Pages

Tuesday 10 June 2014

தமிழ் வருவாள்!


கட்டெறும் பேவந்து காலைக் கடித்தெமைக்

     கொன்றுவிட் டோமெனக் கொக்கரிப்போ?

கொட்டிடுந் தேள்களின் கொடுக்கறுத்தே உயிர்

     காத்துப்போ என்றோட்டி விட்டவர்யாம்!

பெட்டைகளே! உங்கள் வீரமெலாம்  எங்கள்

     பெண்களின் மேல்சிறு பிள்ளைகள் மேல்!

வெட்டிட வாள்வரும்!வீரர்தம் தோள்வரும்!
     
        சுட்டிடத் தீந்தமிழ் துள்ளி எழும்!



ஊரற்றுப் போனவர் உறவற்று நிற்பவர்

     உயிர்மட்டும் தானென்ற ஏளனமோ?

வேரற்றுப் போய்விட வில்லையடா!எம்

     விதைகளில் யாதொரு மலடுமில்லை!

வீரச்சரித்திர வகுப்பினி லுன்கொடி
   
     வீழ்ந்து மிதியடி யாய்க்கிடக்கப்

போருற்றுத் துயிலுறும் எங்குலத்தின் வீரப்
   
     படைகள் எழுப்பிடத் தமிழ்வருவாள்!



21 comments:

  1. தங்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  2. வீரம் சொரியும் வரிகள்..
    ஆறுதலும் கூட

    ஒரு கேரளா நண்பர் உங்கள் வீரத்தைப் பாருங்கள் என்று ஒரு டஜன் படங்களை எனக்கு அனுப்பினார் .
    நீண்ட நாட்கள் ஆனது நான் மீண்டு வர..கிட்டத் தட்ட மௌனித்து விட்டேன்..

    நம்புமே வீரம் வெகுண்டு எழும்
    http://www.malartharu.org/2014/05/the-godzila-film-review.html

    ReplyDelete
  3. வார்த்தைகள் எப்படி உங்களுக்கு இப்படி வரிசை கட்டி நிற்கின்றன?
    நல்லதோர் எழுசிக் கவிதை

    உலகத் தரம் இது

    வாழ்த்துக்கள் தோழர்
    http://www.malartharu.org/2014/05/the-godzila-film-review.html

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகள் என்மேல் கொண்ட அன்பினாலென்பதால் ஏற்கிறேன் தோழரே!
      வார்த்தைகளை விட அங்கவருற்ற வலிகள் மோசமானவை.
      எவ்வளவோ முயன்றும் அதன் சின்ன முனகலைக் கூட மொழிப்படுத்த முடியவில்லை என்னும் வருத்தம் எனக்குண்டு.
      நன்றி!

      Delete
  4. ஆதங்கத்தை வெளிபடுத்தும் எழுச்சி நிறைந்த வரிகள் சகோதரா. மிக்க நன்றி! வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றியுடையேன்.

      Delete
  5. Replies
    1. எப்பொழுதும் அதை எதிர்பார்த்தே இருக்க வேண்டும் நண்பரே!
      கண்ணன் பாட்டில் பாரதி சொல்வான்,
      “ வேரும் வேரடி மண்ணுமிலாமலே
      வெந்து போகப் பகைமை பொசுக்குவான்!
      பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள்
      பட்ட துன்பம் கணத்திடை மாற்றுவான்!

      ஆயிரம் ஆண்டுளுக்கு மேலாய், தம் நாடிழந்து ஏதிலிகளாய் உலகெங்கனும் சிதறிக்கிடந்த யூதர்களின் மொழி இன உணர்வால் இது முடியுமென்றால் ....
      நிச்சயம் தமிழால் முடியும். அவள்
      பகைமை பொசுக்குவாள்!
      பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள்
      பட்டதுன்பம் கணத்திடை மாற்றுவாள்!
      அவள் வருவாள்!

      Delete
  6. உண்மையைச் சொன்னால் உள்ளம் நொறுங்கும்.
    நம்பிக்கை வைத்தால் நல்லதும் நடக்கும்.
    வீறுமிகுந்த கவிதை வரிகள் அய்யா. அதிலும்,
    “வெட்டிட வாள்வரும்!வீரர்தம் தோள்வரும்!
    சுட்டிடத் தீந்தமிழ் துள்ளி எழும்!“ எனும்வரிகளில் துள்ளி வரும் தமிழ் நெஞ்சை அள்ளுகிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  7. அய்யா,
    வணக்கம்.
    “இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
    வேண்டாமை என்னும் செருக்கு“
    என்னும் குறளை உலகிற்குச் சொன்னவர் நாம்! வள்ளுவன் வாக்குப் பொய்க்காததனால் தானே அவரைப் பொய்யாமொழி என்கிறோம்.நல்லது நடக்கும் என்னும் நம்பிக்கை அந்த நம்பிக்கை மட்டுமே கால்கீழுள்ள நிலம்போலும் சொந்தமாயில்லாத தமிழ்க்குடியை உலகோடு ஒட்டி வைத்திருக்கிறது.
    நன்றி!

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே!

    தாங்கள் என் வலைத் தளத்திற்கு வந்தமைக்கு
    முதற்கண் என் உளம் நிறைந்த நன்றி!

    இங்கு வந்து பார்த்துப் பிரமித்து நிற்கின்றேன். கவிதை இங்கு அருவியெனக் கொட்டுகிறது... அருமை!
    ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும்.

    இங்கும் உணர்ச்சிமயமான வீரச் செறிவுமிக்க கவிதை!
    மிக மிக அருமை சகோதரரே!

    பேரம் பேசிடப் பேடிகளோ நாம்? - உயர்
    வீரம் வெல்லுமே விரைந்து!...

    உங்கள் புலமைக்குமுன் கற்றுக் குட்டியான நான் பாடுவது சரியில்லை. ஆர்வக் கோளாறினால் ஏதோ கூறிவிட்டேன்.
    பிழை பொறுத்தருள்க.

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
  9. அன்புச் சகோதரி,
    வணக்கம். இழப்பின் வலி பகிரும் எதேச்சையான நமது இருபதிவுகளின் புள்ளியில் தொடங்குகிறது இந்தக் கருத்திடல்கள்.
    இணையத்திற்கு இன்னும் நான் புதியன். பட்டினம் வந்த பிள்ளையென ஒவ்வொரு அதிசயமாய் உங்களை எல்லாம் பார்த்துப் பார்த்து வியந்து நின்று நகர மறுக்கிறதென் வலைப்பயணம். இன்னொரு புறத்திருந்து நீங்களும் என்னை வித்தியாசமாய்ப் பார்த்தாலும் இரு பார்வைகளுக்கும் வேறுபாடுண்டு . புத்கங்களின் வாசனை பிடித்துக் கரையான்களையே உயிரனெக் கண்டிருந்த என் வாழ்நாளில் திடுமென வலைப்பூ தன் மது கவிழ்கக என் பழைய பதிவுகளெடுத்துக் குடைபிடிக்கிறேன்,
    தலைகீழாய்......!
    பிடித்துக் குடிக்க!
    வருகைக்கு நன்றியுண்டு!
    வியத்தல் வேண்டாம். நான் உங்களிடம் கற்க நிறைய இருக்கிறது.
    நன்றி!

    ReplyDelete

  10. வணக்கம்!

    முற்றும் கொடுமை முழுதும் அழிந்திடவே
    பற்றுடன் தந்துள பாட்டு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  11. வணக்கம் அய்யா!

    குற்றம் குணமிரண்டும் காட்டிப்பின் னூட்டமி்டக்
    கற்றுத் தெளியும் கவி!

    வருகைக்கும் கவிதைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. தமிழ் வருவாள்!
    சிறந்த பகிர்வு

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  13. வணக்கம் ஐயா. தங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்மேல் கொண்ட அன்பினுக்கு நன்றி தோழரே!

      Delete
  14. அருமை.வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியுடையேன்!

      Delete