Friday 21 November 2014

அந்தக் காலத்தில் காப்பி இருந்தது.


         சமீபத்தில் இணையத்தில் அடுத்தவரின் பதிவை அப்படியே எடுத்து ஒரு நன்றி கூடச் சொல்லாமல் ஒரு வலைப்பூவையே நடத்திக் கொண்டிருந்தவர் குறித்து மாறி மாறிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பலரும் தங்களுடைய படைப்புகள் திருடப்பட்டுள்ளனவா என்று வேகமாய்ப்போய்ப் பார்த்ததுபோல் நானும் பார்த்தேன். அடுத்தடுத்துப் பல பதிவுகளையும் அவர் தளம் போய்ப்பார்த்துவிட்டு வெளியே வந்து சிலமணி நேரத்தில் மீண்டும் சென்றபோது அவருடைய தளப்பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது! அட.. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இப்படியும் ஒரு வழியிருக்கிறதா என்று நான் சற்று வியந்தது உண்மை.


வேகமாக ஒரு ஓட்டு ஓட்டிய நானே ஒரே நேரத்தில் இருபது  பதிவுகளையாவது விடாமல் படித்திருப்பேன். எல்லாம் தரமான பதிவுகள்! அவர் எழுதாவிட்டால் என்ன ? நல்ல பதிவுகளாகத் திரட்டித்தருகிறாரே என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் தேடத் தேடக் கோபம் கோபமாகத் தான் வந்தது. அப்பறம்………. என் பதிவு ஒன்று கூட அவர் தளத்தில் இல்லாமல் இருந்தால் கோபம் வராதா? எப்படியாவது அவர் மனதைக் கவரும் வகையில் பதிவொன்றை எழுதி விடுவது என்ற முடிவோடுதான் இருக்கிறேன். தமிழ் உதவட்டும். இன்னொரு புறம் நான் தொடரும் பலரின் பதிவுகள் அதில் இருக்கின்றன என்பதில் மகிழ்ச்சிதான்.

ஒரு வேளை அவ்வெழுத்துக்குச் சொந்தக்காரர்களான பதிவர்கள் பலருக்குத் தன் உழைப்பை இப்படித் திருடித் தன் பெயரில் போட்டுக் கொள்கிறானே என்பதால் அந்தக் கோபம் இருக்கலாம். எனக்கு வரவில்லை. ( அதான் உன்னோடது உருப்படாததுன்னு முடிவு செஞ்சாச்சே! ). தமிழ் மரபில் இல்லாததயா அந்தப் பதிவர் செய்து விட்டார்  என்றுதான் என் மனதிற்குப் பட்டது.

பேராசிரியர்.ஆ.இரா.வெங்கடாசலபதியின், “ அந்தக் காலத்தில் காப்பி இல்லை“ என்ற நூலைப்படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் நான் சொல்லவந்தது குடிக்கற காப்பியைப் பற்றி அல்ல அடிக்கிற காப்பியைப் பற்றி என்று.

அதாங்க, அடுத்தவர் எழுதியதைத் தன்பெயரில் போட்டுக் கொள்வது.

முதலில் இலக்கணத்தைப் பார்த்துவிடுவோம்.

எல்லாத்துக்கும் இலக்கணம் வைத்திருக்கும் தமிழ் இதற்கு மட்டும் இலக்கணம் சொல்லாமல் போய்விடுமா என்ன?
ஒரு நூலிற்கு அழகு என்ன அசிங்கம் என்ன என்பதை நம் இலக்கணம் சொல்லி இருப்பதைப் பலரும் அறிந்திருப்பீர்கள். நன்னூல் ஆசிரியர் பவணந்தி சொல்கிறார்,

நூல் எப்படி இருக்க வேண்டுமாம்.

1)சொல்ல வருவதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமாம்.
“தமிழுக்கு கதி“ எனக் ம்பனையும் திருவள்ளுவனையும் திருமணம் செல்வகேசவ முதலியார் சொல்லியதைப்போல?!

2)அதே நேரம் சொல்லியது பிறருக்கு விளங்குவது போல இருக்க வேண்டுமாம்.
“ மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?“
என்றால் வல்லார்க்கே புரிவதல்லால் சாமானியர்கள் புரிதல் அரிதுதானே?
ஆக அப்படி இருக்கக் கூடாதாம்.

3)சொல்லும் போதே அது ஒரு இனிமையை ஏற்படுத்த வேண்டுமாம்.
எப்படி? சிலவற்றை நாம் படிக்கும் போதே, கேட்கும் போதே மனதில் பதித்து வைத்துச் சொல்கிறோமே மேற்கோள்கள்…. பாடல்கள்…. வசனங்கள்….. இப்படி..! அப்படிப்பட்ட இனிமையோடு இருக்க வேண்டுமாம்!

4)நல்ல சொற்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டுமாம்.
( பெருமாள் முருகன் அய்யாவின் “ கெட்ட வார்த்தை பேசுவோம் “ எனும் நூலை நான் ஆளனுப்பி வாங்கிப் படித்தது வேறுகதை )

5)ஓசை நயத்துடன் அந்நூல் இருக்க வேண்டுமாம்.

6)ஆழமிக்கக் கருத்துகளை உடையதாக இருக்க வேண்டுமாம்.

7)சொல்லப்பட வேண்டியவற்றை ஒரு வரிசையில் அமைத்துச் சொல்ல வேண்டுமாம். ( கூட்டல் தெளிந்தபின் பெருக்கலுக்குப் போவதைப்போல )

8)சொல்லவருகின்ற கருத்து உண்மை. ஆனால் இவ்வளவுநாள் எல்லாரும் சொல்லி வந்த கருத்திற்கு மாறான கருத்து. சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?? மாட்டார்களா ? என்று பார்க்காமல் சொல்லவந்த கருத்தைத் தைரியமாகச் சொல்லிவிட வேண்டுமாம்.

9)எதைக் கருதி அந்நூல் எழுதப்பட்டதோ அதன் பயனைப் படிப்போர் அடையச் செய்யும் விதத்தில் அது அமைய வேண்டுமாம். ( ஒரு ஊருக்கு வழிகாட்டியாக அமையும் போது அதைப்பார்த்தே யார் துணையும் இல்லாமல் ஒருவனை அவ்வூருக்குக் கொண்டு சேர்ப்பது போல )

10)மிக முக்கியமானது, அத்துறை சம்பந்தமான பேச்சு வரும் போது கண்டிப்பாக அந்த நூலை மேற்கோளாகக் காட்டாமல் யாரும் போய்விட முடியாது என்னும் அளவிற்கு முக்கியத்துவமிக்கப்  பார்வை நூலாக அது இருக்க வேண்டுமாம்.

இங்கு நூல் என்பதற்குப் பதிலாக ஒருவரின் எழுத்து எப்படி இருக்க வேண்டும்? ஒரு  பேச்சு எப்படி இருக்க வேண்டும்?
ஒரு கட்டுரை எப்படி இருக்க வேண்டும்? ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? என்பதை எல்லாம் இந்தப் பத்துக் குணங்களோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
பெரும்பாலான பண்புகள் படைப்பிலக்கியத்திற்குப் பொருத்தமாய் இருப்பதை நீங்கள் காண முடியும்.
பவணந்தி சொல்கிறார்,

“சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே உலக மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கழகு எனும் பத்தே!“

சரி எதுயெது படைப்பில் இருக்கக் கூடாது ..?
அதற்கும் இருக்கிறது ஒரு பட்டியல்,

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்று எனத் தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈரைங் குற்றம் நூற்கே“

சரி. இதையெல்லாம் இங்கு ஏனப்பா சொல்கிறாய்? காப்பிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கிறீர்களா?

சம்பந்தம் இருக்கிறது.

இவை பவணந்தி எழுதியது இல்லை.

பவணந்திக்கு முன்பே பலநூற்றாண்டுகளுக்கு முன்பே உள்ள யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் இப்பாடல்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி இதை எழுதியவர் பாடலனார் என்று சொல்லி இருக்கிறார்.( யா. வி. பாயிரம் ). பவணந்திக்கு முன் வாழ்ந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் இதே வரிகளை மேற்கோள் காட்டியுள்ளனர். இவை மட்டுமல்ல இன்னும் பல நூற்பாக்களைத் தொல்காப்பியத்தில் இருந்தும், முன்னுள்ள இலக்கண நூல்களில் இருந்தும் ““சுட்டுத்“ தன்பெயரில் உள்ள நன்னூலில்  போட்டிருக்கிறார் பவணந்தி.

பவணந்தி மட்டுமல்ல(ர்). அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த  பல இலக்கண ஆசிரியர்களும் இது போல் அப்படியே எடுத்துக்காட்டிப் போய் விடுகின்றனர்.

சரி ..இந்தக் காப்பிக்கு இலக்கணம் இருக்கிறதா?

நன்னூலிலேயே இருக்கிறது.

.“ முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்
  பொன்னேபோல் போற்றுவோம்“ ( நன்-9)

புரிகிறதா?

முன்னோர் சொன்னதன் பொருளைக் காப்பியடிக்கப் பார்ப்போம்.
முடியலைன்னா?
முடியலைன்னா அப்படியே எடுத்துப் போட்டுக்குவோம்.
அவ்வளவுதான் !
 ( முன்னோர்ன்னா ஆயிரம் ஆண்டுக்கு முன்னால் வாழ்ந்தவர் மட்டுமில்லை. நமக்கு முன்னாடியே நாம் சொல்ல வருவதைச் சொல்லி வைத்திருப்பவர்கள் எல்லாம் முன்னோர்தான்.)

இப்பச் சொல்லுங்க ! பள்ளிக்கூடத்துப் பசங்களுக்குப் பாடமா வைச்சிருக்கிற பவணந்தி செய்யாததையா அந்த அப்பாவிப் பதிவர் செஞ்சிட்டார்?

தொல்காப்பியரே கூட இப்படிக் காப்பியடிச்சிருக்கார். என்ன…… எந்த நூலில் இருந்து அவர் காப்பி அடிச்சாரோ அந்த நூல் நமக்கு இப்பக் கிடைக்கல.
அதுவும் இரண்டு விதமான காப்பி.

அப்படியே எடுத்துப் போடுறது.

பொருளை எடுத்து “ என்மனார் புலவர்“ “ என்றிசினோர்“ அப்படிப் போடுறது. (இப்படிச் சொல்றது  கூடப் பெயர் சொல்லாம ஒருவித நன்றியைச் சொல்றதுதான்.)

ஆனா அப்படியே எடுத்துப் போடுவது சரியா?

இதற்கு என்ன காரணம்?

என் மனதிற்குப் படுவது,

ஒரு விஷயத்தை அதை விடச் சுருக்கமா எளிமையா அழகா சொல்ல முடியாது என்கிற போது அதை அப்படியே வழிமொழிந்து செல்வதுதானே நல்லது.

சொல்லப்பட்ட விஷயம் எந்த மாறுதலும் இல்லாம அன்றுவரை தொடர்கின்ற உண்மையாக இருக்கும் போது எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லையே?

பொதுவாக சொல்லப்படுகின்ற இலக்கண நூலின் யாப்பு வடிவம் மாறாத வரை சொல்ல வேண்டிய அதே  செய்தியை ஏன் மாற்றிச் சொல்ல முயல வேண்டும்?

இதுதான் முன்னோரது நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
முன்னோர் கூறியதில் உடன்பாடானதை, மாறாத உண்மையை, அப்படியே எடுத்தாளுதல் முன்னோர் கண்ட மரபாக இருந்தது. முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது. அது அன்றைய புலமை மரபில் ஏற்கப்பட்ட ஒரு விடயம்.
அதை அவர்கள் காப்பி அடித்ததாக நினைக்கவில்லை.

முன்னோரின் அப்புலமையை அவ்விடத்தில் தங்களால் தாண்டிப் போக முடியாது என்று நினைத்தார்கள்.

அக்கருத்தை அப்படியே வழிமொழிந்து போனார்கள்.

இதன் இன்னொரு புறம் இருக்கிறது. அது என்பார்வையில் காப்பி அடிப்பதை விட அசிங்கமானது.

அதையும் மொழிப்புலமை மிக்கவர்தான் செய்தனர்.

தான் பேசப்படாவிட்டால் கூடப் பரவாயில்லை, தன்னுடைய படைப்புகளாவது பேசப்பட வேண்டும் என்று நினைத்த அவர்கள் செய்தது வேறொன்றுமில்லை.

தங்களது படைப்புகளை வாழச்செய்யத் தங்களைப் பலியிட்டனர்.


எப்படியென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?


இலக்கணத்தில் அல்லாமல் இலக்கியத்தில் இது போல் காப்பி இருக்கிறதா..?


விடையறிந்தவர் கூற வாருங்கள். மற்றவர் அறியக் காத்திருங்கள்!



( பி . கு . படத்திற்கும் பதிவிற்கும் தொடர்பில்லை )
பட உதவி - நன்றி கூகுள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

84 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    வலைப்பூவில் எழுதும் ஒவ்வொரு எழுத்தாளனும் படிக்க வேண்டிய விடயம்... மிகவும் இலகுவான விளக்கம் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி அய்யா!
      நீண்ட நாட்களாகியும் தங்களைக் காணாமையால் கவிதைத் தேர்வின் பரபரப்பில் இருப்பீர்களோ என்று நினைத்தேன்.
      நன்றி!

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. த ம என்பது சில நாட்களுக்கு முன்புதான் விளங்கியது.

      த ங்களின்

      ம னத்திற்கு நன்றி!

      Delete
  3. நல்ல விதமாக பாமரனான எமக்கும் பொருள்பட விளக்கியமைக்கு நன்றி. கவிஞரே....

    ReplyDelete
    Replies
    1. கவிஞரா?
      யார் அது கில்லர்ஜி?
      பொருள் புரிந்து விட்டது என்று நீங்கள் சொல்வது மகிழ்ச்சிதான் !
      எல்லார்க்கும் புரிய வேண்டுமே என்பதுதான் என் கவலையெல்லாம்!

      Delete
  4. ஆகாகா திருட்டிற்கும் ஒரு பதிவு.
    நன்றாகவே உள்ளது பாராட்டுகள் சகோதரரே
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. திருட்டைக் கண்டுபிடித்துச் சுட்டி கொடுத்ததே நீங்கள் தானே கவிஞரே!
      உங்கள் தளத்தில் பின்னூட்டம் இட முடியவில்லையே!
      கவிதையைப் பார்த்துச் சும்மா திரும்ப நேர்ந்தது!
      தங்களின் பாராட்டிற்கு நன்றி!!

      Delete

  5. வணக்கம்!

    தமிழ்மணம் - 2

    இனிக்கின்ற தேநீா் எனவெண்ணி நான்வந்தேன்!
    நினைக்கின்ற எண்ணம் நிலையோ? - பினைக்கின்ற
    ஆக்கம் அனைத்தும் அமுதன்றோ! இவ்வலையால்
    ஊக்கம் உறுமே உயிர்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கொட்டைக் குளம்பி குடிக்கும் பலர்நினைந்து
      திட்டமிட் டிட்ட தலைப்பிதய்யா! - உட்புகுந்(து)
      என்ன இருக்குதென எட்டிபலர் பார்த்திடும்
      வண்ணம் தலைப்புவைத் தேன்!

      Delete
    2. வணக்கம்!

      அடியேன் படைத்த பாடலில் முதல் அடியைக் கீழ் உள்ளவாரு திருத்திப் படிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

      இனிக்கின்ற தேநீா் எனவெண்ணி வந்தேன்!
      நினைக்கின்ற எண்ணம் நிலையோ? - பினைக்கின்ற
      ஆக்கம் அனைத்தும் அமுதன்றோ! இவ்வலையால்
      ஊக்கம் உறுமே உயிர்!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete

    3. ஐயா வெளியிட வேண்டாம்

      எட்டிபலா் - எட்டிப்பலா் எனப் புணருமென எண்ணுகிறேன்
      எட்டிப்பலா் என்று ஆனால் கனிச்சீா் ஆகும்

      Delete
  6. நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். ஆனால் அந்த காப்பியடிக்கும் தளம் எது என்று சொன்னால் நீங்கள் பெற்ற இன்பம் நாங்களும் பெறுவோமே.

    ஏன் என் பதிவுகளை யாரும் காப்பியடிப்பதில்லை என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். காப்பியடிப்பதற்கும் நம் பதிவுக்கு ஒரு தரம் வேண்டும் என்ற உண்மையை உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளத்தில் அந்த சுட்டியைக் கொடுத்திருக்கிறேன் அய்யா!
      உங்களின் ஆறு லட்சமாவது பார்வையாளன் நான்!!
      காப்பி அடிப்பவர்களின் தரம் பற்றித்தான் அய்யா நாம் பார்க்கவேண்டும்!!
      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!!

      Delete
  7. அந்த காப்பியோட பின்விளைவா இது:)) அதபத்தி நான் சந்தோசபட்டுள்ள பதிவு போட்டிருந்தேன்! உங்க பதிவை அவர் ஏன் காப்பி பண்ணலேன்னா, உங்க பதிவை படிச்சு அது அந்த ஆளுக்கு புரிஞ்சு இருந்தா அவர் ஏன் copy cat ஆ இருக்கார்!! அந்த பிங்க் நிற எழுத்துக்கள் படிக்க கஷ்டமா இருக்கு அண்ணா. உங்க கிட்ட இருக்கிற கெட்ட பழக்கமே இது தான். பாருங்க உங்க பதிவு படிச்சா அப்புறம் இன்னும் கொஞ்சம் ரெபரன்ஸ் தேடவேண்டி இருக்கு. நீங்க கடைசியா கேட்ட கேள்வியல் சொல்ல , மாங்காய் பால் தேடி போனேன். கூகிள் முழுக்க மாங்காய் பால் இருக்கு, ஆனா விளக்கம் தான் மிஸ்ஸிங்:(( அறிந்தவர் அறிந்தவராகன்னு விட்டுட்டாங்க போல:) ஒரு வேளை தானே எழுதிய பாட்டை , பிற பெரிய நூல்களுக்கு உரை எழுதும் போது இடையில் செருகி விட்டார்களோ??? இப்படி open ENDED ஆ விட்டீங்கன்ன என் மூளை எவ்ளோ கிரிமினலா யோசிக்குது பாருங்க:))

    ReplyDelete
    Replies
    1. //உங்க பதிவை படிச்சு அது அந்த ஆளுக்கு புரிஞ்சு இருந்தா அவர் ஏன் copy cat ஆ இருக்கார்!!// - நன்றாகச் சொன்னீர்கள்!

      Delete
    2. எப்படியோ “புரியாம எழுதுறேன்னு“ சொல்றிங்க...!
      எனக்கும் புரிய மாட்டேங்குது!
      என்ன புரியலைன்னு சொன்னாலாவது புரியும் படிச் சொல்லப் பாக்கலாம்னா அதையும் சொல்ல மாட்டேங்கிறீங்க!
      ஆனா,
      எப்படியாவது அந்தப் பெருமகனார் தலைப்பில் என் ஒரு பதிவாவது வர வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்.!!!!
      எழுத்தின் நிறத்தை மாற்றி விட்டேன்!!!
      ரெபரன்ஸ் தேடினிங்களா..?
      உண்மையிலயே எனக்கு மாங்காய்ப் பால் ன்னா என்னன்னெல்லாம் தெரியாது.
      ஏதோ ரகசிய வார்த்தை போல!
      உங்கள் நிலவன் அண்ணா, மாங்காய்ப்பாலைத் தேங்காய்ப்பாலாக்கி இடியாப்பச் சிக்கலுக்கு ஊற்றித் தீர்க்கத் தந்திருக்கிறாரே பார்க்க வில்லையா?
      //ஒரு வேளை தானே எழுதிய பாட்டை , பிற பெரிய நூல்களுக்கு உரை எழுதும் போது இடையில் செருகி விட்டார்களோ??//
      உரை என்ற பெயரில் செருகினால் பரவாயில்லையே!
      நூலிலேயே செருகினால்...??
      உங்களவிட முன்னோர் மூளை கிரிமினலானதுங்கோ!!!!
      வருகைக்கு நன்றி சகோ!!

      Delete
    3. //என்ன புரியலைன்னு சொன்னாலாவது புரியும் படிச் சொல்லப் பாக்கலாம்னா அதையும் சொல்ல மாட்டேங்கிறீங்க!// - இதைத் தாங்கள் என்னிடம் 'யாப்புச் சூக்குமம்' பதிவிலேயே கேட்டீர்கள்; என்ன, எது புரியவில்லை என்று தெரிவிக்கும்படி. சொல்லக்கூடாது என்பதில்லை ஐயா, எழுத்தில் அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்கிறேன், புரிகிறதா பாருங்கள்! அதாவது, தங்கள் எழுத்து நடை மிகவும் வேகமாக இருக்கிறது. கருத்துக்களை வெகு வேகமாகச் சொல்லிச் செல்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, "பொருளை எடுத்து “ என்மனார் புலவர்“ “ என்றிசினோர்“ அப்படிப் போடுறது" என்னும் வரி எனக்குச் சரிவரப் புரியவில்லை. இங்கு தாங்கள் கூற வருவது, "பழைய பாட்டு ஒன்றின் பொருளை எடுத்துக்காட்டி அதன் முடிவில் “என்மனார் புலவர்“ “என்றிசினோர்“ என்றெல்லாம் போடுறது" என்பதுதானே? சரியா ஐயா?

      Delete
    4. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்குப் பதிலாகக் குன்றக் கூறி மயங்க வைக்கிறேன் என்கிறீர்கள்! ( இதப்பார்றா!)

      அதான் சரியாகப் புரிந்து கொள்கிறீர்களே அய்யா!
      அப்பறம் என்ன!
      புரியாவிட்டால் புரியிற மாதிரி சொல்லுடா எனத் தயங்காமல் கேட்டுவிட வேண்டியதுதானே?
      தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!
      இது போன்ற பகுதிகளை அறியத் தந்தால் அவ்விடத்தில் விளக்கி மீளப் பதிய வசதியாய் இருக்கும்.
      பின்னூட்டத்தின் நோக்கம் அதுதானே!
      நன்றி

      Delete
    5. //சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்குப் பதிலாகக் குன்றக் கூறி மயங்க வைக்கிறேன் என்கிறீர்கள்!// - அப்படியெல்லாம் இல்லை ஐயா! சில இடங்கள்தாம் புரியவில்லை. இன்னும் சொல்லப் போனால், சில இடங்களில் தங்கள் நடையின் கடினத்தன்மை எழுத்தின் மீது தங்களுக்குள்ள ஆளுமையைக் காட்டுவதாகத்தான் உள்ளதே தவிர, படிப்பவர்களின் புரிதலை மேம்படுத்தக்கூடியதாகத்தான் உள்ளதே தவிர, சிக்கலாகவெல்லாம் இல்லை.

      Delete
    6. உங்க எழுத்தில் ஒரு strong flavour இருக்கு அண்ணா! எளிமை என்பது குறைச்சலாய் இருக்கு. ஆனா தேடித்தேடி பெறவேண்டிய எழுத்து நேர்த்தி இயல்பிலேயே இருப்பது குறை இல்லை என்பதே என் கருத்து. பின்னூட்டத்தில் இப்போதெல்லாம் அந்த இலகு நடை உங்களிடம் தெரிகிறது. அப்படி நீங்கள் உங்கள் வெகு செம்மையான எழுத்துக்களை சற்று எளிமை படுத்திக்கொள்ளவேண்டும்(என் வரையில் அவசியமில்லை என நினைக்கிறேன்) என நினைத்தால் பதிவு எழுதும் போதே அதை இனியாவிற்கோ (நான் சொன்னது J.இனியா) மைதிலிக்கோ அதை சொல்வதாக நினைத்துகொள்ளுங்கள். (பாருங்க, கருத்து தானே கேட்டிங்க, இந்த டீச்சர் புத்தி போகாம, அறைகொறைய எனக்கு தெரிஞ்சதெல்லாம் உளறுகிறேன்:(( சாரி அண்ணா!
      ---------
      ஞானப்ரகாஷ் சகா நான் சொல்ல கரெக்டா சொல்லிட்டார்.

      Delete
  8. நூலுக்கான இலக்கணங்களைப் படித்தேன். நூல் ஆசிரியர்கள் கவனித்துக் கொள்ளவேண்டிய முக்கியமான குறிப்புகள் உள்ளன. பல நூல்களை வாங்கிப் படிக்கும்போது இன்னும் பல செய்திகள் மனதில் உருவாக வாய்ப்புண்டு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உண்டு.
      நிச்சயமாகப் பல நூல் பயிற்சி பயன்தரக்கூடியதுதான்.
      நன்றி அய்யா!!

      Delete
  9. அன்புள்ள அய்யா,

    காலையில் காப்பி குடித்துக் கொண்டே...தங்களின்
    அந்தக் காலத்தில் காப்பி இருந்ததைப் கரைத்துக் குடித்தேன்.
    ஆமாம்...வெள்ளைக்காரன்தான் தேநீர்...காப்பியை நமக்கு அறிமுகப்படுத்தியதாகக் கேள்விப்பட்டதுண்டு என்ற நினைத்துக்கொண்டே படித்தேன்...பிறகுதான் தெரிந்தது அந்தக் காப்பி அன்று என்று.
    எல்லோரும் புரிந்து கொள்ளும் படி சுருங்கச்சொல்லி விளங்க வைத்தது அருமை .
    ‘இலக்கண நூல்களில் இருந்தும் ““சுட்டுத்“ தன்பெயரில் உள்ள நன்னூலில் போட்டிருக்கிறார் பவணந்தி.’ ( மேற்கோளிற்குள் இருப்பது தங்களிடமிருந்து சுட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

    ‘ .“ முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்
    பொன்னேபோல் போற்றுவோம்“ ( நன்-4)’

    .“ முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்
    என்னேபோல் போற்றுவோம்“ ( நன்-4)
    இதானே இப்பொழுது செய்கிறார்கள்...!
    இதுபோல் இலக்கியத்தில் காப்பி இருக்கிறதா..? இலக்கியத்தை வைத்துத்தானே இலக்கணம் எழுதப்பட்டது? என்ன என் கேள்வி சரிதானா?

    நன்றி.



    ReplyDelete
  10. இந்த பதிவையும் காப்பி அடிக்கலாம்...!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இந்தப் பதிவு யாரையும் காப்பியடித்து எழுதப்பட்டதில்லை வலைச்சித்தரே!
      தங்கள் வருகைக்கு நன்றி!!

      Delete
  11. ஈ..யடிச்சான் காப்பி, மற்றும் கள்ளக்காப்பி இந்த காப்பிகளுக்கு அர்த்தம் என்னவென்று இலக்கணமாக தெரிந்து கொள்ள ஆசை...

    ReplyDelete
    Replies
    1. வலிப்போக்கரே ஓடி விட மாட்டீர்கள் தானே?
      இதோ ஈ அடிச்சான் காப்பிக்கு இலக்கணமாகத் தெரிந்த அர்த்தம்,

      “ஈ யென்னும் நிறுத்தச்சுட்டு அடிச்சான் என்னும் குறித்துவருகிளவியொடு ( எந்தக் கிழவி) சேருங்கால் உயிர்முன் உயிர்வர உடம்படுமெய்வரு மெனும்
      “இஈஐ வழி யவ்வும்
      ஏனையுயிர்வழி வவ்வும்
      ஏமுன்னிருமையு முயிர்வரி
      னுடம்படு மெய்யென்றாகு ம்“
      எனும்வாய்பாட்டான், உடம்படுமெய் பெற்று,
      “உடல்மே லுயிர்வந் தொன்றுவதியல் பே “எனும் விதியால்,
      யகரவொற்று அகரவுயிரோடிணைந்து ஈயடிச்சான் எனநின்றது..
      அவ்வீயடிச்சான் எனுஞ் சொல் , காப்பி என்னும் குறித்துவருகிளவியொடு இயல்பாய்ப் புணர்ந்து “ஈ..யடிச்சான் காப்பி என்றானது.
      ஈ என்பதற்கும் அடிச்சான் என்பதற்கும் இரு சிறு புள்ளி இடைவெளி அவண் இருமாத்திரையளவு ஓசை விட்டிசைத்து நிற்குமென்பதைக் குறிப்புப் பொருளாலுணர்த்திற்று..

      இலக்கணமாகத் தெரிந்து கொண்டது போதுமா வலிப்போக்கரே!
      கள்ளக்காப்பி குறித்து நாளை பார்க்கலாம்!

      Delete
  12. வணக்கம் சகோ! எங்கே பதிவை காணோம் என்று பார்த்தேன். நூலுக்கு தேவையான அழகும் அசிங்கமும் எதுவென அறிந்தேன். மிக்க மகிழ்ச்சியே.
    காப்பி பற்றி சொல்லலாமா அதிகப் பிரசங்கி என்று நினைக்கக் கூடாது ok வா இல்லை முன்னோர்கள் எழுதியது என்றாலும் அவை காலப் போக்கில் அழிந்து விட வாய்ப்புண்டு அல்லவா அதனால் இடையில் வருபவர்கள் அவை அழிந்து விடாதிருக்க அப்படியே எடுத்து வந்திருக்கலாம் அல்லவா அதை தானோ வகுத்தார் , தொகுத்தார், ,புதுப்பித்தார் என்றெல்லாம் சொல்வார்களே அப்படி இருக்குமோ அப்படியென்றால் நிச்சயமாக காப்பி என்று சொல்லமுடியாது தானே சகோ இல்லையா?அப்படி அவர்கள் செய்யாவிட்டால் நம் கைக்கு கிட்டியிருக்காது அல்லவா? தெரியவில்லை எதற்கும் தங்கள் அடுத்த பதிவில் தெரிந்து கொள்கிறேன்.

    உங்க பதிவை அவர் ஏன் காப்பி பண்ணலேன்னா, அம்மு சொன்ன மாதிரி அவருக்கு புரிஞ்சு இருக்காது சகோ சரிதானே ஹா ஹா ...மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      முதலில் தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.
      நான் காப்பி என்ற சொல்லைக் கையாண்டது இன்றைய மரபில் பவணந்தியாரை விமர்சித்தால் இப்படி விமர்சிக்க வேண்டியிருக்கும் என்பதற்காகவே!
      முன்னோர் எழுதியது அழிந்துவிடும் என்ற எண்ணத்தைவிட அது அன்றைய நூலாக்க மரபு.
      புதிதாக இலக்கண நூலைச் செய்பவர்கள், மாற்றமும் எளிமையும், வேண்டப்பெறா இடத்து முன்னோர் மொழியை அப்படியே சொல்லிப் போய் இருக்கின்றனர்.
      எனது பதிவு நடப்பிற்கும் இறப்பிற்குமானஒரு ஒப்பீடுதான்.
      இன்றைய அளவுகோல்களைக் கொண்டு பழம்மரபினை அளப்பதில் உள்ள அபத்தத்தை அறிந்தே இருக்கிறேன்.
      எனவேதான் மரபில் பவணந்தியோ அக்கால நூலாசிரியர்களோ செய்தது தவறன்று என்றும் அப்படி எடுத்தாண்டதற்கான என் மனதிற்குப் பட்ட காரணங்களையும் பதிவினிறுதியில் சொல்லிப் போனேன்!

      விவாதம் நல்லது தானே!

      மாற்றுக் கருத்துகளை நிச்சயமாய் முன்வைக்கத்தான் வேண்டும்.

      //உங்க பதிவை அவர் ஏன் காப்பி பண்ணலேன்னா, அம்மு சொன்ன மாதிரி அவருக்கு புரிஞ்சு இருக்காது //
      எல்லாருமா சேர்ந்து என்பதிவுகளுக்குப் ““புரியாதவனின் புலம்பல்கள்““ ன்னு பேர் கொடுத்திடுவிங்க போல இருக்கே!!!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!!

      Delete
    2. ஐயா! நாங்கள் சொல்வதைத் தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். தங்கள் எழுத்துத்தரம் மிகவும் உயர்வானது, அப்படிப்பட்ட நகலடிச்சான் குஞ்சுகளுக்கெல்லாம் புரியக்கூடியதில்லை என்கிற பொருளில்தான் நாங்கள் இந்தக் காரணத்தைச் சுட்டினோமே தவிர, நீங்கள் கூறும் பொருளில் இல்லை!

      Delete
  13. வணக்கம் ஐயா!
    காப்பின்னு சொன்னதும் நானும் ஆவலாக ஓடிவந்தேன்.. ஆனால்.. இது வேற காப்பி..:) அதுவும் நன்றாகவே இருக்கு..:)

    முன்னோர்கள் இது இப்படி என்று வகுத்து வைத்ததைத் தொடர்வது காப்பியாகுமா?.. அது ஒரு நியதி, கட்டுப்பாடு, வாய்பாடு தானே..!?

    காப்பி... என்னை நன்றாகவே கலக்க்க்கிக் குடிக்க வைக்கின்றது!..:)

    தொடருங்கள்.... ஐயா!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரியாரே!
      நீங்கள் சொல்வது சரிதான்!

      நன்னூலின் சிறப்புப் பாயிரம் இப்படிச் சொல்கிறது,
      “ அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணர,
      தொகை வகை விரியில் தருக “
      எனக் கேட்கப்பட பவணந்தி எழுதியளித்தாராம்.
      பவணந்தியாரைக் கேலி செய்வது என் நோக்கமன்று
      அது அக்காலத்தில் தவறெனப்படா புலமை மரபென்பதைப் பதிவில் சொல்லி இருப்பதாகவே நினைக்கிறேன்.
      எச்சூழலில் அப்படிச் செய்துள்ளார்கள் என்பதையும்!
      காப்பி குடித்த மகிழ்ச்சியில் வெண்பாவை மறந்து விட்டீர்களே சகோ?
      உங்களுக்குப் பின்னூட்டம் என்ற பெயரில் ஏதாவது எழுதினால்தான் உண்டு என்றால் இங்கு அதற்கும் வழி யில்லையே!
      ஹ ஹ ஹா!

      நன்றி சகோ!!!

      Delete
  14. ஆக கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே தமிழர்கள் காப்பி அடிக்கத் தொடங்கி விட்டனர். நன்றாக கிண்டலடிக்கவும் உங்களுக்கு தெரிவதால் இடையிடையே கொஞ்சம் நகைச்சுவை கட்டுரைகளையும் தாருங்கள்.
    ( த.ம. எத்தனையாவது ஓட்டு?)

    ReplyDelete
    Replies
    1. “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே“ என்பது ஒரு போர் ஆயத்தப்பாட்டு அய்யா,
      போருக்குப் புறப்படும்முன் தலைவர்கள் வீர உரை நிகழ்த்துவதில்லையா அதைப் போல,
      ஆடு மாடுகளைத் திருடிய கள்வரை எதிர்த்து ( கள்வரை எதிர்த்தல் கடுங்கோல் அல்ல - இளங்கோ சொல்லியதுதானே.... என்ன அது “கோறலா?“)தங்கள் செல்வங்களை மீட்டுக் கொணரக் கருதிய ஓரினம் தம் பெருமைகள் இன்னின்ன என்பதைப் பட்டியலிட்டு,
      இப்படிப் பட்ட நம்மிடமே வந்து வாலாட்டுகிறார்களா , அவர்களைச் சும்மாவிடக்கூடாது என்று தங்கள் குடிப்பெருமை இன்னெதென விளக்கி வீர உணர்ச்சி ஏற்படுத்துவதற்காகப் புறப்பொருள் வெண்பாமாலையில் சொல்லப்பட்ட பாடல் இது,

      “பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
      வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
      கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
      முற்றோன்றி மூத்த குடி .“

      கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தமிழன் எப்படித் தோன்றி இருக்க முடியும் என்று கேலி பேசுவதும், குறிஞ்சி மருதமாக முதிராத சூழலில் தொல்குடியினனாய் ஆயுதபாணியாய் நின்றவன் தமிழன் என விளக்கிச் சொல்வதும் சரியா என்பதை அவரவர் ஆராய்ச்சி முடிவு செய்யட்டும். எனக்குப் படுவது,
      இங்குக் கன்று காலிகளைக் கவர்ந்தோரும் பறிகொடுத்தோரும் தமிழ் பேசுபவர்களே! வெவ்வேறு குடிகள்!!
      மீட்கப் போராடும் ஒரு கூட்டம் பலரையும் பலிகொடுத்த நிலையில், எஞ்சியோரைத் திரட்டும் முயற்சியில் தம்குலப்பெருமையைக் கையிலெடுத்து ஆட்களைத் திரட்டவும், திரண்டோரைப் போர்வெறியூட்டவும் நிகழ்த்தும் வீர உரையாகவே கொளுவின் தொடர்ச்சியைப் படிக்கும் போது இச்சிற்றறிவிற்கெட்டியது.
      நகைச்சுவைப்பதிவு..
      தள்ளித் தள்ளிப்போகிறது..
      நிச்சயம் தருவோம் அய்யா!
      தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.
      ( சந்தடி சாக்கில நாம சொல்ல வேண்டியதச் சொல்லியாச்சு..“ “ பொய்யகல புகழ்விளைத்தல்(?) “
      இதுக்கு இனிமே எவ்வளவு அடி கிடைக்கப் போகுதோ?)

      Delete
  15. அருமையான பதிவு ஐயா! ஆனால், உங்கள் பதிவுகளை நீங்கள் குறைத்துக் கூறிக் கொண்டது நடிகர் பார்த்திபன் தன் கவிதை நூலுக்குக் 'கிறுக்கல்கள்' என்று பெயர் வைத்ததை நினைவூட்டியது. :-)

    ஒரு படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் கூறும் அந்தப் பட்டியல் அபாரம்! அதை வழங்கியமைக்கு நன்றி! இதை நான் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வேன். ஆனால், கடைசியில் அதைக் கூறியவர் பவணந்தி அடிகள் இல்லை; அவரே இன்னொரு பழைய நூலிலிருந்து களவாடியவைதாம் அவை என்ற வரிகள் படித்ததும் பெருந்திகைப்பு அடைந்தேன். அந்தக் காலத்திலேயே இப்படியா?

    ஆனால், "முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவோம்" என்பதற்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் விளையாட்டுக்குச் சொன்னது போலத்தான் இருக்கிறது. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை அதற்குப் பொருள், "முன்னோர் கூறிய கருத்துக்களை மட்டுமல்லாமல் அந்த வார்த்தைகளையும் பொன் போலப் போற்றி மதிப்போம்" என்பதுதான், சரியா ஐயா?

    சில சமயம் நீங்கள் எழுதுபவை எனக்குச் சரியாகப் புரிவதில்லை. இந்தப் பதிவைப் பொறுத்த வரை தொல்காப்பியரும் இப்படி நகலடித்திருக்கிறார் என்பதற்கு நீங்கள் காட்டும் எடுத்துக்காட்டு அந்த வகை. "என்மனார் புலவர்" என்று பல இடங்களில் தொல்காப்பியர் கூறியிருக்கிறாரே, அதுவும் ஒரு வகை நகலடி வேலைதானே என்கிறீர்களா? அஃது எப்படி ஐயா? அது மேற்கோள் காட்டும் முயற்சிதானே? ஓ, அதனால்தான் "இப்படிச் சொல்றது கூடப் பெயர் சொல்லாம ஒருவித நன்றியைச் சொல்றதுதான்" என்று அந்தப் பத்தியின் முடிவில் நீங்களே கூறிவிட்டீர்களோ! ஆனால் அதற்கு முன்னால், இரண்டு விதமான நகலடி வேலைகளைத் தொல்காப்பியர் செய்திருப்பதாகக் கூறினீர்களே? ஒன்றைப் பற்றித்தான் மேற்கண்டவாறு விளக்கிப் பின்னர் அது நகலடி வேலை இல்லை என்று நீங்களே தீர்ப்புக் கூறி விட்டீர்கள், சரி; அப்படியானால் அந்த இன்னொன்று? (ஒண்ணு இங்கே இருக்கு; இன்னொண்ணு எங்கே?)

    "நகலடிப்பது பெரிய தவறு இல்லை. அந்தக் காலத் தமிழறிஞர்களே அதைச் செய்ததுண்டு. முன்னோர்கள் ஒரு விதயத்தைச் சிறப்பாகச் சொல்லிச் சென்றிருந்தால், அது குறித்து நாம் அதைத் தாண்டிச் சிறப்பாகச் சொல்ல வராத நிலையில் முன்னோர்களின் அந்தக் கருத்துக்களை, வார்த்தைகளை அப்படிக்கப்படியே எடுத்தாள்வதில் தவறு இல்லை" - இந்தப் பதிவின் மொத்தச் சாரமாக நான் புரிந்து கொள்வது இதுதான். இது சரியெனில், இதில் ஒரு பிழை உள்ளது! ;-) அதாவது, மேற்கோள் காட்டுவது வேறு, நகலடிப்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். முன்னது, படைப்பாளியின் ஒப்புதலோடு / அவருக்கான நன்றியோடு / அவர் பெயரில் செய்யப்படுவது. பின்னது, அதைத் தன்னுடைய பெயரில், தனக்கு அந்தப் படைப்பைச் சொந்தமாக்கிக் கொள்ளும் நோக்கில் செய்யப்படுவது. எனவே, முன்னது தவறில்லை; ஆனால், பின்னது தவறுதான்! காரணம், நோக்கம் தவறானது! எனவே, தாங்கள் எவ்வளவுதான் மேற்கோள்கள் காட்டினாலும் நகலடிச்சான் குஞ்சுகளை, அவர்களின் இந்த வேலையை என்னால் ஏற்க முடியாது. நம் முன்னோர்களே இப்படியெல்லாம் செய்திருந்தாலும் தவறு தவறுதான்!

    நீரே முக்கண் முதல்வராயினும் ஆகுக! அல்லது, தமிழ்நாட்டு முதல்வராயினும் ஆகுக! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!!

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      விவாதத்திற்கு வித்திடும் என்ற எண்ணத்தில் நீண்ட தங்கள் பின்னூட்டத்திற்கான பதிலை முதலில் ஆசை பற்றி அறையலுற்றேன்.
      முதலில் நகல் மற்றும் நகலடி என்னும் சொல்லாட்சி.
      உண்மையில் “காப்பி “ என்னும் சொல்லை “மயங்க வைத்தலுக்காகப்“ பயன்படுத்தி இருந்தாலும் உங்களை நினைத்துக் கொண்டுதான் இருந்தேன்.
      நகல் எனக்குத் தெரியும். இன்று பயில வழங்கும் சொல்.
      “நகலடி“ எனும் சொல்லாட்சி இதுவரை நான் அறியாதது. அறியத் தந்தமைக்கு நன்றி.
      ஆனால் இது தமிழ்ச்சொல் அன்று. உருதுச்சொல். தமிழ் லெக்ஸிகனைக் காண வேண்டுகிறேன். இன்று தமிழொடு “தான் கலந்த“ சொல்லாகையால் நிச்சயமாய்க் காப்பியை விட நல்ல சொல்தான்.
      சொல்லை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
      //"முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவோம்" என்பதற்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் விளையாட்டுக்குச் சொன்னது போலத்தான் இருக்கிறது. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை அதற்குப் பொருள், "முன்னோர் கூறிய கருத்துக்களை மட்டுமல்லாமல் அந்த வார்த்தைகளையும் பொன் போலப் போற்றி மதிப்போம்" என்பதுதான்,//
      சுருக்கம் கருதி முழுநூற்பாவையும் தராதது என் தவறுதான் அய்யா.
      கீழே முழுப்பாடலும் அதற்குப் பண்டிதர் மூவரின் உரையும் கொடுத்துள்ளேன்.


      “முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
      பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
      வேறுநூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
      கூறுபழம் சூத்திரத்தின் கோள்“


      என் நுதலிற்றோவெனின், வழிநூற்கும் சார்புநூற்கும் எய்தியதன்மேல் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. முன்னோர் நூலின் பொருள் முடிபு முழுவதும் ஒப்பவும் ஒருபுடை ஒப்பவும் கூறுவதன்றியும், அந்நூற் சூத்திரங்களையும் ஒரோவழி எடுத்துக் கூறுக என்றலின்.

      ( இதன் பொருள் ) முன்னோர் மொழிந்த பொருளையே அன்றி அவர் மொழியினையும் பொன்போலப் போற்றிக்கொள்வம் என்பதற்கு இலச்சினையாகவும் முன்னோர் நூலையே கூறாது, அந்நூலினின்றும் வழிநூல், சார்புநூல் செய்தோம் ஆயினும் ஆசிரிய வசனங்களை ஒரோவழி எடுத்து உடன் கூறுதல் வழிநூற்கும் சார்புநூற்கும் இலக்கணம் ஆதலின் இந்நூலகத்து ஆசிரிய வசனம் இல்லை எனக் குற்றம் கூறுவார் ஆதலின்
      அக்குற்றம் ஒழிதற்காகவும் பழஞ்சூத்திரத்தின் கோளைக் கூறு என்றவாறு.“

      இது சங்கர நமச்சியவாயர் உரை.


      “முன்னோர் மொழிபொருளே அன்றி - முன்னோர் சொல்லிய பொருளையே அன்றி , அவர் மொழியும் பொன்னே போற் போற்றுவம் என்பதற்கும் - அவரது சொல்லையும் பொன்னைப் போலவே காத்துக்கொள்வோம் என்பதற்கு அடையாளமாகவும் , முன்னோரின் வேறு நூல் செய்தும் எனும் - முன்னோர் நூலையே சொல்லாது அந்நூலினின்றும் வழிநூல் சார்புநூல் என வேறு நூல் செய்தோம் ஆயினும் , மேற்கோள் இல் என்பதற்கும் - ஆசிரிய வசனம் இந்நூலினிடத்து இல்லையென்று சொல்லும் குற்றம் ஒழிதற்காகவும் , பழஞ் சூத்திரத்தின் கோள் கூறு - அவர் சொல்லிய பழஞ் சூத்திரங்களையும் ஓரோர் இடங்களில் எடுத்துச் சொல்லு“

      என்பது ஆறுமுக நாவலர் உரை.


      “முதனூல் செய்தவர் சொன்ன பொருள்களையே பெரும்பாலும் ஒத்திருக்கவும், சிறுபான்மை ஒத்திருக்கவும் எடுத்துச் சொல்வதுமல்லாமல், அவர்களுடைய சொற்களையும் பொன்னைப் போலவே விரும்பி வைத்துக் கொள்ளக் கடவோம் என்னுங் கொள்கைக்கு அடையாளமாகவும், முன்னோர் செய்த நூலையே சொல்லாமல் அந்நூலினின்றும வழிநூல் சார்புநூல் என வேறுநூல்களைச் செய்தோமாயினும் ( இந்நூலுள்) ஆசிரிய வசனம் இல்லை என்று சொல்லும் குறை ஒழிவதற்காகவும் ( அவர் சொல்லிய பழஞ்சூத்திரங்களையும் ஒவ்வோரிடத்து எடுத்துக்காட்டக்கடவாய்.
      எனவே, வழிநூல் சார்பு நூல்களில் முன்னோர் கூறிய செய்யுள் ஒரோவிடத்தில் இருந்தாலும் இலக்கணமாயிற்று. தொல்காப்பியத்திலிருந்தும் பிறநூல்களிலிருந்தும் சிற்சில சூத்திரங்கள் இந்நூலில் ஆங்காங்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருத்தல் காண்க.
      எனும்- எனினுமென்பதன் விகாரம்.
      ஆசிரிய வசனம், மேற்கோள், பழஞ்சூத்திரக்கோள் என்பன - ஒருபொருட்சொற்கள்.
      முன்னே “போற்றுவம் “ “ செய்தும் “ என உளப்பாட்டுத் தன்மைப் பன்மை முற்றுகளாகவும் பின்னே “கூறு“என முன்னிலை யேவலொருமை முற்றாகவும் கூறியதனால், இச்சூத்திரம் பலர் கூடிப் பேசிப்பின்பு ஒருவனை நோக்கி முடிவு செய்யப்பட்டதென அறிக “
      இது பண்டைய உரையாசிரியர்ப் புலமைக்குக் கிஞ்சித்தும் குறைவு படாத இருபதாம் நூற்றாண்டினரான வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் உரை.
      நான் சொன்னதில் தவறில்லையே அய்யா?
      அது அன்றைய மரபு. முன்னோர் நூற்பாக்கள் ஒரு நூலில் இல்லாவிட்டால் அதுகுற்றமாகிவிடும் என்னும் எண்ணும் எண்ணத்தையும் இவ்வுரைகள் நமக்குக் காட்டுகின்றன..............

      Delete
    2. ..........//சில சமயம் நீங்கள் எழுதுபவை எனக்குச் சரியாகப் புரிவதில்லை.//

      இதுபோன்ற எழுத்துலகில் நான் இதுவரை இயங்கியதில்லை அய்யா!
      பேச்சுலகில் இன்னும் புகவே இல்லை. ஆகவே கூடுமானவரை என்னை மாற்றிக்கொள்ள முயல்கிறேன். புரியும்படி எழுதவே விரும்புகிறேன். எழுத முடியும் என்று தோன்றுகிறது. நீங்கள் கூறியதை என்மேல் அன்பு கொண்ட பலரும் கூறியிருக்கிறார்கள். நிச்சயம் உளம் கொள்கிறேன்.

      //தொல்காப்பியரும் இப்படி நகலடித்திருக்கிறார் என்பதற்கு நீங்கள் காட்டும் எடுத்துக்காட்டு அந்த வகை. "என்மனார் புலவர்" என்று பல இடங்களில் தொல்காப்பியர் கூறியிருக்கிறாரே, அதுவும் ஒரு வகை நகலடி வேலைதானே என்கிறீர்களா? அஃது எப்படி ஐயா? அது மேற்கோள் காட்டும் முயற்சிதானே? ஓ, அதனால்தான் "இப்படிச் சொல்றது கூடப் பெயர் சொல்லாம ஒருவித நன்றியைச் சொல்றதுதான்" என்று அந்தப் பத்தியின் முடிவில் நீங்களே கூறிவிட்டீர்களோ! ஆனால் அதற்கு முன்னால், இரண்டு விதமான நகலடி வேலைகளைத் தொல்காப்பியர் செய்திருப்பதாகக் கூறினீர்களே? ஒன்றைப் பற்றித்தான் மேற்கண்டவாறு விளக்கிப் பின்னர் அது நகலடி வேலை இல்லை என்று நீங்களே தீர்ப்புக் கூறி விட்டீர்கள், சரி; அப்படியானால் அந்த இன்னொன்று? (ஒண்ணு இங்கே இருக்கு; இன்னொண்ணு எங்கே?)//

      இரண்டு குறித்தும் “மறுப்புரை மாண்பு“ எனும் நூலில் தெ.பொ.மீ அவர்கள் கூறிய கருத்துகளைக் கீழே தருகிறேன்

      ““தொல்காப்பியச் சிறப்புப் பாயிர ஆசிரியரான பனம்பாரனார்,

      'செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலத்து
      முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
      புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்'

      என்று, தொல்காப்பிய முதனூல்கள் பலவெனப் பொதுப்படக் குறித்தார்.

      தொல்காப்பிய முதல் நூற்பாவே, ''எழுத்தெனப் படுப'', ''முப்பஃ தென்ப'' என்று முன்னூலையும் முன்னூலாசிரியரின் பன்மையையும் குறிக்கின்றது. ஆதலால், தொல்காப்பியம் சார்பிற் சார்பான பண்டைப் பன்னூல் தொகுப்பேயன்றிப் புதுப்படத் தோன்றிய தனிநூலன்று.“
      ( பின்வந்த பலரும் தொல்காப்பியர் பெயரில் தம் கைச்சரக்கையும் கலந்து விட்டிருக்கின்றனர் அய்யா. அது குறித்து அடுத்த பதிவில் எழுதலாம் என்று இருந்தேன் )
      புலம் தொகுத்தல் என்னும் சொல்லாட்சி, பல நூல்களில் உள்ளவற்றைத் திரட்டி அளித்தல் என்ற பொருளில் ஆளப்படுகிறது அய்யா!

      Delete
    3. //"நகலடிப்பது பெரிய தவறு இல்லை. அந்தக் காலத் தமிழறிஞர்களே அதைச் செய்ததுண்டு. முன்னோர்கள் ஒரு விதயத்தைச் சிறப்பாகச் சொல்லிச் சென்றிருந்தால், அது குறித்து நாம் அதைத் தாண்டிச் சிறப்பாகச் சொல்ல வராத நிலையில் முன்னோர்களின் அந்தக் கருத்துக்களை, வார்த்தைகளை அப்படிக்கப்படியே எடுத்தாள்வதில் தவறு இல்லை" - இந்தப் பதிவின் மொத்தச் சாரமாக நான் புரிந்து கொள்வது இதுதான். இது சரியெனில், இதில் ஒரு பிழை உள்ளது! ;-) அதாவது, மேற்கோள் காட்டுவது வேறு, நகலடிப்பது வேறு. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றே ஒன்றுதான். முன்னது, படைப்பாளியின் ஒப்புதலோடு / அவருக்கான நன்றியோடு / அவர் பெயரில் செய்யப்படுவது. பின்னது, அதைத் தன்னுடைய பெயரில், தனக்கு அந்தப் படைப்பைச் சொந்தமாக்கிக் கொள்ளும் நோக்கில் செய்யப்படுவது. எனவே, முன்னது தவறில்லை; ஆனால், பின்னது தவறுதான்! காரணம், நோக்கம் தவறானது!//
      அய்யா, தங்கள் கொள்கையில் எனக்கும் உடன்பாடே! தொல்காப்பியனாயிருந்தால் என்ன.. நான் பெரிதும் வியக்கும் நச்சினார்க்கினினாய் இருந்தால் என்ன, யார் செய்தாலும் தவறு தவறுதான்!
      நாம் ஏன் அவர்களுக்குப் பல்லக்குத் தூக்க வேண்டும்.?
      ஆனால் மேலைநாட்டுக்கல்வியும் ஆய்வு முறைகளும் நம்மிடையே செல்வாக்குறும்முன் இருந்த நூலாக்க மரபில் குறிப்பாக இலக்கண நூலாக்க மரபில், முன்னையோரது நூற்பாக்களை அதே யாப்பு வடிவில் காலம் தோற்றிய புதிய விதிகளை இணைத்துப் படைக்கும் ஆசிரியனுக்கு “எடுத்தாளுதல் தவறன்று“ என்றும் இயல்பு என்றும் எண்ணம் இருந்திருக்கிறது. ஒரு இலக்கண நூலில் இது போன்ற முன்னையோர் கூற்று இடம் பெறாவிட்டால் அது குற்றம் என்ற எண்ணமும் இருந்திருக்கிறது.
      தங்களால் முன்னோர் மொழியை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாத இடங்களில், அக்கருத்துகள் மாற்றம் பெறாத இடங்களில் அப்படியே அதை எடுத்தாளுதல் மரபாய் இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கண விளக்கம் வரை நீங்கள் கூறிய இந்த நகலடி வேலைகளைக் காண முடியும்.
      சூத்திரங்கள், விதிகளைக் கூறுவதாக அமைந்தனவேயன்றி எடுத்தாளப்படுமிடத்தும் அதை எழுதியவர் யார் என்று கூறுவதாய் அமையவில்லை. வாய்மொழிப் பாடம் கேட்டல் மரபில் அதற்கான தேவையும் எழவில்லை.
      பேரிலக்கிய இலக்கண நூல்களின் உரையாசிரியர்கள் கூடப் பல இடங்களில் தங்களின் மேற்கோள் ஆட்சிக்குரிய நூற்பெயரையோ, ஆசிரியர் பெயரையோ சுட்டிச் சென்றதை நான் கண்டதில்லை. அது பண்டைய மரபு.
      என்னைப் பொருத்தவரை அது “ அறிவைப் பொதுவில் வைத்தல் “
      என்பதாகவே நான் காண்கிறேன். பவணந்தியை இழிவுபடுத்துவதோ தொல்காப்பியர் செய்வது குறையெனக் கூறுவதோ என்பதிவின் நோக்கமல்ல.
      இன்றைய புலமை மரபில் இது தவறு. இன்றைய அளவுகோலைப் பழம் மரபிற்குப் பொருத்திப்பார்த்ததில் நிச்சயம் என் தவறிருக்கலாம். ஆனால், இவ்விஷயத்தைப் பொருத்த வரை முன்னோர் செய்தது தவறல்ல என்றே நான் கருதுகிறேன்.

      இத்தலைப்பில் இவைபற்றி நான் பகிரக் காரணம்,

      சில நல்ல பதிப்புகளின், ஆய்வுக் கட்டுரைகளின் ( கவனிக்க- ஆய்வுக்கட்டுரைகளின் ) வாசிப்பில், அவர்கள் காட்டும் இது போன்ற மேற்கோள்கள் கூடுமானவரை, அதை முதலில் கூறிய நூலினைச் சுட்டுவதாய் இருக்கலாமே என்ற எண்ணம் தான்.
      யார் கூறியிருந்தாலும நல்ல படைப்பின் குணங்களையும் குற்றங்களையும் கூறும் இப்பாடலை இத்தலைப்பின் காட்டிச் செல்லலாம் என்ற எண்ணம் கூடுதலானது.
      தங்களின் மாற்றுக் கருத்துகளை வரவேற்கிறேன்.
      நன்றி.

      Delete
    4. பெருமதிப்பிற்குரிய ஐயா!

      சிறுவன் நான் ஆர்வக் கோளாற்றில் கேட்ட கேள்விகளுக்காக இவ்வளவு பழம்பெரும் நூல்களிலிருந்தெல்லாம் இத்தனை இத்தனை பாக்களையும் உரைகளையும் எடுத்து வந்து ஊட்டும் தங்கள் அன்பை என்னென்பேன்!! முதலில் அதற்கு என் உளம் கனிந்த நன்றி!

      "முன்னோர் மொழிபொருளே..." எனத் தொடங்கும் பாடலைப் பற்றி முதலில் சிறியேன் கருத்துக்களைக் கூறி விடுகிறேன். இதற்குத் தாங்கள் மூன்று உரைகளை அளித்ததோடு மட்டுமில்லாமல், முதல் உரை எனக்குக் கண்டிப்பாகப் புரியாது என்று உணர்ந்து அதற்குத் தாங்களே பொருளும் வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி! எனக்கு எப்பொழுதுமே, ஒவ்வொரு சொல்லாக அல்லது பகுதி பகுதியாகக் கூறி விளக்கினால்தான் மண்டையில் ஏறும். அந்த வகையில் ஆறுமுக நாவலர் உரை நன்கு புரிவதாக இருந்தது. அதற்காக, சங்கர நமச்சிவாயர் உரைக்குத் தாங்கள் எழுதிய பொருளோ, வை.மு.கோ ஐயா அவர்களின் உரையோ புரியவில்லை என்பது இல்லை; ஒப்பீட்டளவில் அவற்றை விட ஆறுமுக நாவலருடையது நன்கு புரிந்தது. மூன்றையும் படித்துப் பார்க்கும்பொழுது, "முன்னோர்களுடைய கருத்துக்களையும் சொற்களையும் ஏற்றுக் கொள்கிறோம் என்பதற்குச் சான்றாக, முன்னோருடைய நூல்களுக்கான வழி நூல்களைப் படைக்கும்பொழுது, மேற்கோள் இல்லை என்று யாரும் குறை சொல்லி விடாமல் தவிர்க்கும் பொருட்டு முன்னோர் கூறிய பழைய சூத்திரங்களையும் அப்படியே சில இடங்களில் சுட்டிக் காட்டு" என்பதாகத்தான் இது பொருள்படுகிறது, இல்லையா?

      இன்னும் எளிமையாகச் சொன்னால், "பழைய நூல்களுக்குக் கையேடு எழுதும்பொழுது மூல நூலின் கருத்துக்களை மட்டுமில்லாமல், வார்த்தைகளையும் கூட நாம் மதிக்கிறோம் என்பதற்கு அடையாளமாகவும், பழைய நூலின் மேற்கோள்கள் எதுவும் புது நூலில் இல்லை என்னும் குற்றச்சாட்டு எழாமலிருக்கும் வகையிலும் ஆங்காங்கே சில இடங்களில் பழைய நூலின் சூத்திரங்களை அப்படியே பயன்படுத்து" என்பதுதான் இதன் பொருள், இல்லையா ஐயா? ஆக, இதில் நகலடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஏதும் இல்லையே ஐயா? மீண்டும் மீண்டும் இப்படிக் கூறுவதற்காகத் தாங்கள் என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்! இவற்றின் பின்னால் தாங்களே கூறியிருப்பது போல, "முன்னோர் நூற்பாக்கள் ஒரு நூலில் இல்லாவிட்டால் அது குற்றமாகிவிடும் என்னும்" எண்ணத்தின் வெளிப்பாடுதானே இது? ஆகவே, இதில் நகலடிப்பது என்கிற நோக்கமே இல்லையே? இதை அப்படிச் சொல்ல முடியாதே! இது பெரியவர்களை மதிப்பதற்காக அப்படியே அவர்கள் வார்த்தைகளை எடுத்தாளும் முறைதானே? அப்படி எடுத்தாள்பவர்கள் குறிப்பிட்ட கருத்துக்களுக்கும், சொற்களுக்கும் உரியவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் அதைச் செய்வதால் தாங்கள் இதை நகலடி வேலை என்கிறீர்களோ?

      ஆனால், அதற்கும் தாங்களே விடை கூறி விட்டீர்கள் ஐயா! "அறிவைப் பொதுவில் வைத்தல்" என்னும் முறையால் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் இப்படி ஒரு பழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கலாம் என்கிறீர்கள். அருமை ஐயா! இந்தக் கருத்தின் மூலம் தாங்கள் எப்படிப்பட்ட ஒரு புதிய விளக்கத்தை இந்த உலகுக்கு அளித்திருக்கிறீர்கள்!!

      அதாவது ஐயா, அண்மைக்காலமாக உலகெங்கும் -குறிப்பாக இணையவெளி பற்றி- விவாதிக்கப்பட்டு வரும் பெரும் சிக்கல் 'காப்புரிமை'! எவ்வளவுதான் பாதுகாத்தாலும், சட்டம் இயற்றினாலும், நெறிகளை அமல்படுத்தினாலும் இணையத்தில் காப்புரிமை மீறல் என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. தொழில்நுட்ப வேந்தர்களான வெளிநாட்டினராலும் இதை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே, இதற்கான தீர்வாகச் சில தொழில்நுட்ப அறிஞர்கள் முன்வைக்கும் முழக்கம் 'காப்புரிமையே வேண்டா' என்பது! ஆங்கிலத்தில் இதைக் 'காப்பிலெப்டு' (copyleft) என்கிறார்கள் சிலர்! "இது தவறில்லையா? அவரவர் படைப்பு அவரவருக்குச் சொந்தமில்லையா? அவரவர் மூளையைக் கசக்கிப் படாதபாடு பட்டுப் படைப்பவற்றை எவர் வேண்டுமானாலும் உரிமையோடு கையிலெடுத்துக் கொண்டு விட்டால் அப்புறம் படைத்தவருக்கு என்ன மதிப்பு" எனக் கேட்டால், "எப்படியிருந்தாலும், மூலப் படைப்பாளியும் அந்தப் படைப்புக்கான ஊக்கத்தை, வித்தை இந்தச் சமூகத்திலிருந்துதானே பெறுகிறார்? சமூகத்திலிருந்து கிடைத்த அறிவைக் கொண்டு அவர் படைத்ததைச் சமூகத்துக்கே திருப்பிக் கொடுப்பதுதானே முறை" என்கிறார்கள்! இது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்க, இவ்வளவு புத்தம் புதுமையான ஒரு கருத்தை அந்தக் காலத்திலேயே தமிழர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட 'அறிவைப் பொதுவில் வைத்தல்' என்னும் மேற்கோள் மூலம் தாங்கள் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்! வியப்பாக இருக்கிறது ஐயா!

      Delete
    5. ஆக மொத்தத்தில், அந்தச் செய்யுளுக்கு மேற்கண்ட 'அறிவைப் பொதுவில் வைத்தல்' மேற்கோளைத் தாங்கள் சுட்டியிருப்பதன் அடிப்படையில், அது நகலடிப்பதை ஊக்குவிக்கவில்லை என்பதாகவே பொருள்படுத்திக் கொள்கிறேன். விளையாட்டுக்குச் சொல்லவில்லை, நீங்கள் அப்படிச் சொல்ல வருவதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். சரிதானே ஐயா?

      Delete
    6. //இதுபோன்ற எழுத்துலகில் நான் இதுவரை இயங்கியதில்லை அய்யா! பேச்சுலகில் இன்னும் புகவே இல்லை. ஆகவே கூடுமானவரை என்னை மாற்றிக்கொள்ள முயல்கிறேன். புரியும்படி எழுதவே விரும்புகிறேன். எழுத முடியும் என்று தோன்றுகிறது. நீங்கள் கூறியதை என்மேல் அன்பு கொண்ட பலரும் கூறியிருக்கிறார்கள். நிச்சயம் உளம் கொள்கிறேன்// - மிக்க நன்றி ஐயா!

      Delete
    7. //அய்யா, தங்கள் கொள்கையில் எனக்கும் உடன்பாடே! தொல்காப்பியனாயிருந்தால் என்ன.. நான் பெரிதும் வியக்கும் நச்சினார்க்கினினாய் இருந்தால் என்ன, யார் செய்தாலும் தவறு தவறுதான்! நாம் ஏன் அவர்களுக்குப் பல்லக்குத் தூக்க வேண்டும்?// - அப்படிச் சொல்லவில்லை ஐயா! அவர்கள் செய்திருப்பது நகலடிப்பு வேலையே இல்லை; வெறும் மேற்கோள் சுட்டும் வேலைதான் என்பதுதான் சிறியேன் கருத்து. இதுவும் தங்களுடைய இந்தப் பதிவிலிருந்தும், தாங்கள் எனக்கு அளித்திருக்கும் பதில்களிலிருந்தும் தெரிய வந்ததுதானே தவிர, வேறொன்றும் இல்லை. இதற்கு முன் எனக்கு இவையெல்லாம் தெரியாது.

      Delete
    8. //உண்மையில் “காப்பி “ என்னும் சொல்லை “மயங்க வைத்தலுக்காகப்“ பயன்படுத்தி இருந்தாலும் உங்களை நினைத்துக் கொண்டுதான் இருந்தேன்// - கொடுத்து வைத்தவன் நான்!

      Delete
    9. 'நகலடி' எனும் சொல்லாட்சி பற்றி மிகவும் பாராட்டியிருந்தீர்கள்; புதிய சொல்லை அறியத் தந்தமைக்கு நன்றி என்றெல்லாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா! அப்படி ஒரு சொல்லே கிடையாது; ஆர்வக் கோளாறாக, அது தமிழ்ச் சொல் என்று கருதி நானே உருவாக்கியதுதான் அது. அஃது உருதுச் சொல் என்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி என நான்தான் தங்களுக்குக் கூற வேண்டும்!

      Delete
    10. //ஆதலால், தொல்காப்பியம் சார்பிற் சார்பான பண்டைப் பன்னூல் தொகுப்பேயன்றிப் புதுப்படத் தோன்றிய தனிநூலன்று.“ ( பின்வந்த பலரும் தொல்காப்பியர் பெயரில் தம் கைச்சரக்கையும் கலந்து விட்டிருக்கின்றனர் அய்யா. அது குறித்து அடுத்த பதிவில் எழுதலாம் என்று இருந்தேன்)// - தொல்காப்பியம் தனி நூல் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த அளவுக்கு அஃது இன்னொரு நூலைச் சார்ந்தது என்பது தெரியாது. அறியத் தந்ததற்கு நன்றி ஐயா! அந்தப் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

      Delete
    11. மாற்றுக் கருத்துக்களை வரவேற்பதாகத் தாங்கள் கூறியிருந்ததால்தான் இவ்வளவும் கூறினேன். நான் ஏதும் தவறாகக் கூறியிருந்தால் அது புரியாமையின் விளைவே! எனவே, அப்படி ஏதும் இருந்தால் தாங்கள் மன்னிக்க வேண்டும்! (மற்றபடி, "நீரே முக்கண் முதல்வராயினும் ஆகுக! அல்லது, தமிழ்நாட்டு முதல்வராயினும் ஆகுக! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!!" என்று கூறியதெல்லாம் முழுக்க முழுக்க விளையாட்டுக்குத்தான். நீங்களும் நகைச்சுவை தெறிக்க எழுதுபவர் என்பதால் இவற்றைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல், நகைச்சுவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பியே எழுதினேன்).

      Delete
    12. அய்யா,
      வணக்கம். தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகுந்த நன்றி.
      உண்மையில் இது போன்ற கருத்தாடல்களையே நான் பெரிதும் விரும்புகிறேன்.
      அதுவே இன்னும் இன்னம் எனக்குத் தெளிவினை ஏற்படுத்துகிறது.
      தவறினைச் சரிசெய்து கொள்ள உதவுகிறது.

      முதலில், இம்மூன்று உரைகளிலும் என் விளக்கம் எதுவும் இல்லை . எழுத்து மாறாமல் அப்படித் தட்டச்சுச் செய்தது மட்டுமே நான்.
      கூழங்கைத் தம்பிரான் உரையொன்று உண்டு. அது தற்பொழுது என்வசம் இல்லாததால் அதைச் சொல்லக் கூடவில்லை.
      என் பதிவில் நான் சுட்டியிருப்பதும் தாங்கள் தற்பொழுது சொல்லியிருப்பதையே..!
      //முன்னோர் கூறியதில் உடன்பாடானதை, மாறாத உண்மையை, அப்படியே எடுத்தாளுதல் முன்னோர் கண்ட மரபாக இருந்தது. முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது. அது அன்றைய புலமை மரபில் ஏற்கப்பட்ட ஒரு விடயம்.
      அதை அவர்கள் காப்பி அடித்ததாக நினைக்கவில்லை.

      முன்னோரின் அப்புலமையை அவ்விடத்தில் தங்களால் தாண்டிப் போக முடியாது என்று நினைத்தார்கள்.

      அக்கருத்தை அப்படியே வழிமொழிந்து போனார்கள்.//

      அந்தக் காலகட்டத்தில் அது மரபார்ந்த விடயம் அவ்வளவே!

      தங்களின் பின்னூட்டத்திற்கிட்ட பதிலிலும் அதைச் சுட்டி யிருந்தேன்.

      //இன்றைய புலமை மரபில் இது தவறு. இன்றைய அளவுகோலைப் பழம் மரபிற்குப் பொருத்திப்பார்த்ததில் நிச்சயம் என் தவறிருக்கலாம். ஆனால், இவ்விஷயத்தைப் பொருத்த வரை முன்னோர் செய்தது தவறல்ல என்றே நான் கருதுகிறேன்.//

      தொல்காப்பியரும் நச்சரும் தானெடுத்து மொழிதலில் தவறிழைத்ததாக நான் சொல்லவில்லை. அது பொதுக்கருத்தே! அவர்கள் தவறுமிடங்களுக்கு அவர்களுக்குப் பல்லக்குத் தூக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து.
      உரைச்சுத்தியில் உடைபடும் சொற்கள் எனும் முந்தைய பதிவில் நச்சரை அப்படி இறக்கி விட்டிருக்கிறேன்.
      அவ்வாறு புதிய நூலெழுதுவோர் நூற்பாவினை எச்சூழலில் எடுத்தாள்கின்றனர் என்று என் பார்வையைத்தான்,ஒரு விஷயத்தை அதை விடச் சுருக்கமாக எளிமையாக அழகாகச் சொல்ல முடியாது என்கிற போது அதை அப்படியே வழிமொழிந்து போயிருக்கிறார்கள் என்றும்,முன்னோரின் அப்புலமையை அவ்விடத்தில் தங்களால் தாண்டிப் போக முடியாது எனும் போதும் எடுத்தாண்டிருக்கிறார்கள் என்றும் பதிவில் சொல்லி இருக்கிறேன்.
      ஆனால் எல்லா இலக்கண நூல்களிலும் இப்படி அப்படியே எடுத்துக் கூற முடியாது.
      பொதுவாகத் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களின் பாடல்கள் சூத்திர யாப்பு என்னும் ஒருவகை யாப்பினால் அமைந்தவை.
      பிற்கால இலக்கண நூல்கள் சில கட்டளைக்கலித்துறை, வெண்பா எனும் யாப்பு வடிவங்களை நூற்பா வடிவங்களாகக் கொணடிருந்தன. நூல் முழுவதுமே அந்த வடிவில் இருக்கும் போது வேறொரு யாப்பைப் பயன்படுத்த முடியாது என்பதால் முன்னோர் கருத்தினை வழிமொழிய வேண்டி இருந்தாலும் அதைத் தம் நூல் யாப்புக் கட்டமைப்பிற்கேற்றவாறு மாற்றித்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. எனவே அப்படியே நன்னூல் போல் எடுத்தாள்வது யாப்பு வடிவம்வேறுபட்ட நூல்களில் இல்லை.
      பதிவில் இதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
      அது அன்றைய மரபு. இது நகலடி என்று இன்றைக்கு இருக்கக் கூடிய பார்வை அன்றைக்கு இல்லை.
      உரைகள் ஒரு வகையில் காலக்கண்ணாடிகள்.
      உரையாசிரியர் காலச் சூழலை, மூல நூலோடு இணைக்கும் பணியைச் சாமர்த்தியமாய்ச் செய்பவை என்ற எண்ணம் எனக்குண்டு.
      இருபதாம் நூற்றாண்டில், காப்புரிமை பற்றிய பார்வையை ஐரோப்பியக் கல்வி மரபு ஏற்படுத்தி விட்டது.
      இப்படி முன்னோர் பாடல்களைத் தம்பெயருடைய நூலில் பயன்படுத்தி இருக்கின்றனர். இது சரியா என்கிற கேள்வியும் அச்சூழலில் எழுந்திருக்க வேண்டும். அதற்கான விடையைத்தான் வை.மு. கோ . இலக்கணக்குறிப்பை வைத்துக் கொண்டு சொல்வதாக எனக்குப் படுகிறது.( இது என் யூகம் தான் )

      //முன்னே “போற்றுவம் “ “ செய்தும் “ என உளப்பாட்டுத் தன்மைப் பன்மை முற்றுகளாகவும் பின்னே “கூறு“என முன்னிலை யேவலொருமை முற்றாகவும் கூறியதனால், இச்சூத்திரம் பலர் கூடிப் பேசிப்பின்பு ஒருவனை நோக்கி முடிவு செய்யப்பட்டதென அறிக “//

      தங்களின் பின்னூட்டப் பகுதியில் இவ்விலக்கணக் குறிப்பைக் குறிப்பிட இதுதான் காரணம்.

      தங்களின் தொடர் வருகையும கருத்தாடலும் என்னைச் சிந்திக்கச் செய்தன.
      நன்றி.

      Delete
    13. //மாற்றுக் கருத்துக்களை வரவேற்பதாகத் தாங்கள் கூறியிருந்ததால்தான் இவ்வளவும் கூறினேன். நான் ஏதும் தவறாகக் கூறியிருந்தால் அது புரியாமையின் விளைவே! எனவே, அப்படி ஏதும் இருந்தால் தாங்கள் மன்னிக்க வேண்டும்! (மற்றபடி, "நீரே முக்கண் முதல்வராயினும் ஆகுக! அல்லது, தமிழ்நாட்டு முதல்வராயினும் ஆகுக! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!!" என்று கூறியதெல்லாம் முழுக்க முழுக்க விளையாட்டுக்குத்தான். நீங்களும் நகைச்சுவை தெறிக்க எழுதுபவர் என்பதால் இவற்றைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல், நகைச்சுவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்பியே எழுதினேன்).//
      அய்யா,
      தங்களிடத்து எனக்குச் சற்றுக் கூடுதல் மரியாதை இருக்கிறது. ஆனால் எல்லாரிடத்தும் எனது கோரிக்கை ஒன்றுதான்.
      அது தவறெனப் படுவதைத் தயங்காது சுட்டிக்காட்டுதல்.
      என் தளத்தில் அதற்கான வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கும்.
      பின்னூட்டங்களை மட்டுறுத்தலுக்காக வைத்திருத்தல் கூட மின்னஞ்சல் முகவரி இல்லாமையால் “ வெளியிட வேண்டாம் “ என வருகின்ற கருத்துகளை வெளியிடாமல் இருக்கத்தான்.
      மற்றபடி, தவறு என வரக்கூடிய பார்வை சரியாய் இருந்தால் அதைச் சரிசெய்ய எப்போதும் நான் தயங்கியதில்லை.
      வெண்பாவில் பட்ட விழுப்புண்களில் உங்கள் தளத்தில் தவறியதையும் சுட்டியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      நெற்றிக் கண் திறந்து குற்றம் கூறிய கதையில் ஒரு ரகசியம் இருக்கிறது.
      நம் ஆசான் துளசிதரன் தில்லையகத்து அவர்களிடம் பகிர்ந்திருக்கிறேன்.
      நீங்கள் அவருக்கும் ஆசான் தானே!!
      நிச்சயம் தங்களிடம் பகிர்வார்!!
      தங்களது வருகையை எப்பொழுதும் போலவே எதிர்பார்க்கிறேன்.

      மாற்றுக் கருத்துகள் அறிவை வளர்க்கவே யன்றி அன்பைச் சிதைக்க அல்ல என்பதில் நம்பிக்கையுடையவன் நான்!
      தொடர்கருத்துகளுக்கு நன்றி!

      Delete
    14. தங்கள் விளக்கம் படித்தேன். இப்பொழுது புரிகிறது ஐயா!

      Delete
    15. //நீங்கள் அவருக்கும் ஆசான்தானே!!// - நானா! அவருக்கா! அதுவும், 'அவருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே! அப்படியானால் இன்னும் வேறு யார் யாருக்கெல்லாம் நான் ஆசான்? ஆகா! இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லையே!

      Delete
  16. வணக்கம் விஜூ. நல்ல பதிவு. நான் அந்தக் காப்பியில் எனது பதிவுகள் இருக்கின்றனவா என்று பார்க்கவும் விரும்பவில்லை.
    ஏனெனில் அது ஒரு நோய், அந்த நோய்க்கு மருந்தில்லை. சிலநோய்களை மருந்தால் ஒரு வாரத்தில் குணப்படுத்தலாம் எனில், மருந்தில்லாமலே ஏழுநாளில் சரியாகிவிடும்! இது இயற்கையின் தகவமைவு!
    நீர்க்கோவை, காய்ச்சல் இரண்டிற்கும் நான் மருந்து எடுத்துக் கொண்டதே இல்லை! அவை, நம் உடல் பலவீனமாயிருக்கிறது என்பதை நமக்கு அறிவிக்கும் அறிகுறிகள்... அவ்வளவே! “லங்கணம் பரம ஔஷதம்!”
    சரி உங்கள் பதிவுக்கு வருவோம் -
    “விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்வு நிரந்தரமாகாது ,
    விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
    அடிப்படையின்றி்க் கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது
    அழகாயிருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
    விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
    விளக்கிருந்தாலும் எண்ணெயில்லாமல் வெளிச்சம் கிடைக்காது“
    - அவ்வளவுதான் என் கருத்து நன்றி கண்ணதாசன்.

    அப்புறம் உங்கள் புதிர்..
    மா = இருள், காய் = காயம், பால் = ஊழின் ஊறல்,
    மாங்காய்ப்பால் = இருண்டு கிடக்கும் உடலில் எண்ணமாய்க் ஊறும் பால்.
    தன் எண்ணத்தைத் தானே உண்டுகொண்டு தன் –மண்டை-உச்சிமலையில் வாழ்பவர்களுக்கு நாக்குக்கு இன்பம் தரும் தேங்காய்ப்பால் எதற்காக? – என்பது இவர் கேள்வி - இது சுற்றிவளைத்து சொல்லப்படும் பொருள். சரியா?

    ReplyDelete
    Replies
    1. பாடல் விளக்கத்துக்கு நன்றி ஐயா!

      Delete
    2. அய்யா, விளக்கம் நான் கொடுத்ததல்ல. ஏற்கெனவே பலரும் சொன்னதை இணையத்தில் திரட்டி வைத்திருக்கிறார்கள். எனவே தங்களின் நன்றியை அவர்களுக்குத் திருப்பிவிடுகிறேன். நன்றி அ்யயா.

      Delete
    3. அய்யா உண்மையிலேயே மாங்காய்ப்பாலுக்கு அர்த்தம் தெரியாது எனக்கு,
      குண்டலினி என்றார்கள், தலையிலிருந்து பொங்கிவரும் அமுதென்றார்கள்.
      சிவபெருமானுக்குக் கங்கையைத் தலையில் வைத்ததே அஞ்ஞான ஊற்றின் குறியீடென்றார்கள் ( அஞ் + ஞான எனப் பிரித்துப் படிக்க வேண்டும் அய்யா )

      உண்மையில் மாங்காய்ப்பால் என்றும் தேங்காய்ப் பால் என்பதிலும் குறியீடை வைத்தவர்,

      “தாவாரம் இல்லை தனக்கொரு வீடில்லை
      தேவாரம் ஏதுக்கடி“
      என எதைக் குறித்துப் பாடியிருப்பாரோ?
      சில கேள்விகளை மனதிற்குள் அப்படியே போட்டுவைத்திருப்பேன்.
      எதிர்பாராமல் எங்காவது பதில் கிடைத்துவிடும்.
      உண்மையில் இது அறியா வினா தான்!
      சித்தாந்த யோக ஞான விளக்கங்களும் கடந்து வேறு ஒரு பொருள் இருப்பது போலவே எனக்குப் படுகிறது.
      தாங்கள் கூறிய பொருளினையும் மனம் கொள்கிறேன்.
      தங்கள் தரப்பே இது போன்ற புதிர்கள் போடாமல் விளங்க வைக்க வேண்டும் என்பதுதானே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!!

      Delete
    4. நல்லது முத்து நிலவன் ஐயா!

      Delete
  17. தங்களின் நடை எளிமையாக மாறிவருவது கண்டு மிகவும் மகிழ்கிறேன். உவேசா பெரிய அறிஞர் என்பதைவிடவும் அவரது எளிய தமிழ் நடையால்தான் மக்களிடம் தமிழ்விழுமியங்களைக் கொண்டு சேர்த்தார் என்பதுதான் அவரது உண்மையான பெருமை! அவர் தனது வரலாற்றையே ஆனந்தவிகடனில்தான் எழுதினார் என்பதும் அதில் ஓர் அத்தியாயத் தலைப்பு “டிங்கினானே டிங்கினானே“ என்பதும் கடுநடைப் புலவர் பெருமக்களுக்கு இன்றும் காய்ச்சல் தரும் செய்தி (எனது முயற்சியின் காரணமாக, இன்றும் ஆறாம்வகுப்பில் பாடமாக இருக்கும் “தமிழ்த்தாத்தா உவேசா“ எனும் முதல் பாடத்தில் இந்தச் சிறுதலைப்பைச் சேர்க்கச்சொல்ல, அந்தப் பெருந்தகையோர் அதற்கு ஒப்பவில்லை என்பது சுவையும் சோகமுமான முரண்!) தங்களின் உயர்ந்த தமிழ்ச் சிந்தனைகள் சாதாரணத் தமிழில் மக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதே என் பேராசை. இது பெருநட்டமாகாத பேராசை! தொடருங்கள் வரலாற்றில் உங்கள் எழுத்துககள் தேங்காய்ப்பாலோ மாங்காயப் பாலோ உண்ணாமலே, உச்சிமலைமேல் உட்காரும் என்பதுறுதி.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      உ.வே.சா வின் தமிழ் உரைநடையை அறிவேன். நிச்சயமாய் ஒரு காலகட்டத்தின் வரலாற்றுப்பேழையாய் அவரது படைப்புகள் இருந்திருக்கின்றன.
      பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில், ஜமீந்தார் என்பவர் எப்படி இருந்தார். வெள்ளையர்ஆட்சியில் இந்திய நீதிபதிகள் எப்படி இருந்தனர். தமிழ்க்கல்வி மரபு எப்படி இருந்தது....இப்படிப் பல்வேறு சித்திரங்களை அவரது உரைநடை பதிவு செய்து கொண்டே போகும். அவை அப்பதிவோடு இரண்டறக் கலந்து பிரிக்க முடியாமலும் இருக்கும். இன்றைக்குப் இவ்விரு நூற்றாண்டுகளின் மக்களின் சமூக வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளை இவர் உரைநடை வெகுஜனவாசிப்பிற்குத் தந்திருக்கிறது.

      அவரே சொல்வது போல “காலத்திற்கும் நாகரிகத்திற்கும் பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ப ஜனங்களுடைய கருத்துக்களும் விருப்பங்களும் மாறிவருகின்றன.செய்யுளைக்காட்டிலும் வசனம் மூலமாக ஜனங்கள் விஷயங்களை மிகவும் சுலபமாகத் தெரிந்து கொள்ள இயல்வது தான்”

      அவரது உரைநடையாக்கத்தில் இக்கருத்தினை மனங்கொண்டே அவர் அமைத்திருக்கிறார். என் சரித்திரமும் நல்லுரைக் கோவையும் என்னிடத்திருக்கின்றன.
      மற்ற சில நூல்களைப் படித்துப் பதிந்திருக்கிறேன்.



      அய்யா இவ்விடத்தில் இன்னொரு கருத்தையும் பதிவு செய்து விடுகிறேன். அது என் சரித்திரத் தொடரின் ஒரு அத்தியாயத்திற்கு உ.வே.சா.“டிங்கினானே டிங்கினானே“ என்று தலைப்பிட்டது பற்றியது.
      இதற்கான இன்னொரு வாய்ப்பையும் இங்கு நினைக்கிறேன்.
      அது ஜனரஞ்சக இதழ்களில் ஆசிரியருக்கு உள்ள உரிமையும் கடமையுமாயும் பற்றியது.
      பல நேரங்களில் தலைப்புகள் படிக்கத் தூண்டுவனவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதழாசிரியர்கள் தலைப்பை மாற்றும் உரிமையைப் பெற்றுவிடுகிறார்கள். கட்டுரையின் பொருளையோ அதில் வரும் தொடரையோ கொண்டு வாசகர் உள்நுழைந்து பார்க்கும் வண்ணம் தலைப்பிட்டு விடுகிறார்கள்.
      சமீபத்திய உதாரணம், “ தமிழ் இந்து “ பொங்கல் மலரில் எனதாசிரியர் பேராசிரியர் மதிவாணன் அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் தலைப்பு
      “ அம்சொல் நுண்தேர்ச்சிப்புலமை நடை“
      கட்டுரை வெளிவந்த போது இருந்த தலைப்போ “ ஊன்றிப் படித்தால் அடங்கா இன்பம் “
      இன்னொரு உதாரணம் மணவையார் சொன்னது.
      அவர் எழுதிய சிறுகதை மாலைமுரசு நாளிதழில் வெளிவந்தது.
      அவர் கொடுத்திருந்த தலைப்பு, “ தெருவில் ஒரு திருவிளக்கு“ இத்தலைப்பில் அவரதைப் பதிவிலும்இட்டிருக்கிறார். காண…..

      தெருவில் ஒரு திருவிளக்கு


      மாலை முரசு ஆசிரியர் கொடுத்திருந்த தலைப்பு,
      “ என்னோட வர்றியா?“
      மற்றபடி உ.வே.சா. வின் எளிய நடையை அறிவேன் எனினும், நானறிந்த இந்நிகழ்வுகள், இதற்கான இன்னொரு வாய்ப்பினையும் காட்டுகின்றன என்பதால் பகிர்ந்தேன் அவ்வளவே!
      தங்களின் தொடர் வருகைக்கு நன்றி!
      .

      Delete
  18. அன்பார்ந்த நண்பர்களே!

    நகலடிப்பது பற்றிய இந்தப் பதிவில், நம் வலைப்பதிவுகள் இணையத்தில் எங்கெங்கே நகலடிக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் வழிமுறையைத் தெரிவிப்பது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இதோ, தொழில்நுட்பப் பதிவர் 'பொன்மலர்' அவர்களின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்! http://ponmalars.blogspot.com/2011/05/blog-post.html

    இப்படிப்பட்ட நகலடி இயந்திரன்களைத் தடுக்க DMCA எனும் இணையத்தளத்தில் முறையிடலாம். ஆனால், அஃது எப்படி என விரிவாகக் கூறும் பதிவு ஒன்றைத் தற்பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை. கிடைத்தால் அப்புறம் வந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தொழில்நுட்பச் செய்திகளை யாவரும் அறியத்தரும் தங்களின் முயற்சிக்கு நன்றி அய்யா!
      “நகலடி இயந்திரன்“ !!!!
      அருமை!!

      Delete
  19. இனிமேல் காப்பி பதிவர்களை பவணந்தி புலவர் என்றே அழைக்கலாம் போலிருக்கே !
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. பகவானே பவணந்தி பாவம் விட்டுவிடுங்கள்!
      அது அந்தக் காலம் காப்பி என்ன என்று தெரியாக் காலம்.
      தவறு என்று தெரிந்த இப்போதும் பலரால் அதை விடமுடியவில்லையே!
      ஒரு நாளைக்கு 5 முறையாவது எனக்குக் காப்பி வேண்டியிருக்கிறது.
      விடுமுறை என்றால் இரட்டிப்பாய்!
      தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!!

      Delete
  20. அய்யா வணக்கம். 'கருத்துத் திரட்டு' தவறல்ல..! 'கருத்துத் திருட்டு'..பெரும் தவறு.
    நன்னூலாரின் பத்து அழகுக்கும்,பத்து குற்றங்களுக்கும்...இதுவரை இவ்வளவு எளிமையாக,தெளிவாக யாரும் உரை சொல்லவில்லை.! (இப்படியெல்லாம் பாடம் நடத்தியிருந்தா நானெல்லாம் இன்னும் நல்லா படிச்சிருப்பேன்.)
    “முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்பொருளும் பொன்னேபோல் போற்றிய புலவர்கள்”..எத்தனையோ பேர்...
    வள்ளுவர் கையாண்ட சொற்களை அப்படியே ‘எடுத்தாளாத புலவர்களே இல்லை’ எனலாம்.
    வள்ளுவன் சொன்ன வாழ்வியலுக்கு உரையாகக் கம்பன் காவியம் செய்தான்.
    “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்”...இந்தக் கருத்தையும்,சில சொற்களையும் கம்பன் அப்படியே பயன்படுத்தியிருப்பன்.
    “எடுத்து ஒருவருக் கொருவர் ஈவதனின் முன்னே
    தடுப்பது நினக்கு இது அழகோ? தகவு இல் வெள்ளி
    கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
    உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!”....மாபலிச் சக்கரவர்த்தியிடம் திருமால் மூன்றடி மண் கேட்கிறான்.தானத்தைத் தடுத்த சுக்கிரனுக்கு,மாபலி வாயிலாகக் கம்பன் கூறியது இது..இப்படிக் கம்பன்,எண்ணற்ற இடத்தில வள்ளுவத்தை பொன்னேபோல் போற்றுகிறான்.(‘கம்பராமாயணத்தில் வள்ளுவம்’ என்ற நூலில் இது விரிவாகக் காட்டப்பட்டுள்ளது.)
    வள்ளுவத்தை அடியொற்றியே இளங்கோவும்,சாத்தனாரும் காப்பியம் செய்தனர்.
    “தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை “
    இதனை இளங்கோ,
    “தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுதெழுவாளைத்
    தெய்வம் தொழுதகைமை திண்ணிதால்-தெய்வமாய்
    மண்ணாக மாதர்க்கு அணியை கண்ணகி
    விண்ணக மாதர்க்கு விருந்து.”.......என்று கண்ணகியை வள்ளுவர் மொழிகொண்டே வாழ்த்துகிறார்.
    சாத்தனாரோ,
    “தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப்
    பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”....என்ற அடிகளின் மூலம்,வள்ளுவரையும் குறளையும் அப்படியே பயன்படுத்தியுள்ளார்!
    இப்படிக் கம்பர் முதல் கண்ணதாசன்,இன்றய கவிஞர்கள்..வரை வள்ளுவத்தின் தாக்கம் இல்லாத புலவர்களே இல்லை.
    இப்படி எடுத்தாளுவது தப்பில்லை.அப்படியே தன் கருத்துப் போல எடுத்துப்போடுவது தவறு.
    அது சரி.. அது யார்..?.எனக்கும் கோபம்தான்.. என் பதிவெல்லாம் அவர் காப்பி அடிக்குற அளவுக்குத் தகுதியில்லையோ..?

    ReplyDelete
    Replies
    1. சொல்வேந்தரே!
      வணக்கம். என்ன ஒரு ஆழமான அலசல். இங்குச் சுவைக்காகக் காப்பி என்றெல்லாம் கூறியிருந்தேனே தவிர, அன்றைய இலக்கண மரபில் அது ஏற்கப்பட்ட விடயம் தான். நகலடி வேலை யல்ல.
      எவ்விலக்கிய இலக்கண நூல்களும் சுயம்பு அல்ல. பண்டைய அறிவின் தாக்கம் அதில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் சொல்வது போல் அது கருத்துத் திரட்டு. திருட்டு அல்ல.நாமெல்லாம் பெரிதும் ஆளும் உவமைகள் யாராவது ஒருவரின் கற்பனையில் உதித்ததுதானே?
      மதிமுகம், கயல்விழி ......
      இது முதலில் கண்டுபிடித்த ஒருவருக்குச் சொந்தமானது யாருக்குச் சொந்தமானது என்று பார்க்காமல் நாம் எடுத்தாளுவது இல்லையா?
      அது போல் தான்.
      காப்பியங்களில் அற நூல்களின் பாதிப்பு இருந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
      ஏனெனில் அறம் பொருள் இன்பம் வீடடைதல் தானே நூற்பயன்?
      அறமில்லாவிட்டால் பொருளாலும் இன்பத்தாலும் வீடாலும் ஏது பயன்?
      எனவே அறக்கருத்துகளை எங்கும் இருந்து வேண்டிய இடங்களில் இணைத்தல் எல்லாக் காப்பியங்களுக்கும் பொதுவாக இருக்கிறது.
      நீதி நூல்களின் தாக்கம் இல்லாத காப்பியங்கள் இல்லை எனலாம்.
      சரி,
      நீங்கள் காட்டிய கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் சங்க இலக்கியத்தின் கற்பனையை அப்படியே காப்பி அடித்துக் கம்பன் ஆண்டிருக்கிறான்!

      எந்த இடம் அந்த இடம்?

      விடைகாண தங்களோடு முத்துநிலவன் அய்யாவையும் அழைக்கிறேன்!
      தங்களின் வருகைக்கும் கருத்துமிக்க பின்னூட்டத்திற்கும் நன்றி!!

      Delete
    2. சொல் வேந்தரே வணக்கம்.
      நான் பத்துக்குற்றத்துக்குப் பொருள்விளக்கவே இல்லையே!
      ஒரு வேளை அதனைச் சுட்டுவதற்காகத்தான் இவ்வளவு எளிமையாய்ப் பொருள் புரியும் படி (?) என்று சுட்டிச் சென்றீர்களோ?

      அப்பறம் இலக்கியத்தில் காப்பி என்பதற்கு இப்படியெல்லாம் நீங்கள் சான்றுகளைத் திரட்டி அளித்தால் நான் அடுத்த பதிவிடுவதா வேண்டாமா?
      ம்ம்..!
      அருமை அய்யா!
      இவ்வளவு விஷய ஞானத்தை வைத்துக் கொண்டு ஏன் பதிவுகள் வெளியிடத் தாமதம் செய்கிறீர்களோ?
      உங்களின் வாசிப்புப் பிரமிப்பூட்டுகிறது!
      தங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்கிறேன்.
      ( நல்ல வேளை இலக்கியக் காப்பிக்காக வைச்சிருந்த நம்ம கைச்சரக்கைக் காலி பண்ணிடுவிங்களோன்னு ஒரு நிமிஷம் பயந்திட்டேன். இல்லைன்னதும் தான் நிம்மதியாச்சு.)
      நன்றி அய்யா!!

      Delete
    3. அய்யா வணக்கம்..!
      ‘சொல்வேந்தரா..?..யாரது..?.
      “தான் பேசப்படாவிட்டால் கூடப் பரவாயில்லை, தன்னுடைய படைப்புகளாவது பேசப்பட வேண்டும் என்று நினைத்த அவர்கள் செய்தது வேறொன்றுமில்லை.தங்களது படைப்புகளை வாழச்செய்யத் தங்களைப் பலியிட்டனர்.”.....கலம்பகம் பாடினால்,பாடும் ஆசிரியர் இறந்துவிடுவார் என்பது, இலக்கிய உலகின் நம்பிக்கையாக அன்று இருந்தது! தான் மறைந்தாலும்,தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கட்டும் என்று, ’நந்திக்கலம்பகம்’..பாடினாரே..அதைத் தானே தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்..?!
      மூன்றாம் நந்திவர்மன் மீது கலம்பகம் பாடிய அந்த ஆசிரியர்,தன உயிரையும் பெயரையும் அல்லவா தியாகம் செய்து, தமிழில் ‘கலம்பகம்’ என்ற புது இலக்கியவடிவம் தோன்றச் செய்திருக்கிறார்.!

      Delete
    4. அய்யா,
      சொல்லின் செல்வர் என்றொருவர் ஏற்கனவே இருப்பதால் சொல்வேந்தர் தாங்கள்தான்!
      சந்தேகமென்ன?
      உங்களின் மீள்வருகைக்கு
      நன்றி நன்றி!
      கலம்பகம் பாடினால் பாடும் ஆசிரியர் இறந்துவிடுவார்???????
      எனக்குத் தெரிந்து அப்படி இல்லை அய்யா!
      கலம்பகம் பாடியோரோ பாடப்படுபவரோ இறப்பதில்லை.
      அது “ அறம் பாடுதல் “
      அதற்குத் தனியே இலக்கணம் இருக்கிறது.
      பாடினால் பாடப்படுபவன் ( யார் மேல் பாடப்படுகிறதோ அவர்) இறந்துவிடுவான் என்பது நான் அறிந்தது.
      தன் மீது ஒரு புலவர் அறம் பாடுகிறார் என்பதை அறிந்தும் அத்தமிழுக்காக நந்திவர்மன் அதை அனுமதித்தான்.
      நந்திக் கலம்பகம் பாடி முடிக்கப்பட்டதும் அவன் இறந்து போனான்.
      அறம் பாடுதலுக்குக் கலம்பக இலக்கணம் வேண்டும் என்பதில்லை.
      அதற்கிலக்கணம் தனியே இருக்கிறது.
      நானும் முயன்றிருக்கிறேன். ( முடிவு என்ன ஆச்சு என்பது இரகசியம் )
      நந்திவர்மன் இறந்ததும், அவனது தமிழ்ப்பற்றை நினைத்து அந்தப் புலவர் பாடியதாக,


      “வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
         மறிகடல் அடைந்ததுன் கீர்த்தி
      கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
         கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
      தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
         செந்தழல் புகுந்ததும் தேகம்
      யானுமென் கலியும் எவ்விடம் புகுவேம்
         நந்தியே யெந்தயா பரனே“
      என்று ஒரு பாடல் வழக்கில் இருக்கிறதால்லவா?
      உண்மையில் அறம்பாடுதலின் முடிவு, பாட்டுடைத் தலைவனின் இறப்பிற்குக் கையறு நிலை பாடுவதாக அமைக்கப்படவேண்டும் என்ற இலக்கணத்தின் படி அமைக்கப்பட்டதே அது!
      அடுத்து,
      நான் குறிப்பிட வந்தது இதல்ல.
      தம் படைப்புகளை வாழச் செய்யத் தங்களைப் பலியிட்ட கதை அறிய ஒரு பதிவு காத்திருங்கள்!

      கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் சங்க இலக்கியத்தின் கற்பனையை அப்படியே காப்பி அடித்துக் கம்பன் ஆண்டிருக்கிறான்!

      எந்த இடம் அந்த இடமென்பதற்கான விடையைக் கண்டுபிடித்தீர்களா?
      நன்றி

      Delete
  21. YOU NEED COURAGE TO CALL A SPADE A SPADE...!/இன்னொரு புறம் நான் தொடரும் பலரின் பதிவுகள் அதில் இருக்கின்றன என்பதில் மகிழ்ச்சிதான்./ இப்படி எழுதுவதும் படைப்புகள் படிப்பொரின் எண்ணிக்கை கூட்டவா?

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா!
      தைரியம் வேண்டும் தான்!
      அடியேன் கூறித்தான் அன்னாரைப் படிப்போரின் எண்ணிக்கைக் கூட வேண்டும் என்பதில்லை அய்யா! ( சிலர் இடித்ததாகவும் கேள்வி!!)
      ஏற்கனவே அவரது தளம் கொடிகட்டிப் பறக்கிறது.
      என்ன..
      என் பதிவைப் போட்டிருந்தால் சுட்டி தந்திருப்பேன்.
      போடாததால் என் பங்குக்கு அவரைத் தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்பவில்லை.
      இந்தக் கோபம் விரைவில் தீருமா என்ன..!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
    2. நல்ல காரியம் செய்தீர்கள்

      Delete
  22. அன்புள்ள அய்யா,

    தங்களின் பின்னூட்டத்தில் பின்னிப் பெடல் எடுக்கிறீர்களே... கண்டு பிரமித்துப் போகிறேன்! ஆமாம் அய்யா... நான் தெரியாமல்தான் கேட்கிறேன்...பின்னூட்டம் எப்படி இருக்க வேண்டுமென தமிழ் இலக்கணம் ஏதும் சொல்லி இருக்கிறதா? என்பதை அறியத்தர வேண்டுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். மன்னிக்க வேண்டும். ஏற்கனவே ஒரு பின்னூட்டமிட்டு அதற்குப் பதில் தராத நிலையில் மீண்டும் வந்திருக்கிறீர்கள்.
      தங்களைத் தெரிந்தமையால் பின்பு கருத்திடலாம் என்று நினைத்தேன்.
      தெரிந்தவர்கள் என்பதால் வரும் அலட்சியம் கொடுமையானது.
      மீண்டும் மன்னிப்பு.
      தண்டனையாய் ( எனக்கா..பதிவினைப் படிக்கப் போகும் உங்களுக்கா..?) காப்பியைக் கொஞ்சம் ஆற்றும் நேரத்தில் அடுத்த பதிவு,
      பின்னூட்டம் பற்றித் தமிழ் இலக்கணம் சொல்லி இருப்பதைப் பற்றித்தான்!
      ( ஒரு பேச்சுக்காகத் தமிழ் எல்லாவற்றிற்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறது என்றேன் அய்யா..அதற்காக எல்லாவற்றிற்கும் வரிசை கட்டி இலக்கணம் சொல்லுங்கள் என்று கேட்டுவிடாதீர்கள்!!)
      இனிமேல் நிச்சயமாய் நீங்கள் பின்னூட்டம் இட்ட உடனேயே பதில் சொல்லி விடுவேன்!
      நன்றி!!

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      நான் கேட்டதற்கு .பின்னூட்டம் எப்படி இருக்க வேண்டுமென தமிழ் இலக்கணம் ஏதும் சொல்லி இருக்கிறதா? உடனேயே பதில் சொல்லி விடுங்களேன்....அறிய ஆவலாக உள்ளேன்.

      நன்றி.

      Delete
    3. அய்யா,
      பல பதிவர்களின் பதிவுகளை விடப் பின்னூட்டங்களைப் பார்த்து வருகிறேன்.
      கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.
      அநேகமாக ஒரு நாள் அவகாசம்.
      வாக்குப்படி அடுத்த பதிவு... பின்னூட்டம் பற்றியதுதான்!
      காப்பி கொஞ்சம் ஆறட்டும்!
      நன்றி

      Delete
  23. வணக்கம் அய்யா
    போகும் வழியெந்தன் முன்னோர் போட்டது இதுவரை தடையென்பது இல்லை இனியும் ஏன் இருக்க வேண்டும் அவ்வழியை செம்மை படுத்தி இன்னும் செழிப்பாக நாமும் வளர்வோம் வளர்வோருக்கும் வழிகாட்டுவோம் என்ற பெரும் உண்மையை உணர்த்தி அனைவரின் அன்பையும் பெற்ற தங்கள் தமிழ் புலமை வாழ்க என்னாளும் மண் ஆள...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ப்புலமை ஒன்றுமில்லை தோழரே!
      தமிழ் பேசும் எல்லார்க்கும் உள்ளதுதான்!
      என்ன இருக்கிறது என்று பார்க்கக் கொஞ்சம் கூடுதலாய்ப் படிக்கிறேன்.
      அவ்வளவே!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

      Delete
  24. த.ம.(10)
    விஜூ, வணக்கம்.
    இப்போதுதான் தமிழ்மணத்தில் வாக்களிக்கக் கற்றுக்கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா!
      நானும் கற்று ஒரு மாதம் தான் இருக்கும்!
      சகோ. கிரேஸ் உதவினார்கள்.
      நன்றி

      Delete
  25. வணக்கம் ஆசானே,

    தங்களுடைய பதிவுகளை படிப்பதற்கு அவருக்கு பொறுமை இல்லை. அதனால் தான், தங்களின் பதிவுகள் திருடப்படாமல் பாதுக்காக்கப்பட்டிருக்கிறது.

    காப்பிக்கும் இலக்கணம் இருக்கிறது என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்.

    "//தங்களது படைப்புகளை வாழச்செய்யத் தங்களைப் பலியிட்டனர்.//" - யூகிக்க முடியாமல் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
      என்னுடைய பதிவுகள் திருடப்பட்டாலும் நிச்சயமாய் ஒரு போதும் நான் வருத்தப்பட மாட்டேன்.
      வருத்தப்பட்டதும் இல்லை.
      நீங்கள் ஆசானே என்று அழைத்தீர்கள் அல்லவா?
      உண்மையில் அவனது அறிவு அவனுக்குச் சொந்தமானதில்லை.
      அது அடுத்தவர்க்கே உரிய அவனது மூலதனம்.
      கொடுத்தாலும் நிறைவின்றிக் குறைவுறாத ஒரே செல்வம் அதுதானே?
      எவர் எடுத்துப் பயன்படுத்தினும் பயன்பட்டால் மகிழ்ச்சிதானே!
      ஒரு சுவாரசியத்திற்காகவே காப்பி என்று கூறினேன் அய்யா!
      மற்றபடி,
      நன்னூலுக்கு முன்பே சொல்லப்பட்ட கருத்து இது என்பதையும், நூலுக்கு அழகு, குற்றம் எனச் சொல்லப்பட்டவற்றையும், முன்னோர் எடுத்து மொழிதலுக்கு வைத்திருந்த மரபையும் விளக்குதலே என் நோக்கம்!
      //தங்களது படைப்புகளை வாழச்செய்யத் தங்களைப் பலியிட்டனர்.//"
      உண்மையில் இது எவ்வளவு கொடுமையானது, காப்பி அடிப்பதைவிடவும் மோசமானது கேவலமானது என்பதை அறியக் காத்திருங்கள்.
      இடையில் ஒரு பதிவு மட்டும்!
      மணவையாருக்காக..!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
    2. நம்முடைய அனுமதியோடு நம் படைப்புகளை பயன்படுத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் அது திருடப்படும்போது மனம் சஞ்சலப்படும். நீங்கள் வருத்தப்பட மாட்டேன் என்று சொல்வது உங்களுடைய பெருந்தன்மையை காட்டுகிறது. எல்லோருடைய மனமும் இம்மாதிரியான பக்குவம் அடைந்திருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா.

      Delete
    3. எந்தப் பெருந்தன்மையும் இதில் இல்லை அய்யா!
      இது எங்களின் தொழில்.
      தங்களின் கருத்துகளையும் மதிக்கிறேன்.
      மீள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!

      Delete
  26. வணக்கம் .. அய்யா.. எனது பெயர் ரேவதி..நான் உங்களை ஒருமுறை கணினிப் பயிலரங்கத்தில் பார்த்திருக்கிறேன். உங்களின் வலைப்பக்கத்திற்கு நீண்ட நாள்களாக வரவேண்டுமென்ற இன்றுதான் நிறைவடைந்தது..இனி என்றும் உங்கள் பதிவுகளைத் தொடர விருப்பம்.. ஆனால் உங்கள் வலைப்பக்க முகவரியைக் காப்பி அடிக்கும் வழி தேடியும் எனக்கு கிடைக்கவில்லை..தாங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் உங்கள் வலைப்பக்க முகவரியை எனக்கு சொல்வீர்களா?

    ReplyDelete