Thursday 16 April 2015

நான் தோற்ற க(வி)தை


நமக்கும் நாலு எழுத்துத் தமிழில் பிழையின்றி எழுதத்தெரியும் என்றும் நாம் எழுதுவது எல்லாம் கவிதை என்றும், காதலைப் பற்றியும் தமிழைப்பற்றியும் எழுதுவதே தமிழ்க்கவிதை மரபென்றும் துள்ளித் திரிந்த காலத்தில் எழுதப்பட்டு, கவிதைப் போட்டியில் போராடித் தோற்றுப் போன கவிதையின் ஒரு பகுதி இது. உண்மையில், இதை எழுதும் போது நிறைய உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்  என்பது தெரிகிறது. இதை இன்று தட்டச்சுச் செய்யும் போதும் கூட இறந்த காலத்தில் நான் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழ்க்களங்கள் நினைவுக்கு வருகின்றன.

இக்கவிதை நிராகரிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.

நான் எழுதியது அல்ல என்பது ஒன்று. ( பிறகு இது மிகுந்த பரிசீலனைக்கும் சோதனைக்கும்  பிறகு ஒருவாறாக ஏற்கப்பட்டது. )

இன்னொன்று இதில் இருக்கின்ற நாகரிகமற்ற, கவிதையின் புனிதத்தை அசுத்தப்படுத்தியதாகக் கருதப்பட்ட ஒரு சொல்லாட்சி.

அன்றும் எனக்குப் பரிசு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இல்லை. இன்னொருவருடையதைத் திருடி எழுதினேன் என்ற  குற்றச்சாட்டில் இருந்து மீண்டேனே என்ற மகிழ்ச்சிதான் இருந்தது.


சித்திரைக்கும் அத்தைக்கும் என்ன சம்பந்தம் என்ற பதிவினை இட  மேற்கொண்ட தொல்பொருளாய்வில் எனக்கு மீளக் கிடைத்தவற்றின் சிறு பகுதி இது. பழைய ஞாபகங்களும், ஆசிரிய அறை முன்பு கண்ணீரோடு நின்ற ஒரு முதிர்ச்சியற்ற சிறுவனின்  காட்சியும் மீண்டும் இதைக் காணும்போது என் நினைவில் தோன்றுகிறது.

நாம் எழுதுவதைப் படிக்கவும் கருத்திடவும் ஆட்கள் இருக்கின்றார்கள் என்று அறிந்தபின் இதைக் காண்போர் கருத்துரைத்தால் அதைவிடச் சிறந்த பரிசு எனக்கில்லை என்பதை உணர்ந்து கொண்ட   இன்று இதைப் பதிவிடுவது,  இழந்த பரிசினைவிட உயரிய உங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளைப் பெறும் நோக்கத்தினாலேயே.

உங்கள் கருத்து இதைக் கவிதை இல்லை என்பதாய் இருப்பினும் இதைப் படித்துப் பகிரும் உங்கள் கருத்துகளை என்றும்விலைமதிப்பற்றவையாகவே கருதுவேன்


உருகும் இருள்பற்றி நின்றேன்! – அதை
   ஒடுக்கி ஒளியூட்டும் முகம்காட்டி வந்தாள்!
‘அருகில் வா‘வென்றே என்னைக் – கொஞ்சி
   அழைக்கச் செல்கின்றேன் அழகிற்கும் அன்னை!
பெருகும் ஒளிப்பேழை பூவை – இந்தப்
    புவியில் இதுபோல நான்கண்ட தில்லை!
‘தருவேன் எதுவேண்டும்‘ என்றாள் – இன்பத்
    தருவோ? தமிழின்பத் துயிர்பூக்க நின்றேன்!

‘வெல்லும் படை வேண்டும்‘ என்றேன் – ‘உன்
    வீரத்தை விலையாகத் தருவாயோ‘ என்றாள்!
‘புல்லின் இழிவாக லாமோ? – அம்மா
    புழுவின் நிலையுன்றன் புதல்வனுக் காமோ?‘
சொல்லில் சுடர்கின்ற நோக்கில் – எனைச்
    சுட்டெரித்  தாடிச் சுழல்கின்ற கண்ணில்
மெல்ல அவளொன்று சொன்னாள்! – அது
     “மேன்மை இழந்த குடிவர லாறு!”

மலையைத் தகர்த்தவன் வீரம்! -  உடல்
    மண்டியி டாமலே ஆண்டவன் தீரம்!
கலைகள் வளர்த்தவன் மேன்மை! - பொரு
      களத்திடைப் புலியென நின்றவன் ஆண்மை!
தலையை அறுத்த‘அக் கைகள்! – தமிழ்
     தாங்கிய மார்பினுக் கேங்கிய வேல்கள்!
நிலைகெடும் செயலில்‘இன் றாழ்ந்தான்! – அய்யோ
     நிற்கவும் காலின்றி நிலத்திலே வீழ்ந்தான்!

தன்னுடை பெருமையும் அறியான்! – இவன்
    தாழ்ந்தது தன்மொழி இனமெனும் நெறியால்
கண்ணடைத் திருளென்றே உரைப்பான்!- ஒளி
    காட்டினால் நான்சற்றுக் குருடெனக் குரைப்பான்!
புண்ணுடை நெஞ்சத்தை அன்று – பாடிப்
    புகழ்ந்தநாள் போனது போனதே என்றே
எண்ணிட வழிகளைச் செய்வான்! – மீண்டு
    எழுந்தென்று தன்னுடைப் பகைதலை கொய்வான்?

மொழியென்றும் இனமென்றும் காக்க – உயிர்
      மயிரென்ற மாவீரக் கடலின்று வற்றி
இழிந்தசாக் கடையாக ஓடும்! – அது
     இயல்பென்று மலந்தின்னிப் பன்றிகள் ஆடும்!
கழியுமோ இதைக்காண என்னால்? – ‘மானம்
      கடையிலோ கிடைத்திடும்?‘ என்பவன் முன்னால்
விழிகள்ஏன் நான்காண என்றாள் – கண்ணீர்
       வீழ்ந்ததென் கைகளில் ஐயகோ அம்மா!

‘சங்கத் தமிழ்வாழ்ந்த மண்ணும் - வெற்றுச்
    சருகெனப் போவதோ?’ என்றவள் கண்ணீர்
பொங்கத் துடித்தெழு கின்றேன்! – மேகப்
     போர்முகம் மின்னல்வாள் பொருதிடும் வானில்!
எங்கும் ‘தமிழ்தமிழ்’ என்றே – இடி
     ஏற்றுமுழங்கிடக் கண்டன கண்கள்!
தங்கள் இனம்காத்த மாந்தர் – சிறு
     துளியென வீழ்ந்து பெருமழை யானார்!

பட்டுத் தெறிக்கின்ற உடல்கள் – எனைப்
      பற்றித் துடித்துத் தங்கதை சொல்லி
இற்று விழுகின்ற மண்ணில் – ஆஆ
     எம்மினம் எம்மொழி என்றென்றும் வாழும்!
கற்றுத் தெரிந்திடா காட்சி – இதைக்
      கற்பனை என்பதோ? காலமே சாட்சி!
சற்றுத் தெளிந்தவான் திங்கள் – எனைச்
      சாடிச் சிரித்திடும் தமிழ்ப்பத ரென்றே!

-------------------------------------------------------------------------------------------------------------------------



பின்னுரை

பொதுவாகக் கவிதைக்குப் பொருள் சொல்லுதல் என்பது, அதன் தன்னளவிலான பெருவீச்சினைக் குறுக்கிவிடுகிறது என்பது என் எண்ணம். அதிலும் எழுதியவனே பொருள் சொல்லிப்போகும் போது, வேறு பார்வைக்கான சூழலை அது இழந்துவிடுகிறது. எனினும் புரியாமை என்பதை அப்படியே விட்டொதுக்கிப் போக முடியாததால் இப்பொருள் உரை.
இன்னும் இதனுள் உட்கடக்கும் சாத்தியத்திற்காகவே இதைக் கூறிச்செல்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கவிதையின் தோற்றம் கனவிற்கும் நினைவிற்கும் இடையில் நிகழ்கிறது.
வானம் பார்த்துக் கிடக்கும் இரவு.

1) உருகும் இருளில் அவன் கிடக்கிறான்.

அந்த இருளை ஒடுக்கி ஒளி முகத்தோடு வந்தவள் “அருகில் வா” என அவனை அழைத்தாள்.

உருகும் இருள் ஒடுக்கிப் பெருகும் ஒளிப்பேழையில் நின்றெழும் அப்பெண் அழகிற்கெற்கெல்லாம் தாயாக இருப்பாள் போலும்.

அது போன்ற ஒருத்தியை இந்த உலகத்தில் அவன் கண்டதில்லை.

அவள் அவனிடம் “ உனக்கு என்ன வேண்டுமோ கேள்! தருகிறேன் ” என்றாள்.

இன்பத்தின்  மரமோ ( தருவோ ) அவள்?

அவள் தமிழ்….தமிழின் இன்பம்….அவளால் அவன் உயிர் பூத்தது என அறிந்து அவன் சிலிர்த்து நிற்கிறான்.


2) என்ன வேண்டும் எனக் கேட்ட அவளிடம், “ வெல்லும் படை வேண்டும் ” என்கிறான்.
உன்னால் போராடி வெல்ல முடியாது என்றால் உன்னிடம் உள்ள வீரம் எதற்கு? அதை எனக்கு விலையாகக் கொடு! நான் நீ கேட்ட படையைத் தருகிறேன் என்றாள் அவள்.
பதைபதைத்துப் போகும் அவன், “அதைக்கொடுத்துவிட்டு, புல்லைவிட இழிவாகவும், புழுவாய்க் கிடக்கின்ற நிலைபட்டும் உன் மகன் கிடக்கலாமோ அம்மா ” எனக் கேட்கிறான்.

அவள் பார்வை சொல்லின் சுடர்.
அவள் கண்கள் சுட்டெரித்துவிடுவதைப் போல அவனை நோக்கிக் கூறத் தொடங்கியது,..

அது

மேன்மை இழந்த இனத்தின் வரலாறு

3) அவள், மலைபோன்ற பகையையும் எதிர்நின்று தகர்த்தவனின் வீரத்தைச் சொன்னாள்.

உயிர்போன நிலையில் உடலால் கூடப் பிறர் கால்  வீழாதவனின் தீரத்தைச் சொன்னாள்.

கலைகளை வளர்த்தவனின் மேன்மையைச் சொன்னாள்.

போர்க்களத்தில் புலியென அச்சமற்றுப் பாய்ந்தவனின் ஆண்மையைச் சொன்னாள்.

போரில் வெல்லத் தலைப்பலியாகத் தன்தலையைத் தானே அறுத்துப் படையலிட்ட நடுக்கமற்றவனின் கைகளைச் சொன்னாள்.
தலைப்பலியிடுவோன் சிற்பம்

(  பண்டைய போர்மரபில் போர் தொடங்கும் முன்  தன்கழுத்தைத் தானே வெட்டிப் படைக்கும் மரபு இருந்துள்ளது )

ஓடும் கோழைகளின் புறத்தில் தைக்கப்படாமல், தமிழ் தாங்கிய வீர மறவரின் மார்பில் பாய்ந்து புகழ்படைக்க ஏங்கிய வேல்கள் பற்றிச் சொன்னாள்.

இப்படிப்பட்டவன், இன்றோ, தன் நிலையைத் தாழ்த்தக் கூடிய செயல்களில் ஈடுபடுகிறான்.

தன் காலில் நிற்கவும் வலிமையற்று நிலத்தில் வீழ்கின்றவனாய் இருக்கிறான்.

4) தன்னிடம் உள்ள பெருமைகள் இன்னதென்று அவன் அறியவில்லை.
தன் இனமும் மொழியும் தாழ்ந்தது என்கிற தாழ்வு மனப்பான்மையினால் ஒடுங்கிப்போய், கண்களை மூடிக்கொண்டு இருள் இருள் என்கிறான்.

வெளிச்சம் இங்கிருக்கிறது என்று சொன்னாலும் ‘நான் குருடு எப்படி என்னால் ஒளியைக் காண முடியும்?’ என்கிறான்.

விழுப்புண்களை விரும்பி ஏற்ற வீர நெஞ்சங்களைப் புகழ்ந்தநாள் போனது போனதுதான் அது இனித் திரும்பி வரப்போவதில்லை என்று எண்ணிடும் வழிகளையே செய்து கொண்டிருப்பவன், மீண்டெழுந்து தன்னை உடைக்கின்ற, (அல்லது தன்னுடைய) பகை தலைகளை என்று சாய்க்கப்போகிறான்?

5) மொழியையும் இனத்தையும் காக்க வேண்டி வந்தால், ‘உயிர் தன் மயிருக்குச் சமம்‘ என்று சொன்ன மாவீரக் கடல் இன்று வற்றிப் போய்ச்
சிறிய சாக்கடையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது பற்றிய எந்தக் கவலையுமற்று அதில் உறை பன்றிகள் அங்குக் களித்து ஆடிக் கொண்டிருக்கின்றன.

இதை என்னால் காண முடியுமோ? ‘மானம் என்றால் எந்தக் கடையில் கிடைக்கும்?’ எனக் கேட்பவனைப் பார்த்திருக்க எனக்குக் கண்கள் எதற்கு? என்று கேட்டவளின் கண்ணீர் அவன் கைகளில் வீழ்ந்தது.

5) சங்கத் தமிழ் வாழ்ந்த மண் இன்று  உலர்ந்த சருகெனக் காய்வதோ என்று சொன்னவளின் கண்ணீர் தன்மேல் விழ, அவன் திடுக்கிட்டெழுகிறான்.

வானத்தில் மேகப்போர் முகம். மின்னல் வாள் வீச்சு. இடிகளில் முழக்கம் தமிழ் தமிழ் என்றிடக் காண்கிறான்.

தங்களின் இனத்தைக் காத்த மாந்தர் சிறு சிறு துளிகளாக அவன் மேல் விழத்தொடங்கினர்.

பெருமழையாய்ப் பெருக்கெடுக்கின்றனர்.

5) மழையென விழும் அவ்வீரர் தங்கள் ஒவ்வொருவரின் கதைகளைச் சொல்லியபடியே அவன்மேல்பட்டுத் தெறித்தனர்.

மண்ணில் வீழ்ந்தனர்.

அங்கு வாழும் விதைகளுக்கு உயிர்ப்பூட்டச் செல்கின்றனர்.

எனவே எம் மொழியும் எம் இனமும் என்றென்றும் வாழும்.

அவனுக்கு நிகழ்ந்த இவ்வனுபவம், அவன் கற்ற அறிவிற்கு எட்டாதது.

இதை வெற்றுக் கற்பனை எனச் சொல்ல முடியுமா எனில் அதற்கு இக்காலமே சாட்சியாகும். 

மழை மெல்ல ஓய்ந்து வானம் சற்று தெளிவுற்றது.

இவ்வளவையும் பார்த்ததுக் கொண்டிருந்த நிலவு, ( திங்கள் ), அவனின் கனவு கனவுதான் என்பதுபோலத் ‘தமிழின் பதர் நீ’ என இகழ்ந்து சிரித்தது.
அது யாருடைய குரல்..............................................???





பட உதவி -http://2.bp.blogspot.com/
தலைப்பலிச் சிற்பம் - நன்றி https://upload.wikimedia.org/


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

53 comments:

  1. சொற்களின் பயன்பாடு சரியல்ல என்று அவர்கள் எண்ணினாலும்,
    அச்சொல்லிலும் அதன் பயன்பாடும்
    உணர்த்தும் நோக்கம் தமிழல்லவா
    அருமை நண்பரே
    தம 2

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  2. தம 3
    அட அட அட என்ன ஒரு சொல் விளையாட்டு புல்லரிக்கும் படியாக இதைப் பார்த்தால் இந்தச் சிறுவன் எழுதியிருக்க முடியாது என்று நினைப்பதில் என்ன ஆச்சரியம். அதுவே உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் தானே. இதில் நீங்கள் ஒன்றும் தோற்கவில்லையே எங்கும். எல்லாமே முத்துக்கள் தான் எப்படி சேர்ப்பது என்று திகைத்து அல்லவா நிற்கிறேன். மீண்டும் வருகிறேன் மிக்க நன்றி பதிவுக்கு.!

    ReplyDelete
    Replies
    1. இது சொல்விளையாட்டில்லையே அம்மை :(
      ம்ம்
      மீண்டும் வாருங்கள். :)
      வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
    2. நமக்கு இது விளையாட்டு இல்லை தான் ஆசானே உங்களுக்கு அப்படியில்லையே வார்த்தைகளை பந்தாக அல்லவா உருட்டி விளையாடியிருக்கிறீர்கள் அனாயாசமாக அதுவும் அந்த வயதில் கட்டுக்கடங்காமல் மெட்டுபோட்ட பாடல்களை பாடிக் பார்ப்பவரை எல்லாம் கலாய்க்கும் நேரத்தில் சொக்கும் படி கவிதை புனைவது என்பது எளிதா. ராமர் வில்லை தூக்கியது போலவே இப் பொல்லாக் கவியெல்லாம் புல்லாகப் போயிற்றே உமக்கு ஆச்சரியப் படும் வகையில். அதனாலேயே நம்ப முடியாது போயிற்று அவர்க்கு. அதுவே உங்களை இன்னும் வளர்த்தெடுக்க நிச்சயம் உதவியிருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் வளர என் வாழ்த்துக்கள் ...!

      அரும்புமீசை உன்னில் அரும்பிடும் முன்னரே
      விரும்பும் வகையில் உருவான மாலை
      குறும்போடு கூடிய சொற்களைக் கோர்த்து
      விருந்தாக வைத்த கரும்பு !

      Delete
  3. வணக்கம்
    ஐயா.

    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்...ஐயா... பகிர்வுக்கு நன்றி தொடருகிறேன்... த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    அன்று அவர்கள் சந்தேகப்பட்டது சரிதான் அய்யா..! ஆமாம் சின்ன வயதில் பெரிய கவிதையை எழுதினால் யார்தான் நம்புவார்கள்.!? நீங்கள் இவ்வாறு செய்திருந்தால் ஒருவேளை தங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

    உரை முடிவு காணான் இளமையோன் என்ற
    நரை முது மக்கள் உவப்ப நரை முடித்து
    சொல்லால் முறை செய்தான் சோழன் குல விச்சை
    கல்லாமல் பாகம் படும்.

    நிலைகெடும் செயலில்‘இன் றாழ்ந்தான்! – அய்யோ
    நிற்கவும் காலின்றி நிலத்திலே வீழ்ந்தான்! .....

    விழிகள்ஏன் நான்காண என்றாள் – கண்ணீர்
    வீழ்ந்ததென் கைகளில் ஐயகோ அம்மா! ....

    சங்கத் தமிழ்வாழ்ந்த மண்ணும் - வெற்றுச்
    சருகெனப் போவதோ என்றவள் கண்ணீர்
    பொங்கத் துடித்தெழு கின்றேன்! – மேகப்
    போர்முகம் மின்னல்வாள் பொருதிடும் வானில்!
    எங்கும் தமிழ்தமிழ் என்றே – இடி
    ஏற்றுமுழங்கிடக் கண்டன கண்கள்!

    வடித்தாய்க் கவிதைத்தாய்த் தமிழின் துடிப்பை

       கவிதைத்தாய் மனதில்நல் நம்பிக்கை வித்தை!

    அருமையான கவிதை !

    நன்றி.
    த.ம. 4.



    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      தாங்கள் தந்திட்ட பின்னுரை என்னும் தெளிவுரை பாடலின் பொருளை நன்றாக விளக்கியது. தமிழன் தன் நிலையைத் தாழ்த்தக் கூடிய செயல்களில் ஈடுபடுகிறான்.

      தமிழன் தன் காலில் நிற்கவும் வலிமையற்று நிலத்தில் வீழ்கின்றவனாய் இருக்கிறான்.சங்கத் தமிழ் வாழ்ந்த மண் இன்று உலர்ந்த சருகெனக் காய்வதோ என்று சொன்னவளின் கண்ணீர் தன்மேல் விழ....

      “ மேன்மை இழந்த இனத்தின் வரலாறு ” -அன்றைக்கு எழுதிய பாடல் இன்றைக்கும் பொருந்துகிறது.

      நன்றி.


      Delete
  5. வெற்றி பெறாத இந்தக்கவிதைக்காக தங்களது மனம்
    6 மனமே 6

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      அது ஆறித்தணிந்து பல வருடம் ஆயிற்றே.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ஆற்றுப் படுத்தியதற்கும் மிக்க நன்றி

      Delete
  6. தமிழ் என்றும் மொழி என்றும் இனம் என்றும் சங்ககாலக் கவிதைகளைத் தேடிப்போய் படித்து உள்மனதுக்குள் உங்களையும் அந்தக் கால சூழ்நிலைக்கே எடுத்துச் செல்லும் பாதிப்பின் பிரதிபலிப்பே இந்தக் கவிதை என்று தோன்றுகிறது பொருட்குற்றமோ சொல் குற்றமோ காணும் தெளிவு எனக்கில்லை என்பதும் உண்மை.மொத்தத்தில் தமிழால் மூளைச்சலவை செய்யப் பட்டிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது சரி கவிதையில் என்ன சொல்ல முயன்றிருக்கிறீர்கள்?( மன்னிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. சார் வணக்கம்.
      முதலில் இது எழுதப் பட்ட சூழலில் ஓரளவிற்குத் தமிழில் வாசித்திருந்தேனே தவிர, சங்க காலக் கவிதைகளின் பக்கம் எல்லாம் போகவே இல்லை. பன்னிரண்டாம் வகுப்புவரை, படித்தவைதான் சங்கப் பாடல்கள்.
      அதற்கு அந்த வகுப்பிற்குரிய பொருளும் தேர்விற்கான சலிப்புடன் படித்ததே!

      தமிழ் பிடித்ததும் படித்ததும் பழம்பாடல்கள் கொண்டல்ல. அது அதற்கு மறுதலையானது.

      தமிழால் மூளைச்சலவை செய்யப்பட்டது என்பது உண்மையாய் இருக்கலாம். உணர்வு வயப்பட்டு உயர்வென்று கொண்டாடிய காலத்திலும், சரியென்ன தவறென்ன வென்று ஓரளவிற்குச் சிந்திக்கத் தெரிந்த இந்தக் காலத்திலும், சலவை செய்யப்பட்ட மூளை சாயம் போகவில்லை. எனக்கென்னமோ அதுவே அதன் இயல்பு நிறமாய் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது :)).

      கவிதையில் என்ன சொல்ல முயன்றேன் என்பதை, நிறைவாய் இல்லாவிடின் கூட ஓரளவிற்கு விளக்கி இருக்கிறேன்.

      உங்கள் வெளிப்படையான கருத்துகளின் நான் எப்போதும் வரவேற்கிறேன்.

      புரியாமல் எழுதியும், புதிதாக எழுதாமலும்தான் மறைந்தது நம் மரபு.

      நீங்கள் மட்டுமல்ல. உங்களைப் போல் நான் மதிக்கும் இன்னும் பல ஆளுமைகளும் இதன் இருண்மை குறித்துப் பேசி இருக்கின்றனர்.

      பொதுவாகப் பாராட்டு என்பதை விட உண்மையின் உரைகல்லாகும் தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்களை நான் எதிர்பார்த்தே இருக்கிறேன்.

      பின்னுரை என்கிற பெயரில், செய்யுளின் வழிபட்ட உரையைத் தந்திருக்கிறேன்.

      படித்துக் கருத்திட வேண்டுகிறேன்.

      அபத்தமாய் இருப்பின் கூட!

      நன்றி.


      Delete
  7. யார் சொன்னது இந்தக்கவிதை தோற்றக் கவிதை என்று..இதோ வெற்றி பெற்றுவிட்டது. த.ம.7

    ReplyDelete
    Replies
    1. ஆம் வலிப்போக்கரே, தமிழ்மனத்திலும் தமிழ்மணத்திலும் வெற்றி பெற்றதுதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  8. போட்டியில் வெல்லாவிட்டால் என்ன ,அன்றைய ஆர்வம்தானே இன்று நமக்குள்ளே உறவுப் பாலம் அமைத்துள்ளது ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய்............

      இல்லாவிட்டால், தவமாய்த் தவம் கிடப்போருக்கு மத்தியில்,
      இந்தப் பாமரனுக்குப்போய் பகவானின் அருள் கிடைத்திருக்குமா :)

      நன்றி

      Delete
  9. கவிதையை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனாலும் சொற்களின் பிரயோகம் அபரிவிதமாக இருக்கிறது.
    அருமை அய்யா!
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. சார்,

      பின்னுரை என்ற பெயரில் பொருளைச் சற்று விளக்கி இருக்கிறேன்.

      பார்த்துக் கருத்திட வேண்டுகிறேன்.

      நன்றி

      Delete
  10. “தன்னுடை பெருமையும் அறியான்! – இவன்
    தாழ்ந்தது தன்மொழி இனமெனும் நெறியால்
    கண்ணடைத் திருளென்றே உரைப்பான்!- ஒளி
    காட்டினால் நான்சற்றுக் குருடென்று குரைப்பான்!”
    …………..
    “மேகப் போர்முகம் மின்னல்வாள் பொருதிடும் வானில்!”

    இவையெல்லாம் நான் மிகவும் ரசித்த வரிகள்!

    சிறுவயதில் இவ்வளவு அருமையாகக் கவிதை எழுத முடியுமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுவது இயற்கை தான் என்றாலும், அதற்காக ஆராயாமல் திருட்டுப்பட்டம் கட்டி மாணவனின் இதயத்தைச் சுக்கு நூறாக நொறுங்கச் செய்தது அநியாயத்திலும் அநியாயம்.

    கேவலம் படிப்பினால் மட்டும் பாவன்மை வருவதில்லை; கவிஞன் பிறக்கிறான் என்ற உண்மை, உங்கள் ஆசிரியருக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே.

    உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கவிதை எழுதும் போதும் நம்மை மீறி சில சொற்களை நம் எழுத்தில் அனுமதிக்கக்கூடாது என்ற பாடமும், இந்த அனுபவத்தின் மூலம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

    பரிசு ஒன்று மட்டுமே கவிதையின் தகுதியைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மையை உங்கள் அனுபவம் மெய்ப்பித்திருக்கிறது.

    ReplyDelete
    Replies


    1. வணக்கம் சகோதரி....!

      முதலில் தங்களின் ரசனைக்கு நன்றி..
      ஓர் ஆசிரியர் திருடியது என்றபோது இன்னொரு ஆசிரியர்தான் அதனை ஆராய்ந்து இவனெழுதியதுதான் என்றார்.

      இருவரும் இன்றும் இருக்கிறார்கள்.

      கவிஞன் பிறக்கிறான்................என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
      அதற்கு ஒரு மனம் வேண்டும் என்று நினைக்கிறேன்.

      உணர்ச்சிகளால் ஏற்படும் சலனத்தை மொழியால் ஆற்றுவிக்கும் மனம்..! மொழிப்பயிற்சியும், அந்தச் சலனத்திற்காட்படுதலும் போதும் எனத் தோன்றுகிறது இதற்கு.

      சொற்களின் தகுதி வழக்கு, இடக்கரடக்கல் பற்றியெல்லாம் அன்றெனக்குப் போதிய தெளிவு இருக்கவில்லை.

      ஆனால்,

      இதைவிடவும் அதிர்ச்சியூட்டும் சொல்லாட்சியுள்ள, புதுக்கவிதைகள் இன்றைய தமிழில் வெகுசரளமாக வந்து கொண்டிருக்கின்றன எனும் போது, சொற்களை எழுத்தில் அனுமதித்தல் பற்றிய மனப்பான்மை இன்றைய தமிழ்ச்சூழலில் மாறியிருக்கிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

      அதுவே எனது முதலும் கடைசியுமான போட்டி.

      பொதுவாக நான் என் வாழக்கையில் ஒரு முறை தெரியாமல் செய்கின்ற தவறுகளைப் பெரும்பாலும் மீண்டும் செய்வதில்லை.

      அதையும் ஓர் அனுபவமாகத்தான் கடந்து வந்திருக்கிறேன் என்பதே உண்மை.

      உங்களின் தொடர்வருகைக்கும் கருத்துகளுக்கும் எப்பொழுதும்போல் நன்றி.

      Delete
  11. சொல் பயன்பாடு, உத்தி, நிகழ்வு என்ற பல நிலைகளில் எழுத்து அமையும்போது ஒவ்வொருவர் மனதிலும் மாறுபட்ட கருத்து வர வாய்ப்புண்டு. நம் மனதிற்கு நிறைவைத் தரும் நிலையில் அப்போதே வெற்றி பெற்றுவிடுகிறோம் என மனதில் கொள்வோம். அப்போது தோல்வி தோற்றுவிடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய அறிவுரையை மனங்கொள்கிறேன் முனைவர் அய்யா.

      Delete
  12. எம்மினம் எம்மொழி என்றென்றும் வாழட்டும் ஐயா...

    உங்களின் மனது இப்போது சாந்தப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அது என்றோ சாந்தப்பட்டது டிடி சார்.
      உங்கள் அன்பினுக்கு நன்றிகள்.

      Delete
  13. வேறு ஒரு சிந்தனையின் போது : நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் சார்.
      போட்டிகள் பின் இல்லை.
      வெல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டதும் இல்லை.
      உங்களின் பதிவுகளை ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிறேன்.

      திருக்குறளோடு திரையிசையும் பரிச்சயப்பட அவை உதவும்.

      தங்களின் மீள்வருகைக்கு நன்றி.

      Delete
  14. படைப்பாளிக்கு ஒரு சில வார்த்தைப்பிரயோகம் சரி என்று தோன்றும். அது "அநாகரிகமாக" இருந்தாலும் அது அவசியம் தேவை என்றும் தோன்றும். ஆனால் நடுவர்கள் மற்றும் வாசகர்கள், படைப்பாளி அதைத் தவிர்த்து இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இவ்விடத்தில் நான் படைப்பாளி இல்லை என்பதால் நடுவர்கள் மட்டுறுத்தச் சொன்ன வார்த்தை பிரயோகம் எதுவாக இருக்கும் என யூகிக்க முடியுது. என் யூகத்தை யாருமே யூகித்துவிடலாம் என்பதால் அதை நான் சொல்ல வேண்டியதில்லை.

    நான் பொதுவாக தோல்வியைத் தவிர்த்துவிடுவேன். போட்டியில் கலந்து கொள்வதைத் தவிர்த்து. இருந்தும் வாழ்க்கையில் நான் பெற்ற தோல்விகளே அதிகம். வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்தால், அகந்தை நிரம்பிய முட்டாளாகவே (worse than what I am today) போயிருப்பேன். எனக்குத் தோல்வி வழங்கியவர்கள்தான் என்னைப் பண்படுத்தியவர்கள். :-) பாவம் வெற்றிக்களிப்பில் திளைத்த அவர்களுக்கு இந்த ரகசியம் தெரியாது. :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சார்,

      உண்மையில் பின்னூட்டம் நீண்டுவிடக் கூடாது எனப் பார்க்கிறேன் :)
      படைப்பைப் படைத்ததும் ஆசிரியன் இறந்துவிடுகிறான் என்று கூறுவார்கள்.
      அதன் பின் பிரதி அவனுடையதில்லை.

      நீங்கள் ஊகித்துதது சரிதான்.

      அன்று அவ்வார்த்தையை மாற்றி அவர்கள் சொல்கிறபடி அமைத்தால் அதைப் பரிசீலனைக்கு எடுப்பதாகக் கூறினார்கள்.

      நான் உடன்பட வில்லை.

      ஆனால் இன்றைய புதுக்கவிதைகள் மற்றும் படைப்பிலக்கியங்களில் இதனினும் வெளிப்படையான வழக்குகள் பயில வழங்கப்படுவதைக் காண்கிறேன்.

      அன்று அந்தப் போட்டியில் கலந்து கொண்டதே நான் பெரிதும் மதித்த எனக்குப் பலவிடயங்களைக் கற்றுக் கொடுத்த அமல்ராஜ் என்னும் என் நண்பனின் வற்புறுத்தலால்தான்.

      இந்நிகழ்வுகளுக்காக என்னைவிடப் பெரிதும் அவரே வருந்தினார்.

      இதற்குப் பரிசு கிடைக்காததற்கு ஒரு சிறிதும் நான் கவலைப்படவில்லை.

      தோழி ஒருவர் கவிதை முதற்பரிசிற்குத் தெரிவு செய்யப்பட்டது என நினைக்கிறேன்.

      படைப்புகளைப் போட்டிக்கென்று வைத்த கதை அதனோடு முடிந்து போயிற்று.

      நான் எழுதியவற்றை யாரும் காணாமல் பதுக்கி வைக்கும் எனது உறுதி இன்னும் வலிமை உற்றது.

      அதனால் இந்த விடயத்தில் வெற்றி தோல்விகளை நான் இதன் பின் சுவைக்கவில்லை.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  15. சிலிர்க்க வைக்கும் கவிதை அண்ணா. முழுக்கவிதையும் அருமை என்றாலும் மிகவும் பிடித்தவை,

    //தமிழின்பத் துயிர்பூக்க நின்றேன்!///
    //புழுவின் நிலையுன்றன் புதல்வனுக் காமோ?‘
    சொல்லில் சுடர்கின்ற நோக்கில் – எனைச்
    சுட்டெரித் தாடிச் சுழல்கின்ற கண்ணில்//
    // கண்ணடைத் திருளென்றே உரைப்பான்!- ஒளி
    காட்டினால் நான்சற்றுக் குருடென்று குரைப்பான்! //
    // மொழியென்றும் இனமென்றும் காக்க – உயிர்
    மயிரென்ற மாவீரக் கடலின்று வற்றி
    இழிந்தசாக் கடையாக ஓடும்! //
    //எம்மினம் எம்மொழி என்றென்றும் வாழும்!//

    கற்பனை அல்ல அழியா மொழிநமதே
    கற்றுத் தெளிந்தவர் வேர்

    த.ம.12

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருக்கும் பொருளையே நானும் புரிந்துகொண்டேன் அண்ணா 😀😀

      Delete
    2. நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எப்படி சகோ:))


      உங்களின் பாராட்டைப் பார்த்ததும் :) தான்.

      நன்றியம்மா!

      Delete
  16. அண்ணா, எவ்வளவு பிடித்தது என்றால் வினோத்திற்கு வாசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. அப்பாடி எனக்குப் பரிசு கிடைத்துவிட்டது போல மகிழ்ச்சி.... உண்மையாகவே!!

      Delete
  17. அழகான வார்த்தை பிரயோகம்....
    முழுமையாக புரிந்து கொள்ளுமளவு நான் தேரவில்லை என்றாலும்...ரசிக்க முடிந்தது..

    அருமை...

    ReplyDelete
    Replies
    1. பொருள் சேர்த்திருக்கிறேன் நண்பரே!
      மீண்டும் வருவீர்களாயின் படித்துக் கருத்திடுங்கள்.

      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  18. அய்யா, வணக்கம்.
    வாழ்ந்த தமிழ்மண்ணும் வாழாச் சருகென
    வீழ்வதோ என்றே இனமானத் தாழ்வகற்ற
    ஓங்கு குரலிட்டு ஒப்பிலா வெற்றிகண்டீர்!
    நீங்கிடும் தோல்வி நிலத்து.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ““ஓங்கு குரலிட்டு ஒப்பிலா ““
      என்பதில்,
      குரலிட் டொப்பிலா எனக் குற்றியலுகரப் புணர்ச்சியுட் படும்போது தளை தட்டும் என்பர் அறிஞர்.

      என்னடா இது கருத்திட்டால் அதில் குற்றம் கண்டுபிடிக்கிறானே என்று நினைத்துவிடக் கூடாது சகோ.

      நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். இவ்வாறான ஆட்சியைத் தவிர்த்தால் உங்களிடம் பிழை காட்ட யாராலும் முடியாது.

      வெண்பாவில் பட்ட விழுப்புண்கள் என்னும் பதிவில் இது பற்றிக் கூறியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
    2. அய்யா, வணக்கம். பிழையினை அறியத்தந்தமைக்கு நன்றி. உட்புகுத்திக் கொண்டேன்.
      சற்றும் வருந்தாபொருள் சார்ந்ததை நாடியே
      முற்றுமதை ஆராய்ந்து நல்விடை பெற்று
      தலையி லிருத்தின் தரணி யிலினி
      மலையு மொருமடு வாம்.
      சரிதானே அய்யா. இச்செய்யுளில் பிழையிருப்பின் அருள்கூர்ந்து காட்சிப் படுத்த வேண்டாம். நன்றி.

      Delete
  19. சூப்பர்.
    இந்த அனுபவம் எனக்கும் உண்டு,
    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எழுதிய கவிதை. என் கவிதை அல்ல என்று, ஆனால் பரிசு கொடுத்தார்கள், ஒரு வார்த்தைக்கு விளக்கம் கேட்டு,
    இப்போ நான் என் பக்கத்தில் அந்த கவிதையை நந்தவனபூக்கள் தலைப்பில் பாதியை மட்டும் எழுதியுள்ளேன்.
    வார்த்தைகளை நேசிப்பவர்களுக்கு அவை பஞ்சம் இல்லை,,,,,,,,,,,,
    தாங்கள் வார்த்தைகளைக் காதலிப்பதால் அவை உங்களில் தஞ்சம்,,,,,,,,,,
    அருமை,,,,,,,,,,,,,,,,,,,,,,
    வேறு என்ன சொல்ல,
    எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், என்னடா இவன் நம்மை விட அழகான மரபு கவி எழுதுகிறானே என்ற ,,,,,,,,,,,,,,,,
    அழகு நயம் பொருள் அத்துனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நந்தவனப்பூக்களைப் பார்த்தேன்.
      அருமை அருமை கவிஞரே...............

      உங்கள் நந்தவனப்பூக்களின் முன் நான் செய்வது வெறும் காகிதப்பூக்கள்தான்.

      உங்களைவிட நான் அழகாக மரபுக்கவி எழுதுகிறானே என்று நிச்சயம் உங்களுக்குத் தோன்றவேண்டியதில்லை.

      நீங்கள் மிகுந்த உயரத்தில் இருக்கிறீர்கள்.

      மரபாகத் தமிழ்படித்து எழுகின்றவர் என்பதால் அப்படி எழுதுவது இயல்பும் தானே..!

      வாழ்த்துகள்.

      இன்னும் தொடருங்கள்.


      தங்களின் வருகைக்கும் மேலான பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  20. கவிதை அருமை! பரிசு பெறாவிட்டால் என்ன? இதோ இத்தனை பேர் அதை ரசிக்கும் போது?!!! அருமை என்று சொன்னது எதற்கு? பொருள் புரியவில்லை தான். ஆனால் தங்களின் தமிழ்! மொழி ஆளுமை! பொருள் நீங்கள் விளக்கினால்தான் புரியும் ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே.......
      பொருளை விளக்கி இருக்கிறேன் ஆசானே...!
      இன்னொரு முறை சிரமம் பார்க்காமல் நீங்கள் வந்து கருத்துரைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

      நன்றி.

      Delete
  21. மிகவும் அருமையாக இருக்கிறது! விளக்கமும் படித்து ரசித்தேன்! இளவயதில் எழுதிய கவிதை என்று நம்ப முடியவில்லைதான்! அதனால்தான் நடுவர்கள் சந்தேகித்தார்களோ என்னமோ? அப்போது வெற்றி பெறாவிட்டாலும் இன்று இணைய நட்புக்களின் மனதில் இந்த கவிதை இடம்பெற்று தனியொரு இடம் பிடித்துவிட்டது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.

      நன்றி.

      Delete
  22. ஐயா வணக்கம் . என் பின்னூட்டம் நான் எழுதியது தவறோ என்றே தோன்றுகிறது. இருந்தாலும் உணர்ந்ததை உரைக்கும் என் குணம் உங்களுக்குத் தெரியும் அந்தக் காலத்திலேயே சுருங்கச் சொல்லாமல் இத்தனை நீட்டமாக எழுதி இருக்கிறீர்கள். மொழியின் ஆளுமையின் வெளிப்பாடு தெரிகிறது. பின்னுரையிலும் பொருளைக் கூறிச் செல்கிறீர்கள்படித்து முடித்தபின்னும்

    /புரியாமல் எழுதியும், புதிதாக எழுதாமலும்தான் மறைந்தது நம் மரபு./ என்று நீங்கள் எழுதி இருப்பதேசரி என்று தோன்றுகிறது. தமிழ் என்றும் தமிழன் என்றும் கூறியே பழங்கதைகளில் மூழ்கி முத்துஎடுக்கிறோமா அந்தக் காலத்தில் இப்படித் தமிழ் பேசியே நம்மை அன்னியப் படுத்திக் கொண்டு அரசாள வகை செய்து கொண்டனர் ஒரு சாரார். அந்தக் காலத்து சாயல் இதில் இருப்பது காண்கிறேன் இந்த என்னுடைய பின்னூட்டம் உங்கள் மொழிஆளுமையைத் தற்கால நிகழ்வுகளுக்குத் தகுந்தாற்போல் நிகழ்வுகளைச்சாட உபயோகப் படுத்தலாமே என்று எனக்குத் தோன்றுகிறது. பொதுவாக ஒரு பதிவுக்கு ஒரு பின்னூட்டம் எழுதி அதை பதிவர்கள் ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவர்கள் விருப்பம் என விட்டு விடுவேன் இது என் வழக்கத்துக்கு மாறானது. நச்சென்று நாலு வரிகளில் நினைத்ததை உங்களால் சொல்ல முடியும் சுருங்கச் சொல்லல் கவிதைக்கு முக்கியம் என்று நீங்களே எழுதி இருந்ததைப் படித்தது நினைவில் ஆடுகிறது

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்
      உங்களது மறுவருகைக்கு என் உளப்பூர்வமான நன்றி.
      நிச்சயம் உங்கள் பின்னூட்டம் தவறானதில்லை.
      என் தளத்தினைப் பொருத்த வரை உங்களது மனந்திறந்த கருத்துகளை வரவேற்கிறேன் எப்போதும்.

      அடுத்து நீங்கள் கூறியுள்ளவற்றை உங்கள் கருத்தளவில் மதிக்கிறேன்.

      நீங்கள் என்மேல் கொண்டிருக்கின்ற நம்பிக்கை பெரிது.

      நான் அதற்கு உரியவன் அல்லன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      நிச்சயமாய் நீங்கள் உணர்ந்ததை உணர்ந்தவாறே உரைக்கும் கருத்துகளை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

      பதிவுகளைப் படிப்பதும் அல்லாமல் வெறுமனே கடந்து செல்லாமல் நேரம் ஒதுக்கி அது பற்றித் தங்கள் கருத்துகளைப் பதியும் உங்கள் ஒவ்வொருவரையும் மதிக்கிறேன். வரவேற்கிறேன்.

      சில நேரங்களில் நீங்கள் சொல்லும் சில கருத்துகளோடு எனக்கு உடன்பாடில்லாமல் போகலாம்.அது வேறு..!

      ஆனால் உங்கள் கருத்துகள் ........

      அவை எனக்கு மிக மிக முக்கியமானவை..............!

      என்னுடைய பதிவுகளை விடவும்!

      எனவே உங்கள் வருகையும் கருத்தும்..................எப்போதும் வேண்டும்.

      மிக்க நன்றி.

      Delete

  23. வணக்கம்!

    உணர்ச்சி கொதித்தெழ ஊன்றிய பாடல்
    மணக்கும் இனிக்கும் மனத்து!

    ReplyDelete
  24. ஐயா! மெய்சிலிர்க்கச் செய்யும் கவிதை! இதன் தாளக்கட்டு, சொற்செட்டு பற்றியெல்லாம் ஆராய்ந்து பிழை கண்டுபிடிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய 'இவன்' இல்லை. ஆனால், மொழியை ஓரளவேனும் சுவைக்கத் தெரிந்தவன் எனும் முறையில் கூறுகிறேன், இஃது ஓர் அற்புதமான கவிதை! இப்படி ஓர் உணர்வுமிகு கருத்தை, உணர்வூட்டும் சிறந்த ஒரு கருத்தை, இப்படி ஒரு சந்தப்பாடலில் சொல்ல முயல்வதற்கே துணிவு வேண்டும்! அதுவும் ஒரு காட்சியாக அதை விவரிக்கவும் சொல்லாளுமை மிகவும் வேண்டும்! இவ்...வளவும் தங்களுக்கு அவ்...வளவு சிறு அகவையில், பள்ளிப் பருவத்திலேயே இருந்திருக்கிறது என்றால்... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தாங்கள் மாபெரும் கவிஞர் ஐயா! தலைசிறந்த கவிஞர்! தங்கள் ஆசிரியர்கள் தங்களை நம்பாமல் போனதில் துளியும் வியப்பில்லை!

    ஆனால், தங்கள் ஆசிரியர்கள் இதில் தவறான சொல்லாட்சியாகக் கருதியது எதை? 'மேன்மை இழிந்த குடி வரலாறு' என்பதையா? 'மயிர்' என்பதையா? 'மலம்' என்பதையா?

    ReplyDelete
  25. உயர்தரக் கவிதை இது சாதாரணமானவர்களுக்கு சாத்தியப்படாது. இது போன்று எழுதுவதற்கு அனுபவம் வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அவர்கள் ஐயமுற்றதில் வியப்பில்லை
    ஆனால் நிராகரித்தது தவறு என்றுதான் தோன்றுகிறது எப்போது யாரால் என்று சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  26. உங்கள் தமிழ்மண வாக்குப் பட்டை வேலை செய்யவில்லையே. டெம்ப்ளேட்டை மாற்றினீர்களா?

    ReplyDelete