Wednesday 5 November 2014

யாப்புச் சூக்குமம்.



ஆசிரியப் பயிற்சியின் போது திருச்சியிலிருந்து மாயனூருக்குத் தினமும் செல்லும் புகைவண்டிப் பயணங்கள் இப்பொழுது எண்ணினாலும் இனிமையானவை. புகைவண்டி திருச்சியிலிருந்து புறப்படுவதால் பெட்டி காலியாகவே இருக்கும். எனக்குப்பிடித்தச் சன்னலோர இருக்கைக்குப் போட்டி இருக்காது. காவிரியும் பச்சைபசேல் வயல்களும் ஓவியம் போல் இருமருங்கிலும் கிடக்கப் புகைப் பெருமூச்சு விட்டபடி ஓடும் இரும்புக் குதிரையின்  சவாரியில் முன்பின்னாய் மேல்கீழாய்ச் சுழலும் தியானானுபவத்தை நினைக்கும் போதெல்லாம்  சட்டென விழுந்துவிடும் மனம்.
பலபல மனிதர்கள்..பலவித அனுபவங்களுடனான இருவருட இரயில் அனுபவத்தில், மேக்குடி நரசிம்மன் அவர்களால்  எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இது. அந்த வண்டியில் அந்தக்காலத்தில் என்னோடு பயணம் செய்த பலருக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். நம் மக்கள் தொகையில் மிகுதியாக உள்ளவர்களைப் போல அவர் ஒரு கவிஞர். அல்லது அப்படி அழைக்கப்பட வேண்டுமென ஆசைப்படுபவர். குறிப்பாய், அந்தப் பெரும்பான்மையுள் சிறுபான்மையாய் இருக்கின்ற மரபுக் கவிஞர். அதிலும் ஆகக் கடினமென்னும் வெண்பாப்புலி.
கரூரில் உரக்கடை ஒன்றில் பணியாற்றிக்கொண்ருந்தார். அவரது

 உருவத்தை நான் விளக்கிக்கொண்டிருக்கப் போவதில்லை. உங்களுக்குத்

 தோன்றும் உருவத்தைப் படைத்துக் கொள்ளும் உரிமையை உங்களின் 

கற்பனா சக்திக்கே விட்டுவிடுகிறேன்.


விற்பனைப் பிரதிநிதி வைத்திருப்பது போல ஒரு பை வைத்திருப்பார். அதில் சில டைரிகள் இருக்கும். டைரிகளில் எல்லாம் அவர் எழுதித் தொகுத்த கவிதைகள். புலி என்று சொன்னேனில்லையா.. அதனாலோ என்னமோ பலர்க்கும் அவரிடத்துச்  சற்றுப்பயம்தான். புலிக்கு மனிதனை வேட்டையாடுவது கசக்குமா என்ன .. அவரது வேட்டையும் மனிதர்கள்தான் !  மெதுவாக நோட்டமிடுவார். பின்னர் பேச்சுக் கொடுப்பார். ஏற்ற இரை கிடைத்து விட்டதென்றால் படாரென்று டைரியை நீட்டி விடுவார். படிச்சுப் பாருங்க..! அவர்கள் கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும்.. படித்ததாய்ப் பாவலா எல்லாம் காட்ட முடியாது. படித்து முடித்ததும்தான் இருக்கிறது சங்கதி.. அவரது குறுக்கு விசாரணை ஆரம்பமாகும். ஒரு கட்டத்தில் விட்டால் போதும் என்று நினைப்பவர்கள் கதறக் கதற வரிகளை விளக்கிக் கொண்டிருப்பார். “ அய்யா உங்கள மாதிரி யாருய்யா இருக்கா! தமிழுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம் நீங்க “ என்று கொஞ்சம் புகழ்ந்தால்தான் விடுவார். அதற்காக அதிகமாகப் புகழ்ந்து விடவும் முடியாது. புகழ்ந்தால் அடுத்த டைரியைப் படிக்கக் கொடுத்துவிடுவார்.
ஆகவே, அகலாது அணுகாது தீக்காய்வார் போல அவரிடம் பயணிகள் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. பெரும்பாலும் தினசரி திருச்சியிலிருந்து கரூருக்கு அலுவலகங்களில் பணியாற்றச் செல்லும் பயணிகள் என்பதால் யாரும் புதுமுகங்களல்லர். எல்லாரும் அவரையும் அவர் எல்லாரையும் அறிந்தே இருந்தார்கள்.
முதலில் பார்க்கும் போது எனக்கு வியப்பாய் இருந்தது. நானோ சம்சா மடித்துக் கொடுக்கும் காகிதத்தைக் கூட இருபக்கமும் படித்தபின்தான் தூக்கி எறிபவன்.  அதனால் இயல்பாகவே என்ன எழுதியிருக்கிறார்  என்று படிக்க வேண்டும் என்று ஆர்வமும் இருந்தது. பின்னர் மற்றவர்கள் அவர் கையில் சிக்கிப் படும் பாட்டைக் கண்ட பிறகு, அய்யா வந்தாலே கோமாவில் கிடக்கிறவனை மிஞ்சும் நடிப்பில் அறிதுயிலில் ஆழ்ந்து விடுவேன்.
“ நீ எல்லாம் ஒரு ஆளா? தூங்கிற மாதிரி ரொம்ப கஷ்டப்பட வேணாம் தம்பி! எங்கவிதையெல்லாம் படிக்கவும் கருத்துச் சொல்லவுமே ஒருதகுதி வேண்டும் !“என்று அவர் நினைப்பதாக எனக்குப் பட்டது. அவரோ என் பக்கத்தில் கூட வரவில்லை. அதனால் சில வாரக் கோமாவுக்குப் பின் நான் சுயநிலைக்கு வந்துவிட்டேன். அவர் என்னைச் சீண்டமாட்டார் என்ற நம்பிக்கை இருந்தது.
இப்படி ஒரு நான்கு மாதம் ஆயிருக்கும். அன்று அவர் கண்ணுக்கு யாரும் சிக்கவில்லை போல.கணித ஒப்படைப்பு ஒன்றிற்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த என் முன்னால் கருப்பு நிற அட்டையிட்ட டைரி நீட்டப்படத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
“ தம்பி வாத்தியாருக்குத்தான படிக்கிறிங்க..?“
புலி பதுங்குகிறது.
“ஆமாம் சார்.“
“புத்தகம் எல்லாம் படிக்கிறதுண்டா? உடனே கல்கி குமுதம்ன்னு சொல்லிடாதீங்க“
“படிப்பேன் சார்“
“ நம்ம வந்து தம்பி! உங்கள மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிச்சதில்ல.அந்தக் காலத்து எட்டாம் கிளாஸ். இலக்கண சுத்தமா கவிதை எழுதுவேன். அப்பறம் இதோ இதக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க“
 இரயிலில் என்னை அண்ணா என அழைக்கும் நான் நண்பர்கள் எனக்கருதும் இருவர் என்னோடிருந்தனர். மகாதானபுரத்தில் ITI படிக்கும் குருமூர்த்தியும், ஸ்ரீதரும். அவர்கள், அவர் பின்னால் நின்று கொண்டு சைகைகளால் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்திருந்தனர்.
“மாட்டிகிட்டிங்களா? மாட்டிகிட்டிங்களா“ என்று சொல்வது அவர்களின் கையசைவில் இருந்து தெரிந்தது.
“ ஐயா, மன்னிக்கனும். எதுனாலும் நான் அடுத்தவங்க டைரியெல்லாம் படிக்கிறதில்ல “
“ ஐயோ , இது டைரியில்லப்பா..! எல்லாம் என் கவிதைகள். சும்மா இலக்கணம் தெரியாம என்னமோ ஏதோன்னு எழுதற புதுக்கவிதைகள் இல்ல..
இலக்கணச்சுத்தமா எழுதப்பட்ட மரபுக் கவிதைகள். இப்பெல்லாம் யாரும் எழுதாத வெண்பாக்கள். பொதுவாத்தான் எழுதியிருக்கேன் நீ பாக்கலாம்.“
டைரியைத் திறந்து என் கண்முன் நீட்டினார்.
ஒரு கணம் தயங்கி, எழுத்துகள் கண்ணில் விழ நான் வாங்கி விட்டேன்.
முதலில் பிள்ளையார் சுழியுடன் விநாயகர் துதி,
“ தொந்தி கணபதியை சிந்தை… “
என்று என்னமோ சரியாய்த்தான் தொடங்கியிருந்தார். என் கண்கள் நகர நகர என் முகபாவனை மாற்றத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவர் என் கையில் இருந்த பென்சிலால் அவரது டைரியில் இடத்தொடங்கியிருந்த வட்டங்களைக் கவனிக்க வில்லை. எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் என் கையில் ஒரு பென்சில் இருக்கும். பிழைகள் என்று தெரிவனவற்றைத் திருத்தவும், நன்றாக உள்ளவற்றைத் தனியே குறிப்பெடுத்துக்கொள்ளவும் நான் பள்ளிமுதலே கடைபிடித்து வந்த வழக்கம் அது. முதல் பக்கத்திலிருந்த ஆறு வெண்பாக்களில் இரண்டுதான் தேறிற்று.  அவ்விரண்டும் செருப்பிற்காக வெட்டப்பட்ட கால்களாய்க் காணப்பட அவர் கையில் பட்ட தமிழ் குற்றுயிரும் குலையுயிருமாய் உயிர்கசியக் கதறிக் கொண்டிருந்தது. மற்ற நான்கில் தளைபிழை.
திடீரென்று என் கைநகர்வைப் பார்த்தவர் பதைபதைத்துப் போய் விட்டார்.
“ என்னடா பண்றே?“
“இந்த நான்கும் வெண்பா இலக்கணம் தப்பாகி இருக்குங்க அய்யா“
என்னடா தெரியும் உனக்கு..? அ‘னா ஆவன்னா தெரியுமா ? தேமா புளிமா தெரியுமா? வெண்டளை தெரியுமா? குறை சொல்ல வந்துட்டான். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்னச் சொல்லனும் “
என்றபடி வெடுக்கென என் கையில் இருந்த டைரியைப் பிடுங்கிக் கொண்டு, என்னை ஏதோ சொல்லிக் கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போய்விட்டார் மேக்குடி நரசிம்மன் அய்யா.
பள்ளிக் காலத்தில் எனக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தைகள் இரண்டு.
ஒன்று திருக்குறள். இன்னொன்று அலகிட்டு வாய்பாடு கூறல்.
திருக்குறளைப் பிடிக்காததற்குப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை.
பெருவினா ஒன்று தமிழ் முதல்தாளில் கேட்கப்படும். அதில் நிச்சயம் திருக்குறள் கேள்வி  ஒன்று இடம் பெறும். ஒரு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களின் பொருளையும் உட்தலைப்பிட்டு விளக்க வேண்டும். வெறும் வறட்டு அறிவுரைத் தொகுப்பை யார்தான் விரும்புவார்கள்? விரும்பும்படிச் சொல்லப்படவும் இல்லை.
அதற்கு மாற்றாய் உள்ள வினா பொதுவாகக் காப்பியப் பகுதியிலிருந்து கேட்கப்படும். கதைதானே, கொஞ்சம் நம் கைச்சரக்கையும் கலந்து விடலாம் என்பதால் அவ்வினா எனக்குப் பிடித்தமாயும் திருக்குறள் பிடிக்காததாயும் அமைந்து விட்டது.
அலகிட்டு வாய்பாடு கூறல் பிடிக்காமல் போனதற்குக் காரணம்,
நேர் நேர் தேமா
நிரை நேர் புளிமா
என்று மனப்பாடம் செய்ய வேண்டும். எங்கள் தமிழைய்யா வந்த உடன் ஒப்பிக்க வேண்டும். தவறாகச் சொன்னால் பிரம்படி.
இந்த இழவைப்படித்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று நினைத்துத்தான் அதன்மேல் வெறுப்பு வந்தது.
இரு தேர்வுகளிலும் அப்பகுதியை நான் தொடாமல் இரண்டு மதிப்பெண்களை இழப்பதைக் கண்ட தமிழைய்யாதான் தனியே என்னை அழைத்துக் கேட்டார்.
“என்னடா உனக்குப் பிரச்சனை?“
 “அய்யா, இத மனப்பாடம் செய்யப் பிடிக்கலைங்கய்யா!“
“சரி வேணாம்“
“இதக் கொஞ்சம் பாரு.“
அவர் திருத்திக் கொண்டிருந்த விடைத்தாளில் சிலவற்றை எழுதிக் காட்ட ஆரம்பித்தார். அவர் காட்டியது தேமாவைப் பிரித்தால் ( தே – மா) நேர் நேர் புளிமாவைப் பிரித்தால் ( புளி – மா ) நிரை-நேர் எனவே எந்த வாய்பாட்டையும் மனனம் செய் வேண்டியதில்லை.
“அட! இப்படிப்போகுதா சங்கதி?“
மெல்ல மெல்ல என் விழிகள் வியப்பில் விரிந்தன.
அட ஆமாம் இதைப் போய் ஏன் மனப்பாடம் செய்து கொண்டிருக்க வேண்டும்?
யாப்புச்சூக்குமத்தின் முதல் முடிச்சை அவிழ்த்துக் காட்டியவர் அய்யாதான்!
அப்பொழுது நான் கற்றுக் கொண்டது “நேர் நேர் தேமா“ எனத்தொடங்கும் பெரிய வாய்பாட்டுப் பட்டியல் தேவையில்லை.
அதன் பின்னான எனது பார்வையில் தெரிந்து கொண்டது அந்த நேர் நேர் கூடத் தேவையில்லை என்பதுதான்.
ஸ்ரீதரும் அவர் திட்டிவிட்டு போவதைப் பார்த்துக் கொண்டே கேட்டான்,
“ உங்களுக்கு ஆனா ஆவன்னா தெரியுமான்னா?“
குருமூர்த்திதான் கேட்டான் “ அவர் சொல்ற மாதிரியே வைச்சுக்கிட்டாலும் அப்ப ஆனா ஆவன்னா தெரிஞ்சா வெண்பா எழுதிடலாமா?“
நான் சொன்னேன்.“ இல்ல குரு ! ஆனா ஆவன்னா மட்டுமில்ல ஒண்ணு ரெண்டும் தெரியனும் “
“எனக்கு ரெண்டுமே தெரியும் அப்ப என்னால வெண்பா எழுத முடியுமா?“
“நிச்சயமா முடியும் குரு“
“அப்ப சொல்லிக் கொடுங்கண்ணா“
“நிச்சயமா சொல்லித் தரேன்“
வண்டி குளித்தளையில் நின்றிருந்தது. கொச்சியிலிருந்து வரும் வண்டி சென்ற பிறகுதான் எங்கள் வண்டி புறப்படும். அவர்கள் இறங்க வேண்டிய மகாதானபுரம் வந்து சேர முக்கால் மணி நேரம் ஆகலாம்.
“ம்ம் ..போதும் சொல்லிக் கொடுத்து விடலாம்.“
ஒப்படைவுகள் செய்வதற்கான உதிரித்தாள் ஒன்றை எடுத்துக்கொண்டேன்.
இனிவரும் பகுதிகள் நிச்சயமாய் விளையாட்டாய் வெண்பாக்களை எழுதிப் போகின்றவர்களுக்காக அல்ல.
விளையாட்டாய் வெண்பா எழுத விரும்புகின்றவர்களுக்காக.
எனவே தெரிந்தவர்கள் இத்துடன் நிறுத்தி விடலாம்.
வெண்பாவை மட்டுமல்ல யாப்பை ஒரு கை பார்க்கக் கருதுபவர்கள் என்னுடன் தொடரலாம். முப்பது நாளில் இந்தி கற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, முக்கால் மணி நேரத்தில் நீங்கள் யாப்பைத் தெரிந்து வெண்பா எழுதிவிடுவீர்கள் என்பதற்கான உறுதியை நிச்சயமாய் என்னால் தர முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

குரு மீண்டும் கேட்டான்.
“சும்மா விளையாட்டுக்காகச் சொல்லாதிங்கண்ணா,
வெண்பா எழுத ஆனா ஆவன்னா தெரிஞ்சா போதுமா?“
“நான் முன்னாடியே சொன்னேனே குரு. அதுகூட ஒண்ணு ரெண்டும் தெரிஞ்சிருக்கனும்.“
“விளையாடாதிங்கண்ணா“
“விளையாட்டில்ல குரு, இங்க பார்  இப்ப ஆனா ஆவன்னால, அ குறில் சின்ன ஓசையுள்ள எழுத்து.“
“ஆ நெடில் அ வை விட கொஞ்சம் அதிக ஓசையுள்ள எழுத்து.“
“தெரியுமே அண்ணா! அ குறில். ஆ நெடில்.“
அவ்வளவுதான் குரு. பாதி வெண்பா இலக்கணம் நீ கத்துகிட்டாச்சு!
“அது சரி. அவ்வளவுதானா“
இந்தக் குறில் நெடில் அப்படிச் சொல்லும் போது உயிரெழுத்தில,
அ, இ, உ, எ, ஒ
அப்படி அஞ்சு குறில் இருக்கு.
இந்த அஞ்சும், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன். என்கிற பதினெட்டு மெய்யெழுத்துக் கூடச் சேர்ந்து ( க, கி, கு, கெ, கொ….) உருவாகக் கூடிய உயிர்மெய்க் குறில் 90. (5 x 18= 90) இதோட ஏற்கனவே உள்ள அஞ்சு குறிலையும் சேர்த்தா தமிழில் உள்ள மொத்த குறில் 95  ( 90 + 5 = 95)
இதே போல உயிரெழுத்தில உள்ள நெடில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆக ஏழு. இதுவும் மெய்யெழுத்து 18 கூடச் சேரும் போது மொத்தம் தமிழில உள்ள உயிர்மெய் நெடில் 126 (7 x 18 = 126) 126 + 7 = 133.“

ஸ்ரீதர் சொன்னான், “ எனக்கு அப்பவே தெரியும் இதெல்லாம் நாம மனப்பாடம் பண்ணி வைக்க முடியுமா? சொல்லும் போது ஈசி ன்னிங்க.. இப்ப 90, 100, 200 ன்னு அடுக்கிகிட்டே போறிங்க.“
“இல்ல ஸ்ரீதர் இத மனப்பாடம் செய்ய வேண்டியதில்ல . ஒரு எழுத்தப் பாத்தா இது குறிலா நெடிலான்னு கண்டு பிடிக்கத் தெரிஞ்சாப் போதும்.“
“அதென்ன பெரிய விஷயமா?“
“நிச்சயமா இல்லைல்ல.....! நானும் அததான் சொன்னேன்.“
“பெட்டவாய்த்தலை இதில எது குறில் நெடில்ன்னு சொல்ல முடியுமா?
பெ- குறில்
ட – குறில்
வா – நெடில்
த- குறில்
லை – நெடில்
அவ்வளவுதான்.“
 “உயிர்மெய் எழுத்தில இந்த மாதிரி குறிலா நெடிலான்னு சந்தேகம் வந்ததுன்னா, அந்த எழுத்தில இருக்கிற உயிரெழுத்தச் சொல்லிப்பாக்கனும். அதில வர்ற உயிர் குறிலா நெடிலாங்கிற வைச்சு நாம கண்டுபிடிச்சிலாம் இல்லண்ணே?“
“சூப்பர் குரு.“
“இந்த மெய்யெழுத்த விட்டுட்டுத்தானே பிரிப்பாங்க?“ என்றான் ஸ்ரீதர்.
“அதுக்கு நாம இன்னம் வரலை ஸ்ரீதர். மெய்யெழுத்துகளை நாம வெண்பாவிலயோ வேறெந்தப் பழைய பாட்டிலயோ இலக்கணத்த வைச்சுப் பாக்கும்போது கணக்கில எடுத்துக்கிறதில்ல. அதக் கண்டுக்க வேண்டியதில்ல உண்மைதான்.“
“ஏறக்குறைய வெண்பால பாதிக்கிணறு தாண்டிட்டோம்.
அடுத்து, ------ விதிகள் தான்.
சொல்லை வெட்டித் தனித்தனியா அறுக்கிறவேலை. “
“ஏன்ணா திருப்பி ஸ்கூல படிச்ச மாதிரி சொல்றிங்க“.
“இல்ல ஸ்ரீதர்.. இத முதல் எப்படி அறுக்குறதின்னு கத்துகிட்டாத்தான் அப்பறம் நரசிம்மன் அய்யா மாதிரி வெண்பாவில “அறுக்க“ முடியும். விளையாட்டா இத நாம செஞ்சாக்கூட இதுவும் அறுவை சிகிச்சை மாதிரிதான். சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் சொற்களைப் பிரிக்கனும். இப்படிப் பிரிப்பதைத்தான் இலக்கணக்காரர்கள் அசையாகப் பிரிக்கிறதுன்னு சொல்லாறங்க. அசைன்னா ஒரு சொல்லோட  சிறுபகுதி.

முதல்ல மெய்யெழுத்து வந்தா அங்க ஒரு கோடப் போட்டுப் பிரிச்சிடுவோம். இதுதான் முதல் விதி.

பெட்டவாய்த்தலை இத  பெட்- டவாய்த்- தலை ன்னு பிரிக்கலாம்
“ய்த்“ அப்படி இரண்டு மெய்யெழுத்து வந்தாண்ணே?
“எத்தன மெய்யெழுத்து வந்தாலும் அதைச் சேர்த்து அதுக்கப்பறம் தான் கோடு போடனும்! “
“குளித்தலை = குளித் – தலை சரியாண்ணே?“
“சரி!“
“திம்மாச்சிபுரம் = திம்- மாச் – சிபுரம்.“
“சரியா?“
“சரி!“
இப்ப அடுத்த விதி.

மெய்யெழுத்து இல்லாம நெடில் எழுத்து வந்தா அங்க ஒரு கோடு போட்டுத் தனியாப் பிரிக்கனும்

லாலாபேட்டை – லாலாபேட் – டை
இது முதல் விதிப்படி. ( மெய்யெழுத்து வந்தா கோடு போட்டுப் பிரிக்கிறது )
இரண்டாவது விதிப்படி, இத , லா – லா – பேட் – டை
அப்படிப்பிரிக்கனும். ( நெடில் வந்தா தனியாப் பிரிக்கிறது )
ஜீயபுரம்  என்பதை ஜீ – யபுரம்,
ஸ்ரீதர் உன் பெயரை ஸ்ரீ – தர். னு பிரிக்கலாம்.
போதும்ணா புரியுது.“
கடைசியா ஒரே ஒரு விதிதான்.

ஒரு சொல்லில் குறில் எழுத்து வரும்போது தனியா வராது. சின்ன எழுத்துதானே அதனால அதுக்குப் பக்கத்தில ஏதாவது ஓர் எழுத்தைத் துணைக்கு வைச்சுத்தான் பிரிக்கனும். அது குறிலாகவும் இருக்கலாம் நெடிலாகவும் இருக்கலாம். மெய்யெழுத்தாகவும் இருக்கலாம்.

ஏதாவது ஒரு எழுத்துக் கூட இருந்தா போதும் அதுக்கு. சின்னப் பிள்ளங்கள நாம தனியா அனுப்ப மாட்டோம் தான? பெரியவங்க யாராவது துணைக்குப் போவாங்க அல்லது இன்னொரு சின்ன ஆள அவங்க கூடச் சேர்த்துத் துணைக்கு அனுப்புவோம். அது போலத்தான் குறில் ஒரு சொல்லில வரும் போது தனியா வராது பக்கத்தில இருக்கிற ஒரு எழுத்தச் சேர்த்துகிட்டுத்தான் வரும். அதுக்கப்பறம் மெய்யெழுத்து வந்தா முதல் விதிப்படி அதையும் சேர்த்துக்கலாம். “
பெருகமணி இதில எல்லாமே குறில்தான். இதை பெ – ரு – க – ம – ணி இப்படித் தனித்தனியாப் பிரிக்கக் கூடாது.
பெரு- கம – ணி
“ இப்படிக் குறில் பக்கத்தில இருக்க எழுத்தச் சேத்துத்தான் சொல்லணும் “
“எங்க அய்யா சொல்லிக் குடுத்ததுக்கு மாறாச் சொல்றீங்கண்ணே, குறில் தனியா வரும் வந்தா நேரசை ன்னுதான் படிச்சிருக்கேன்.“ என்றான் ஸ்ரீதர்.
“குறில் தனியா வராதுனிங்க பெரு-கம-ணி இதுல கடைசில இருக்க ணி க்கு துணை இல்லையே “ என்றான் குரு.
“கடைசில யாரும் துணைக்கு வரமாட்டாங்க குரு“ என்றேன் சிரித்துக்கொண்டே.
“குறில் பக்கத்தில ஏதாவது எழுத்திருந்தா கண்டிப்பாச்  சேக்கணுமின்னுதானே சொன்னேன். இல்லாட்டி அதுக்காகக் கவலைப்பட வேண்டியதில்லை அப்படியே விட்டுடலாம்.“
“அப்பா அம்மா இல்லாத கூடவும் யாரும் இல்லாம இருக்கிற குழந்தைமாதிரியாண்ணா?“ என்றான் ஸ்ரீதர்.
“அட! நீயும் பாதி வாத்தியார் ஆயிட்டப்பா! அடுத்ததா மாயனூரையே எடுத்தகோயேன்,
மா – யனூர்.
மா -இரண்டாவது விதிப்படி நெடிலைப் பிரிச்சாச்சு.
யனூர் - மூன்றாவது விதிப்படி குறில் பக்கத்தில இருக்க நெடிலோட சேர்ந்திருச்சு, அடுத்ததா வர்ற மெய்யெழுத்து முதல் விதிப்படி அதோட சேர்ந்து யனூர் ன்னு ஆச்சு.

திம்- மாச்- சிபுரம் ன்னு நாம ஏற்கனவே பிரிச்சதையும் திம் –மாச் – சிபு –ரம்
இப்படிப் பிரிக்கலாம்.“
“உங்க ஊரை எப்படிப் பிரிப்பே ஸ்ரீதர்?“
“கொடியாலத்தையா?“
“இல்ல நீ வண்டி ஏறுவியே அந்த ஊர?“
“எலமனூரா ?“
“ம்ம்“
“எல- மனூர்“
“கொடியாலத்தை கொடி –யா- லம்“
“ஆமா,“
“குறிலுக்குப் பக்கத்தில ஏதாவது ஒரு எழுத்து வரணும். அது குறிலாகவோ நெடிலாகவோ மெய்யெழுத்தாகவோ எதுவேணா இருக்கலாம். பக்கத்தில ஏதும் எழுத்து இல்லன்னா மட்டும்தான் குறிலைத் தனியா விடனும் .“
“ஆனா ஆவன்னாங்கிற முதல் கிணற தாண்டியாச்சு ..“
“அடுத்து ஒண்ணு ரெண்டாண்ணா?“ ஸ்ரீதர் கேட்டான்.
“நிச்சயமா.“
“ நாம ஒவ்வொண்ணுக்கும் ஒரு பேர் குடுக்கப்போறோம்.
“முதல்ல இலக்கணம் படிச்சவங்க வைச்ச பேரத் தெரிஞ்சுக்கலாம் அப்பறம் நாம் பேர் வைக்கலாம்.“
“இப்படிப் பிரிக்கத் தெரிஞ்சிகிட்ட பின்னாடி, பிரிச்சிருக்கிற ஒவ்வொரு பகுதியிலயும்  வர்ற எழுத்து ஒண்ணா  ரெண்டாண்ணு பாக்கணும்.“
“நாம ஏற்கனவே பார்த்த மாதிரி மெய்யெழுத்த இந்தக் கணக்கில சேர்க்கவே
கூடாது.
குருமூர்த்தி உன் பேரப்  பிரிச்சா குரு –மூர்த் – தி
முதல்ல குரு 2 எழுத்து
மூர்த் – 1 எழுத்து ( ர் த் இரண்டும் மெய்யெழுத்து கணக்கில வராது)
தி – 1 எழுத்து.“
“அண்ணா மேக்குடி நரசிம்மன் , மேக்- குடி-  நர- சிம் – மன்,
1 -2 -2- 1 -1 சரியா?“
“ரொம்ப சரி! “
“நாமும் இப்ப கம்யூட்டர் லாங்வேஜக்கு வந்துட்டோம் போலண்ணா!“
“அட இது புதுசா இருக்கே அப்படியே வைச்சுக்கோ ஸ்ரீதர் , சரி..இப்படிப் பிரிக்கும் போது 1 எழுத்து வர்ற மாதிரி இருக்கத நேர் அசைன்னும் 2 எழுத்து வர்ற மாதிரி இருக்கத நிரை அசைன்னும் சொல்றாங்க இலக்கணம் படிச்சவங்க!
இப்ப நாம இதுவரை பார்த்த எல்லாத்தையும் நேரா நிரையான்னு பார்த்துட முடியும், நேர் ன்னா 1 நிரை ன்னா 2 அப்படின்னு நாம சொல்லுவோம்.
திம்மாச்சிபுரம் – திம் – மாச் – சிபு – ரம் – 1 – 1 – 2 -1 அதனால் நேர் நேர் நிரை நேர்.
லாலாப்பேட்டை -- லா – லாப்– பேட் – டை --- 1 – 1 -1 – 1 நேர் நேர் நேர் நேர்“
“அண்ணா, மேக்குடி நரசிம்மன்“

“மேக்- குடி-  நர- சிம் – மன் –1 -2 -2 -1- 1 இது நேர் நிரை நிரை நேர்.“
ஸ்ரீதரும் குருவும் தங்களுக்குத் தெரிந்த பெயர்களை எல்லாம் சொல்லி ஒன்று இரண்டு இரண்டு இரண்டு ஒன்று எனச் சொல்லத் தொடங்கி இருந்தனர்.
“இப்பச் சில வார்த்தைகளைச் சொல்லப் போறேன். இதுலதான் இந்த யாப்புங்கிற பூதத்தை அடக்கிறதுக்கு எங்க அய்யா எனக்கு ஆரம்பத்தில கத்துக்குடுத்த சூக்குமம் இருக்கு.“
“தேமாநறுநிழல் இத எப்படிப் பிரிக்கிறது ?
ஸ்ரீதர் கேட்டான்,“  “தேமா“ கேள்விப்பட்டிருக்கேன். அதென்னண்ணா தேமாநறுநிழல்?“
“ அப்படியெல்லாம் வாய்பாடு இருக்குப்பா. நாம அதப்பத்திக் கவலைப்பட வேண்டியது இல்ல . நமக்கு அ னா ஆவன்னா 1, 2 தெரிஞ்சாப் போதுமே!!!
சமாளிச்சுக்கலாம்.“

குரு சொன்னான், “ தே – மா – நறு –நிழல் – 1 -1 – 2 -2 இப்ப 1 என்பதை நேர் ன்னும் 2 அப்படிங்கிறத நிரைன்னும் வைச்சுக்கிட்டா, நேர் நேர் நிரை நிரை . சரியாண்ணா?.“
“அவ்வளவு தான் இதை அப்படியே மாத்திச் சொல்லிப்பாரு
நேர் நேர் நிரை நிரை --- தேமாநறுநிழல்.
இப்படித்தான்
தேமா     –   தே – மா – 1 -1 நேர் நேர்
புளிமா    –  புளி – மா- 2 -1 நிரை நேர்
கருவிளம் –  கரு – விளம்  2 – 2 நிரை நிரை
கூவிளம்  –   கூ – விளம் – 1 -2 நேர் நிரை
இது நாலும் ஒரு வார்த்தைய இரண்டா உடைச்சா வரக்கூடிய சாத்தியங்கள்.
இப்ப மூன்றா உடைக்கனுமின்னா, இதே போல எட்டு சாத்தியங்கள் இருக்கு.
ஆனா வெண்பாவுக்கு இலக்கணம் சொன்னவங்க, சொல்லை மூணாப் பிரிக்கும் போது கடைசியில் நேர் ன்னு முடியறமாதிரிதான் சொற்களை அமைக்கனுமின்னு சொல்லியிருக்காங்க. அப்ப நாலு சாத்தியம் தான்.
தேமாங்காய்  -- தே – மாங் – காய்  1 1  1 நேர் நேர் நேர்
புளிமாங்காய்  -- புளி – மாங் – காய்  2 1 1 நிரை நேர் நேர்
கருவிளங்காய் – கரு – விளங் – காய் 2 2 1 நிரை நிரை நேர்
கூவிளங்காய் – கூ – விளங் – காய்  1 2 1 நேர் நிரை நேர்.
“ அப்ப நம்ம கணக்குப்படிச் சொல்லை மூன்றா அறுத்தோமின்னா கடைசில 1 தான் வரணும் அப்படித்தானண்ணா?“ என்றான் குரு.
“சபாஷ் குரு“
“ அப்பறம் இந்த தேமா புளிமா இப்படிச் சொல்றது  ஒரு பொதுவான பேரா இருக்கட்டுமேன்னுதான், கணிதச் சூத்திரங்களில் நாம் பயன்படுத்தும்  x y  என்பதைப் போல,
நாம் வேண்டுமானால் கருவிளங்காய் என்பதை பொரியுருண்டை என்று கூடச் சொல்லலாம்.“
“ஆமாண்ணா, கரு – விளங்- காய்……பொரி – உருண்- டை,  இரண்டுமே 2 -2 1 – நிரை நிரை நேர் தான்“ என்றான் ஸ்ரீதர்.
“இப்போது வெண்பாவின் கட்டமைப்பைப் பார்ப்போம்.
இதற்கும் மூன்று விதிகள் தான்.
1.   இரண்டாப் பிரிக்கக் கூடிய ஒரு சொல்லின் இறுதியில் நேரும் வரலாம் நிரையும் வரலாம். அதாவது 1 ம் வரலாம் 2 ம் வரலாம். முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இரண்டு அசையில வர்ற சொற்கள் வெண்பாவில வரும்போது காந்தம் மாதிரி ஆயிடுது. அதாவது ஒத்த துருவங்கள் பக்கத்துப் பக்கத்தில வராது. விளக்கமாச் சொல்லனுமின்னா,  ஒரு சொல் இரண்டாப் பிரிஞ்சிருக்கும் போது , கடைசில நேர் வந்தா அதற்கு அடுத்த சொல்லோட முதல்ல நிரைதான் வரணும். நம்ம கணக்கில சொல்லனுமின்னா, இரண்டாப் பிரிக்கக் கூடிய ஒரு சொல்லோட கடைசியில 1 வந்தா அடுத்த சொல்லோட ஆரம்பத்தில 2 வரணும்.
இப்ப இரண்டு சொற்கள எடுத்துக்குவோம்,

“அகர  முதல“

இதப்பிரிப்போம் – அக   –            முத  –   ல
                 நிரை – நேர்         நிரை  - நேர்
இப்ப நம்ம பாணில   அக   –  ர          முத  –   ல

                       2     - 1            2        1

அடுத்து இந்த எடுத்துக்காட்டப் பாருங்க,

  “மலர்மிசை ஏகினான் மாணடி“

இத,     “மலர்   -  மிசை  /       -  கினான் /    மா- ணடி“  இப்படிப் பிரிச்சு,    2     -     2  /      1    -    2    /   1 –  2    ன்னு பார்த்தா
2 இல் முடிஞ்சிருந்தா அடுத்த சொல் 1 இல் தொடங்கி இருப்பதையும்,
1 இல் முடிஞ்சிருந்தா அடுத்த சொல் 2 இல் தொடங்கி இருப்பதையும் கவனிக்கலாம். இரண்டாப் பிரிக்கக் கூடிய சொற்களில்,
1 இல் முடியும் வாய்பாடுகள்  தே மா( 1 -1) , புளிமா (2-1)
2 இல் முடியும் வாய்பாடுகள்  கரு விளம்(2 -2) , கூவிளம்.(1 -2)
மா என்கிற நேரசையில் முடிஞ்சா (1) அடுத்துத் தொடங்கும் சொல் நிரை அசையிலதான் (2) ஆரம்பிக்கனும் என்றும் ( மா முன் நிரை)
விளம் என்கிற நிரையசையில் முடிஞ்சா (2), அடுத்துத் தொடங்கும் சொல்லை, நேரசையில்தான்(1) ஆரம்பிக்கணுமின்னும் ( விளம் முன் நேர்) இதைச் சுருக்கமா “மா முன் நிரை விளமுன் நேர்“ என்றும் இலக்கணக்காரங்க சொல்றாங்க. இப்படி ஒரு சொல்லை இன்னொரு  சொல் கூடச் சேர்க்கிறதுதான் தளை .
“மா முன் நிரை விளமுன் நேர்  என்பதை இயற்சீர் வெண்டளை என்று அவங்க சொல்றாங்க.
    நம்ம பாணில சொல்லனுமின்னா, இரண்டில இரண்டு வந்தா ஒண்ணு. ஒண்ணு வந்தா இரண்டு.. அதாவது இரண்டாகப் பிரிக்கப்படும் சொல்லில் வரும் அசை,  இரண்டில முடிஞ்சா அடுத்து ஒன்றில் தொடங்கும். ஒன்றில் முடிஞ்சா இரண்டில் தொடங்கும் “ இரண்டா உடைச்சாலே காந்தம்தான் நம்ம நினைப்பில வரணும்“
இது வெண்பாவைக் கட்டுறதுக்கான இரண்டு அடித்தளங்களில் முதலாவது.
2. மூன்றிற்கு ( அசைகளுக்கு) மேல் பிரிக்கக் கூடிய சொற்கள் வெண்பாவில் வராது. மூன்று அசைச்சொல்லிலும் கடைசிச்சீர் நேரசையாகத் தான் இருக்கணும்.அதாவது நாம முன்னாடி சொன்னமாதிரி மூன்றா ஒரு சொல்லை அறுத்தோம் என்றால் கடைசியில் 1 வரனும். 2 வரக்கூடாது.
இலக்கணப்படி பார்த்தோமின்னா, மூன்றாக ஒரு சொல்லைப் பிரித்தால் அது காயில் முடியவேண்டும். அப்படிக் காய்விட்டால் அதற்கு அடுத்த சொல்லும் காய்விடும். அதாவது மூன்றாகப் பிரிக்கப்படும் சொல் நேரிலேயே முடிய வேண்டும். அதற்கு அடுத்து வரும் சொல் நேரிலேயே தொடங்க வேண்டும். இதப் பாருங்க,
“எல்லார்க்கும் நன்றாம்“
இதை     -      எல்  –   லார்க்  –   கும் /   நன் -  றாம்
எனப்பிரித்து
                 நேர்  -   நேர்   -  நேர் /   நேர் -  நேர்
                1   -     1    -     1 /    1   -    1
                   தே     மாங்     காய்/     
எனக் காய் எனும் சொல்லை அடுத்து வரும் சொல் நேரசையிலேயே தொடங்குவது போல மூன்றாகப் பிரிக்கும் சொல்லின் கடைசியில் நேரசையாகவும், அதற்கு அடுத்துவரும் சொல்லின் முதல் நேரசையாகவும் இருக்க வேண்டும்.
நமது பாணியில் சொல்லவேண்டுமானால், “மூன்றில் ஒன்றே ஒன்றும்“
மூன்றாகப் பிரிக்கப்படும் சொற்களில் இறுதியில் வருவது ஒன்று (1)             ( அதாவது நேரசை)    அது அதற்கு அடுத்துவரும் ஒன்றுடனே (1) ஒன்றும். அதாவது அதற்கு அடுத்து நேரசையே வந்து சேர வேண்டும்.

இதுவரைப் பார்த்ததை இப்போது எளிதாக எண்களைக் கொண்டு இப்படி ஒப்பிட்டு விளக்கலாம்.
வெண்பாவில் வரும் சொற்களை இரண்டாக அறுக்க முடிந்தால்
தோன்றும் சாத்தியங்கள்
1 – 1
1 – 2
2 – 1
2 – 2
சரியா?

இதுவே இலக்கணிகளின் வாய்பாட்டில் இப்படிச் சொல்லப்படுகிறது.
தே மா    ( 1 – 1 )
கூ விளம் ( 1 – 2 )
புளி மா   ( 2 – 1 )
கருவிளம் ( 2 – 2 )


இப்பொழுது இப்படி இரண்டு அசைகளால் வரும் சொற்கள் வருமானால் முன்னரே நாம் பார்த்தது போல்,
ஒன்றில் முடிந்தால் இரண்டு
இரண்டில் முடிந்தால் ஒன்று
என்று அமையும்.
(1 – 1)  = 2..
(1 – 2)  = 1..
(2 – 1)  = 2..
(2 – 2)  = 1..
இதை இலக்கணிகளின் பார்வையில்

தேமா      (1 - 1)  = நிரை ( 2 எழுத்து )
கருவிளம்  (2 - 2)  = நேர்  ( 1 எழுத்து )
புளிமா     (2 – 1)  = நிரை ( 2 எழுத்து )
கூவிளம்   (1 - 2)  = நேர்  ( 1 எழுத்து )
இரண்டில ( இரண்டு அசை உள்ள சொல்லில்) இரண்டு வந்தா ஒண்ணு,
ஒண்ணு வந்தா இரண்டு,
என்பதையே, விளம் முன் நேர் என்றும் , மாமுன் நிரை என்றும் சொல்கிறார்கள். அதாவது முதல் சொல் விளம் என்பதில் முடிந்தால் (2)
அடுத்து வரும் சொல் நேர் என்பதில் தொடங்கவேண்டும். (1 )
முதல் சொல் மா (1) என்பதில் முடிந்தால், அடுத்து வரும்சொல் நிரை (2)  என்பதில் தொடங்க வேண்டும்.
மூன்றாக நாம் அறுக்கும் சொற்கள் கடைசியில் 1 என்பதில்தான் முடிய வெண்டும். நாம் முன்பே பார்த்த பொதுக்குறியீடு,
      தேமாங்காய்   (1 – 1 – 1)       - நேர் (1)
      புளிமாங்காய்  (2 – 1 – 1)       - நேர் (1)
      கருவிளங்காய் (2 - 2 – 1)       - நேர் (1)
      கூவிளங்காய்  (1 – 2 – 1)       - நேர் (1)

மூன்றில் ( மூன்றாக அறுக்கும் சொற்களில் ) ஒன்றுதான் ஒன்றும் ( இறுதியில் ஒன்றுதான் வரவேண்டும். அதற்கு அடுத்தாக வரும் சொல்லின் முதலிலும் ஒன்றுதான் வர வேண்டும். வாய்பாட்டை நீங்கள் கவனித்தால் தெரியும் காய் என்பதில் முடிந்த வாய்பாட்டின் அருகே நேர் மட்டுமே வரும் இலக்கணக்காரர்கள் “ காய்முன் நேர்“ வெண்சீர் வெண்டளை என்கிறார்கள்.
நாம் “மூன்றில் ஒன்றே ஒன்றும்.“ என்று சொல்லிக்கொள்ளலாம்.
இரண்டே இரண்டு விஷயங்கள்தான் வெண்பாவில் கவனிக்க வேண்டியது
மா முன் நிரை, விளமுன் நேர்
காய் முன் நேர்.
நம் பாணியில் “இனியொரு விதி“ செய்ய வேண்டுமானால்,
இரண்டில் மாறி
மூன்றில் ஒன்றே ஒன்றும்“ வரும் என வைத்துக் கொள்ளலாம்.
3.   இறுதியாக வெண்பாவின் வடிவத்தில் இப்படி இலக்கணப்படி அமைந்த சொற்சேர்க்கையோடு ஒரு அடியில் நான்கு சொற்கள் வரவேண்டும். 
இறுதி அடியில் மட்டும் மூன்று சொற்கள் தான் வரவேண்டும்.
அப்படி வெண்பாவில் கடைசியாக வரும் சொல்,
பிரிக்க முடியாத ஒரே சொல்லாகவோ, (1 அல்லது 2 எழுத்து மட்டுமே கொண்டு), அல்லது இரண்டாக அறுக்கக் கூடிய சொல்லாகவோ மட்டுமே இருக்க வேண்டும். அப்படி இரண்டாக அறுக்கும் சொற்களில் கடைசியாக வரும் சொற்கள் (கு, சு. டு. து. பு. று ) என்கிற ஆறு எழுத்துகளில் ஒன்றோடு முடிவது சிறப்பு. வெண்பாவின் இடையில் இப்படிப் பிரிக்கமுடியாத ஓர் அசையிலான சொற்கள் வரக்கூடாது.
அவ்வளவுதான் இலக்கணம்.
அடுத்துச் செய்ய வேண்டியது,
அறுத்துப் பார்த்துவிட வேண்டியதுதான்.
அக - ர  /     முத - ல /    எழுத்- தெல்- லாம் /     ஆ - தி/
 2    1  /       2    1  /      2       1     1  /      1  1/


பக - வன் /    முதற் - றே/    உல - கு
 2    1  /        2     1 /     2   1 / ( கு என முடிந்தது)

அறி  வற்  றம்/      காக் கும்/     கரு வி/       செரு வார்க் கும்/
 2     1     1  /       1    1 /      2   1 /         2     1     1/

உள் ளழிக் க  /        லா கா/          அரண். /
1      2    1  /         1   1 /            2. /
‘வெண்பா எழுதும் முன் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது நீங்களாக ஐந்து குறளை எடுத்துக் கொண்டு பிரித்துப் பாருங்கள் “ என்றேன்.
“அதையும் நீங்களே கொடுங்கண்ணே“ என்றான் ஸ்ரீதர்,
சரி,

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு.


செறிவறிந்து சீர்மை பயக்கும் அறி்வறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.


நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
என்று ஐந்து குறள்களைக் கொடுத்துவிட்டேன். மகாதானபுரம் வந்து விட்டது.
‘மாலை பார்க்கலாம்’ என்று குருவும் ஸ்ரீதரும் விடைபெற்றனர்.
மாலையில் திருச்சி போவதற்குள், வெண்பாவின் வகைகளையும்  இதில் தோன்றும் குற்றியலுகரம் குற்றியலிகரம் போன்ற யாப்புப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, வெண்பாவை அழகு படுத்தச் செய்ய வேண்டிய சில நகாசு வேலைகளையும் சொல்லிக் கொடுத்து இவர்களை வெண்பா எழுத வைத்து மேக்குடி நரசிம்மன் அய்யாவுக்கு போட்டியாக உருவாகாமல்  விடுவதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டேன்.
( இது உண்மைச் சம்பவமே. பெயர்களும் உரையாடலின் சிறு பகுதிகளும் மாற்றப்பட்டுள்ளன. சுவையூட்டுவதாக நினைத்து (?) சில உரையாடல்களைச் சேர்த்திருக்கிறேன்.)
வெண்பாவின் இலக்கணம் அறியாது வெண்பா எழுத வேண்டும் என்று விரும்புபவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இந்த இலக்கணத்தின் அடிப்படையில் குறைந்த பட்சம் நான்கு சொற்களைப் பொருள்படும்படி தொடராக எழுதிப் பின்னூட்டம் இடுங்கள் என்பதுதான். இதைமட்டும் செய்தீர்களானால் அடுத்த பதிவில் உங்களை வெண்பா எழுத வைத்துவிடுவேன் என்கிற உத்திரவாதத்தை என்னால் கொடுக்க முடியும்.யாப்பின் முதற்படிதான் இது. இது தெரிந்துவிட்டால் பின் விருத்தம் சந்தம் தாழிசைகளை ஒரு கை பார்த்துவிடலாம்.
“என்ன மரபுக் கவிஞராக ஆசை இருக்கிறது தானே?“
உங்கள் பின்னூட்ட வரிகளுக்கான சான்று இது ! இதையும் பிரித்து வெண்பா யாப்பில் வருகிறதா எனப்பாருங்கள்! இது போலச் சில தொடர்களை எழுதுங்கள்.

அடுத்த பதிவில் காண்கிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

125 comments:

  1. திருச்சி to மாயனூர் – தங்களது வெண்பா பயணத்தோடு நானும் பயணம் வந்தேன். எனது ரெயில் பயண அனுபவங்களை மலரும் நினைவுகளாக்கி, ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக நான் எழுதி எனக்குள் படித்துக் கொண்ட வெண்பாக்களையும் நினைவுக்கு கொணர்ந்தன. டைரி மேக்குடி நரசிம்மன் பற்றிய CHARACTER STUDY அருமையான வரிகளில். ரசித்துப் படித்தேன். மீண்டும் வெண்பா பாட வேண்டும் என்ற உணர்வைத் தந்த உங்கள் பதிவினுக்கு நன்றி!

    ஒரே கட்டுரையை நீங்கள் இரண்டு முறை இந்த பதிவினில் பதிந்து விட்டீர்கள் போலிருக்கிறது. எனவே பதிவு பெரியதாக நீண்டு “கூறியது கூறல்” திரும்ப வருகிறது. எனவே திரும்பவும் வரும் பகுதியை நீக்கி எடிட் செய்யவும்.

    Tha.ma.1 (தமிழ்மணம் வாக்களிப்பு எண் சரியாகத் தெரியவில்லை)



    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தங்களின் முதல் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சி.
      கூறியது கூறல் குற்றத்தை மாற்றி முறையின் வைத்து விட்டேன்.
      சுட்டியமைக்கு நன்றி.
      இந்தப் பதிவு என்னை மிகச் சோதித்துவிட்டது.
      நிறங்கள் மாறியும், எழுத்துகள் மறைந்தும், பிழைகள் மலிந்தும் ..
      ஒன்றைச் சரிசெய்ய இன்னொரு பிரச்சனை..வெறுத்து விட்டேன்.
      யாப்புச்சூக்குமம் பிடிபட்ட எனக்குத் தொழில்நுட்பச்சூக்குமம் பிடிபட வில்லை.
      நீங்களும் இரயிலில் அலுவலகப் பணிக்காகச் சென்றிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      தங்களது வெண்பாக்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
      தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
      நன்றி!!

      Delete
  2. அருமை விஜூ! வெண்பா இலக்கணத்தை ரயில் பயணம்போல சுகமாக்கி விட்டீர்கள். எனக்குத் தெரிந்து இதுபோல யாரும் சொன்னதில்லை. அவ்வளவு எளிதாகக் கற்கும் வழியைச் சொல்லிவிட்டீர் அ,ஆ மற்றும் 1,2 வழியான விளக்கம் அனைத்தும் அருமை. இலக்கணப்படி எழுதுவதை எளிதாக்கி விட்டீர். தலைப்பை எளிய வெண்பா இலக்கணம் என்று மாற்றியிருந்தால் கூடுதல் பார்வையாளர் வருவர். இதை உங்கள் வலைப்பக்க இணைப்புடன் எனது வலைப்பக்கத்தில் போட உங்கள் அனுமதி வே்ண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா!
      நம் பணியே கொள்வோர் கொள்வகை அறிந்து கொடுப்பதுதானே?
      இந்தப் பதிவேற்றத்தில் பல தொழில்நுட்பச் சிக்கல்களால் மனம் சோர்ந்து போனேன்.
      தங்களின் பின்னூட்டம் அத்தனை அயற்சியையும் மாற்றி விட்டது.
      நிச்சயமாய்..
      உங்கள் பாராட்டு என்னை இன்னும் எழுதத் தூண்டும்.
      மரபினை அறிய விரும்பும் ஒருவருக்கேனும் இந்தப் பதிவு பயன்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன?
      பகிர்தல் மகிழ்ச்சி !
      நன்றி அய்யா!!!

      Delete
  3. என்ன மரபுக் கவிஞராக ஆசை இருக்கிறது தானே? என் -ன , மர-புக் , கவி-ஞரா- க, ஆ-சை இருக்-கிற- து, தா-னே? 1-1 , 2-1, 2-2-1, 1-1, 2-2-1, 1-1
    இது வெண்பா இலக்கணத்தில் அமைந்திருக்கிறது ஐயா! இலக்கணத்திலும் தமிழிலும் எனக்கும் ஆர்வமுண்டு, அலகிடுதலில் எனது ஐயா, திரு ஆறுமுகம் அவர்களின் பயிற்சியில் எனக்கு ஓரளவுக்கு சீர் பிரிக்கத் தெரிந்து இருந்தாலும் எளிமையாக இன்று சீர் பிரிக்க கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. இந்த பதிவில் ஒரே குறை என்றால் மிக நீண்டு விட்டது. புதியதாக கற்பவர்களுக்கு கொஞ்சம் சலிப்பை உண்டு பண்ணும். இரு பகுதிகளாக பிரித்து தந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதே போல வாய்பாட்டில் கருவிளங்காய்- நிரை-நிரை- நேர் என்று வரவேண்டும். நிரை- நிரை- நிரை என்று வந்துள்ளது சரிபார்க்கவும். மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சியளிக்கிறது அய்யா! நீங்கள் கூறியது மிகச் சரிதான்!
      உங்களுக்கும் மரபுக்கவிதைகளில் ஆசை இருப்பதைத் தெரிந்து கொண்டேன். இது வரை வெண்பா எழுதியது இல்லை என்றால் இது போன்ற தொடர்களை முதலில் முயன்று பாருங்கள்.
      இது நீள்பதிவாக அமைந்ததை அறிவேன். அது தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டது.
      இன்னும் வெண்பாவில் சில நுட்பங்களைச் சொல்ல வேண்டும்.
      அதை அடுத்த பதிவாக அமைத்திடக் கருதினேன்.
      இதையே இரண்டாகப் பிரித்தால் தொடர்கதை போல் ஆகிவிடும்.
      கருவிளங்காயையும் இன்னும் பதிவிலிருந்த சில பிழைகளையும் சற்றுமுன் திருத்தினேன்.
      தங்களின் வருகைக்கும் பிழைசுட்டிக் காட்டியெனைத் திருத்திட எண்ணும் எண்ணத்திற்கும் நன்றிகள்.
      இந்தப் பதிவு மிகுந்த தொல்லையை எனக்குக் கொடுத்துவிட்டது. இவ்வளவையும் தட்டச்சுச் செய்தபின் அழிந்து போனது உட்படப் பலதொல்லைகள்!
      இவை எனக்கு நான் கூறிக்கொள்ளும் சமாதானங்கள் என்றாலும் பிழைகள் நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.
      முடிந்தால் ஒரு தொடரையோ சில தொடர்களையோ வெண்பா யாப்பில் அமைத்துப் பின்னூட்டமிடுங்கள்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  4. //திம்மாச்சிபுரம் = திம்- மாச் – சிபுரம்.“
    “சரியா?“
    “சரி!“//
    சரிதானா?

    சிபுரம் சிபு-ரம் இப்படித்தானே பிரிக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா, முதல் விதி மெய்யெழுத்தைப் பிரிப்பதுதான்.
      அதை விளக்கவே திம் - மாச் - சிபுரம் என்று காட்டினேன்.
      அருள்கூர்ந்து மூன்றாம் விதியின் விளக்கத்தைக் காண வேண்டுகிறேன்.
      அதில்
      திம் - மாச் - சிபு - ரம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  5. இனிய நண்பர் விஜூ, தங்கள் அனுமதியுடன் எனது தளத்தில் இதனை எடுத்துப் போட்டிருக்கிறேன்.

    வெண்பா எழுத விரும்பும் இளையோரை
    அன்பாய் மிகஎளிதாய் ஆற்றுவித்த – நண்பா!நீ,
    “வெண்பா விஜூ“வானாய்! வேறுபல பாவகையும்
    அன்பாய்த் தருவாய் அடுத்து.

    ReplyDelete
    Replies
    1. “என்பால் உளஅன்பால் என்றும் வளர்கவிதை
      உன்பால் இருந்து முயர்பண்பால் - அன்பால்
      கரம்பிடித்துத் தூக்கியெனைக் காணென்று காட்டச்
      சிரம்வணங்கி நன்றி சொலும்!“
      நன்றி அய்யா!

      Delete
    2. வெண்பா பயிற்றுவித்த நண்பா -எமக்கினி
      நண்பா வகையனைத்தும் தா.

      Delete
    3. அதுசரி,
      இது வெண்பாக் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் எல்லாம் வரிசைகட்டி வந்தால் நான் என்ன செய்வேன்.
      உங்களை நான் பயிற்றுவிப்பதா?
      போதும் அய்யா கிண்டல்.
      அது சரி
      இரண்டாவது அடியில் வரும் நண்பா - நன்பா என்பது தானே அய்யா!
      நன்பா வை நண்பா என்பதற்கும் இலக்கணம் உண்டு.
      அது கருதி அமைத்தீர்களோ,?
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  6. மிக நல்ல முயற்சி ஐயா! எங்களைப் போன்றவர்கள் கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும். இது போன்ற பதிவுகள் எக்காலத்தும் பயன்படக் கூடியவை. நன்றி

    ReplyDelete
  7. அய்யா,
    தங்களின் மீள்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. வெண்பா பயிற்றுவித்த நண்பா-எமக்கினி
    நண்பா வகையனைத்தும் தா.
    அய்யா வணக்கம்.புகைவண்டிப் பயணத்தை,இலக்கண வகுப்பாக்கிய திறம் கண்டு வியக்கிறேன்.வெண்பா தவிர (அல்லது உட்பட) அனைத்துப் பாக்களையும்,'நண்பா' எனச் சொல்லலாமா?
    எனக்கு,'ஆசிரியவிருத்தம்'எழுத ஆசை.!
    பாடம் கேட்க ஆவலாக உள்ளேன்.
    மரபுக் கவிதைப் பயிற்சியினைத் தொடங்குங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ஐயா..! கவனமின்றிச் செய்த எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்.
      "வெண்பா பயிற்றுவித்த நண்பா எமக்கினி
      நன்பா வகையனைத்தும் தா." ..என மாற்றினால் தான் சரி. ஆனாலும் இதில் கவித்துவம் இருப்பதாகத் தெரியவில்லை. தொழில் நுட்ப அறிவிலும்,கவித்திறனிலும் நான் pre.kg நிலைக்குக் கீழே! உங்களைப் போலவோ அல்லது நிலவன் அய்யா போலவோ என்னால் விரைவாக,ஆழமாக இயங்க இயலவில்லை.
      தாங்களும்,நிலவன் அய்யாவும் கொடுக்கின்ற பின்னூட்டங்களை எல்லாம் தொகுத்தாலே அவை, இலக்கிய உலகத்திற்குப் பெரும் வரவாக இருக்கும்...இன்னுமொரு வெண்பா எழுதியிருக்கிறேன்.?!?
      "ஊமைக் கனவுகளின் உள்ள வெடிப்புகளை
      ஆமைபோல் ஊர்ந்திடும் என்போன் றவர்க்கு
      தொண்டாற்றும் ஜோசப் விஜூஅய்யா தொண்டுள்ளம்
      கொண்டாட ஏங்குதே நெஞ்சம் !
      நன்றி.!

      Delete
    2. அய்யா ,
      வணக்கம்.
      உங்களது வாசிப்பு .. …ஒருபோதும் உங்களை அது கைவிடப் போவதில்லை.
      நண் - நள் என்கிற சொற்கள் “நடு“ என்கிற பொருளிலேயே தமிழில் ஆளப்படுகின்றன.
      ஆனால் எதுகைக்காக இது போல நன் என்பதை நண் என மாற்றவேண்டியதில்லை. ஏனெனில் வெண்பா - என்பதற்கு நன்பா என்பதும் எதுகைதான்.
      இலக்கணம் இதனை “இன எதுகை“ என்கிறது.
      “தக்கார் தகவிலார் என்ப தவரவர்
      எச்சத்தால் காணப் படும் “
      இங்குத் தக்கார் – எச்சம் என்பதனுள் வரும் “க்“ என்பதும் “ச்“ என்பதும் எதுகைதான்.
      இது வல்லின எதுகை.
      இதை அறியாது
      “தக்கார் தகவிலார் என்ப தவரவர்
      மக்களால் காணப் படும்“
      எனச் செருப்பிற்காகக் காலை வெட்டி, தியாகராச செட்டியாரிடத்திலே போய், வள்ளுவரைத் திருத்தி வான்புகழ் கொள்ள நினைத்து, நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்ட
      சுகாதியர் எனத் தன்பெயர் தோற்றிய W SCOTT பெருமகனார் அனுபவம் பற்றி அறிந்திருப்பீர்கள்.
      இதே போல் ,
      “அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்
      நண்பென்னும் நாடாச் சிறப்பு “
      இங்கும் அன்பு - நண்பு இரண்டும் எதுகைச் சொற்கள் தான்.
      இது மெல்லின எதுகை. இப்பொழுது நீங்கள் வெண்பா – நன்பா என்று கொள்வது சரிதானே?
      கவித்துவம் இல்லை என்று நீங்கள் சொல்வதன் காரணம் விளங்கவில்லை.
      இன்னொரு சாத்தியமும் இதற்கு இருக்கிறது. அது முன்னோர் பாடலில் காணப்படும் ஆட்சி கருதுவது.
      சில பாடல்களில் எதுகைக்காக னகரத்தை ணகரமாகவும் ணகரத்தை னகரமாகவும் மாற்றியும் எழுதியிருக்கிறார்கள்.

      விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
      ……………வேற்கண் மடந்தை விரும்பிக்
      கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு
      ………… கருங்குயிலே யென்ற மாற்றப்
      பண்ணுறு நான்மறை யோர்புது வைமன்ன
      ………. பட்டர்பிரான் கோதை சொன்ன
      நண்ணுறு வாசக மாலை வல்லார்நமோ
      ………நாராய ணாயவென் பாரே!
      இங்கு நன்மை உறும் என்பதை நண் உறு என்று மாற்றிக் கடைகாப்பில் சாதிக்கிறான் பெரியாழ்வான்.
      இதன்படி பார்த்தால் நீங்கள் நல்ல பா எனும் முறையில் நண்பா என்று சொல்வதும் சரிதானே!!
      இது உங்கள் ஆட்சியை நியாயப்படுத்த உதவும் இலக்கியச் சான்று.
      தவிர்க்க இயலாத இடங்கள் தவிர இது போன்ற அரிதான பிரயோகங்களை யாப்பில் தவிர்க்க வேண்டும் என்பதே மரபறிந்தவர்களின் பொதுவான நிலைப்பாடு
      என்னைக் கேட்டால் விதிகளை அறிந்தும் விலக்குகளைத் தெரிந்தும் வைத்திருக்க வேண்டும். என்பேன்.
      வருகைக்கும் உளம் உவக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்!!!

      Delete
  9. எனக்கும் வெண்பாவுக்கும் ரெம்ப..ரெம்ப...தூரம் இருந்தாலும் ..
    நேர் நேர் தேமா
    நிரை நேர் புளிமா என்ன என்பது மட்டும் மண்டையில் குடைகிறது.கொஞ்சம் விளக்குவீர்களா???

    ReplyDelete
    Replies
    1. வெண்பா எழுத வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு நீங்கள் சொன்ன அந்த தூரத்தை என் பங்கிற்குக் குறைக்க நினைத்து இடப்பட்டதுதான் இந்தப் பதிவு வலிப்போக்கரே!
      தேமா, புளிமா எல்லாம் மண்டையைக் குடையக் கூடாது என்பதற்காகத்தான் இதை இப்படி விளக்கினேன்.
      தேமா புளிமா என்பது ஒரு பொதுக்குறியீடுதான்.
      நாம் வேண்டுமானால் அதை மாமா மருகா என்றுகூட வைத்துக்கொள்ளலாம். தடையில்லை.
      ஆனாலும் கூட இதை ஏன் இப்படிச் சொல்லவேண்டும் என்பதில் தான்,
      இயற்கையை நேசித்த, அதனைச் சார்ந்து தம் வாழ்வியலை அமைத்துக் கொண்ட இனக்குழுவின் எச்சம் இருக்கிறது.
      நீங்கள் கவனித்துப் பார்த்தால் குறிஞ்சி முதல் பாலை வரை,
      வெட்சி முதல் வாகை வரை
      தேமா முதல் கருவிளநறுநிழல் வரை எல்லாமே தாவரங்களின் பெயர்கள்தான்.
      ஏனோ தானோ என்று இடப்பட்ட பெயர்கள் அல்ல இவை.இந்தப் பெயரிற்கும் இப்பெயரோடு விளக்கப்படும் இலக்கணத்திற்கும் நுண்ணிய தொடர்பு இருக்கின்றமைதான் மிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
      “ இலக்கணத்தை இயற்கையோடு இணைத்துக் கொண்டுபோதல் “
      வேறு மொழிகளில் இப்படி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தால் அதையும் பாராட்டுவோம். வியப்போம்.
      மனித மாண்பெனக் கொள்ளாத கைக்கிளையையும் பெருந்திணையையும் தாவரங்களின் பெயரிட்டு மாசுபடுத்த விரும்பாத முன்னவர்களின் மதியையும் எண்ணிப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
    2. சிறப்பான கட்டுரை, மற்றும் பதில்.
      நன்றி.

      Delete
    3. தங்களின் வாழ்த்திற்கு நன்றி அய்யா!

      Delete
  10. எளிய நடையில் இனிமையாகச் சொன்னீர்கள்.
    அருமையான பதிவு.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எளிய நடை..
      அதுதான் நான் வேண்டுவது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!

      Delete
  11. வணக்கம்
    இது ஒரு வரம் ...
    பாப்போம் எனக்கு வாய்க்கிறதா என்று
    தம ஐந்து

    ReplyDelete
    Replies
    1. இணைய வழி உங்களின் அறிமுகங்கள்
      நிச்சயம் இது ஒரு வரம் தான்!
      எனக்கே வாய்க்கும் போது உங்களுக்கு வாய்க்காதா என்ன?
      வாய்க்கும் தோழர்!!!

      Delete
  12. வெண்பா மயக்கம் களைந்த சகோவே வளமுடன் வாழ்க..

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா ஒருத்தங்க சிக்கிட்டாங்க
      வெண்பா மயக்கம் களைந்த சகோவே வளமுடன் வாழ்க..
      ... /1-1/....../2-1/........./ 2-1/......../2-1/........../2-2/............../1-1/
      இரண்டாப் பிரிக்கும் போது ஒண்ணு வந்தா இரண்டு ரெண்டு வந்தா ஒண்ணு..!
      அவ்வளவுதான்!!!!
      இதில் பாருங்க வாழ்க வளமுடன் என்பதை வளமுடன் வாழ்க ன்னு எழுதியிருக்கிங்க!
      ஏன்னா “ வாழக வளமுடன்“ என்று இருந்தா முன்னாடி இருக்கிற “சகோ“ கூடச் சண்டை வந்திடும்.
      ஆனா படிக்கிறவங்களுக்குப் புரிஞ்சிடும் இதோட கருத்து.
      யாப்பிற்காக இப்படி மாத்தி அமைச்சாலும் அதைச் சரியாப் படிச்சுப் புரிஞ்சுக்கிறதுக்காகத் தோன்றியதுதான் பொருள்கோள்.
      இப்ப உங்க வரியில வந்திருக்கிற பொருள்கொள் மொழிமாற்றுப் பொருள்கோள்.
      அடிகளில்உள்ள சொற்கள் இப்படி இலக்கணத்துக்காக இருந்தாலும் படிக்கும் போது,
      வெண்பா மயக்கம் களைந்த சகோவே! வாழக வளமுடன்!!
      அப்படிப் படிக்கணும்.
      சரிதானே கவிஞரே!!!
      தங்களின் முயற்சிக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!!!

      Delete
  13. வணக்கம் ஐயா!

    வெண்பா இயற்ற விளம்பினீர் நல்வழி!
    கண்மலர் பூத்ததே காண்!

    ஏர்கொண்டு பாருழுது இட்டாற் பயிர்வளரும்
    சீர்பிரிக்க வெண்பா சிறந்திடும்! - வேரிதுவே!
    பேர்சொல் மரபிற் பிறந்திடும் நற்பாக்கள்
    ஊர்மெச்ச ஓங்கும் ஒலித்து!

    ஐயா..! வெண்பா இயற்றத் தந்த விளக்கம் மிக அருமை!
    எத்தனை வழிவகைள்..! வியப்பொடு நானும் தொடர்கிறேன் ஐயா!
    தொடருந்தில் தோன்றிய பாடமல்லவா.. நானும் ஓடி வந்து
    கடைசிப் பெட்டியில் ஏறிக்கொண்டேன்!..:)

    உங்கள் திறமை! என்னை மிரள வைத்துவிட்டது.!
    நல்ல பதிவு + பகிர்வு! மிக்க நன்றியுடன்
    இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா!

    த ம.7

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே,
      ////வெண்பா இயற்ற விளம்பினீர் நல்வழி!
      கண்மலர் பூத்ததே காண்!///
      பாரதிதாசன் அய்யாவிற்கு இடவேண்டிய பின்னூட்டத்தை மாற்றி இங்கே இட்டுவிட்டீர்கள் போல..!!
      எத்தனை வழிகளில் வந்தாலும் ஆறு கடைசியில் கடலைச் சேர்ந்துதானே ஆக வேண்டும்.
      யாப்பறிந்த உங்களுக்கு இது மறுபயணம் தானே,
      அப்படி யென்றால் கடைசிப்பட்டிதானே முதலாவதாகும்?
      தங்கள் பாராட்டு என்னைப் பயமுறுத்துகிறது.
      இணைந்து கற்போம்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  14. தமிழிலும், மரபுக் கவிதை புனைய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா, நிரை நிரை கருவிளம், நேர்நிரை பூவிளம் என்று பள்ளியில் கற்று, சீர்பிரிக்கச் சிறிது கற்று அப்போது சிறிது முயன்றாலும், பின்னர் விடுபட, இப்போது தங்களது இந்தப் பாடம் மிகவும்பயனுள்ளதாக உள்ளது. எழுதிகின்றோமோ இல்லையோ கற்க உதவியாக இருக்கின்றது ஆசானே!...குறித்துக் கொண்டோம். முழுவ்தையும்.

    முயற்சி செய்து பார்க்கிறோம். ஆனால் கவிதை என்பது மனதிலிருந்து கொட்ட வேண்டும். அல்லாமல் வார்த்தைகள் தேடி கவியமைப்பது என்பது இயலபான உணர்வுகளுடன் இருக்குமா என்பது சிறிது சந்தேகம்தான். ம்ம்ம்ம் பார்ப்போம்....

    நன்றி அருமை ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே,
      நம்மில் பெரும்பாலோர்க்கு இந்த அனுபவமே இருக்கும்.
      அறியாதோர்க்கும் மறந்தோர்க்கும், புதுப்பிக்க நினைப்போருக்குமே இந்தப் பதிவு.
      நேர் நிரை என்றெல்லாம் சொல்வதைவிட இம்முறை எளிதாய் அவ்விருவருக்கும் நான் சொல்லிக்கொடுத்து வெற்றிகண்டது.
      அடுத்து நீங்கள் கூறிய கருத்து.
      என்னால் வெண்பாவை எழுத வைக்க முடியும்.
      கவிதை எழுத வைப்பதாய் நான் கூறவேயில்லை.
      நிறைய கவிதை எழுதுவோருக்கு சோறு, குழம்பு எல்லாம் இருக்கிறது.
      பரிமாறப் பாத்திரங்கள் இல்லை.
      விதவிதமான தட்டுகளை உருவாக்க என்னால் கற்றுக்கொடுக்க முடியும்.
      ஆனால் அதில் பரிமாற அவர்களிடம் சரக்கிருக்க வேண்டும்.
      நீங்கள் சொல்லும் “““வார்த்தைகளைத் தேடிக் கவியமைத்தல்......“““ அதனால் ஏற்படும் குற்றம் குறைகளைப் பற்றியும் விளக்க நினைக்கிறேன்.
      அப்புறம் கவிதை குறித்த சில பார்வைகளையும்.
      முதலில் யாப்பை விளக்கி விட்டு இடையிடையே எனக்குத் தெரிந்தவரை இவற்றையும் சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது.
      நீங்கள் நிச்சயமாய் முயல வேண்டும்.
      நீங்களும் உதவ வேண்டும்.
      மணவையாரை ஆதரிப்பதற்கு நன்றி.

      Delete
  15. ஆசானே! வணக்கம்.
    அலுவலகத்தில் இருப்பதால், முதல் பகுதியை தான் படிக்க முடிந்தது. அடுத்த பகுதியான வெண்பாவை கற்றுக்கொள்ளும் பகுதியை அலுவலக சூழலில் நிதானமாக படிக்க முடியாது.
    வீட்டிற்கு சென்ற பிறகு படித்து கருத்திடுகிறேன்.

    நான் கவிதை எழுதவில்லையென்றாலும் பரவாயில்லை, குறைந்தது வெண்பாக்களை எவ்வாறு படித்து பொருள் கொள்ள வேண்டும் என்பதையாவது தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யனே,
      ஆர்வம் முயற்சியும் இருந்திட்டால் போதாதா?
      எதையும் கற்றுவிட முடியுமே!!
      வெண்பாக்களை எவ்வாறு படித்துப் பொருள் கொள்ள வேண்டும் ...??????
      அதற்கும் வெண்பாவின் கட்டமைப்பை அறிந்து கொள்வதற்கும் தொடர்பிருக்கிறது. வெண்பா என்றல்ல எந்த ஒரு மரபுப் பாடலையுமே நன்றாய் அறிந்து கொள்ள இந்த யாப்பறிவு பல தருணங்களில் துணைபுரியும்.
      கவிஞர். கீதா அவர்களின் பின்னூட்டத்தினையும் பதிலையும் காண வேண்டுகிறேன்.
      அடுத்த பகுதியை நேரம் வாய்க்கும் போது படியுங்கள் .
      ஏதேனும் குழப்பமிருந்தால் தெரிவியுங்கள்.
      நானும் தெளிவடைய அது உறுதுணையாய் இருக்கும்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  16. அன்புள்ள அய்யா,

    வணக்கம்.

    தங்களின் ‘யாப்புச் சூக்கும்‘ நீண்டதொரு விளக்கம்... வெண்பாவை இயற்றத் தெரியாதவர்களுக்கு... அல்லது இயற்றத் தடுமாறுபவருக்கு...தடம் மாறாமல் துணிந்து பயனிக்க மிகவும் எளிமையாக புரிகின்ற வித்த்தில் சொல்லியது மிகவும் பாராட்டுக்குரியது.

    ‘வெண்பா எழுத அனா ஆவன்னா தெரிஞ்சா போதுமா?...அதுகூட ஒண்ணு ரெண்டும் தெரிஞ்சிருக்கனும்...’
    -என்று சொல்லி வெண்பா இலக்கணத்தைச் சொல்லிக் கொடுப்பதில்...சும்மா விளையாடிவிட்டீர்கள்...சும்மா சொல்லவில்லை! மேட்டுக்குடி நரசிம்மன் அவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக ஆகியிருப்பீர்கள்!

    மரபுக் கவிஞராக எண்ணுகின்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.


    ஈரசைச்சீர் என்றானால் காந்தத்தைப் போலாகி

    மூவசைச்சீர் என்றானால் காதலராய் ஒன்றாகி

    வெண்பாவைப் பண்பாகப் பாருக்(கு) உரைத்தாயே

    உன்பா விலக்கணத்தைப் பாராட்டிப் பேசியே

    பண்பாடும் உந்தன்வெண் பா.



    வெண்பா படைக்க விளையாட்டாய் ஓர்வழி

    கண்டாய் எழுதக் கருதினேன்- உண்டாமோ

    பாடும் மரபில் படைக்கும் கவிப்புலமை

    ஆடும் எனது மனம் ஆழ்ந்து.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நேரிசையில் பஃறொடையில் நீரியற்றும் வெண்பாக்கள்
      பாரிசைக்க சொல்லப் படும்.
      ஒரு வகையை விளக்கும் முன்பே
      அடுத்த வகைக்குப் போனால் நான் என்ன செய்வது அய்யா!
      வருகைக்கு நன்றி!

      Delete
    2. நன்றி அய்யா.

      Delete
  17. ஆகா வெண்பா இலக்கணத்தை இவ்வளவு எளிமையாகவும்கூற முடியுமா
    அற்புதம் நண்பரே நன்றி

    ReplyDelete
    Replies
    1. எளிமையாகக் கூறிவிட்டேனா?
      அது ரொம்பத் தப்பாச்சே......!!!!!
      ஹ ஹ ஹா!!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  18. அருமை... இனிமையான பயணம்...

    விரைவில் நேரில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. பலவற்றைக் கற்றுக்கொள்ள
      நான் தங்களைச் சந்திப்பதுதான் முறை.
      சீக்கிரம் கைகூடும் என்று நினைக்கிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  19. புகைவண்டியில் செல்லும் யாப்பிலக்கணம் படித்தேன்
    அதுவென் உள்ளத்தில் ஊருதே!

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்துப் படித்துக் கண்ணில் புகைவரும் என்றே நினைத்தேன்.
      பரவாயில்லை
      நன்றி பாவாணரே!

      Delete
  20. அன்புச் சகோதரரே என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதை தான் வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் என்பதோ. எவ்வளவு அழகாகவும், இலகுவாகவும், சுவாரஸ்யமாகவும் கூறுகிறீர்கள். wow

    (அட கொஞ்சம் பொறும்மா அதற்கிடையில் துள்ளாத துள்ளுற மாடு பொதி சுமக்காது என்று தெரியாதா. ஏதோ இப்பவே வெண்பா எழுதிட்டாப் போல எல்ல பில்டப் குடுக்கிற ஆமால்ல ம்..ம்..ம். சரி சரி
    இப்போ எழுதினதே எப்பிடி என்று தெரியல்ல சரி கொஞ்சம் பொறு நம்ம குரு வர்றார் இல்ல என்ன சொல்கிறார் பார்க்கலாம் .ok வா ம்..ம்..) ஹா ஹா ....
    வெண்பா எழுத வேண்டின் இலக்கணம் கற்றுக்கொள் .
    வெண் - பா, எழு- த - வேண் - டின், இலக் - கணம், கற் - றுக் - கொள்.
    1 1 2 1 1 2 2 2 1 1 1
    நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நேர் நேர் நேர்

    பாதி தான் படித்துள்ளேன் இதை சரியா என்று பாருங்கள் மிகுதியை இனிதான் படிக்க வேண்டும். மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ....!

    ReplyDelete
    Replies
    1. வெண்பா --- எழுத----வேண்டின்----இலக்கணம்-----கற்றுக்கொள்
      //1-------1//------//1---1//----//1-------1//-------//2-----------2//-------//1-----1------1//
      எழுத வேண்டின் = //1---1// //1-------1//
      இரண்டு என்றாலே காந்தம் நினைவுவர வேண்டாமா? ஒன்றும் ஒன்றும் ஒன்றாதல்லவா?
      ஒன்றெனில் இரண்டு
      இரண்டெனில் ஒன்று..
      என்னடா பெரிசா சொல்லிக்குடுக்கிற என்று என்னைப் பழிவாங்குவதற்காகத்தானே இப்படியெல்லாம் செய்கிறீர்கள் சகோதரி???!!!
      ஹ ஹ ஹா!!
      வரட்டும் அடுத்த பின்னூட்டம்

      Delete
    2. ஐயையோ சகோதரே அபத்தம் அபத்தம் பாதபூஜை செய்தாலே தகும் அப்படி இருக்க பழி வாங்குவதா நானா தங்களையா இல்லை சகோதரே சிறிதளவு தான் வாசித்தேன் காந்தம் இவைகள் எல்லாம் வாசிக்கவில்லை அதுவும் ஒரு காரணம் அவசரமாக வாசித்து விட்டு உடனடியாக எழுதியதும் தப்பு என் மேல் தான் சகோ.ம்..ம்..ம்...ஒரு சந்தேகம் மூன்று குறில் ஒன்றாக வருவதும் அதாவது ( எழுத )என்று வந்தால்( எழுதல்)( எழுதின்) இப்படி வரவேண்டுமா? மெய்யெழுத்து இரண்டும் ஒன்றாக வந்தால்( உயிர்ப்பு ) இப்படி வந்தால் எப்படி பிரிக்க வேண்டும். ரொம்ப சோதிக்கிறேனோ சகோ! இருக்கிறது எல்லாம் மறக்கப் போகிறது தங்களுக்கு ஹா ஹா இது அவ்வளவு எளிதில்லை சகோ! எஸ்கேப் ...... ஞானசூனியம் என்று திட்டுவது போல் கேட்கிறது சகோ! அப்படியா ...

      பொன்/னே மணி/யே ( புகழ்/ந்திடும் )
      வண்/ணம் வளர்/வாய் கரு/வினில்
      அன்/னை சுமந்/திடும் முத்/து உனைக்
      கண்/டதும் உய்க்/கும் (உயிர்/ப்பு !)

      சிரமத்திற்கு மன்னிக்கவும் சகோ. (பார்க்கலாம் குரு என்னதான் சொல்கிறார் என்று). நன்றி! நன்றி !நன்றி !

      Delete
    3. அன்புச்சகோதரி,
      நீங்கள் மரபிலக்கணம் அறிந்தவர்கள். அதனால் ஒன்று இரண்டு என்பதன்றி நேர் நிரை என்றே கற்றிருப்பீர்கள். அதிலேயே தொடர்வது தங்களுக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
      அடுத்து உங்கள் சந்தேகம்.
      இரண்டிற்கு மேல் எப்போதும் வேண்டாம். நான் இரண்டு குறில்களை இணைத்துப் பிரிப்பதைச் சொன்னேன். மெய்யெழுத்தைக் கணக்கில் சேர்க்காவிட்டால் இரண்டு எழுத்துகளுக்குமேல் எப்போதும் சொற்களைப் பிரிக்கும் போது வராது.( அளபெடை விதிவிலக்கு. அதை நாம் கையாளப் போவதில்லை) எனவே
      எழுத என்பதை எழு - த என்றும் எழுதல் என்பதை எழு -தல் என்றும் எழுதின் என்பதை எழு-தின் என்றும் பிரிக்க வேண்டும்.
      அடுத்து மெய்யெழுத்து நூறு மெய்யெழுத்துகள் வந்தாலும் அதைமுன்னெழுத்தோடு சேர்த்துத்தான் பிரிக்க வேண்டும்.
      எனவெ புகழ்ந்திடும் என்பதை புகழ்ந்- திடும் என்றும்
      உயிர்ப்பு என்பதை உயிர்ப் - பு என்றுமே பிரிக்க வேண்டும்.
      இவை உங்கள் சந்தேகத்திற்கான பதில்.
      இது நீண்ட பதிவுதான்.
      இலக்கணம் வேறு.
      அதிலும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான் என்னும் போது வாசிக்கத் தோன்றும் சலிப்பு நியாயமானதுதான்.
      உங்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், உங்களுக்கு நேரம் வாய்க்கும் போது முழுமையாய் இந்தப் பதிவைப் படித்திடுங்கள் என்பதுதான்.
      நீங்கள் கேட்ட எல்லாக் கேள்விகளையுமே இதில் விவாதித்திருப்பதாகவே நினைக்கிறேன்.
      குரு சொன்னால் கேட்பீர்கள் என்பதால் குருமூர்த்தியையும் கொஞ்சம் பாருங்கள்.
      உங்களின் அடுத்த சந்தேகத்திற்கான பதிலுடன் உங்கள் கேள்விக்காகக் காத்திருப்பேன்.
      நன்றி

      Delete
  21. வெண்பா தொடர்பான தங்களது இப்பதிவு எனது பள்ளி நாள்களை நினைவுபடுத்தியது. எவ்வித சோர்வுமின்றி படிக்க ஆர்வமாக இருந்தது. புரிந்து, விதிப்படி கடைபிடிப்பது சாத்தியமா என்று எனக்குத் தோன்றவில்லை. இருப்பினும் தாங்கள் கூறியுள்ள விதம் ஒருமாணவனை கைபிடித்து அழைத்துச் செல்வதுபோல இருந்தது. நீண்ட பதிவு. இருப்பினும் சிறந்த முயற்சி. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் சோர்வின்றிப் படித்த ஆர்வத்திற்கு முதலில் நன்றி.
      அது தங்கள் ஆர்வத்தினால் நிகழ்ந்தது.
      தமிழறிந்த தங்களைப் போன்றவர்களின் வருகையும் பின்னூட்டமும் இன்னும் நான் கொள்ள வேண்டிய பொறுப்பையும் கவனத்தையும் அதிகரிக்கின்றன.
      பாராட்டிற்கு நன்றி அய்யா!!!

      Delete
  22. வியப்பாக இருக்கிறது நண்பரே,,,,

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கில்லர்ஜி..
      மணவையாரிடம் தங்கள் பெயர் ரகசியத்தைக் கேட்டு நான் தான் வியந்து போனேன்.
      வருகைக்கு நன்றி!

      Delete
  23. விரிவான விளக்கப்பகிர்வு ஐயா.

    ReplyDelete
  24. அய்யா வணக்கம்!
    என் வலைப்பதிவில் நான் கேட்ட புதிருக்குப் பதிலாக மற்றொரு புதிரைப் போட்டுவிட்டு என்னைச் சிக்கவைதுவிட்டீர்களே..!
    "தாசிக்காக ஒரு பெரும்புலவர் சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறியிருக்கிறார்". அவர் 'திருமங்கை ஆழ்வார்' தானே...சரியா என்பதைத் தாங்கள்தான் சொல்லவேண்டும். இதொ ஒரு வெண்பா.

    "புதிர்க்குப் புதிர்போட்ட நற்கதிரே! உன்றன்
    எதிரேயார் நிற்கக் கூடும்?_மதிநிறையுன்
    தங்கத் தமிழுக் கிணையேது? ஈடேது?
    அங்கம் சிலிர்த்தேன் மகிழ்ந்து!
    நீக்கு

    ReplyDelete
    Replies
    1. அய்யா அதைத் தங்களைச் சோதிக்கக் கேட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் பதில் சரிதான்
      ஒரு வெண்பா ரகசியத்தையும் பதில் வெண்பாவையும் உங்கள் பின்னூட்டத்தில் இட்டுவந்தேனே....!!!

      “புதிரோ உரைவாள்‘உம் புத்திக்கு முன்பு
      மதியோ முகம்நாணி மங்கும்! - கதிரென்றால்
      காலுதைத்(து) உன்றன் கவிகேட்க ஓடிவர
      மெலுதற ஞால மெழும்!

      ( அங்கிருந்து காப்பி அடித்து இங்குப் பதிகிறேன்.)
      நன்றி.

      Delete
    2. அய்யா, வெண்பா ரகசியம் பார்த்தேன்.!
      நிலவன் அய்யாவிற்கு இன்னொரு வெண்பா
      "முத்தமிழை என்றென்றும் முக்கனிபோல் தக்கபடி
      இத்தரையில் இன்பமுடன் இன்தமிழைப் போற்றுவதில்
      நித்திலம்போல் சத்தியமாய் நீள்பணி யாற்றுகின்ற
      வித்தகரே நித்தமுமே வெல்க!"...
      ...அடுத்து, உங்களுக்கு..
      "பூவிரியும் சோலையில் பூக்கும் மலர்போலே
      பாவிரித்துப் பைந்தமிழில் பாவகையைச் சொல்லிவரும்
      காவிரியின் நல்ல கரையோரம் வாழ்ந்துவரும்
      நாவலரே வாழியவே வென்று!

      Delete
  25. வணக்கம் ஐயா
    இத்தனை எளிமையாய் இனிக்கும் தமிழ் வெண்பா இலக்கணம் கற்றேன் இனிக்கிறது ஐயா Muthu Nilavan அவர்கள் வலைதளம் சென்றிருந்தேன் இன்று ஆதலால் இன்று கிட்டியது பெரும் வரம் தான் எனக்கு இருவருக்க்கும் நன்றிகள் பல ...

    ஆகாரம் தேடி அலையுறேன் தானும்
    அழகான ஆட்சி அமையுதே காட்சி
    குடியாக உள்ளம் குளிருதே எண்ணி
    குருவாகி நின்ற நிறைவு....

    ReplyDelete
    Replies
    1. அவரால் தான் நான் வலைத்தளத்திற்கு அறிமுகமானேன் அய்யா!
      நீங்கள் மகாசுந்தர் அவர்களின் தளத்தில் நான் சொன்ன இரகசியத்தை ஒட்டுக் கேட்டுவிட்டீர்கள் போலிருக்கிறதே...
      அருமை.. வெண்பா இலக்கணம் முழுதும் பொருந்தும் வடிவம்.
      இப்போது வெண்பா வடிவைக் கற்றிருக்கிறீர்கள்.
      இது ஒரு பாத்திரம்தான்.
      இதில் விதவிதமாய்ச் சமையல் செய்யும் குறிப்புகள் அடுத்த பதிவில் ..!
      உங்களின் முதல் வருகைக்கும் வெண்பா உருவாக்கத்திற்கும் நன்றி!

      Delete
  26. தேமா..புளிமா..வை..புழுிந்து கொடுத்தமைக்கு நன்றிகள்! பல..!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவும் பிழிந்து விட்டேனோ வலிப்போக்கரே?
      மீள்வருகைக்கு நன்றி

      Delete
  27. நன்றி விஜு . நாமெல்லாம் சரியாத்தான் வெண்பா எழுதுறோமான்னு ஒருமுறை சரி பாத்துக்கிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      இவ்வளவு தன்னடக்கம் ஆகாது.
      தங்களைக்குறித்து முத்துநிலவன் அய்யாவின் பதிவொன்றின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
      காண்க
      http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_4.html
      நன்றி

      Delete
    2. கண்டேன். மனம் நெகிழ்ந்த நன்றிகள் விஜு

      Delete
  28. இவ்வளவு தானா என வியக்கிறேன் அண்ணா!!!


    கடமைக்கு படிப்பவர்களுக்கும், கருத்தோடு படிப்பவர்க்குமான வித்தியாசம் தெரிகிறது (தெறிக்கிறது ) எப்படி இவ்ளோ அழகா, எளிமையா சொல்லுறீங்க!!!!! நேற்று கஸ்தூரி தூங்கும்வரை (தூங்கவிடாமல்) இந்த இலக்கண வகுப்பு பற்றி பேசிக்கொண்டே இருந்தேன். சத்தியமாய் வேற யார் இதை பற்றி எழுதி இருந்தாலும் அதை ஸ்கிப் பண்ணிருப்பேன். புதுசா ஒரு விஷயம் கத்துகிறது எவ்ளோ மகிழ்ச்சி!!! புத்தியில் புதியதாய் ஒரு பூ பூத்தத்து போல அத்தனை உற்சாகம்!!! என்னையே முழு இலக்கணப் பதிவையும் படிக்க வைத்திருக்கிறது உங்க எழுத்து!!! இன்னும் சொல்லணும் , மாலை வருகிறேன்:))) அப்புறம் குரு தட்சனையா கட்டைவிரலை கேட்டாலும் பரவாயில்லை , ஏன்னா டைப் பண்ணத்தான் கட்டைவிரல் தேவையில்லையே:))))) நன்றி குருவே!!!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய்க் குருவிடம் கட்டைவிரலைத் தட்சணை கேட்கத்தான் வேண்டும். அந்தப் படுபாவி தஞ்சாவூர் மார்கத்தில் பூதலூரில் ஏதோ தொழில் சாலையில் FITTER வேலைக்குத் தினசரி திருச்சியிலிந்து தொடர் வண்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போய்க் கொண்டிருக்கிறான். பெரிய நோட்டில் எதைஎதையோ எழுதிவைத்துக் கொண்டு வெண்பா பித்தில் மேக்குடி நரசிம்மன் அய்யா பாணியில் காண்போரைக் கதிகலங்க அடித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி!!!
      பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
      பார்த்தால் நிச்சயம் கேட்க வேண்டும்.
      கட்டை விரல் இல்லாவிட்டால் எழுத முடியாதுதானே?

      Delete
    2. வெண்பா பித்தில் மேக்குடி நரசிம்மன் அய்யா பாணியில் காண்போரைக் கதிகலங்க அடித்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி!!!***** ஹா.....ஹா....ஹா...செம ட்விஸ்ட் போங்க:)

      நான் குருன்னு உங்களைதான் சொன்னேன் குருவே!!!!
      ***இவ்வளவு தானா என வியக்கிறேன் அண்ணா*** அண்ணா இந்த வாக்கியம் தப்பா? ஏன் ஒண்ணுமே சொல்லலை??
      ஓகே இது ரைட்டா னு சொல்லுங்க



      கடைவிழிப் பார்வையால் என்னை நிறுத்துகிறாய்

      காந்தச் சிரிப்பினிலே நெஞ்சம் உருக்குகிறாய்

      அண்ணி வசுமதி பெற்ற தவப்புதல்வி

      ப்ரதன்யா நீயென் அமுது!!!

      Delete
    3. முதலில் நான் தங்கள் வரிகளில் கண்ணோட்டித் தேடினேன்.
      பின்பு தவறாய் இருந்ததால் இவ்வரிகளைச் சும்மா எழுதிப்போனீர்கள் என்று கருதினேன்.
      கடைசியில் தான் தெரிகிறது நான் தான் தவறு செய்திருக்கிறேன் என்று.
      வெண்பாவில் கடைசிச் சொல் தவிர வேறெங்கும் ஓரசையில்( பிரிக்க முடியாதவாறு அமையும்) சொற்கள் வராது. என் பதிவில் இதைத் தனியே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இரண்டு மற்றும் மூன்றாய் பிரிக்கக் கூடிய சொற்களையே இணைக்க முடியும் எனக்குறிப்பிட்டு இதைச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
      இறுதியாய் இருக்கும் சொல் அவ்வாறு பிரிக்க முடியாத ஓரசையில் அமையலாம்.
      பதிவில் இதைச் சேர்த்துவிட்டேன்.
      சொல்லாத தவறு என்னுடையதாய்க் கொண்டால் உங்கள் வாக்கியம் மிகச் சரியே.
      இனி இது போலப் பிரிக்க முடியாத ஒற்றைச் சொல் (ஓரசைச் சொல் வெண்பாவின் இறுதியில் மட்டுமே அமையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
      ------இவ்வளவு தானா எனநான் வியக்கிறேன் அண்ணா------------
      என நீங்கள் கூறியதை இப்படிச் சரிசெய்து விடலாம்.
      அடுத்து
      முழுவெண்பா..
      ப்ரதன்யா தங்கள் அண்ணியின் குழந்தையாய் இருக்க வேண்டும்.
      இந்தப் பெயரையும் இந்த வெண்பாவையும் உங்கள் வாழ்நாளில் நீங்கள் இனி மறக்கமுடியாது.
      மெய்யெழுத்து, சொல்லுக்கு முதலில் வருவது தமிழ்மரபில் இல்லை.
      எனவே
      இதை மட்டும்

      அண்ணி வசுமதி பெற்ற மகளே
      பிரதன்யா நீயென் அமுது
      என்று மாற்றினால் வெண்பா தளை தட்டாமல் அமையும்
      இப்படியே இருந்தால் “ தவப்புதல்வி- ப்ரதன்யா
      என்பது -----------------------/- 2 2 1 /............/2 1/
      என வரும் . மெய்யெழுத்து முதலில் வருவதால் நானே குழம்பிப்போனேன்.
      எண்ணப்பறவையில் இன்னொரு ரகசியம் சொல்லி இருக்கிறேன்.
      அதனோடு கூடுதலாய் இன்னும் சில ரகசியங்கள் அடுத்த பதிவில்.
      நீங்கள் மரபுக்கவிதைகளில் சாகசம் படைக்கப்போகிறீர்கள் என்பது குரு வாக்கு.
      அது ஒரு போதும் பொய்க்காது.
      நன்றி

      Delete
    4. ***குரு வாக்கு.
      அது ஒரு போதும் பொய்க்காது.*** மிக்க நன்றி அண்ணா!

      இதைவிட எளிதாய் இனி யாரும் சொல்லிவிட முடியாது அண்ணா! ஆனால் இந்த மரமண்டைக்கு இன்னும் ஒரு விஷயம் புரியவில்லை, மனசுக்குள்ள டென்சன் ஆகாம அதைகொஞ்சம் எக்ஸ்ப்ளைன் பண்ணினா தேவலை? அந்த தவப்புதல்வி எனும் வார்த்தையை ஏன் மகளே என்று மாத்தவேண்டும்?

      Delete

    5. மரமண்டை...!????
      சரிதான்…. கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்தவனிடத்தில் பதிலை எதிர்பார்க்கிறீர்களே...!
      //தவப்புதல்வி எனும் வார்த்தையை ஏன் மகளே என்று மாத்தவேண்டும்?//
      தவப்புதல்வி “ப்ரதன்யா“ பிறந்துவிட்டதால் . தவத்திற்குப் பலன் கிடைத்துவிட்ட பின் இன்னும் தவம் எதற்கு.. என்றுதான்!
      சரி விஷயத்துக்கு வருகிறேன்.
      முதலில் ப்ரதன்யா என்னும் வடிவத்தைத் தமிழ் மரபில் பயன்படுத்த முடியாது.
      ( மரபில்தான்.. நடைமுறையில் பயன்படுத்தத் தடையில்லை)
      இந்த வடசொல் வடிவத்தைத் தற்சமப்படுத்த வேண்டும். ( தமிழ் மரபிற்கேற்பவும், சொல்லும் ஒழுங்கிற்கேற்பவும் எழுத்துக்களை அமைத்து உச்சரிப்பது )
      நீங்கள் காட்டிய புதல்வி என்ற சொல்லே புத்ரி என்ற வடசொல்லைத் தமிழ்மரபிற்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டதுதான். புத் என்பது குழந்தைப் பேறில்லாதவர்கள் அடையும் நரகம் என்கிறது கருடபுராணம். அதில் வீழாமல் பெற்றவர்களைக் காப்பவர்களானபடியால் அவர்கள் புத்திரர்கள் எனப்படுகிறார்கள். நம்புகிறீர்களா? )
      அது தமிழ்படுத்தப் பட்டுவிட்ட சொல்.எனவே புதல்வி என்பது ஏற்புடையதுதான். ஏன் “தவப்புதல்வி“ என வராதென்றால்
      முன்னர் சொன்னது போல மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வருதல் தமிழ் மரபில் இல்லை என்பதால் இப்படி மெய் முதலாக வரும் சொற்களை எப்படிப் பிரிப்பது என்ற கேள்வி எழவில்லை.
      பிரிப்பதாக இருந்தாலும்

      தவப்புதல்வி - 2 2 1 ப்ரதன்யா - 2 1 என்றே பிரிக்கப்படவேண்டும்.
      மூன்றில் ஒன்றே ஒன்றும் அல்லவா.?
      இங்கு மூன்றாகப் பிரிக்கப்பட்ட சொல்லில் 1 ஐ அடுத்து 2 வருகிறதுதானே?
      இதனைத் தவிர்க்கவே
      மகளே – (2 1), ப்ரதன்யா – ( 2 1) அல்லது பிரதன்யா ( 2 1 1)
      எதுவாக இருந்தாலும் இரண்டாகப் பிரிக்கப்படும் மகளே ( 2 1) என்ற சொல் ஒன்றில் முடிவதால் அதனை அடுத்து 2 வரச் சரியாகும் என்பதால் மகளே என்றேன். தவம் என்ற சொல்லை நீக்கிப் புதல்வி என்கிற சொல்லை ஆளுவதில் பிரச்சனையில்லை. மகளே என்பதற்குள்ள அதே வாய்ப்பு ( 2 1) புதல்விக்கும்(2 1) இருக்கிறது.என்ன எளிதான தமிழ்வடிவாக இருந்ததால் மகளே என்றேன்.


      மரபுப் படி மெய் முதலாக வராது என்பதால் இதனை பிரதன்யா என்று ( மரபு வடிவத்திற்காக மாற்றினேன்.)
      ப்ரதன் யா என்பதை ( ப்ரதன்- யா எனும் முறையில் ) 2 1 என்றுதான் பிரிக்க வேண்டிவரும். அதற்கு என்னடா விதி என்று கேட்பீர்களானால் ( ஒற்று இருகுறில் ஒற்று- நிரையசை என்னும் விதி, ஒற்று=மெய் ) தமிழ்மரபில் அப்படிச்சொல்லாட்சி இல்லாததால் மரபிலக்கண நூல்களில் அதற்கு விதி இல்லை.
      ஆனால் நாம்தான் இனியொரு விதி செய்தவர்கள் ஆயிற்றே. நம் விதியில் இதற்கு விடைகாண முடியும்.
      விதி 1-மெய்வந்தால் அங்கு கோடிட்டுப் பிரிக்க வேண்டும். சரியா?
      அப்படிப்பிரிக்கும் போது, ப்/ ரதன்/ யா /
      அடுத்து இது ஒன்றா இரண்டா எனப் பார்க்க வேண்டும்.
      துணைவிதி – மெய்யெழுத்துக்களைக் கணக்கில் எழுத்துக் கொள்ளக் கூடாது.
      சரியா? ப் என்பது கணக்கில் வராது.
      அதைவிட்டுவிட்டுப் பார்த்தால் 2 / 1
      இதற்குமுன் தவம் செய்யாத புதல்வியைப் போட்டால் தவறில்லை மகளாய் இருந்தால் மகிழ்ச்சி!!
      ஞானக்குழந்தை ப்ரதன்யா இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
      நன்றி!
      புரிந்தாலும் புரியாவிட்டாலும் ஒருவரி எழுதிப்போடுங்கள் தாயே!

      Delete
    6. இத்தனை விளக்கமாய் எழுதிய பின்னும் புரியாமல் போக லேசுப்பட்ட ஆசிரியரிடமா நான் வெண்பா கற்கிறேன்!!! இதிலென்ன ப்யுடினா அடுத்த வரிக்கும் கூட இந்த பார்முலா படிதான் தொடங்கனும்னே தெரியாமல் மற்ற இரண்டுவரியையும் ரைட்டா எழுதிட்டேன் அண்ணா:)))))) இப்போ நல்ல புரிஞ்சுடிச்சு. மிக்க நன்றி அண்ணா! அடுத்த கிளாஸ் எப்போ ?? அப்புறம் புதல்வி எனும் வார்த்தையில் இவ்ளோ விஷயம் இருக்கா?? அப்போ நம்ம மகளையே சேர்த்துக்கொள்வோம், நமக்கெதுக்கு வடநாட்டுப் புதல்வி??

      Delete
    7. நண்பர் விஜூவின் இந்தப் பதிவையும் இதற்கான பின்னூட்டங்களையும் ஒரு சிறு நூலாக “இவ்வளவுதான் வெண்பா எழுதுங்கள்“ என்று போடலாம் போல! அவ்வளவு அருமை! இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன். இவ்வளவு பயனுள்ள பதிவுகள் இன்னும் அதிகம்பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் என யோசிக்கிறேன். இன்னொரு சிறு பயிற்சி முகாம் போடலாமா? (10-15பேருக்கு மட்டும்...?) விஜூ உங்கள் பணி சாதாரணமல்ல, வரலாறு சொல்லும். அடுத்த பதிவுஅடுத்த வகை? காத்திருக்கிறேன்

      Delete
    8. கலக்கிட்டீங்க மைதிலி..உங்க ஆர்வத்தைப் பார்த்து வியக்கிறேன்.

      Delete
    9. வெண்பா பித்தில் குரு அவர்கள் காண்போரை எல்லாம் கதிகலங்க வைக்கிறாரா? ஹாஹா!!

      ஒற்றை விரலேத் தொடுதிரைக் கேட்கும்
      பெருவிரல் வாங்குதல் வீண்

      Delete
    10. ஆகா மன்னிக்க வேண்டும் சகோ!
      கவனிக்காமல் விட்டேன்.
      ஏற்கனவே வெண்பா எழுவீர்கள் தானே?
      இப்பதிவுகள் தங்களுக்கானதல்லவே!

      வெண்பா மிக மிகச் சரி!

      அவ்வளவுதான்!

      Delete
  29. தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி சகோ.நீங்கள் சொன்னவற்றைத் திருத்திக் கொண்டேன்.
    உங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிப்பதாய் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      நற்றுணை என்பதில் ணகரத்தில் ( ண) துணை எழுத்தைக் கவனிக்கவும்!

      Delete

  30. வணக்கம்!

    தண்பா தருகின்ற ஒண்டமிழ் நற்சோசப்
    வெண்பா விதியை விளைத்துள்ளார்! - நண்பர்காள்
    கற்றுத் தெளிந்து கவிதை படைத்திடுவீா்
    உற்ற உயிராய் உணர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. என்பாக்கள் எல்லாம் எதிர்நின்று தோற்கடிக்கும்
      வன்பாப் புலவர்‘உம் வாழ்த்திருக்கத் - தென்றலது
      கார்கொண்டல் மேல்மேவி கட்டுடைக்கும் மாமழைபோல்
      சீர்வெண்பா செய்தாய் சிறந்து!
      நன்றி அய்யா!

      Delete
  31. அன்/னை/யே உனை/யே/வணங்/கி உள/மார வாழ்த்/துகி/றேன் !
    நினை/யே/போற்/றி நித/மும் பாடு/கிறேன்!
    பொன்/னை/நிகர்த்/தவ/ளே பூவி/லிருந்/து/நீ புவ/னம்முழு/வதும் காப்/பவள் என்நாவி/லமர்ந்/து இனி/நற்/றமி/ழை பாடு !

    இது எப்படி என்று பாருங்கள். ஏதோ கஷ்டப்பட்டு எழுதி இருக்கிறேன். ஹா ஹா ....
    முதல் எழுதியது எல்லாமே பிழையா எதுவும் சொல்லவே இல்லையே சொற்கள் எல்லாம் சரியாக அமைத்திருக்கும் என்று நினைத்தேன் பிரித்தது சந்தேகத்தை தீர்க்கத் தான் சகோ! சரி இதையாவது பாருங்கள் தேறியிருக்கிறேனா என்று. இல்லையென்றால் வெண்பாவுக்கும் எனக்கும் வெகுதூரம் என்று நினைக்க வேண்டியது தான் இல்ல ஹா ஹா ....

    ஆமா குரு என்று சொன்னது தங்களை தானே இதில் குருமூர்த்தி எங்கு வந்தார் ம்..ம்..ம்..நீங்கள் என் குருவே தான் னோ மோர் சகோ ok வா ...நீங்கள் வலைச்சரம் சுய அறிமுகம் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன். அப்படித் தானே.

    பாடறியேன் படிப்பறியேன்
    பள்ளிகூடம் தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன்
    எழுத்துவகை நானறியேன்

    நேரறியேன் நிரையறியேன்
    நீர்சொல்லித் தானறிவேன்
    நேற்றுவரை நினைக்கவில்லை
    கற்றிடவும் சலிப்புஇல்லை

    சுண்டி இழுக்கும் வகை
    சுவை மிக்கபதிவுகள் தாம்
    நேரம் போதாமல்
    நித்திரையில் வாசிப்பு

    கற்றுத் தெளிந்திடவே
    கனவிலும் யாசிப்பு
    பெற்றிட விதியில்லை
    என்றெண்ணி புறக்கணிப்பு

    இனியாவது விதி இருக்கிறதா என்று பார்ப்போம்
    வெண்பா வசப்படுகிறதா இல்லை விலைப்படுகிறதா? என்று ok வா
    சிரமத்திற்கு மன்னிக்கவும். எப்படி நன்றி சொல்லப் போகிறேன் சகோ?





    ReplyDelete
    Replies
    1. வெண்பா தருகவெனக் கண்பூக்கக் காத்திருப்பேன்
      மண்காத்த வித்தாய் மனம்!
      சகோ இனியாவின் வெண்பாக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

      Delete
  32. நிச்சயமாய் மரபில் எழுதும் நீங்கள் வெண்பாவைத் தூரமாய் நினைக்க வேண்டியதில்லை. இதைத் தெரிவதுதான் யாப்பின் சகல வடிவங்களையும் கைக்குள் போட்டுக் கொள்ளச் சரியான வழி!
    மெய்வந்தால் கோடிட்டுப் பிரியுங்கள்.
    நெடில் வந்தால் தனியே பிரியுங்கள்.
    குறில்வந்தால் அதன் அருகில் இருக்கும் எழுத்தோடு சேர்த்தே பிரியுங்கள்.
    ( அருகில் எழுத்தேதும் வராவிட்டால் குறிலைத் தனியே விடலாம்.)
    மெய்யை நீக்கி பிரித்தில் உள்ள எழுத்துகளை ஒவ்வொரு எழுத்திற்கும் எண்ணிப்பாருங்கள்
    ஒவ்வொரு கூறும் இரண்டாகவோ மூன்றாகவோ பிரிக்கப்பட்டிருக்கும்.
    இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தால் கடைசியில் வரும் எண்ணும் அதற்கு அடுத்து முதலில் வரும் சொல்லின் எண்ணும் மாறி இருக்க வேண்டும்.
    சுண்டி இழுக்கும் (1 1) (2 1) இப்பொழுது முதல் சொல்லின் இறுதியில் ஒன்று வர அடுத்த சொல்லின் முதலில் இரண்டு வருகிறதில்லையா அது போல முதல் சொல் இறுதியில் 2 வந்தால் அடுத்த சொல்லின் முதலில் ஒன்று வர வேண்டும்.
    மூன்றாகப் பிரிக்கப்பட்ட சொற்களின் கடைசிக்கூறில் எப்பொழுதும் ஒன்றுதான் ( ஓர் எழுத்துதான்) வர வேண்டும்.
    வாழ்த்/துகி/றேன் (1 2 1) என்று மூன்றாகப் பிரிக்க இறுதியில் 1 வந்திருக்கிறது இல்லையா, அதுபோல மூன்றாகப் பிரிக்கப்படும் எல்லா சொல்லின் இறுதியிலும் ஒன்றுதான் வரவேண்டும்.
    இப்படி மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒன்றில் முடியும் சொல்லை அடுத்து வரும்சொல் ஒன்றில் தான் தொடங்கவேண்டும்.
    வாழ்த்துகிறேன் நின்னை--- (1 2 1) - (1 1) இங்கு மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஒன்றில் முடிந்த சொல்லை அடுத்துவரும் சொல்லும் ஒன்றில் தொடங்கியது இல்லையா அதுமாதிரி.
    இதுபோல் வெண்பாவின் முதல்சொல்லில் இருந்து அதை முடிக்கும் கடைசிச்சொல் வரை, “இந்த இரண்டில் மாறியும் , மூன்றில் ஒன்றே ஒன்றுடன் ஒன்றியும்“ வருகிறதா எனப் பாருங்கள். இப்பொழுது நீங்களே உங்கள் பாடலைப் பிரித்துப்பார்த்துத் திருத்தி வரலாம்.
    கவலைப்படாதீர்கள் எல்லாரும் இப்படிக் கற்றுவந்தவர்கள்தான்.
    மறுபார்வை இடப்பட்டு திருத்தப்பட்ட வெண்பாவுடன் இன்றுமாலைக்குள் உங்களை எதிர்பார்க்கிறேன்.
    அப்படி உங்களை விட்டுவிடப்போவதில்லை.
    நீங்கள் கற்கவில்லை என்றால் குறை என்னிடம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
    சந்தேகம் எங்கெழுந்தாலும் கேளுங்கள்.
    வெண்பாவின் கடைசி அடி
    மூன்று சொற்களைக் கொண்டு முடியும்.
    அதன் கடைசிச் சொல் குறித்துப் பதிவில் விளக்கியுள்ளதைக் காணுங்கள்.
    உங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
    உங்களின் பின்னூட்டம் பார்த்தால் இதன் தொடர்ச்சியை வெளியிட ஏதுவாய் இருக்கும்.
    நன்றி

    ReplyDelete
  33. வாழ்த்துகள்

    ReplyDelete
  34. அடேங்கப்பாடியப்பா! இந்த ஒரு பதிவை முழுமையாகப் புரிந்து, இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் வீட்டுப்பாடத்தைச் செய்து விட்டாலே அடுத்த பதிவில் நாங்கள் வெண்பாப் புலவர் ஆகி விடலாமா? 'இவ்வளவுதான் ஆங்கிலம்', இவ்வளவுதான் கணினி', 'முப்பது நாட்களில் இந்தி' என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், 'இரண்டே அமர்வில் வெண்பாக் கல்வி' என்பது அசகாய சூரத்தனம் ஐயா! படித்துக் கொண்டே வந்தேன். பாதி புரிந்தது; அதற்கு மேல் தலை சுற்றுகிறது. பொறுமையாக அப்புறம் முயன்று பார்க்கிறேன். இப்படியொரு பதிவுத்தொடர் எழுதுவதற்காகத் தங்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும்! இந்தக் கணினியுகத்தில் வெண்பாத் தமிழ் வளர்க்கும், அதுவும் இவ்வளவு குறுகிய காலக்கட்டத்துக்குள் இதைக் கற்றுத் தரும் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      “தேமா வைப் பிரித்துப் பாருடா நேர் நேர் ன்னு வருதில்ல!
      அப்பறம் ஏன் மனப்பாடம் அதுயிதுன்னு சொல்லி அலகிடுதலத் தொடாம விடுற“ என்று யாப்பறிவின் சூக்குமத்தை முதன்முதலில் காணச் செய்த என் ஆசிரியர் பெயர் ஞானப்பிரகாசனார்.!
      உங்களிடம் நான் வேண்டுவது இப்பதிவிற்காகச் சற்று நேரம் செலவிடுங்கள்! புரியாமையைச் சுட்டுங்கள். என்பதைத்தான்.
      நீங்கள் சொல்லிவிட்டீர்கள்! பலரும் சொல்லத்தயங்கி இருக்கலாம். அவ்விடங்களை இன்னும் இலகுவாக்க அதுயெனக்கு வாய்ப்பாக அமையும். எல்லாரும் அறியத்தான் என்றாலும் சிறப்பாகக் கவிதைகள் முயல்வோர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மரபில் வழங்கி இன்று அருகிவருகின்ற இந்த மரபு வடிவத்தைக் கடினமென்று ஒதுக்கிப் போகக் கூடாதே என்பதற்கான என் முயற்சியே இது!
      அதற்கு உங்களின் உதவியை நாடுகிறேன்.

      நீங்கள் என்னைப் பாராட்டுவதை விட நீங்கள் இடருற்ற இடங்களைச் சுட்டுவீர்களாயின், இன்னும் எளிதாக்கவும், கடினமாயின் மாற்றவும் எளிதாய் இருக்கும்.இதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் நன்றியாய் இருக்கும்.
      நன்றி அய்யா!

      Delete
    2. நான் அதைச் சுட்டிக் காட்டலாம் என்றுதான் நினைத்தேன் ஐயா. ஆனால், எனக்குப் புரியவில்லை என்பதாலேயே அதை நீங்கள் கடினமாக எழுதியிருக்கிறீர்கள் எனப் பொருளாகாது இல்லையா? மேலும், எனக்கு எப்பொழுதுமே கணக்கு வராது. சிறு பிள்ளையிலிருந்தே கணக்கு என்றால் நடுக்கம் எனக்கு. அதனால், நீங்கள் இலக்கண நெறிகளைக் கூறிக்கொண்டு வந்த வரை புரிந்த எனக்கு அதன் பிறகு கணக்கை நீங்கள் கையிலெடுத்தவுடன் குழப்பம் ஏற்படத் தொடங்கி விட்டது. எனவே, இஃது என் வலுவீனமே தவிர, உங்கள் எழுத்தில் குறை ஏதும் இல்லை.

      Delete
  35. ஐயா! எனக்கும் கொஞ்சம் மரபுப்பா எழுதும் பழக்கம் உண்டு. அல்லது, நான் எழுதுவது மரபுப்பா என்று நானே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இயைபு கெடாமல், வார்த்தைகள் வரிகள் ஆகியவற்றின் பலுக்கல் நீளங்கள் மாறாமல் எழுதினாலே மரபுப்பாதான் என்று நினைத்திருந்தேன். இப்பொழுது நீங்கள் மேலே கூறியிருப்பதைப் பார்த்தால், இன்னும் அதில் பல நுட்பமான இலக்கண நெறிகள் இருக்குமெனத் தோன்றுகிறது. நான் எழுதிய மரபுப் பாக்களில் ஓரிரண்டைத் தங்களுக்கு அனுப்பினால், நான் சரியாக எழுதுகிறேனா எனப் பார்த்துக் கூறுவீர்களா? தொந்தரவுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      நம் மரபில் எல்லாப் பாடல்களுக்கும் இலக்கணம் இருக்கிது.
      புதுக்கவிதை எழுந்த போது மரபு மீறியதாகச் சொல்லப்பட்ட கூக்குரல் இன்று அடங்கிப்போன நிலையில்
      பேராட்சி புரியும் புதுக்கவிதைகளையும் தன்னுள் அடக்குவதற்கு மரபு விதிமுறைகளை வைத்துச் சென்றிருக்கிறது என்ற செய்தியை அம்மரபாளர்கள் அறியாதது எனக்கு ஆச்சரியம் ஊட்டுகிறது. ஆகவே கவிதை என எழுதப்படும் எதையும் நாம் நம் மரபார்ந்த பாவகையொன்றனுள் அடக்கிவிட முடியும்.
      சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உள்ள பாவடிங்கள், ஆயிரம் ஆண்டிற்கு மேல் பழமையுடைய வெண்பாக்கள் இதில் எழுத வேண்டுமா..
      இதைக் காக்கக் கொடி பிடிக்க வேண்டுமா...என்று கேட்டால்

      அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதை விட,

      நம்மிடம் என்ன இருக்கிறது என்று குறைந்தபட்சம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது முயற்சியாக இருக்கிறது.
      எனவே மரபு வடிவங்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை அதை அறிந்து கொண்டவர்களின் தீர்மானத்திற்கு விட்டுவிடலாம்.
      ஆனால் என் நோக்கம் அதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதுதான்.
      இப்பதிவை அதற்காகவே எழுதுகிறேன் அய்யா!
      உங்களின் மரபுப்பாடல்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
      இலக்கண நெறிகளை மூட்டைகட்டி மூலையில் வைத்துவிட்டுத் தாங்கள் எழுதியதை அறியத்தாருங்கள் காத்திருக்கிறேன். உங்கள் பாடல்களுக்கு ஏற்ற இலக்கணம் தன்னுள் அமைத்துக் காட்டித் தமிழ் தானே வரும்.
      இவ்வெண்பா யாப்பினை மட்டும் சற்று முயன்று தெரிந்து கொள்ளுங்கள்.
      எதற்கு என்பதைப் பின்னால் சொல்லுகிறேன்.
      எவ்விடம் ஐயமிருப்பினும் தயங்காது எழுப்புங்கள்.
      தெரியாவிடின் தெரிந்து தீர்க்கக் காத்திருக்கிறேன்.
      நன்றி

      Delete
    2. என்ன வியப்பு!! புதுக் கவிதைகளும் மரபுக்குள் அடங்குமா?! மிகவும் வியப்பாக இருக்கிறது ஐயா! நாம் எப்படி எழுதினாலும் அதை ஏதோ ஓர் இலக்கண வகையில் தமிழ் தானே அமைத்துக் கொள்ளும் என்று தாங்கள் கூறுவது மலைப்பான செய்தி! ஆம், தமிழ் என்றாலே நீர்மைதானே!

      என் மரபுக் கவிதைகளைத் தேடித் திரட்டி ஒரு கோப்பாக நான் தங்களுக்குக் கூடிய விரைவில் அனுப்பி வைக்கிறேன் ஐயா! கவலை வேண்டா, ஓரிரண்டுதான் எழுதியிருக்கிறேன். மற்றவையெல்லாம் புதுக்கவிதைகள்.

      வெண்பா யாப்பை நான் கண்டிப்பாகப் படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன் ஐயா! இது தேவையா இல்லையா என்கிற பேச்சுக்கே என் உள்ளத்தில் இடமில்லை. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மொழி இவ்வளவு உயிர்ப்புடன் விளங்குவதே விந்தை! அதிலும் அந்த மொழியின் உயர்தரக் கலை வடிவத்தை, பல்லாயிரம் ஆண்டுகள் முந்தையதைப் படைப்பவர்கள், அதைக் கற்றுக் கொடுக்கக்கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது அதைக் காட்டிலும் பன் மடங்கு விந்தை! அப்படியிருக்க, அதைக் கற்றுக் கொள்ளச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஐக்கூ, லிமரைக்கூ, சென்ரியு என அயல்நாட்டுக் கவிதை வடிவங்களைக் கற்றுக்கொள்ள மட்டும் போட்டிப் போட்டு முன்வருவது அடிமைப்பிணி இன்னும் நம் மூளையிலிருந்து குணமாகவில்லை என்பதையே காட்டும்.

      Delete
  36. அன்பின் நண்பா. என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டதைக் கண்டேன். மகிழ்ச்சி. நான் மனம் போன போக்கில் எழுதுவதைக் கவிதை என்று கூறமுடியாது என்று தெரிந்து , குறைந்தபட்சம் வெண்பா விதிகளாவது தெரிந்திருக்க வேண்டும் என்னும் முனைப்பில் கற்றதைப் பதிவாக்கி இருந்தேன். ஆனால்தொடர்ந்து வெண்பா எழுத முயற்சிக்கவில்லை. நான் எழுதுவது வாசிப்பவருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே என் ஆசை. மற்றபடி கவிஞன் என்று சொல்லிக் கொள்ளும் நோக்கமில்லை. எனக்கென்னவோ மரபுக் கவிதை எழுதும்போது விதிகளுக்காக வார்த்தை தேடுவதில் விருப்பமில்லை. தமிழில் ஆளுமை இருந்து வார்த்தைகள் சீராக வருபவருக்கே அது சரி. சிவகுமாரன் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா.?மரபு சாராமலேயே ஒரு திருவெழுக்கூற்றிருக்கை எழுதி இருக்கிறேன். பாவைக்கு ஒரு பாமாலை என்று அந்தாதியில் எழுதி இருக்கிறேன். உங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால்மெயில் அனுப்புங்கள் சுட்டி தருகிறேன் உங்கள் எழுத்துபற்றி துளசிதரன் வியப்படைந்து எழுதி இருப்பது பார்த்திருக்கிறேன். இத்தனை வயதுக்குப் பின் மரபில் எழுத முயற்சிக்க வில்லை. ஒரே வாக்கியத்தில் ஆறு காண்ட சாதாரணன் ராமாயணம் எழுதி இருக்கிறேன் அன்புடன் ஜீஎம்பி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      எனக்கும் கவிஞனெனச் சொல்லும் நோக்கமில்லை.
      சிவக்குமாரன் அண்ணன் நான் மதிக்கும் கவிஞர்.
      திருவெழுக்கூற்றிருக்கை?!!!
      இரதபந்தனமா?
      சித்திரக்கவியாயிற்றே அய்யா?
      மரபுசாராமல் அது கூடாதென நினைக்கிறேன்!
      சித்திரக்கவிகள் வடிவசாத்தியத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்பவை.
      உள்ளடக்கம் இரண்டாம் பட்சம்தான்!
      அந்த உருவசாத்தியத்தை மரபில்லாமல் முயன்றீர்கள் என்பது...
      ஏழாவது அதிசயம்!
      அவசியம் பார்ப்பேன் அய்யா!!!

      Delete
  37. எளிமையாகவும் விளக்கமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி அயயா!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் என் தலைதாழ்ந்த வணக்கங்கள்!

      Delete
  38. எங்கே? எங்கே? நான் முயற்சித்த வெண்பா எங்கே? இணையம் விழுங்கிவிட்டதே..அதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று ஆவலுடன் இருந்தேன் அண்ணா ...ஹ்ம்ம்ம்
    மீண்டும் நினைவுபடுத்திப் பதிகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!
      அமெரிக்காவிலிருந்து விசா இல்லாமல் வந்திருக்கும்.
      குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பார்களோ?
      ஹ ஹா ஹா..
      இன்னொரு வெண்பா எழுதி அனுப்புங்கள்!
      நேரமும் எண்ணமும் இருந்தால்!

      உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி!

      நன்றி

      Delete
    2. Anna, mythiliyin pinnoottaththirku Keezh paarungal..
      Ennamirukku,thayara irunga😀

      Delete
    3. Anna en palli natpukal watsup il inaindhadharkaaga naan ezhudhiyadhu ingu padhikiren. Sariya endru paarththu sollungal

      பதின்பருவத் துணைகளின் பாச அளவளாவல்
      பதிற்றொன்பான் வருடம் கடந்து

      Delete
    4. பதின்-பரு-வத் துணை-களின் பா-ச அள-வளா-வல்
      ( 2 2 1) ( 2 2 ) (1 1) ( 2 2 1)

      பதிற்-றொன்-பான் வரு-டம் கடந்-து
      ( 2 1 1) (1 1( (2 1)

      மறுவருகைக்கு நன்றி சகோதரி,
      முதல் அடியின் முதல் சீர், நான்காம் சீர்,
      இரண்டாம் அடியின் முதற்சீர்......இவை அடுத்த சீர்களோடு இணைந்திருப்பதைக் கவனியுங்கள்!
      நம் விதிப்படி, ஒரு சொல் மூன்றாக அறுக்கப்பட்டால், இறுதி அசை ஒன்றில் முடிய வேண்டும். அடுத்த சொல்லின் முதல் அசை ஒன்றில் தொடங்க வேண்டும். இலக்கணக்காரர்கள் சொல்வது “காய் முன் நேர்“
      இது இங்குப் பிறழ்ந்திருக்கிறது தானே?

      முதலில் பாருங்கள். தவறு தெரிந்தால் எளிதாகச் சரிசெய்து விடலாம்.
      “பதின்பருவ நட்புகளின் பாசம் தொடரும்
      பதிற்றொன்பான் ஆண்டு கடந்து“

      “பதிற்றொன்பான்??!!!“ தொல்காப்பியத்தமிழ்!!!!!!!!

      நானே ஆடிப்போய் விட்டேன்.

      இப்பொழுதுதான் முத்துநிலவன் அய்யாவிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.

      “பதினொன்ப தாண்டு“ என மாற்றலாம் என்பது என் பரிந்துரை!

      முயற்சியும் பயிற்சியும் மரபை வசமாக்கப் போதுமானவை!
      வாழ்த்துகள்

      Delete
    5. இதுக்குத்தான் ரொம்ப ஆர்வக் கோளாறு கூடாது என்பது..அவசரம் எனக்கு..காய் முன் நேர் கோணலாகி விட்டது..நன்றி அண்ணா..இனி கவனமாக இருப்பேன். பதிற்றொன்பான் என்பது அழகாய் என்னைக் கவர்ந்து விட்டது.. :)
      நீங்களே வாங்கிக் கட்டிக் கொண்டீர்களா? நான் எழுதியதை அண்ணா பார்க்காமல் இருக்க வேண்டும்..:)
      பதினொன்பதாண்டு என்று மாற்றலாம் அண்ணா, தெளிவாக இருக்கும்,

      நன்றி அண்ணா

      Delete
    6. பதிற்றொன்பான் என்பது நல்ல ஆட்சி தான்!
      ஆனால் தொல்காப்பியத் தமிழ்!
      “நாம் இக்கால இலக்கிய வாசகர்களுக்கு எழுதுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்“ என்பது மு.நி அய்யாவின் அறிவுரை!
      பல நேரங்களில் நான் தவறுகிறேன் எனினும், அதில் நான் முற்றிலும் உடன்படுகிறேன் என்பதோடு, தயங்காது மற்றவர்க்குப் பரிந்துரையும் செய்வேன்.
      முயன்று “தவறிக்“ ““கற்காமல்““வெண்பாவை யாரும் வென்றிருப்பார்கள் என்பதை நான் நம்பவில்லை.
      நன்றி

      Delete
  39. வணக்கம்
    ஐயா
    உன்பால் விளைந்த சொற்கள் எல்லாம்
    என்பால் கண்டு உகந்து
    செப்பிய வரிகள் செவ்வனே துளங்கியது
    “மெய்“ஞானம் கண்டது
    திகைத்ததோர் மெய்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்!

      தமிழ்க்கவிதைப் போட்டிகள் நடத்தி உலகெலாம் ஓதற்கெளியவனாய் மாறிவிட்டீர்கள்!
      நாங்கள் வெண்பா இலக்கணம் கற்கும் ஒரு கூட்டத்தைத் திரட்டியபடி உங்களின் அடுத்த போட்டியில் கலந்து கொள்ள வருவோம்.
      சேர்த்துக் கொள்வீர்கள் தானே?

      நன்றி!!!!

      Delete
  40. தங்களது இந்த பதிவினைப் பற்றி அய்யா V.N.S அவர்கள் தமது பதிவினில் குறிப்பிட்டுள்ளார். நேரம் கிடைக்கும் போது சென்று பார்க்கவும். http://puthur-vns.blogspot.com/2015/01/blog-post.html

    ReplyDelete
  41. அன்பு தமிழ் உறவே!
    ஆருயிர் நல் வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete
    Replies
    1. தங்களது தகவலுக்கு நன்றி அய்யா!
      தங்களுக்கு உவகை அளித்திருப்பேன் என்றே நினைக்கிறேன்.
      நன்றி

      Delete
  42. ஆகா,,,,,,,,,,,
    அருமை,
    மற்றவையும் படிக்கத் தூண்டுகிறது.
    பிறகு வருகிறேன்.

    ReplyDelete


  43. வாழ்த்துக்கள் கவிஞரே இவ்வாறான இலகு நடையினை நான் இதற்குமுன் கண்டதில்லை அவ்வளவு எளிதாக இருக்கிறது இப்பதிவை படித்தோர் எல்லோர்க்கும் இந்தநிமிடம் வெண்பா பெருக்கெடுத்து இருக்கும் சந்தேகம் இல்லை ! வாசிக்கத் தொடங்கிவிட்டால் உணவை மறந்திருக்கும் எனக்கு பதிவு நீண்டது என்று சொல்லமுடியவில்லை !
    நானும் ஒரு புகைவண்டிப் பயணியாய் இருந்த உணர்வு கொண்டேன்
    உங்கள் பதிவோடு எல்லாக் கருத்துக்களும் ஒன்றித்து நிற்கின்றன வாசித்து மகிழ்ந்தேன் நன்றி !
    நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் வலைக்கு வருவேன் !




    தருநிழலின் கீழ்நீரில் தங்கும் மீனின்
    ............தாகமிலாத் தன்மையதாய் ! உம்மைச் சேரும்
    பெருமக்கள் மனதிலுறை சந்தே கங்கள்
    ............பிரிந்துவிடத் தமிழ்மணக்கும் பாக்கள் பூக்கும் !
    குருவாக இருந்தெங்கள் குறைகள் நீக்கிக்
    ............கொஞ்சுதமிழ் மனதூறக் கொடுத்துப் பாடம்
    அருகிவரும் தமிழாற்றல் அனைத்தும் மீண்டும்
    .............அகிலமெலாம் மீளுயர வைப்பீர் வைப்பீர் !

    ReplyDelete
    Replies
    1. முன்பே மரபினை மரபார்ந்த முறையில் கற்றும் கவிதைகள் எழுதியும் போகும் தங்களைப் போன்றோர், பயனொன்றும் இல்லாவிட்டாலும் இந்த அரிச்சுவடிப் பதிவினைப் படிப்பதும் பாராட்டுவதும் நானுற்ற பேறு.

      தங்களின் வருகைக்கும் அழகிய விருத்தத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே!

      Delete
  44. உங்கள் பதிவைப் படித்த போது வெண்பா இலக்கணம் எளிதாகப் புரிவது போலிருந்தது. இவ்வளவு எளிதாகப் பள்ளியில் இலக்கணத்தைக் கற்பித்திருந்தார்களேயானால், இந்நேரம் மாஸ்டர் ஆகியிருக்கலாம்.
    எனக்குப் புரிந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். சரியா என்று சொல்லுங்கள். இப்பதிவைப் படித்த பின் வெண்பா இலக்கணத்தை முழுமையாக கற்கும் ஆவல் எழுகிறது. இணைப்பைக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.

    வெண்பா இலக்கணம் கற்றேன் எளிதாக
    நன்றிக் கடன்பட்டேன் நான்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.


      உங்களின் குறள் வெண்பா மிகச் சரி.

      நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் இதற்கு முன்பே மரபில் எழுதுவீர்கள் போலத்தான் உள்ளது.

      அதிலும் “ நன்றிக் கடன்பட்டேன் நான்” என தளைநோக்கிச் சீர்பிரித்தல் என்பது முதன்முதல் எழுதுபவர்களுக்கு வராது.

      பழகு நிலையில் வெண்பா எழுதுவது சுவாரசியம்.

      பொருத்தமாய்ச் சேரும் இணைப்புக்கட்டடைகளைச் சரியாக இணைத்து உருவங்களை உருவாக்கும் குழந்தைமை போலே ஒரு விளையாட்டாய்த் தொடங்குவது.

      ஆனால் வெண்பாவை கவிதையாக்கக் கவிமனம் வேண்டும்.
      அதை யாரும் கற்றுத் தந்துவிட முடியாது.
      கவிமனம் உங்களிடம் இருக்கிறது.

      வடிவத்தை மிக எளிதில் கற்கலாம்.

      வாழ்த்துகளுடன் மரபுலகிற்கு உங்களை வரவேற்கிறேன்.

      இதன் தொடர்பதிவுகளையும் நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க அழைக்கிறேன்.

      நன்றி.

      Delete
    2. வணக்கம் சகோ. நான் எழுதியது சரியென்றறிந்து அளவிலா ஆனந்தமடைந்தேன். அப்படியென்றால் நான் புரிந்து கொண்டது மிகச் சரி. ஒரு புது விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..
      என்னாலும் விதிகளைப் புரிந்து கொண்டு மரபுக்கவிதை எழுத முடியும் என்ற நம்பிக்கையை முதன் முதலில் ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
      நன்றிக் கடன்பட்டேன் உமக்கு என்று தான் முதலில் எழுத நினைத்தேன். ஆனால் நீங்கள் சொன்ன விதிப்படி உமக்கு என்பதில் நேர் இல்லாமல் நிரை இருந்ததால் நான் என்று மாற்றினேன். இது சரியாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதன் தொடர்ச்சியைக் கண்டிப்பாகப் படித்து என் சந்தேகங்களைக் கேட்பேன். நீங்கள் உதவ வேண்டும்..
      நீங்கள் சொல்லிக்கொடுத்த 1 என்றால் 2, 2 என்றால் ஒன்று என்பது புரிந்து கொள்ள மிகவும் உதவியாயிருந்தது. கவிஞர் முத்துநிலவன் ஐயா சொன்னது போல் இதைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் பலருக்குப் பயன்படும்.
      மீண்டும் நன்றி.

      Delete
    3. உங்கள் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் நான் அல்லவா நன்றி சொல்லவேண்டும்.

      முயற்சியைக் கைவிடாமல் தொடருங்கள்.

      மரபின் புதிய சாத்தியங்கள் உருவாகட்டும்.

      நன்றி.

      Delete
  45. அய்யா தங்களின் எளிய விளக்கத்தால் நானும் துணிவு வரபெற்றேன். சரியா என சொல்லுங்கள்.

    தனியே அமர்ந்து தவிக்கும் தமிழரே
    ஒன்றாய் இணைந்து உரிமை பேறுபெற்று
    நன்றாய் தமிழை உணர்ந்து புனைவீர்
    சிறப்பான வெண்பா நிதம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் திரு ssk tpj

      இலக்கணச் சுத்தமான ஒரு வெண்பாவை நீங்கள் எழுதிவிட்டீர்கள்.

      இது உங்களுக்கு முதல் முயற்சியாய் இருந்தால் எனது வியப்பும் பாராட்டும்.

      கவிதைகள் எழுதுவீர்கள் என்றால் மரபைக் காட்டி யாரேனும் பயமுறுத்தினால் இது உதவும்.

      அன்றியும், இல்லாமல் போகின்ற தமிழின் மரபு வடிவத்தைத் தொட்டுத் தொடர உங்கள் கரங்களும் உதவலாம்.

      சில சில நகாசு வேலைகள் இருக்கின்றன இவ்வெண்பாவில்.

      அதையும் தெரிந்து கொண்டால் வெண்பாவை எழுதித்தள்ளிக் காண்போரை விழியுயர்த்த வைக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் வெண்பாவிற்கும் நன்றியும் வாழ்த்தும்.

      தொடருங்கள்.

      Delete
    2. முதல் முயற்சி தான் அய்யா. தங்களின் இரண்டாவது பதிவை (யாப்பில்) படித்து கொண்டு உள்ளேன்.
      நேரம் எடுத்து எழுதியதை படித்து பதில் அளித்தமை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது இன்றைய வேக உலகில்.
      தங்கள் சென்ற புகைவண்டி பாதை எனக்கும் சற்று பழக்கம் சிறு குழந்தை பருவம் முதல். கரூர் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து திருச்சி சென்னை இன்று வெளி நாட்டில் இருந்தாலும் சிறிதும் மறக்க இயலாது இந்த பயணங்கள்.

      Delete
    3. அயலகத்திருந்து தமிழை ஆர்வம் கொண்டு தொடரும் உங்களுக்கு எனது வணக்கமும் நன்றியும்.

      முயலுங்கள்.

      எனக்கு முடித்த இந்தத் தொடர்பதிவை இன்னும் தொடரலாமோ என்ற நம்பிக்கையை உங்களின் பின்னூட்டங்கள் தருகின்றன.

      அதற்காய் நன்றி.

      தொடருங்கள்.

      Delete
  46. வெண்பா எழுதும் முறைதனை எளிமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி. வெண்பா எழுத முயற்சிக்கின்றேன். செப்பலோசை என்கிறார்கள். அது பற்றி விளக்கம் தரவும். அன்புடன். பரமநாதன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மிகத்தாமதமாக மறுமொழி அளிப்பதற்குப் பொறுத்திடுங்கள்.

      யாப்பு வெண்பாவிற்கென குறிப்பிட்ட இலக்கண வரையறைகளுக்கு உட்பட்டு எழுதப்படும்போது பாவின்று எழும் ஓசையைத்தான் செப்பலோசை என்கிறார்கள்.

      செப்பல் என்பதற்கு கூறுதல் என்ற பொருள் உண்டு.

      பொதுவாகவே வெண்பாக்களை அறநூல்கள் பயன்படுத்துகின்றமையையும் இத்துடன் வெண்பாவின் ஓசையைப் பொருத்திப்பார்க்க வேண்டும்.

      தங்ளின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      தாங்கள் எழுதும் வெண்பாவை நானும் அறிய இங்கு பகிர்ந்தால் மகிழ்ச்சி.

      Delete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. புகைவண் டிபயணம் தாங்கள் இலக்கணம்
    சொல்லும் வகுப்பு, வெருப்பில் - வகுப்பும்
    எமக்கு சிறைதான் மரபில் கலக்கும்
    உமக்கு கவிநன் றியே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      முதலில் தங்களின் வருகைக்கும் இடைவிடாத முயற்சிக்கும் அதை அறியத் தந்தமைக்கும் என் மகிழ்ச்சியும் நன்றியும்.

      வெண்பா தளை தட்டாமல் வந்திருக்கிறது.

      இன்னும் முயல வேண்டும்.

      மரபில் கலக்க இருக்கும் உங்களுக்கும் முன்கூட்டியான எனது வாழ்த்துகள்.

      நன்றி

      Delete