Sunday 22 February 2015

“முனைவர் ‘பசி‘பரமசிவம் அய்யாவின் கவனத்திற்குப் பணிவுடன்“


மதிப்பிற்குரிய அய்யா,
வணக்கம். முதலில் நீங்கள் தமிழில் முனைவர்(ப்) பட்டம் பெற்றிருப்பவர் என்பதால் மிகுந்த கவனத்துடனும், பணிவுடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
         நான் பதிவுலகிற்கு வந்ததன் நோக்கம் இதுவன்று என்றபோதும் உங்களின் தளத்தில் பின்னூட்டப்பெட்டி முடங்கி இருப்பதாலும்  தங்களைத் தனியே தொடர்பு கொள்ள மின்னஞ்சல் போன்ற வசதிகள் இல்லாமையாலும் என்னைக் குறித்து, என் பெயர் குறிப்பிடாமல் சில செய்திகள் மட்டும் கொண்டு மீண்டும் ஒரு பதிவு தங்கள் தளத்தில் வந்திருப்பதாலும் அவற்றின் கருத்துகளோடு நான் மாறுபடுவதாலும் என் தரப்பை விளக்க வேண்டிய அவசியம் கருதியே என் தளத்தில் நான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

 பொதுவாகவே நான் விவாதங்களில் ஈடுபட விரும்புபவன் அல்லன், உடன்படாத கருத்துகளைப் பதிவுகளில் கண்டால் அங்கிருந்து மௌனமாக நழுவிவிடுபவன். நீங்கள் என்னைக் குறித்துச் செய்த விமர்சனத்திற்கு நான் வருந்தியதைவிட அதிகமாக உங்கள் தளம்  இரு நாட்களாக முடங்கிக் கிடந்தபோது வருந்தினேன். ஏனெனில் வலை உலகிற்கு நான் வந்து ஓராண்டு கூட ஆகவில்லை. இது எதனால் ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. இது பற்றி அறிந்தவர்களை நான் தொடர்பு கொண்டு தொல்லை செய்யவும் விரும்பவில்லை.

ஆனால் உங்கள் புதிய இடுகை, ஏதோவொரு மனநிலையில் தாங்களே தங்கள் வலைத்தளத்தை முடக்கியதாகக் கூறியிருத்தல் கேட்டு  அதிர்ந்து போனேன்.

பின்னூட்டங்களில் எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்கிற அனுபவத்தை நான் அடைய ஆறுமாதமாயிற்று. அதற்காகச் சக வலைப்பதிவர்கள் மலர்தரு கஸ்தூரிரங்கன் மற்றும் மூங்கில்காற்று முரளிதரன் இவர்களுக்கு நான் பெரிதும் நன்றியுடையேன்.

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். இங்கு நான் பெரியவனா நீ பெரியவனா என்கிற போராட்டம் அர்த்தமற்றது. ஏனெனில், உங்கள் அகவையோ அறிவோ படிப்போ அனுபவமோ என்னிடத்தில் இல்லை. நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கப்போனால் நான் உங்களின் மாணவனின் மாணவனாய்த் தான் இருப்பேன். ஆகவே நீங்கள் மலையாய் இருந்தால் நான் மடுவாகவே இருக்கிறேன். மலையாகத் தோற்றமளிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு நிச்சயமாய் இல்லை. உங்கள் முன் ஒப்பிட்டால் நான் ஆகச்சிறியவன்தான் என்பதை  நன்கு அறிந்திருக்கிறேன். எனவே எல்லாம் இருப்பவனிடத்தில் ஒன்றுமே இல்லாதவன் நிற்கின்ற தாழ்மையோடுதான் எனது இந்தப் பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

உங்களது தமிழ்ப்பதிவர்களுக்குப் பணிவான பத்து பரிந்துரைகள் என்னும் பதிவின் இறுதியில், “பதிவில் பிழைகாணின் திருத்துங்கள் “ என்கிற வரிகளின் உண்மையை உரசிப் பார்க்கத் தவறிவிட்டேன். இப்போது தோன்றுகிறது அது ஓர் அறைகூவல். “என் பதிவில் பிழையிருந்தால் எங்கே காட்டு“ என்பதாய்த்தான் அது இருந்திருக்குமோ என்று. அப்படி ஒருவேளை இருந்திருக்குமானால் அந்தத் தொனியை எழுத்திலிருந்து பிரித்தறியத் தவறியது என் தவறுதான். அவ்வறியாமையால்தான் பின்னூட்டத்தில் நான் தவறென்று கருதியவற்றைச் சுட்டிக்காட்டினேன்.

           ஆனால் நீங்களோ தமிழ் மரபிலும் இலக்கணத்திலும் இப்படி இருக்க வேண்டும் என்று உள்ளதை, “ என் உச்சரிப்பு இது! என் அனுபவம் அதன்படி இதுதான் சரி!! “ என்கிற ஒற்றை வாதத்தில் அடித்து நொறுக்கிவிட்டீர்கள், அடுத்த பதிவிலோ பெரும்பான்மையானவர்கள்  அப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் அதனால் நானும் பயன்படுத்துகிறேன் என்று சொல்லி அதற்கு ஆதாரமாகக் கூகுள் தேடு பொறியின் உதவியுடன் சில சான்றுகளையும் காட்டிப் போயிருக்கிறீர்கள். அதற்கு அடுத்ததாய் வருகிறேன்.

முதலில், ஒவ்வொருவரும் அவர்தம் அனுபவத்திற்கும் உச்சரிப்புக்கும் ஏற்ப எழுத்துத் தமிழைப் பயன்படுத்தினால் அது பிழையற்றிருக்குமா?

அல்லது தமிழைச்சிறப்புப் பாடமாய் எடுத்துப் படித்தவர்கள் அவர்களின் உச்சரிப்பிற்கேற்ப, அனுபவத்திற்கேற்பத் தமிழைப் பயன்படுத்தலாமா?

இவற்றிற்குத் தங்களின் பதில் ஆம் என்றிருந்தால்,  நீங்கள் கூறியுள்ள திரு.வி.க.வையோ, மறைமலையடிகளையோ, மு.வ. வையோ படிக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் நூல்களும் உச்சரிப்பும் தம்மில் நெருங்கிய தொடர்புடையனவல்ல. எனவே அவரவர் உச்சரிப்பும் அனுபவமும் பிழையின்றி எழுதப் போதுமானவை என்றாகிறது.

அடுத்து நீங்கள் கூறியிருப்பது, பெரும்பான்மையோர் அப்படிப் பயன்படுத்துகிறார்கள். அதனால் நானும் பயன்படுத்துகிறேன் என்பது……அல்லது உங்கள் தரப்பை வலுவூட்ட இந்தப் பெரும்பான்மையைத் துணைக்கழைப்பது....

உண்மையில் இந்தக் கருத்துத்தான் இன்றைய தமிழ்நடைப் பிழைகளின் ஆணிவேர் என்று நினைக்கிறேன் அய்யா.  நம்முடைய குழந்தைகளுக்குப் பிழையற்ற எழுத்து மாதிரியை ( உச்சரிப்பு மாதிரியை ) நம் ஊடகங்களோ பத்திரிக்கைகளோ கொடுக்கவில்லை. ஆங்கிலத்தில் சிறு தவறுடன் யாராவது உச்சரித்தால், எழுதினால் உடனே திருத்த முற்படும் நாம், அவர்களது அறிவைக் கேலிபேசிக் குறைசொல்ல முற்படும் நாம் பெரும்பாலும் நம் தாய் மொழியில் அதனைச் செய்வதில்லை. அவ்வளவு அலட்சியம் நம்மொழியிடம் நமக்கு. இதிலும் நீங்கள் நல்ல தமிழ்நடைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்களைப் போய்ப் பாருங்கள் என்கிறீர்கள்.  உங்களால் தற்போதைய தமிழில் எழுதும் எந்த இலக்கியவாதியையும் நல்ல தமிழ்நடைக்குச் சான்று காட்ட முடியவில்லை. ஏன்?

அவர்கள் தமிழ் சரியில்லையா? உண்மை சுடும். விதிவிலக்கான சிலரைத்தவிர நம் மொழியைப் பிழையின்றி எழுதுகின்றவர்கள் குறைவு என்பதுதான் அந்த உண்மை. உண்மையில் அது மக்களின் பிழையல்ல. நமது நாளிதழ்கள், பத்திரிக்கைகள், படைப்பிலக்கியங்கள் இவை பிழையற்ற நல்ல தமிழைத் தந்திருந்தாலே போதும். அதைப் படிப்பவர்களுக்கு நல்ல மாதிரியாக அவை இருந்திருக்கும். அந்த வாசிப்பு, தாங்கள் எழுதும் போதும் அவர்களை அறியாமலேயே அவர்கள் இயல்பாகவே பிழையில்லாமல் அல்லது குறைந்த அளவு பிழைகளுடன் எழுத உதவும். இதை எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன். என்னால் ஓரளவு குறைந்த பிழைகளுடன் ( அப்படித்தான் நினைக்கிறேன் ) ஒரு பதிவை எழுத முடிகிறது அதற்குத் தேடிப்பிடித்து நான் படித்த  பிழையற்ற நடை மாதிரிகளின்  வாசிப்பே பெருமளவில் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்பேன். இங்கு இலக்கணம் எங்காவது அய்யம் எழுந்தால் தேட உதவும் சிறு கைவிளக்கு அவ்வளவே.

இந்தத் தலைமுறை, ( ஒரு தலைமுறைக்கான வயதை இன்னும் தாண்டாததால் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ) பெரும்பாலும் பிழையற்ற நூல்களின் வாசிப்பை இழந்துவிட்டது. முக்கியமாகக் குழந்தை இலக்கியங்கள், குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையிலும் , பிழையற்ற, ஆர்வமூட்டும், நல்ல தமிழ் நடையிலும் இருக்கும் நிலை அருகிவிட்டது. மறைமுகமாக நம்மில் பெரும்பாலானோர், அச்சு ஊடகங்களில் நல்ல கட்டுரைகள் எழுதுபவர்கள், பிழைத்திருத்துநர்கள் உட்படப்  பிழைகளை இனங்கண்டுணர இடர்ப்படுவதற்கு அடிப்படைக் காரணம் இதுதான்.

சென்ற பதிவின் பின்னூட்டத்தில், ( தற்போது நீங்கள் அப்பின்னூட்டங்கள் அனைத்தையும் நீக்கி இருந்தாலும் ) நீங்கள் தான் கூறியிருந்தீர்கள்,
எட்டு கோடியை எட்டுக்கோடி என்று நான் அறிந்தவரையில், மறைமலையடிகள், மு.வ. , திரு.வி.க. போன்ற அறிஞர்கள் எவரும் எழுதியதாகத் தெரியவில்லை
என்று.

நான் சற்று மென்மையாகத் தான் அய்யா சொல்லியிருந்தேன்.
நீங்கள் சொல்லியிருப்பவர்கள் நீங்கள் காட்டியுள்ள எடுத்துக்காட்டைக் கையாண்டிருந்தால், ‘எட்டுக்கோடி‘ என்றே பயன்படுத்தியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன் என்று.

ஆனால் என்னால் உறுதியாகவே கூறியிருக்க முடியும் அப்படி அவர்கள் பயன்படுத்தி இருக்க வழியில்லை என்று. அவர்கள் எழுதிய எல்லா நூல்களையும் நான் படித்தவனில்லை என்கிறபோதும், நீங்கள் காட்டிய சான்றை அவர்கள் இப்படிப் பயன்படுத்திய ஓரிடத்தையாகிலும் உங்களால் காட்ட முடியாது என அறுதியிட்டே கூறியிருக்க முடியும். ஆனாலும் அங்கு நான் அதைத் தவிர்த்தேன்.

ஒரு வாதத்திற்காக அப்படி இருப்பதாக வைத்துக் கொண்டாலும்கூட, அவர்கள் ஏதேனுமோரிடத்துப் பிழை செய்திருக்கிறார்கள் என்பதற்காக அதை நாம் ஏற்றுப் போற்ற வேண்டுமா என்ன?

நீங்கள், வித்துவான் படிப்பைக் கடந்து, தமிழில் முனைவர்(ப்) பட்டம் வாங்கியிருப்பவர் என்பது தங்களின் பதிவின் பின்னூட்டத்திலும் , தற்போதைய பதிவிலும் இருந்து அறிந்து கொண்டது. கூடவே நான் சொல்லாத போதும் என் பின்னூட்டத்திற்கான பதிலில் “ மொழி எவ்வளவோ திரிபடைந்துவிட்ட நிலையில் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நன்னூலை மேற்கோளாகக் காட்டி விதிகள் வகுப்பது ஏற்புடைதன்று “ என்னும் தங்கள் கருத்தினையும் தெரிந்து கொண்டேன். எனவே நிச்சயமாய்  இரண்டாயிரம் ஆண்டு மரபுடைய தொல்காப்பியத்தையும் நீங்கள் ஏற்கப் போவதில்லை. ஏனெனில் ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளில் இவ்வளவு திரிபடைந்த மொழி, இரண்டாயிரம் ஆண்டுகளில் அடைந்த திரிபு………………….அப்பப்பா நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

உங்களின் பத்து(ப்) பரிந்துரைகளில் ஏழாம் பரிந்துரை http://kadavulinkadavul.blogspot.com/2015/02/blog-post_22.html “பிழையின்றித் தமிழில் எழுதுவது எப்படி“ என்பது போலக் கூகுளில் இருக்கும் பதிவுகளைத் தேடிப்படிக்கச் சொல்கிறது. ஆனால் அந்த  நூல்களில் கூறப்படும் விதிகள் எல்லாம் எந்த இலக்கண நூலை அல்லது நூற்களை ஆதாரமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாய் அவை உச்சரிப்பையும், அனுபவ அறிவையும் மட்டும் கொண்டு கட்டமைக்கப்பட்ட நூல்களாய் இருக்காது என்கிற  ஆழமான நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்நிலையில்,

பத்து பரிந்துரை என்று நீங்கள் சொல்லியிருப்பது “பத்துப்பரிந்துரை“ என்றே இலக்கணப்படி இருக்க  வேண்டும் என்ற என் பின்னூட்டத்திற்கு மறுமொழி கூற வந்த நீங்கள் நீங்களாகவே பதிவிற்குத் தொடர்பில்லாமல் பின்னூட்டத்திலும் மறுபதிவிலும், தமிழ்ப்பேரறிஞர்கள் சிலரின் பதிவில்  எட்டு கோடி என்றுதான் குறிக்கிறார்கள். எட்டுக்கோடி எனக் கண்டதில்லை எனக் கூறியிருந்தீர்கள். அதனால்தான் நான் மீண்டும் எட்டுக்கோடி என்பதே சரி என்றும் நீங்கள் கூறிய அறிஞர்கள் அப்படிக் காட்டும் இடத்தைச் சுட்டுமாறும் வேண்டினேன்.

ஆனால் நீங்களோ “அவர்தம் நூற்களில் சான்று தேடும் முயற்சி மேற்கொள்வதை நான் விரும்பவில்லை“ என்று கூறி, பெரும்பான்மையோர் “ பத்து பரிந்துரை “ என்றுதான் எழுதியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகச் சில கூகுள் தளங்களை மேற்கோள் காட்டி உங்கள் கருத்தை இன்னும் நியாயப்படுத்திச் சென்றிருப்பது சரியா என்பதை உங்களது முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

பத்துப்பரிந்துரைகள் என்றாலும், கூகுள் பல பக்கங்களுக்குக்  காட்டும் முகவரிகளை நிச்சயம் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். சென்ற பதிவின் பின்னூட்டத்தில்  தமிழருவிமணியன் ( என்பதாய் நினைவு ?) என்கிற ஒருவர் மட்டும் அப்படிப் பயன்படுத்தி இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை இங்கு உங்கள் “பெரும்பான்மை“ என்னும் திரை மறைத்துவிட்டது. பின்னூட்டத்தை நீக்கி விட்டீர்கள். 


நானும் தேடிப்பார்த்தேன்.  எனக்குக் கூகுள் பத்துப் பரிந்துரைகள் எனும் தேடலுக்கு, 1350 முடிவுகளைக் காட்டிற்று. நான் அதன் உள்நுழைந்து பார்க்க வில்லை. அதற்கு விருப்பமும் இல்லை. எனக்கு அதற்கு முன்  தோன்றியது இதுதான்,

நீங்கள் சேர்ந்து கொண்ட  பெரும்பான்மை எந்தப் பக்கம் இருக்கிறார்கள்?

பிழையில்லாமல் தமிழை எழுதும் கூட்டத்திலா?

பிழையுடன் தமிழை எழுதும் கூட்டத்திலா ?

தமிழ்நாட்டில், பெரும்பான்மையோர் பிழையுடன் எழுதுவதாக நீங்கள் நினைத்தால், பெரும்பான்மையோர் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என நீங்கள் வாதம் செய்வதும் பிழையாய்த்தான் இருக்க முடியும்.

பெரும்பான்மை பிழையில்லாமல் எழுதுகிறார்கள் என்பதற்காக நீங்கள் பின்வரும் ஆதாரங்களை http://tamilmanam.net/forward_url.php?url=http://kadavulinkadavul.blogspot.com/2015/02/blog-post_69.html&id=1359018
எனும் பதிவில் அறியத் தந்திருக்கிறீர்கள் என்றால் அவற்றின் பிழையற்ற தன்மையைச் சற்றுச் சோதித்துப் பார்ப்பது எனக்கவசியமாய் இருக்கிறது.

முதலில் விகடனின் “ ஐந்து நிபுணர்கள்….. பத்து பரிந்துரைகள் “
இதன் முதல் வரி, எப்படியும் இந்த வருடம் சந்தை பழைய உச்சத்தை தாண்டிச் சென்றுவிடும்.
என்பது. இங்கு உச்சத்தை  தாண்டி என்பதும் தங்களது பத்து பரிந்துரைகளின் படி சரிதானா? 

இரண்டாவது,

என்னும் பதிவில் வரும் பின்வரும் வரிகள்,
,
“தேன்கூடு தளத்தில் தெரியும் பரிந்துரைகள் போல, சின்னதொரு நிரலியை பதிவர்கள் தத்தம் பக்கத்தில் இட்டுக் கொண்டு கில்லி பரிந்துரைகளைப் பார்க்க வழிசெய்யலாம்.

என்பது. இங்கு  நிரலியை திவர்கள் என அந்தப் பதிவர் குறிப்பிட்டுள்ளதும் தங்களது பத்து பரிந்துரைகளின் படி சரிதானா?


மூன்றாவதாகத் தாங்கள் காட்டிய பத்து பரிந்துரை  பதிவில்,

http://nonono-no-no.blogspot.in/2010/06/blog-post.html பரிந்துரை விளையாட்டு!!!    

 

என்னும் பதிவின் தொடக்கத்திலேயே பதிவர்,

 

“ஒரு அறிவாளி தன் பதிவில் ஒரு நாலு லிங்க்கு போட்டு, தோ படியுங்கள் என்று மட்டும் எழுதுகிறார்! அதற்க்கு ஒரு பத்து பரிந்துரைகள்!
என்கிறார்.
தாங்கள் சொல்வதன் படி, இவர் எழுதிய பத்து பரிந்துரை சரியென்றால், அதற்க்கு என்பதும் சரிதான். தமிழ் வாழ்க.

நான்காவதாக நீங்கள் கொடுத்துள்ள முகவரி,
அதைச் சொடுக்கினால், Invaid story   என்று காட்டுகிறது.

ஐந்தாவதாக,

பிஎஸ்சியின் பரிந்துரைகளை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது

என நீங்கள்  பத்து பரிந்துரைக்குச் சான்று காட்டியிருக்கும் இடுகையில் உள்ள ஏழாவது பரிந்துரையில்,

7. தேர்தல் வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் பரிசோதிப்பதற்கும் ஆட்சேபனை தெரிவிப்பதற்குமான கால அவகாசத்தை நீட்டித்தல்;

என்பதனையும் படிப்பவர்கள், ஆட்சேபனை என்பதனையும்  ஆட்சேபணை தெரிவிக்காமல் ஏற்றுக் கொள்வார்களாக.

ஆறாவதாக,

    சிறப்புப் பிரிவு மாணவர்கள் 7 பேர் ...


என்று தங்களால் காட்டப்பட்ட தினமணி இடுகையில் சிறப்பு பிரிவு மாணவர்கள் 7 பேர் பத்து பதக்கங்கள். என்றே இருக்கிறது.  சிறப்பு பிரிவு என்பதன் நடுவில் ப் சேர்த்துச் ‘சிறப்புப் பிரிவு ’என்று நீங்கள் தான் ( சரியாக ) மாற்றி இருக்கிறீர்கள்.


சிறப்பு பிரிவு என இருப்பதைப் பொறுக்காமல் சிறப்புப் பிரிவு என நீங்கள் மாற்றியது போலவே பத்து பதக்கங்களையும் மாற்றி இருக்கலாம். அல்லது பதிவில் இருப்பது போலவே சிறப்பு பிரிவு என்கிற அவர்களின் வழமை சரியென்று விட்டிருக்கலாம்.

தலைப்பைக் கடந்து இந்தப் பதிவின் முதல் பத்தியைப் படிப்பவர்கள் திரு.வி.க, மு.வ....இன்னபிற அறிஞர்களின்  தமிழ் படித்தவர்களாய் இருந்தால் தமிழ் நடை நிச்சயமாகச் சரியாய் இருக்கிறது என்று கூறத் துணிய மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

ஏழாவதாக,

    தேசிய இனப்பிரச்சினைக்கான ...


எனப் “பத்து தமிழுக்குச்“ சான்றாக உங்களால் காட்டப்பட்ட பதிவில்,

இதுவரையில் பத்து சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்திப்புக்களில் சாதமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்பதில், சாதமான என்பதைச் சாதகமான என்று யாரும் படித்துவிடக்கூடாது.
பத்து தமிழ் என்பதே சரியாக இருப்பதால் சாதமான என்பது எப்படித் தவறாக  இருக்க முடியும்?

எட்டாவதாக,

நீங்கள் காட்டியுள்ள

     திருச்சபையில் புதிதாக ...

uk.radiovaticana.va/articolo.asp?c=359242
பதிவைச் சொடுக்கினால்,

Oops. Something went wrong ... sorry

An unhandled exception has occurred and the request was terminated. Please refresh the page. If the error persists, go back

எனுமாறு காட்டுகிறது.

ஒன்பதாவதாக,

ஒட்டகத்துக்கு நடந்தது என்ன?

dondu.blogspot.com/2010/06/blog-post.html
என்னும் பதிவில் நீங்கள் மேற்கோளாய்க் காட்டியுள்ள பின்வரும் வரிகள் காணப்படவில்லை. 
““ அதற்கு ஒரு பத்து பரிந்துரைகள்கவனிக்க வேண்டியதுஇந்த அசுரத்தனமான அல்ப ஆசாமிக்கு முகமூடி மட்டும் தேவை!““

பத்தாவதாக,

நீங்கள் காட்டியுள்ள பின்வரும் பதிவின்,

டாடா ஏஸ் கவிழ்ந்து பத்து பேர் ...

www.dinamalar.com/district_detail.asp?id=1188307
·         22 மணிநேரம் முன்பு - டாடா ஏஸ் கவிழ்ந்து பத்து பேர் காயம். Advertisement. Advertisement. அதிகம் ...  
கண்ட ஒரு பத்தி அளவேயான செய்தி கீழக்காண்பது.



   திண்டிவனம்: மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று திரும்பும் போது வேன் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர். திண்டிவனம் அடுத்த புதூரை சேர்ந்தவர் சண்முகம் மகன் அய்யப்பன் (21) இவர் டாடா ஏஸ் வேனில் உறவினர்களுடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று, நல்லாவூருக்கு திரும்பினார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திண்டிவனம் அடுத்த கொணக்கம்பட்டு அருகே வேன் கவிழ்ந்தது. இதில் வந்த அஜீத்குமார் உட்பட 10 பேர் காயமடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
( சிவப்பு நிறம் என்னால் இடப்பட்டுள்ளது )

.இங்குப் பதிவு சொல்லும்  உண்மையின் உரைகல்லைத் தமிழறிந்தோர் பத்துப்பேராவது உரைத்துப் பார்க்க மாட்டார்களா?

அய்யா,
இதற்குமேல் தொடர எனக்கு மனமில்லை. நீங்கள் காட்டிய ஏனைய பதிவுகளிலும் நிச்சயமாய் என்னால் இது போலப் பிழைகளைக்  காட்டவியலும். அதைத் தாங்களும் அறிந்தே இருப்பீர்கள்.

ஒருவேளை நீங்கள் பத்து பரிந்துரைகளில் சொல்லி இருப்பது போல, சந்திப்பிழையின் பொருட்டு வெகுவாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்றால் நானும் அதை உடன்படுகிறேன். அலட்டிக் கொள்ளவேண்டாம்.

ஆனால் பத்து பரிந்துரைக்காக  நீங்கள் காட்டும் ஆதாரங்களின் தமிழ்த்தன்மை இதனை உறுதிப்படுத்தப் போதுமானதாய் இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் காட்டும் இது போன்ற மேற்கோள்கள்  சரியான வடிவம் எது என அய்யுறும் பதிவர்க்கு மிகச்சரியான வடிவத்தை அடையாளப்படுத்துவதாய் அமையுமா?


இத்தேடுபொறிகள், நாம் அய்யுறுகின்ற சரியான / பிழையான எந்த வடிவத்தைத் தேடினாலும் பெரும்பாலும் இரண்டையுமே தருகின்றனவாய் உள்ள நிலையில் எதைச் சரியென்று கொள்வது?


எனவே இதுபோன்ற தேடுபொறிகளில் இருந்து நிறையபேர்கள் இப்படிப் பயன்படுத்தி இருக்கிறார் என்று ஒரு வடிவத்தை மட்டும் தேடி எடுத்து ஆதாரம் காட்டுவது நியாயமாகுமா?


எனது புலமையையோ, தமிழறிவையோ காட்டுவதற்காக இதை இங்கு எழுதிப்போகவில்லை. தங்களைப் போன்ற பாண்டித்தியம் மிக்கவர்கள் முன் நான் ஊர்க்குருவி அல்லது ஒன்றுமில்லாதவன் தான்.

இருப்பினும், என்னுடைய இந்தப் பதிவிற்குக் காரணமாகத் தங்களுடைய
தமிழ்ப்பதிவர்களுக்கு என் பணிவான பத்து(ப்) பரிந்துரைகள் என்னும் பதிவின் இறுதி இரு பரிந்துரைகளை இங்குச் சுட்டிச் செல்வது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

““ஒன்பது:
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகள் பற்றிப் பின்னூட்டம் இடுகிறோம். அது போலவே, பதிவில் இடம்பெறும் மொழிப் பிழைகள் குறித்தும் பின்னூட்டம் இடுவதைப் பதிவர்களாகிய நாம் வழக்கம் ஆக்கிக்கொள்ளலாம். பிழை சுட்டப்படுவதை எவரும் கௌரவப் பிரச்சினையாக எண்ணுதல் கூடாது.

பத்து:
நல்ல கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம் நம் தாய்மொழி வாழவும் வளரவும் உதவுகிறோம். அது போலவே, பிழை நீக்கி எழுதுவதாலும் அது வாழுகிறது...வளருகிறது என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.““

தாங்கள் இந்தப் பதிவில் கூறியிருக்கும் கருத்துகளோடு எனக்கு மாற்றுக் கருத்தில்லை. உண்மையில் அதை வரவேற்றே இருந்தேன். என்னுடைய பின்னூட்டத்திலும் அதைத் தெரிவித்திருந்தேன். நீங்களும் இதனை உடன்பட்டே எழுதியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் தனிப்பட்ட முறையில் உங்களைத் தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி இல்லாததாலும், பின்னூட்டம் இடும் வசதி தங்கள் பதிவில் துண்டிக்கப்பட்டிருப்பதாலும் நான் தனியே பதிவிட நேர்ந்தது. தங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துவதற்காக அன்று. ஒரு போதும்.

இது போன்ற விவாதங்களிலிருந்தும்  கருத்தாடல்களில் இருந்தும் நான் விலகி இருக்கக் கற்றுக் கொண்டபிறகு, இது போன்றதொரு பதிவை என் தளத்தில் இடுவேன் என நான் கற்பனையும் செய்ததில்லை.

உங்களது கருத்து “ பத்து  பரிந்துரை “ எனவே இருக்கலாம்.

உங்கள் அறிவிற்கும் உச்சரிப்பிற்கும் வாசிப்பிற்கும் அது சரியானதாய் இருக்கலாம்.

ஆனால் தமிழ் மரபின் படி,. சான்றோரின் வழக்கின் படி, பத்துப் பரிந்துரை என எழுதப்படுதலே பிழையற்ற வடிவம்.

ஆனால் நல்ல தமிழை, பிழையற்ற வடிவத்தை ஆளவேண்டும் என்று நினைப்போர்க்குத் தங்களின் இந்தப் பதிவு, இதுவும் சரியான வடிவம் தானோ என்னும் அய்யத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவும், பெரும்பான்மையோர் செய்வது சரி என்னும் தொனி படிப்போர்க்குத் தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவும், நாம் சரியா தவறா என அய்யுறும் இடத்திலேனும் துணைக்கழைக்கும் இலக்கணங்கள், “பத்துப்பரிந்துரைகள்“ என்பதே சரி என்பதாலும் மட்டுமே  நான் இதைப் பதிய நேர்கிறது.

மீண்டும்,

நான் பெரியவனா நீ பெரியவனா எனக்குத் தமிழ் தெரியுமா உனக்குத் தமிழ் தெரியுமா என்ற போட்டிக்குள் நான் வர விரும்பவில்லை.

அப்படிப்பட்ட கேள்விகளுக்குமுன், நான் சிறியவனாகவும்  தமிழைக் கற்க விரும்புபவனாகவுமே இன்று மட்டுமென்றில்லை என்றும் இருக்க விரும்புகிறேன். 

நன்றி

குறிப்பு.. இந்தப் பதிவில் மட்டுமன்று. எனது முந்தைய பதிவுகளிலும்  தவறுகள் இருக்கலாம். சுட்டிக்காட்டினால் மனமுவந்து நன்றி கூறித் திருத்திடத் தயாராய் இருக்கிறேன். என் தவறுகளில் இருந்தே நான் பெரிதும் கற்கிறேன்.

படங்கள் - நன்றி   www.pinterest.com

.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

72 comments:

  1. சீரிய வாதமாக வேண்டியது சீறிய வாதமானது வேதனை. புணர்ச்சி விதிகள் தகர்க்கப் படவேண்டியவை என்பது என் எண்ணம். மொழி வளர்ச்சிக்கு மட்டுமல்ல பயன்பாட்டுக்கும் இவ்விதிகள் தடையாக இருப்பதாக எண்ணுகிறேன். பயன்படுத்தினால் சிறப்பு பயன்படுத்தாவிட்டால் பிழையல்ல் என்ற நோக்கில் இவற்றை அணுக வேண்டும். உதாரணமாக எட்டிக்கோடி என்பது இலக்கண பிழையே. கோடி என்பது தமிழ்ச் சொல் அல்ல. த்மிழும் சமஸ்க்ருதமும் புணர விதிகள் இல்லை. ஆடசேபணை என்ற சொல்லே தமிழல்ல - இதில் ன ண வில் பிழை இருந்தால் என்ன போனால் என்ன? மறுப்பு எதிர்ப்பு போன்ற சொற்களை விடுத்து எதையோ எழுதி அதில் குறை நிறை காணும் வாதம் சற்று உறுத்துகிறது. எனினும் கடிதம் நன்று. சுவாரசியமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      முதலில் தங்களின் வருகைக்கும் முதன்முதலில் என் தளத்தில் பின்னூட்டம் இடுகின்றமைக்கும் நன்றிகள்.
      சந்திப்பிழைகளோடு பெரிதாய்ப் போராட வேண்டியதில்லை என்னும் தங்கள் கருத்திருந்தால் இது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லைதான். ஆனால் மொழிமரபில் இது இன்னும் வேண்டப்படுகிறது.
      அடுத்து எட்டுக்கோடி என்பதில் கோடி என்பது தமிழ்ச்சொல் அன்று என்பதனோடு உடன்பட்டாலும், தமிழும் சமஸ்கிருதமும் புணர விதிகள் இல்லை என்னும் தங்களின் கருத்தோடு உடன்பட முடியாதவனாய் இருக்கிறேன்.
      11ஆம் நூற்றாண்டில் எழுந்த வீர சோழிய எழுத்ததிகாரத்தின் சந்திப்படலம் முதலாக அதன் காலத்தோடு ஒத்தது எனக்கருதப்படும் நேமிநாதத்தில் இருந்தே வடமொழியோடு தமிழ் உறழ்தல் குறித்தும் புணர்ச்சி குறித்தும் தற்சமத் தற்பவப் பயன்பாடு குறித்தும் விதிகள் இருந்து வருகின்றன.

      அடுத்து, ஆட்சேபணை....., “ ஒரு சொல்லைப் பயன்படுத்தும் தன்மையில் ஏதேனும் அய்யப்பாடு இருந்தால் அகராதியைப் பார்த்துச் சரியான வடிவைத் தேர்ந்து பயன்படுத்த வேண்டும் “ என்பது அய்யாவின் பத்து(ப்) பரிந்துரைகளில் ஒன்று.
      அதன்படியே, க்ரியாவின் தற்காலத் தமிழகராதி ( பக்.99. ஆகஸ்டு 2011ஆம் ஆண்டு பதிப்பு ) கொண்டு பார்த்த பின் தான், ஆட்சேபனை என்பதை ஆட்சேபித்தேன். அதில் ஆட்சேபணை இருக்கிறது. ஆட்சேபனை இல்லை. அன்றியும் இது போன்ற வடமொழித் தமிழ்ப்பயன்பாட்டிலும், சில விதிகளும், பயன்பாட்டு நெறிகளும் வழக்கு மரபுகளும் எழுத்துலகில் இருந்து வருகின்றன என்றே கருதுகிறேன்.
      சான்றாகப்
      பிரவேசம் என்பதை பிறவேசம் என்று எழுதிடுவதில்லை. அது வடமொழியாக இருப்பின் கூட.
      உண்மையில் இதுபோல் வாதிடுவது என் இயல்பு இல்லை அய்யா.
      அதைப் புறக்கணிக்கவே கற்றிருக்கிறேன்.
      நிச்சயம் இது போன்ற வாதங்கள் எனக்கே உறுத்துகின்றன.
      உங்களின் பார்வை சரிதான்.
      தங்களின் வருகைக்கும் மனந்திறந்த விமர்சனத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்... தாங்கள் சொல்வது போல மரபை மரபு போலதான் எழுத வேண்டும் பிழைஇன்றி எழுதுவது மிக நன்று எனக்கும் என்னை அறியாமல் வருவதுதான்...... பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 1

    எனக்கு ஒரு சந்தேகம்.

    ஐயா -அய்யா ....ஔவ்வையார் -அவ்வையார் வௌவ்வால்-வவ்வால்
    இப்படி எழுதுவது அதிகம்.. எது சரியான சொல்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
      தங்களின் வவ்வால் அவ்வை பற்றி, கேள்விக்கு என்ன பதில் ? என்னும் பதிவில் துளசிதரன் அய்யாவின் பின்னூட்டத்திற்கு அளித்த பதிலைக் காண வேண்டுகிறேன்.
      நன்றி

      Delete
  3. விமர்சனங்கள் நம்மை செதுக்குவதற்காக என்பதை மறந்து விடக்கூடாது...நன்றி சகோ..

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் மறக்க மாட்டேன் கவிஞரே!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  4. அண்ணா!!!!!
    நிஜமாய் தலைப்பை பார்த்ததும் மலைத்துப்போனேன்!!!!!
    இதெண்டா இது பதிவு விஜு அண்ணாவுடையதா?? அல்லது வருண் உடையதா என மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டு இங்கு வந்தேன்.


    இப்படி எழுதவேண்டிய நிலையை நன்கு விளக்கிவிட்டு பதிவை கொண்டுசெல்கிறீர்கள்.

    பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் என சொல்லும் பலரும் அப்படி சுட்டிக்காட்டிவதை விரும்புவதில்லை என்பதை என் இரண்டு ஆண்டுகால சின்ன அனுபவத்தில் புரிந்துகொண்டேன். ஆனாலும்

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பதிவை படித்துப் பார்த்தால் கடைசி இரண்டு பரிந்துரைகள் நல்ல நகைமுரண் தான் இல்லையா:)))

    இத்தனை வருடம் தற்கால எழுத்துக்களைப்படித்து வரும் எனக்கு ஏன் இத்தனை பிழைகள் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அக்குவேறு ஆணிவேறாக பிரித்துக்காட்டிய பின் தான் புரிகிறது. இந்த தினமலர் செய்தித்தாளை எத்தனை ஆண்டுகளாய் படிக்கிறேன்:((((

    இதை விட சுயமரியாதையோடு, பணிவோடும்,பொறுமையோடும், கருத்துச்செருக்கொண்டும் பதிலளித்துவிட முடியாது!! மிக மிக அருமையை கையாண்டிருகிறீர்கள். இதற்கும் அவர் பதில் பதிவு போடுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதற்கு இதே பாணியிலான தங்கள் மற்றொரு பதிவு வந்தாலும், இல்லை என்னைப்போல ஆட்களுக்கு இன்னும் அட்டகாசமான தீனி காத்திருப்பதாகத் தோண்டுகிறது. ஆனால் அது தனிநபர் தாக்குதலாய் இருந்தால் அதை புறந்தள்ளும் சான்றாண்மை உங்களுக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். (என்ன இந்த முறை மக்கள் முதல்வர் போல மைதிலியும் ரொம்பதான் "நான் " என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறாள்??? அடக்கம் அமரருள் ஊய்க்கும் மைதிலி!!! அடங்கு) ஓகே நான் ஆபீட் ஆகிக்கிறேன்:)

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரி,
      இது என் இயல்பில்லை என்பதை நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது போலவே பிழைகளைச் செய்யும் அந்தப் பெரும்பான்மையில் நானும் ஒருவனாய்த்தான் இருக்கிறேன் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. நிச்சயம் இதற்கு என்ன பதில் வந்தாலும் இது போன்ற விவாதங்களை இனித் தொடரும் எண்ணம் நிச்சயமாய் எனக்கில்லை.
      அப்பாத்துரை அய்யா சொன்னது போலவே அந்த உறுத்தல் எனக்கிருக்கிறது.
      இதுவும் ஒரு அனுபவமே!
      இனிமேல் இது போன்ற தவறுகளை நான் செய்யாமல் இருக்கக் கிட்டிய அனுபவம் என்ற வகையில் இதனை எடுத்துக் கொள்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  5. பத்து இணைப்பில் உள்ள பகிர்வுகளை படிக்க வைத்து விட்டாரே... இதுவும் நல்லது...

    கீழுள்ள இணைப்பிலும் சில தவறுகள் வரலாம்... அனைவருக்கும் உதவலாம்...

    http://dev.neechalkaran.com/p/naavi.html

    முயற்ச்ச்ச்ச்ச்சியை பாராட்டுவோமா...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. தங்களது கருத்து இன்னொரு கோணம்.
      தங்களது தொடர் வருகைக்கும் தரும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி டி டி சார்.
      நீங்கள் காட்டிய சுட்டியின் பதிவரே வந்திருக்கிறார்.
      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் அமைதியான வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  6. Mythily kasthuri rengan22 February 2015 at 06:43

    ****அண்ணா!!!!!
    நிஜமாய் தலைப்பை பார்த்ததும் மலைத்துப்போனேன்!!!!!
    இதெண்டா இது பதிவு விஜு அண்ணாவுடையதா?? அல்லது வருண் உடையதா என மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டு இங்கு வந்தேன்.****

    Who is "this Varun", mythily? Have I met him? LOL

    -------------------------------------------

    I am sort of busy these days and so I did not pay much attention to Mr. Paramasivam's suggestions to write somewhat "flawless thamizh".

    I always wondered what if there is a mistake in "dictionary"? I believe we can only minimize the errors. I am not sure, it is possible for anyone to write anything which has 0% mistakes or completely flawless.

    Even when we advise someone not to make mistakes we often do make some mistakes when we expressing that "advice". That's my general observation. The point here is to try write better or with minimum errors I think.

    BTW, I know Mr.Paramasivam for a while. This is not the first time he goes away from blog world. He has closed down his blog in several other occasions for various reasons. He usually comes back after a break. I think the "break" helps him to cool off or to forget the past. I think we need to move on. :)

    ps: My tamil fonts did not work and so I wrote this response in English. :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண் சார்,
      இந்தப் பதிவை இட்டுவிட்டுப் பதிவிற்கு அப்பாற்பட்டு நான் சிந்தித்த விடயம் ஒன்றே ஒன்றுதான்.
      “அட இந்த ஒரு பதிவின் விவாதமே நமக்குத் தாங்கலையே.............இவர் எப்படி இத்தனைப் பதிவுகளில்..........“ என்று.

      நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது உண்மைதான்.

      அதனால் தான் சகோதரியாரின் பின்னூட்டம் படித்ததும் எனக்குச் சட்டென சிரிப்பு வந்துவிட்டது.

      ஆனால் “ இதைத் தாங்கும் பக்குவமோ.........மனநிலையோ எனக்கில்லை “
      இதற்குப் பின்னால் இதற்கு வேண்டிய துணிவும்.

      தவறுகள் இல்லாமல் எழுதுவது கடினம் தான். ஆனால் அவ்வாறு எழுத நாம் முயல வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  7. மிக நீண்ட அலசல்.

    ஒரே ஒரு கருத்து மட்டும் கூற விழைகிறேன்.

    எட்டு கோடி = கோடியை அதாவது முனையை அல்லது கடைசியை எட்டுவது.

    எட்டுக் கோடி = எட்டுக்கோடி ரூபாய் உங்களுக்கு பொற்கிழி அளிக்க ஆசைப் படுகிறேன்.

    வேலை பார்த்தேன் வேறு வேலைப் பார்த்தேன் வேறு.

    உங்கள் தளத்தில் வரிகள் சீரான இடைவெளியில் இருக்கின்றன. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தாங்கள் கூறிய இக் கருத்தை நானும் [co="red"] ‘’தமிழ்ப்பதிவர்களுக்கு என் பணிவான பத்து பரிந்துரைகள்“ [/co] என்னும் முனைவர் பரமசிவம் அய்யாவின் பின்னூட்டத்தில் இவ்வாறு குறித்திருந்தேன்.
      [co="blue"] ‘’எட்டு கோடி என்று எழுதக் கூடாதா................. என்றால்
      எழுதலாம்......... எட்டுகின்ற கோடி , எட்டும் கோடி, எட்டிய கோடி என வினைத் தொகையாய் வரும் இடத்திலும் அது எட்டு கோடி தான். எட்டுக் கோடி என இங்குச் சொல்வதில்லை.
      ஆனால் Eight Crore என்பதற்குத் தமிழில் தவறற்ற வடிவம், “ எட்டுக்கோடி“ என்பதுதான்.’’ [/co]
      தாங்கள் இந்த வேறுபாட்டை என் பதிவில் சுட்டியமைக்கு நன்றி.
      இதேபோல் இதை எட்டும் கோடியும் என உம்மைத் தொகையாக்கிப் பார்க்கவும் வாய்ப்புண்டு. நான் இந்தப் பதிவைப் பொறுத்தவரை இலக்கண ஆதாரங்களைத் தரவில்லை.
      தங்களது வருகைக்கும் சந்திகள் சில இடங்களில் பொருளை வேறுபடுத்தத் துணைசெய்யும் என்னும் கருத்தை அறிந்து எடுத்துக் காட்டி வலியுறுத்தியமைக்கும் நன்றிகள் பல.

      Delete
  8. பசி (க்கு கோபம்) வந்தால் பற்றும் அறுந்து படும்?!...
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அன்பே சிவம்,..
      உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் முதலில் நன்றி.

      “ மானம் குலம்கல்வி வன்மை அறிவுடைமை
      தானம் தவம்முயற்சி தாளாண்மை - தேனின்
      கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
      பசிவந்திடப் போகும் பறந்து “
      என்றல்லவா நான் கேள்விப்பட்டது....

      இதோடு பற்றும் பறந்துவிடுமோ..?

      அப்படியானால் பசிவந்தால் பதினொன்றும் பறந்து போகும் என்று இனிச் சொல்லிவிட வேண்டியதுதான். :))

      நன்றி அய்யா

      Delete


  9. அய்யா சாமி கொஞ்சம் வழி தவறி வந்திட்டேனோ நான். என்னப்பா இங்க நடக்குது ஒன்றும் புரியவில்லை யாரவது கோனார் நோட்ஸில் விளக்கம் போடுவது போல போட்டா தகவல் சொல்லி அனுப்புங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மதுரைத் தமிழன் அவர்களே!
      வழி தவறி வந்துவிட்டீர்களா?
      அப்ப கோனார் நோட்ஸ் எதற்கு கூகுள் மேப் போதாதா? :))
      தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி.
      தங்களது பதிவுகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. ஒரு பதிவுக்குப் பின்னால் இவ்வளவு விவாதம் இருப்பதைப் படித்து அரண்டு போனேன் !பிழையில்லாமல் எழுதுவதைப் பற்றி நான்தான் பிழையாய் புரிந்து கொண்டேன் போலிருக்கிறது :)
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பகவான்ஜி..!
      உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
      பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டதால் முன்போல் தங்களின் தளத்திற்கு வந்து எப்பொழுதும் போல் பின்னூட்டம் இட முடியவில்லை.
      பணிச்சுமை.
      தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்கள் என நம்புகிறேன்.
      நன்றி த ம விற்கு!

      Delete
  11. அன்புள்ள அய்யா,

    பத்துப் பரிந்துரை என எழுதப்படுதலே பிழையற்ற வடிவம் என்று பணிவுடன் தாங்கள் தெரிவித்த கருத்துகள் தமிழை, பிழையற்ற வடிவத்தை ஆளவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு என்பதை அறிந்தேன்.

    ஆங்கில ஆசிரியரான தாங்கள் எப்படித் தமிழில் ....? தங்களின் அமைதியைப் பணிபுரியும் இடத்தில் பலமுறை நான் கண்டு வியந்ததுண்டு.
    அதே நேரம், மெய்ப்புப் பார்க்கத் தரப்படும் எந்தப் பணியையும்
    ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’-என்று தவறு என்றால் தகுந்த ஆதாரங்களைக் காட்டிச் சுட்டிக்காட்ட எப்பொழுதும் நீங்கள் தயங்கியதே இல்லை. அதைப் போலவே ஏதேனும் திருத்தங்களைச் சொன்னால் அவை ஏற்புடையதானால் உடனே மன்னிப்பைக் கேட்டு நன்றி கூறி அதை ஏற்பதனையும் நான் பார்த்திருக்கிறேன்.
    எனவே

    தங்களது பதிவுகளிலும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டினால் மனமுவந்து நன்றி கூறித் திருத்திடத் தயாராய் இருக்கிறேனென்று நீங்கள் சொல்வது பேச்சிற்காய் அல்ல என்று நன்கறிந்தவன் நான்.
    தவறு செய்பவன்தானே மனிதன்! தவறு என்றால் திருத்திக் கொள்பவன் மாமனிதன்!
    இந்த நீண்ட கடிதம் தமிழைச் சரிவரப் பேசவும் எழுதவும் உங்களுக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாக நான் எடுத்துக் கொள்கிறேன்.
    நன்றி.
    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. அய்யா நீங்கள் என்மேல் கொண்டுள்ள அன்பிற்கு மிக்க நன்றி.
      வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  12. பத்துக் கோடி, பத்துப் பரிந்துரை என்பதே சரியான வழக்கு. வன்தொடர்க் குற்றுகரமான "எட்டு, பத்து" ஆகிய எண்களில் வலிமிகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பது சிறந்த உதாரணம். கூகிள் தேடலின் மூலம் சரியான பயன்பாட்டை அறிந்து கொள்வது பொதுவாக இயலாவிட்டாலும். சில நுட்பங்கள் மூலம் சிறந்த தளங்களில் மட்டும் தேடி பயன்பாடுத்தலாம். உதாரணமாக tamilvu.org vaiyan.blogspot.com valavu.blogspot.com போன்ற தளங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்த மாதிரி தேடுவதால் சரியான பயன்பாட்டை உணர்ந்துகொள்ளமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. இணைப்புகளுக்கு நன்றி...

      Delete
    2. வாருங்கள் நீச்சல்காரன்.
      உங்களையும் டிடி சாரையும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு. ஒவ்வொரு முறை உங்கள் பதிவுகளுக்கு வரும் போதும் மனம் உந்தும்.
      இயல்பாகவே ஒருவரைத் தொடர்பு கொள்வதில் எனக்கிருக்கும் மனத்தடை, உங்களைத் தொல்லைப்படுத்துவதா என்ற எண்ணம் இவையெல்லாம் முன்னிற்க மௌனமாய் வந்துவிடுவேன்.
      உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தமிழ்த்தொழில்நுட்ப உலகிற்குச் செய்யும் சேவை மிகப் பெரிது.
      நீங்கள் கூறிய “ வன்றொடர் குற்றியலுகரம் முன் ஒற்று மிகும்“ என்னும் கருத்தையும், வன்றொடர் குற்றியலுகரம் உயர்திணையானால் அங்கு ஒற்று மிகுவதில்லை என்னும் கருத்தையும் நான் பரமசிவம் அய்யாவின் பத்துப் பரிந்துரைகள் என்னும் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன்.

      நீங்கள் தேடுதலுக்குக் காட்டிய நுட்பங்கள் உண்மையில் பயனுள்ளவை.

      தொல்லையாகக் கருதினால் கூட உங்களைத் தொடர்பு கொள்வேன் என்றே நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் தொழில்நுட்பச் செய்திகளுக்கும் நன்றிகள்!

      Delete
  13. ஆரோக்கியமான விவாதம் நல்ல முடிவுகளைக் கொணரும் என்பதை மனதில் கொள்வோம்.

    ReplyDelete
    Replies
    1. விவாதங்களே ஆரோக்கியமானதில்லை என்றுதான் நான் கருதுகிறேன் முனைவர் அய்யா!
      இது என் கருத்து மட்டும் தான்!

      என்றாலும் தங்களின் கருத்தை நிச்சயம் நான் மனதிற் கொள்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
    2. முனைவரே விவாதங்கள் மிகுந்த அவசியமானவை,
      மனித உறவுகளில் ஆழமான கீறலை ஏற்படுத்தும் என்று தெரிந்தால் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியம்

      எங்கே விவாதம் இல்லை துணி எந்தக் கடையில் வாங்குவது என்பதில் இருந்து உணவு எங்கே என்ன என்பது வரை எல்லாமே விவாதங்கள்தானே முனைவரே

      பிரச்னை என்னவென்றால் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம், விவாதத்தின் முடிவில் நமது சுயம் வேறுமாதிரி நமக்கு அறிமுகமாகிற அந்த மொமென்ட் ஆப் ட்ரூத் எப்படி நம்மால் கையாளப்படுகிறது என்பதில்தான் தனிமனித ஆளுமை வெற்றி இருக்கிறது..

      பதிவுலகிற்கு வழிகாட்டும் பதிவர்கள் இருவர் இப்படி விவாதித்துக்கொள்வது மிக அவசியம்,

      பெரிய ஆள் சின்ன ஆள் என்கிற சால்ஜாப்பு இங்கே இல்லை, நேற்று முளைத்த சிறு செடிகூட ஆயிரமாண்டு ஆலமரத்தை நகைக்க உரிமையுண்டு

      ஆலமரம் வெட்கி புதைந்துகொண்டால் அது செடியின் தவறாகாது

      உண்மையில் வலைப்பூ உலகம் இந்த பெரும் ஜனநாயகத்தை நமக்கு வழங்கிருக்கிறது,

      சிறு செடிகளும், பெருமரங்களும் இதைப் புரிந்துகொண்டால் வலையுலகம் செழிக்கும்

      இல்லை என்றால் தமிழ் நண்டுகள் கதைதான்

      இங்கே சிறுசெடி, பெருமரம் என்பது இணய அனுபவத்தை வைத்தே ஒழிய அறிவின் ஆழத்தைவைத்தல்ல

      இந்தமாதிரி அனுபவங்கள் குறித்தும் நான் பெரியவன் என்கிற மமதை குறித்தும் நிறைய பேச எழுத விமர்சிக்க வேண்டியும் இருப்பதாக நினைக்கிறன்

      அது முடிவில்லாமல் மகாபாரதமாய் நீண்டுவிடுமோ என்கிற அச்சமும் இருக்கிறது..

      முனைவர் பரமசிவமும் சரி, ஜோவியும் சரி இதுகுறித்து மனம்வருந்தி எழுதாமல் இருந்தால் இழப்பு அவர்களுக்கானது மட்டுமல்ல

      அது ஒட்டுமொத்த தமிழ் வலையுலகிற்கானது

      வருத்தங்கள்தான்

      அய்யா தனபாலன் பாணி பின்னூட்டங்கள் அருமையானவை

      "அருமை செழுமை "

      வணக்கங்களுடன்
      மது

      Delete
  14. //“தமிழ்ப்பதிவர்களுக்கு என் பணிவான பத்து(ப்) பரிந்துரைகள் என்னும் பதிவின் இறுதி இரு பரிந்துரைகளை இங்குச் சுட்டிச் செல்வது பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ““ஒன்பது:
    பதிவுகளில் இடம்பெறும் கருத்துகள் பற்றிப் பின்னூட்டம் இடுகிறோம். அது போலவே, பதிவில் இடம்பெறும் மொழிப் பிழைகள் குறித்தும் பின்னூட்டம் இடுவதைப் பதிவர்களாகிய நாம் வழக்கம் ஆக்கிக்கொள்ளலாம். பிழை சுட்டப்படுவதை எவரும் கௌரவப் பிரச்சினையாக எண்ணுதல் கூடாது.

    பத்து:
    நல்ல கருத்துகளைப் பதிவிடுவதன் மூலம் நம் தாய்மொழி வாழவும் வளரவும் உதவுகிறோம். அது போலவே, பிழை நீக்கி எழுதுவதாலும் அது வாழுகிறது...வளருகிறது என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.““

    தாங்கள் இந்தப் பதிவில் கூறியிருக்கும் கருத்துகளோடு எனக்கு மாற்றுக் கருத்தில்லை. உண்மையில் அதை வரவேற்றே இருந்தேன். என்னுடைய பின்னூட்டத்திலும் அதைத் தெரிவித்திருந்தேன். நீங்களும் இதனை உடன்பட்டே எழுதியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    மீண்டும் தனிப்பட்ட முறையில் உங்களைத் தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி இல்லாததாலும், பின்னூட்டம் இடும் வசதி தங்கள் பதிவில் துண்டிக்கப்பட்டிருப்பதாலும் நான் தனியே பதிவிட நேர்ந்தது. தங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துவதற்காக அன்று.//

    ஊமைக் கனவுகள்,

    பதிவின் இறுதியில், என்னுடைய இறுதி இரு பரிந்துரைகளைச் சுட்டிக் காட்டி, மிகவும் நாகரிகமாக உங்கள் கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    உங்களின் மறுப்புரையை எந்த அளவுக்கு ஏற்பது அல்லது மறுப்பது அல்லது வாளா இருந்துவிடுவது என்பன பற்றி உங்களின் இந்தப் பதிவை ஒரு முறை மட்டுமே[மேலோட்டமாக] படித்துள்ள நிலையில் இன்னும் முடிவெடுக்கவில்லை.

    எனக்கு எழுதும் ஆர்வம் குன்றுவதற்கான சூழல் அமையும்போது என் வலைப்பதிவை முடக்குவதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன்பு முடக்கியதற்கு உண்மையில் உங்கள் பின்னூட்டம் காரணமன்று[வருண் அவர்களுக்கு நன்றி].

    உங்களின் இப்பதிவுக்கான பின்னூட்டங்களையும் படிக்க நேர்ந்தது.

    பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.

    மிகச் சிறந்த முறையில் உங்கள் வாதத்தை முன்வைத்திருக்கிறீர்கள் என்பதற்காக நானும்[நம்புகிறீர்களோ இல்லையோ] பாராட்டுகிறேன்.

    விசயத்துக்கு வருகிறேன்.

    சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள் தம் பின்னூட்டத்தில், ‘நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பதிவை படித்துப் பார்த்தால் கடைசி இரண்டு பரிந்துரைகள் நல்ல நகைமுரண் தான் இல்லையா:)))’ என்று கேட்டிருக்கிறார்.

    அதாவது, என்னுடைய கடைசி இரண்டு பரிந்துரைகள் நல்ல நகை முரண் என்கிறார்.

    பரிந்துரைகள் நகைமுரண் ஆனது எவ்வாறு என்பதற்கு, சகோதரி அவர்கள் தெளிவான விளக்கம் தருவாரா? [இக்கேள்வியை எழுப்ப எனக்கு உரிமை உண்டா என்று தெரியவில்லை]

    தருவார் என்று நம்புகிறேன்.

    நன்றி ஊமைக் கனவுகள்..

    ReplyDelete
    Replies
    1. அண்ணாவின் வலை வாயிலாக அய்யா பரமசிவம் அவர்களுக்கு,
      இன்றுவரை பிழைகளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் சின்னவளின் மடல்:) நீங்கள் உங்கள் கேட்டிருப்பதால் பதிலளிக்கவேண்டியது என் கடமையாகிறது.

      உங்களைப்பற்றிய விமர்சனத்துக்கு எதிராக நீங்கள் கேள்வி எழுப்ப, உங்களுக்கு முழு உரிமை உண்டு.

      ஒன்பதாவதுப்பரிந்துரையின்படி விஜூ அண்ணா உங்கள் பிழையை சுட்டிக்காட்டி பொழுது அதற்காக நீங்கள் அளித்த பதில் பதிவில் உங்கள் நீண்ட பட்டங்களை நீங்கள் பட்டியல் இட்டுடிருக்கிறீர்கள். எனவே எனக்குத் தெரிந்த, நான் ஓரளவே கற்ற உளவியல் அங்கே நீங்கள் காயம்பட்டு, கௌரவப் பிரச்சனையாக நீங்கள் எடுத்துக்கொண்டதாக எனக்கு உணர்த்துகிறது.

      பிழைநீக்கி எழுதுவதால் தமிழ் வாழும் என்று சொல்லிவிட்டு, பிழையான பல பதிவுகளை சான்றாக காட்டிய உங்கள் அவசரம் சரிதானா?

      adjustment is better than argument என்பது தான் என் கருத்தும் (விஜூ அண்ணாவை போலவே:) வருணை போல தொடர்ந்து விவாதிக்கும் பக்குவமும், வல்லமையும் எனக்கு இல்லை என்பதை முழு மனதோடு ஒப்புகிறேன். திறந்த மனதோடு இந்த விளக்கத்தை படித்தபின்னும் உங்களுக்கு என் விளக்கம் தவறென தோன்றினால், நான் இன்னும் திறமையாக விளக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றே கருதுகிறேன். நன்றி அய்யா
      நன்றி அண்ணா:)

      Delete
  15. எது எப்படியோ இந்த வாதங்களால் எனக்கு பல தகவல்கள் கிடைக்கிறது 80 உண்மையே...
    எமது வரவும், வாக்கும் என்றும் தங்களுக்கு உண்டு கவிஞரே தாங்கள், வந்தாலும் வராவிட்டாலும்.... காரணம் எமக்கு(ம்) பயன் படும் பதிவுகள்.
    நன்றியுடன் கில்லர்ஜி
    தமிழ் மணம் 8

    ReplyDelete
    Replies
    1. நண்பரே..,
      பணிச்சுமை காரணமாகவே இணையத்தில் தொடர்ந்து இயங்க இயலவில்லை.
      அதனால் தங்களின் தளத்திற்கும் வர இயலவில்லை.
      புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
      வரும் நேரம் பார்வையிடும் தளங்களில் நிச்சயம் தங்கள் தளமும் ஒன்றாயிருக்கும்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும், முக்கியமாய்த் தாங்கள் என்மேல் கொண்ட அன்பிற்கும் மிக்க நன்றி

      Delete
  16. என்ன நடந்தது .எனக்கும் ஒன்றும் புரியவில்லை . பசி அவர்களின் பதிவை படித்துவிட்டு வருகிறேன்.
    முத்துநிலவன் ஐயாவின் விளக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் விஜூ, தி.ந.முரளிதரன் இருவருக்கும் என் வணக்கம். இந்தப் பதிவை ஒருவாரம் கழி்த்து, இப்போதுதான் பார்க்கிறேன். படித்தபின் இதற்குப் பின்னூட்டம் இடுவதைவிட, விஜூ செய்ததைப் போல நானும் ஒரு பதிவில் இதுபற்றித் தனியே எழுதுவதுதான் சரியாக இருக்கும் ஏனெனில், இலக்கணத்தோடு மல்லுக்கட்டுவதை விட நடைமுறையில் எழுதுவோரின் நல்ல சிந்தனைகளை ஊக்கப்படுத்துவதே எப்போதும் என் நோக்கமாக இருந்துவருகிறது. மொழிக்கு இலக்கணம் முக்கியம்தான். இலக்கணத்தையும், இலக்கியத்தையும் விட வாழ்வியல் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, சிந்திக்கவும் சரியாகச் செயல்படுவும்தான் மொழியின் பயன்பாடு அதிகம் தேவை என்பதே என் கருத்து. எனவே, விஜூவின் கருத்துகள் சிலவற்றில் மாறுபடும் என் கருத்துகளைத் தனிப் பதிவாக எழுவதை நண்பர் விஜூவும் வரவேற்பார் என்னும் நம்பிக்கையில் தொடர்வேன். (தமிழாசிரியர்கள் மன்னிக்க)

      Delete
    2. அய்யா வணக்கம்.

      நீங்கள் என்னை நண்பர் என்றாலும் கூட நான் உங்களை ஆசிரியராகத்தான் பார்க்கிறேன். முதலில், “மொழிக்கு இலக்கணம் முக்கியம் . இலக்கணத்தையும் இலக்கியத்தையும் விட வாழ்வியல் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு சிந்திக்கவும் செயல்படவும்தான் மொழியின் பயன்பாடு அதிகம் தேவை“ என்று நீங்கள் கூறியுள்ள கருத்தை நோக்க,

      உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
      செயிர்தீர் காட்சி கற்புச் சிறந்தன்று

      என்னும் தொல்காப்பிய அடிகள் சட்டென நினைவுக்கு வருகின்றன.
      உயிர் சிறந்தது . அதனினும் சிறந்தது நாணம். அதனினும் சிறந்தது கற்பு.
      அதற்காகக் கற்பு சிறந்தது என்பதற்காக உயிர்முக்கியமில்லை என்றாகாதுதானே?

      நீங்கள் சொல்வதையும் அப்படி எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

      சமூகப் பிரக்ஞை தேவைதான். அதற்காக இலக்கணம் முக்கியமில்லை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது என நீங்கள் கூறுவதாக உங்களின் கருத்தை நான் உள்வாங்கிக் கொண்டேன். அப்படிக் கொள்வதில் தங்களுக்குத் தடையிருக்காது என்று நம்புகிறேன்.

      அதனால் நீங்கள் கூறியுள்ள “இலக்கணத்தோடு வாழ்வியல் புரிதலும் செயல்பாடும் மொழிக்கு முக்கியம் என்னும் தங்களின் கருத்தோடு எனக்கும் முழு உடன்பாடுதான்.

      இதனடிப்படையில், நீங்கள் சொன்ன, “ மொழிக்கு இலக்கணம் முக்கியம் “ என்ற இடத்தில் நான்நின்று சொன்னதாகத்தான் தாங்கள் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும்.
      பதிவு, பதிவர்களின் மொழியாட்சி பற்றியதாக இருந்தமையாலும் தவறற்ற வழக்கை வலியுறுத்தியதாலும் பதிவர் பிழைகளை வெளிப்படையாய்ச் சுட்ட அனுமதித்திருந்ததாலும்தான் நான் இந்தச் …….சரி, பிழை……. என்ற கருத்தாடலை முன்னெடுக்க நேர்ந்ததே ஒழிய, ஒரு வாழ்வியல் பிரச்சினை பற்றிய பதிவொன்றின் விவாதத்தைத் திசைதிருப்பும் வகையில் இலக்கண ஆயுதத்தைக் கையில் எடுக்கவும் இல்லை. இலக்கணத்தோடு மல்லுக்கட்டவும் இல்லை என்பதை முதலில் தங்கட்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
      பார்க்கின்ற தளங்களில் எல்லாம் பிழைதிருத்திக் கொண்டிருப்பது என் பணியும் இல்லை. அந்த மனநிலையிலும் நான் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மையில் இது ஒரு தமிழாசிரியனின் பணி. அவனுக்கிருக்க வேண்டிய சமூகப் பொறுப்பிதென்றே நான் கருதுகிறேன்.

      ........................................................................................தொடர்கிறேன்............

      Delete
    3. ஒரு கட்டடப் பொறியாளனின் பொறுப்பு எப்படி நல்ல ஒரு கட்டுமானத்தை, வலுவான அடித்தளத்தை, குறைகண்டால் சரி செய்யும் மனப்பாங்கை, அதைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை மனதில் கொண்டிருக்க வேண்டுமோ அப்படித்தான் ஒரு தமிழாசிரியனின் பொறுப்பும் ஒரு மொழியின் மரபை, அதன் கட்டுமானத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
      இங்குக் கட்டடத்தின் பயன்பாடு முக்கியமில்லையா என்றால், நிச்சயமாய் முக்கியம்தான். அதில் வசிப்பவர்கள் அவர்தம் தேவைக்கேற்பப் பயன்படுமாறு அது வடிவம் பெற வேண்டும். நாளையே அவர்கள் விரும்பியவாறு அதனை மாற்றலாம். அம்மாற்றம் சரியா?, அதனால் கட்டுமானத்திற்குப் பாதிப்பா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ஒரு பொறியாளனின் கையில்தான் இருக்க வேண்டும். அது அவனுடைய வேலை. அதன் சாதக பாதகங்களை அவனே விளக்க வேண்டும். அம்மாற்றத்திற்கான விளைவுகளுக்கு அவனே பொறுப்பேற்க வேண்டும். அதனைப் போன்றதுதான் ஒரு மொழியாசிரியனின் பணி. மாற்றத்தை அனுமதிப்பதிலும் அவன் பங்கு அங்கு இருக்க வேண்டும் அது அவனது சமூகக் கடமை. அவனது சமூகப் பொறுப்பு. அந்த மாற்றம் இடி என்ற உடன் இடித்துவிடுவதாகவோ, கட்டு என்றவுடன் கட்டிவிடுவதாகவோ, வசதிக்காக வழிவழி வந்த மரபின் கட்டுமானத்தைக் குலைப்பதாகவோ நிச்சயமாய் இருக்கக் கூடாது என்றே கருதுகிறேன்.

      ஒரு காலத்தில் தமிழாசிரியர்களிடையே இம்மனப்பாங்கு இருந்தது. “இங்கே ச் போட வேண்டும். இங்கே த் வரும். இங்கு எழுவாய் மிகை. என்று இவரோடு ஒரே தொல்லையாகப் போய்விட்டதே………, இப்படி எழுதினால் என்ன கருத்துப் புரியாமலா போய்விடுகிறது?. சும்மா கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொண தொண என்று “ என்று அவர்கள் கேலி செய்யப்பட்டதுண்டு. இன்றும் கேலி செய்யப்படலாம். ஆனால் அது அவர் சமூகக் கடமை.

      மற்றவர்கள் அதைக் காணாமல் போகலாம். தவிர்க்கலாம். இது தேவையா எனலாம். அது மொழியைப் பயன்படுத்துவதில் உள்ள அவர்களின் பொறுப்பு, சுதந்திரம், ஏன் உரிமை என்று கூடச் சொல்லலாம். இன்னொரு கோணத்தில் பார்த்தால், அவர்கள் பிழையற்ற வடிவம் எது என்பதை உணராதிருக்கலாம். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? செய்யாமல் இருந்தால் என்ன ? மாற்றி இப்படிச் செய்தால் என்ன என்று கேள்வி கேட்கலாம்.

      ஒரு தமிழாசிரியனின் பொறுப்பும் கடமையும் மரபில் நின்று அதற்குப் பதில் சொல்வதில் இருக்கிறது. கூடியமட்டும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இருக்க வேண்டும்.

      மொழியே மரபுதான். பன்னூறு ஆண்டு காலமாக வழிவழியாகச் செதுக்கப்பட்டுச் சீர்படுத்தப் பட்ட, அல்லது சீர்குலைகின்ற ஒரு வடிவம். எனவே தான் நினைத்ததைத் தனக்கு நியாயம் எனப்படுவதைத் தனியொருவனாய்ச் செய்ய அவனுக்கு அனுமதியில்லை என்கிற எண்ணம் அவனுக்கு வேண்டும். ஏனெனில் மொழி சமூகத்தின் கைகளில் புழங்குகிறது. அது சேதமடையத்தான் செய்யும். மாறத்தான் செய்யும். ஆனாலும் தன்னால் முடிந்த மட்டும் அது சீர்குலைந்திடாமல் காக்கும் பொறுப்பு மற்றவர்களைக் காட்டிலும் அவனுக்கே அதிகமாய் இருக்கிறது. தன்னை மீறி அது போகின்றபோது கூட!
      இதுவே மொழியாசிரியனிடத்தில் இருக்க வேண்டிய மொழிபற்றிய சமூகப் பிரக்ஞை என நான் கருதுகிறேன். பழமை வாதம் பேசுவதாக மற்றவர்கள் கூறலாம். மொழி பழையது. ஒரு சொல் , ஒரு தொடர் , ஒரு இலக்கண ஆட்சி, இவற்றின் நிலைபேறென்பது நூற்றாண்டுகளாய்ப் பயன்படுத்தப்பட்டு நம்மிடம் கையளிக்கப்பட்ட காலத்தின் ஆவணம். மக்கள் மாறுவர். மாற்றுவர். ஒரு மொழியாசிரியன் அதைக் கடத்தி எடுத்துச் சென்று அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கக் கடமைப்பட்டவனாவான். நம் மொழிமரபின் உயிர்நாடி தமிழாசிரியனின் இந்தப் பொறுப்பில் தான் இருக்கிறது.

      இப்பதிவில், நான் சுட்டாமல் இருந்த விடயம் ஒன்றுண்டு. இன்றைய வகுப்பறைகளில் மாணவர்க்குப் பாடம் சொல்லும் பெரும்பாலான தமிழாசான்களின் நிலை……….! அதை என்னைவிட நீங்கள் நன்கறிவீர்கள்.

      இந்நிலையில் நிச்சயமாய் உங்களைப் போன்ற மரபறிந்த தமிழாசிரியர்கள் செய்ய வேண்டிய பணிதான் நான் செய்திருப்பது.

      சரி நீ ஏன் இதைச் செய்கிறாய் என நான் செய்வதன் நியாயம் குறித்து நீங்கள் தாராளமாய்க் கேள்வி எழுப்பலாம். அதற்குத் தங்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது.

      இன்னொரு பதிவாக இப்பின்னூட்டம் நீண்டுவிடக் கூடாதென்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
      இறுதியாய், உங்களின் எதிர்காலப் பதிவுடனான எனது உடன்பாடு பற்றிய உங்கள் நம்பிக்கையைத் திறந்த மனத்துடன் வரவேற்கிறேன். மேற்குறித்த எனது புரிதலின் அடிப்படையில் தங்களுடைய இந்தப் பின்னூட்டத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றி.

      Delete
    4. என் மதிப்பிற்குரிய தங்கள் இருவரின் இந்தக் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருப்பினும் அவரவர் கோணத்திலிருந்து பார்க்கையில் சரி என்பதாகத்தான் எனக்குத் தோன்றுகின்றன.

      இலக்கியத்துக்காகத்தான் இலக்கணமே தவிர, இலக்கணத்துக்காக இலக்கியம் இல்லை எனும் சொற்றொடர், இலக்கணத்தை விட மொழியின் பயன்பாடே முதன்மையானது என்பதை உறுதியாக நிறுவியிருக்கிறது. எனவே, முத்துநிலவன் ஐயா கூறுவது முற்றிலும் சரியே! ஆனால்...

      இலக்கணம் பற்றி, இலக்கண விதி ஒன்றைப் பற்றி ஒரு விவாதம் என வரும்பொழுது இலக்கணம் என்ன சொல்கிறது, அது தொடர்பான இலக்கண விதிகள் என்ன எனப் பார்த்து அதற்கேற்ப விவாதிப்பதே சரியாக இருக்கும். எனவே, இலக்கணத்தைப் பொறுத்த வரை, முத்து நிலவன் ஐயா அவர்களின் நிலைப்பாடுதான் சிறியேனின் நிலைப்பாடும் என்றாலும் இந்தப் பதிவைப் பொறுத்த வரை, என் வாக்கு ஜோசப் விஜு ஐயா அவர்களுக்கே!

      ஆனாலும், இத்தகைய சர்ச்சைகள் தமிழில் மாத்திரம் ஏன் எழுகின்றன? அதாவது, இலக்கணத்தைப் பின்பற்ற வலியுறுத்துதல் - அப்படி வலியுறுத்துவது தவறு எனக் கூறுதல், எளிமையான நடையைக் கடைப்பிடித்தல் - அப்படிக் கடைப்பிடிப்பது மொழி வளர்ச்சிக்குத் தடை எனக் கூறுதல், அயல்சொல் கலவாத் தமிழில் எழுத வலியுறுத்துதல் - அப்படி வலியுறுத்த வேண்டா எனக் கூறுதல் என இப்படித் தமிழார்வலர்கள் இரு வேறு துருவங்களில் எப்பொழுதும் பிரிந்திருக்கக் காரணம் என்ன? இந்திய மொழிகளல்லாத மற்ற மொழிகளில் இப்படிப்பட்ட சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவில்லையே? காரணம், அரசியல்! இது பற்றி விரிவாக நான் இங்கு இப்பொழுது கூறுவதை விட, முத்து நிலவன் ஐயா அவர்களின் இது தொடர்பான பதிவைப் படித்துவிட்டுக் கூறினால் அந்தக் கருத்தை இன்னும் தெளிவாகக் கூற முடியும் என நம்புவதால் இப்பொழுதுக்கு இந்தக் கருத்தை நிறைவு செய்துகொண்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

      Delete
  17. மிக நீண்ட பதிவு
    மிக நிண்ட விளக்கங்கள்
    சொற்போர் நல்லதொரு முடிவினை அளிக்கட்டும்
    தமிழ் தழைக்கட்டும்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கரந்தையாரே..!
      தாங்கள் கூறியது போல நீண்ட பதிவுதான்.
      ஆனால் சொற்போர் ஒன்றும் இல்லை.
      தமிழ் தழைக்கட்டும் என்கிற தங்களின் விருப்பத்திற்குதவுவோம்.
      வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  18. தமிழில் எவ்வளவு தோய்ந்தெழுந்து வந்திருந்த போதிலும் இந்த ஒற்றுப்பிழைகள் அவ்வளவு எளிதில் வாகாக எல்லாருக்கும் வந்து வாய்த்துவிடாது. திரு பரமசிவம் சொல்லியிருந்ததுபோல திருவிக, முவ போன்றோரின் எழுத்துக்களை - நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி நியாயமே. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அவர்களைத்தான் தேடிப் படிக்கவேண்டுமா? அவருக்கு அடுத்து வந்தவர்கள் யாரும் சரியான தமிழ் எழுதவில்லையா?- என்பது.- நல்ல மரபுக்கவிஞனாக வரவேண்டுமானால் கம்பரைப் படி என்று சொல்வதில்லையா? அதுபோல இது என்றுவேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அவருக்குப் பின் வந்தவர்கள் யாரும் நல்ல கவிதை எழுதவில்லையா? என்ற கேள்வி இங்கே வருவதில்லை. நல்ல பிழையற்ற தமிழுக்கு இன்னொருவர் வேண்டுமானால் நா.பாவைப் படிக்கலாம் -அது ஒரு புறமிருக்க, இம்மாதிரியான விவாதங்கள் இணையத்தில் நடப்பது வரவேற்புக்குரியது.
    விவாதம் என்று வந்தபிறகும் பணிவுடனும் பண்புடனும் விவாதித்திருக்கும் உங்களின் பாங்கு வியப்பேற்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. திரு அமுதவன் அவர்களுக்கு,
      தங்கள் தளத்தைத் தொடரும் எண்ணற்றோருள் நானும் ஒருவன். சில பதிவுகளில் கருத்திட என்னை இன்னும் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். என் பின்னூட்டம் உங்கள் பதிவில் இல்லாமை,
      “பெரும் பூனை வந்தக் கால் கீச்சு கீச்சு என்னும் கிளி“ என அவ்வை சொல்வாளே அது போலத்தான்.
      உங்களது பின்னூட்டக் கருத்தினைவிட நீங்கள் எல்லாம் என் எழுத்துகளைப் பார்வையிடுகிறீர்கள் என்று எண்ணும் போது நான் என் பதிவின் முதல் வரியை மீண்டும் நினைவுகூர்கிறேன்.

      “ யானா நடாத்துகின்றேன் என்றெனெக்கே நகைதருமால்
      ஆனா அறிவி னவர்கட் கென்னாங்கொல் என்ஆதரவே.“

      தங்களது கருத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  19. இரண்டு அறிஞர்களின் விவாதங்களினால் நல்லதமிழை எழுத நல்ல ஆலொசனைகள் கிடைத்தன. இலக்கணப் பதிவுகள் நானும் எழுதி இருந்தாலும் சந்திப்பிழைகள் என்னுடைய பதிவிலும் ஏற்படுவதுண்டு. அதனால் பாதிப்பு ஒன்றும் இல்லை என்று இதுகாறும் நினைத்துக் கொண்டிருந்தேன். தங்களின் இந்த விரிவான பதிவை படிக்கையில் அது எவ்வளவு தவறு என்று புரிகிறது. இனி பதிவெழுதுகையில் கூடுதல் கவனம் செலுத்துகின்றேன்! சிறப்பான முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா

      Delete
  20. 19.02.2015 நாளிட்ட ‘பதிவர்களுக்கு என் பணிவான பத்து பரிந்துரைகள்’ என்னும் என் பதிவின் தலைப்பில், ‘ப்’என்னும் ஒற்று மிகுமா மிகாதா என்பது குறித்து, நண்பர் ஊமைக் கனவுகளுக்கும் எனக்கும் விவாதம் இடம்பெற்றது.

    தமிழ் இலக்கணத்துடனான என் தொடர்பு பல ஆண்டுகளாக அறுபட்டிருந்தமை; முன்வைத்த கருத்தை நிலைநாட்ட வேண்டும் என்னும் பிடிவாதம்; உரிய நேரத்தில், தவற்றை ஒத்துக்கொள்ளும் பெருந் தன்மை இல்லாமை; போதிய இலக்கண அறிவு வாய்க்கப் பெறாதது........

    என்றிவ்வாறான காரணங்களாலும், எனக்கே புரியாத வேறு சில காரணங்களாலும் ‘பத்து பரிந்துரைகள்’ என்று நான் குறிப்பிட்டது சரியே என்று வாதம்[முரட்டு வாதம்!!!] செய்தேன். வாதம் செய்வது முறையன்று என்பது புரிந்த பிறகும் சப்பைக்கட்டுகள் கட்டி, ஊமைக் கனவுகளின் நேரத்தை வீணடித்தேன்.

    நான் பெற்றிருந்த பழைய இலக்கண அறிவை மிக முயன்று புதுப்பித்து ஆராய்ந்ததில், ‘பத்து பரிந்துரைகள்’ என்று எழுதுவது பிழை; ஊமைக்கனவுகளின் வாதத்தின்படி, ‘பத்துப் பரிந்துரைகள்’ என்று எழுதுவதே இலக்கண மரபாகும் என்பதை அறிய முடிந்தது. ‘பத்து பரிந்துரைகள்’ என்று எழுதுவது பிழை என்பதை ஏற்கிறேன்.

    இதனை அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

    [//பசி (க்கு கோபம்) வந்தால் பற்றும் அறுந்து படும்?!...// என்று ஊமைக் கனவுக்குப் பின்னூட்டம் இட்டு, நான் எத்தனை பலவீனமான ஆள் என்பதைப் பலருக்கும் புரிய வைத்த ‘அன்பே சிவம்’ அவர்களுக்கும், உளவியல் ரீதியாக என் அடிமனதைப் படித்து, என் பதிவின் 9, 10 பரிந்துரைகளில் பொதிந்துள்ள நகைச்சுவை முரணை வெகுவாக ரசித்த சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.]

    ‘ஊமைக் கனவுகள்’ அவர்களுக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்கிறேன்.....

    நன்றி ஊமைக் கனவுகள்.... நன்றி.....மிக்க நன்றி.

    =============================================================================================

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      முதலில் என்னுடைய பின்னூட்டங்களோ பதிவோ தங்களைப் புண்படுத்தி இருந்தால் மிக்க வருந்துகிறேன். மன்னிப்பை வேண்டுகிறேன்.

      பத்து பரிந்துரை என்று எழுதினால் அது குற்றமில்லை. பொருள் மாறுபாடு வந்துவிடப் போவதில்லை. அதை ஏற்பதில் எனக்கு மறுப்பில்லை.
      நான் சொன்னது தமிழின் இலக்கண மரபு. அவ்வளவுதான்.

      நான் மதிக்கும் பலரும் தங்களது தரப்பிற்கு ஆதரவாய் இருந்த போதும்., நீங்கள் என் கருத்திற்கு உடன்பாடாய்ப் பின்னூட்டமிட்டது தங்களின் பெருந்தன்மையன்றி வேறில்லை. அதை நான் உணர்கிறேன்.

      தங்களை வணங்குகிறேன்.

      தங்களது பதிவுகள் தங்களின் அனுபவத்தைப் பேரறிவை, சமூக சிந்தனையை, விமர்சனங்களை முன்வைத்துப் போகின்றவை. இன்றைய தமிழ் மொழிக்கும் தமிழர்தம் சிந்தனைக்கும் மிகத் தேவையானவை. உங்களைப் பார்க்கில் நானே அதிகம் தவறு செய்கிறேன்.
      உங்களைப் போன்ற பதிவுகளை எழுத இன்னும் நான் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

      என்னை நெறிப்படுத்துங்கள்.

      என்னை உண்மையில் பொறுத்தேற்கிறீர்கள் என்றால் தங்களின் தொடர்பு முகவரியையோ எண்ணையோ இப்பதிவின் பின்னூட்டத்தில் தாருங்கள்.
      வெளியிட மாட்டேன்.

      தங்களைத் தொடர்புகொள்ளப் பெரிதும் விரும்புகிறேன்.

      மிக்க நன்றி.

      Delete
  21. சகோதரரே...

    பதிவை படித்து முடித்ததும் சகோதரி மைதிலி கஸ்துரிரெங்கன் அவர்களின் மலைப்பே எனக்கும் எழுந்தது !

    நீண்ட பின்னூட்டத்தை பதிய முயன்ற போது முனைவர் பசி பரமசிவம் அவர்களின் பின்னூட்டத்தினை கண்டேன்... நீங்கள் குறிப்பிட்டவரே பதிலளித்தபின்னர், தமிழை பிழைகளுடன் எழுதும் நான், என் கருத்துகளை முன்வைப்பது முறையாகாது என நிறுத்திக்கொண்டேன் !

    உங்களின் பக்குவத்தையும் பணிவையும் எண்ணி பெருமைபடுகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நானும் எழுத்துப் பிழைகளுடன் எழுதுகிறவன் தான். பக்குவம் ஒன்றும் இல்லை.
      மலைக்கவும் ஏதும் இல்லை
      உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

      Delete
  22. என்னுடைய வாதங்கள் பொதுவாக பொருள் குற்றம் அல்லது "கருத்து வேற்பாடுகள்" என்பதுபோல்தான் இருக்கும். தமிழ் சொற்களை எழுதும்போது எழுத்துப் பிழைகள் சாதாரணமானவே எனக்கு வரும். சமீபத்தில்கூட என் தலைப்பில் "குதற்கம்" என்று எழுதியிருந்ததை, திரு அமுதவன் அவர்கள், குதர்க்கம் என்று வரவேண்டுமென்று கூறி சரி செய்ய வைத்தார். ஒரு முறை "காயத்ரியின் பகல்க்கனவு" என்று ஒரு சிறுகதைத் (இது வயது வந்தவர்களுக்கு மட்டும்தாந் அதனால் தோண்டி எடுக்க வேண்டாம். :) )தலைப்பில் எழுதியிருந்ததை, "பகல்கனவு" என்று வரவேண்டுமென்று சொல்லி பதிவர் மணிகண்டன் (இவர் இப்போது பதிவுலகம் வருவதில்லை) சரி செய்தார்.

    மேலும் துளசி டீச்சர் வாழ்த்து(க்)கள்னு தான் இப்போவும் எழுதுவாங்க. இன்னும் பலர் அது "வாழ்த்துகள்" என்பதுதான் சரி என்று "வாழ்த்துகள்"னு எழுதுவாங்க. நான் இன்னும் "வாழ்த்துக்கள்" என்றுதான் தவறுதலாகவே தொடர்ந்து எழுதுகிறேன். எனக்கு இவ்வார்த்தையைப் பொறுத்தவரையில் அப்படி தவறாக "வாழ்த்துக்கள்"னு எழுதினால்த்தான் சரியாக எழுதுவதுபோல் திருப்தி அளிக்கிறது. அதனால் அதையே தொடர்கிறேன்..

    அதேபோல் மரபு, சரி என்பது ஒருபுறமிருக்க நமக்கு (நம் சின்ன அறிவுக்கு) சரி என்று தோன்றுவதை ஒரு சிலர் மாற்ற முடியாது. அதே நிலைப்பாடைத்தான் நான் இங்கே பார்க்கிறேன். திரு பரமசிவம், "பத்து பரிந்துரைகள்" என்று எழுதுவதைத்தான் சரியானதாக உணருகிறாரோ என்னவோ. ஜோஷப் விஜு அவர்கள், பத்துப் பரிந்துரைகள் என்று எழுதுவதுதான் சரி என்று உணருகிறார். அவரவர் அவரவருடைய உண்மையான உள்ளுணர்வோடு தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இதில் பெருங்குற்றம் எதுவும் இல்லை. அவரவர் விருப்பப்படி எழுதிவிட்டுப் போகலாம். நான் "வாழ்த்துக்கள்" என்று எழுதுவதுபோல, திரு பரமசிவம், "பத்து பரிந்துரைகள்" என்றே எழுதிவிட்டுப் போகலாம்.

    தமிழ்ப் பதிவுலகின் சாபம் என்னவென்றால், ஒரு வாக்கியத்தில் நாலு வார்த்தைகள் தவறாக எழுதுபவர்கள்தான் பல ஆண்டுகளாக பிரபலப் பதிவராக இருந்தார்கள். இன்று தமிழறிவு மிக்க பலரும் பதிவுலகில் பதிவெழுதுகிறார்கள். இதில் திரு பரமசிவம் மற்றும் விஜு இருவருமே மிகச் சிறிய அளவில் அதுவும் விவாதத்துக்குரிய எழுத்துப் பிழைகளுடன் எழுதுபவர்கள். இருவரும் ஒருவர் சிறு பிழையை இன்னொருவர் சகித்துக்கொண்டு, என்னைப்போல் பல சொற்குற்றங்கள் செய்பவர்களுக்கு உதவியாக நற்றமிழில் பதிவுகள் எழுதி தொடர்ந்தால் பதிவுலகம் பயன் பெறும்.:)

    நன்றி. :)

    ReplyDelete
    Replies
    1. முதலில் எங்களிருவரின் குறைவான தமிழ் எழுத்துப் பிழைகளுடனான பதிவுகள் என்கிற உங்களின் பாராட்டை மனமுவந்து ஏற்கிறேன். அந்தக் குறைந்த அளவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். முயல்கிறேன்.

      சில பின்னூட்டங்களில் நான் என் மன நிம்மதியைத் தொலைத்திருக்கிறேன்.
      முதன் முதலில் நான் எனது மனநிம்மதியைத் தொலைத்து என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பதிவு இது.
      உங்களை நினைக்க வைத்த பதிவும் கூட.
      மனதிடம் இல்லாதவன் இந்த வேலைக்கெல்லாம் போகக் கூடாது என்கிற அறிவினை இந்தப் பதிவு எனக்குத் தந்திருக்கிறது.
      இது என் முதலும் கடைசியுமான அனுபவமாய் இருக்கும் என்று என்னால் உறுதி கூற முடியும்.
      பிறருடைய மனதை மாற்ற வேண்டும் அதற்காக விவாதம் செய்ய வேண்டும் என்பதை விட,குறிப்பிட்ட பதிவின் பொருண்மை, அது தவறற்ற தமிழ்ப்பதிவுகளை நோக்க விழைந்தமை, பதிவர் படிப்போர்க்குப் பின்னூட்டத்தில் திருத்தம் இருப்பின் வெளியிட அனுமதித்திருந்த சுதந்திரம் இவைதாம் அவ்வாறான பின்னூட்டங்களை இடவும், சரி, பிழைகளை விவாதிக்கவும், இந்தப் பதிவாய் உருவாகவும் காரணமானது.
      நிச்சயமாய் ஒரு அரசியல் இடுகையிலோ, சமையல் பதிவிலோ, கதையொன்றிலோ நான் போய்ப் பிழைதிருத்திக் கொண்டிருக்கப் போவதில்லை.
      முத்துநிலவன் அய்யாவின் கருத்திற்கான பதிலிலும் இதைக் குறித்திருக்கிறேன்.
      உங்களின் தளத்தில் பிழை எனச் சுட்டியவர்கள் உங்கள் நலனை விரும்பி இருக்கிறார்கள் என்பேன்.
      அதை ஏற்பதும் நிராகரிப்பதும் உங்களுக்கு உள்ள உரிமை.
      நிச்சயமாய் இது குற்றமில்லை என்பதைப் பரமசிவம் அய்யாவின் பின்னூட்டத்திலேயே தெரிவித்துவிட்டேன்.
      என்னுடைய பதிவுகளைப் பொறுத்த வரையில் நான் தமிழ் குறித்த பதிவுகளையே எழுதிவருகிறேன். அதனால் என் பதிவில் பிழைகளைக் காட்டித் திருத்துபவர்களைத் திறந்த மனதுடன் வரவேற்கிறேன். அத்திருத்தம் மரபின் படி இருந்தால் நன்றி கூறி ஏற்கிறேன். ஏற்றிருக்கிறேன். அதனால் நான் வளர்கிறேன்.
      தங்களின் மீள்வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி

      Delete
  23. பதிவுலகில் மீண்டும் ஒரு கருத்துப் போர்! போரில் ஈடுபட்டவர்களுக்குக் காயமும் வலியும் இருக்கலாம். ஆனால், எங்களைப் போல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இது நல்ல கருத்துத் தீனி, மைதிலி அவர்கள் கூறியது போலவே.

    உடல்நிலை சரியில்லாததால் என்னால் உடனடியாக இதைப் படிக்க வர முடியவில்லை. இவ்வளவு தாமதமாக, மணவிழாவுக்கு வரச் சொன்னால் மணிவிழாவுக்கு வந்திருக்கிறேன்! இனி நான் இங்கு கருத்தெனச் சொல்ல ஏதுமில்லை. போகட்டும்! எப்படியோ, இரு தரப்பினரும் உடன்பட்டு விட்டீர்கள். அது வரையில் மகிழ்ச்சி!

    என்னைக் கேட்டால், இன்று தமிழில் பிழையில்லாமல் எழுதுபவர்கள் யாரோ ஓரிருவர்தான். மற்றபடி, பிழைகளோடுதான் பிழைத்துக் கிடக்கிறது தமிழ்! பிழையின்றி எழுதுதல் என்பது அறத்தின் வழி நடத்தல் போல. இப்படித்தான் வாழ வேண்டும் எனவும், தவறான வழியில் செல்லக்கூடாது எனவும் எல்லோருக்குமே விருப்பம் இருக்கத்தான் செய்கிறது; ஆனால், அன்றாட வாழ்வில் அஃது எந்தளவு முடிகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும், தலைமுறைதோறும் நாம் அறத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறோம். அது போலத்தான் பிழையின்றி எழுதுதல் என்பதும். அஃது இயலுமா இல்லையா என்பது அப்புறம். ஆனால், பிழையின்றி எழுத வேண்டும் எனும் ஆர்வம் அனைவருக்கும் இருத்தல் வேண்டும். அந்த எண்ணத்தை ஒவ்வொரு தலைமுறைக்கும் நாம் கடத்திச் சென்றாலே போதும். தமிழ் வாழும் என்பது சிறியேனின் பணிவன்பான கருத்து!

    ReplyDelete
  24. திரு ஞானப்பிரகாசன்:

    இது பதிவுக்கு சம்மந்தமில்லாத ஒரு கேள்வி.

    உங்க "ப்ரஃபைல்" போய்ப் பார்த்தால்..

    ***My blogs

    அகச் சிவப்புத் தமிழ்
    ஊமைக்கனவுகள்***

    அதாவது ஊமைக்கனவுகள் தளம் உங்கள் தளம் அல்லது நீங்கள் இத்தளத்தில் ஒரு ஆசிரியர் என்கிறது. எனக்கு குழப்பமாக இருக்கிறது. என் குழப்பத்தை தெளிவு படுத்துங்கள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      என்னுடைய வலைத்தளத்தில் திரட்டிகளை இணைத்தல் போன்ற சில தொழில் நுட்ப உதவிகளுக்காக நான் திரு.ஞானப்பிரகாசன் அய்யாவை நாடியிருந்தேன். அம்மாற்றத்திற்கு வேண்டி என்னுடன் அவரையும் தள நிர்வாகியாக இணைத்திருந்தேன். அவரை இணைத்திருந்ததால் என் தளமும் அவருடைய தளம் என்று சுட்டப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்..
      அவர் எனக்குச் செய்த உதவி மிகப்பெரிது.
      அப்பணி முடிந்த பின்னும் அவர் பெயர் இருப்பதால் பிரச்சினை ஒன்றுமில்லை என்றே நினைத்திருந்தேன்.
      இது போன்ற குழப்பம் வரும் எனத் தெரியாது.
      சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
      இத் தகவலை திரு. ஞானப்பிரகாசன் அய்யாவிடம் தெரிவித்துத் தற்போது இதனைச் சரிசெய்துவிட்டேன்.
      சுட்டியமைக்கு நன்றி.

      Delete
    2. தெளிவுபடுத்தியதற்கு நன்றிங்க, விஜு ஜோஷப். இப்படித்தான் இருக்கும் என்று நானும் யூகித்து இருந்தேன். இருந்தாலும் "Don't guess! Ask!" னு சொல்லுவாங்க இல்ல? அதனால் கேட்டுவிட்டேன். :-)

      Delete
    3. வருண் அவர்களே!

      இத்தளத்தின் சில தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்வதற்காகத்தான் நான் இதன் இயக்குநனான என்னை நியமிக்கும்படி விஜு ஐயாவிடம் கூறியிருந்தேன். ஆனால், என் விவரக்குறிப்பில் மற்றவர் கண்களுக்கும் இந்தத் தளம் என்னுடையதாகக் காட்டும் என்பதை நான் நினைவுகொள்ளத் தவறிவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி!

      Delete
  25. அனைத்தும் நன்மைக்கே நடந்தாக எண்ணி நடை போடுங்கள். இருவருக்குமான புரிதலும் நட்பும் வலுக்கவே இவை உதவியாக இருக்கட்டும். இருவரும் சேர்ந்து தமிழை வளர்க்கவே பாடுபடுகிறீர்கள் பங்கம் விளையாமல். நட்பும் பழுதுபடாமல் இருக்க நயம்படவே இருவரும் அமைதியாக கருத்துகளை பரிமாறி யுள்ளீர்கள் புரிதலுடன் மகிழ்ச்சியே.பெரியவர்கள் எப்போதும் பெரியவர்கள் தான் என்பதை இருவரும் நிரூபித்து விட்டீர்கள் அத்தனை இட்டு பெருமையே கொள்கிறேன். மேலும் பல பயனுள்ள பதிவுகளை தர வேண்டுமென வாழ்த்துகிறேன் . மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. வருக வருக!
      நிச்சயமாய் பெரியவர் அவர்தான் அம்மா!
      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  26. ஐயா தங்களின் பதிவில் இருந்துஏதாவது கற்றுக்கொள்வோம் என்றுதான்
    நானிங்குவந்தேன் ஆனால் இங்கு ஏராளமான விடயங்கள் விவாத மேடையாக
    எவ்வளவுஆழமானஆய்வு எனக்கு இதுவும் ஒருஅனுபவம் இதைவிவாதித்தவிதம்
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  27. பதிவை படிக்கும்போது புதியவனான எனக்கு எழுதவே பயமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்படி யெல்லாம் நீங்கள் சொல்லும் போது உண்மையில் எனக்குத்தான் பயமாக இருக்கிறது.
      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  28. Frankly- came here expecting mutual bashing and street fight.

    Instead found - exemplary exchanges in relishing and decent langauge constructs.

    You excelled by your attitude and approach.
    Pasi sir soared further high by stooping about his mistake

    A rare scene

    - Musthafa

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!
      உங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி!
      உங்கள் தளத்தில் பதிவொன்றும் காணோமே!
      எழுதுங்கள் காத்திருக்கிறேன்.
      நன்றி

      Delete
  29. ஆசானே! முதலில் தலைப்பைப் பார்த்ததும் எங்களுக்கு மிகவும் வியப்பு! பொதுவாக இது போன்ற பதிவுகள் ஆசானின் தளத்தில் இருக்காதே என்று. ஏனென்றால் எங்களுக்கும் வீண் சர்ச்சைகளில், விவாதங்களில் அயற்சி ஏற்படுகிறது என்பதால் தவிர்த்து விடுவதுண்டு. ஆனால், இங்கு காரணம் அறிந்ததும், சரி வாசித்து விடுவோம், நமக்கு நல்ல தகவல்கள், பாடங்கள் கிடைக்கலாம் என்று வாசித்தால் உண்மையாகவே பல நல்ல விடயங்கள் கிடைத்தது. சந்திப் பிழைகள் பற்றி.

    தமிழ் படித்த காலத்தில் மிகவும் கவனமுடன் எழுதியவர்கள், தேர்வில் மதிப்பெண் கிடைக்க வேண்டுமே என்பதற்காகத்தானே, அதையே ஒரு எழுத்தார்வத்தில் கற்றிருந்தால், அன்று எழுதும் ஆர்வம் இருந்தாலும் பல வருடங்கள் முடங்கிக் கிடந்து இன்று எழுதும் போதுதான் அந்தத் தவறு தெரிகின்றது. பல தமிழ் பத்திரிகைகளை வாசிப்பதனால் இந்த தமிழ் மொழி மாற்றம் உள்ளுள் சென்றுவிட்டதோ என்றுதான் தோன்றுகின்றது நீங்கள் சொல்லி இருப்பது போல். அதனால், பல தடவை பிழைகளைத் திருத்தம் செய்தாலும், பல சமயங்களில் அறியாமல் வந்துவிடுகின்றது. தமிழில் தட்டச்சுவதும் ஒரு காரணம்..

    எது எப்படியோ நல்ல தமிழ் வாழ வழி பிறந்தால் நல்லது.

    ஆசானே, தாங்கள் சொல்லி இருப்பது போல், தளங்களில் எழுத்துப் பிழை, சொற்பிழை இருந்தால் அதைச் சுட்டிக் காட்டினால் நல்லது. எங்கள் தளத்தில் தாங்கள் சுட்டிக் காட்ட வேண்டும் என்று வேண்டுகின்றோம். ஏற்கனவே நண்பர் இபு. ஞா சுட்டிக் காட்டியுள்ளார். அப்படித்தான் அவருடனான எங்கள் அறிமுகம் கிடைத்தது.

    எனவே தாங்கள் சுட்டிக் காட்டத் தயங்க வேண்டாம் என்பது எங்கள் தாழ்மையான வேண்டு கோள். ஏனென்றால் நல்ல தமிழ் வாழ வேண்டும்...




    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே!
      தங்களை நான் நன்கு அறிவேன்.
      ஒரு “ப்“ மிகும் என்று சொன்னது சரி யென்று ஆனதால் நான் பெரிய ஆளும் இல்லை.
      பரமசிவம் அய்யா இது பற்றிஅறியாதவரும் இல்லை.
      இது போன்ற என்னியல்பற்ற விவாதம் நிம்மதியைக் குலைப்பதுதான்.
      உண்மையில் இந்தப் பதிவை இட நேர்ந்ததற்காக நான் வருந்தவே செய்கிறேன்.
      உங்களுக்குத் தெரியும், ஆங்கிலத்தில் நாம் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு கண்டுபிடிக்கும் எழுத்துப் பிழைகள்.
      மனப்பாடப் பகுதியில், கமா இல்லை. முற்றுப்புள்ளி இல்லை என்றெல்லாம் மதிப்பெண்களைக் குறைக்கும் முறை.
      இன்னொரு மொழிதானே , என்று ஏன் நாம் அலட்சியம் காட்டுவதில்லை.
      என் பள்ளியில் நடந்தது பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.
      ஒரு ஆசிரியர் ஆர்டிக்கள் நடத்தும் போது a வரும் இடத்தில் an என்று எழுதிவிட்டார்.
      ஓசை கருதாமல் எழுத்துகளைப் பார்த்து இட்டதால் அப்பிழை நேர்ந்திருக்கக் கூடும்.
      அது தலைபோகும் தவறல்ல.
      ஆனால்
      அம்மாணவனின் தந்தை அடுத்தநாளே
      நேரே பள்ளிச் செயலரைச் சந்தித்து இப்படிப் பிழைசெய்யும் ஆசிரியரிடம் என் மகன் படிக்க வேண்டிதில்லை.
      ஆசிரியரை மாற்றுங்கள் அல்லது பிரிவை மாற்றுங்கள் என்று சண்டையிட்டு வேறு பிரிவிற்கு மாற்றிக் கொண்டு போனார். அவ்வாசிரியர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
      ஏன் இந்தக் கவனம். முக்கியத்துவம்...
      ஏனென்றால் ஆங்கிலம் அறிவாளிகளின் மொழி.
      அதைத் தவறாகப் பேசுவது எழுதுவது என்பது அறியாமையின் அடையாளம் என்று காண நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
      எத்தனையோ வேண்டாத மரபுகள் ஆங்கிலத்தில் உள்ளன.
      அதில் ஒன்றையாவது மாற்ற நம்மால் முடியுமா? குறைந்தபட்சம் குரல் கொடுக்க முடியுமா?
      இன்னொரு புறம்,
      நம் மொழியில் நாம் காட்டும் அலட்சியங்கள் ..................................!
      ஏன்....?
      நீங்களோ நானோ மட்டும் அல்ல.
      தமிழில் பதிவெழுதும் எல்லாருமே தவறில்லாமல் எழுதிடத்தான் விரும்புகிறோம்.
      ஆனால் அது பெரும்பாலானவர்களால் முடியாமல் போவதற்கு என்ன காரணம்?
      அப்படி ஏன் எழுதக் கூடாது என்பதும் ஏன் அப்படி எழுத வேண்டும் என்பதும் தர்க ரீதியில் அவர்களுக்குக் கற்பிக்கப் படவில்லை.
      இத் தவறுகளைச் சுட்டுகின்ற இலக்கணங்களை, தவறுகளைத் திருத்துகின்ற விடைகளை மாணவர்கள் வகுப்பறைகளில் எழுதிப் போகிறார்கள்.
      நீர் மேல் எழுத்தாய் அவ்வினாவில் மட்டும் அதை செய்து போகிறார்களே யன்றி தங்களின் மற்ற விடைகளில் அதனைப் பின்பற்றுவதில்லை.
      உங்களைப் போலத்தான் நானும் ஆசைப்படுகிறேன்.
      எந்த மொழியாயினும் அம்மொழியைப் பயன்படுத்தும் நான், அம்மொழியில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கிருக்கும் போது அம்மொழியின் மரபிற்குட்பட்டுத் தவறில்லாமல் எழுத வேண்டும் என்பதையும் தவறு சுட்டப்படும் போது உடனே நன்றி கூறித்திருத்த வேண்டும் என்பதையும் மனதிருத்தியே இருக்கிறேன்.
      நன்றி.

      Delete
    2. மிக அருமையானக் கருத்தைச் சொல்லி உள்ளீர்கள் ஆசானே! ஆம்! ஆங்கிலத்தில் பிழைகள் நோக்கப்படுவது போல் தமிழில் இப்போது பார்க்கப்படுவதில்லைதான். ஆனால், நாங்கள் பள்ளியில் படித்த போது எங்கள் தமிழ் ஆசிரியர், இது போன்ற பிழைகளுக்கு 1/4 மதிப்பெண் குறைத்து விடுவார். இப்போது மீண்டும் ஒரு நல்ல ஆங்கில/தமிழ் ஆசானிடம் கற்றுக் கொள்வது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. முன்பு எழுதும் போது திருத்தம் செய்தாலும் நீங்கள் சொல்லி இருப்பது போல் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டுத் திருத்துவது போல் எங்கள் பதிவுகளைத் திருத்துவதில் கொஞ்சம் கவனம் குறைந்து விடும். இப்போது சற்றுக் கூடி உள்ளது எனலாம். கவனமாக இருக்கத்தான் விழைகின்றோம். ஏனென்றால் தமிழ் மொழி முன்பு போல் தழைக்க வேண்டும். மிக்க நன்றி ஆசானே!

      Delete
  30. அய்யா..!
    தங்கள் பதிவை மிகத் தாமதமாக படித்தேன்.
    மிக நல்ல பதிவு. அருமையான அறிவுரைகள்.
    அதில் இன்றைய பத்திரிகைகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள், நானும் தமிழின் மிகப் பிரபலமான நாளிதழில் 15 வருடங்களாக பணியாற்றினேன் என்பதால் இதை எழுதுகிறேன்.

    தமிழைக் கொலை செய்வதில் நாளிதழ்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. நான் முதன்முதலில் கட்டுரை எழுதி கொடுத்த போதே அதில் இருக்கும் சந்திகளை நீக்கிவிட்டார்கள். 'க்', 'ச்' போன்ற எழுத்துக்களை எழுதாதீர்கள். ஒருவர் 'க்' வரும் என்பார், மற்றொருவர் வராது என்பார். நமக்கு இந்த தமிழறிஞர்களோடு விவாதம் செய்ய முடியாது என்றார்கள். அன்றிலிருந்து சந்தியை மறந்து போனேன்.

    அதேபோல் தமிழில் 'இ' என்ற எழுத்து சில இடங்களில் சலனமாக வரும். உதரணமாக இராமேஸ்வரம்; இதை ராமேஸ்வரம் என்றுதான் எழுதவேண்டும். 'இ' சேர்க்க கூடாது. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட எழுத்துக்கள் இப்படி சைலண்டாக வரும் அதையெல்லாம் பெருமையாக சொல்லும் நம்மவர்கள்: தமிழில் ஒன்றிரண்டு வருவதை கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

    எப்படியோ நாளிதழ்கள் தமிழை வளர்ப்பதற்கு பதிலாக மோசமான தமிழை புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்திருக்கிறது. வார இதழ்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் பேச்சு நடையை அப்படியே உரைநடையாக மாற்றிவிட்டார்கள். இணையங்களில் இந்த நடையை கோலோச்சுகின்றன. இது வளர்ச்சியா..? வீழ்ச்சியா..? என்பதை உங்களை போன்ற தமிழறிஞர்கள்தான் சொல்லவேண்டும். எனது எழுத்துக்களில் பிழை இருந்தாலும் பொறுத்தருளுங்கள்!

    அன்புடன்,
    எஸ்.பி.செந்தில் குமார்

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்.
      தங்கள் பின்னூட்டத்திற்கு நானும் தாமதமாக மறுமொழி அளிப்பதற்கு முதலில் என்னை மன்னியுங்கள்.
      ஏனெனில் மறுமொழி நீண்டு போகும் என்பதால் அதற்குகந்த அமர்வு இப்பொழுதுதான் அமைந்தது.

      இதழியலாளரான தங்களைப் போன்றவர்கள் என் தளம் வருவதும் பதிவுகளைப் படிப்பதும் உண்மையில் மகிழ்ச்சியே!
      நீங்கள் பணியாற்றிய பத்திரிக்கையின் ஆசிரியர் சந்திகளை நீக்கி எழுதச் சொன்னார் என்பதையும் அதற்கு அவர் கூறிய காரணங்களையும் அன்றைய சூழலில் முற்றிலும் புறந்தள்ளி விட முடியாது.

      ஒருவர் சந்தியில் வல்லினம் வர வேண்டும் என்று சொல்லட்டும்.
      இன்னொருவர் அது அங்கு வரக்கூடாது என்று சொல்லட்டும்.
      அதற்கான வாதங்களை அவர்கள் முன்வைக்கட்டும்.
      அது மொழியியல் அறிஞர்களுக்கான வேலைதானே? மற்றவர்களைப் பார்க்கிலும் அவர்கள்தானே அதைச் சிறப்பாகச் செய்யவும் முடியும்? நிச்சயம் அது சொல்லப்படத்தான் வேண்டும்.
      அவ்விவாதத்தில் பிழையின்றி எழுத விரும்புகின்றவர்கள் மௌனசாட்சியாய்க் கடைசியில் என்னதான் சொல்கிறார்கள் என்ற அம்முடிவின் மீதான தங்களின் நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ளட்டுமே.

      எனக்குத் தோன்றுவது இன்றைய சூழலில் பத்திரிக்கைகள் வல்லினம் இட்டு எழுதினால் என்ன இடாமல் எழுதினால் என்ன...
      யாராவது அதைச் சுட்டிக்காட்டி ஒரு விவாதத்தை முன்னெடுப்பார்களா என்ன...? அன்றைய தமிழறிஞர்களின் அந்த அக்கறையை நாம் கிண்டல் என்றும், பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் புறந்தள்ளி விட்டோம். இதுதானே இன்றைய இந்நிலைக்குக் காரணம்?

      அதே நேரம் ‘தி இந்து‘ போன்ற ஆங்கில இதழ்கள் பல துறைவல்லுநர்களின் கட்டுரைகளை வெளியிடும் போது அவ்வல்லுநர்கள் ஆங்கிலத்தில் செய்கின்ற பிழைகளுக்கான பிழையற்ற வடிவத்தை அடைப்புக்குறிக்குள் கொடுக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க முடியும்.

      கட்டுரையாசிரியன் அந்நாளிதழின் நோக்கத்திற்கே மாறுபட்ட கருத்தொன்றை முன்வைக்கின்றபோதும் கூட அதை அச்சுமாற்றாமல் பிரசுரம் செய்ய அனுமதிக்கின்ற இதுபோன்ற பத்திரிக்கைகள் அவர்கள் செய்யும் மொழிப்பிழையைச் சுட்டிக் காட்டுகின்றன. இதுதான் அவற்றிற்கு இருக்கின்ற மொழிபற்றிய அக்கறை என்கிறேன்.

      ஒரு காலத்தில் ஏதோ தேவையோடிருந்து அந்தத் தேவை தன்முக்கியத்துவத்தை இழந்த நிலையில் ஏனென்று அறியப்படாமல் இன்றளவும் தொடர்கின்ற இது போன்ற மரபுகள் தமிழில் மட்டுமல்ல..பிற மொழிகளிலும் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவை தேவையில்லை என்று புறந்தள்ளும் முன் என்ன தேவை கருதி மொழி அவற்றைத் தன் சட்டகத்தில் ஒரு பகுதியாக ஒட்டிக் கொண்டிருக்க அனுமதித்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

      ஏனெனில் இன்னமும் கூட அதை மரபென்று கொண்டுதான் புதியனவற்றையும் ஏற்று மொழி பயணிக்கிறது.

      இங்கு

      வல்லின எழுத்து மிகுதல் மிகாதல் என்பது பற்றிய விவாதிப்பவரை இருவகையுள் அடக்கிவிடலாம்.

      முதல்வகையினர், இது எங்கு வரும் வராது என்று தேடி அறிந்து எழுதச் சிரமப்படுவோர். இதைத் தவிர்த்து எழுதுவதால் கருத்தா மாறிவிடப் போகிறது என்று சொல்பவர்கள். அதனால் அதைப் பொருட்படுத்தாதவர்கள்.

      “அவன் அடித்தான் என்னை. “

      என்று சொல்வதில் எந்தக் கருத்தும் மாறிவிடப்போவதில்லை.
      வெகுஅரிதாகப் பேச்சில்சில சமயங்களிலும் , செய்யுள் கவிதைகளிலும் இப்பயன்பாட்டைக் கண்டிருக்கலாம்.

      மொழிபெயர்ப்புத் தொலைக்காட்சித் தொடர்கள் தமிழுக்கு அறிமுகமான புதிதில் இதுபோன்ற தமிழ்தான் பயன்படுத்தப்பட்டது. அப்பேச்சைக் கேட்டோர்க்குப் பொருள் புரியாமல் இல்லை.
      ஆனாலும் அத்தமிழ் அத்தொலைக்காட்சித் தொடரின் பெயராலேயே “------------ தமிழ் “ எனப்பெயரிடப்பட்டுக் கேலி செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் அதை ஒட்டி ( ஓட்டி ) பிரபல இதழ்களில் நகைச்சுவைத் துணுக்குகள் வந்த வண்ணம் இருந்தன.

      அந்தக் கேலி கிண்டலைத்தான் என்றும் நான் தேவை என்கிறேன். மொழியினைப் பிழைபடக் கையாள்வோர் இது சரி இல்லையோ என்று எண்ணவும், எது சரி, ஏன் என்று ஆராயவும் சரியான அம்மொழியின் மரபைப் பயன்படுத்தவும் துணைசெய்வதாகும் அது.
      அந்தக் கேலிக்கும் கிண்டலுக்கும் பின்னால்தான்
      இப்போது மொழிபெயர்க்கப்படுகின்ற பெரும்பாலான நாடகங்கள் தமிழ் இயல்பிற்கேற்ப உரையாடலை அமைத்துக் கொள்கின்றன . மாறுபட்ட வாக்கிய அமைப்பைத் திருத்தி சரியான அமைப்பினைக் கற்பித்தது அக்கேலியும் கிண்டலும்தான்.


      .............................................................................................தொடர்கிறேன்

      Delete
    2. கேலியிலும் உண்டோர் நன்மை என்று இதனைச் சொல்லலாம்.
      நாகரிக, அதிகம் படித்தவர்களின் தமிழென்று ஒரு தமிழ் மிகப் பிழையான உச்சரிப்புடன் இன்றைய தொலைகாட்சிகளில் பயில வழங்கப்படுகிறது. அது இத்தகு கேலிக்கும் கிண்டலுக்கும் அதிகம் உட்படுத்தப்படவில்லை. இயல்பாக அதன் விளைவுகளை அறியாமல் நாம் அதனைக் கேட்டுக் கடந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாகத் தமிழ்பேசும் சூழலற்று இவ்வூடகங்கள் வாயிலாகத் தமிழ்ச்சூழலைப் பெறும் குழந்தையின் தமிழை, உச்சரிப்பை இவர்கள் தங்களை அறியாமலேயே கெடுக்கிறார்கள்.
      இதுபற்றியெல்லாம கவலைப்படுவதற்கு நமக்கெங்கே நேரம் இருக்கிறது?

      இதைப்போல்தான் நாம் மொழியில் செய்யும் இதுபோன்ற எழுத்துப் பிழைகளை வெகுவியல்பாக ஏற்கவும் பயன்படுத்தவும் கற்றுக் கொண்டுவிட்டோம். அப்படிச் செய்தற்கு நம் வகுப்பறைகளும் அச்சு ஊடகங்களும் ஆற்றிய பங்கை மறுத்துவிட இயலாது.

      “ காரிகை கற்றுக் கவிபாடுவதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பது நல்லது “ எனத் தமிழில் வழங்கும் பழமொழியைப் போலத்தான், “ஒற்று மிகும் இடங்கள்“ பற்றிய பட்டியலை இலக்கண விதிகளை வைத்துக் கொண்டு வரிவரியாய்ப் பிழைநீக்கி எழுதுவது என்பது.

      அதற்குப் பதில் பேசாமல் இருக்கலாம்.

      ஆனால் ஒருமொழியைத் தாய்மொழியாய்க் கொள்ளும் குழந்தை இலக்கணம் படித்து மொழியைக் கற்பதில்லை என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம்.
      வாக்கிய அமைப்பு, உச்சரிப்பு, சொல்லாட்சி இவற்றை அக்குழந்தை தான் வாழும் சூழல்களில் இருந்தே பெறுகிறது. அச்சூழலில் அம்மொழி எப்படி இருக்கிறதோ அதையே குழந்தை உள்வாங்குகிறது. அதுவே அக்குழந்தையிடமும் பிரதிபலிக்கிறது.

      எழுத்தாட்சியும் அதைப்போன்றதுதான். படிக்கக் கற்கும் குழந்தை தன்னை அறியாமலேயே வாக்கியங்களைச் சந்திகளை ஒருமை பன்மையை மயங்கொலியை இவற்றின் மாற்றத்தால் நிகழும் வேறுபாட்டை அவதானிக்கிறது.
      .
      தானறியாமல் கற்கும் இதுபோன்ற சூழலில் பெற்ற அறிவு தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது.
      அக் குழந்தையின் சூழலில் மரம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தாமல் அதைக் குறிக்கக் ..“கல்“ என்ற சொல் பயன்பட்டிருக்குமானால் அக்குழந்தை மரத்தைக் கல் என்றே சொல்லும்.

      எனவேதான் இந்தச் சூழல்கள் பிழையற்ற மொழிமாதிரிகளைக் காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன என்றேன்.

      அப்படி உள்வாங்குவதன் மூலம்,

      “வீட்டுக்குப் போகனும்“ என எழுதும் குழந்தைக்கு ஏன் இருசொற்களுக்கு நடுவில் ‘ப்‘ வர வேண்டும் என்கிற இலக்கண விதிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பிற்காலத்தில் தேவை இருந்தால் அது இதனைத் தெரிந்து கொள்ளட்டும்.

      இந்தப் பயன்பாட்டின்போது, அக்குழந்தைக்கு ஒருபோதும் நிலைமொழி இறுதியில் இவையிவை வந்து வருமொழி முதலில் வல்லினம வந்தால் வல்லினம் மிகும் அல்லது மிகாது என்கிற விதி தெரிவதில்லை.
      இப்படித்தான் வரவேண்டும். இப்படி வரக்கூடாது என்று தன்வாசிப்பு அனுபவத்தில் இருந்து அது கற்றுக் கொள்கிறது. அதுவே நிலையானது மற்றும் இலக்கண விதிகளில் இருந்து வழித்தெடுக்கும் அறிவினைக்காட்டிலும் வலிமையானது.

      இதைச் செய்வதில்தான் பத்திரிக்கைகளின் துணை அவசியமானதென்றேன்.
      இன்னொரு மொழியைப் பார்த்துப்பார்த்துக் கவனமாய் எழுதும்நாம் அதில் தவறுசெய்தால் உடனே திருத்தும், பின் எப்போதும் அப்பிழைகள் நேராமல் தவிர்க்க முயலும் நாம், ஏன் நம்மொழியில் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்றால் அது பற்றிய அலட்சியத்தை நம்முடைய தற்போதைய சூழல்களே பெரிதும் கற்பித்திருக்கின்றன என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.

      எனவே பெரிதும் தாங்கள் காண்கின்ற ஊடக எழுத்து மொழியின் இவ்வியல்புதான், பிழையாக இருந்தால் என்ன தமிழ்தானே…. என்ற இந்த அக்கறையின்மையாய், அதில் பழகி எழுதும் எழுத்தாளர்களைப் பிழை என்பதை அறியவிடாமல் மொழியைப் பயன்படுத்தக் காரணமாய் அமைகிறது. இருமொழித்திட்பம் பெற்ற தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் தவறற்று எழுதும் சூழலையும், அம்மொழியின் நல்ல மாதிரிகளும், அம்மொழியில் பிழை என்பது சமுதாயத்தால் எவ்வாறு நோக்கப்படும் என்கிற மன உணர்வுமே உருவாக்குகின்றன.
      அவர்களே தமிழில் பிழைகளைப் பொருட்படுத்தாமைக்கும் இவையே காரணம்.

      இரண்டாம் வகையினர்,

      இயல்பிலேயோ, இலக்கணம் அறிந்தோ பெரிதும் தவறின்றி எழுதக் கூடியவர்கள். இவர்களது கருத்து “கருத்துக்குச் சேதமில்லாமல் இருக்கும் இடத்தில் வல்லினம் வருதல் - வராமை குறித்த கறார்த்தனம் வேண்டியதில்லை என்பது.“

      இக்கருத்தியலின் பின்புலம், தமிழில் எழுதுகின்றவர்களுக்குப் பெரிதும் நேரும் இடர்ப்பாட்டின் வெம்மையைத் தணிப்பதாய் அமைகிறது.

      ஏனெனில் பெரும்பாலோனார் தவறின்றி எழுதுமிடத்து இக்கருத்துத் தன்னளவில் மதிப்பிழக்கிறது.

      (தொடர்கிறேன்)

      Delete
    3. இந்தச் சந்திகள் என்பதில்,அதாவது வல்லினம் மிகுதல் மிகாதல் என்பதில்,

      “ காலை தூக்க மாத்திரை சாப்பிட்டான் “ ( காலையில் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டான் )


      “ காலைத்தூக்க மாத்திரை சாப்பிட்டான் “( தூக்க முடியாத காலை தூக்க )

      என்று பொருளளவிலான வேறுபாடு வருமிடத்து அதனைப் பயன்படுத்தலாம் என்பது இவர்களின் பொதுவான பரிந்துரையாய் இருக்கிறது.

      ஆனால், இச்சொற்றொடர் சொல்லப்படும் இடம் சார்ந்து வல்லினம் வந்தாலும் வராவிட்டாலும் பொருள் புரிந்து கொள்ளப்பட்டுவிடும். இன்று நாம் பயன்படுத்தக்கூடிய நிறுத்தற்குறிகள் இவ்வேலையை எளிதாகச் செய்துவிடும்.

      காலை, தூக்க மாத்திரை சாப்பிட்டான்.

      என்பதில் வரும் அரைப்புள்ளியை

      காலைதூக்க, மாத்திரை சாப்பிட்டான் என்றிட்டால் போதுமானது.

      அதனால்

      பொருள் வேறுபடும் இடத்து மட்டும் வல்லின வருகைத் தவிர்ப்பை வரவேற்கலாம் என்பதிலும் சொல்லும் படியான நியாயங்கள் இல்லை.


      நாம் கவனத்தில் கொள்ள வேண்டி விடயம் மொழியின் மரபும் அதனைச் சார்ந்து அமைகின்ற அதன் இயல்புகளையுமே!

      இந்தச் சந்திகள் வல்லினம் வரும் இடங்களில் மிகுகின்றன மிகாமல் இருக்கின்றன என்பதற்கு இப்பொருள் வேறுபாட்டைத் தவிரவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

      முதலாவது,

      தமிழில் சொற்கள் தொடரும்போது, இயல்பாக ஏற்படக் கூடிய நிறுத்தம். ஒரு விநாடிக்கும் குறைவான இடைவெளியின் அளவாக இருக்கிறது. இலக்கணங்கள் இதனை விட்டிசை என்கின்றன.

      பாலை பாடிய பெருங்கடுங்கோ

      என்று சொல்லும் போது அந்த விட்டிசை,

      பாலை / பாடிய / பெருங்கடுங்கோ ( பாலை திணையில் பாடிய )

      என்று ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் விநாடிக்கும் குறைவான நேரத்தில் மூன்றிடங்களில் நிகழ்கிறது என்பதை நாம் சொல்லிப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

      இதே தொடரை, வல்லினம் மிகுத்து,
      .
      பாலைப் பாடிய பெருங்கடுங்கோ

      என்று சொல்லும் போது அதே விட்டிசை,

      பாலைப்பாடிய / பெருங்கடுங்கோ ( குடிக்கும் பால்பற்றிப் பாடிய )
      என்று
      பாலைப்பாடிய என்கிற இருசொற்கள் சேர்ந்து ஒருசொல்நீர்மைத்தாகவும், பெருங்கடுங்கோ என்பதை ஒரு சொல்லாகவும் கொள்ளுமாறு அமைகிறது.
      இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு எழுதும் போது இந்த வலிமிகுதல்/மிகாமையிலும் , பேசும் போது இந்த விட்டிசையிலும் நிகழ்கிறது.

      எனவே சில இடங்களில் வெறும் பொருள் மாற்றம் மட்டும்தான் இவ்வல்லினம் மிகுதல் மற்றும் மிகாமைகள் என்பதற்குள் அடங்கும் என்ற அதன் மொழிப்பயன்பாட்டுப் பரப்பைக் குறுக்கிவிட முடியாது என்பது ஒன்று.

      இன்னுமொன்று, தமிழோடு நெருங்கிய தொடர்புடைய வர்க எழுத்துகளை உடைய பிற மொழிகளில் உள்ள சொற்கள் தமிழுக்கு வரும்போது அவற்றின் வர்க எழுத்துகளுக்கும் தமிழின் வல்லெழுத்துகளுக்கும் நேர்கின்ற உறழ்ச்சி.

      சான்றாக வடமொழியில்,

      pa , pha , ba , bha என “ப“ என நாம் கொள்ளும் வல்லினத்திற்கு நான்கு ஒலியன்கள் உள்ளன. தமிழில் இது மொழி முதலாக வரும் போது, pa என்றே போதுவாக உச்சரிக்கப்படுகிறது.
      அங்குள்ள சொற்களை நாம் தமிழில் அப்படியே பெயர்க்கும்போது ( தற்பவம்), ப என்கிற ஓர் எழுத்தையே பயன்படுத்துகிறோம்.
      பக்தி ( Bakthi ) என்னும் சொல் வடமொழியிலிருந்து அப்படியே தமிழில் தற்பவமாய்ப் பரவலாய் வழங்கப்பட்டுவருவது.

      இந்தச் சொல்லைத் தமிழிற் கையாளும் போது,

      அவனுக்கு பக்தி முத்திப் போச்சு என்கிறோம்.

      அவனுக்கு Baக்தி முத்திப் போச்சு என்னும் போது நாம் “ அவனுக்கு பக்தி “ என்பதற்கிடையில் வல்லினத்தைப் பயன்படுத்துவதில்லை.
      ஏனெனில் அவனுக்குப் Baக்தி என உச்சரிப்பது நம்மொழியின் இயற்கைக்கு மாறானதாகவும் மிகச் செயற்கையானதாகவும் அமைந்துவிடுகிறது.
      அல்லது ,
      அவனுக்குப் பக்தி முத்திப்போச்சு
      அவனுக்குப் paக்தி முத்திப் போச்சு என்று சொல்வோமானால் வல்லின வரவிற்கேற்ப வடமொழி எழுத்தின் ஒலி தமிழொலிப்பு முறை பெற்று ஒலிக்கப்படல் இயற்கையாய் அமைகிறது.

      ( தொடர்கிறேன் )

      Delete
    4. எம்மொழியானாலும் வேற்றுமொழிச் சொற்களைத் தன்வயப்படுத்தித் தழுவும்போது தன் மரபின்படிதான் அது உயிர்ப்பூட்டிச் சேர்க்கிறது.

      காடு என்பது காட்டுக்கு என்று ஆவதைப் போல்

      நாடு என்பது நாட்டுக்கு என்று ஆவதைப் போல்

      ரோடு என்பது ரோட்டுக்கு என்று ஆகும்.
      Road என்னும் ஆங்கிலச்சொல் வேற்றுமை உருபுகளை முன்னொட்டாய்த் தழுவுதலே வேண்டும். ஆனால் இங்குத் தமிழ், ரோட்டைத் தன்வயமாக்கிவிட்டது.

      இதைப் போன்றதுதான் ஒரு மொழி வேற்று மொழிகளை வெகுஇயல்பாக உட்செரித்தல் அதனதன் மரபிற்கேற்ப நிகழும்.

      ஆங்கிலத்தில் கூட,

      எந்தப் பிளாட்பாரத்தில வண்டி நிக்கும் என ஒற்று மிகுத்துக் கேட்பவன்
      எந்த பஸ் (Bus) திருச்சிக்குப் போகும் என்னும் இடத்தில் ஒற்று மிகுத்து உச்சரிப்பதை இயல்பாகவே தவிர்த்துவிடுகிறான்.
      பஸ் என்பதை ஒருவேளை அவன் Paஸ் என உச்சரித்தால் அங்கு ஒற்று மிகுதல் சாத்தியமாகலாம்.
      எனவே மொழிக்கு உச்சரிப்பே உயிர்மூலம் என்று கொள்வேமேயானால் அவ்வுயிரை நிலைநிறுத்தும் காரணிகளில் ஒன்றாக இந்த வல்லின மிகுதல் மிகாமைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
      மொழியை எப்படியும் உச்சரிக்கலாம் எப்படியும் எழுதலாம் என்பதை ஏற்காதவர்கள் இதன் பயன்பாட்டை அவசியமன்றென்று எளிதில் புறந்தள்ளிவிடலாகாது.

      எனவே வல்லினம் மிகுதல் மிகாதல் என்பது நம் தமிழின் “மொழிபுணர் இயல்பு.“ அதைக் கடினமாய் இருக்கிறது என்றோ குழப்பமாய் இருக்கிறது என்றோ கடந்து போகின்றவர்கள் குறித்த கவலையைவிடவும் அதைச் சுட்டிக் காட்டி இது தவறு , இது சரி என்று சொல்லும் தமிழாசிரியர்கள் குறைந்துவிட்டனரே என்பதுதான் எனது வலி மிகுந்த ஆதங்கமாய் இருக்கிறது.
      தமிழ் பேசும் எனக்குத் தமிழ் பற்றிய பதிவுகளை மட்டும் எழுதும் எனக்கு இங்கு “வலி மிகுதல்“ நியாயம் என்றே படுகிறது.

      வல்லினம் மிகுந்தால் என்ன மிகாவிட்டால் என்ன என்று ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளும் முன்பு ஏன் இது போன்ற மரபுகள் நம் மொழியில் இருக்கின்றன என்பதற்கான அடிப்படைகளை ஆராய வேண்டும். எவ்வளவோ சொற்களைத் தமிழ் இழந்திருக்கிறது. பழைய சொற்களின் பொருளை மாற்றி வைத்திருக்கிறது. புதிய சொற்களைப் புக அனுமதித்திருக்கிறது.
      வாழும் மொழியின் இயல்பு அது.
      ஆனால் மொழியின் அடிப்படைகள், உச்சரிப்பு, சொற்றொடர் அமைப்பு இவைகளில் மாற்றங்களை அனுமதிக்கும்முன் அதன் சாதக பாதகங்கள் நன்காராயப்பட வேண்டும்.

      பல நேரங்களில் மொழியின் சில கூறுகளைப் பயன்படுத்துவது கடினமாகலாம். ழ என்கிற எழுத்து உச்சரிப்பைப் போல.
      அதற்காக அதை விட்டுவிடலாகாது.
      அதைப் பரவலாகக் கையாள்வதில் உள்ள தடைகளைச் சிரமங்களை விலக்கும் வழிமுறைகளை மொழியாசிரியர்கள் இனம் காண வேண்டும்.
      எளிமைப்படுத்தியும் இனிமைப்படுத்தியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். நாப்பழக்கம் பேச்சென்றால் எழுத்தின் தவறின்மை இலக்கணத்தைக் கற்பது என்பதைவிட ஒவ்வொருவரின் மனப்பழக்கத்திலிருந்தே வர வேண்டும்.
      நல்ல தமிழாசரியர்கள் அதற்குத் துணைநிற்க வேண்டும்.

      பத்திரிக்கை போன்ற மொழியினால் பிழைக்கும் ஊடகங்கள் அதைப் பிழையில்லாமல் பயன்படுத்துவது தங்களின் பொறுப்பு என்பதை உணர வேண்டும்.

      பொதுவாக எழுதுபவர்கள் எல்லாருக்குமே தவறில்லாமல் எழுத வேண்டும் என்கிற உணர்வு உள்ளோடிக்கொண்டுதான் இருக்கும். அதற்கான உதவிகள் செய்பவர்களை அவர்கள் வரவேற்க என்றும் தயாராகவே இருப்பர்.
      எனவே நம் பக்கம் எத்தனை பேர் என்பதைவிடவும் நம் பக்கம் நியாயம் இருக்கிறதா என்பதையே மனதிற் கொள்ளவேண்டும். அதற்காகக் குரலுயர்த்த வேண்டும்.

      இறுதியாய்ப் பேச்சு நடையைத் தமிழில் பயன்படுத்துதல் குறித்த உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

      தமிழில் பேச்சு மரபும் எழுத்து மரபும் தம்மில் வேறுபட்டவை.
      ஒருவரின் பேச்சினை எடுத்துக் காட்டும் இடத்தில் பேச்சை அப்படியே எடுத்துக் காட்டுவதில் தவறில்லை என்பதே எனது நிலைப்பாடாக இருக்கிறது
      மற்ற இடங்களில் எழுதுவதற்கென்று இருக்கக் கூடிய பொதுத்தமிழ் அனைவர்க்குமான புரிதலை எளிதாய்த் தரும் என்பதால் அதனைப் பயன்படுத்தலே நன்றென நினைக்கிறேன்.

      நிறைவாய்த் தமிழறிஞன் என்றெல்லாம் என்னை மேலேற்றிவிட வேண்டாம்.
      தமிழைப் பயன்படுத்துகின்ற எல்லார்க்கும் அது பற்றிக் கருத்துக் கூற உரிமை இருக்கிறது.

      சரி என்றும் தவறென்றும். வேண்டும் என்றும் வேண்டாம் என்றும்

      கொள்வதற்கு இவை எனக்கு நான் கற்பித்துக்கொள்கின்ற நியாயங்கள் அவ்வளவே!
      அது வேறுபடுவது இயற்கைதானே!

      மீண்டும் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      தொடர்ந்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete

  31. வணக்கம்!

    எட்டின்முன் பத்தின்முன் எய்தும் வலிமிகும்
    சட்டெனச் சாற்றும் தமிழ்!

    ReplyDelete
  32. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    இந்த பதிவு நான் தங்களைத் தொடரத் தொடங்கிய பின் வந்தது. ஏனோ படிக்கல, அது ஈர்க்கல என்னை என்று,,,,,,,,,,,,
    ஒரு மருத்துவர் தவறு செய்தால், ஒரு கட்டிட பொறியாளர் தவறு செய்தால் எத்தகைய மாற்றங்கள் நிகழுமோ உலகில், அதுபோல் தான் மொழித் தவறும் என்று நாம் கொள்ள வேண்டும். சந்திப்பிழை தானே என்று தானே போடமுடியாது.
    இதன் முழு பொறுப்பும் தமிழ் ஆசிரியர்களுடையது.
    யாரும் யாரையும் குறைத்து சொல்வது என இங்கு கொள்ள முடியாது.
    தவறு எனின் சுட்டுவது நல்லது தான்.
    சரி என் வேண்டகோள் இது தான்.
    தாங்கள் என் பதிவில் நான் இதனால் இப்பவெல்லாம் குறைத்துக்கொண்டேன் என்றதன் பொருள் இப்ப விளங்கிற்று எனக்கு.
    அய்யா அவர்களை எனக்கு வழிகாட்டியாய் நான் நினைப்பதால் என்னைச் செதுக்கவே வேண்டகிறேன்.
    நான் படித்து பட்டம் பெற்றது எல்லாம் பட்டமே,,,,,,,,,,,,
    தவறு எனும் போதோ,
    இதை இவ்வாறு கொள்ளக்கூடாது எனும் போதோ, இப்படி வரனும், அப்படிஇல்லை என்று தாங்கள் அருள்கூர்ந்து அறிவுறுத்த வேண்டகிறேன். தயவு செய்து வாளாயிருத்தல் கூடாது அய்யனே.
    நன்றி.

    ReplyDelete