Saturday 6 May 2017

அந்தக்கால ஆண்களின் சிகை அலங்காரங்கள்.


இது என்னடா முடி பற்றிய ஆராய்ச்சியா என்று கேட்டால் ஆம் அது பற்றியும் ஆராயத் தமிழில் நிறைய இடமுண்டு என்பதுதான் பதில்.

அந்தக் காலத்தில் ஆண்கள் குடுமி வைத்திருந்தார்கள் என்பது நம்மிடையே நிலவும் பொதுக்கருத்து, ஆனால் குடுமி மட்டுமா வைத்திருந்தார்கள்? வேறு எந்தவிதமான சிகை அலங்காரமும் செய்து கொள்ளவில்லையா என்றால் செய்து கொண்டிருந்தார்கள். அது பற்றியதுதான் இந்தப் பதிவு.

அதற்குமுன் இந்த ஆராய்ச்சிக்குள் நான்  நுழையக் காரணமான ஒரு பாடலைப் பார்த்துவிடுவோம். நாலடியாரில் வரும் நயமிக்க பாடல்களுள் ஒன்று.

குஞ்சி  அழகும்  கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் ழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி ழகே ழகு

இதில் உள்ள குஞ்சி என்னும் சொல் ஆண்மயிரினைக் குறிப்பதாகப் பொருள் உரைக்கப்படுகிறது. பாடலின் பொருள் அழகானது.

பொதுவாக,

ஆண்களின் தலைமயிர் அழகும், மடித்த ஆடையின் சரிகை அழகும் மஞ்சள் முதலாயின கொண்டு மேலே பூசிக்கொள்ளும் அழகும் உண்மை அழகல்ல. கல்வியினால் பெற்ற அறிவு கொண்டு, நாம் கற்றறிந்ததன்படி நல்லனவே செய்து கொண்டிருக்கிறோம் என்று ஒருவனது மனதில் தோன்றும் எண்ணம் உடையவனாதலே அழகு என்பது இதன் பொருள்.

பாடலின் அழகு இவ்வளவுதான் என அதற்கு உரையெழுதியவர்கள் விடவில்லை.

ஆண்களின் அழகிற்கு உரியதான குஞ்சியை முதலிலும், பெண்களின் அழகிற்குரியதான மஞ்சள் அழகை இறுதியிலும் இருவர்க்கும் பொதுவான ஆடை அழகை இடையிலும் வைத்துக் கூறப்பட்டுள்ளதால், இந்தப்பாடல் , ஆண்-பெண் இருபாலருக்கும் கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்று குறிப்பிடுகிறது என ஒரு பொருள் சொல்லப்படுகிறது.

குஞ்சி, உடை, மஞ்சள் முதலியவை அவற்றை உடையவர்களுக்கு இன்பம் தருவன அல்ல. அவை அவற்றைப் பார்ப்பவர்களுக்கே இன்பம் தருவன.  ஒருவனது மனதிற்கு இன்பம் முதலான பெருமிதத்தைத் தருவது கல்வியே! எனவே அதுதான் உண்மையான அழகு என்பதும் ஒரு பொருள்.

சரி நாம் பதிவின் தலைப்பிற்கு வந்துவிடுவோம்.

உளை, தளை, குழல், பங்கி, தொங்கல், நவிர், கார், குடுமி, குஞ்சி, சிகை, பித்தை, ஓரி என்பன, அந்தக் காலத்தில் ஆண்களின் தலைமுடியைக் குறிக்க வழங்கப்பட்ட சொற்களாகும்.

ஒரு பொருள் குறிக்க வழங்கப்பட்ட பலசொற்களாக இவை காணப்பட்டாலும்,  இவற்றிடையே நுண்ணிய வேறுபாடு உண்டு.  நான் அறிந்த வேறுபாடுகளைக் கீழே தருகிறேன..

உளை –  பிடறி வரை வளர்த்து நறுக்கப்பட்ட முடி.

தளை – பின்னலிட்டுக் கட்டப்பட்ட முடி.

குழல் – தலையைப் பின்னி உச்சியில் சுருட்டி முடிக்கப்படுவது.

பங்கி – நறுக்கி வெட்டப்பட்ட முடி.

தொங்கல் – முடித்துக் கட்டாமல் தலைமுடியைத் தொங்க விடுவது.

நவிர் – உச்சி முடி.

கார் – கருமையான முடி

குடுமி, குஞ்சி, சிகை – இவை  குடுமியாய் முடிந்த முடியின் நிலையைக் குறிப்பிடுவன.

மயிர், முடி என்பன இதன் பொதுப்பெயர்.

ஓரி, பித்தை இந்தச் சொற்கள் ஆண் முடி என்பதைக் குறிக்கப் பயன்பட்டாலும் வேறுபாடு தெளிவாகப் புலப்படவில்லை.

இவற்றுள் சில சொற்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவாகவும் வழங்கப்படுகின்றன.

ஆண்களைவிடப் பெண்கள் இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இல்லையா?

அவர்கள் கூந்தலின் வகைகள் என்ன?  எப்படியெல்லாம் கூந்தலை அலங்கரித்திருப்பார்கள்..?

முடிபற்றிப் பேசும்போது மொட்டை பற்றி ஏதேனும் தமிழில் சொல்லப்பட்டிருக்கிறதா?


நம்முடைய இதுபோன்ற ஆராய்ச்சிகளையும் இடையிடையே நடத்துவோம். :)

தொடர்வோம்


பட உதவி - நன்றி- கூகுள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

32 comments:

  1. பங்கி என்பதுதான் இன்றைய நாகரீகத்தில் பங்க்ஸ் என்று மாற்றி விட்டார்களோ...

    மீசையைக் குறித்து ஏதும் உண்டா கவிஞரே ?

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      பங்கிதான் பங்க் ஆ எனத்தெரியவில்லை.

      மீசை குறித்து உள்ளது.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. பங்கி எனும் சொல்லைப் படித்ததும் இதே ஐயம் எனக்கும் எழுந்தது. இது மிகுந்த ஆராய்ச்சிக்குரியது.

      Delete
    3. மீ - உயரம்
      ச - பரப்பு

      பரப்பில் இருந்து உயர இருப்பதால் மீசை,

      சிந்து நதியின் மீ மிசை நிலவினிலே

      Delete
  2. எத்தனை வார்த்தைகள்? எவ்வளவு நுண்ணிய வேறுபாடு? குடுமி பெருவழுதி என்பது போல ஒரு பாண்டிய மன்னனின் பெயர் இருந்ததோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீஃ

      பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றொரு சங்ககாலப் பாண்டியமன்னன் பெயர் இருந்தது. ஆனால் அங்குள்ள குடுமிக்கும் இங்கு நாம் பேசும் குடுமிக்கும் தொடர்பில்லை. அக்குடுமி தலைவன் என்று பொருள்படும் குடும்பன் என்னும் சொல்லின் திரிபு.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. வணக்கம்
    ஐயா

    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. முடி பற்றிக் குறிக்க இத்தனை வார்த்தைகளா
    தமிழின் மேன்மை வியக்க வைக்கிறது நண்பரே
    தொடருங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தையாரே!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  5. முடியைப் பற்றி ஒரு நல்ல அலசல். புதுப் புதுச்சொற்கள். இப்போதுதான் அறிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் அவர்களே!

      Delete
  6. அட! சிகை ஆராய்ச்சி! பல சொற்கள் புதியவை. பங்கி .இது தற்போதைய...பங் என்று இளைஞர்கள்... முடியைத் திருத்திக் கொள் வதோ....
    உங்கள் பதிவுகளை நிதானமாகப் படிக்க வேண்டும்...பயணத்தில் இருந்ததால் முடியவில்லை. மீண்டும் வருகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே!

      பங்கிற்கும் பங்கிக்கும் தொடர்புண்டா என்பது பற்றித் தெரியவில்லை.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  7. உங்களால் நாங்களும் புதிய வரத்தைகள் கற்ருக் கொண்டோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. உண்மையான அழகு குறித்து நாலடியார் பாடலின் விளக்கம், பயன்படுத்திய உவமானங்கள் அருமை. முடி பிடித்து இழுத்து பொருள் புகட்டினீர்!

    ReplyDelete
    Replies
    1. பதிவின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!

      Delete
  9. உளை, தளை, குழல், பங்கி, தொங்கல், நவிர், கார், குடுமி, குஞ்சி, சிகை, பித்தை, ஓரி என்பன, அந்தக் காலத்தில் ஆண்களின் தலைமுடியைக் குறிக்க வழங்கப்பட்ட சொற்களாகும்.
    ஆண்களின் முடியைக் குறிக்கவே இவ்வளவு சொற்களா? அவர்கள் பழங்காலத்தில் குடுமி வைத்திருந்தார்கள் என்றே நினைத்திருந்தேன். சுவையான ஆராய்ச்சி தான். பெண்களின் முடியலங்காரம் குறித்தும், மொட்டை குறித்தும் அறிய ஆவல். தொடர்கிறேன்.நன்றி வணக்கம் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  10. முடி வில்லா ஆராய்ச்சி.
    அவர்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. ////முடி வில்லா ஆராய்ச்சி.
      அவர்கள் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?////
      ஆம் ஐயா.
      இது முடிவில்லா ஆராய்ச்சிதான்.

      மிக்க நன்றி.

      Delete
  11. அடி முதல் முடி வரை என்பார்கள். நீங்கள் முடியிலிருந்து தொடங்குகிறீர்கள். அறுக்காமல் வளர விட்டால் அடியைத் தொடாதோ முடி?... தொடர்ந்து படிக்கிறேன்.

    இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. பாதாதி கேசமுண்டெனில் கேசாதிபாதமும் உண்டுதானே ஐயா. :)

      //அறுக்காமல் வளர விட்டால் அடியைத் தொடாதோ முடி?//

      தொடாது ஐயா.

      முடிந்து கொள்வதனால் அது முடி யெனப்படும்போது அதெப்படி அடிதொட முடியும்.:)

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. ஆஹா! ஆச்சர்யப் படுத்துகிறீர்கள். உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்குக் கிடைத்த புதையல்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம் பெரிது.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  13. மிக அருமையான ஆராய்ச்சி ஐயா! கலக்கி விட்டீர்கள்!

    தமிழில் ஒரே பொருளின் / செயலின் பல்வேறு நிலைகளைக் குறிக்க இப்படி நுட்பமான வேறுபாடு கொண்ட சொற்கள் நிறையவே உண்டு. ஆனால், அவற்றின் நுட்ப வேறுபாடுகள் அவ்வளவாகப் பதிவு செய்யப்படாமையினாலோ என்னவோ இப்படிப்பட்ட பெரும்பாலான சொற்களை ஒருபொருட்பன்மொழி எனச் சொல்லி விடுகிறார்கள். ஆகையால், ஆங்கிலத்தில் உள்ள மிக நுட்பமான பொருள் வேறுபாடு கொண்ட இத்தகைய சொற்களைப் பார்க்குந்தோறும் தமிழிலிருக்கும் இந்த அரிய சொற்களஞ்சியத்தை வீணடிக்கிறோமே எனும் வேதனை எழுகிறது. தங்களுடைய இந்த ஆராய்ச்சி அந்த வேதனைக்கு நல்ல ஆறுதல் மருந்து. தொடர்ந்து மருந்திட வேண்டுகிறோம்!

    இந்த இடத்தில் நேயர் விருப்பம் ஒன்று! சொல்லுதல் எனும் செயலின் இப்படிப்பட்ட பல்வேறு நிலைகளைக் குறிக்க பேசுதல், மொழிதல், கூறுதல், புகலுதல் என மொத்தம் நாற்பது சொற்கள் உண்டு எனக் கூறுகிறார்கள். நீங்கள் ஏற்கெனவே இவற்றுள் சிலவற்றைப் பட்டியலிட்டுப் பொருள் வேறுபாடு கூறியிருக்கிறீர்கள். மொத்தமுள்ள நாற்பது சொற்களுக்கும் அப்படிப் பொருள் வேறுபாடு தொகுத்துத் தாங்கள் வெளியிட வேண்டுமென்பது என் வேணவா! (இப்படிப்பட்ட சொற்களையெல்லாம் உங்களைப் போன்ற ஓரிருவரிடம்தான் பயன்படுத்த முடியும்)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தமிழின் நுட்பமான பொருள் வேறுபாடு கொண்ட சொற்களின் வேறுபாடுகளை நமக்கு மிகத்தெளிவாக வகைப்படுத்திக் காட்டுகின்றவர்கள் பழைய உரையாசிரியர்களே! இன்று வேர்ச்சொல் ஆய்வின் மூலமாக ஒருசில சொற்கள் தரும் நுணுக்கமான வேறுபாட்டை நம்மால் அவதானிக்க இயலும்.

      தங்களின் வேணவாவை நிறைவேற்றக் கூடுமானவரை முயல்கிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி ஐயா!

      Delete
  14. ஆண்களின் முடி அலங்காரம் பற்றி இவ்வளவு விரிவாக எழுத தங்களால் மட்டும் தான் முடியும். இதுவரை அறியாத சொற்களை அறிந்துகொண்டேன்.

    ஆண்கள் பின்னலிட்டு கட்டப்பட்ட முடியை தளை என அறிகிறேன். அப்படியென்றால் சடை என்பதும் அதைத்தான் குறிக்கிறதா? அல்லது அந்த சொல் பெண்களின் தலை அலங்காரத்தை மட்டும் குறிக்கிறதா? என்பதை விளக்க வேண்டுகிறேன்.

    ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் உள்ள ஜடா என்பதும் சடையைத்தான் குறிக்கிறதோ என்ற ஐயத்தால் ஏற்பட்டதால் தான் இந்த வேண்டுகோள்.

    பெண்கள் முடி அலங்காரம் பற்றியும், மொட்டை பற்றியும் அறியக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா.

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எனக்களிக்கும் ஊக்கத்திற்கும் முதலில் நன்றி.

    ஆண்களின் முடி அமைப்பினைக் குறிக்கவும் பெண்களின் முடியமைப்பினைக் குறிக்கவும் தனித்தனிப் பெயர்கள் தமிழில் உள்ளது போலவே, இருபாலினரின் முடி குறித்துச் சுட்டப்பெறும் பொதுப்பெயர்களும் உண்டு.

    சடை என்பது ஆண் பெண் இருவரின் முடியினைக் குறித்தும் இலக்கியப் பயன்பாட்டில் உள்ளது.

    சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியன் பெயரில் உள்ள சடை என்பது முடிபற்றிய அடைமொழியா அன்றி முடிசூடுதல் பற்றிய அடைமொழியா என்பதை ஆராய வேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
  16. மிக அழகாக எழுதி இருக்கீர்கள்

    ReplyDelete