிரையில் நிழல்படமாய், நானே சாட்சியாய் நிற்பதாய் விரிகிறது ! சரி !! நிறுத்திகொள்கிறேன் !!

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எல்லாரும் என் மேல் கொண்ட அன்பினுக்கு
      நெஞ்சுநிறைய நன்றி உண்டு.
      கவிதைக்கு நீங்கள் கூறிய இலக்கணம் அருமை.
      நானும் மனதிற்குள் ஒரு இலக்கணம் வைத்திருக்கிறேன்.
      நீங்கள் மறுபடி மறுபடி வருவது மகிழ்ச்சியாய் இருக்கிறது.
      மீண்டும் வருக! மீண்டு வருக!
      நன்றி!

      Delete
  13. மனதில் நினைப்பனவற்றை கவிதை வடிவம் பெறும்போது சில கவிதைகள் வெற்றி பெறுகின்றன. அவ்வகையில் இக்கவிதை அடங்கும். உள்ளத்து உணர்வுகளை இவ்வளவு தெளிவாகக் கொணர்ந்தமை நெகிழ்வினைத் தந்தது. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றியுடையேன்.

      Delete
  14. தீராத வலியாய்,மரணம் தரும் பரிசு.உறவுகளின் அருமை இழந்த பின்னே உணரும் கொடுமை.மனம் சொல்ல இயலா உணர்வில்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி கவிஞரே!

      Delete
  15. உயிரின் அந்திமத்தைப் பதிவு செய்யும் அநாயாச வரிகள். சூழல் கண்முன் விரிய கணினித் திரை மறைக்கின்றன கண்ணீர்த்துளிகள். அன்பின் ஆளுமைக்குள் அகப்பட்ட இதயம் அரற்றித் திரியும் வரிகளுக்குள் ஈர்க்கப்பட்டுக் கிடக்கும் அநேக இதயங்களுள் என்னுடையதும் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியுடையேன்.

      Delete
  16. " “என்ன எழுத...... “,
    எனக் கலங்கிக்
    கண்ணிறைந்திருந்த போது
    “என்னை எழுதேன்“ என
    உன்னைக் கொடுத்துவிட்டுப் போகிறாய்" என்ற
    அடிகளில் சக்தி பிறக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. கருத்தினுக்கு நன்றியுடையேன்.

      Delete
  17. இதயம் கனக்கும் கவிதை வரிகள் ஐயா...! வாழ்த்துகள்'...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி அய்யா!

      Delete
  18. பொதுவாக, இந்தத் தலைப்பைப் பார்க்கிறவர்கள் நினைப்பது போல காதல் கவிதை என்றே நினைத்தேன். தந்தையைப் பற்றிய அரிய கவிதைஒன்றைத் தந்தமைக்கு வாழ்த்துகள். பொதுவாக, பாசம் என்றால் அம்மா என்றே சொல்லிச் சொல்லி அம்மாவின் அன்பைக்கூடச் சுரண்டும்உலகம் இது. (அம்மாதான் பால்நினைந்தூட்டவே்ண்டும் என்பதாக.. அப்பா இரவும் தூங்கலாம், பகலிலும் தூங்காமலே ஓய்வெடுக்கலாம் அம்மாதானே அவ்வளவும் செய்யக் கடமைப்பட்ட பாசக்காரி என்று...) அப்பாக்களும் பாசக்காரர்களாய் இருப்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். 1976இல் நான் அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் முதல்பரிசு பெற காரைக்குடித் திருக்குறள் கழக விழாவுக்குப் போகிறேன் என்றதும் காசைக்கொடுத்தனுப்பி விட்டு எனக்குத் தெரியாமலே விழாவுக்கு வந்து,முடியரசன் தலைமையில் சொ.சொ.மீ.சுந்தரம், மீனவன், அரு.நாகப்பனுடன் நானும் கவிதை பாடியதை ரகசியமாய்ப் பார்த்துப் பின்னால் தெரிவித்த என் அப்பா நினைவில் வர.. தொடர்ந்து படிக்கமுடியவில்லை விஜூ... மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டே அடுத்தடுத்த வரிகளைப் படிக்கப் படிக்க.. மீண்டும் படிக்க முடியாத நிலை... அழுத்தமான நினைவுகள், அதைவிடவும் அழுத்தமான வரிகளில்... அர்த்தம் பொதிந்த சொற்கள்... ஒரு நல்ல கவிதைக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? அப்துல் ரகுமானின் பால்வீதி படித்தது மாதிரி இருந்தது. (பால்வீதி அநியாய கனம்... சாதாரண வாசகர்களுக்குப் புரியாது) ஆனால், எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே அனைத்துக் கவிதைகளையும் எழுத வேண்டியதும் இல்லை. “முதலை வாயில்“ போய்க்கொண்டிருந்த போதும் முன்னர்த் தேடிய புத்தகம் கிடைத்தபின்னும் “கலங்கிய“ கணகளில் ஆயிரம் அனுபவ முத்திரை.
    “அன்று உறங்கிப்போன அம்மாவின்
    உறக்கம் கலைந்திடக் கூடாதென
    சிரமறுக்கும் வலிபொறுத்துப்
    பற்கடித்தழுத உன் வேதனை
    பார்த்திடப் பொறுக்கவில்லை எனக்கு!” என்பதில்தான் நானும் உடைந்து போனேன் விஜூ. ஒரு நல்ல கவிதை பலரது அனுபவங்களின் தொகுப்பாக இருக்குமாம். பலரது நோய்க்கு மருந்தாகவும் இரு்க்குமாம்... இது இருக்கிறது.
    கடைசியாக ஒன்று-
    ஓவியர்களில் கோட்டுப் படம் வரைகிறவர்களுக்கு வண்ணப்படம் வரையவராது, படம் வரைகிறவர்களுக்கு எழுத்து வராது என்பார்கள். அதுபோலவே மரபு வருகிறவர்களுக்குப் புதுக்கவிதை வராது என்பார்கள். புதுக்கவிதைக் காரர்களுக்கு மரபு பிடிக்காது என்பார்கள்.
    எழுத்தாளர்களுக்குப் பேச வராது, பேச்சாளர்களுக்கு எழுத வராது என்பார்கள். இதில் விதிவிலக்குகள் உண்டு.நீங்கள் மரபறிந்த புதிய கவிஞர் மட்டுமல்ல, மரபுவேரில் கிளைத்த புதிய விழுது. வாழ்த்துகள்

    ReplyDelete
  19. நம்மின் கவலை,,,,,,,,,,,,,
    அய்யா கலங்கிய கண்களுடன்,
    இருமுன்று வருடங்கள் மட்டுமே
    என் தந்தை
    உடன் இருந்தார்,
    நினைவுகளில் இன்று எதுவும் இல்லை.
    ஆனால் அப்பா என அழைக்க ஏக்கம் உண்டு.
    எல்லாம் தந்த அவருக்கு நான் ஏதும் தரா,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  20. நீங்கள் நம்பினால் நம்புங்கள்; இரண்டு மூன்று இடங்களில் தொடர்ந்து படிக்க முடியாமல் கண்ணீர் மறைத்தது. துக்கம் தொண்டையை அடைக்கப் படித்து முடித்து விட்டு, ஓரிரு நிமிடங்கள் அழுது கொண்டே இருந்தேன்.
    கவிதை என்றால் இதுவல்லவோ கவிதை! தந்தையின் இறுதி நாள் பற்றிய உங்கள் மனவேதனையை அப்படியே வார்த்தைகளில் வடித்துக் கவிதையை வாசிப்போரும் அதே வேதனையை அனுபவிக்கச் செய்து விட்டீர்கள். செயற்கை முலாம் ஏதும் பூசாமல் உள்ளத்திலிருந்து அப்படியே பொங்கிப் பெருகிய உணர்ச்சிப் பிரவாகம்!
    மரணத்தின் இறுதி மூச்சிலும் கலங்கும் உம் கண்களைப் பற்றிக் கவலை கொண்டிருந்த அப்பா, உறங்குவதாய் பாவனை செய்து தலையணை நனைத்துக் கிடந்த அம்மா, அவர் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாது பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்ட அப்பா, இருக்கும் போது அருமை புரியாமல் இல்லாத போது சொல்லித் திரியும் கதைகள், விரும்பிய புத்தகம் வாங்கி கண்ணில் படும் இடத்தில் வைத்து ரசித்த அப்பா…. என எதை எழுதுவது, எதை விடுவது எனக்குழம்பி நிற்கிறேன்.
    எத்தனையோ முறை
    நான் ஏறிவிளையாடிச்
    சாய்ந்துகிடந்த மார்பின்,
    உள்ளிருக்கும் இதயம்
    உறங்காமலிருக்க,
    என்ன செய்யட்டும் நான்?

    என்ற புலம்பல் என் வேதனையை மிகவும் அதிகப்படுத்தியது.
    வாழும் போது மட்டுமல்ல, இறந்த பிறகும் எதை எழுதுவது எனக் கலங்கும் போது தன்னைத் தந்து கவிதை எழுத வைத்த அப்பா! பாராட்ட வார்த்தைகளின்றி தவிக்கிறேன் சகோ!
    உங்கள் எழுத்தில் இது போல் நீங்கள் எழுதிய பழைய பதிவுகள் பற்றிக் குறிப்புத் தாருங்கள் சகோ! அவசியம் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  21. பாராட்டிச் சொல்லவேண்டியதை யாவ்ரும் சோல்லிவிட்டார்கள் . உங்களின் சோகத்தை வாசிப்போர் ஆழ்மனத்தில் ஏற்றுமளவு கவியாற்றல் பெற்றுள்ளமைக்குப் பாராட்டும் அரிய தந்தையை இழக்கக் கூடாத வயதில் இழந்தமைக்கு இரங்கலையும் தெரிவிக்கிறேன் .

    ReplyDelete
  22. வணக்கம் தோழர்... உங்க குறிப்பிலிருந்து இந்தப் பக்கம் வர இத்தனை காலமாயிற்று எனக்கு. மன்னிக்கவும்.

    வலையரங்கத்தில் உங்க அப்பாவின் இறுதி நாட்கள் பற்றி கம்பீரத் தமிழில் கவிதை தர, கண்ணீர் வழியும் கண்களுடன் மனம் உருகி நிற்கிறேன். பீறிடும் துக்கம் தாண்டி கவிதையழகில் சொக்கச் செய்யும் புலமை! வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை எடுத்துச் சொல்ல ஏராளம் இருக்க, மறுபடி மறுபடி வாசித்து வியந்தோதிக்கிடக்கிறது மனசு.

    ReplyDelete