Wednesday 5 October 2016

அம்மா பெரிதென்று….!

பதிவுலகில் நுழைந்த புதிதில் பல்வேறு தளங்களுக்கும் சென்று பலருடைய பதிவுகளையும் வாசித்து மனதிற்பட்டதைப் பட்டவாறே பின்னூட்டம் இட்டு வந்திருக்கிறேன். சில இடங்களில் மூக்குடைந்து போனதும் உண்டு.

அதன்பின் என் நலனில் அக்கறை கொண்ட என்னை இப்பதிவுலகிற்கு ஈர்த்தோர் அறிவுரை காரணமாகக் கருத்துக்களை வளவளவென்று எழுதிச்செல்வதையும் மாற்றுக்கருத்துக்களைக் கூறுவதையும் பெருமளவில் தவிர்க்கப் பழகினேன்.

சில நேரங்களில் இந்தக் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுமாறு சில பதிவுகள் அமைந்துவிடும். நம்மைப்புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அப்பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

அப்படிப்பட்ட பதிவுதான் சகோதரப்பதிவர் ஞா.கலையரசி அவர்கள் எழுதிய
“ இன்று சிட்டுக்குருவி நாளை நம் சந்ததிகள்” என்னும் பதிவு. பதிவினைப்படிக்க இங்கே சொடுக்கவும்

அதற்கான என் பின்னூட்டம் இது,

“உங்களைப் போன்றவர்களின் இதுபோன்ற சிந்தனைகளும் பதிவுகளும் இன்றய உலகில் அத்தியாவசியத் தேவை உள்ளவை. இந்த வகையில் உங்கள் பதிவின் செய்திகளையும் சிட்டுக் குருவிகளின் நலனுக்கான ஏறெடுப்பையும் மகிழ்வுடன் காண்கிறது மனம்.

தற்பொழுதெல்லாம் நீளமான பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கிறேன். சில சங்கடங்களை அதனால் தவிர்க்க முடியும் என்பதால்.....:)) ஆனால் இப்பதிவைப் படித்து முடிக்கும் முன்பாகவே எழுத வேண்டிய பின்னூட்டம் மென்மேலும் விரிந்து செல்லும் என்பதை என்னால் அனுமானிக்க முடிந்தது. இம்முறை நான் அவற்றைத் தவிர்க்க நினைக்கவில்லை. நினைக்கும் எல்லாவற்றையும் சொல்ல இயலாவிட்டாலும் அவற்றை மட்டுப்படுத்தி ஒரே ஒரு செய்தியை மட்டும் பகிர்தல் அவசியம் என்று நினைக்கிறேன். அதற்கு முன் இந்த இயற்கைச் சங்கிலி…………… சரியாக அதனைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நினைத்துப் பார்த்தால் மனிதர்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும். நிச்சயம் நன்றாகவே இருக்கும். ஏனெனில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தம் தேவைக்குக் கிடைப்பது போதும். எல்லாம் வேண்டும் எனும் பேராசை அவற்றிற்கு இல்லை. மாறாகத் தாவரங்களும் விலங்குகளும் ( பறவைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இல்லாத உலகில் மனிதர்கள் இருக்க முடியுமா...?

இங்கு அவைதான் மனித குலத்திற்குத் தேவையே தவிர நாம் அவற்றிற்குத் தேவையே இல்லை என்கிற உணர்வு முதலில் நமக்கு வேண்டியது.

மனிதர்களுக்கு சிட்டுக்குருவி அழிந்தால் என்னஅன்றில்”  மறைந்தால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது....? அல்லது அது தொலைதலால் மனித இனம் மாண்டழியப்போகிறதா என்கிற எண்ணம் இருக்கிறது.

ஆனால் ஒரு சிறு பறவை இனத்தின் அழிவு இயற்கைச் சங்கிலியை எவ்வாறு சிதைக்கிறது என்பதை அவர்கள் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அது 1970 களில் அமெரிக்க சூழலியலாளர் ஸ்டான்லி என்பவர் தாவர இனங்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மொரீஷியஸ் தீவிற்குச் செல்வதில் இருந்து தொடங்குகிறது.

அங்கு செல்லும் அவர் மொரீஷியஸ் காடுகளில் மட்டுமே காணப்பட்ட ஒரு விசித்திர மரவகையைப் பார்க்கிறார். அம்மரத்தின் பெயர் கால்வரியா மேஜர். வேறெங்கும் காண முடியாத அம்மரங்கள் மொரீஷியஸ் தீவில் மொத்தம் 13 தான் இருக்கிறது.

ஒவ்வொரு மரத்தின் வயதும் 300 ஆண்டுகளுக்கு மேல் .அவையும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்தவை. அழிந்து போனால் உலக தாவர இனத்தில் மீட்டெடுக்க முடியாத அழிந்த வகைகளுள் அப்பெயரும் சேர்க்கப்பட்டுவிடும்.

300 ஆண்டுகளாக அம் மரம் இனப்பெருக்கம் செய்யவில்லையா ? ஏன் அதன் கன்றுகள் இல்லை. வேறு மரங்கள் இல்லை என்று ஆய்கிறார்.

அம் மரங்களின் விதைகள்.... பதியனிடல் போன்ற பல வகைகளில் முயன்றும் அம்மரவகையை இனப்பெருக்கம் செய்ய அவரால் முடியவில்லை.

அவரது மனம் மிகத் தளர்கிறது.

விதையின்றியோ பதியனின்றியோ வேறுமுறைகளிலோ இந்த மரம் பெருகவில்லை என்றால் வானத்தில் இருந்து யாராவது கொண்டு இதனை நட்டிருக்கவா முடியும்.....?!!!!

நீண்ட ஆய்வுக்குப் பிறகு அவரால் அம்மரங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமைக்கான விடை கிடைக்கிறது.

அது டூடூ என்னும் பறவை அழிந்ததன் வரலாறு….!

பதினைந்தாம் நூற்றாண்டில் நாடுபிடிக்கும் வெறியுடன் அலைந்த போர்ச்சுகீசியர்களாலும் டச்சுக்காரர்களாலும் துண்டாடப்பட்ட தீவு மொரீஷியஸ்.

சூழ்நிலையின் சொர்க்கமாக விளங்கிய அத்தீவில் அவர்களின் கவனத்தைக் கவர்ந்த ஒரு விடயம் உண்டென்றால் அதுதான் இந்தப் பறவைதான். கோழியைப்போன்ற, குட்டையான,, மனிதர் எவ்வளவு கொடியவர்கள் என்று அறியாமல் ஸ்னேகபாவம் காட்டி அவர்களை நெருங்கிய அப்பாவிப் பறவை.
அவர்களுக்கு வியப்பாய் இருந்தது.

அட நம்மைக் கண்டு அஞ்சாத பறவையா…..? நம்மைப் பற்றித் தெரியாமல் இவ்வளவு அப்பபாவிகளாக இவை இருக்கின்றனவே என்ற பொருள்படும் போர்ச்சுகீசச் சொல்லான “Doudu“ என்ற பெயரில் அதை அழைத்த ஐரோப்பியர்கள் தானே விரும்பி வந்து சிக்கும் எண்ணற்ற அந்தப் பறவைகளைப் பிடித்து உண்ணத்தொடங்கினர். மிக வேகமாக அவ்வினம் அதன் சுவைக்காகவும் மனிதனின் பேராசையை, சுயநலத்தை எடையிடத் தெரியாத அப்பறவைகளின் அறியாமைக்காகவும் வேட்டையாடப்பட்டன. ஐரோப்பியர்கள் கொண்டுவந்த பன்றிகள், அப்பறவைகள் மண்ணில் தோண்டி இட்ட முட்டைகளையும் மிச்சமில்லாமல் தேடிச் சிதைத்தழித்தன.

இப்படியாகப் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் மொரீஷியஸ் தீவில் மட்டுமே வாழ்ந்த டூடூ என்றழைக்கப்பட்ட அப்பறவை இனத்தின் கதை உலக இயற்கைச் சூழலிடமிருந்து தன்னைக் கண்ணீரோடு விடுவித்துக் கொண்டது.
தாங்கள் செய்வது இன்னது என எப்போதும் போல் அறியாமல் நிகழ்ந்த மனிதத் தவறு இது.

சரி அதற்கும் இந்தக் கால்வரியா மேஜர் மரத்தின் இனப்பெருக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்றால்…………………?  இருக்கிறது!

ஸ்டான்லி அதைத்தான் கண்டுபிடித்தார்.

டூடூ பறவைகளின் முக்கிய உணவே இம்மரத்தின் உதிர்ந்து விழும் காய்கள்தான். இம்மரத்தின் அவ்விதைகள் கடினமான ஓட்டினை உடையவை.
சாதாரணமாக மண்ணில் விழுந்தால் அம்மரவிதைகளின் உட்கரு கடினமான அதன் வெளியோட்டைத் துளைத்து முளைக்க முடியாது.

அந்த வெளியோட்டின் கடினத்தை நீக்கி மென்மையாக்கும் பணியைத்தான் டூடூ பறவைகள் செய்தன.

டூடூ பறவைகளின் பெருங்குடல் அந்த வேலையைச் செய்தது. விதையின் உட்கருவிற்கு எந்தப்பாதிப்பும் நேராமல் அதன் வெளியோட்டில் இருந்து தனக்கான உணவைப் பெற்று அவ்விதைகளை அடைகாத்து மண்ணிற்களித்தது அப்பறவை.

டூடூ பறவையின் கழிவிலிருந்து மட்டுமே கால்வரியா மேஜரின் விதைகள் முளைவிடும்.

தன்முட்டைகளோடு தாவர வித்துகளையும் உயிர்மீட்டு அளிக்குமொரு பறவை.

மரம் பறவையோடு செய்திருந்த உயிர்த்தலின் ஒப்பந்தம் அது.

இயற்கைச் சங்கிலி என்று நாம் சொல்வது நமக்குத் தெரியாமல் நடைபெறும் இதுபோன்ற பல பரிபாஷைகளைத்தான்.

அது அழிந்தது.

கனவுகளோடு கால்வரியா மேஜரின் கணக்கற்ற விதைகள் உயிர்க்கக் காத்திருந்து காத்திருந்து உயிர்ப்பூட்டுவாரின்றிக் கருவிலேயே கண்ணடைத்துவிட்டன.

அம் மரக் காடுகள் அழிந்தன.

பறவை அழிந்தது.

மனிதன் தன்னை மட்டுமே நினைக்கின்ற பேராசையோடு அடுத்தடுத்த தாவரத்தை, பறவையை, விலங்கை நோக்கித் தன் கண்களைத் திருப்புகிறான்.
இன்னும் தொடர்வது முறையாக இருக்காது என்பதால், நிறைகிறேன்.
தொடருங்கள்.

தொடர்கிறேன்.

நன்றி.”

இவ்வளவுதான் அந்தப் பின்னூட்டம்.

சகோ. கலையரசி அவர்கள் என் கருத்துக்களை வரவேற்றிருந்தார்கள்.

அந்த உரிமை அதன்பின்னும் தொடர்ந்தது.

இப்பொழுது, அவர்களின் தற்போதைய மொழிபெயர்ப்பொன்றிற்கு நானிட்ட பின்னூட்டம் ஒன்றை என் தளத்தில் பதிவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.

அம்மொழியாக்கத்தில் எனக்கு முழுநிறைவில்லை எனினும் சகோதரி விரும்பியபடி அப்பின்னூட்டத்தின் ஒருபகுதியை இங்குப் பகிர்கிறேன்.

பாப்பி பூக்கும் ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்.

பாப்பி மலர்அலை ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்!
சாப்புதை சிலுவை களினிடை போய்வரும்!
மண்ணில் புதைந்த மாசறு வீரம்
விண்ணில் வானம் பாடிகள் பாடித்
துப்பாக் கிகளின் துணிச்சல் அடக்கும்!.

அன்றங் கிருந்தோம்! இன்றிங் கிறந்தோம்!
என்றெம் விடியல்? மடிந்தும் ஒளிர்ந்தோம்!
அன்பு செய்தோறும் செயப்பட் டவரும்
இன்று ஃபிளாண்டர்ஸ் போர்சவக் குழிகளில்….!

வெம்பகை அழிக்க வீரர்காள் வருக!
எம்கை தீபம் ஏந்துக நும்கை!
உமக்கே இனியது! உயர்கநும் கரங்கள்!

அன்றி,

இறந்தவர் சொல்லிதென் றிகழ்வீ ராயின்
பறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்
உறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்!


பாடலின் ஆங்கில மூலத்திற்கும் சகோ.கலையரசி அவர்களின் மொழியாக்கமும் கண்டு உங்கள் கருத்தைப் பதிய வேண்டுகிறேன்.


ஆமாம் இந்தப் பதிவின் தலைப்பு……?

பொதுவாக,

நம்மைவிட எதிலேனும் குறைந்தவர்களை நோக்கி நம்மிடம் இதாவது இருக்கிறதே நாம் பரவாயில்லை என்று மகிழ வேண்டுமாம்.

அதேநேரம்,

கல்வி, வாசிப்பு, அறிவு என்று வரும்போது இந்த ஒப்பீட்டைக் கொள்ள முடியுமா?

அதற்கு வெறொரு ஒப்பீடு இருக்கிறது.

அது,

நம்மைவிட அறிவில் உயர்ந்தவர்களை நோக்க “ஐயோ! இவர்களுக்கு முன் நாம் எம்மாத்திரம்?“ என்று நினைக்க வேண்டுமாம்.

குமரகுருபரரின் எனக்குப் பிடித்த அந்தப் பாடல்,

“தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினுங்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே இவர்க்குநாம் என்று”

தமிழில் பல்துறைப் புலமையுடன் இயங்கும் பல பதிவர்களை நோக்க, அம்மா பெரிதென்றெங்கே..? “ எப்போதும் எற்றே இவர்க்கு நாம் என்று? ” என்றுதான் நெஞ்சோடுகிறது.

தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://2.bp.blogspot.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

36 comments:

  1. உங்களின் பின்னுட்டம் பல தகவல்களை சொல்லி சிந்திக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

      Delete
  2. அருமையான விளக்கம் நண்பரே, இந்தப் பறவை குறித்து நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். இதுபோக பயணிப் புறா என்ற இனம் அழிந்தது பற்றியும் எழுதியிருக்கிறேன். நேரம் கிடைத்தால் படித்துப்பார்த்து கருத்திடுங்கள்.

    http://senthilmsp.blogspot.com/2016/02/blog-post_16.html

    http://senthilmsp.blogspot.com/2016/03/blog-post_9.html

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      தங்களின் பதிவுகள் இரண்டும் பார்த்தேன்.

      நான் இந்தப் பதிவின் இறுதியில் சொல்லி இருப்பது உங்களுக்கும் பொருந்தும்.

      பல்துறை ஆளுமையாளர்களுள் நீங்களும் ஒருவர்.

      இப்பறவையின் பெயர் டோடோ என்பதை ஒரு பதிவரும் குறிப்பிட்டிருந்தார்.

      ஒரே ஆறுதல் உங்கள் பதிவிற்கு முன் நான் முந்திக்கொண்டு பின்னூட்டம் இட்டுவிட்டேன் என்பதுதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள.

      Delete
  3. கொடுக்கல் வாங்கல் அருமை ,தொடரட்டும் :)

    ReplyDelete
    Replies
    1. அளித்தல் பெறுதலும்...நன்றி பகவானே!

      Delete
  4. டூடூ பறவையும் அதன் அழிவினால் அழிந்த மர வகையும் பற்றி ‘அறிவுச் சுரங்கம்’ எனும் நூலில், ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். ஆனால், அந்த மரத்தின் பெயர் தவிர மற்ற அனைத்தும் இன்று வரை நினைவில் இருக்கின்றன. அந்த அளவுக்கு மனதைப் பாதித்த செய்தி!

    பிறப்பு என ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் கட்டாயம். இது பூமியில் வாழும் உயிர்களுக்கு மட்டுமில்லை, இந்தப் பேரண்டத்தில் உள்ள அனைத்துக்கும் பொருந்தும். அவ்வகையில் பூமிக்கும் இது பொருந்தும். நீங்கள் கூறுவது போல் மனிதன் எனும் உயிரினம் தோன்றியிராவிட்டால் அப்புறம் இந்தப் பூமிக்கு ஏது அழிவு? அதனால்தான் இயற்கை மனிதனைப் படைத்தது! :-D

    Just a try to do a black humor!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      சுற்றுச்சூழல் பற்றி அக்கறையும் ஆர்வமும் கொண்டவனாக இருக்கிறேன். அது பற்றிய செய்திகளை அறிவதும் பகிர்வதும் மனத்துயர்தான்.

      //பிறப்பு என ஒன்றிருந்தால் இறப்பு என்பதும் கட்டாயம். இது பூமியில் வாழும் உயிர்களுக்கு மட்டுமில்லை, இந்தப் பேரண்டத்தில் உள்ள அனைத்துக்கும் பொருந்தும். அவ்வகையில் பூமிக்கும் இது பொருந்தும். நீங்கள் கூறுவது போல் மனிதன் எனும் உயிரினம் தோன்றியிராவிட்டால் அப்புறம் இந்தப் பூமிக்கு ஏது அழிவு? அதனால்தான் இயற்கை மனிதனைப் படைத்தது! // :)

      மிக்க நன்றி. இங்கும் சகோவின் தளத்திலும் படித்துக் கருத்திடுகின்றமைக்கு.

      Delete
  5. விரிவான அலசல் பின்னூட்டப்பதிவு
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  6. உங்களது மற்றும் கலையரசி பதிவுகளைப் படிக்கும்போது எதை அதிகம் ரசித்தேன் என்னும் வினா எழுகிறது சின்னப் பறவையின் அழிவைச் சொல்லிப் போகும்போது வேறு சில முக்கிய தகவல்களையும் . தெரிவிக்கிறீர்கள் நான் பல நாட்களுக்கு முன் டி. பி கைலாசம் அவர்களின் துரோணா என்னும் ஆங்கிலக் கவிதையை மொழி பெயர்க்குமாறு வாசகர்களை வேண்டி இருந்தேன் ஆனால் ஏனோ யாரும் முன் வரவில்லை. இதையே நான் ஃபேஸ் புக்கிலும் எழுதி இருகிகிறேன் அதற்கும் இது நாள்வரை பலனில்லை. இந்நேரம் உங்கள் நினைவு வந்தது ஆங்கில ஆசான் அல்லவா. மொழி பெயர்க்கிறதாகச் சொல்வதானால் அந்த ஆங்கிலக் கவிதையைத் தருகிறேன் மேலும் என் தளத்தில் இப்போது சில படஙளை வெளியிட்டு அதற்கான சில கவிதைகளையும் வாசகர்களிடம் வேண்டி இருக்கிறேன் உங்கள் பதிவில் பல தளங்களுக்குச் சென்று பின்னூட்டமிட்டு வந்ததாகக் கூறி இருக்கிறீர்கள். என் தளம் அந்த பாக்கியம் பெறவில்லை. வருகை வேண்டி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.

      மொழிபெயர்த்தல் அல்லது மொழியாக்கம் இரண்டுமே இருமொழிப்புலமையும் மொழிமரபும் அறிந்தவர்கள் செய்யவேண்டிய வேலை.

      என்னுடைய அறிவுக்குறைவு இருமொழியிலும் எவ்வளவென அறிந்தே இருக்கிறேன். ஆகவே தாங்கள் சொல்லும் மொழிபெயர்ப்புப் பணி என்னால் இயலுவதன்று.

      தங்கள் படத்திற்கான கருத்திட்டிருக்கிறேன்.

      எப்பொழுதும்போல் தங்கள் வருகைக்கும் வெளிப்படையான கருத்திடுதல்களுக்கும் நன்றிகள்.

      Delete
  7. பின்பு பொறுமையாக படித்து கருத்திடுகிறேன் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. ஒரு மிகப்பெரிய பதிவையே பின்னூட்டமாக இட்டிருக்கிறீர்கள் ஐயா....
    பல விஷயங்களைத் தாங்கி... மிகவும் அருமையான பின்னூட்டம்...

    மனசில் பட்டதை சொல்வதுதான் உண்மையான கருத்தாக அமையும்....

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பரிவையாரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      //மனசில் பட்டதை சொல்வதுதான் உண்மையான கருத்தாக அமையும்....
      //

      நீங்கள் கூறுவது உண்மைதான்.

      ஆனால், அது பலராலும் விரும்பப்படுவதில்லை என்பதும் பட்டறிந்தது.

      நன்றி

      Delete
  9. அருமையான பின்னூட்டக் கருத்து. பல தகவல்கள், ஒரு பதிவிற்கானத் தகவல்கள் அனைத்தும்...அருமை.

    கீதா: சகோ கை கொடுங்கள். நான் ஒரு பதிவு எழுதத் தொடங்கி, பெரிதாகி, இன்னும் நிறைவு பெறாமல் இருக்கும் கட்டுரை ஒன்றின் ஒரு பகுதி தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் அடங்கிய ஒன்று. (உங்கள் தமிழ் அழகு தமிழ். எனது தமிழ் அதற்கு நிகர் இல்லை என்றாலும், தகவல்கள்....) //ஏனெனில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தம் தேவைக்குக் கிடைப்பது போதும். எல்லாம் வேண்டும் எனும் பேராசை அவற்றிற்கு இல்லை. மாறாகத் தாவரங்களும் விலங்குகளும் ( பறவைகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) இல்லாத உலகில் மனிதர்கள் இருக்க முடியுமா...?

    இங்கு அவைதான் மனித குலத்திற்குத் தேவையே தவிர நாம் அவற்றிற்குத் தேவையே இல்லை என்கிற உணர்வு முதலில் நமக்கு வேண்டியது.// இந்தக் கருத்திற்கு ஒரு பூங்கொத்து!!! நானும் மகனும் எப்போதும் சொல்லுவது.

    அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் ஒரு மனித இனம் பற்றியதும்..என்று அழிந்த மற்றும் அழிந்து வரும் உயிரினங்களைக் குறித்துத் தகவல்கள் தொகுத்துக் கொண்டிருப்பதால் தாமதம் ஆகிறது. அதில் ஒன்று இந்த மொரீஷியஸ் தீவின் மரம் மற்றும், டுட்டூ பறவை பற்றியதும்.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் மனிதன் தனக்கு அடங்கிப் போகும் ஒன்றினை ஆள்வதில், அது மனிதனாக இருந்தாலும் சரி மற்ற உயிரினங்கள் ஆக இருந்தாலும் சரி அவற்றைத் தனக்கு அடிமை போல,( குறிப்பாக அன்புடன் இருப்பவற்றை), நடத்துவதில் தனது ஆதிக்கத்தைக் காட்டுவதுதானே யதார்த்தத்தில் நடக்கிறது இல்லையா..

    குமரகுருபரின் அந்தப் பாடல் அருமையான பாடல். உங்களைக் கண்டும் நாங்கள் வியப்பதும் அதுவே!

    மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்.

      Delete
    2. வணக்கம் சகோ.

      உங்கள் இடுகைகளின் ஊடாக உங்களுக்குச் சுற்றுச்சூழலில் இருக்கும் ஆர்வத்தை அறிவேன்.

      உங்கள் பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      என்னில் வியத்தல் எதற்கு?

      ((( ஏன் ஸ்ரீ ?)))

      Delete
  10. சிட்டுக்குருவி பற்றி நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது கல்கண்டு தீபாவளி மலரில் வந்த
    ‘சிட்டு பறந்ததடா சிட்டு
    அந்த சிங்கார சிட்டுதனை விட்டு
    பள்ளி போவதுமே விட்டு
    அப்பாவிடம் வாங்கினேனே கொட்டு’
    என்ற குழந்தைகளுக்கான பாடல் மனதில் அழியாமல் இருந்ததால் நானும் சிட்டுக் குருவி பற்றி சேதி தெரியுமா? என்ற தலைப்பில் 20-03-2014 ஆம் நாள் பதிவு ஒன்றை வெளியிட்டேன்.அதற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்ததும் நான் ஏதோ பெரிதாக எழுதிவிட்டதாக நினைத்திருந்தேன்.

    ஆனால் தற்போது திருமதி கலையரசி அவர்களின் பதிவைப் படித்ததும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குமரகுருபரரின்
    ‘தம்மினுங் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
    எற்றே இவர்க்குநாம் என்று” என்ற வரிகள் என்னை நாம் இன்னும் கற்கவேண்டியது அதிகம் என எண்ண வைத்துவிட்டது.

    இங்கே நான் திருமதி கலையரசி அவர்களுக்கு நன்றி சொல்லியாகவேண்டும். ‘In Flanders fields the poppies blow’ என்ற கவிதைக்கு ‘பாப்பி பூக்கும் ஃபிளாண்டர்ஸ் போர்க்களம்’ என்ற தலைப்பில் தங்களிடமிருந்து அழகானதொரு மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதையை பெற்றதற்காக. பாராட்டுகள் அவருக்கு! வாழ்த்துகள் தங்களுக்கு!

    கடைசியாக ஒன்று. என் பார்வையில் நீங்களும் பல்துறைப் புலமையுடன் விளங்கும் பதிவர்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் பதிவினைப் படித்தேன். நேர்த்தியான நடை.

      நான் பல்துறைப் புலமை என்றது, தமிழ்ப்பதிவர்களில், மொழி பற்றி மட்டும் பேசாமல் பிறதுறைகளையும் பேசுவோர் எழுதுவோர் குறித்து.

      நான் ஒருதுறை குறித்தே எழுதிப்போகிறேன்.

      தங்களின் அன்பினுக்கு மிக்க நன்றி.

      Delete
  11. வணக்கம் சகோ. வேலை மிகுதியால், உடனே வர இயலவில்லை. தாமதத்துக்கு வருந்துகிறேன்.
    என் வேண்டுகோளுக்கிணங்க, கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு மிகவும் நன்றி. சிட்டுக்குருவி பதிவில் டோடோ பறவை பற்றி எழுதிய பின்னூட்டத்தையும் சேர்த்து வெளியிட்டமை மகிழ்வளிக்கிறது. அதனைப் படித்துத் தான் அழிவின் குறியீடாக மாறிப்போன அப்பறவை பற்றிய செய்திகளை நானறிந்தேன்.
    இது போல் பல தளங்களில் நீங்கள் எழுதியிருக்கும் சிறப்பான பின்னூட்டங்களைத் தொடர்ந்து வெளியிடுங்கள். இவற்றின் வாயிலாகப் பதிவின் தொடர்புள்ள பல செய்திகளை, அனைவரும் அறிந்து கொள்ள முடியும். ஒரே இடத்தில் உங்கள் எழுத்தைச் சேமித்து வைக்கவும் இத்தொடர் உதவும். பின்னர் இவை நூலாகத் தொகுக்கப் பெறும் காலத்தில் கைகொடுக்கும்.
    உங்கள் பின்னூட்டத்தை மட்டும் வெளியிடாமல், என் பதிவுகளின் சுட்டியையும் கொடுத்திருப்பது கண்டு, இன்ப அதிர்ச்சி அடைந்தேன். உங்கள் அன்பு கண்டு நெகிழவும் செய்தேன். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? நன்றிக்கடன் சுமை ஏறிக்கொண்டே செல்கிறது!
    நாங்கள் உங்களைப் பார்த்துச் சொல்ல நினைக்கும் ‘எற்றே இவர்க்கு நாம்,’ என்ற வாசகத்தை நீங்கள் சொல்வது தகுமா? உங்கள் தன்னடக்கத்துக்கும் ஓர் அளவில்லையா?
    நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      நான்தான் தாமதமாக வந்திருக்கிறேன்.

      பின்னூட்டங்களை நீங்கள் தொகுத்திடுமாறு கூறியிருக்கிறீர்கள். ஆனால் அது சாத்தியப்படும் என்று தோன்றவில்லை.

      பதிவிற்கென எழுத நினைப்பதையே எழுத முடியவதில்லை என்பதே தற்போதைய நிலை.

      நூலாக வெளியிடுவதைவிட, இதுபோன்ற எதிர்வினைகள் வரும் பதிவுகளே என்னைக் கவர்கின்றன.

      உங்களின் தளத்திற்கு இணைப்புச் சுட்டி அளிக்காமல் இந்தப் பதிவு எப்படி நிறைவுறும்? அது மிக அத்தியாவசியமானது. இருப்பினும்
      அதனால் பலனேதும் விளைந்திருக்குமா எனத்தெரியவில்லை.

      பதிவுலகில் எனக்கு முன்பே இயங்கிக் கொண்டிருப்பவர் நீங்கள்.
      பரவலான அறிமுகம் பெற்றவர்.
      நல்ல நடை, தொடர்வாசிப்பு, பல துறைகளையும் தொட்டுச் செல்லுதல் போன்றவற்றை உடையவர்.

      இன்னும் எழுதுங்கள்.

      புதிய செய்திகளை அறியத்தாருங்கள். இதன்றி வேறு என்ன கைமாறு இருக்கிறது.

      நேரில் பார்த்தோ பேசியோ இராத உங்களைப் போன்ற பலரின் அன்பும் வழிகாட்டுதலும் பெற்றுத்தந்த இந்த இணையத்தை நன்றியுடன் நினைக்கிறேன்.

      எற்றே இவர்க்குநாம் என்று குறிப்பாக என்னை நோக்கி ஒருபோதும் நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

      தொடர்ந்து எழுதுங்கள்.

      மிக்க நன்றி.

      Delete
  12. பாப்பி மலர் குறித்தான என் பதிவில் நான் கொடுத்திருந்த ஆங்கிலக் கவிதையைப் படித்த மாத்திரத்தில் நீங்கள் செய்த மொழியாக்கம் என்னைப் பெரிதும் கவர்ந்ததாலேயே, அதனைத் தனிப்பதிவாக உங்கள் தளத்தில் வெளியிடச்சொன்னேன்.
    உங்கள் மொழியாக்கத்துக்கு என் தளத்தில் நான் கொடுத்த மறுமொழியை அப்படியே மீண்டும் இங்குக் கொடுப்பதில் மகிழ்கின்றேன்:-
    வாங்க சகோ! வணக்கம். தங்கள் வரவு கண்டு மகிழ்ச்சி! கவித்துவமான பின்னூட்டம் கண்டு, அதைவிட மகிழ்ச்சி! சிறுபிள்ளை முயற்சி என்று சொல்லியிருப்பது, உங்கள் தன்னடக்கத்தின் மிகை!
    நிற்க. இனி உங்கள் மொழியாக்கம் பற்றி…
    மலர்அலை
    என்ன அழகான சொல்லாட்சி! காற்றில் பாப்பி மலர்கள் அலைகின்றனவா? அலைஅலையாய் மலர்கள் அணிவகுக்கின்றனவா? தமிழுக்குப் புது வரவு?
    பாப்பிச் செடியின் தண்டு மிகவும் மெல்லியது; சாதாரண காற்றுக்குக்கூட உறுதியாக நில்லாமல், ஆடக்கூடியது என்பதால், இது தான் எவ்வளவு பொருத்தம்!
    காற்றில் பாப்பி மலர்கள், அங்குமிங்கும் அலைந்து ஆடி, அலையலையாய், சிலுவைகளினிடை போய்வரும் காட்சி, உங்களின் இந்தப் பொருத்தமான சொல்லாட்சியால், உயிர்பெற்று எழுந்து விட்டது!
    இக்கவிதையை எழுதிய போது கவிஞர் Grow என்று முதலில் எழுதியதாகவும், பின்னர் தான் blow என்று மாற்றியதாகவும் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    “அன்றங்கிருந்தோம்! இன்றிங் கிறந்தோம்!
    என்றெம் விடியல்? மடிந்தும் ஒளிர்ந்தோம்”
    என்ற வரிகள், எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மூலக்கவிதையின் உணர்ச்சியை இம்மி பிசகாமல், வாசகருக்குக் கடத்தும் திறன் பெற்ற உன்னத வரிகள் இவை!
    முதல் வரியை வாசித்த போது, ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,’ என்ற பாடலின் நினைவு வந்து போனது.
    பறக்குமிப் பாப்பிதன் பூநிறைந் திருப்பினும்
    உறங்கா விழிபெறும் ஃபிளாண்டர் போர்க்களம்!
    பறக்கும் இப்பாப்பி என்பதும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது. போதையில் மேலெழுந்து பறப்பது போன்ற அனுபவம் கிட்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
    மொத்தத்தில் ஒரு புதிதாய் ஒரு கவிதையைச் சுவைத்தது போன்ற அனுபவம் கிட்டியது.
    உறங்கா விழிபெறும் பிளாண்டர் போர்க்களம் என்ற அற்புதமான தலைப்பில் இக்கவிதையை உங்கள் தளத்தில் வெளியிட வேண்டுகிறேன்.
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இன்னும் பலருக்கு இது சென்று சேர வேண்டும் என்பது என் ஆசை!
    என் பதிவின் மூலம் தமிழுக்கு அருமையான மொழியாக்கம் ஒன்று கிடைத்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
    மிகவும் நன்றி.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      உங்களின் தொடர்வருகைக்கு மகிழ்ச்சி.

      உங்களின் கருத்து நோக்க, இன்னும் எவ்வளவு நன்றாகச் செய்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது :(

      உவகை பெரிது.

      நன்றி.

      Delete
  13. பதிவுகளையே பின்னூட்டம் போல மிகச்சிறிய அளவில் எழுதுவோர் மத்தியில், பின்னூட்டங்களையே பதிவுகள் போல ஆய்வுரையாகத் தருவது -உண்மை வெறும் புகழ்ச்சியில்லை விஜூ!- நீங்கள் மட்டும்தான்! தருக! வருக! வளர்க! வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா,

      நீங்கள் அப்போதும் இப்போதும் அப்படித்தானே ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  14. போர்க்களமா, தமிழின்பக்களமா?! மடிந்தும் ஒளிர்ந்தோம். ரசித்த மொழிபெயர்ப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்தி்ற்கும் ரசனைக்கும் நன்றிகள்.

      Delete
  15. மனிதன் தன்னுடைய சுயநலனுக்காக அழித்த, அழித்துக் கொண்டிருக்கும் உயிரினங்கள் எத்தனை எத்தனை..... டூடூ பறவை அழித்து அதன் மூலம் ஒரு மரம் முளைக்காமல் செய்து...... என்ன கொடுமை.

    இதில் தனக்கு ஆறறிவு என்ற ஆணவம் வேறு :(

    சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். நீங்கள் சொல்வது உண்மை.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  16. பின்னூட்டங்களே பதிவுகளாக அமையும் அளவு பொருள் பொதிந்த செய்திகள், ஆழமான கருத்துகள், விவாதிக்கவேண்டிய பொருண்மைகள் என்ற நிலையில் மிக அருமை. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  17. மிகவும் நன்று.. அருமை.. சிறபுப என்று பதிவை முழுமையாய் வாசிக்காமலேயே பெயருக்குப் பின்னூட்டமிடும் பல பதிவர்கள் மத்தியில் பதிவை ஆழ்ந்து வாசித்து அதனோடு தொடர்புடைய சிறப்பான பின்னூட்டங்கள் இடும் தங்கள் பண்பு உண்மையில் வரவேற்கத்தக்கது. ஒரு சிலருக்கு வேண்டுமானால் அது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நல்ல விமர்சனங்களையும் குறைநிறைகளை மனந்திறந்து சுட்டிக்காட்டுவதையும் கூடுதலாய்த் தகவல் பரிமாற்றங்களையும் வரவேற்கும் பதிவர்கள் அநேகர் உண்டு.. தங்களுடைய பதிவுகளிலேயே ஏராளமான விஷயங்களை அறிந்துகொள்ளும் எங்களுக்குப் பின்னூட்டங்கள் வாயிலாக இன்னும் பல அற்புத விஷயங்கள் அறியும் வாய்ப்பு கிட்டினால் அதைவிடவும் பெரும்பேறு என்ன இருக்கிறது...

    கலையரசி அக்காவின் பதிவில் தாங்கள் எழுதிய பின்னூட்டங்கள் அவர்களுடைய பதிவின் தரத்தை மேலும் கூட்டியிருக்கிறது என்றால் மிகையில்லை... போர்க்களக் கவிதையின் தமிழ் மொழியாக்கம் உண்மையிலேயே அசத்தல்.. மிகுந்த பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
  18. மனிதனின் பசிக்கு இயற்கையால் தீனி போட்டு மாளவில்லை.
    பல்வகைத் தகவல்களால் திக்குமுக்காட வைக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete
  19. கருத்தழிகிறேன் ....கற்றதெல்லாம்
    எற்றே இவர்க்குநாம் என்று”

    ReplyDelete