Saturday 26 September 2015

புறப்படு வரிப்புலியே!




கண்ணிற் சிறுபொறி! மின்னும் அறிவுடன் கையிற் பெருவலியும்
   கரையுற் றிடுகடல் திரைகற் றிடும்படி காத்திர முயற்சிகளும்
விண்ணிற் கனவுகள் வெல்லும் மனதினுள் வீரத் தினவுடனே
    வாளிற் றிடும்வளர் தோளிற் றமிழினும் வாழ நடையிடுவாய்!!
புண்ணிற் புழுவென எண்ணச் சிதைவுகள் பூக்கு மனமுனதோ?
       பீற்றும் பெருமையின் போதை கலைந்தினும் புத்தி தெளிந்திலையோ?
மண்ணிற் பிறந்ததன் மாண்பும் உணர்த்திட மாந்தர் இடர்களையே
    மாற்றும் கரத்தினைப் போற்றும் உலகிது மானுட னேவருக!

சாதிப் பிரிவினை ஓதும் கழிவுகள் சாக்கடை யில்செலுத்து!
    சந்தை மதங்களைச் சிந்தை உரைத்தபின் வந்த வழிநிறுத்து!
போதி மரம்பெரி யாரின் பகுத்தறி வான தனாலுனக்குப்
    பொந்து எலிகளின் சிந்தை கலங்கிடப் பொய்மை புலப்படுத்து!
நீதி யெனிலுயிர் நல்கல் இனிதென நேர்மை நிலைநிறுத்து!
    நெஞ்சில் குறளறம் செஞ்சொல் திறமுடன் நாட்டை வளப்படுத்து!
போதிப் பவனலன்! சாதிப் பவனெனப் போ..உன் தடைதகர்த்துப்
   போகும் வழியிடை சாகும் துயர்வரும் புன்னகை யால்தடுத்து!

காணும் உயிர்களின் கண்ணீர் துடைப்பவன் கடவுள ராயிருப்பான்!
    கள்ளச் சுயநலம் தள்ளும் புதைகுழி  கல்லறை கள்திறக்கும்!
பேணி மெலியவர் பெரியவர் பெண்களைப் போற்றும் இதயங்களே
       பேறு புண்ணியம் பார்ப்போர் கைதொழும் கோயில் களாயிருக்கும்!
நாணும் செயல்களை நாடும் மனங்களில் நரகம் குடியிருக்கும்!
    நச்சு மரங்களாய் உச்சம் தொடுவன நடுங்கித் துடிதுடிக்கும்!
பூணும் நெறியெலாம் பூமி உயரவே! புழுங்கிப் பசிக்குதெனப்
    புல்லை உண்ணவோ? புகழும் சாயவோ? புறப்படு வரிப்புலியே!

 பா வகை - பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

பதிவர் விழா 2015  மரபுக் கவிதைப் போட்டியின் வகை மாதிரி ( 1 )

உறுதிமொழி.

" புறப்படு வரிப்புலியே" எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இம்மரபுக்கவிதை எனது 

சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன்.

இப்படைப்பு இதற்கு முன் வெளியானதன்று எனவும், போட்டி முடிவு வெளியாகும்

வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்

படங்கள் நன்றி -  http://wellness.nysbs.com/wp-content/uploads/2013/01/victory-main_full1.jpg
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

72 comments:

  1. ஆஹா வாருங்கள் ஐய்யா
    நலம் தானே
    சிங்கம் புறப்பட்டதே
    நரகம் குடியிருக்கும்.......
    அருமையான ஆக்கம்
    தொடருங்ள்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பேராசிரியரே!

      உங்கள் அன்பினுக்கும் பாராட்டிற்கும் என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.

      நன்றி.

      கவனமாய் இருக்கச் சொலலுங்கள் சிங்கத்தை :)

      Delete
    2. சிங்கத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா,
      மரபுக் கவியின் ஆசான் என்று உலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனம் நிறைவாழ்த்துக்கள்.
      நன்றி ஐயா

      Delete
  2. வணக்கம் ஐயா!

    வரவுகண்டு நான் கொள்ளும் மகிழ்விற்கு அளவில்லை!
    நலமாக இருக்கின்றீர்களா?.. நினைக்காத, தேடாத நாளில்லை ஐயா!

    பன்னிருசீர்விருத்தம் பக்கத்தில் வந்து பார்க்க முடியாப் பிரமிப்பைத் தருகிறது!
    வியந்து நிற்கின்றேன்!

    தொடரட்டும் உங்கள் பணி!

    போட்டிக் கவிதையா இது! வெற்றி உங்களுக்கே!..

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!

      நலமாக இருக்கிறேன்.

      உங்கள் அன்பினுக்கும் தேடலுக்கும் நன்றிகள்.

      நிச்சயம் நீங்கள் பிரமிக்க வேண்டியதில்லை. இதை நான் நம்புவதாகவும் இல்லை.

      உங்களுடன் போட்டி போடவும் ஆன கவிதையில்லை.

      தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. அப்படா! புலி பாய்ச்சலைத் தொடங்கிவிட்டது!! நலம் தானே அண்ணா?

    ReplyDelete
    Replies
    1. ஆம்.

      மீண்டும் கூண்டுக்குள் சிக்கும் வரை பாய வேண்டியதுதான்! :)


      நலம்தான் சகோ!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. வாங்க! வாங்க! வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தோம்.
    போட்டியில் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!

      வாகை சூடாவிட்டாலும் தங்களைப் போன்றோர் வாழ்த்துகளே மகிழ்வு.

      நன்றி.

      Delete
  5. உங்களை மீண்டும் வலையில் கண்டது உற்சாகமளிக்கிறது.

    பரிசு நிச்சயம்!வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா

      வணக்கம்.

      தங்கள் அன்பினுக்கும் வாழ்த்தினுக்கும் நன்றிகள்.

      Delete
  6. அய்யா வணக்கம். மைதிலி சொன்னதுதான்..அதோடு, ”ஒவ்வொரு படைப்போடும் "....." எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை / கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" எனும் உறுதிமொழியோடு ஒவ்வொரு படைப்பும் தனித்தனி இணைப்புத் தந்து, அந்த இணைப்பை bloggersmeet2015gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்” அரசுசார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும்போது இதுபோலும் நடைமுறைகளை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம். விழர்க்குழுவுக்காக. (எனினும் இப்படைப்பை நமது தளத்தில் -நீங்கள் இவ்வுறுதிமொழிக்குறிப்பை இணைப்பீர்கள் எனும் நம்பிக்கையில்- வெளியிட்டிருக்கிறோம். பார்க்க-http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html ) இணைக்க வேண்டுகிறேன் நன்றி. நா.மு.விழாக்குழுவுக்காக

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நலமே!

      உறுதி மொழியை இணைத்துவிட்டேன்.

      நன்றி.

      Delete
  7. " போதிப் பவனலன்! சாதிப் பவனென போ..உன் தடைதகர்த்து,
    போகும் வழியிடை சாகும் துயர்வரும் புன்னகை யால்தடுத்து!"......

    அய்யா..நெடு நாள் இடைவெளிக்குப் பிறகு வலைப்பக்கம் வந்து எட்டிப்பார்த்தேன்.மிரண்டு போனேன்.! அடடா .கவிதை வாளை மிக நுட்பமாகச் சுழற்றியுள்ளீர்கள் ..!
    நானும் "முயன்று வெல்வாய் ஞாலமதை!"..என்ற தலைப்பில் அறுசீர் விருத்தம் எழுதியிருக்கிறேன்.அனுப்பவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      ஞாலத்தை வெல்லச் சொல்லும் விருத்தம் பரிசை வெல்ல வாழ்த்துகள்!

      Delete
  8. தங்களைப் புதுகை வலைப்பதிவர் விழாவில் சந்திப்பதில் அனைவரும் ஆவலாக உள்ளோம்.

    ReplyDelete
    Replies
    1. பதிந்திருக்கிறேன்.

      வரப் பார்க்கிறேன் ஐயா!

      நன்றி

      Delete
  9. வணக்கம் வணக்கம் ஐயனே ! தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தோம். நலம்தானே? எங்கே காணோமே என்று வருந்தினேன். வந்தவுடன் போட்டியில் குதித்தாயிற்றா? ம்..ம்.ம் அப்போ வெற்றி நிச்சயம் தானே. இருந்தாலும் வாழ்த்துகிறேன் ...!வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! கவிதை எனக்கெல்லாம் கண்ணைக் கட்டுகிறதப்பனே சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      நலம்தான் நலம்தான்!

      போட்டியில் குதிக்க நேர்ந்தது “ தவிர்க்க முடியா“ மேலிடத்துக் கட்டளை!

      ஹ ஹ ஹா

      வெற்றி தோல்வி பற்றியெல்லாம் இல்லை.

      மிகச்சிறந்த மரபுக் கவிதைகளுடன் பள்ளிப்பருவத்தில் எனக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த கவிஞர் ஒருவரின் கவிதைகளும் போட்டியில் இருக்கின்றன.
      கலந்து கொள்கிறேன் அவ்வளவே!
      தங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

      கண்ணைக்கட்டும் கவிதையாக இருக்கக் கூடாது என விதிமுறையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

      எனவே இதற்கு எப்படி பரிசுகிடைக்கும்?!

      தங்களைப் போன்றோரின் வாசிப்பும் வாழ்த்துமே பரிசுளைவிட மகிழ்வு தரக்கூடியது அம்மா!!

      நன்றி

      Delete
  10. அன்புள்ள அய்யா,

    வரிப்புலி புறப்பாடு கண்டு மிக்க மகிழ்ச்சி. பணியின் நிமித்தமாக நீண்ட இடைவெளிக்குப்பின் பதுங்கிய புலி பாய ஆரம்பித்து விட்டது. பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பா கண்டு... ‘அப்பா...’ என ஆச்சர்யத்தில் வியக்கின்றேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    த.ம.6.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா...!
      புறப்பட்ட புலியை
      யாரும் சுட்டுக் கொல்லாமல் இருந்தால் சரி :)
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  11. அருமை அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
    புதுகைக்கு வருவீர்கள்தானே
    தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
    வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கரந்தையாரே!
      தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி!
      இரு நாட்களுக்கு முன்பும் தங்களை நினைத்தபடி, உமாமகேசுவரனார் மேல்நிலைப்பள்ளியைக் கடந்து சென்றேன்.
      வாய்ப்பிருப்பின் சந்திப்போம்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  12. சாதிப் பிரிவினை ஓதும் கழிவுகள் சாக்கடை யில்செலுத்து!
    சந்தை மதங்களைச் சிந்தை உரைத்தபின் வந்த வழிநிறுத்து!

    சிந்திக்க உறைப்பான வரிகள் இவை

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!

      Delete
  13. ஆஹா! அண்ணா, உங்கள் பதிவைக் கண்டு மகிழ்ச்சி அண்ணா. உங்களைக் காணோமே என்று தேடிக் கொண்டிருந்தேன். நலம் தானே அண்ணா?

    பதுங்கிப் பாய்ந்திருக்கிறீர்கள் :) வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நலம் தான் சகோ!
      கொஞ்சம் அலுவல்..!
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  14. வணக்கம் பாவலரே !

    நீண்டநாளின் பின்னர் தங்கள் வருகையில் மகிழும் என் மனத்தில் வார்த்தைகள் இன்னும் ஒருங்கு சேரவில்லை மரபுக் கவியில் பதிலிறுக்க !

    அழகானா விருத்தப் பா அமைதியாய் இருந்து தொடுத்த சரம் அகிலம் எல்லாம் மணக்கிறது அருமை அருமை பாவலரே போட்டியில் வெற்றிபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!

      தங்களின் வருகைகாண உவப்பு.

      தங்களின் படைப்பும் போட்டிக்கு வரவதற்காகக் காத்திருக்கிறேன்.

      தங்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
    2. வணக்கம் பாவலரே போட்டியில் மரபுக்கவிதைக்கு முதல் இடம் கிடைத்தமை இட்டு வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

      Delete
  15. சிங்கம் ஒன்று புறப் பட்டதே ,பரிசைப் பெற ..புதுகை நோக்கி ...வாழ்த்துகள்:)

    ReplyDelete
    Replies
    1. ஏன் பழைய கை பிடிக்க வில்லையோ :)

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி பகவானே!

      Delete
  16. ஐயாவணக்கம்,தங்களின்வருகைகண்டுமகிழ்ச்சி
    வரிப்புலி தாளத்தோடுபுரப்பட்டுவிட்டதுமாலதிபோட்டிக்கு
    கவிதைஎழுதனுங்கர எண்ணம் இன்னு இருக்கா?அதானே..
    (மூட்டைகட்டியாச்சு)

    ReplyDelete
    Replies
    1. me too same feelings டீச்சர்:(( அவ்வ்வ்வவ்....

      Delete
    2. இதுதானே வேணாங்கிறது..!

      தங்கள் இருவரின் கவிதைகளைக் காணக் காத்திருக்கிறேன்.

      நன்றி

      Delete
  17. கவிதை அருமை...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  18. புலி வெளிப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கிலியுடன்தான் வெளிப்பட்டிருக்கிறது :)

      வருகைக்கும் க ருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  19. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. சாதிப் பிரிவினை ஓதும் கழிவுகள் சாக்கடை யில்செலுத்து!-- அருமை
    சந்தக்கவியினால் சாட்டை சுழற்றியுள்ளமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  21. அப்பாடா! கவிதைப்புலி வந்துவிட்டதா! இப்போது தான் போட்டி களை கட்டியிருக்கிறது! ஒரு மாதம் இடைவெளி விடும் போது ஓர் அறிவிப்பு செய்து விட்டுப் போகக்கூடாதோ? தினமும் வந்து பதிவு வந்திருக்கிறதா எனப்பார்த்து ஏமாந்தேன். இந்தப் பா வகைபற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் வாசிக்கும் போது ஓசை நயம் சிறப்பாக இருக்கின்றது. இதன் ஸ்பெஷல் ஓசை நயமோ? காணும் உயிர்களின் கண்ணீர் துடைப்பவன் கடவுள ராயிருப்பான்!
    கள்ளச் சுயநலம் தள்ளும் புதைகுழி கல்லறை கள்திறக்கும்! அருமை அருமை! வேறு என்னச் சொல்ல?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.
      உங்களை முன்னறிவிப்பின்றிக் காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன்.
      ஓசை அதுதான் மரபுக் கவிதைக்குப் பிரதானம். அதனோடு கவித்துவமும். இவ்விரண்டும் குறையாதிருக்க வேண்டும்.
      தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

      Delete
  22. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்! இது போல் இன்னும் பல ஆக்கங்களை நீங்கள் தர வேண்டும் என்பது என் வேண்டுகோள்!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம்!

      தங்களின் வாழ்த்திற்கு நன்றி.

      Delete
  23. ரசித்தேன். வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வெற்றிபெற வாழ்த்துகள்! பதிவர் விழாவிற்கு அவசியம் வருக!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு நன்றி ஐயா.

      Delete
  25. ஆத்தாடி இனி நானெல்லாம் என்ன எழுதி என்ன பண்றது ?விருதெல்லாம் உங்களை நாடிக்காத்திருக்கையில்....வருகைக்கு நன்றி சகோ..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் எழுத வேண்டும் கவிஞரே.

      காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
  26. ஏதோ பாரதிதாசன் பாடல் படித்தது போல் இருக்கிறது! என்னே ஒரு பீடு நடை!! துளியும் தாளம் தப்பாச் சந்தம்! அற்புதம்! மரபுக்கவிதையில் தங்களை விஞ்ச இங்கு யாரும் இல்லை. பரிசு தங்களுக்கே என்பதில் ஐயமும் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      மரபில் பிரதானம் ஓசைதான் . அது கருத்தோடு சேரும்போது பாலொடு தேன்கலந்தாற் போல்.

      மரபின் ஆயிரமாயிரம் ஆளுமைகள் இங்கிருக்கிறார்கள் ஐயா.

      நானெல்லாம் ஒதுங்கி ஒருமூலையில் நிற்க வேண்டியவனாய் இருக்கிறேன்.

      நீங்கள் கொண்ட பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. ஐயா! தங்களுடைய 'யாது ஊர்? யாவர் கேளிர்?' கவிதைக்குத்தான் பரிசு கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். இருந்தாலும் இந்தக் கவிதைக்குக் கிடைத்ததிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி! பன்னிரண்டு சீர்கள் வைத்துப் பா எழுதுவதெல்லாம் எளிதானதில்லை. அதனால்தான் கொடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். என் பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!

      Delete
  27. நான் சொன்னதே நடந்தது சகோ...முதல் பரிசு பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  28. போட்டியில் முதலிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. வணக்கம் ஐயனே!
    மரபுக் கவிதையில் முதலிடம் பெற்றமைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் நிறைந்த புகழும் வெற்றிகளும் வந்து குவியவும் எல்லா நலன்களும் கிட்டவும் வேண்டி வாழ்த்துகிறேன் ...! அதில் என்ன சந்தேகம் எனக்குத் தான் முதலிலேயே தெரியுமே. மற்றவற்றுக்கும் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  30. வணக்கம் பாவலரே !

    வெற்றிக்குப் பாராட்டுக்கள் மேலும் மேலும் தங்கள் புகழ் ஒங்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  31. அண்ணா!! மிக்க மகிழ்ச்சி!! வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    ReplyDelete
  32. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. போட்டியில் பெற்ற 'வெற்றிக்கு எங்கள்' வாழ்த்துகளும்.

    ReplyDelete
  34. முதல் பரிசுப் பெற்ற நண்பருக்கு இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. அன்புள்ள அய்யா,

    தங்களின் மரபுக்கவிதைக்குப் பரிசு அவசியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். முதல் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  36. நாங்கதா அப்பவே சொன்னோமுல்ல...வாழ்த்துக்கள்சகோவிழாவில்பார்ப்போம்.

    ReplyDelete
  37. அண்ணா, மனமார்ந்த வாழ்த்துகள் :)

    ReplyDelete
  38. வணக்கம் ஐயா,
    வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  39. வரிகளில் வரிப் புலி பாயும் உத்வேகம் தெரிகிறத்கு. படித்தவுடன் நினைத்தேன்...இந்த கவிதை பரிசு பெறும் என்று ! வெற்றி வாகை சூடியதற்கு வாழ்த்துக்கள் ! பரிசுத் தொகை வரும்..! அதற்கு வரி..?!

    ReplyDelete
  40. போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  41. வணக்கம்!

    பன்னிரு சீர்படித்தேன்! பாயும் வரிப்புலியை
    என்னிரு கண்களுள் ஏற்று!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete