Tuesday 14 October 2014

இரட்டைவால் குரங்கும் இருபதுகால் ஆடும்.



மொழியில்  உள்ள ஒரு சில புதிர்களை, விந்தையான விஷயங்களைக் காணும் போது முதலில் வியப்பு தோன்றும். என்ன சொல்லியிருக்கிறார்கள் அல்லது என்னதான் சொல்ல வருகிறார்கள் நம்மைக் குழப்ப வேண்டுமென்றே கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டிருப்பார்களோ இந்தப் புலவர்கள் என்றெல்லாம் நினைத்தாலும் அந்தப் புதிரை அவிழ்க்கும் சூக்குமம் பிடிபட்டுவிட்டால் தோன்றும்
மகிழ்ச்சிக்கும் அட இதைப்போய் நாம் கவனிக்காமல் விட்டோமே என்ற

அங்கலாய்ப்பிற்கும் குறைவிருக்காது. அதன் பின் அட இவ்வளவுதானா …?

இதற்குப் போய்தான் இவ்வளவு மண்டையைக் குடைந்து யோசித்தோமா

என்று தோன்றிவிடும்.மொழியில் மட்டுமல்ல எல்லாப்புதிர்களுக்குமே இது

பொதுவானதுதான்.

இப்படிப் புதிர்களைக் கொண்டிருக்கிற செய்யுட்கள் பெரும்பாலானவற்றுள் கவிதையின் அம்சத்தை நீங்கள் காணமுடியாது. அது மரபிற்குட்பட்ட ஒரு பாடல் அவ்வளவே.

சரி கதைஅளந்தது போதும் . தலைப்பிற்கு வா என்கிறீர்களா,
இதோ அந்தப்பாடல்,

“கொம்பிலுள்ள மந்திக்கோர் வாலிரண்டு  நின்றுறையும்
கம்பமத யானைக்குக் கால்களெட்டு – எம்பியுண
காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து
ஆட்டிற்(கு) இருபது கால் “

பாடலைப் படித்தால் அது ஒரு விசித்திரமான காடாய்த் தோன்றுகிறது. அங்குள்ள கொம்பில் குதித்தாடும் குரங்கிற்கு இரண்டு வால்கள் இருக்கின்றன. எட்டுகால் பூச்சியைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தக்காட்டில் நிற்கின்ற யானைக்கு எட்டுகால்கள் இருக்கின்றன. தேனை எம்பி எம்பி உண்ண அந்தக் காட்டில் திரியும் கரடிக்கு ஒரு வாய் போதாதாம். எட்டுவாய்கள் உள்ளனவாம்.
அதாவது பரவாயில்லை. அங்குள்ள ஆட்டிற்கு இருபது காலாம். 

அப்படிப்பட்ட காடு எது..? என்னத்தான் சொல்ல வருகிறார் இந்தப் புலவர்…?
ஏதாவது புரிகிறதா…????

எத்தனைமுறை வேண்டுமானாலும் பாடலைப் படித்துப்பாருங்கள்.
விடைதெரிந்தால் உண்மையில் உங்களுக்குத் தமிழ்ச்செய்யுள் வாசிப்புச் சித்தித்திருக்கிறது என்பேன்.

சரி இனி விடை.

நாளை சொல்கிறேன். ஏதாவது க்ளூ கொடுங்கள் என்பவர்கள் இங்கே சொடுக்கவும். இதன் வாசிப்பில் இப்புதிருக்கான விடை இருக்கிறது.
சரியான விடைக்கு நாளைவரை காத்திருங்கள்…!

-------------------------------------------------------------------------------------------------------------
நாளை வரை ஏன் காத்திருக்கவேண்டும் என்று சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கள் அவர்கள் சரியாக இன்றே விடையளித்து விட்டார்.
அதனால் இனி விடையைக் காண்போம்.  பாடலை இப்படிப் பிரித்துப் படிக்க வேண்டும்.

கொம்பிலுள்ள மந்திக்கு ஓர் வால்.
இரண்டு நின்று உறையும் கம்பத யானைக்குக் கால்கள் எட்டு ( நிற்கும் இரண்டு யானைக்கு எட்டுக் கால் தானே!)
காட்டில் திரியும் கரடிக்கு ஓர் வாய்.
ஐந்து ஆட்டிற்கு இருபது கால் சரி தானே!
மீண்டும் பாடலுக்கு முன் உள்ள வரிகளைப் படித்துப் பாருங்கள்.
யாரும் என்னை அடிக்க வரமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
.....................................................................................................................................
இனி கொஞ்சம் இலக்கணம்.
மரபுக் கவிதைகளை எழுதும் போது, பல நேரங்களில், அசை தளை ஓசை எனப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரும்.  அப்படிப்பட்ட தருணங்களில் ஒரு முழுச்சொல்லை உடைத்து இது போல இன்னொரு சொல்லுடன் சேர்த்து அமைப்பதை இலக்கணங்கள் வகையுளிப் படுத்துதல் என்கின்றன.
ஓசைக்காக இப்படிப் பிரித்தும் பொருள் காண நேரும் போது சேர்த்தும் படிப்பதுதான் தமிழ்ச்செய்யுள் வாசிப்பு.
நான் காட்டிய இன்னொரு இடுகையிலும் தலைப்புட்படப் பல வரிகள் இப்படி வகையுளிப் படுத்தி அமைத்திருந்ததையே விடைகாணும் குறிப்பாகக் குறிப்பிட்டேன்.
சரியான விடை கண்டறிந்த சகோதரிக்குப் பாராட்டுகள்.

படம்- கூகுளிலிருந்து எடுக்கப்பட்டது


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

41 comments:

  1. அன்புள்ள நண்பரே!

    ‘இரட்டைவால் குரங்கும் இருபதுகால் ஆடும்’
    ஒரு விசித்திரமான பாடலைப் படியென்றால் என் செய்வது?
    பாடலைப் படித்தேன்...புரியாத புதிராகவே இருக்கிறது...

    அரட்டை அடித்துக்கொண்டே ...
    காலை ஆட்டிக்கொண்டே...
    நாளை வரை காத்திருக்கிறோம்...
    வேறென்ன செய்வது?

    இப்படிச் சொன்னால் சரியாக இருக்குமா?
    யோசித்துப்பார்த்தேன்.
    யோசிக்கவே நேரமில்லை!

    சரியாப்போச்சு என்கிறீர்களா...!
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணவையாரே!

      Delete
  2. வணக்கம் ஐயா!

    புதிரொன்று போட்டுப் புரிந்தீர் நகைப்பு!
    எதிராக என்நிலை இங்கு!

    கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்ற உங்கள் புன்னகைக்கு
    எதிராக என்னால் முடியவில்லை எனும் நிலை எனக்கு!..:)

    //கொம்பிலுள்ள மந்திக்கோர் வாலிரண்டு..// -
    அந்த மரத்திலுள்ள மந்தியை இறுகப்பற்றிக் குட்டியும் இருக்கிறது.
    அதனால் மந்திக்கு வால் இரண்டு!..:) என் ஊகமிது..
    இவ்வளவுதான் என்னால் இப்போதைக்கு முடிந்தது!...:)

    விடையைத் தாருங்கள்! ஆவலில் நானும்!...

    அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முயன்ற அதே சாத்தியங்களை நானும் முயன்று பார்த்திருக்கிறேன் சகோதரி..
      இன்னும் கொஞ்சம் முயல உங்களுக்குச் சூழல் வாய்க்க வில்லை.
      முயன்றிருந்தால் நிச்சயம் முடிந்திருக்கும்.
      நன்றி.

      Delete
  3. Replies
    1. சகோதரி அளித்த பதிலை நாளையே வெளியிடக் கருதினேன். தவறுதலாக அழித்து விட்டேன். அது
      “அண்ணா!!!!!!!!
      I got it!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
      கொம்பில் உள்ள மந்திக்கு ஒரு வால்.
      இரண்டு யானைக்கு எட்டுகால்.
      தேன்குடிக்கும் கரடிக்கு ஒரு வாய்.
      ஐந்து ஆட்டிற்கு இருபது கால்:))))
      ரைட்டா? “
      மிகச் சரியான பதில்தான்.
      தமிழ்ச்செய்யுள் வாசிப்புத் தங்களுக்குச் சித்தித்திருக்கிறது.
      இன்றே இப்புதிரின் விடையை அவிழ்க்க வைத்துவிட்டீர்கள்!
      நன்றி.

      Delete
    2. ஓ! இந்த பாட்டை இப்படி பிரிச்சு படிக்கணுமா?
      நீங்க சொன்னபடி பிரிச்சு படித்து பார்த்தேன், ஆமா நீங்க சொல்கிற மாதிரி தான் விடை வருகிறது.
      சகோதரி, பேசாமல் நீங்கள் ஆங்கில ஆசிரயையாக இல்லாமல் தமிழ் ஆசிரியையாக மாறியிருக்கலாம்.
      அருமை.
      இனிமேல் தான் மறுபடியும் மேலே சென்று நண்பர் என்ன சொல்கிறார் என்று படிக்க வேண்டும்.

      Delete
    3. மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி மைதிலி!

      நானே என் தலைக்குள் ஒன்றும் இல்லை என்பதை
      இங்கு பகிரங்கப்படுத்தியுள்ளேன்! ..:)
      செய்யுளும் இல்லை சிந்தனையும் போதவில்லை எனக்கு!..

      ஐயா அவர்களே!.. இனியும் என்னை உயர்த்திக் கூறாதீர்கள்!..
      அப்படிக் கூறின் உயர்வுநவிற்சி அணியில் சேர்ந்துவிடும்!...:))

      தொடர்ந்து தாருங்கள் ஐயா!
      இனியாவது கற்கின்றேன்!
      நன்றியுடன் வாழ்த்துக்களும்!

      Delete
    4. கவிஞரே இயல்புநவிற்சிதான் எல்லாம்.
      இவை எல்லாம் வார்த்தை விளையாட்டுதானே..!!!
      உங்கள் தலைக்குள் இருந்ததுதான் முதலில் என் தலைக்குள்ளும் இருந்தது சரியா..!
      நீங்கள் கருத்தைக் கூறிவிட்டீர்கள். அதற்காய்ப் பாராட்டத்தான் வேண்டும்.
      உண்மையில் என் நோக்கம் புதிர் விளையாட்டெல்லாம் அன்று. இலக்கணத்தை விளக்குதல் தான்.
      வகையுளிப் படுத்திக் கவிதை எழுதும் உங்களுக்கு இப்பாடல் அவசியமற்றது.
      சரியா!!
      கவலைவேண்டாம்.
      தொடருங்கள்!
      இணைந்து கற்போம்.

      Delete
    5. @ சொக்கன் சகோ
      சும்மா இருங்க சகோ!! யார் பக்கத்தில் யார் தமிழை புகழ்வது ?? விஜூ அண்ணாகிட்ட நாம் எல்லோரும் தமிழ் கற்றுகொள்ளலாம்:)
      @தோழி இளமதி
      மிக்க நன்றி தோழி! ஏதோ சொல்லிட்டேன் அவ்ளோ தான்:)
      @விஜூ அண்ணா
      அண்ணா இதை பொறுமையாக இன்றே வெளிட்டாலும் உங்களை நான் தப்பா நினைப்பேனா?

      Delete
    6. அதென்னவோ உண்மைதான் ஆசானிடம் தமிழ் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டும் இருக்கின்றோம் நாம் எல்லோரும்....ஆனால் நீங்கள் தமிழிலும் ஆசானுக்கு ஏற்ற ஆசானக/மாணவியாக இருக்கின்றீர்கள்....சொக்கன் நண்பர் சொன்னதிலும் தவறில்லை!

      Delete
    7. //யார் பக்கத்தில் யார் தமிழைப் புகழ்வது...???!!!//
      தமிழ்ப்புதிரை அவிழ்த்த உங்களையன்றி வேறு யாரைப் புகழ..?? அதற்கு என் பக்கம் பயன்படுவது மகிழ்ச்சி தானே!!
      ஆசானுக்கு ஏற்ற ஆசானாக என்பது சரியே ஆசானே!

      Delete
  4. கொம்பிலுள்ள மந்திக்கோர் வாலிரண்டு நின்றுறையும்

    கம்பமத யானைக்குக் கால்களெட்டு – எம்பியுண

    காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து

    ஆட்டிற்(கு) இருபது கால் “ மரத்தின் கொம்பில் தொங்கும் குரங்குக்கு வால் ஒன்று நின்றபடி உறங்கும் இரண்டு கம்பமத யானைகளின் கால்கள் எட்டு(4+4) ,காட்டில் திரியும் கரடிக்கு வாய் ஒன்று,ஐந்து ஆட்டிற்கு மொத்தம் கால்கள்(4+4+4+4+4=20)
    விடுகதையின் விடை இதுதான் என்கிறது எனது சிற்றறிவு. நன்றி!

    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பின் தங்கி விட்டீர்கள் புதுவையாரே!
      அதனால் என்ன வந்ததும் கருத்திட்டதும் தங்கள் புலமையைக் காட்டுகிறது.
      தங்களிடம் சென்ற பதிவில் கேட்ட கேள்வியொன்று இன்னும் இருக்கின்றதே அய்யா...
      திரிசூலம் என்பதன் சங்கத் தமிழ் வடிவம்..
      நிச்சயமாய்த் தங்களுக்குப் பதில் தெரிந்தே இருக்கும்.
      தர வேண்டுகிறேன்.
      நன்றி.

      Delete
  5. வணக்கம் !

    இந்தப் பாடலைப் பார்த்த பின் என் மனமும் கொலைவெறி கொண்டு
    அலைந்தது என்பது தான் உண்மை சகோதரா :)))))ஆனாலும் இப்போது
    உங்களை வணங்கத் தோன்றுகிறது வாழ்த்துக்கள் அருமையான பகிர்வு !இவை மென்மேலும் தொடரட்டும் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேலை நான் உங்கள் கண்ணில் படவில்லை கவிஞரே!!!!
      புதிரைப் படித்ததை விட அதை அவிழ்த்த பின்பு தான் பலருக்கும் கொலை வெறி வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
  6. "//ஓசைக்காக இப்படிப் பிரித்தும் பொருள் காண நேரும் போது சேர்த்தும் படிப்பதுதான் தமிழ்ச்செய்யுள் வாசிப்பு.//"

    தமிழ்ச்செய்யுள் எப்படி வாசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் எனக்கு தான் எங்கே சொல்லை பிரிக்க வேண்டும், எங்கே சொல்லை சேர்க்க வேண்டும் என்று தெரியவில்லை.

    இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தங்களின் அடுத்த இடுக்கையை சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைப் பாடல்களாக நாங்கள் படித்ததெல்லாம்
      “ நிலா நிலா ஓடிவா“ என்பதுதான்.
      நீங்கள் கற்பிக்கும் குழந்தைகள் “ இவ்வே பீலி யணிந்து “ மாலை சூட்டி “ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்“ விளையாடுகின்றன...!
      பார்க்கப் பொறாமையாய் இருக்கிறது அய்யா!
      கண்ணேறு கழித்திடுங்கள்!
      நன்றி.

      Delete
  7. சிறப்பான பாடல்! சிறந்த விளக்கம்! நன்றி!

    ReplyDelete
  8. என்ன சொல்கிறீர்கள் சகோ அடிப்பதா தங்களுக்கா.... எத்துணை அழகு தமிழில் உள்ளன என்று எடுத்துக் காட்டும் தங்களையா மேலும் மேலும் தமிழ் பற்று கூடிக் கொண்டே போகிறது சகோ தாங்கள் தரும் இனியபதிவுகளால் இன்று இதை என் மகளுக்கு வாசித்து புரியவைத்தேன் தெரியுமா. அவரும் மகிழ்ச்சியாகவே கேட்டார். ரொம்ப அருமை! நான் பிந்தி வந்தமையால் அருமையான சந்தர்பத்தை இழந்து விட்டேன். இப்பொழுது வாசிக்க இலகுவாக இருந்தது. முதலில் வந்திருந்தால் வாசித்திருப்பேனோ என்னவோ தெரியவில்லை சகோ . ஆனாலும் பொதுவாக தேவாரம் முதலியவற்றை நான் பிரித்து படிப்பது வழக்கம்.
    மேலும் இனிய பதிவுகள் நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி சகோ ! கணினி சரியாகிவிட்டதே இனி தங்கள் காட்டில் ஒரே மழை தான் இல்லையா சகோ ஹா ஹா ....

    ReplyDelete
    Replies
    1. //இன்று இதை என் மகளுக்கு வாசித்து புரியவைத்தேன் தெரியுமா. //
      உண்மையில் மிக்க மகிழ்ச்சி சகோதரி.
      இவையெல்லாம் மொழிமேல் நாம் ஈடுபாடு கொள்வதற்கான சிறுசிறு விளையாட்டுகள் தான்.
      நம் பிள்ளைகளுக்கு நம்மொழியில் என்ன இருக்கிறது என்பதைக் கொஞ்சமாவது காட்டவேண்டும்.
      நீங்கள் அதை முயன்றிருக்கிறீர்கள் என்றெண்ணும் போது ...
      பதிவால் நிச்சயம் பலன் கிட்டியிருக்கிறது.
      நன்றி

      Delete
  9. எப்படித்த் தாமதித்தது என்று தெரியவில்லை...அதுவும் இல்லாமல் இப்போதெல்லாம் ப்ளாகரில் உடனெ தெரிவதில்லை புதிய இடுகைகள்.....

    ம்ம்ம் மூளையைக் கசக்கிக் கொண்டு விடை கண்டுபிடிக்கலாம் ...என்ன பலதடவை வாசித்திருப்போம்....ஆனால் அதற்குள் மைதிலி சகோதரி விடை பகிர......

    தெரிந்து கொண்டோம். எத்தனை ஒரு அழகான பாடல்! இது போன்று நிறைய எழுதுங்கள் ஆசானே கற்றுக் கொள்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம்..சகோதரி கண்டுபிடித்துவிட்டார்.
      நான் இந்தப் பாடலை விளங்கிக் கொள்ளும் முன் புரிந்து கொண்டதைத்தான் தலைப்பாக்கினேன்.
      சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.
      வள்ளுவன் சொல்லுவானே அய்யா, இந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் இனிதாவது எது என்றால் தம்மை விடத் தம் மக்கள் அறிவார்ந்தவர்களாக இருப்பதைக் காண்பது என்பதுதான்.. புதல்வர்களைப் பற்றிச் சொல்லி இருந்தாலும் கூடத் தம் மக்கள் என்பதை “நம்முடையவர்கள்“ “நம்மைச் சார்ந்தவர்கள்“ என்றும் பொருள் விரித்துக் காணும் போது
      நம்மவர்கள் நம்மைவிட அறிவுசான்றவர்களாக இருப்பது நமக்குப் பெருமையும் நன்மையும் தானே!
      “தம்மக்கள் அறிவுடைமை“ என்பதில் உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
      தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
      மன்னுயிர்க் கெல்லாம் இனிது
      நன்றி அய்யா

      Delete
  10. வழக்கம் போலவே நான் மிகத் தாமதமாக வந்திருக்கிறேன். (ஆமாம்! முதலிலேயே வந்திருந்தாலும் கண்டுபிடித்துக் கிழித்திருப்பாயாக்கும்?!). இப்படியொரு சுவையான பாடலைப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா! சொக்கன் ஐயா கூறுகிற அதே சிக்கல்தான் எனக்கும். செய்யுள்களைப் படிக்கும்பொழுது எப்படிச் சீர் பிரித்துப் பொருள்கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. மைதிலி கலக்கி விட்டார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      சீர் பிரித்துப் பொருள் காணுதல் “மெய்ப்புப் பணி “ போன்று கடினமான ஒன்றன்று. மிக எளிதானதும் சற்றுப் பயிற்சியால் வருவதுமே!
      நீங்கள் இதைக் காண்பீர்களாகில் மீண்டு(ம்) வருவீர்கள் என்றே நம்புகிறேன்.
      நன்றி.

      Delete
  11. திரிசூலம் என்பதன் சங்கத் தமிழ் வடிவம்.. விரைவில்:::::::::

    நண்பர் ஜோசப் விஜூ அவர்களே
    இங்கு கம்பன் விழா மலர் 13ஆம் ஆண்டு மலர் கண்டேன். மிக்க மகிழ்வுற்றேன்.
    அதில் தங்களது கண்ணன் விடு தூது கவிதையை காணப்பெற்றதில் இனம்புரியாத மகிழ்ச்சி பொன்விழாப் பாவலரை உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.
    உங்களிடம் ஒரு கேள்வி?

    oridinary kozhikku etthanaikkaal?


    புதுவை வேலு

    ReplyDelete
  12. //oridinary kozhikku etthanaikkaal?//
    “ஆடுநரி கோழிக்குப் பத்துகால் என்பீரோ
    பாடு மொழிப்புலமை கொண்டவரே? - நாடியுணர்
    ஆடுநரி நாலிரண்(டு) அக்கோழிக் கோரிரண்டாய்க்
    கூடுதலப் பத்தாங் கணக்கு“
    அய்யா ,
    இப்படியெல்லாம் என்னைச் சோதித்தால் என்ன செய்வேன்..?
    திருவிளையாடலில் தருமி சொல்வதுபோல் எமக்கோ கேட்டுத்தான் பழக்கம்.
    அதுவும் ஆங்கிலத் தமிழென்றால் நான் அம்போ தான்!
    கம்பன் விழா மலரில் கவிஞர் பற்றிய தூது வந்துள்ளதாகத் தாங்கள் குறிப்பிடும் செய்தி நான் இதுவரை அறியாதது. புதியது. அறியத் தந்தமைக்கு நன்றி!
    பின் திரிசூலம்..
    தாங்கள் இட்ட பின்னூட்டம் ஒன்றிலேயே அதற்கான குறிப்பிருந்ததே அறிஞரே..???
    தாங்கள் அறிந்து கொண்டுதான் வெளியிடாமல் இ்ருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
    ( இனிமேலேனும் இப்படிச் சோதிக்க மாட்டீர்கள் தானே....???)

    ReplyDelete
  13. இது போன்ற விந்தையான, புதிர் நிறைந்த பாடல்களை பள்ளிப்பாடங்களில் வைத்திருந்தால் நானும் சுவாரஸ்யமாக தமிழ் கற்று உங்களுக்கு போட்டியாகி இருப்பேனோ என்னவோ... !

    ஆனால் அதைவிட மகிழ்ச்சியான விசயம் இவைகளை உங்கள் மூலம் கற்றுக்கொள்வது சகோதரரே !

    ( மிக பொருத்தமான, அற்புதமான படத்தேர்வு ! மணல் சிற்பமா ? )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      தாமதமான பதில்தான் .
      மன்னிக்க!
      என்னுடன் போட்டியா...???!!!
      நான் தான் எப்போதே சரண்டர் ஆகி விட்டேனே..!
      இன்னும் என்னை போட்டுத்தாக்க வேண்டுமா??
      சுவையான பாடல்கள் பல இருக்கின்றன.
      அப்படிச் சொல்லித்தருபவர்தான் வரவர குறைந்துவிட்டனர்.
      நானும் இப்பொழுதுதான் கற்றுக் கொணடிருக்கிறேன்.
      இணைந்தே கற்போம்.
      நன்றி

      Delete
  14. ஐம்பது கம்ப ராமாயணம் கவிதைகள் மனப்பாடம் செய்தால் கவிஞராகலாம் என்று யாரோ சொல்லக் கேட்டது.. தங்கள் தளத்தில் உள்ள கவிதைகளை படித்தால் உடனே கவிஞராகலாம்..

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தங்களின் வருகையும் கருத்தும் காண மகிழ்ச்சிதான்!
      ஆனாலும் இதில் வஞ்சப்புகழ்ச்சி எதுவும் இல்லையே....????

      Delete
  15. நிச்சயமாக இல்லை.. உறுதியாக நம்பலாம். திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

    ReplyDelete

  16. வணக்கம்!

    வல்ல புலமை வழங்கும் எழுதெல்லாம்
    சொல்ல இனிக்கும்! சுகமளிக்கும்! - நல்ல
    வகையுளி செய்து வடித்தஇப் பாட்டில்
    தகையுடன் மின்னும் தமிழ்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. புகைகண்டால் அங்கு நெருப்பிருக்கும் என்பர்!
      வகைகண்ட உம்பா விளக்கம் - நகையென்றே
      அன்னைத் தமிழணிந்(து) ஆழ்ந்து கவிவியந்து
      உன்னைக்கை யாக்கும் உடன்!
      நன்றி அய்யா!

      Delete
  17. நல்ல பாடல் , விளக்கம் அனைத்தும் அருமை ஊமையாரே

    ReplyDelete