Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Monday, 20 October 2014

கிழவிப்பாட்டு



என் பள்ளிப்பருவத்தில் என் அத்தையின் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் வீட்டின் எதிரே சாலையின் மறுபுறத்தில் நெடுநாட்களாய் அடைத்துக் கிடந்த அந்தத் தையலகத்தின் வாசலில் உரிமை கோருவார் யாருமற்றுக் கிடக்கின்ற இரண்டு மூட்டைகளைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் நான் அங்குச் செல்லும் நேரம் மாலை மயங்கிய இரவு நேரம் என்பதால் அதைப் பெரிதாகக் கவனித்ததில்லை. அன்று  புறப்படும் போதே மழை பெய்யத் தொடங்கியிருந்து. சைக்கிளில் தொப்பலாய் நனைந்தபடி அத்தையின் வீடடைந்து முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தேன். அழைப்பு மணியை அடித்துக் காத்திருந்த கணத்தில் அந்தத் தையற்கடையின் வாசலில் இருந்த இரு மூட்டையுள் ஒரு மூட்டை சற்று அசைவதுபோலத்தோன்றியது. வானம் பொதிந்த இருளைக் கிழித்தெரிந்த மின்னல் ஒன்றின் ஊடாகப் பார்த்த போதுதான் அது ஒரு மனித உருவம் என்பது  புலனாயிற்று. கண்கள் இருட்டைப் பழகிக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கிய போது அந்த உருவத்தின் அசைவிற்கேற்றவாறு அங்குமிங்குமாய் ஒரே போல் நகர்கின்ற கொசுப் பந்தொன்று அவ்வுருவத்தைச் சுற்றிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. விரட்ட வழியற்று உடல் மறைக்க ஒற்றைச் சேலையைச் சுற்றியடி மழையிலும் கொசுக்கடியிலும் யாராலும் வேண்டப்பெறாத மனித உயிரொன்று கிழிந்த சாக்கில் உடல்கிடத்தி இயற்கையின் ஆவேசத்தில் நடுங்கி நடத்தியஉயிர்ப்போராட்டமாய் அக்காட்சி என் கண்முன் விரிந்தது.

Saturday, 11 October 2014

சம்மனசு டீச்சரும் மயில் டாலர் செயினும்.



எனது இரண்டாம் வகுப்பில் சம்மனசு டீச்சரிடம் படித்தேன்.குட்டையானவர். கொஞ்சம் குண்டுதான். மாந்தளிரின் நிறம். பெரிய சோழியின் தட்டைப் பகுதி போலக் கண்ணாடி , அதன் நடுவே உள்ள கீறல் போன்ற சிறு கண்கள். அருகில் வரும் போதெல்லாம்  வீசும் குட்டிக்குரா பவுடரின் வாசனை. அதற்குப் பின் எங்கே அந்த வாசனை வந்தாலும் மனம் ஒரு முறை சம்மனசு டீச்சரைத் தேடிப்பார்க்கும் .