Tuesday 2 June 2015

எங்கள் நீதி இப்படித்தான் சொல்கிறது கனம் நீதிபதி அவர்களே!



சட்டங்கள், வளைக்கும் வலிமை உள்ளவன் வளைக்கவும், நீதிமன்றங்கள் பணபலத்தின், அதிகாரத்தின், குவிமையத்தில் மண்டியிடவும் செய்கின்ற இந்தப் புன்மைச் சூழலில், எது அறம், எது வழக்கு, எது தண்டனை எனப் பழந்தமிழில் ஏதேனும் இருக்கிறதா என அறியும் ஆர்வம் இயல்பானதுதான்.

அப்படி ஒரு உரை நூலில் இருந்து எடுக்கப்பட்டதன் சாரம் தான் இப்பதிவு.


முதலில் அந்த உரைநூல் என்ன சொல்கிறது என்று பார்த்துவிடுவோம்.

எது அறம்?

சட்ட நூல்களில் செய் என்பதைச் செய்வதும் செய்யாதே என்பதைச் செய்யாமல் இருப்பதும் தான் அறம்.

அதில் ஏதாவது வகைகள் இருக்கின்றனவா?

இருக்கின்றன.

அறம் மூன்று வகை.

1.   ஒழுக்கம்

2.   வழக்கு

3.   தண்டம்

 ஒவ்வொருவரும் அவரவருடைய கடமைகளில் இருந்து தவறாமல்  செய்து வருவது ஒழுக்கம்.

வழக்கு என்பது, பொதுவாக ஒருபொருளை என்னுடையது என்று ஒருவனும், இல்லை இல்லை அது  என்னுடையதுதான் என்று இன்னொருவனும் தம்முள் மாறுபடத் தோன்றுவது.

அது, பதினெட்டு வகையாக அமையும்.

1)   கடன் வாங்குதல்.

2)   அடைக்கலமாகப் பொருளை வைத்திருத்தல்.

3)   கூடிப் பொருள் சேர்த்தல்.

4)   கொடுத்ததைத் திரும்பக்  கொடுக்காமல் இருத்தல்.

5)   வேலை செய்வதற்கு ஒத்துக் கொண்டு பின் செய்யாமல் விடுதல்.

6)   செய்த வேலைக்குக் கூலி கொடாமை.

7)   தனக்குச் சொந்தமில்லாத பொருளை விற்றல்.

8)   விற்ற பொருளை வாங்கியவனிடம் கொடாமை

9) விலைபேசி வாங்குவதாகக் கூறிய பொருளை விலை கொடுத்து வாங்காமல் இருத்தல்.

10)  விதியை மீறிப் பொதுவான கட்டுப்பாட்டைக் கடத்தல்.

11)  நிலத்தைப் பற்றிய வழக்கு.

12)  ஆணுக்கும் பெண்ணுக்கும் கூறப்பட்டுள்ள நெறிகளை மீறுதல்.

13)  பங்காளிகளுக்கு உரிய பாகமாகிய தாய பாகம்.

14) கொடிய செயல்கள்.

15) நாவடக்கம் இல்லாமல் இழி மொழி கூறும் சொற்கொடுமை.

16)  தண்டித்த காலத்துக் கொடுமையாக தண்டித்தல்.

17)  சூதாடல்.

18) ஒழித்துக் கட்டி விடுதல்.


தண்டம் என்பது தண்டனை.

அது மேலே சொன்ன ஒழுக்கத்திலும் வழக்கிலும் தவறு இழைத்தவர்களை அவர்கள் சரியான நெறியில் இருக்கும் பொருட்டுச் செய்த தவறுக்குத் தக்கவாறு தண்டனை அளித்தல்.

இதுவரை நீங்கள் பார்த்தது,  திருக்குறளில் அறத்துப்பால் என்பதில் அறம் என்பதற்குப் பரிமேலழகர் சொன்னதில் நான் தணிக்கை செய்து சற்றுத் திருத்திய நவீன வடிவம்.

தணிக்கை செய்யப்படாத அவர் உரை இதோ,


“அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.
வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்.
தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.”

 நான் தணிக்கை செய்து சற்றுத் திருத்தியது, மனு சொன்னது என்பதையும்,  வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களின் படி நடக்க வேண்டும் என்பதையும் தான். இந்த வழக்குப் பதினெட்டு என்பதும் கூட மனுதர்ம சாத்திரத்தில் சொல்லப்பட்டதே. இந்தத் தணிக்கையின் மூலம் இங்குப் பரிமேலழகரைக் காப்பாற்ற வேண்டும் என்பது எனது நோக்கமன்று.

அவர் வாழ்ந்த சமூகத்தில் அறம் என்பது மனு முதலியன விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும்தான். ஒழுக்கமானது அன்றைய சமூகப்படிநிலைகளில் அந்தணரும் பிற வருணத்தாரும் அவரவர்க்குக் கற்பிக்கப்பட்ட நெறிகளில் நிற்பதுதான். அதைத்தான் அவர் சொல்கிறார். இதற்காக நாம் பரிமேலழகரைப் பழிக்க வேண்டியதில்லை. அவர் அன்றைய சமூகச் சூழலில் இப்படித்தான் உரை எழுத முடியும். நாம் நினைக்க வேண்டியது அவர் ஒரு உரையாசிரியர். புரட்சிக்காரர் அல்லர் என்பதே!

ஆனால் எனக்குள்ள வருத்தம், திருவள்ளுவரை ஆழப் படித்தவர் மனு முதலிய நூல்களில் தேடுவதைவிட, அறம் என்பதற்கு வள்ளுவர் ஏதேனும் வரையறை சொல்லியுள்ளாரா எனப் பார்த்திருக்கலாம்.

வள்ளுவர் சொல்கிறார்,

அறம் என்பது என்ன தெரியுமா..?

பேச்சிலும் நடையுடை பாவனைகளிலும் உன்னைப் பெரிய நீதிமான் என்று வெளியே பேசிக்கொள்வதும் காண்பித்துக் கொள்வதும் அல்ல அறம்.

அறம் என்பது மனதினால் ஒருவன் சுத்தமாக இருத்தல்.

அதுதான் அறம். அவ்வளவுதான் அறம். இதற்கு மேல் வேறொன்றும் இல்லை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

என்னும் குறளின் மூன்றே சீர்களில் அறத்திற்கான உலகளாவிய வரையறையைக் கொடுத்து விட்டான் வள்ளுவன்.

 கொஞ்சம் வள்ளுவரையும் பார்த்திருக்கலாமே பரிமேலழகரே!


படம் - நன்றி https://encrypted-tbn1.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

45 comments:

  1. பட்டியல் பதினெட்டு எதையோ நினைவு படுத்துகிறதே ,1+8=9 பலருக்கும் இந்த ஒன்பது ராசியாச்சே :)

    ReplyDelete
    Replies
    1. இப்போது அதெல்லாம் மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டேனே பகவானே..!

      உண்மையில்லையோ..?


      சரி சரி நீங்கள் சொன்னால் தவறாக இருக்காது.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள் பகவானே!

      Delete
  2. சிறப்பான பகிர்வு.வாழ்த்துகள்

    ReplyDelete
  3. தங்களைப் போலவே அறம் செய்ய விரும்பு என்று ஔவையும் அழகாகவும் சுருக்கமாகவும் சொல்லி விட்டார் இல்லையா

    அறத்தைநாம் பேணினால் வழக்குகள் வாரா
    குறள்சொல்லும் புதிர்கேட்டால் நன்று !

    அறம் பற்றிய பதிவு கண்டு மகிழ்வே ஒழுக்கம் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக நன்றி நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் அம்மா!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. பல இடங்களில் வள்ளுவரைப் பார்க்காமலே தன் கருத்தைத் திணித்துப் பொருள் சொன்னவர் தாம் “திருக்குறள் உரையாசிரியர்“ என்போருள் அதிகம் - பகுத்தறிவாளர்களும் சேர்த்து.
    இல்லையெனில், “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்“ எனும் குறளுக்குப் பொருள் கூறும் போது, “கேட்ட“ எனும் சொல்லினால், “பெண் சுய புத்தியின்மையின் மற்றவரிடம் கேட்ட என்றார்“ எனும் பொருளில் பொருள்சொல்லி யிருக்க மாட்டாரே? எனவே தான், பரிமேலழகர் உரை வள்ளுவரைப் புரிந்துகொள்ள உதவுவதினும் தன் -மனுவின், நால்வேதத்தின், வர்ணாசிரமத்தின்- விளக்கமாகவே உள்ளது என்பதால் அந்த “ஆழ்ந்தகன்ற“ உரையின் மீது மரியாதை போயிற்று.
    மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறம் எனும் வள்ளுவரின் அறவிளக்கம் உலகின் எந்த அறநூலிலும் இல்லாத தனிச்சிறப்புடையது என்பார் உலகப் பெரும் அறிஞர்கள்.. என்ன இருந்தாலும் பெரியவுங்க பெரியவுங்கதான்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      பரிமேலழகரைப் பற்றித் தாங்கள் சொல்லும் கருத்தில் உண்மை இருக்கிறது. இன்னும் பல இடங்களில் அவர்கருத்து வடவர் நெறியொற்றியே அமைந்திருக்கிறது.
      பரிமேலழகர் என்றல்ல, உச்சிமேற் புலமைகொள் நச்சினார்க்கினியர் இடத்திலும், ஆனாப் பெரும்புகழ் சேனாவரையர் இடத்திலும், பேராசிரியர் இடத்திலும், சிறிதளவே எனினும் இளம்பூரணர் இடத்திலும் இம்மரபினைக் காண இயலும்.

      இவை அக்காலச்சமூகம் மொழிப்பயில்வு சார்ந்த விடயங்கள்.

      இவ்வுரைகளில் இன்று நாம் குப்பையில் தள்ளவேண்டிய சில பல விடயங்களைக் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது என்பதும் உண்மையே..! அவற்றிற்கு உரிய இடத்தைக் கொடுத்துவிட வேண்டும்

      ஆனால் பரிமேலழகரால் பொருள் துலக்கமும், நுட்பமும், சிறப்பும் பெறும் இடங்கள் திருக்குறளில் மிகப் பலவாய் இருக்கக் காண்கிறேன்.

      வள்ளுவன் சொன்னதைப் போல, குணம் நாடிக் குற்றமும் நாடின் பரிமேலழகர் உரை மட்டுமன்று, மரபுரைகள் யாவினும் நாம் மிக்கக் கொள்ளத்தக்க விடயங்கள் நிரம்ப இருக்கின்றன என்பதே முழுக்கப் படிக்கவில்லை எனினும் எனது அரை குறை வாசிப்பிற் கண்டது.

      கொள்ள வேண்டியதைக் கொள்ளவும், தள்ளவேண்டியதைத் தள்ளவுமாகிலும் இவ்வுரைகளின் வாசிப்பு அவசியமாகிறது.

      இன்றைய நாளில் இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள வெகுசிரமப்பட வேண்டி இருக்கிறது. சிரமப்படுகிறேன்.

      அப்படிப் புரிந்து கொண்டதை, எளிமைப் படுத்திக் கொடுக்க எனது சிறு முயற்சியே இதுபோன்ற பதிவுகள்.

      கண்மூடித்தனமாக ஒருவரை ஆதரிப்பதோ, அப்படியே எதிர்ப்பதோ எப்பொழுதும் இல்லை.

      தங்களின் வருகையும் நெறிப்படுத்தலும் என்றும் வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  5. மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற மூன்று சொற்களிலேயே எல்லா அறங்களையும் அடக்கிவிட்டாரே வள்ளுவர்! மனதளவில் குற்றமற்றவனாக, இருப்பவன் ஒழுக்கத்தோடு இருப்பான். மேலே சொன்ன எந்தக் குற்றத்தையும் செய்வதற்கு வழியே இல்லை. குறளுக்கு உரை எழுதியவர், வள்ளுவர் சொன்னதை விட்டு விட்டுத் தேவையில்லாமல் மனுதர்மத்தைப் போதிப்பானேன்? கவிஞர் முத்துநிலவன் அய்யா பின்னூட்டத்திலிருந்து பெண் சுயபுத்தியற்றவள் என்ற கருத்தையும் அவர் சொல்லியிருக்கிறார் என்றறிந்தேன். நீங்கள் ஆரம்பத்தில் சொல்லியிருப்பது போல் நீதியை விலை கொடுத்து வாங்கும் இந்நாளில் அவசியமான ஒரு பதிவு. த.ம வாக்கு 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!

      பரிமேலழகரின் உரையில் இன்னும் பல இடங்கள் நம் அறிவிற்குப் பொருந்தாத இடங்கள் உண்டு. உண்மைதான்.

      அவற்றை அடையாளம் காண வேண்டும். சுட்டிக் காட்ட வேண்டும். சரியில்லை என்று கூற வேண்டும். யாராய் இருந்தால்தான் என்ன தவறென்றால் தவறென்றுதானே சொல்ல வேண்டும்.

      ஆனால் அதற்காக அவ்வுரையே மிக மோசமானதென்றோ அவற்றின் பயில்வு தேவையில்லை என்றோ என்னால் ஒதுக்க முடியவில்லை.

      அட... இப்படி ஒரு நுட்பம் இதற்குள் இருக்கிறதா என நான் விழிகள் உயர்த்திய நிறைய இடங்கள் பரிமேலழகர் உரையில் இருக்கின்றன.

      நான் என்றல்ல அவ்விடங்கள் புரிகின்ற யார்க்கும் அது வியப்பாய்த்தான் இருக்கும்.

      கற்றலில் எப்போதும் தூய கற்றல் இல்லை.

      நமக்கு வேண்டியனவும் வேண்டாதனவும் எங்கும் இருக்கும்.

      ஒரு சாதாரணப் புத்தகத்தில் கூட..!

      வள்ளுவன் சொல்வதுதான் இதற்கும்,

      கற்றல் என்பது கசடுகளை நீக்கிக் கற்றல்.

      நல்லன கொள்வோம் என்பதே இவ்விடயத்தில் என் நிலைப்பாடு.


      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. குறள் இரண்டடி வெண்பாதானே.....

    ReplyDelete
    Replies
    1. நான் ஏதும் தவறாகச் சொல்லி இருக்கிறேனா வலிப்போக்கரே..?

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  7. வணக்கம்
    ஐயா.

    நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  8. இத்தனை விதங்கள் நீதியில் இருக்கிறதா? இது ஏன் அந்த நீதிபதிக்கு தெரியவில்லை.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ;))


      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  9. உங்கள் கேள்வி நியாயமானதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  10. வணக்கம் ஆசானே,
    எனக்கு தொடக்கத்திலே தெரியும் தாங்கள் எப்படியும் பரிமேலழகரைக் காப்பாற்றாமல் விடமாட்டீர்கள் என்று,
    இப்ப போய் இதை எழுதியிருக்கிறீர்கள், அவ்வாறு செய்யும் ஆள் அல்லவே, தங்கள் பதிவுகளின் வழி அறிந்தது.
    ஆனாலும் காலத்திற்கு ஏற்ற பதிவு.
    உரையாசிரியர் நேரிடையான பொருள் சொல்ல முடியாமல் இல்லை, எப்படியாவது இதனை இதற்குள் சொல்லிவிட வேண்டும் என்று தான்,
    என்ன செய்வது நாம் சொன்னால் அதிகபிரசங்கி என்பார்கள்.
    எப்படியோ, தாங்கள் விளக்கம் அளித்தது அருமை.வாழ்த்துக்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே...!

      ஆசானே என்றெல்லாம் அழைத்துக் கிண்டல் செய்வதை எப்போது விடப் போகிறீர்களோ..?

      நான் ஏன் பரிமேலழகரைக் காப்பாற்ற வேண்டும்..?

      அப்படி ஒரு எண்ணம் எல்லாம் இல்லை பேராசிரியரே!

      அந்த அளவுக்குப் பரிமேலழகர் பலவீனமானவரும் அல்லர்.

      நான் பலம் வாய்ந்தவனும் அல்லன்.


      தங்களின் வாழ்த்தினுக்கு நன்றிகள்.

      Delete
    2. அய்யோ, கிண்டல் என்று சொல்லாதீர்கள்.

      உரையாசிரியர் நேரிடையான பொருள் சொல்ல முடியாமல் இல்லை, எப்படியாவது இதனை இதற்குள் சொல்லிவிட வேண்டும் என்று தான்,
      இதற்கு பதில் சொல்லவில்லையே,
      நன்றி.

      Delete
    3. பேராசிரியரே!

      அக்காலச் சூழல் அப்படி.

      தான் நினைத்ததை எல்லாம் கொண்டு கூட்டிதாகக் கருத முடியாது என நினைக்கிறேன்.

      வடமொழிச்சார்பு, பரிமேலழகரிடம் அல்ல திருவள்ளுவரிடமும் இருப்பதை நாம் காண முடியும்.

      அதுவும் காலச்சூழல்தான்.

      நம் பணி ஏற்பன கொள்ளுதல். தக்க காரணங்களுடன் நிராகரிப்பிற்குரியவற்றை நிராகரித்தல்.

      அவ்வளவே.

      நன்றி.

      Delete
  11. வணக்கம் சகோதரரே...

    காலதாமதமும், அடிக்கடி காணாமல் போவதும் என் வழக்கமாகிவிட்டது ! பிழைப்பு அப்படி... !!!

    அறம் என்பது மனதினால் ஒருவன் சுத்தமாக இருத்தல்.

    அதுதான் அறம். அவ்வளவுதான் அறம். இதற்கு மேல் வேறொன்றும் இல்லை.

    மனித குலத்தின் அனைத்து நாகரீக, அநாகரீக செயல்பாடுகளுக்கும் மூல காரணமாக ஒரு தனி மனிதனே இருப்பான்... ஒரு தனிமனிதன் தீர்மானித்ததே ஒரு கட்டத்தில் சமூக வழக்கமாக உருமாறுகிறது...

    ஆக, மனிதத்தின் ஆரம்ப புள்ளியே சுய ஒழுக்கம் தானே ?

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    ReplyDelete
    Replies
    1. அறிவேன் அண்ணா!

      நேற்றே பார்த்துவிட்டேன்.

      நீங்கள் வேறு, சாத்வீக, ராஜஸ , தாமஸ .......என்றெல்லாம் கூறி வைத்தீர்களா.......,

      பின்னூட்டம், பின் நீட்டமாகிவிடும் போலத் தோன்றியது.

      காலம் போதாது என்பதால் பின் வரலாம் என்று புறப்பட்டுவிட்டேன்.

      கருத்திடுகிறேன் அண்ணா!

      சற்றுப் பொறுமையாக!

      தங்கள் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.

      Delete
  12. மனதில் ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது நண்பரே
    அது அந்தக் காலம்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலத்திலும் இவ்வளவு பிரச்சினைகளா என்றுதான் நான் நினைத்தேன் கரந்தையாரே..!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  13. அறத்தைப் பற்றி சரியான ஒப்புமையுடன் பகிர்ந்துள்ள விதம் அருமையாக உள்ளது. இப்போதைய தேவை இவை போன்ற தலைப்புகளில் விவாதங்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  14. மனதினால் சுத்தமாக இருத்தல்... ஆகா...! எவ்வளவு எளிமை...

    ReplyDelete
    Replies
    1. பார்க்க எளிமையானது போல் தோன்றினாலும் பழகுதல் கடினம் தானே டிடி சார்!

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  15. அறம் என்பது மனதினால் சுத்தமாக இருத்தல்....

    ம்ம் உண்மை தான். பகிர்வுக்கு நன்றிங்க ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. ஆம்,

      அதற்காக முயல்கிறோம்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  16. உரையாசிரியர்கள் வாழ்ந்த காலம் அவர்கள் அப்படி எழுத வைத்தது! என்பதே என் கருத்தாகும்!

    ReplyDelete
    Replies
    1. அடியேனின் கருத்தும் அதுவே ஆகும் ஐயா!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  17. இதைத்தான் நான் ஒரு சில இடங்களில் எழுதியவரே எண்ணிப்பார்க்காத வகையில் உரைஎழுதுகிறவர் தன் எண்ணங்களைத் திணிக்கின்றார் என்கிறேன் கற்க கசடற என்றாலும் எது கசடு என்பது பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாய் உரை சொல்லலாமோ என்றும் தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      எழுதியவர் என்ன எண்ணினார் என்பதைத் தக்க ஆதாரங்கள் இன்றி நாம் எப்படி அறிவது ஐயா?

      அதுவரை உரையாசிரியர் எழுதுவது மிகையாய்த் தோன்றலாம்.

      ஆனால் அப்படி மூல நூலாசிரியர் கருதவே இல்லை என்று உறுதிபடச் சொல்லக் கூடுமா?

      கசடு என்பதற்கான உரை தெளிவின் கண் வேண்டாமையாய் எஞ்சியிருத்தல். இது நான் கருதுவது.

      நீங்கள் சொல்வதுபோல என்பார்வையில் நான் கொள்ளும் விளக்கம் இது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  18. 18 படியும் இறங்கி வந்தேன் 14 இடுவதற்க்கு.....

    ReplyDelete
    Replies
    1. என்றும் பதினாறாய் இருக்கும் உங்களுக்குக் கால் வலிக்கவா போகிறது நண்பரே:)

      வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  19. காலத்திற்கேற்ற பதிவு ஐயா! ஆனால், மனத்திலிருக்கும் மாசு வெளியில் தெரியவா போகிறது எனும் நினைப்பில்தான் இன்று எல்லோரும் எல்லாமும் செய்து கொண்டிருக்கிறார்கள். சராசரி மனிதர்கள் இப்படி எனில், பொது வாழ்வில் இருப்பவர்களோ எல்லோருக்கும் தெரிந்தே குற்றத்தைச் செய்கிறார்கள். இப்படிப்பட்ட சமூகத்தில் அறத்தை நிலைநிறுத்தக் குறள் வழி பயன்படும் எனத் தோன்றவில்லை. 'புலி' வழியே சரியாக இருக்கும்.

    ReplyDelete
  20. நான் தணிக்கை செய்து சற்றுத் திருத்தியது, மனு சொன்னது என்பதையும், வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களின் படி நடக்க வேண்டும் என்பதையும் தான். இந்த வழக்குப் பதினெட்டு என்பதும் கூட மனுதர்ம சாத்திரத்தில் சொல்லப்பட்டதே. இந்தத் தணிக்கையின் மூலம் இங்குப் பரிமேலழகரைக் காப்பாற்ற வேண்டும் என்பது எனது நோக்கமன்று.

    அவர் வாழ்ந்த சமூகத்தில் அறம் என்பது மனு முதலியன விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும்தான். ஒழுக்கமானது அன்றைய சமூகப்படிநிலைகளில் அந்தணரும் பிற வருணத்தாரும் அவரவர்க்குக் கற்பிக்கப்பட்ட நெறிகளில் நிற்பதுதான். அதைத்தான் அவர் சொல்கிறார். இதற்காக நாம் பரிமேலழகரைப் பழிக்க வேண்டியதில்லை. அவர் அன்றைய சமூகச் சூழலில் இப்படித்தான் உரை எழுத முடியும். நாம் நினைக்க வேண்டியது அவர் ஒரு உரையாசிரியர். புரட்சிக்காரர் அல்லர் என்பதே!//

    மிகச் சரியே! ஆசான் தவறாகச் சொல்லுவாரா என்ன?!!! மனு சாஸ்திரம் என்பதன் அடிப்படையில் உரைக்கப்படும் எந்த நெறிகளும், அறமும் ஒத்துக் கொள்ள முடியாத ஒன்று. அது ஒரு சார்பானது. அது ஒரு சாராரால் எழுதப்பட்டது. அவர்களுக்கு வேண்டி எழுதப்பட்டது. ஐயனும், ஔவையும் சொல்லாததை எந்த சாஸ்திரமும் சொன்னதில்லை என்பது எங்கள் தாழ்மையான கருத்து.

    இங்கு நீங்கள் நீதி தேவதையின் படமும், நீதிமன்றங்கள் பற்றியும் ஆரம்பித்து எழுதியதால் இதைச் சொல்ல விழைகின்றோம். எங்கள் கருத்து தவறு என்றால் மன்னிக்கவும், உங்கள் திருத்தங்களை வரவேற்கின்றோம்.

    சமஸ்க்ருதம் ஒரு மொழியாக இருக்கலாம். ஆனால் அது தேவ மொழி என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி நோக்கினால் எல்லா மொழிகளும்தான். தமிழில் சொல்லப்பட்ட அறம், நெறி போன்ற மிக மிக உயர்வான தத்துவங்கள் எந்த மொழியிலும் இருப்பதாகத் தெரியவில்லை எங்கள் சிற்றறிவிற்கு எட்டியவரை.

    இரண்டாவதாக, நீதி மன்றங்களில் ஏன் பகவத் கீதை சத்தியப் பிரமாணம் செய்ய கொடுக்கப்படுகின்றது. பகவத் கீதையில் சொல்லப்படுவது எல்லாமே சரியாகக் கொள்ள முடியவில்லையே. அதைக் கிருட்ணர் எழுதினார், அவர் கடவுள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால். ஆனால் அவர் ஒரு அரசரே. அது சமஸ்க்ருத மொழியில் இருப்பதாலா? அப்படி என்றால் நம் நாடு ஒரு சாராரை மட்டுமே ஏற்றுக் கொள்வது போலத்தானே ஆகின்றது? செக்குலர் நாடு என்று சொல்ல முடியாதே! பகவத் கீதை சத்தியம் செய்வதற்கான புத்தகமாகச் சொல்ல முடியாது என்பது எங்கள் தாழ்மையான கருத்து. அதற்கு பதில் திருக்குறளை வைக்கலாம் அது மத, சாதி இனம் சார்பற்றது. உலகப் பொதுமறை. எந்த நாட்டவருக்கும் பொருந்தும் ஒன்று அதனால் தானே உலகப் பொதுமறை எனப்படுகின்றது? எந்த ஒரு மதம் சம்பந்தப்பட்ட புத்தகமும் வேண்டாமே சத்தியம் செய்ய? எல்லோருக்கும் பொதுவாக நீதி உரைக்கும் ஒன்றை சத்தியம் பிரமாணம் செய்ய வைக்கலாம். ஆனால் அதுவும் அவசியம் இல்லையே. நம் மனம் ஒன்று போதாதா? ஒரு புத்தகத்தின் மீது சத்தியம் செய்வதால் நாம் உண்மை உரைக்கப் போகின்றோமா? இல்லையே அனீதிதானே நடக்கின்றது? அப்படி இருக்க இன்னும் ஏன் இந்த வழக்கங்கள் உள்ளன. ஒருவர் தனக்கே நேர்மையாக இல்லாத போது அங்கு அறம் நெறி இல்லாமல் ஆகிவிடும் போது இது போன்ற வழக்கங்கள் அவசியமில்லை என்பது எங்கள் தாழ்மையான கருத்து. ஆசானே!

    தலைப்பு மிக மிக அருமை! ஆசானே!

    ReplyDelete
  21. குறள் இந்து மதத்திற்கு உரியது அல்ல என்று ஆய்வுகள் நிறுவும் வேளையில் நான் வர்ணம் ஐந்து வர்ணம் என்று சொல்வது ஏற்புடையதல்ல..
    நம்மவர்கள் நடுவுநிலை எடுப்பதே இல்லை.
    எல்லோரையும் அவர்களை சார்ந்தவர்கள் ஆக்கிவிடுன்கின்றனர்.
    தம +

    ReplyDelete