Pages

Monday 1 May 2017

அட! இப்படியும் எழுதலாமா?


தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி நேரம் போவது மாணவர்க்குத் தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியருக்கு மூன்றுமணி நேரம் நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது சற்றுச் சிரமமான பணிதான்.

ஒவ்வொருவரும் இந்த நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள் என்பது தெரியாது. என் பாணி நடந்து கொண்டே, மாணவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டே போவது.

அவர்கள் எழுதுவதைப் பார்க்கப்பார்க்க, நகையும் அவலமும் உவகையும் என மாறிமாறி  என் முகத்தில் தோன்றும் பலவிதமான மெய்ப்பாடுகளை என்னாலேயே உணர முடியும்.

இருமாதங்களுக்கு முன் இத்தகையதொரு பணியில் ஈடுபட்டிருந்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.

தமிழ்த்தேர்வில்,, குறள் ஒன்றை நேர் நிரை எனப் பிரித்துக் கொண்டிருந்த மாணவன், அதற்கு நம்முடைய உத்தியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தான். வெண்பா எழுத அனாவும் ஆவன்னாவும் ஒன்றும் இரண்டும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என ஒரு பதிவெழுதி அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறோம் என்பது அப்பதிவினைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

படிக்காதவர்கள் இங்கே சொடுக்குக யாப்புச்சூக்குமம் 

அதைப்போலவே, கடகடவென மெய்யெழுத்துகளுக்கு அருகில் கோடிடத்தொடங்கினான்.

நெடிலைப் பிரித்தான். குறிலை இணைத்து முடித்தான்.

ஒன்று இரண்டு என்று எழுத்தினை எண்ணி நேர் நிரை என வகைப்படுத்தத் தொடங்கினான்.

நான் என்னவென்று சொல்லமுடியாத உணர்வில் அவன் எழுதுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்குத் தமிழ்சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை நான் நன்கு அறிவேன். எனக்கு அப்போது ஏற்பட்ட திகைப்பிற்கு அளவில்லை. அவர் நம் பதிவைப் பார்த்தாரா அல்லது யாராவது அவருக்கு நம்முறையை அறிமுகப்படுத்தினார்களா? ஆர்வம் தாளவில்லை.

தேர்வு முடிந்தது.

எனக்கோ பொறுமையில்லை.

அம்மாணவனிடமே கேட்டேன். “ இப்படிப் பிரிக்க எப்படிக் கற்றுக் கொண்டாய்? யார் சொல்லிக் கொடுத்தது?”

அவன் பதிலைக் கேட்டதும்தான் எனக்கு  மூச்சே வந்தது.. இதைச் சொல்லிக் கொடுத்தவர் அவனது தமிழாசிரியர் இல்லையாம். அவன் கணிதத்திற்குத் தனிப்பயிற்சிக்குச் செல்லும் இடத்தில் அவனது கணித ஆசிரியர் இம்முறையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். திருவள்ளுவரைப் பற்றிப் பரிமேலழகர் கூறும்போது “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கு இயல்பு” என்பார். அவர் குறிப்பிடுவதைப் போல அந்தக் கணித ஆசிரியரும் இருக்கிறார் போலும் என நினைத்துக் கொண்டேன்.

வாழ்க தமிழ்!

பதிவின் தலைப்பிற்கு வருகிறேன்.

அந்த யாப்புச்சூக்குமம் என்னும் பதிவினை ஒட்டி எத்தனைபேர்  வெண்பா எழுதத் தொடங்கினார்களோ தொடர்ந்தார்களோ என்பது தெரியவில்லை. ஆனால் ஆகச்சுலபமான மரபு வடிவம் அது  என்பதை முயன்ற அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள் என்பது என் எண்ணம்.

வெண்பா எழுதப் பழகுபவர்கள்  முதலில் அதன் வடிவம் சிதையாமல் இருக்கவே அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

அதனை எப்படியும் எழுதலாம் என்பதற்கான சான்றுகள்தான் இவை.

பெயர்களை மட்டும் கொண்டு ஒரு வெண்பா

நெல்லையப்ப பிள்ளை பழனிக்கு மாருபிள்ளை
நல்லசிவன் பிள்ளைகுரு நாதபிள்ளை – செல்லப்
பெருமாள்பிள் ளைநயினா பிள்ளைமுத்துப் பிள்ளை
அருணகிரி நாதபிள் ளை!

( பிள்ளையை விடுங்கள். வருங்காலங்களில் இது போன்ற பெயர்கள் தமிழில் இருக்குமா என்று சற்று நினைத்துப் பாருங்கள்.)

இராகங்களின் பெயர்களால் ஒரு வெண்பா.

தன்யாசி காம்போதி சாவேரி யட்டாணா
கன்னடா நாட்டை கலியாணி – புன்னா
கவராளி சௌராஷ்ட கம்பூபா ளம்பந்
துவராளி தோடி பரசு!

விலங்குகளின் பெயர்களால் ஒரு வெண்பா

நாய்நரிசிங் கம்மாடா னைமிளா பன்றிகடு
வாய்கு திரைக வரிமான்புல் – வாயொட்
டகங்கழுதை யாட்டுக்க டாபுலிகாண் டாமி
ருகங் கரடியெரு மை!

( நாய், நரி, சிங்கம், மாடு, யானை, மிளா, பன்றி, கடுவாய், குதிரை, கவரிமான், புல்வாய், ஒட்டகம், கழுதை, ஆட்டுக்கடா, புலி, காண்டாமிருகம் கரடி எருமை )

பறவைகளின் பெயர்களால் ஒரு வெண்பா.

சக்கரவா  கங்கிளியாந் தைநாரை யன்னங்க
ரிக்குருவி கௌதாரி காடையன்றில் – கொக்குக்
குயில்கருடன் காக்கைபுறா கோழியிரா சாளி
மயில்கழுகு கோட்டான்வவ் வால்!

இவை அனைத்தும் அழகிய சொக்கநாதப்பிள்ளை எனும் புலவர் எழுதியது.

ஊர்ப்பெயர்கள், பழங்களின் பெயர்கள் என நமக்குத் தெரிந்த பெயர்களை எடுத்துக் கொண்டு இப்படி வெண்பாச் சட்டத்தில் மாட்டவேண்டியதுதான். எளிதெனத் தோன்றும். ஆனால்,எதுகையும் மோனையும் முட்டும்பொழுது மேலே புலவன் பட்ட பாடு புரியும். :)

பார்ப்போம்.

தொடர்வோம்.
படஉதவி/நன்றி/-http://tamil.thehindu.com/multimedia/dynamic/02495/masala_2495404f.jpg

33 comments:

  1. நல்ல விளக்கம்

    வெண்பா எமக்கு வர மறுக்கிறதே நண்பா

    மேலும் அறிய தொட(டு)ர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!

      வரும்.

      முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்.

      உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  2. மோடியரசு செய்த மோசடி மூடி வைத்தனர் கேடிகள்.
    எனினும் கோடிகள் கண்டு பிடித்தனர்
    அவையுள் இருப்போர் அனைவரும் கேடிகள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சூக்குமம் பிடிபடவில்லையோ? :)

      தொடருங்கள் நண்பரே!

      Delete
  3. யாப்புச் சூத்திரம் புரிந்ததோ,இல்லையோ ஆந்தை முழி என்பதன் அர்த்தம் புரிந்தது :)

    ReplyDelete
    Replies
    1. ஆந்தை முழி
      என்பது கூட வெண்பாச்சீர்கள்தான் பகவானே!

      தொடர்கின்றமைக்கு நன்றிகள்.

      Delete
  4. நான் பத்தாம் வகுப்புல தமிழ்ல 81, 12 வகுப்புல 173ம் எடுத்தேன். இந்த நேர், நிரை, தேமா, புளிமா படுத்தின பாட்டுலதான் மார்க் குறைஞ்சுது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.ராஜி.

      நீங்கள் இன்னும் யாப்புச்சூக்குமம் படிக்கவில்லை போலிக்கிறது.

      பள்ளியில் தேமாவோடும் புளிமாவோடும் போராடித் தோற்ற ஒருவனின் அனுபவம்தான் அது.

      நிச்சயம் பாருங்கள்.

      நன்றி.

      Delete
  5. கணக்கு வாத்தியாரிடம் மட்டுமில்ல,
    எல்லோரிடமும் எல்லாமும்
    கற்றுக்கொள்லலாம்தானே,,?

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா.

      அதிலென்ன சந்தேகம்?

      நன்றி.

      Delete
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெண்பா பாடத்தைத் திரும்பவும் நினைவு படுத்திக்கொள்ள ஒரு பயிற்சி!
    சொக்கநாத பிள்ளையவர்கள் பாணியில் நானும் மலர்கள் பெயர்களை எழுத முயன்றிருக்கிறேன். இது சரியா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்!
    அரளி பவளமல்லி மல்லிகை முல்லை
    சரக்கொன்றை செங்காந்தள் மந்தாரை வேம்பு
    எருக்கு குறிஞ்சி குவளைமாம் பூசெம்
    பருத்தி கனகாம் பரம்!

    ReplyDelete
  7. ஆர்வம் / ஈடுபாடு எதையும் சாதிக்கும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா.

      அதற்கு மேலே உள்ள பின்னூட்டமே சான்று.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  8. மனிதர்கள், ராகங்கள், விலங்குகள் பெயரில் எல்லாம் வெண்பா! ஆச்சர்யம். ஆனால் அட்டானா அட்டனா ஆகியிருக்கிறது! அந்தக் கணித ஆசிரியர் ஒருவேளை உங்கள் பதிவு படித்திருப்பாரோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீ.

      அட்டனா அட்டானா ஆனாலும் தளைப்பிழை வருகுதில்லை. :)

      மாற்றிவிட்டேன்.

      கணித ஆசிரியராய் இருப்பதால் படித்திருக்கலாம். :)

      வருகைக்கும் கருத்திற்கும் தொடர்கின்றமைக்கும் நன்றிகள்.

      Delete
  9. நிச்சயமாக அந்தக் கணித ஆசிரியர் தங்களின் பதிவினைப் படித்திருப்பார் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கணித ஆசிரியர்தானே கரந்தையாரே! :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. உங்களுடைய பதிவுகளைப் படித்து வருகிறேன்.தங்கள் தமிழ்ப்பணி வாழ்க.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      குறையோ நிறையோ உங்களின் கருத்துகளை என்றும் வரவேற்கிறேன்.


      நன்றி.

      Delete
  11. கணிதமும் தமிழும் கைகோத்தன!
    எளிது போல் காட்டி,எளிதில்லை எனச் சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமென்பதால் இருக்குமோ? :)

      உங்கள் வருகைக்கு மகிழச்சி.

      நன்றி.

      Delete
  12. //தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான்.//
    அதுபோல் நேர்முகத் தேர்வில் தேர்வுக்கு வருபவரைவிட தேர்வை நடத்துபவருக்கும் சுமையான அனுபவம் தான்.

    // அந்த யாப்புச்சூக்குமம் என்னும் பதிவினை ஒட்டி எத்தனைபேர் வெண்பா எழுதத் தொடங்கினார்களோ தொடர்ந்தார்களோ என்பது தெரியவில்லை//
    ஐயா! நானும் தங்களின் பதிவைப் படித்து வெண்பா எழுத கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து எழுதவில்லை. பொங்கல் திருநாள் அன்று மட்டும் வாழ்த்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்!

    திரு சென்னை பித்தன் அவர்கள் சொன்னதில் ஒரு திருத்தம். ஆங்கிலமும் கணிதமும் கைகோர்த்தன என்பது சரியாக இருக்கும். என்னவோ தெரியவில்லை. தமிழாசிரியர்களை விட மற்ற பாட ஆசிரியர்கள்தான் தமிழில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். (தமிழாசிரியர்கள் மன்னிக்க.) இதை நான் சொல்வதன் காரணம் தமிழ் எழுத்தாளராக இருந்த என் அண்ணனும் ஒரு கணித ஆசிரியர்தான்.

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா.

    //அதுபோல் நேர்முகத் தேர்வில் தேர்வுக்கு வருபவரைவிட தேர்வை நடத்துபவருக்கும் சுமையான அனுபவம் தான். // பட்டிருக்கிறேன் ஐயா. :)

    இல்லை ஐயா.
    என் நினைவு சரியாய் இருந்தால்,
    என் பதிவிற்கு முன்னதாகவே நீங்கள் வெண்பா எழுத முயன்றிருக்கிறீர்கள்.

    தங்களின் சகோதரரின் தமிழ்ப்பணி அறிந்து மகிழ்வும் நெகிழ்வும்.

    நன்றியுடன்.

    ReplyDelete
    Replies
    1. நான் S.S.L.C படிக்கும்போது எங்கள் தமிழாசிரியர் குப்புசாமி அய்யா அவர்கள் தான் முதன்முதலில் வெண்பா எழுதக் கற்றுக்கொடுத்தார். ஆனால் அதை தொடராததால் சுத்தமாக மறந்துவிட்டேன். தங்களது பதிவைப் பார்த்துத்தான் திரும்பவும் வெண்பா எழுதக் கற்றுக்கொண்டேன். அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

      Delete
    2. ஓஒ! அப்படியா! மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. யாப்புச் சூக்குமம் மீண்டும் வாசிக்க வேண்டும். ராகங்கள், விலங்குகள் பவ்யரில் எல்லாம் வெண் பாக்கள் வியப்பு....அந்தக் கணித ஆசிரியர் உங்கள் பதிவைப் படித்திருக்க வேண்டும்..ஒரு வேளை நாம் அறியாத பதிவராகக் கூட இருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      நிச்சயம் வாசியுங்கள் சகோ. எனக்குப் பிடித்த பதிவுகளுள் ஒன்று அது.

      அவர் எம்பள்ளி ஆசிரியர் அல்லர். அதனால் எப்படி அறிந்தார் எனத் தெரியவில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  15. நான் உங்கள் யாப்புச் சூக்குமம் தொடரை இன்னும் படிக்கவில்லை ஐயா! :-) படிப்பது வேறு, பயில்வது வேறு. யாப்புச் சூக்குமம் இரண்டாவது வகை. அதுவும் வெறுமே பயின்றால் மட்டும் போதாது; பழகவும் வேண்டும்! இவ்வளவுக்கும் நேரம் வேண்டும்! அதுதான் வாய்க்க மாட்டேன்கிறது! வருந்துகிறேன்!

    அந்தக் கணித ஆசிரியர் ‘ஊமைக்கனவுகள்’ படிப்பவராக இருக்கலாம். அப்படி இருந்தால் உங்களுக்குச் சிறப்பான நேயர் கிடைத்திருக்கிறார் என நீங்கள் மகிழலாம். அப்படியில்லாவிடில், மேதைகள் ஒன்று போல் சிந்திப்பார்கள் எனும் ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப அவரும் உங்களைப் போலச் சிறந்த தமிழாய்வாளராக இருப்பார். அப்படி இருப்பின், அவரை நீங்கள் நண்பராக்கிக் கொண்டால் உங்களுக்கு மிகச் சிறந்த நண்பர் ஒருவர் கிடைப்பார். என்ன நான் சொல்வது?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      நிச்சயம் வாசியுங்கள். கொஞ்சம் பயிற்சி தேவைப்படும் அவ்வளவே! உங்களால் கூடும்.
      அவர் எங்கள் பள்ளி ஆசிரியர் அல்லர். படிக்கலாம். யாரேனும் பகிர்ந்திருக்கலாம்.
      தமிழாய்வாளராக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் வாசிக்க நிச்சயம் அவருக்கு நேரம் இருக்காது. பள்ளிநேரம் தவிர காலையும் மாலையும் ஆறு தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்துபவர் அவர்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  16. ஆசிரியர்களில் பலர் தமிழ் தேர்ச்சி பெறுவதற்கு எளிது என பட்டப் படிப்பில் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை விரும்பிப் படிப்பவர்கள் படைப்பவர்கள் பிற துறையை சார்ந்தவர்களாக இருப்பது உண்மைதான்.நீங்கள் ஆங்கில ஆசிரியர்.ஆனால் தமிழில் உங்கள் ஞானம் தமிழ் முறையாகப் பயின்ற அறிஞர்களுக்கு சற்றும் குறைவில்லை..

    ReplyDelete