Thursday 5 February 2015

கானக நாடன் சுனை.


அது ஒரு வித்தியாசமான சுனை. மிதக்கும் பொருள்களை மூழ்க வைக்கவும், மூழ்கும் பொருள்களை மிதக்க வைக்கவும் கூடிய தன்மை அதற்குண்டு. அதுதான் கானக நாடன் சுனை.

சுரையாழ அம்மி மிதப்ப ........“

எனத் தொடங்கும் இந்தப் பாடல் பற்றிச் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இது.

இப்பாடல்  தமிழ்ப்பாட நூல்களில், மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு எடுத்துக்காட்டாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது ஒரு பாடலில் பொருளைக் காணும்போது ஓரடிக்குள்ளாகவே சொற்களை இடம் மாற்றிப் பொருள் காண்பதற்கு எடுத்துக்காட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் படி,
இந்தப் பாடலை,
சுரை மிதப்ப அம்மி ஆழ
எனச் சொற்களை இடம்மாற்ற வேண்டும்.

ஆனால் இப்படிச் சொற்களை இடம்மாற்றும் போது அங்குக் கவிதைக்குரிய தன்மை இல்லாமல் இப்பாடல் ஒரு செய்தியை மட்டுமே அதுவும் சிறப்பில்லாத ஒரு செய்தியைத் தாங்கிப் போவதாய் அமைந்துவிடுகிறது.

உண்மையில் இதனை மொழிமாற்றிற்கு இலக்கணமாய்க் கொள்ள முடியுமா?

சொற்களை இப்படி இடமாற்றத்தான் வேண்டுமா?

தேவையில்லை என்பதுதான் சென்றைய பதிவு.

அதற்குச் சில ஆதாரங்களைத் தருவதாகச் சொல்லி இருந்தேன்.

முதலில் இந்தச் சொற்றொடர், பண்டைய மக்களின் பேச்சு வழக்கில், இதே பொருளிலேயே இடம்மாறாமல் பயன்பட்டு வந்திருக்கிறது என்பதற்குச் சான்று,

    “உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
    நிரையுளர்  அல்லார் நிமிர்ந்து பெருகல்
    வரைதாழ்   இலங்கருவி வெற்ப அதுவே
     சுரையாழ அம்மி மிதப்பு “( பழமொழி -123 ) 

என்னும் பழமொழி நானூற்றுப் பாடல்.

உண்மையில் இது மக்கள் வழங்கி வந்த ஒரு பழமொழி.

உலகத்தில் நல்ல மனம் படைத்த அறிவு வாய்ந்த மக்கள், ஒடுக்கப்படுவதும், அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் பெருக்கமடைந்த அறிவற்றவர்களே உயர்ந்து  வாழ்வதும், மூழ்க வேண்டிய அம்மி மிதப்பதைப் போலவும் மிதக்க வேண்டிய சுரைக்குடுக்கை மூழ்குவதைப் போலவும் இயற்கைக்கு மாறானதாய் இருக்கிறது என்பதே இப்பழமொழியைக் கொண்டு ஆசிரியர் விளக்க வந்த பொருள்.


வள்ளுவர்  எண்ணற்ற பிரச்சனைகளுக்குத் தீர்வினை இரண்டடிகளில் எளிதாகத் தீர்த்துவிட்டுப் போய்விடுவார்.

அவரால் தீர்க்கமுடியாத, நீங்களே தீர்வு கண்டுகொள்ளுங்கள் என்று சொன்ன ஒரு குறள் உண்டெனில் அது இதுதான்.

“ அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
 கேடும் நினைக்கப் படும் “ ( 169 )

தீய எண்ணம் கொண்டவன் அடையும் வளர்ச்சி, நல்ல மனம் உடையவன் அடையும் துன்பம் இதற்கான காரணம்……………………?! அது நினைக்கப்படும்.
அதாவது நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லிப் போய்விடுவார்.

மேற்காட்டிய பழமொழி இந்த முரணை விளக்கவே, இந்த இடத்தில்,
சுரை மூழ்குவதையும் அம்மி மிதப்பதையும் சொல்லிச் செல்கிறது.

பாமர மக்களின் வழக்கிலே பிறந்து உலவுகின்ற பழமொழிகள் நிச்சயமாய், இது போன்ற மொழிமாற்றிப் பொருள் கொள்ளும் அளவிற்குப் பண்டிதத்தனம் உடையவையாய் இருப்பதில்லை.

அவை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பனவாய், எளிதான வழக்கில் உள்ள மிக எளிய சொற்களைக் கொண்டமைவதாய் இருப்பன.

எனவே, சுரையாழ அம்மி மிதப்ப என்பது ஒரு பழமொழி என்பதும் அதன் வடிவத்தை நாம் கொள்வது போல், சுரை மிதப்ப அம்மி ஆழ என்று மாற்ற வேண்டுவதில்லை என்பதும் தெளிவாகிறது.

அடுத்து,

 “இம்மியன நுண்பொருள்கள் ஈட்டிநிதி ஆக்கிக்
கம்மியரும் ஊர்வர் களிறு ஓடைநுதல் சூட்டி
அம்மிமிதந்து ஆழ்ந்துசுரை வீழ்ந்ததுஅறம் சால்கஎன்று
உம்மைவினை நொந்துபுலந்து ஊடல்உணர்வு அன்றே“
( சீவக சிந்தாமணி 495   )

எனும் பாடலில் இதே தொடர், “அம்மி மிதந்தது  ஆழந்து சுரை வீழ்ந்தது“  என்று இதே பொருளில் சீவக சிந்தாமணியிலும் ஆளப்படுகிறது.

நச்சினார்க்கினியர் இத்தொடருக்கு உரை எழுதும் போது, “ ஆழ்தற்குரிய அம்மி மிதந்து, மிதத்தற்குரிய சுரை ஆழ்ந்து வீழ்ந்தது என்றது, உயர்ந்தோர் வாழாதே, தாழந்தோர் வாழ்ந்ததனை “ ( பக். 252. சீவக சிந்தாமணி, உ.வே.சா. பதிப்பு. 1969 ) என்கிறார்.

அதாவது, நல்லவர்கள் வாழ முடியாமல் துன்புறுவதையும், தீயவர்கள் எல்லாவற்றிலும் ஓங்கி வளர்ந்து வாழ்வதையும் பார்க்கும்போது, சுரை மூழ்கி அம்மி மிதப்பது போல் இருக்கிறது என்பது அவர் தரும் விளக்கம்.
இங்கும் இவ்வுவமை, மாற்றமின்றி, சுரையாழ அம்மி மிதப்ப என்னும் வடிவத்திலேயே  எடுத்துக்காட்டி விளக்கப்படுகிறது.

திரு. மு.வை. அரவிந்தன் தன் “உரையாசிரியர்கள்“ என்னும் நூலிலும் இவ்வடிவத்திலேயே இதைப் பொருள் கொள்ள வேண்டுமென்றும், மொழிமாற்றாகக் கருதக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் அவர் இந்தப் பாடலுக்குப் பின்புலமாகச் சொல்லும் களம் வேறு.

இந்தப் பாடல் எவ்வகைப் பாடலாக இருக்க முடியும்?

சிந்தியல் வெண்பாவா, நேரிசை வெண்பாவா என்னும் யாப்பு வகைமைக்குள் உட்படுத்துவதைக் குறித்து நான் பேசவரவில்லை..

அது, இப்பாடலைப் பழந்தமிழ் நாட்டார் பாடலில் ஒன்றான வள்ளைப்பாடல் வகையுட்படுத்துவது.


வாய்மொழி வடிவங்களை மெல்லத் தமிழ் மரபு தன்னுள் உட்செரித்து யாப்புக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்ததற்குச் சான்றாய் அமைந்த வள்ளைப் பாடலின் ஒரு கண்ணியாக இது இருக்கக் கூடும்  என்ற என் அய்யப்பாட்டிற்கான காரணங்கள் அடுத்த பதிவில்.

பட உதவி - yumeki-chan.deviantart.com
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

28 comments:

  1. Replies
    1. வாருங்கள் நண்பரே!
      உங்கள் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி

      Delete
  2. விளக்கவுரைகள் தொடரட்டும் வரட்டும் அடுத்த பதிவும் கவிஞரே....

    ReplyDelete
    Replies
    1. என்னைக் கவிஞர் என்றால் உண்மையில் கவிஞர்களை என்ன பெயரிட்டு அழைப்பீர்கள் ஜி?
      உங்கள் அன்பினுக்கும் மீள் வருகைக்கும் நன்றி!!

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    ‘ கானக நாடன் சுனை’ பாடலை மேற்கோள் காட்டிப் பழமொழி நானூற்றுப் பாடல் வழியாக ‘சுரையாழ அம்மி மிதப்பு ’ என்றும் சீவக சிந்தாமணியில் ‘அம்மிமிதந்து ஆழ்ந்துசுரை வீழ்ந்தது’ என்றும் நச்சினார்க்கினியர் இத்தொடருக்கு ஆழ்தற்குரிய அம்மி மிதந்து, மிதத்தற்குரிய சுரை ஆழ்ந்து வீழ்ந்தது என்றது, உயர்ந்தோர் வாழாதே, தாழந்தோர் வாழ்ந்ததனை எடுத்துக்காட்டுகளை எடுத்துக்காட்டியதை எண்ணி எண்ணி வியந்து போகின்றேன்.

    தங்களின் தேடல்... கண்டுபிடிப்பு தமிழாசிரியர்களால் கூட முடியாமல் போகின்றதே என்று நினைக்கின்ற பொழுது... தங்களின் ஈடில்லா உழைப்பு...தமிழின் மேல் உள்ள ஆர்வம்... கவித்துவம் எண்ணிக் களிக்கின்றேன்.
    வள்ளைப் பாடலின் ஒரு கண்ணியாக இது இருக்கக் கூடும் என்ற தங்களின் அய்யப்பாட்டிற்கான காரணங்கள் அடுத்த பதிவில் என்று தொக்கி நிற்பதைக் கண்டு காத்து நிற்கின்றோம்.

    நீங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இருக்குமா?
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      இதில் தேடலோ கண்டுபிடிப்போ என்ன இருக்கிறது அய்யா?
      நம் பள்ளித் தமிழாசிரியர்கள்தான் கடல்கடந்து சென்று புகழ் நிறுவியவர்கள் என்பது தாங்கள் அறியாததா?
      நாமெல்லாம் அவர்கள் முன் “ சிறு துரும்பு “ தானே?
      நீங்கள் என்னைப் புகழ்வது என்பால் உங்களுக்கு உள்ள அன்பினாலேயே என்பதை அறிவேன்.
      உங்களது உயரம் எனக்குத் தெரியும்.
      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  4. கானக நாடனின் சுனையில் குளிக்கலாம்னு ஆசையா வந்தேன் ,அதன் தன்மையை பார்த்தால் என்ன செய்வதென்றே புரியலை ,சுனை நீரை அருந்தி மகிழ்ந்தேன் :)
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் அதிசய சுனை என்றுவிட்டார்களே....!
      குளித்து ஏதாவது ஆகிவிட்டால்.............அப்புறம் யார் பதில் சொல்வது?
      உங்களின் முன்ஜாக்கிரதை உணர்வு தெரியாததா?
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பகவானே!

      Delete
  5. முதல் முறை முயற்சி செய்யும் சத்யா,
    தமிழ் இலக்கியத்தை போராடி உலகுக்கு தெரிவிக்க பாடுபடும் தொண்டண்ணுக்கு மலர்ச்செண்டு கோர்வைகளை சமர்பிக்க முயற்சி செய்யும் இலக்கிய அறிவில்லா சாதாரண மானிடனின் விருப்பத்தை தெரிவிக்கும் வாழ்த்துக்கள்.
    தமிழ் இலக்கியத்துக்கு ஊமைக்கனவுகள் (உண்மை நினைவுகள்), பண்முக எண்ணத்திற்கு புதுவை வேலு (புதுமை வேலு), கட்டுரைக்கு சாமானியன் (நடைமுறை எழுத்தாளன்), என் ஆசை சுப்பு தாத்தா, அனைவரும் ஒன்றாக புரியும் தமிழ் தொண்டுக்கு சேவை செய்வது பெருமை சிறப்பு.
    அகநானுறு பாடல்களில் தோழிகள் (தெரியவில்லை தோழர்கள் ??) மட்டுமே அறிவுள்ள கேள்விகளை முன் வைப்பார்களா ?
    இலக்கியம் அறிய ஆசை. யாப்பு அல்ல இல்லக்கியவாதி நண்பரே.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. [co="red"]நானும் பின்னூட்டங்களில் வண்ண எழுத்துகளைப் பயன்படுத்த முதன் முறையாக முயற்சி செய்கிறேன் திரு சத்யா அவர்களே! “ இலக்கிய அறிவில்லா சாதராண மானிடன் என்று சொல்லும் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!! இலக்கியம் அறிய ஆசை யாப்பு அல்ல என்று விட்டீர்கள். உடல் வேண்டாம் உயிர்தான் முக்கியம் என்பது போல...! உங்களின் முதல் வருகைக்கும், மேலான கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே![/co]

      Delete
  6. கானக நாடன் சுனை
    விளக்கம் அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSbJsGgRNAvYy0BxoUf6bdeuXUnLWeXs-oSLW-sJwp6iPtiz6NtrP27FibS[/im]

      Delete
  7. அண்ணா,

    இத்தனை நூல்களை மார்க்குகாக படிக்காமல், விரும்பி படித்திருக்கிறீர்கள். அதனால் தான் சட்டியில் இருப்பது அகப்பையில் வந்திருக்கிறது.:)) இப்போ இந்த பாடல் மேலும் பொருள் உள்ளதை தோன்றுகிறது. அருமை அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. [co="blue"]பொழுது போகவேண்டுமே...! வேலை இல்லாத எனக்கு அதைவிட வேறென்ன வேலை சகோ? தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி[/co]
      [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRuB1RRjJRPhv8BW_mMN9nZq7wcT0hakwFePa_7Wm6S_QMOc6BP[/im]

      Delete
    2. அட!! ஸ்மைலி ரிப்ளை!!! கலங்குங்க பாஸ்:))

      Delete
  8. அருமையான விளக்கம்... நன்றி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. [ma+][im]http://ecx.images-amazon.com/images/I/51zgeRx6TnL._SY300_.jpg[/im][/ma+]
      [ma+]தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வலைச்சித்தரே![/ma+]

      Delete
  9. கானக நாடன் சுனை பற்றி அறிந்து ஆச்சரியப் பட்டேன்.அத்துடன் அதற்கேற்ப திருவள்ளுவரும் திணறி விட்டாரே.
    “ அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும் “ காரணத்தை இப்போ நாங்களே அறிந்து கொள்ள
    வேண்டும். ம்..ம்..ம். உண்மைதான் தீயவர்கள் வாழ்வதும் நல்லவர்கள் நலிவதும் வாழ்வில் நடந்து கொண்டு தானே இருக்கிறது. எவ்வளவு அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள் அதனை.
    எத்தனை விடயங்கள் எத்தனை ஆற்றல் மிகுந்த செயல்கள்.எண்ணிப் பெருமிதம் கொள்ளவைக்கிறது, தங்களின் இடைவிடாத தேடல்களும் தெரிவும் வியக்க வைக்கிறது. தமிழ் அன்னைக்கு செய்யும் தொண்டு மேலும் சிறக்க வாழத்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. [co="green"]இந்தத் திருக்குறள் பிரபலமானதாயிற்றே அம்மா...! உங்களின் பாராட்டு அன்பினால் விளைந்தது என்பதை நான் அறிவேன். தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் என்றும் நன்றி[/co]

      Delete
  10. அஃது எப்படி ஐயா, இலக்கியத் தொடர் ஒன்றை இப்படி மர்மத் தொடர் போல விறுவிறுப்புடன் எழுதிச் செல்கிறீர்கள்! நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. [si="2"]தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா. மர்மத் தொடரா.....? அது போலவா இருக்கிறது ? எனினும் உங்களின் அன்பினுக்கு நன்றி[/si]

      Delete
  11. வணக்கம் அய்யா!

    யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
    தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
    அடிமறி மாற்றுஎனப் பொருள்கோள் எட்டே

    (நன்னூல் - 411)

    1) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
    2) மொழிமாற்றுப் பொருள்கோள்
    3) நிரனிறைப் பொருள்கோள்
    4) விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)
    5) தாப்பிசைப் பொருள்கோள்
    6) அளைமறிப் பாப்புப் பொருள்கோள்
    7) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
    8) அடிமறி மாற்றுப் பொருள்கோள்
    நாலிரண்டு வகையான பொருள்கோள் வரிசையில்,
    "மொழி மாற்றுப் பொருள்கோள்"
    சிறப்பை உணர்த்திய மிகவும் தெள்ளத்தெளிவாக விளக்கிய பதிவு அய்யா இது!

    இனிய முறையில் தந்த விளக்கம், இன்பத்தை இரட்டிப்பாக்கியது அய்யா!
    மீதமுள்ள "பொருள்கோள்" வகைகளை தந்தருளுமாறு வேண்டுகிறேன்!
    அழகிய தங்களது விளக்கத்தை விருந்தாக படைத்திடுவீர்! நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. ஆசானே!
    கானக நாடன் சுனை! பெயரே சொக்க வைகத்து ஈர்க்கின்றது! மூழ்கி, அமிழ்ந்து திளைக்க நினைத்தோம். ஆழமாக இருக்கின்றது. மெதுவாகத் துழாவி, ஆழமறிந்து, இறங்க வேண்டும். அப்போதுதான் அதன் இன்பத்தை உணர முடியும். இது போன்று ஆர்வத்துடன் வாசிப்பதால்தான் அதில் திளைக்க முடிகின்றது. அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலம் என்பது போல், பரீட்சைக்காகப் படித்து எதையோ நோக்கி ஓடும் போது இதை அனுபவிக்க முடியாது. அள்ளி, கல்லூரிக் காலங்கள் அப்படித்தான் ...இப்போது தங்களின் வாயிலாக திளைக்கின்றோம்.
    //தீய எண்ணம் கொண்டவன் அடையும் வளர்ச்சி, நல்ல மனம் உடையவன் அடையும் துன்பம் இதற்கான காரணம்……………………?! அது நினைக்கப்படும்.// ஐயன் திருவள்ளுவருக்கே தீர்வு சொல்ல முடியவில்லையா? ஆம் எல்லோருமே இதற்கான விடையைத் தேடித்தான் அலைந்து கொண்டிருக்கின்றோம். ஆம் ஏன் இப்படி என்று தோன்றத்தான் செய்கின்றது.

    அருமையான, எளிய விளக்கம் வாசித்து வியப்பும் அடைந்தோம்...ம்ம்ம் மீண்டும் மீண்டும் வாசித்து மனதில் நிலைக்கச் செய்ய வேண்டும். ஆசானே!

    ReplyDelete
  13. ஒரு பொருளை எடுத்துக்கொண்டு பன்முக நோக்கில் விவாதிக்கும் விதம் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா.
    செம்மையான சொல்லாற்றல் பொருள் நிறைந்த வரிகளுக்கு அழகு நடையில் பொருள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா.தொடருங்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  15. வணக்கம்!

    அாிய அமுதத்தை அள்ளி அளித்தீர்!
    பொிய புலமையைப் பெற்று!


    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. அருமையான பதிவுகள். நான் பொருள்கோளைப் பற்றி வலையில் தேடிக்கொண்டிருந்த் போது புதையல் கிடைத்தாற்போல் இந்த ப்ளாக் கிட்டியது. தெளிவான சிந்தனைகள்.

    ஒரு சிறிய விளக்கம் : 'உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய' என்னும் செய்யுள் பழமொழி 195 என்று கைவசமுள்ள பதிப்பில் (புலியூர் கேசிகன் உரை) காண்கிறது.

    நன்றி

    ReplyDelete