Monday 25 May 2015

நொடிப்பொழுதில் என்ன நடக்கிறது?; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.(7)


இந்தப் பதிவை நீங்கள் படிக்க நொடிப்பொழுதிற்குச் சற்று அதிக நேரம் ஆகலாம். ஆனாலும் இங்குப் பகிரப் போவது நொடியின் அளவில் என்ன நடக்கிறது என்பது குறித்தே..!


எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவை மாத்திரை என்று இலக்கணங்கள் சொல்லும். நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதனை அளக்க கண் இமைத்தலையும் கை நொடித்தலையும் அளவாக அவை கொள்கின்றன.

ஏன் இவ்விரண்டனையும் சொன்னார்கள் என்பதற்கு நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் காரணம் சொல்கிறார்,

கண்ணிமைத்தலுக்கு ஆகும் கால அளவை மற்றொருவன் கண்ணால் கண்டு அறியலாம்.

கை நொடிக்க ஆகும் அளவை ஒருவன் காதால்  கேட்டு அறியலாம்

கட்புலனாதல், செவிகருவியாகக் கொண்டு அறியப்படுவதல் ஆகிய இரு காரணங்களால் இந்த இரண்டனையும் எழுத்தின் ஒலி அளவை உணரும் கருவியாகக் கொண்டிருக்கிறார்கள்.

சரி கண்ணிமைத்தல் என்பதை ஏன் முதலில்   சொல்ல வேண்டும் என்றால் அது இயற்கையாகத் தோன்றுவதால் முதலில் சொல்லப்பட்டது.

கையை நொடித்தல், செயற்கையாகத்  தோற்றுவிக்கப்படுவதால் அடுத்துச் சொல்லப்படுகிறது என இந்த வரிசைக்கும் காரணம் சொல்கிறார்கள்.

மயிலைநாதர் சொல்கிறார்,

விகாரப்படாதே இயல்பாக நின்ற மாந்தருடைய கண்ணிமையும் கைந்நொடியும் ஆண்டுச் சொன்ன மாத்திரைக்கு அளவாம் என்றவாறு.
கட்புலனாகிய இமைக்காலமும் செவிப்புலனாகிய நொடிக்காலமும் கருதிக்கோடற்கு இரண்டும் ஓதினார் என்க

சரி ஒரு மாத்திரை என்றால் சரி,

மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை, மகரக் குறுக்கத்திற்கு கால் மாத்திரை என்றெல்லாம் இலக்கணத்தில் சொல்லுகிறார்களே..?

அதை எப்படி அளப்பது..?

பின்னால் வந்த முத்துவீரியர் என்னும் இலக்கண ஆசிரியர் சொல்கிறார்.

“ கை சொடுக்கும்போது பார்.

நீ கையை சொடுக்க வேண்டும் என நினைத்தல் கால் மாத்திரை.

அவ்வாறு நினைத்து நடுவிரலையும் கட்டைவிரலையும் சேர்ப்பது அரைமாத்திரை.

அப்படிச் சேர்த்துச் சொடுக்குவதற்காக இருவிரல்களையும் முறுக்கினால் அப்போது முக்கால் மாத்திரை ஆகியிருக்கும்.

முறுக்கிய இருவிரல்களையும் விடுவித்துச் சொடுக்கும் ஓசை பிறக்கும் போது அந்நொடிப்பு முயற்சியில் இருந்து ஓசை பிறக்கும் வரை ஒருமாத்திரை அளவு ஆயிருக்கும்.”


“உன்னல் காலே ஊன்றல் அரையே
முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே”

என்கிறது அவர் செய்த சூத்திரம்.

நம் பதிவொன்றில் இச்செய்தி ஏற்கனவே சொல்லப்பட்டதுதான்.

தமிழர் அளவை முறைகளில் ஒருவகை அளவை முறை இப்படி அளப்பது.

பண்டைய தமிழர் அளவைமுறைகளில் இப்படி அளத்தல் எந்த அளவை முறையில் படும்?

தெரிந்தவர்கள் கூறலாம்.

மற்றவர்கள் காத்திருங்கள்.

அடுத்த பதிவில் காணலாம்.


வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்!

படம் நன்றி.https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

54 comments:

  1. அடேங்கப்பாடியப்பா!...

    தமிழர்களின் அளவீட்டு முறைகள் எந்த அளவுக்குத் துல்லியமாக இருந்திருக்கின்றன என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துகாட்டு இந்தப் பதிவு!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.


      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. மாத்திரையிலும் நுண்ணிய அளவாக இன்னும் என்னவெல்லாமோ இருக்கின்றன போலும். நண்பர் ஒருவருடைய பதிவில் இருந்து குரு என்ற ஒன்றும் ஒரு கால அளவை என்று படித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      நீங்கள் சொல்ல வருவது சரிதான்.


      குரு என்பது இரண்டு மாத்திரை , நொடியை விடக் குறைந்த அளவு குழி என்றெல்லாம் நீங்கள் சொல்வதை வைத்து விக்கியில் தேடிய போது கிடைத்தது.

      இரண்டு முறை கண்ணை இமைத்தல் என்பது ஒரு முறை கையை நொடித்தலுக்குச் சமம் என்கிறார்கள்.

      ஒரு மாத்திரை என்பது இரண்டு முறை கையை நொடித்தல் என்கிறார்கள். அதற்குக் கணக்கதிகாரம் என்ற நூலைச் சான்று காட்டியும் இருக்கிறார்கள்.

      ஆனால் நம் இலக்கண நூல்களில் நான் அறிந்த வரையில், கை நொடி அளவும் கண்ணிமைக்கும் அளவும் ஒன்றுதான்.

      எழுத்துகளை அளக்க மாத்திரை என்ற அலகன்றி வேறு பயன்படுத்தப்பட்டதாய் நினைவில்லை.

      தங்கள் நினைவில் தோன்றிய தொடர்புடைய செய்தியை இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      Delete
  3. அளவைகள் விளக்கம் அருமை...

    காத்திருக்கிறோம்...அடுத்த பதிவிற்கு.....

    தம +1

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.

      சற்றுச் சமயம் கொடுங்கள்.

      உங்கள் பதிவுகளைப் பொறுமையாய்ப் படித்துக் கருத்திட.


      நன்றி.

      Delete
  4. ஆஹா இது தான் வார்த்தைகளை அளந்து பேசு என்கிறார்களா ஹா ஹா.... சரி அளந்தே பேசிடுவோம் சும்மா kidding ... மீண்டும் வருகிறேன். ம்..ம் தேன் தமிழ் தான் போங்கள். அதனால் தான் தமிழுக்கும் அமுதென்று பெயர் என்று பாடியுள்ளார்கள் இல்ல.

    ReplyDelete
  5. #நீ கையை சொடுக்க வேண்டும் என நினைத்தல் கால் மாத்திரை.
    அவ்வாறு நினைத்து நடுவிரலையும் கட்டைவிரலையும் சேர்ப்பது அரைமாத்திரை.

    அப்படிச் சேர்த்துச் சொடுக்குவதற்காக இருவிரல்களையும் முறுக்கினால் அப்போது முக்கால் மாத்திரை ஆகியிருக்கும்.
    முறுக்கிய இருவிரல்களையும் விடுவித்துச் சொடுக்கும் ஓசை பிறக்கும் போது அந்நொடிப்பு முயற்சியில் இருந்து ஓசை பிறக்கும் வரை ஒருமாத்திரை அளவு ஆயிருக்கும்.”#
    இவ்வளவு சிரமப்படக் கூடாது என்று ஒரு கண்ணை இமைத்தால் வம்பு வந்து சேருதே :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு கண்ணை இமைக்கக் கேட்கும் ஓசையை “ அறை ” மாத்திரை என்று சொல்லலாமா பகவானே?:))

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. ஆகா..! நல்ல விளையாட்டு..

      கடவுள் உம்மை ஆசீர்வதிப்பாராக,

      Delete
    3. அண்ணா!!!
      இந்த பகவான் பாஸ்சும் நீங்களும் பண்ணுற லொள்ளு தாங்க முடியல:)))

      Delete
  6. எவ்வளவு துல்லியமாக நம் முன்னோர்கள் காலத்தை கணித்திருக்கிறார்கள். பயனுள்ள பதிவு நண்பரே!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. தொடர்கின்றமைக்கு நன்றி தோழர்.

      Delete
  7. வணக்கம்
    ஐயா
    தமிழில் உள்ள மாத்திரை அளவீட்டை ஆதாரங்களுடன் விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... பள்ளிக்காலத்தில் உயர்தரத்தில் தமிழ் பாடம் படித்தது போல ஒரு உணர்வு தெளிவான விளக்கம்... பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் ஐயா. அறியாத விடயங்கள் எல்லாம் அறிகிறோம்... தங்களின் பதிவுவழி த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. என்னே விளக்கம்... பாராட்டுகள்...

    ReplyDelete
  9. கை நொடித்தலில் இவ்வளவு உள்ளதா? மிகவும் நுணுக்கமாக எழுதப்படும் உங்களது பகிர்வுகள் பயனுள்ளவையாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி முனைவர் ஐயா.

      Delete
  10. ஆத்தாடி எண்ணுவதற்கெல்லாம் மாத்திரை தந்துள்ளது வியக்க வைக்கின்றது சகோ.

    ReplyDelete
    Replies
    1. கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கவிஞரே...!

      Delete
  11. பண்டைய தமிழர் அளவை முறைகளில் இப்படி அளத்தல் எந்த அளவை முறையில் வருகிறது என அறிய காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. அய்யா இங்கு என் வருகைக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.வருந்துகிறேன்.இவைக் குறித்த தங்கள் பதிவு ஒன்று காலக்கணிதம் சில நாட்களுக்கு முன்ன தான் படித்தேன். காளமேகப்புலவரின் பாடல் விளக்கத்தோடு, இங்கே மாத்திரை, பண்டைத் தமிழர் அளவு முறைகள் தெரியும். இது எது குறித்து என்று தாங்கள் சொல்லுங்கள்.தங்கள் பதிவில் சொன்ன இருமா??????????

    ReplyDelete
    Replies
    1. காலக்கணிதத்தில் பகிர்ந்து அளவை அன்று இது.

      இதை அறிய நீங்கள் நச்சினார்க்கினியரிடத்தில் போய் நிற்க வேண்டும்.

      அடுத்த பதிவில் சொல்கிறேன் பேராசிரியரே!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  13. எங்களுக்கு உம்மைப்போல் ஒரு தமிழாசிரியர் கிடைத்திருந்தால் யாமெல்லாம் கவியாகி இருப்போமய்யா..

    தமிழின் அருமையைக் காணக் காண உள்ளம் தேனில் நிறைகிறது.

    உமது பின் புலம் யாதோ?

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. சொல்லத்தக்க பின்புலம் ஒன்றும் எமக்கில்லை ஐயா..!

      இங்கு ஏதோ படித்ததைப் பகிர்ந்து போகிறேனே தவிர நான் தமிழாசிரியனும் இல்லை.

      தங்களைப் போன்றோரின் வருகையும் பின்னூட்டமுமே என்னைச் சுறுசுறுப்பாக இயக்குகின்றன.

      தங்களது வருகைக்கும் ஆசிக்கும் நன்றிகள்.

      Delete
    2. அவையடக்கத்துடன் உங்கள் பதில் எனக்கு திருவிளையாடல் படத்தில் அம்மையப்பன் விறகு வெட்டியாக வந்து பாணபத்திரருக்கு சொன்னதைப்போல இருக்கிறது.
      உமது மொழித்திறனும் அறிவும் மெய்யாலுமே மெச்சத்தகுந்தது. அது மட்டுமல்ல தமிழென்றாலே எட்டப்போகும் தற்போதைய தலைமுறைக்கு தங்களைப்போன்று எளிமையாக மொழியை கையாளவும் பயிற்றுவிக்கவும் தெரிந்தவர்களின் தேவை மிக அவசியம்.
      உம்முடையது பெரும் சேவையாகவே எமக்குப் படுகிறது.

      God Bless You

      Delete
  14. ஆஹா தங்களின் இமைக்கும் நொடி இப்பதான் படித்தேன். அறிந்தேன் அளவை, அது சரிதானே, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அங்கு விளக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

      இதோ பார்க்கிறேன்.


      நன்றி

      Delete
  15. சென்ற பதிவில் நான்கும், இப்பதிவில் நான்கும் மாத்திரை போல் தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா!

      மாத்திரை என்னும்போது சிறுவயதில் நானும் அப்படித்தான் நினைத்துக் கொள்வதுண்டு ;))

      தங்களி்ன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  16. ஆச்சரியமான தகவல்கள் தொடர்கின்றேன் கவிஞரே...
    உங்கள் பதிவில் நொடிப்பொழுதில் தமிழைப்படிக்க முடியாதே....
    தமிழ் மணம் பகடை 12

    ReplyDelete
    Replies
    1. நொடிப்பொழுது காலம் எழுத்திற்குரியதல்லவா..?

      பதிவில் எப்படி....?

      இது பகடியோ..? :))

      ஒருசேர இரண்டு பகடைகளை உருட்டியதற்கு நன்றி!

      Delete
  17. மிகவும் தெளிவான விளக்கவுரை!

    ReplyDelete
  18. தெரிந்து கொண்டேன்.நன்றி

    ReplyDelete
  19. ஒரு நொடியின் அளவில் என்னவெல்லாமோ நடக்கலாம் கனவில் நிகழ்வுகள் கால அளவையில்மிகக் குறைந்த அளவில் நொடிக்கும் குறைந்த அளவில் நம்பமுடியாத நிகழ்வுகள் எல்லாம் கனவில் நடக்கலாம் ஏன் ஒரு வாழ்க்கையே வாழ்ந்து விடலாம். இது பற்றி உங்கள் கருத்தோ தொன்மைத் தமிழில் ஏதேனும் கருத்தோ இருக்கிறதா.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நொடியில் என்றல்ல, இவ்வுலகு யாரோ எங்கிருந்தோ காணும் கனவு என்பதுபோல் எலலாம் சாத்திர நூல்கள் காட்டுகின்றன.

      அங்கு உறங்கும் போது இங்கு உயிர் பிறக்கிறது.

      உறக்கம் கலைந்து விழிக்கும் போது இங்கு உயிர் போய்விடுகிறது.

      என்றெல்லாம் கருத்துகள் உண்டு.

      கூடும் எனின் சமய இடுகைகளைச் சமணம் பௌத்தம் எனத் தொடரும்போது அவை குறித்து விவாதிக்கலாம்.

      தங்களின் மீள்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  20. கண்ணிமைக்க கைநொடிக்க காலம் அளவிட்டு
    சொன்னவர்கள் அற்புதமாய்ச் சிந்தித்து தன்னறிவை
    கூட்டிப் பெருக்கி கொடுத்தாரோ வையமுய்ய
    நீட்டி முழக்காமல் இதை!

    அருமையான விடயங்களை எல்லாம் எடுத்து அளந்தே தருகிறீர்கள். மாதுளை பிளந்து வரும் முத்துக்கள் என்பேன் அனைத்தும். சிதறாமல் தந்து விடும் பக்குவம் கண்டு சிலிர்க்கிறேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் viju தொடருங்கள் ..!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அழகிய வெண்பாவிற்கும் நன்றி அம்மா.

      முழக்காமல் இதை என்பதை முழக்கா திதை என்றால் இலக்கணம் சரியாகும்.

      ( ஏண்டா! இந்த வேண்டாத வேலை! ஒரு வெண்பாவை எழுதிப் பின்னூட்டம் இட்டால் அதில் நூறு குற்றம் கண்டுபிடித்துக் காட்டாவிட்டால் தூக்கம் வராதே உனக்கு... என முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.)

      நன்றி

      Delete
    2. குட்டுப் பட்டாலும் மோதிரக் கைதானே ஆகையால் வலிக்காது ஹா ஹா ....
      சொல்லாவிட்டால் தான் தப்பு. தப்பிருந்தும் கண்டுக்காம எனக்கென்ன என்று போவதாக எண்ணி வருத்தப்படுமே இப் பொல்லாத மனது .

      Delete
  21. கால், அரை மாத்திரைக்கு முத்துவீரியம் சொல்லியிருக்கும் சூத்திரம் சிறப்பு. தமிழர் பண்டைய முறையில் இப்படி அளத்தில் எந்த அளவை முறை என்பது பற்றி அறியக் காத்திருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  22. வணக்கம் பாவலரே !


    இலகு நடையில் மாத்திரை விளக்கம் தந்து எல்லோருக்கும் இலக்கணத் தெளிவுதரும் தங்கள் பணி என்றும் தொடர வாழ்த்துகிறேன்
    வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  23. நானும் பள்ளியில் படிக்கும்போது நினைத்திருக்கிறேன் அண்ணா! காய்ச்சல் வந்தால் அரை மாத்திரையை அம்மா உடைத்துத்தர பெரும் பாடுபடுவார். அது நினைவுக்கு வரும்:))) இதை இப்படிதான் பிரிக்கணுமா??!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நானும் அண்ணனும் இப்படிச் சொல்லிக் கிண்டலடித்துக் கொள்வோம்.

      ஒரு சிக்கலுக்குச் சுவையாக தீர்வு கண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

      வேறு வழியை அரைமாத்திரைக்கெல்லாம் யாரும் கூறியதாகத் தெரியவில்லை.

      அறை மாத்திரைக் கல்ல :))

      நன்றி.

      Delete
  24. வகுப்பிற்கு மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் ஆசானே! வேலைப் பளு. மட்டுமல்ல தங்கள் பதிவுகளை நிதானமாகப் படிக்க வேண்டும். அதனால் தான்...

    மாத்திரை அளவை பற்றி பள்ளியில் படித்தது நினைவிருக்கிறது (ஹப்பா இதாவது நினைவிருக்கிறதே!!!) இப்போது அதைப் பற்றிக் கூடுதல் விளக்கங்களுடன் தங்கள் பாடம், ஆசானே! கற்றுக் கொண்டிருக்கின்றோம். இத்தனை அறிவார்ந்த தாங்கள் உங்கள் அறிவால் எங்களை வியக்க வைப்பதுடன் தங்களது தன்னடக்கம் அதை விட வியக்க வைக்கிறது!!! அதையும் கற்றுக் கொள்கின்றோம். நிறைகுடம் தளும்பாது என்பதற்கு தாங்கள் ஒரு சிறந்த உதாரணம்! ஆசானே! தொடர்கின்றோம்..

    ReplyDelete

  25. வணக்கம்!

    முன்னோர் உரைத்த மொழிநுாலை நான்குணர்ந்து
    இன்தேன் சுரக்க எழுதுகின்றீர்! - என்வாழ்த்து!
    மாத்திரைக்கு இங்கு மதிபுரை தந்துள்ளிர்
    பாத்துறை யாவும் பகுத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete