Sunday 23 October 2016

தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ்.

நாஸ்டர்டாமஸ்- எதிர்காலத்தைக் கணித்து எழுதிய குறிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். அவரது காலத்திற்குப் பின் நடந்தனவற்றை அவர் எழுதிய குறிப்புகளோடு பொருத்தி, உலகம் முழுவதும் நடக்க இருப்பதை அன்றே கணித்துச் சொன்னவர் என்ற புகழுக்குச்சொந்தக்காரர்.

அப்பெருமை மேலைநாடுகளுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன?

வருங்காலத்தைக் கணித்தவர் எவரும் நம் தமிழ் நாட்டில் இல்லையா என்று எவரும் கேட்டுவிடாதிருக்கத்(!) தமிழில் அருளப்பட்ட நூலாய் எனக்குத் தோன்றிய நூல்தான் காலக்கியான கும்மி.

எழுதியவர்  செஞ்சி ஏகாம்பர முதலியார்

நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு. – 1898

இவர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கும்முன் நம் தமிழ்நூல்கள் அச்சேறிய காலம் குறித்தும் கொஞ்சம் பார்த்தாக வேண்டும்.

அச்சுத்துறை தமிழகத்தில் பேரெழுச்சியுற்ற காலமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சொல்லாம்.

ஓலைவடிவில் இருந்த தமிழ் நூல்கள் வெகுவேகமாக அச்சாக்கம் பெற்ற காலகட்டம் அது.

அறியாமல் அழியும் சுவடிகளைத் தேடி அலைந்து அச்சாக்கத் துடித்த தமிழ்ப்பற்றுள்ளோர் வாழ்ந்த காலம்.

இன்னோர்புறம், அதுவரை கவனிப்பாரற்றும் ஆற்றில் விட்டும் எரித்தும் போன சுவடிகளைத் தனக்குப் பயனில்லாவிடினும் யாருக்கும் கொடுக்காமல் பூட்டி வைத்ததொரு கூட்டம்.

அழிந்த நூல்கள் உள்ள சுவடிகள் தம்மிடம் இருந்ததாகக் கூறி, தம் புலமை கொண்டு அப்படி ஒரு நூலைத் தம்கற்பனையில் படைத்து, பழைய நாமகரணம் சூட்டித் தமிழ்த்தாய்க்குக் காணிக்கையாக அளித்த பரந்த மனம் படைத்த சிலர் ஒருபுறம்.

இவர்களுக்கு இடையில் இன்று நம்மில் பலர்க்கும் உள்ள ஆசை போன்றே தம் எழுத்துக்கள் எப்படியும் அச்சில் வந்துவிட வேண்டும் என்ற கனவுடன் தம் படைப்புகளை அச்சாக்கம் செய்தவரும் உண்டு. 

அப்படித் தம் எழுத்துக்களை அச்சில் காண விரும்பியவராகத்தான் ஏகாம்பர முதலியார் படுகிறார்.

இந்த நூலின் முதல் பதிமூன்று கண்ணிகள் வாசிக்கும் நிலையில் இல்லை.

வாசித்தவரை, பின்பு நடக்கப்போவது பற்றிய ஆசிரியரின் கற்பனை, அல்லது கணிப்பு என்றே எனக்குப் பட்டது.

இதோ   காலக்கியான  கும்மியில் இருந்து சில பாடல்கள்....,

“மலையின் சிகரத்தி லுண்டாகும்பெரு
மக்கினியாலே வெகுஜனங்கள்
நலிந்து வெந்துபின் மரணம தாகிடும்
நாட்டிலுள்ளோரே அறிந்திடுவீர் ” (15)

“ஊழியெனும் விஷக் காற்றும்  பெருகியே
உள்ளதோர் கட்டிப் பலப்பிணியால்
தாழ விழுந்தும் படுத்தாப்போல் குந்தியும்
தரணியில் வெகுபேர்கள் மடிகுவராம்” (23)

“அண்டத்தில் நாலுவால் வெள்ளி முளைத்திடும்
அதினால் சத்தமும் மரண முண்டாம்
அண்டம் வெடித்திடும் வாறது பூமி
ஆகுஞ் சத்தத்தால் மரண முண்டாம்
கண்டிடும் பாதி ராத்திரி தன்னிலே
காக்கைகள் மெல்லவும் கற்றிடுமாம் (24,25 )

“திருவள்ளூர் வீர ராகவ சாமிக்குத்
தீண்டியே வேர்வை பிடித்திடுமாம்
அருள்வளர் கங்கை யமுனை நதிகளும்
அதிகமாய் வெள்ளம் பெருகிடுமாம்.”

இதில் காணப்படும்  சில பாடல்வரிகள் இரு மதத்தவரிடையே தேவையற்ற பகைமையை உருவாக்கலாம்.

வேலூர், கும்பகோணம் போன்ற நகரங்கள் குறித்தும் கோயில்களின் அழிவு குறித்தும் செய்திகள் இதில் உள்ளன.

காமாட்சி கண்களில் நீர் வடியும். நெல்வயலில் புளியமரம் பூ பூக்கும். எறும்புகள் யானைபோல் பெரிதாகும். குரங்குகள் கீதம்பாடும் பொம்மைகள் பேசும், அம்மாவாசையில் நிலவு வரும். ஆண் ஆடு கன்று ஈனும் என்பன போன்ற அரிய செய்திகள் (?) இந்நூலுள் உண்டு.

இவற்றுள் ஏதேனும் நடப்பின், திரு. ஏகாம்பரமுதலியாரை, தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ் என அழைக்க இடமுண்டு.

இல்லாவிட்டால் என்ன?  மாயாஜாலக் கதைகளுக்கான தமிழின் முன்னோடி நூல் என்ற பெருமையை இந்நூலுக்கு அளிக்கலாம்.

இந்நூலைவிடவும் இதில் காணப்பட்ட விளம்பரம் இன்னும் சுவாரசியமாய் இருந்தது,

அதை இதுவரை காணாதவர்கள் காணக் கீழே சொடுக்குக.


இவ்விளம்பரமும்  நூல்போன்றே மாயாஜாலம்தானோ?

தொடர்வோம்.


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

28 comments:

  1. அனைத்தையும் நாம் ஒதுக்கமுடியாது. அதே சமயம் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சற்றே சிந்தித்து முடிவு செய்துகொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் கருத்துக்களை மனம் கொள்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
  2. //இல்லாவிட்டால் என்ன? மாயாஜாலக் கதைகளுக்கான தமிழின் முன்னோடி நூல் என்ற பெருமையை இந்நூலுக்கு அளிக்கலாம்.//
    தங்களுக்கு நகைச்சுவை திறனும் உண்டு என்பதை நிருபித்து விட்டீர்கள்.
    தங்களின் தேடுதல் அபாரமானது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      தொடர வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  3. சோதிடம் மற்றும் குறிசொல்லுதலின் பேரில் அதிக நம்பிக்கை உள்ளோர் உள்ளவரை இது போன்ற 'சண்டபிரசண்டர்கள்' இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.இவ்வகையான பதிப்புகள் படித்து இரசிப்பதற்காக என நினைக்கிறேன்.எனக்கென்னவொ ,'காலக்கியான கும்மி' ஆசிரியர் சொன்னதை விட அந்த பல்பொடி விளம்பரம் தந்த தகவலை நம்பலாம் போல.

    ReplyDelete
  4. சோதிடம் மற்றும் குறிசொல்லுதலின் பேரில் அதிக நம்பிக்கை உள்ளோர் உள்ளவரை இது போன்ற 'சண்டபிரசண்டர்கள்' இருந்துகொண்டுதான் இருப்பார்கள்.இவ்வகையான பதிப்புகள் படித்து இரசிப்பதற்காக என நினைக்கிறேன்.எனக்கென்னவொ ,'காலக்கியான கும்மி' ஆசிரியர் சொன்னதை விட அந்த பல்பொடி விளம்பரம் தந்த தகவலை நம்பலாம் போல.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      படித்து இரசிக்கவா நகைக்கவா என்பதில்தான் மாறுபாடு.

      இருப்பினும் எழுதிய ஆசிரியரின் நம்பிக்கை ;)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete
  5. அறியாத விடயங்கள் அளித்தீர் திரு. ஏகாம்பர முதலியார் அவர்கள் சொன்னது எதுவும் நடக்கவில்லை நன்று கவிஞரே
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      ஒருவேளை இனி நடக்குமோ:)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  6. சோதிடத்தை நம்புவோர் இருக்கும் வரையில் இதுபோன்ற நூல்களும்தோன்றிக் கொண்டேதான் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கரந்தையாரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  7. அவர் இப்போது இருந்தால் ,சினிமாவுக்கு கதை எழுதி இருப்பார் :)

    ReplyDelete
  8. சிரிப்புத்தான் வருகிறது ஐயா!

    இப்படிப்பட்ட கணிப்புகள் எல்லாம் "இவை நடக்கப் போவதாக நாம் சொல்லும் காலம் வரை நாம் இருந்து பதில் சொல்லவா போகிறோம்" என்கிற நினைப்பில் அள்ளி விடப்படுபவை. இதே போல ஆந்திரத்தில் வீரப்பிரம்மம் என்கிற முனிவர் ‘காலஞானம்’ என்கிற நூலை எழுதியிருக்கிறார். பசுவுக்குக் கழுதை பிறக்கும், திருப்பதி தேவஸ்தானத்துக்குள் முதலை வரும் எனவெல்லாம் பற்பல குறிப்புகளை அவரும் அருளியுள்ளார் (!). ஆனால், அவர் இந்த ஏகாம்பர முதலியார் போலப் பெயர் சொன்னாலும் தெரியாதவர் இல்லை. மிகவும் புகழ் பெற்றவர். என் பாட்டி அவரை மிகவும் கொண்டாடுவார். எங்கள் வீட்டிலும் அந்த நூல் உண்டு. இவையெல்லாம் நடக்குமா நடக்காதா என்பது அப்பாற்பட்ட கேள்வி. முதலில், இப்படிப்பட்ட கணிப்புகளால் எந்தப் பலனும் இல்லை என்பதே உண்மை. இப்படி நடக்கும் என முன்கூட்டியே தெரிந்து கொள்வதால் என்ன பயன்? உடனே கிளம்பி வேறு கோளுக்கு நாம் குடிபெயர்ந்து விட முடியுமா என்ன? செல்வாக்கின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு அது முடியலாம். ஆனால், அப்படிப்பட்டவர்கள் இந்த நூல்களையெல்லாம் படிப்பார்களா என்ன? ஆக, நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கங்களுக்கு உள்ள பயன் கூட இவற்றுக்குக் கிடையாது என்பதே என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      பல்வேறு சமயங்களில் இதைப்போன்ற ஊழிக்காலம் குறித்தும் உலகின் முடிவு குறித்தும், அதற்கான இதைவிட இயற்கையிகந்த காட்சிகள் குறித்தும் விவரணைகள் உண்டு.

      பைபிளில் உள்ள திருவெளிப்பாடு போல.

      கிறித்தவத்தில் என்றில்லை வேறு சமயங்களிலும் ஊழி முடிவிற்கான அறிகுறிகளும் காட்சிகளும் உள்ளன.

      நம்பிக்கை என்ற பெயரிலான பாதுகாப்பு அவற்றிற்கு இருக்கிறது.

      எனக்கு இவ்விடயங்களில் நம்பிக்கை இல்லை.

      உலகின் முடிவு காலம் சமீபமாயிற்று என்ற குரல் மனிதன் இவ்வுலகில் தன் வாழ்வு நிலையானதல்ல என்ற சிந்தனை ஏற்பட்டபோதே தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.. அக்குரல் இன்று வரை ஓய்ந்தபாடில்லை.

      எனக்குள்ள வருத்தம், தமிழின் தொன்னூல்களின் மீட்டெடுப்பு மற்றும் அச்சாக்கப்பணிகளின் ஊடே இதுபோன்ற நூல்களும் தமிழில் அச்சிடப்பட்டனவே என்பதுதான்.

      நீங்கள் சொன்னதுபோன்ற பசுவுக்குக் கழுதை பிறக்கும், கோயிலுள் முதலை வரும் என்பதை ஒத்த குறிப்புகள் இந்நூலுள்ளும் உண்டு.

      பொதுவாகவே என்னைப் பொருத்தவரை, பிழையற்ற தமிழ்நடைக்காகவும் சொல்லாட்சிக்காகவும் நல்லாய்வு மாதிரிக்காகவும் பழைய தமிழ் நூல்களைப் படிப்பதும் மதிப்பதும் உண்டு. என் ஆசிரியர் கற்றுத்தந்த வழக்கம் இது.

      இது போன்ற சில நூல்களை இடையிடையே காணும் போது,

      “தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
         தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா துணிந்த
      நன்மையினார் நலங்கொள்மணி பொதியுமதன் களங்கம்
         நவையாகா தெனஉண்மை நயந்திடுவர் நடுவாந்
      தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்
         தவறுநலம் பொருளின்கட் சார்வராய்ந்ந் தறிதல்
      இன்மையினார் பலர்புகழில் ஏத்துவார்ஏ திலருற்
         றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே!”

      என்ற உமாபதி சிவாசாரியார் பாடல் நினைவிற்கு வருகிறது.

      //நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கங்களுக்கு உள்ள பயன் கூட இவற்றுக்குக் கிடையாது என்பதே என் கருத்து.//

      பஞ்சாங்கங்களிலும் பயன்கண்டதில்லை நான். :)

      காலஞானம் என்னும் நூல் தமிழிலேதும் வந்திருக்கிறதா?

      படிக்க விருப்பமுண்டு.

      வழக்கம்போலவே தங்களின் வருகைக்கும் செறிந்த கருத்துக்களுக்கும் நன்றி.

      Delete
    2. ஆம் ஐயா! தமிழில்தான். எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்புறமாய்த் தேடி எடுத்து நூல் பற்றிய விவரங்கள் அனுப்புகிறேன். அல்லது, முடிந்தால் நூலையே அனுப்பி வைக்கிறேன்.

      Delete
  9. நீங்கள் குறிப்பிட்டதுபோல் அச்சக ஆர்வத்திற்காக எழுதப்பட்டதாக தெரிகிறது. இருந்தாலும் வித்தியாசமான நூலை அறிமுகப்படுத்தியற்கு நன்றி நண்பரே! அந்த பல்பொடி விளம்பரம் இன்னமும் மறக்க முடியவில்லை.
    பகிர்வுக்கு நன்றி!
    த ம 6

    ReplyDelete
  10. யாகவா முனிவரின் முன்னோடி போல் தெரிகிறாரே.. காலக்கியான கும்மி என்ற வார்த்தைக்குப்பொருளிருக்கிறதா? இருப்பின் அறிந்துகொள்ள ஆவல். சுவையானதொரு பழந்தமிழ் நூல் குறித்து அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
  12. ஹா ஹா ஹா! எல்லாமே எதிர்மறை தான். நல்ல கற்பனாவாதியாகவும் இருப்பார் என நினைக்கிறேன். புத்தகக் காட்சிக்குப் போய்ப் பார்த்தால் முன் வரிசையில் சோதிடம் குறித்த புத்தகங்கள் தாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றளவும் இது போன்ற புத்தகங்களின் விற்பனைக்குக் குறைவில்லை. 2000 ஆம் ஆண்டு பூமி அழிந்து விடும் என்று எத்தனை பேர் கதை விட்டுக்கொண்டிருந்தனர்? ஒவ்வொரு நூற்றாண்டிலும் இது போல் கதை விடுபவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது! நன்றி சகோ!

    ReplyDelete
  13. பிற்காலத்தில் பேசப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்படுபவை இவை

    ReplyDelete
  14. செஞ்சி ஏகாம்பரமுதலியாரின் கட்டுக்கதைகளை அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. அருமையான வரலாற்றுப் பதிவு
    இன்றைய வாசகர் அறிவாளிகள்
    தவறாக விளங்கிக்கொள்ள மாட்டார்கள்!

    ReplyDelete
  16. எங்கிருந்து எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் என்று வியக்கிறேன் அண்ணா.. :)

    ReplyDelete
  17. இப்படியும் நூலுண்டு என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் அரிய பதிவு உதவுகிறது ; பாராட்டுகிறேன் .நாஸ்ட்ராடாமஸ் எதையும் வெளிப்படையாய் எழுதவில்லை .ஆகையால் அவர் என்ன சொல்கிறார் என்பதை விளக்குவதற்கு ஏராள உரைகள் எழுதப்பட்டுள்ளன . ஒன்றுக்கு ஒன்று மாறுபாடு .நம்ம ஆள் தெளிவாய் எழுதியிருக்கிறாரே!

    ReplyDelete
  18. இவற்றுள் ஏதேனும் நடப்பின், திரு. ஏகாம்பரமுதலியாரை, தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ் என அழைக்க இடமுண்டு.

    இல்லாவிட்டால் என்ன? மாயாஜாலக் கதைகளுக்கான தமிழின் முன்னோடி நூல் என்ற பெருமையை இந்நூலுக்கு அளிக்கலாம்.// ஹஹஹ்ஹஹஹ்ஹ சகோ இழையோடிய நக்கலுடன் கூடிய நகைச்சுவை!! ரசித்தேன்.

    சமீபத்தில் கூட நாஸ்டர்டாமஸ் எழுதியதாய் சொல்லி அதனைப் பிரித்துப் பொருள் வேறு சொல்லிக் கட்செவிக் குழுவில் உலா வருகிறது.

    Dieu grec ne peut pas sauver la dame de fer
    Son Maitre mourra aussi le lendemain
    Son amie fille de trois tribus
    gouvernera pendant neuf ans
    Terre de trois eaux deviendra super puissance

    இதுதான் வரிகள். இதனை கூகுளில் அடித்தால் அதன் பொருள்....கிரேக்கம் கடவுள் இரும்பு பெண்மணி காப்பாற்ற முடியாது...(கிரேக்கக் கடவுள் அப்போலோ, இரும்புப் பெண்மணி ஜெஜெ...) அவரது மாஸ்டர் அடுத்த நாள் இறக்க (சோ) அவரது மூன்று பழங்குடியினர் பெண் நண்பர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்யும் (மூன்று பழங்குடியினர் - முக்குலத்தோர் என்று பொருளாம்...பெண் நண்பர் (!) )
    இறுதி வரி... பூமியின் மூன்று நீர் சூப்பர் பவர் ஆகிவிடுவார்கள்...அதாவது பாரத புண்ணிய தேசம் சூப்பர் பவர் ஆகிவிடும்...என்றி பொருளாம்.

    தேவி பாகவதம் என்று சொல்லப்படும் ஆன்மீக நூலிலும் மனிதர்கள் இப்போதும், இனியும் எப்படி இருப்பார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதும், கலிகாலம் என்றும், சில நிகழ்வுகளும் அப்போதே கணித்திருப்பதாக வருகிறது. அதைக் கொண்டாடுபவர்களும் உண்டு எங்கள் வீடுகளில்.

    எனக்கு இது போன்றவற்றில் நம்பிக்கை இல்லை.

    தங்களின் இந்தப் பதிவு, புதியதாய் இப்படி ஒருவரைப் பற்றியும் நூலைப் பற்றியும் அறிய உதவுகிறது.

    கீதா

    ReplyDelete
  19. ஆண் ஆடு ஒன்றின் திசு மாதிரியை எடுத்து புதிதாக ஆட்டுக்குட்டியை உருவாக்கி இருக்காங்க. அதனால் செஞ்சி ஏகாம்பர முதலியார் சொன்னது நடந்துடுச்சு

    ReplyDelete
  20. இதுவரை எவ்வளவு ஆழமான பதிவுகளை வாசித்தேன். இப்பதிவு ஏமாற்றம் தருகிறது.

    ReplyDelete