Sunday 26 October 2014

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்



எட்டாம் வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் கண்அறுவை சிகிச்சைக்காய் ஒருமாத காலம் மருத்துவ  விடுப்பில் இருந்தார். அவருக்குப் பதிலி ஆசிரியராக ஒருவர் வந்திருந்தார்.  தனது சுயவிவரங்களை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டதாக நினைவில்லை. அதனால் அவர் பெயர் தெரியவில்லை. முப்பது வயது இருக்கலாம். தலையை அடிக்கடிக் கோதிக்கொள்ளும் அளவிற்கு நிறைய முடியும் , பேன்ட், இன் செய்த சர்ட், ஷூ, கேட்டவரை வசீகரிக்கும் குரல் எனப் பார்த்த உடனே என்னைக் கவர்ந்துவிட்டார். உண்மையில் அதுவரை தமிழாசிரியரை மட்டுமல்ல எந்த ஆசிரியரையும் அவ்வளவு நேர்த்தியாக உடையுடுத்தி நான் பார்த்ததில்லை. புறத்தோற்றத்தில் யார் பார்த்தாலும் உடனே மதிப்பு வந்துவிடும் அவர்மேல்.
புறத்தோற்றம் மட்டும்தான். அம்மாதத்திற்குரிய செய்யுளும் இலக்கணமும் அவர் கையில் சிக்கிப் படாப்பாடு பட்டுக்கொண்டிருந்தன. உரைநடையை மட்டும்  மாணவர் யாரையாவது வாசிக்கச் சொல்லிக் கூடுதலாய் ஏதோ சொல்ல அவரால் முடிந்தது. வகுப்பில் பாதிநேரம் அவர் பெற்ற பட்டங்கள் குறித்தும் அவருடன் படித்தவர்கள் இன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பது குறித்தும், கல்லூரியில் பேரறிவாளர்களுக்குக் கற்பிக்க வேண்டிய தான் எங்களைப்போன்ற ஞானசூனியங்களுக்கு முன் வேறுவழியின்றி நிற்க வேண்டியமை குறித்தும் கூறிய சுயபுராணம் முதல் முறை சொல்லும் போது சுவையாய்த்தான் இருந்தது. ஒவ்வொரு நாளும் அதுவே பாதி வகுப்பினை ஆக்கிரமிக்கச் சில நாட்களிலேயே எங்களுக்குத் திகட்டிவிட்டது. நண்பர்கள் பலரும் அவர் பேசும் தொனியில் ஏற்ற இறக்கத்தோடு அவர் எப்படிச் சொல்லுவாரோ அதுபோலவே அவரது  சுயபுராணத்தை மனப்பாடமாய்ச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பாடசம்பந்தமான ஏதேனுமொன்றை அவர் இப்படி அடிக்கடிச் சொல்லியிருந்தால் நிச்சயமாய் எங்களுக்குப் புண்ணியமாய்ப் போயிருக்கும். அவர் வகுப்பில் அடுத்தடுத்த நாட்களில் அதே புராணத்தைச் சொல்ல ஆரம்பிக்கும் போது ரசித்த பாடலொன்றோடு நாமும் இணைந்து பாடுவது போலப் பல மாணவரும் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். ஓர் எழுத்துப் பிசகாமல் மனப்பாடம் செய்து ஒரே தொனியுடன் பேசும் மேடை நாடகக் கலைஞனைப் போன்ற குரலில், “உங்களுக்கு ராமசுந்தரத்தைத் தெரியுமா….? இன்னைக்கு தர்மபுரில ஆர்.டி.ஒ வாக இருக்கான்…நாங்க ஒண்ணா எம்.ஏ படிக்கும் போது…“ என்று ஆரம்பித்தார் என்றால் தாராளமாய் இருபது நிமிடங்களைக் குறித்து வைத்துக்கொள்ளலாம். அப்போதுதான் அவரது புராணம்  முடிந்திருக்கும். இவரைப் போன்ற  நவீன கல்வி எதுவும் கற்றிராத, வெறும் புலவர்  படிப்போடு மேற்படிப்பைத் தொடராத எங்கள் அய்யா எப்போது வருவார் என்று நாட்களை எண்ணிக் காத்திருந்த காலம் அது. இருப்பதன் அருமை இல்லாத போது தெரியும் என்பார்கள். எங்கள் தமிழாசிரியர்.வே.ஞானப்பிரகாசனாரின் அருமையை அந்த ஒரு மாதகாலமும் நாங்கள் நன்கு உணர்ந்து கொண்டோம்.
அந்தப் புதிய ஆசிரியர் நடத்திய பாடலொன்றைத்தான் இங்கே பகிர விரும்புகிறேன். அது நாரை ஒன்றைப் புலவர் ஒருவர் தூதனுப்புவது போல அமைந்த பாடல். அன்று அவர் கையில் வசமாகச் சிக்கிக்கொண்டது நாரை. அதுவும் செங்கால் நாரை..
எங்கள் தற்காலிகத் தமிழாசிரியர் பொதுவாக அதற்கு முன் உள்ள பாடலை ஆசிரியர் குறிப்பு,  நூற்குறிப்பு என அறிமுகம்  கூறித் தொடங்கி இருந்தார். ஆனால் இந்தப் பாடலை அப்படித் தொடங்க முடியவில்லை. ஏனென்றால் இந்தப் பாடலுக்கு ஆசிரியர் பற்றிய செய்தியோ எந்த நூலில் உள்ளது என்ற செய்தியோ இல்லை. அதனால் நேரடியாகக் களத்தில் குதித்து விட்டார்.
பாடல் இதுதான்.

நாராய்! நாராய்!! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!
நீயுநின் மனையுந் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"





முன்னாயத்தப்படுத்தும் குறிப்பு எதுவும் இல்லையென்றோ என்னமோ இதற்கு அவர் அருஞ்சொற்பொருளால் அர்த்தம் சொல்ல ஆரம்பித்துவிட்டார். என் நண்பன் சசிகுமார்தான் சொன்னான், டேய், புக்கிலயே அர்த்தத்தக் குறிச்சு வைச்சிருக்காருடா“ அது உண்மைதான்.
என்பதை அவர் இந்தப் பாடலுக்குச் சொன்ன பொருள் ஒன்றினைக் கொண்டே தெரிந்து கொள்ள முடிந்தது.
அவர் சொன்ன பொருள் இதுதான்..
நாரையே நாரையே, சிவந்தகால் நாரையே,( நாராய் நாராய் செங்கால் நாராய்) பனம்பழத்தைப் பிளந்தால் உள்ளே இருக்கும் நிறம்  போன்று வாயின் உட்புறம் சிவந்த வண்ணமாய் இருக்கும் நாரையே!( பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய் ) நீயும் உன் மனைவியும் தென்திசையில் உள்ள குமரிக்கடலில் புண்ணிய நீராடி, வடக்கில் செல்லும் போது,( நீயும் நின் மனைவியும்  தென்றிசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீராயின்),  என் ஊரான “சத்திமுத்தவாவி“ எனும் ஊரில் இறங்கி,( எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி )
அங்கே நனைந்த சுவருள்ள கூரைவீட்டில், பல்லி கத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவியைப் பார்த்து, “ உன்னுடைய கணவனாகிய மாறன், பாண்டியனுடைய கூடல் நகரத்தில் ஆடையில்லாமல் குளிரில் மெலிந்து,கையினால் உடம்பை மூடியபடி, பெட்டியில் இருக்கும் பாம்பென உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழையான என்னைக் கண்டேன் என்று சொல்லுங்கள் “ என்று சொல்லிய பின் எங்களிடம் கேட்டார் “ இந்தப் பாட்டைப் படித்த பின் உங்களுக்கு என்ன தோன்றுகிறது…?“.
என்முறை வந்த போது நான் சொன்னது “ எங்கள் அத்தையின் வீட்டின் முன் இருக்கும் கிழவி“
உண்மையாகவே,
“கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் “
என்ற வரிகளை எழுதியவன் யாராக இருந்தாலும் நிச்சயமாய் அத்தகைய காட்சியைக் காணாமலோ அனுபவிக்காமலோ எழுத முடியாது என்றுதான் நினைத்தேன். எவ்வளவு துல்லியமான பதிவு!!
அதன்பின் அந்தப் பாடல் வினாத்தாளில் இடம் பெறும் தருணம் “ டேய்!
உன்னோட கிழவிப்பாட்டக் கேட்டிருக்காண்டா“ என நண்பர்கள் சொன்னதால் பாட்டையும் கிழவியையும் மறந்திடக் கூடவில்லை.

மிக அலுப்பூட்டிய, சாரமற்ற வார்த்தைகளுடன் அவர் உரைத்த பொருளை அப்போது கழித்துக் கட்டினாலும், பின்னர் கூடிய மீள் வாசிப்பில் அவர் சொன்ன  மூன்று இடங்களைத் தவிர  மற்ற இடங்கள் பொருளுரைக்குச் சரிதான்.
பாடலில் தெளிவாக உள்ளது பனங்கிழங்கு. அதுவும் பிளந்துள்ள பனம்கிழங்கு. முன்னால் உள்ள பழம்படு பனை என்பதைக் கொண்டு அய்யா அதைப் பனம்பழம் என்று நினைத்து அதன் வாயின் உட்புறமுள்ள சிவப்பு நிறம் என்று விட்டார் போலும்.
அடுத்துச் சத்தி முத்தம் என்பதே ஊர்ப்பெயர். வாவி என்பது குளம். அய்யா சத்திமுத்தவாவி என்பதைச் சேர்த்து அதுவே  ஊர்ப்பெயரென நினைத்துவிட்டார்
அடுத்துப் புலவரின் பெயரை மாறன் என்றது. மாறன்வழுதி என்பதைச் சேர்த்துப் படிக்காததால் நேர்ந்த குழப்பம் இது. இவை பாண்டியரின் சிறப்புப்பெயர். இந்தப் புலவர் பெயரே பாடலில் இல்லை. பொதுவாகச் சிறப்புப்பாயிரம் போன்ற அரிதான இடங்களைத் தவிர மற்ற இடங்களில் புலவர்கள் தங்கள் பெயரைத் தாங்களே பாடலின் உள்ளே கூறிக்கொள்வதில்லை. மற்றபடி அய்யா கூறிய இந்தப் பொருள் சரிதான்.
ஆனால் கவிதை என்பது வெறும் பொருளுரை மட்டும் தானா? சொல்தோறும் பொருளுரைத்துக் கடந்து போக மட்டும்தானா?
இது போன்ற பாடலுக்கு ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பைக் காட்டிலும் அப்பாடலின் பின்புலம் முக்கியமில்லையா?
இதை இப்படிச் சொல்லியிருக்கலாம் என்று ஆசிரியர் பயிற்சி காலகட்டத்தில் கருதினேன்.
வறுமையில் வாடும் புலவன் அரசனிடம் தன் புலமையைக் காட்டிப் பொருள்பெற்று வர மனைவியைப் பிரிந்து செல்கிறான். அது கடுங்குளிர் காலம். வந்த இடத்தில்  நினைத்ததுபோல அவ்வள்ளலைக் காண முடியவில்லை. வள்ளலது பார்வைக்காய்ச் சத்திரமொன்றில் ஒடுங்கியபடிக் காத்திருக்கிறான். வானத்தில் நாரைகள் பறக்கின்றன. அவற்றிடம் தன் வருகைக்காகக் காத்திருக்கும் தன் மனைவியிடம், தனது நிலைமையை விளக்கிச் செய்தியொன்றைச் சொல்லி அனுப்புகிறான் அந்தப்புலவன். இதுதான் இப்பாடலை அணுகுமுன் தெரிவிக்க வேண்டிய சூழல்.
நாரைகளும் புலவனும் தம் வசிப்பிடம் விட்டு வேறிடம் வந்துள்ளனர். இது இருவர்க்கும் உள்ள ஒற்றுமை.
நாரையை நிலத்தில் தாங்கக் கால்கள் இருக்கின்றன. புலவர்களைத் தாங்கக் கைகள்தான் வேண்டும். அவையும் கொடாக் கைகள் அல்ல. கொடுத்துக் கொடுத்துச்  சிவக்க வேண்டிய செங்கைகள். புலவனோ அத்தகு செங்கையுடையோனை இன்னும் காணவில்லை.
அடுத்து நாரையின் அலகு. அது பனங்கிழங்கைப் பிளந்தது போன்று பவள நிறத்தில் அமைந்தது. இதற்கு மேலாக நாரையின் வாய்க்குச் சிறந்த உவமை சொல்ல முடியாது என்றாலும் இதிலும் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று புலவனுக்கான உடனடித்தேவை. அது உணவு. நாரையின் வாய் அவனுக்குப் பனங்கிழங்காகத் தெரிவதைப் பசி சார்ந்தாக நோக்கலாம். அடுத்தது அவன் பிரிந்து வந்த நோக்கம். அது செல்வம் பெறுவதற்காக. வாயின் உட்புறம் பவளம் போலத் தெரிந்தது அதன் காரணமாகலாம்.

நாராய்! நாராய்!! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!

இப்போது நாரையை அழைத்தாகி விட்டது. அடுத்து வேண்டுகோள்.
நீங்கள் இணையாய் இருக்கிறீர்கள். நான் தனியாய் இருக்கிறேன். நீங்கள் முதலில் வந்த வேலையை முடித்துக் கொள்ளுங்கள். தென்திசையில்  உள்ள குமரியில் நீராடி விட்டு மீண்டும் உங்கள் வீடு உள்ள வடதிசைக்குப் போவீர்கள் அல்லவா அப்போது,
( நீயுநின் மனையுந் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீராயின் )

போகும் வழியில் தான் இருக்கிறது எங்கள் ஊர்.( சத்திமுத்தம்)
நீங்கள் நீராடி மகிழ அங்கும் ஓர் குளம் உண்டு. (வாவி).
( எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி )

ஓ.. என் வீட்டின் அடையாளம் சொல்ல வேண்டுமல்லவா?
நீங்கள் பறக்கும் போதே என் வீட்டை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
என் வீ்ட்டுக்கூரை வெயில் மழை இரண்டையுமே வரவேற்கும். இப்போது மழைக்காலம் அல்லவா..? மழைநுழைந்து சுவர்கள் ஈரம்கசிந்து கொண்டிருக்கும்.
நான் எங்கிருக்கிறேன் எப்படி இருக்கிறேன் எவ்வாறிருக்கிறேன் என்றெல்லாம் அறியாமல் என் மனைவி, பல்லி சொல்லும் சகுனம் பார்த்து வருந்திக் கொண்டிருப்பாள்.
( நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு )
 அவளிடம் சொல்லுங்கள்..
உன் கணவன் பாண்டியனின் கூடலில், கடுங்குளிரில் உணவில்லாமல் மெலிந்து, மேலாடை போலும் இல்லாமல், கையினால் உடலைப் பொத்திக், காலைக்குறுக்கி கையையும் சேர்த்து அணைத்தபடி, கூடையில் இருக்கின்ற பாம்பினைப் போல, உயிர் மட்டும் எஞ்சக் குறுகிக் கிடக்கிறான். இன்னும் அவனால் அரசனைக் காண முடியவில்லை எனவே ஏழையாகவே உள்ளான் .“  
எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே

உண்மையில் நாரையைத் தூதனுப்ப முடியுமா, அது கேட்குமா, போய்ச்சொல்லுமா என்பதைக் காட்டிலும் புலவன் நாரையைத்  தனது நிலையை விளக்குவதற்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறான் என்பதே உண்மை.
இதற்கும் அமைதி கூறி வைத்திருக்கிறது தமிழிலக்கணம். இலக்கிய இன்பத்திற்காக, மனிதர் அல்லாத அஃறிணைகளையும், கேட்காதவற்றைக் கேட்பது போலவும், பேசாதவற்றைப் பேசுவது போலவும் , செய்ய முடியாதவற்றைச் செய்தது போலவும், சொல்லாமாம்.

“கேட்குநபோலவும்கிளக்குநபோலவும்
இயங்குநபோலவும்இயற்றுநபோலவும்
அஃறிணை மருங்கினும் அறையப்
படுமே“


தூதிற்கு இதுதான் அடிப்படை.


இந்தப் பாடலைப்பற்றி நான் முக்கியமாகக்  குறிப்பிடப்பிட விரும்பும்  ஒன்று இந்தப் பாடல் சத்திமுத்தப் புலவரின் சொந்தப் பாடல் இல்லை என்பதுதான். ஒரு வேளை மற்றவர் பாடலை எடுத்துக் கொடுத்திருப்பதாலோ என்னமோ அவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பாமல் இருந்திருக்கலாம்.  பெயர்தெரியாத பாடல்களில் அந்தப் பாடலில் வரும் ஏதேனும் ஒரு தொடரைக் கொண்டு அந்தப் பாடலைப் பாடியவர் பெயராக அமைத்துக் கொள்வது சங்க இலக்கிய மரபு.
சான்றாகச் செம்புலப் பெயல் நீர் என்ற தொடர் வரும் பாடலைப் பாடியவர் பெயர் தெரியாததால் செம்புலப்பெயல்நீரார். தேய்புரிப்பழங்கயிறு என்ற தொடர் வரும் பாடலைப் பாடியவர் பெயர் தெரியாததால் தேய்புரிப்பழங்கயிற்றினார் என்பது போலப் பெயர்சூட்டி விடுவர்.
ஆனால் அதில் ஒரு நிபந்தனை உண்டு. அந்தத் தொடர் வேறெந்தப் பாடலிலும் வந்திருக்கக் கூடாது என்பது. ( விதிவிலக்கான சில இடங்கள் ஐங்குறுநூற்றில் உள்ளன.)
அப்படித்தான் சத்திமுத்தப்புலவர் என்று இந்தப் பாடலைப் பாடியவருக்குப் பெயர்சூட்டிவிட்டனர்.
சரி.. சத்திமுத்த புலவர் சுட்ட அந்தப் பாடல் எது என்று தெரியவேண்டுமல்லவா….?

காண்போம்.

 படங்கள் கூகுளில் இருந்து எடுக்கப்பட்டவை.


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

46 comments:

  1. நாராய் நாராய்
    நீளம் தானே கையோடு
    காலும் நீந்திடுவாயோ
    பறந்திடுவாயோ
    இந்தக்கடுங் குளிரில்
    நொறுங்கிடாமல்
    பேழையில் பாம்பாய்
    குறுகிடாமல் அதினின்றும் விலகி
    நீ சென்றுரைப்பாய் நேரே பாரதம் நோக்கி
    தென்பகுதியில் தமிழ் பேசுவோர்
    மத்தியில் தரையிறங்கி விஜு என்று
    வினவ சுட்டிடுவர் அவரிடம்
    நற்றமிழ்தனை நயம்பட உரைக்கும்
    ஆற்றல் பெற்றவர் நட்பு பெரும்
    பேறேயென கருதுவதாய் !
    ஹா ஹா எப்படி சிரிக்காதீர்கள் ...சும்மா ஒரு முயற்சியே ..
    அருமை அருமை சகோ ! ஒரே மூச்சில் இந்த முறை வாசித்து விட்டு கருத்து இட்டுள்ளேன்.
    ஆமா பதிவர் திருவிழாவுக்கு போகவில்லைய என்ன? நேரலை ஒளி பரப்பு பார்த்தேன் கிளியர் ஆக இருந்தும் சவுண்ட் எனக்கு கேட்கவே இல்லை அதனால் யாரையும் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. முழுவதும் பார்க்க முடியவில்லை என் கணினியிலும் கோளாறாகி விட்டமையால். எனினும் பார்த்த வரையில் மிக்க மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
    Replies
    1. சகோதரி உங்கள் முதற் பின்னூட்டத்திற்கும் புதுக்கவிதைத் தூதிற்கும் நன்றி!
      பாருங்கள் ..தூதனுப்புவோர் யாராகிலும், தூதுசெல்லும் உயிரைப் பற்றிக் கவலைப் பட்டிருக்கிறார்களா....?நீங்கள் பட்டிருக்கிறீர்கள்.. அது தான் நீங்கள்!!!
      கடுங்குளிரில் நாரையும் தான் வருந்திக் கிடக்கிறது..!
      ம்ம்..
      பேழையில் பாம்பாய்க் குறுக அதற்கு விதியில்லை.
      விரித்துப் பறக்கும் சிறகுகள் இருக்க வானே வசப்படுமே அதற்கு..!
      உங்களிடமிருந்து வருவதால்தான் இந்த நாரை நீந்தாமல், பறக்காமல், பா‘ ரதம் ஏறி வருகிறதோ......???!
      வரட்டும் வரட்டும்!
      தமிழ் பேசுவோர் மத்தியில் தரையிறங்கி விசாரித்து வரும் நாரையை அது என்னிடம் ஏதேனும் சொல்லும் முன்பே நீங்கள் அனுப்பிய பா ரதத்தில் ஏறி வெகுதூரம் பயணப்பட்டிருப்பேன் நான்!!!
      இப்படிக் கவிதைகளில் பின்னூட்டம் இட்டால் என்ன பதிலிடுவது என்று திகைப்பாய்த்தான் உள்ளது.
      வலைப்பதிவர் திருவிழாவிற்கு வர முடியவில்லை.
      உங்களைப் போலவே நானும் நேரலை ஒளி பரப்பில் ஏதோ கொஞ்சம் பார்ததேன். ஒளிபரப்பானதாலோ என்னமோ ஒலிபரப்பில் சற்று இடையூறிருந்தது.
      ஆனாலும இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று வியப்புத்தான் மேலிடுகிறது இது போன்ற நிகழ்வுகளைக் காணும் போது!
      வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி சகோதரி!

      Delete
    2. அய்யய்யோ நான் எழுதிவிட்டு பதைப்போடு இருக்க தங்களுக்கு திகைப்பாக இருக்கிறதா கலாய்க்கவில்லையே சகோ ம்..ம்..ம்.. இப்படியா எல்லாத்தையும் போட்டு உடைக்கிறது. ஆமா எல்லோரும் உங்களை தேடி இருப்பார்கள் நீங்கள் எப்படி இப்படி தப்பிக்கலாம். ம்..ம்..ம்..

      Delete
  2. பார்த்துவிட்டு நன்றாக இல்லையென்றால் வெளியிடாதீர்கள். நான் வேறு கருத்து இடுகிறேன் ok வா. அதனால் ஒன்றும் கவலைப் படமாட்டேன் சகோ ! அத்துடன் தங்களிடம் இருந்து நல்ல அறிவுரைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டவும் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால் எப்படி முன்னேறுவது ......என்ன நான் சொல்வது சரி தானே ..... கோபம் ஒன்றும் இல்லையே ....

    ReplyDelete
    Replies
    1. இது நன்றாக இல்லை என்றால் .....
      இப்படிச் சொல்வது உங்களுக்கு நன்றாக இருக்கிறதா..!!
      ம்ம்,
      அறிவுரை சொல்லவும் பிழைதிருத்தவும் வேண்டுமா....
      எங்கடா இன்னமும் கிண்டலைக் காணாமேன்னு பார்த்தேன்..
      அதானே..
      சகோ விற்குக் கலாய்க்காவிட்டால் தூக்கம் வராதே..
      ஹ ஹ ஹா..
      நன்றி

      Delete
  3. "//இருப்பதன் அருமை இல்லாத போது தெரியும் என்பார்கள்.//" - உண்மை நானும் நிறைய நேரங்களில் இந்த வரியை அனுபவித்திருக்கிறேன்.

    எல்லோருமே, நல்ல ஆசிரியர்களாக இருந்துவிட்டால் என்ன செய்வது!!!!

    இந்த காலத்தில் தான் படைப்புகளை சுடுகிறார்கள் என்றால், அந்த காலத்திலுமா????

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்கள் வருகைக்கு நன்றி..!
      சத்திமுத்தப் புலவர் சுட்டது இன்னொரு பயன் கருதித்தான்!
      அது என்ன என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
      நிச்சயமாய் இப்போது அடுத்தவர் பதிவை அப்படியே சுட்டு தனதாகக் காட்டும் திறம் போன்றது அன்று அது.
      அப்படியே எடுத்துக் காட்டுவதற்கும் சில நியாயமான காரணங்கள் இருக்கின்றன.
      கூடுமானால் அடுத்த பதிவில் அதையும் விளக்க முயல்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. அன்புள்ள அய்யா,


    ‘சிதைக்கப்பட்ட சித்திரங்கள்’ -படித்தேன். தங்கள் தமிழாசிரியருக்கு பதிலி ஆசிரியராக ஒருவர் பட்ட பாட்டை அழகாக எடுத்துச் சொல்லி “நாராய்! நாராய்!! செங்கால் நாராய்!”
    பாடலுக்கு நன்றாக விளக்கிக் கூறியது அருமை.

    நீங்கள் சொல்லிய பொழுது ...நாங்கள் அரசு மேனிலைப்பள்ளியில் பொறியியல் பிரிவில் +2 படிக்கின்றபொழுது எங்களுக்கு முசிரியிலிருந்து தமிழாசியர் வந்தார்... அவர் பெயரே ‘முசிரிப்புத்தன்...’ என்றுதான் அழைப்போம். அவர் B.Sc. M.A. தமிழ் படித்தவர். அதனால் புத்தகத்தில் தெரியாதபடி பென்சிலில் குறித்துக்கொண்டு வந்து அதை அப்படியே சொல்லுவார்.
    எங்களுக்கு அவர் வகுப்பெடுக்கும் பொழுது தூக்கம்தூக்கமாய்த்தான் வரும். தூங்கினால் ஒன்றும் எழுப்பிவிட மாட்டார். அவர் பாடம் நடத்திக்கொண்டே இருப்பார்.... அதனால் அவர் வகுப்பென்றால் தைரியமாகத் தூங்கலாம்.

    எங்கள் வகுப்பில் ‘பாஸ்கரன்’ என்ற நண்பன் இருந்தான். அவர் பாடம் நடத்தும் போது சிரித்துக் கொண்டு இருந்தான்.

    “என்ன பல்லு வெளியே தெரியுது?“-தமிழாசிரியர் கேட்டார்.

    “சிரிச்சா வெளியே தெரியாதா?“- நண்பன் பாஸ்கர்.

    “ஐ சே கெட் அவுட்...எ வகுப்புக்கே வராதடா?”

    “என்ன தமிழ் வாத்தியாரு இங்கிலீஸ் எல்லாம் பேசுறாரு!“

    “டே! எ வகுப்புக்கே வராதடா”

    “போய்யா...ஓ வகுப்பே தேவையில்லை” - இப்படிச் சொல்லிவிட்டு அந்த வகுப்பை விட்டுஅன்றைக்கு வெளியில் சென்றது இன்றும் என்னால் மறக்க முடியாமல் நினைவில் நிற்கிறது.

    நன்றி.



    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். நிச்சயமாய் நம்மில் பலரும் இது போன்றதொரு அனுபவத்தைக் கடந்து வந்திருப்போம்.
      ஆனால் பொதுவாக இளங்கலையில் வேறு பாடத்தை எடுத்துப் படித்து ஆர்வம் காரணமாகத் தமிழில் மேற்படிப்பைத் தொடர்கின்ற பலரும் நிச்சயமாய் இளங்கலையில் தமிழ்படித்து வருபவர்களைவிட ஆர்வமும் திறமையும் வாய்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இது என் அனுபவத்தில் நான் கண்டது.
      எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருக்கலாம் தானே..
      உங்கள் அனுபவத்தில் நீங்கள் கண்ட ஆசிரியர் ஒரு வேளை விதிவிலக்காய் இருக்கலாம்.
      பொருளை புத்தகத்தில் எழுதிக்கொண்டு வருதலே ஒரு முன்தயாரிப்புத் தானே..
      ஆனால் அதுவும் இல்லாமல் வரும் சிலபலரை இன்றும் நீங்கள் உங்கள் அனுபவத்தில் காண முடியுமே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  5. ஆசிரியர் தன்னபை் பற்றி நார்..நார்..நராய்..கிழித்துவிட்டதை அழகாக பதிவிட்டு டுள்ளீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. நார் நாராய் கிழிப்பாதனால்தானோ நாரை என்கிறார்கள்?
      நீங்கள் வேறு ஏதும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டுவிடாதீர்கள் அய்யா!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  6. பள்ளியில் இந்தப் பாடல் படித்த நினைவு இருக்கிறது அண்ணா.எங்கு நாரையைப் பார்த்தாலும் இப்பாடலின் தாக்கத்தால் மனதில் 'நாராய்! நாராய்! செங்கால் நாராய்!" என்று வரிகள் ஓடும்.
    நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் நன்றாக உள்ளது.
    நேற்று நூல் வெளியீடு நன்றாக முடிந்தது அண்ணா. உங்களுக்கு நூல் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் வந்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்..சகோதரர் மணவை ஜோசப் அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் மறக்க முடியாத வரிகள் தான் அவை சகோதரி!
      மணவை ஜேம்ஸ் அவர்கள் வழியாக நூல் கிடைக்கப்பெற்றேன்.
      நன்றி.
      தங்கள் எழுத்துகளை நூல்வடிவில் பார்த்தபொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி உண்மையானது.
      இரண்டு முறை வாசித்து விட்டேன்.
      இன்னொரு முறையும் வாசிக்க வேண்டும்.
      நிகழ்ச்சிக்கு வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
      நன்றி

      Delete
    2. உங்கள் மகிழ்ச்சிக்கு நன்றி அண்ணா, பரவாயில்லை..அடுத்த நூல் வெளியீட்டிற்கு கண்டிப்பாக வர வேண்டும் :)

      Delete
  7. நாராய் பாடலை படித்த நியாபகம் இருக்கிறது! சுவையாக விளக்கம் தந்ததோடு தங்கள் பள்ளி நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  8. அய்யா தங்களை மதுரைப் பதிவர் திருவிழாவிறகு மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தோம். தங்கை கிரேஸ ஏற்புரையின்போது தங்கள் பெயர்கூறி நன்றி தெரிவித்தார். மரபுக்கவிதையில் ஆர்வம் மிகுந்த எங்கள் ஊர்க் கவிஞர் சிவகுமாரனை வெகுநாள் கழித்து அங்கே சந்தித்தது மிகவும் மகிழ்வளித்தது- அவரது வலைப்பக்கத்தில் அவர் வாசித்த கவிதையைப் பார்க்க வேண்டுகிறென் -http://sivakumarankavithaikal.blogspot.in/. நன்றி வண்ககம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      தாமதமான பதிலுக்கு மன்னிக்க!
      அன்றைய தினம் தேசிய மாணவர் படையைச் சார்ந்த NIT மாணவர்கள் எங்கள் வளாகத்தில் ஆயுத அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
      பொறுப்பு அலுவலராய் நானிருந்தபடியால் வேறெங்கும் நகர முடியவில்லை.
      வர இயலாமைக்கும் எல்லாரையும் பார்க்க இயலாமைக்காக வருந்துகிறேன்.
      நன்றி

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அய்யா முத்துநிலவன் பரிந்துரைக்க தங்கள் தளம் வந்தேன். மகிழ்ந்தேன். தங்களின் தற்காலிக தமிழாசிரியர் சொன்னது போல அல்லாமல் என் தமிழாசிரியரும் தாங்கள் சொன்னதப் போன்ற விளக்கம் சொன்னதை நெகிழ்வுடன் நினைவு கூறுகிறேன். மிக்க மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      கம்பன் தன் படைப்பினைக் குறித்துக் கேட்டோர் வியந்தபோது கூறினானாம், “சிந்தாமணிக் கடலில் சிறிது மொண்டு கொண்டேன் “ என்று.
      தங்கள் கவிதைக் கடலைக் கண்டபோதும் அதுதான் தோன்றியது.
      முத்து நிலவன் அய்யாதான் இவ்வலைப்பூ உருவாகக் காரணம்,
      தங்கள் அறிமுகத்திற்காகவும் அவரை நன்றியோடு நினைக்கிறேன்.
      நன்றி.

      Delete
    2. விஜூ அ்யயா, சிவகுமாரன் என் மகன் வயதினர். உங்களை விடவும் இளையவர்தான். (கவிதை முதிர்ச்சி காட்டுகிறதோ?) எனவே நீங்கள் தயங்காமல் உரிமையுடன் தம்பி என்று அழைக்கலாம். மரபுக்கவிஞர் என்னும் உரிமை!

      Delete
    3. அய்யா,
      வணக்கம். என் கணிப்புப் பொய்க்கவில்லை. சிவகுமாரன் அண்ணன் கவிதை முதிர்ச்சியில் மட்டுமல்ல அகவையிலும்
      என்னினும் ஆறுவயது மூத்தோர் தானாம்.
      நிச்சயமாய் அவரைத் தம்பி என்று அழைக்க முடியாது.
      அவருக்குத் தம்பியாய் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
      நன்றி அய்யா!

      Delete
  11. அட.. இங்கு வந்து பார்த்தால் முத்துநிலவன் அய்யா எனக்காக பரிந்துரை செய்திருக்கிறார்கள். என்னே அவறின் தமிழ்ப்பணி .

    ReplyDelete
    Replies
    1. ஆணம் உடைய அறிவினார் தம்நலம்
      மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல்
      மானமர் கண்ணாய் ! மறங்கெழு மாமன்னர்
      யானையால் யானையாத் தற்று

      நான் பத்தாம் வகுப்புப் படித்தபோது இருந்த பழமொழிப்பாடல்.
      நிச்சயம் அய்யா இதைத் தன் வகுப்பில் நடத்தியிருப்பார்.
      உங்கள் பின்னூட்டம் கண்டதும் இதுதான் நினைவுக்கு வருகிறது.
      நன்றி

      Delete
  12. நண்பர் புதுகை வேலு அவர்களின் கேள்விகளுக்கு பதிலிட்டால் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அன்பரே,

      வலிப்போக்கன் அவர்களின் வினாவிற்குப் பதிலாக வந்த ஒருவரின் பின்னுட்டமொன்றை நான் வெளியிடவில்லை.
      அதில் பின்வரும் சுட்டியைக் காணுமாறு குறிப்பிட்டிருந்தார்.

      http://www.tamilvu.org/courses/hg300/hg304/html/hg304tqc.htm

      அதில் தாங்கள் கேட்டுள்ள வினாக்களும் அதற்கான விடைகளும் அப்படியே தரப்பட்டுள்ளன.

      (அவற்றுள் மூன்று , ஆறு, மற்றும் ஒன்பதாம் வினாக்களுக்கு அதனெதிரே கொடுக்கப்பட்டுள்ள விடைகள் தவறாக இருப்பதாக நினைக்கிறேன்.)
      கேள்வி-பதில்கள் நீங்கள் கேட்டவாறே இணையத்து இருப்பதாலும் அவரது அந்தக் கருத்தை நான் வெளியிடாததாலும்தான் தங்களுக்கான பதிலையும் கூறாமல் தவிர்த்தேன்.
      தவறாக நினைத்திட வேண்டாம்.
      நன்றி.

      Delete
  13. வணக்கம் ஐயா!

    செங்கால்நா ரையொடு சீர்மிகு செய்திகண்டேன்!
    பொங்கியதே ஆர்வம் பொலிந்து!

    மிக அருமையான கவிதையும் அதன் விளக்கமும்!
    சிறுவயதில் என் தந்தை கூறக் கேட்டதுண்டு இக்கவி.
    ஆனால் அப்போது இதன் பொருள் அறியும் வயதோ அன்றி ஆர்வமோ இருக்கவில்லை. ஆனால் குளிரில் முடங்கிக் கெவுளி - பல்லி சொல்லிற்காய்க் காத்துக்கிடக்கும் பெண் என்று அப்பா சொன்னது ஞாபகத்தில் இப்பொழுதும் உண்டு..:)

    அருமையான விளக்கம் இன்று உங்களால் அறிந்தேன்!
    இன்னும் தாருங்கள் ஐயா!

    இம்முறையும் பதிவுகளுக்கு உடன் கருத்துப் பதிவிட
    ஸ்பீட் ப்றேக்காக வீட்டில் என் பணி அதிகரித்துப் போயிற்று..:(
    தாமத வருகைக்கு வருந்துகிறேன்!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி ,
      வெண்பா எழுதிப் பின்னூட்டத்திற்குப் பதிலிட உங்களோடு என்னால் போட்டி போட முடியவில்லை.
      அதனால் உரைநடையிலேயே பதிலிடுகிறேன்.
      தங்கள் தந்தையாரிடம் விளக்கம் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.
      தங்கள் குருநாதரும் தங்களைப் போல்தான்.. தன் தந்தையாரிடத்திருந்து பல செய்திகளைக் கற்றதாகக் கூறினார்.
      நீங்கள் எல்லாம் நிச்சயம் நல்லருள் பெற்றவர்கள்.
      “தந்தையொடு கல்வி போம் “ என்னும் அவ்வை சொல் உண்மைதான் போலிருக்கிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  14. "சொன்னதப்" "அவறின்"
    -- எழுத்துப் பிழைகளுக்கு வருந்துகிறேன். யார் பிழையாக எழுதினாலும் எனக்கு கோபம் வரும். இன்று என் மேலேயே.

    ReplyDelete
    Replies
    1. நானும் பிழைபட எழுதுகிறவன்தான் அண்ணா!
      நிச்சயமாய்த் தங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.
      என் பதிவிலும் பிழைகள் இருந்தால் தயங்காது சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
      நன்றி

      Delete
  15. இருப்பதன் அருமை இல்லாத போது தெரியும் என்பார்கள்...

    ஆசிரியருக்கு மட்டுமல்ல, வாழ்வின் அனைத்துக்கும் பொருந்தும் வரிகள் !

    " நாராய்! நாராய்!! செங்கால் நாராய்!... "

    முதல் நான்கு வரிகளுக்கு மேல் மனப்பாடம் செய்ய முடியாமல் நான் தவித்த பாடல் இது ! இந்த பாடல் மட்டுமா.... " மையிட்ட புருவமும் " தளபதி படத்தில் வந்ததோ நான் பிழைத்தேன் ! அதிலும் சினிமா பாடல் போலவே எழுதி ஆசிரியரிடம் வாங்கி கட்டிக்கொண்டது வேறு கதை !


    மன்னிக்கவும், சொந்த கதைக்கு போய்விட்டேன்...

    " நாரையின் வாய் அவனுக்குப் பனங்கிழங்காகத் தெரிவதைப் பசி சார்ந்தாக நோக்கலாம். அடுத்தது அவன் பிரிந்து வந்த நோக்கம். அது செல்வம் பெறுவதற்காக. வாயின் உட்புறம் பவளம் போலத் தெரிந்தது அதன் காரணமாகலாம்.

    அற்புதம் ! மேற்கோள் வரிகள் ஒரு உதாரணம் மட்டுமே !

    இந்த பதிவை படித்ததும் இந்த பாடல் அன்று ஏன் என் மண்டைக்குள் ஏறவில்லை என புரிந்தது !

    சட்டென தோன்றிய மற்றொரு விசயம்...

    நம்ம ஆளுங்களுக்கு அப்பவே பறவைகளோட " migration " பத்தி தெரிஞ்சிருக்கு பாருங்க !

    நன்றி
    சாமானியன்




    ReplyDelete
  16. அண்ணா,
    எனக்கும் என் அண்ணனுக்கும் இரண்டு வயது வித்தியாசம். நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது அவர் பத்தாம் வகுப்பு.
    என் அண்ணின் பாடப்புத்தகங்களைத் தான் நான் பயன்படுத்தினேன். புதிய புத்தகங்களைப் பெறமுடிய வில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் பல வினாக்களுக்கான விடைகள் அதில் குறிக்கப்பட்டிருப்பது எனக்கு ஒரு வசதி.
    ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் சொன்ன பாடல் எனக்கும் இருந்தது,
    அது

    “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
    இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
    மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே“

    நினைவிலிருந்து எழுதுவதால் எனக்கும் எழுத்துச் சொற் பிழைகள் இதில் இருக்கலாம்.
    இந்தப் பாடலை அப்படியே அபிநயம் செய்து காட்டலாம். சிவனைப் பற்றிய அப்படி ஒரு ஓவியம் இது.
    திரைப்படப்பாடலில் “இம்மாநிலத்தே“ என்று வரும் என்று நினைக்கிறேன்.
    ஆம் அண்ணா நம்மவர்களுக்கு அது தெரிந்திருந்தது. அதனை வலசை போதல் என்றார்கள். இப்பொழுது பத்தாம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில்
    The Summer Flight, என்ற பாடம் உள்ளது.
    அதுவும் இந்தப் பறவைகளின் இடப்பெயர்ச்சி பற்றியதுதான்.
    தாங்கள் வித்தியாசமாய்ச் சிந்திக்கிறீர்கள்.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  17. முற்றத்து முல்லையின் மணம்/அருமை தெரியாது என்பது போல தான் நம்க்கு பல சமயங்களில்!

    ஆஹா! நாங்கள் பள்ளியில் படித்த பாடல் இது! மீண்டும் ஆசானின் தமிழ் வகுப்பில் கற்றுக் கொண்டோம்...புதுப் பொலிவுடன்!
    தங்களது நினைவாற்றலை வியக்கின்றோம் ஆசானே!

    இது போன்ற பல தூது பாடல்கள் தமிழில் உண்டுதானே! காற்றினைக் கூடத் தூடு விட்டு கவிதைகள் உள்ளனதான். தூது என்பது நமது மனத்தில் தோன்றும் ஆதங்கம், கவலைகள், பகிர நினைக்கும் செய்திகள் போன்றவற்றைச் சொல்லி ஆற்றாமையைத்தணிக்கும் ஒன்றாகக் கருதலாமோ? இப்போதெல்லாம் விஞ்ஞன வளர்ச்சியில் எளிதாகப் போனவை, அடுத்த நொடியில் மெசேஜ் அனுப்பப்பட்டு தீர்க்கப்படுகின்றது...ஆனால் அன்று இது போன்று இல்லாதததால் இப்படிப்பட்ட பாடல்கள் புனையப்ப்ட்டிருக்குமோ!! இல்லையா?! எப்படியொ நமக்குப் படிக்கவும், ரசிக்கவும் மிக நல்ல பாடல்கள் கிடைத்தனவே!

    ReplyDelete
    Replies
    1. இது தமிழ்வகுப்பா..???!!!
      ஏதோ நினைவில் இருப்பதைப் பதிகிறேன் ஆசானே!
      நீங்கள் சொல்வது நிஜம்தான் ஆசானே!
      ஆனால் தூது என்பதில் சிறு வித்தியாசத்தை நான் காண்கிறேன்.
      பெரும்பாலும் தூது அஃறிணைகளிடத்தில் தான் சொல்லப்படுகின்றன.
      நிச்சயமாய்த் தூதை அவை போய்ச் சொல்லப் போவதில்லை.
      வெறும் இலக்கியச் சுவைக்காக என்றால் கூட,
      மனிதர்கள் மற்றவரின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதை விடத் துயரங்களுக்குச் செவிகொடுப்பதை விரும்புவதில்லை.
      அதிலும் துயரப்படுபவன் இல்லாதவனாக ஏழையாக இருந்துவிட்டால் நிச்சயமாய் அவனது வலிகள் பகிரப்படுவதில்லை.
      இன்னுமொன்று, பெரும்பாலும் காதல் போன்ற புலம்பல்கள் பிறருக்கு அறியாமல் ( களவு ) நடைபெற வேண்டியிருக்கும் போது இது போல் அஃறிணை உயிர்கள் பொருள்கள் போன்றவற்றிடம் குறிப்பாகச் சொல்லுவது போலச் சொல்லிக் கேட்போருக்குப் புரியவைத்தலையே நயமாகக் கொண்டனர் போலும்.
      இது என் கருத்துதான் ஆசானே!

      எனது ஒலிபெயர்ப்பையும் மொழிபெயர்ப்பையும் நேரமெடுத்துப் பார்த்துக் கருத்துரைத்தமைக்கு நன்றிகள்!
      குறிப்பாய் வேர்பாடு என்றபதன் பொருளில் என் ஊகம் சரியாக இருந்தது கண்டு மிகவும் மகிழ்ந்து போனேன்.
      ஒற்றை இலக்க எண்களைக் கூட்டிச் சரியான விடைகண்டு துள்ளிக் குதிக்கும் குழந்தையின் பேதைமைதான் இது என்பதை அறிவேன் எனினும் மகிழ்ச்சி மகிழ்ச்சிதானே!!!
      நன்றி!

      Delete
  18. அன்புள்ள அய்யா,

    திரு. புதுவை வேலு உள்ள(த்)தில் உருவான கேள்விகளுக்கு திரு.வலிப்போக்கன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கேள்விகளுக்கு பதிலிட்டால் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றதால்... தாங்கள் சுட்டிகாட்டியது போலவே http://www.tamilvu.org/courses/hg300/hg304/html/hg304tqc.htm
    பார்த்து தெரிந்து கொண்டேன்.

    நீங்கள் சொன்ன படியே அனைத்தும் சரியாகவே இருக்கின்றன (தவறுகள் உட்பட) பதில்களை அறிந்து கொண்டோம்.

    நன்றி.


    ReplyDelete
  19. அருமையான பாடல் விளக்கம். இந்தப் பாடலின் பொருளிலும் அத்தை வீட்டுக்கெதிர் வசித்த பாட்டி நினைவு கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற்கருத்துரைக்கும் நன்றி அய்யா!!!

      Delete
  20. அய்யா வணக்கம். மிகத் தாமதமாக உள் நுழைவதற்கு மன்னிக்கவும். ஒரு தமிழாசிரியர் எப்படிப் பாடம் நடத்த வேண்டும் என்பதைத் தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். அந்தச் 'செங்கால் நாரையை' யாராலும் மறக்க முடியாது. நாரையின் வாய் ,பனங் கிழங்காகத் தெரிந்ததற்குத் தாங்கள் கூறிய காரணம் நுட்பமானது.
    சத்திமுத்தப்புலவர் சுட்ட பாடல்...எது..? என்பதை அறிய ஆவலாக உள்ளேன்..! தங்களின் நுண் மாண் நுழைபுலம் வியக்கவைக்கிறது..!
    தங்களின் பதிவிற்குப் பின்னூட்டம் இட பலமுறை முயற்சித்துத் தோற்றுப் போவேன். அடர்த்தியும்,ஆழமும் நிறைந்த பதிவுகள்.
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நாக்கில் நறுந்தமிழே நர்த்தனமாய்ச் சொல்லுகின்ற
      வாக்கில் வளர்புலமை வாழ்ந்திடவே - போக்கு
      தகாதென்பேன் அய்யா எனைப்புகழ்தல் நானோ
      “மகா“சுந்தர் ஆகேன் மலர்ந்து.
      சுட்ட பாடலை விரைவில் இட்டு விடுவோமய்யா!
      வளர்தமிழ்க் கருத்திற்கு நன்றி!

      Delete

  21. வணக்கம்!

    வாராய் எனவழைக்கும் வண்ணத் தமிழ்வலையைப்
    பாராய் எனப்பறக்கும் பாட்டுள்ளம்! - நாரையென
    ஓா்கால் உயர்த்திநான் ஓதி வியக்கின்றேன்!
    சீா்பால் குடிக்கின்றேன் சோ்த்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மானையெதிர் பார்த்து மடையன் வலைவிரித்தேன்!
      யானையதில் வந்தால் அய்யையோ! - நானெனையே
      பார்க்கின்றேன் நீர்க்கின்றேன் வேர்க்கின்றேன் ஓர்க்கின்றேன்
      தீர்க்கின்றேன் நானோ? திகைப்பு!!!
      தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு திகைக்கின்றேன் அய்யா!
      நன்றி!

      Delete
  22. உங்கள் சுய அறிமுகத்திலோ. தளத்திலோ உங்கள் பெயரோ கணினி முகவரியோ இல்லாத போது உங்கள் பெயர் விஜு என்று எப்படி அறியப்பட்டது. பதிவை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிந்தோர் வெளிப்படுத்தியது அய்யா!
      தங்களின் ரசனைக்கு நன்றி.

      Delete
  23. வணக்கம் அய்யா,
    தாமதத்திற்கு மன்னிக்கவும். படித்தவுடன் பதிலிட நினைத்தேன். அன்று ஏனோ கடந்துவிட்டேன். இன்று தளீர் அவர்கள் தளம் பார்த்து மீண்டும் வந்தேன்.
    அவர் மாறன் பாடல் ஆசிரியர் பெயர் என்று கூறியது எனக்கு வியப்பாக இருக்கிறது. அப்போ உள்ள தமிழாசிரியர்கள் எல்லாம் செய்யுள் பகுதியை மிக அழகாக நடத்திப்போவார்கள் என்பார்கள்,,,,,,,,,
    இன்னும் நிறைய இருக்கு,,,,,,,,
    சரி மற்றபடி நான் மிகவும் விரும்பிய பாடல் வரிகள்.
    தங்கள் விளக்கம் அருமையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete