Tuesday 23 September 2014

சொல் விளையாட்டு



புலவர்களும் வறுமையும் உடன்பிறந்தவைதான். அந்தக்காலப் புலவர்களுக்கு எழுதுவதுதான் தொழில். அவர்களது தேவைகளை அரசு கவனித்துக் கொள்ளும். அல்லது அவர்களின் தரமறிந்து கொடுக்கும் மனம் கொண்டு ஆதரிப்போர் கவனித்துக் கொள்வர். புலவர்களும் புலமைச் செருக்கோடுதான் வலம் வந்துள்ளனர்.
ஔவை பாடியதில் எனக்குப் பிடித்த வரிகள் இவை.
மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
       விரைந்தழைப்பார் யாவருமிங் கில்லை
கம்பன் கூடச் சோழனை விட்டு நீங்கிய போது சொல்லிய பாடலின் இறுதியில் உள்ள இருவரிகள் என் நெஞ்சில் தங்கிப் போனவை
“( மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ
உன்னைஅறிந் தோதமிழை ஓதினேன்? ) -என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துமுண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
திருவேங்கடத்தான் மேல் பெரிதும் காதலுற்ற புலவர் இராமச்சந்திர கவிராயர்.
திருவேங்கடத்தானின் அன்பிற்கும் நுண்ணறிவிற்கும் புனைவொன்றின் வாயிலாக அவர் சொல்லும் பாடல் கவிராயரின் சொல்லாட்சித்திறனுக்குச் சான்றாகத் தமிழில் நிற்கிறது
கவிராயர் வறுமையில் மிக வாடியவர் என்பது அவருடைய பல பாடல்களைப் படிப்போருக்குப் புலனாகும். தகுதியறியாமல் புறக்கணிக்கப்படும் போது கடைசியில் கடவுளைத்தானே நம்ப வேண்டியிருக்கிறது.
இராமச்சந்திர கவிராயரும் விதிவிலக்கல்லர். திருவேங்கட நாதனை மனம் மொழி மெய்களால் சிந்தை செய்திருப்பார் போல. தொல்லை தாங்க முடியாத திருவேங்கடநாதன் இரக்கப்பட்டு இறங்கிவந்து இராமச்சந்திரக் கவிராயரைப் பேச விடாமல் கேள்விகளை வரிசையாக அடுக்குகிறான்.
எப்போதும் வேண்டும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறாயே அப்பனே! உனக்கு என்ன வேண்டும். அப்படி உன்னிடத்தில் என்ன இல்லை என்று இந்தப் புலம்பு புலம்புகிறாய்?
( இரவலனே உன்னிடம் இல்லாதது என்ன ?  )
உன்னுடய நெஞ்சம் எப்போதும் இப்படி இருப்பதற்குக் காரணம்தான் என்ன? ( இதயம் என்ன? )
உன்னைச் சுற்றி எவ்வளவு இன்பம் நிறைந்திருக்கிறது..
உன்னைச் சுற்றிப் பரவியிருக்கும் அந்த ஆனந்தத்தை என்றாவது கண்டறிந்திருக்கிறாயா? அது சரி உன்னைச் சுற்றி என்ன இருக்கிறது என்றாவது உனக்குத் தெரியுமா ? ( பரவுந வெது? )
எத்தனை கோடி இன்பம் வைத்தேன் இந்த உலகில் ...! எதையும் அனுபவிக்காமல் உன் வாழ்க்கை இப்படிச் சுவையற்றுப் போயிற்று என நீ சொல்லித்திரிய என்ன காரணம்? (சுவையற்றது என்ன?)
நீ என்னை நோக்கி ஏன் புலம்பிக் கொண்டிருக்கிறாய்?
உனக்கு வேண்டியது என்னவென்றாவது சொல்லித் தொலை?  ( சொல் பான்மை என்ன?  தர உரை செய்! )
கடவுளைப் பார்த்த கணத்தில் இராமச்சந்திர கவிராயருக்கு ஒன்றும் புரியவில்லை . அதிலும் பதில் சொல்ல விடாமல் இத்தனை கேள்விகளைக் கேட்டால் அவர் என்ன செய்வார் பாவம்!
“என்னால் ஒன்றும் கூற முடியாமல் செயலற்றுப் போய் நின்றேன் ( அதற்கு ஒன்றும் சான்றிலன் நான் )
என் வாயிலிருந்து வந்த வார்த்தை திருவேங்கடநாதா என்பது.“
என்கிறார். ஆனாலும் திருவேங்கடநாதன் என்ன சாதாரணமானவனா?
அவன் தமிழறிந்த கடவுளாயிற்றே!
அவன் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரே வார்த்தையில் நான் சொன்ன பதிலைக் கேட்டு இன்னும் இங்கிருப்பது ஆபத்து எனப் புரிந்து கொண்டு பொன்னும் பொருளும் என் குறை தீரக் கொடுத்துப் புறப்பட்டு விட்டான் என்கிறார்!
முதலில் பாடலைப் பார்த்து விடுவோம்!


இரவல னேயுனக் கில்லாத தென்ன?
                 இதயம் என்ன?
பரவுந வெது? சுவை யற்ற தென்ன? சொல்
          பான்மை என்ன?
தரவுரை செய்தி டென்றான்  அதற்கு ஒன்றும்
                   சான்றிலன் யான்
வரதிரு வேங்கடநாதாஎன்றேன் பொன்
                  வழங்கினானே!

சரி இறைவன் அறிந்த தமிழை நாமும் சற்று அறிவோம்.
இறைவன் கவிராயரிடம் முதலில் கேட்ட கேள்வி,
இல்லை என்று கேட்டு வந்திருப்பவனே உன்னிடம் இல்லாதது என்ன?
கவிராயர் ; என்னிடம் இல்லாதது திரு . ( செல்வம் )
இறைவன் ; உன்னுடய நெஞ்சம் எப்போதும் இப்படி இருப்பதற்குக் காரணம்தான் என்ன? ( இதயம் என்ன? )
கவிராயர் ; அதுதான் எப்போதும் ஏழ்மையால் வெந்து கொண்டு இருக்கிறதே!
வேம் – ( வேகும் )
இறைவன் ;  உன்னைச் சுற்றி இருப்பது என்னவென்றாவது உனக்குத் தெரியுமா?
            ( பரவுநவெது)
 கவிராயர் ;  என்னைச் சுற்றி என்ன இருக்கிறது? கடம்தான் ( கடன் )
 இறைவன் ; உன் வாழ்க்கை இப்படி உப்புசப்பில்லாமல் போக என்ன காரணம் ? ( சுவையற்றது என்ன )
கவிராயர் ; அதை எல்லாம் அறிய சாப்பாடு வேண்டும் அய்யனே!
கல்லையும் மண்ணையும் தின்னுமாறு படைத்திருந்தால் அதையாவது தின்று தொலைத்திருப்பேன்! இந்த பாழாய்ப் போன நாக்கும் அதற்குத் தெரியும் சுவையும் தான் என் வாழ்க்கை சுவையற்றுப் போகக் காரணம்!  ஆகச் சுவையற்றிடக் காரணம்  நா (நாக்கு)
இறைவன் ;  உனக்கு என்ன வேண்டும்?
கவிராயர் ; எனக்கு என்ன வேண்டும் என்பது எல்லாம் வல்ல பரம்பொருளான உனக்குத் தெரியாதா? எனக்கு வேண்டுவதை நீயே தா ! ( அளி )
இப்போது கேள்விக்கான பதிலாக கொடுக்கப்பட்டவற்றைச் சேர்த்துப் பாருங்கள். 
(திரு + வேம் + கடம் + நா + தா =  திருவேங்கடநாதா  )
இறைவனின் அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழால் ஒரு சொல்லில் பதில் சொல்ல முடிந்திருக்கிறது.
இது கற்பனைதான் என்றாலும் அதுவும் இனிக்கின்றதல்லவா?
புலவர்களைச் “சொல்லேர் உழவர்கள்“ என்று தமிழ் சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது.
தொடர்வோம்!


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

46 comments:

  1. நாளை படிக்கிறேன் நண்பரே....

    ReplyDelete
  2. கற்பனைதான் என்றாலும் இனிப்பதற்கு காரணம் அதன் இலக்கியத்தரம் இல்லையா சகோதரரே !

    கற்பனையின் வாயிலாக பூரணத்தை அடையும் முயற்சிதானே இலக்கியம் ?!

    இந்த கவிதை ஆங்கிலத்திலோ பிரெஞ்சு மொழியிலோ அமைந்திருந்தால் இந்நேரம் பல விளக்கங்களுடன் பல்வேறு பதிப்புகளில் அச்சேற்றியிருப்பார்கள் ! இது போன்ற பொக்கிசங்களெல்லாம் நம் மொழியில் இருக்கின்றன என்பதும், இவற்றின் பொருள் உணர்ந்து படித்து, லயிக்கும் அளவுக்கான வாசிப்பு சூழல் அமையாதிருப்பதும் வருத்தம் ஏற்படுத்தும் அதே நேரத்தில் இணையத்தின் மூலம் பழம் தமிழ் காக்கும் உங்களின் முயற்சி பெருமை கொள்ளச்செய்கிறது.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. //கற்பனையின் வாயிலாக பூரணத்தை அடையும் முயற்சிதானே இலக்கியம் ?!//

      இப்படி உங்கள் பின்னூட்டத்தை ரசிக்கச் செய்கிறீர்களே அண்ணா!
      பழந்தமிழ் அல்ல இது பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்தான்!
      படித்ததில் சுவையானவற்றைப் பகிர்கிறேன் அவ்வளவே !
      நன்றி அண்ணா!!

      Delete
    2. " பழந்தமிழ் அல்ல இது பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்தான்! "

      வார்த்தைப்பிழை ! ( தகுதிவாய்ந்த ) மோதிரக்கையால் குட்டுப்படுவதும் பெருமைதான் !

      Delete
    3. நீங்கள் சொல்வதும் ஒருவகையில் உண்மைதான் அண்ணா!
      நமக்குப் புரிந்து கொள்ளச் சிரமமான தமிழைப் பழந்தமிழ் என்பதில் தவறில்லை அண்ணா!
      நான்தான் ஏதோ யோசனையில் கூறிவிட்டேன்.
      மன்னிக்க!
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    ஐயா.

    நல் தமிழ் கற்றிட ஐயனின் வலைத்தளம் தேடி
    புலர்ந்திட்ட பொழுதில் புகுந்த பொழுது.
    நல் தமிழ் கண்டு மகிழ்ந்தேன்..

    த.ம1

    அருமையான சொல் விலையாட்டு.. தொடருங்கள் அடுத்த பகுதிக்கு காத்திருக்கேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ரூபன்,
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      எப்படித்தான் எல்லா வலைத்தளங்களிலும் இப்படி நீக்கமற நிறைந்து கருத்திடமுடிகிறதோ போங்கள்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  4. ஒரு சொல்லில் பதில் - படிக்க நன்றாக இருக்கிறது. தமிழின் அருமையும் புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  5. புலவர்களுக்கே உரிய சிறிய ஆணவத்துடன் மன்னனைப் பார்த்து கூறிய கம்பரின் வரிகள் அருமை, அதே போல பாடலும் அதற்கான விளக்கமும் செமயா இருக்கு,

    ReplyDelete
    Replies
    1. ம்ம்..
      இராமச்சந்திர கவிராயரின் பாடல்களைவிடக் கம்பனின் ஔவையின் பாடல்கள்தான் என்னையும் அதிகம் கவர்ந்தவை
      ஜெயசீலன்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  6. வணக்கம் ஐயா!..

    ஆழ்ந்து படித்துக் கருத்திட வேண்டும். நேர நெருக்கடி!..

    வந்து பார்த்தேன் எனப் பதிவு செய்கிறேன் இப்போது..
    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      சொல்லேர் உழவர்கள் சொன்னகதை யோசிறப்பு!
      நில்லேனே உம்முன் நிமிர்ந்து!

      மிக அருமையான கதை! அறியத்தந்தீர்கள் மகிழ்ச்சி ஐயா!
      சொல்லாடல் அற்புதம்!
      புலவரோடு விளையாடிய பெருமான்!..:)

      இன்னும் அறியத்தாருங்கள் ஐயா!

      மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும்!

      Delete
    2. “அலையாய் வருங்கவிதை! ஆசுகவி உம்மால்
      தலையே நிமிருந் தமிழ்“
      பின்னென்ன “ நில்லேன் எம்முன் நிமிர்ந்து “ என்றெல்லாம் நீங்களே கூறினால் நாங்களெல்லாம் என்னாவது சகோதரி!
      வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      Delete
  7. (திரு + வேம் + கடம் + நா + தா = திருவேங்கடநாதா)

    என்ற வார்த்தைக்குள் இவ்வளவு விசயங்களா ? ஆச்சர்யமாக இருக்கிறது கவிஞரே...

    துன்பக் கேணி என்று குறிப்பிட்டு இருக்கிறீர்களே... இன்பக் கேணி போன்றே இனிக்கின்றது தொடர்சிக்காக....
    காத்திருக்கும் கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கவிராயரின் திறமைக்குத்தான் ஆச்சரியப்படவேண்டும் ஜி!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  8. அண்ணா! வாயடைக்க செய்யும் விதமாய் பதிவு எழுதிவிடுகிறீர்கள் !! பின்னூட்டத்தில் நான் என்ன எழுத???!!!! நீங்கள் ஆனா எதை படிச்சாலும் அதற்கு என்ன பொருத்தமாய் பின்னூட்டம் இடுகிறீர்கள்:) அது சரி சட்டியில் இருந்தால் அகப்பையில் வந்துவிடுகிறது:)) நீங்க எழுதுங்கள்:) கரையில் நின்னு நான் மொண்டு கொள்கிறேன்:)

    ReplyDelete
    Replies
    1. //நீங்க எழுதுங்கள்:) கரையில் நின்னு நான் மொண்டு கொள்கிறேன்:)// - நூற்றிலொரு வார்த்தை!

      Delete
    2. “ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் “
      நிஜம் தான் சகோதரி! அகப்பை எனது ஆனால் அள்ளுகின்ற “சட்டி“ எனதானதல்ல!
      நீங்களும் ஏன் கரையில் நிற்கிறீர்கள்,
      களத்தில் இறங்குங்கள்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!
      அய்யா,
      நீங்களும் தான்!

      Delete
  9. அன்பு நண்பருக்கு,
    ‘திருவேங்கடநாதா’ -என்ற ஒரு சொல்லில் பதில் சொல்லி சொல்லில் விளையாடிய இராமச்சந்திர கவிராயரின் கவிநயத்தை தாங்கள் நயமாக சொல்லிய விதம் பாராட்டுதலுக்குரியது.
    வாழ்த்துகள். மேலும் துன்பக்கேணியில் இன்பத் தமிழ்... கவிதை வெள்ளமாக நிரம்ப வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மணவையாரே,
      தங்களிடம் தமிழ்படிக்கும் மாணாக்கர்க்கு பாடப்புத்தகம் தாண்டி அதன் இனிமைகளைச் சொல்லிக் கொடுங்கள்!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  10. புலவர்கள் நிலை மட்டுமல்ல ,இன்றைக்கும் எழுத்தாளர்கள்
    நிலை பாவம்தான் !சொல்லேர் 'உழவர்கள் 'என்பதாலா கஷ்ட ஜீவனம்தான் ?

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களோ போங்கள்!
      ரசித்தேன்!
      நன்றி!

      Delete
  11. ஐயோ! ஐயோ! ஐயோ! எப்பேர்ப்பட்ட விளக்கம்! அத்தனை கேள்விகளுக்கும், கேட்டவனின் பெயரிலேயே பதிலிருக்குமாறு, அதுவும் ஒற்றைச் சொல்லில்! திகைத்துப் போனேன்!!!

    ஆனால், எனக்கோர் ஐயம்! 'திருவேங்கடநாதா' எனும் சொல்லுக்கு இப்படி ஒரு பொருள் இருப்பதாக அந்தப் பாடலில் எதுவும் கூறப்படவில்லையே! நீங்களே இந்த விளக்கத்தைத் தந்திருக்கிறீர்களோ? அப்படியானால், நீங்கள் அந்த இராமச்சந்திரக் கவிராயரையும் சாப்பிட்டு விட்டீர்கள் என்று பொருள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      நிச்சயமாய் நான் கவிராயரைச் சாப்பிடும் அளவுக்குப் பெரிய ஆளில்லை.
      இந்தப் பாடலின் பொருளை எழுதியவரன்றி வேறெவரும் கூறி உணர்த்துதல் அரிது.
      என் கருத்தின் படி கவிராயர்தான் இதன் பொருள் நுட்பத்தை விளக்கி இருக்க வேண்டும்.
      படிக்கும் போது மனதிலும், குறிப்பேட்டிலும் குறித்து வைத்துக் கொண்டவற்றுள் சுவையானவற்றைக் கூறும் முயற்சி இது!
      பின்,
      இன்றைய நாளில் தங்களைப் போலத் தமிழில் பிழையின்றி எழுதுபவர்களைக் காண்பது மிக அரிதாகவே உள்ளது.
      புலமை ஒருகால் உங்கள் தொழில்சார்ந்ததாக இருக்கலாம்.
      ஆனாலும் உங்கள் எழுத்துகளும் வீரியத்தோடு இருக்கின்றன.
      மா.பொ.சி , விந்தன், ஜெயகாந்தன் போன்றவர்களும் தாங்கள் செய்யும் பணியிலிருந்து பின் இலக்கிய உலகில் பரிணமித்தவர்கள் தான்!
      இவர்களோடு உங்களையும் ஒருங்கு நினைக்கிறேன்.
      நன்றி

      Delete
    2. //இன்றைய நாளில் தங்களைப் போலத் தமிழில் பிழையின்றி எழுதுபவர்களைக் காண்பது மிக அரிதாகவே உள்ளது// - மிக்க நன்றி ஐயா!

      //புலமை ஒருகால் உங்கள் தொழில்சார்ந்ததாக இருக்கலாம்// - இல்லை ஐயா! ஏதேனும் அருந்திறலாய்ச் செய்ய வேண்டும் என்று சிறு பிள்ளையிலிருந்தே கொண்ட ஊக்கத்தால் வளர்த்துக் கொண்டதுதான்.

      //ஆனாலும் உங்கள் எழுத்துகளும் வீரியத்தோடு இருக்கின்றன// - மிக்க மகிழ்ச்சி ஐயா! தங்களைப் போன்ற தகைசால் பெருமக்களிடமிருந்து வரும் இப்படிப்பட்ட பாராட்டுக்கள் என் எழுத்தின் மீது எனக்கிருக்கும் ஐயப்பாட்டைப் போக்கி ஊக்கமளிக்கின்றன.

      //மா.பொ.சி , விந்தன், ஜெயகாந்தன் போன்றவர்களும் தாங்கள் செய்யும் பணியிலிருந்து பின் இலக்கிய உலகில் பரிணமித்தவர்கள் தான்!
      இவர்களோடு உங்களையும் ஒருங்கு நினைக்கிறேன்// - ஐயையோ! அவர்கள் எங்கே, நான் எங்கே ஐயா! தங்களுடைய இந்தப் பாராட்டு கண்டிப்பாகக் குருவி தலைப் பனங்காய் கூட இல்லை, எறும்பு தலைப் பனங்காய்!! ஆனால், அவர்களோடு அடியேனை ஒப்பிடும் தமிழ் நிறை நெஞ்சம் கொண்ட தங்களுடைய இந்தப் பாராட்டை நான் அவர்களைப் போல் நானும் வருங்காலத்தில் வளர வேண்டும் எனத் தாங்கள் வாழ்த்துவதாய் எடுத்துக் கொள்கிறேன். தலை வணங்கிய நன்றி!

      Delete
  12. உங்களுடைய இத்தகைய பதிவுகள் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டியவையாக இருக்கின்றன. எனவே, கனிவு கூர்ந்து 'தமிழ்மணம்' வாக்குப்பட்டையை நிறுவுமாறு கேட்டுக் கொள்கிறேன்! என்னால் முடிந்த அளவுக்கு நானும் இவற்றைப் பரப்புகிறேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி!
      தொழில்நுட்ப விஷயங்களில் எனக்குப் போதிய பரிச்சயமில்லை.
      தமிழ்மணம் வாக்குப்பட்டையை நிறுவ முயன்று பார்த்தேன்!
      முயற்சியில் தளர்ந்த விக்கிரமாதித்யன் போலத்தான் கடைசியில் விட்டுவிட்டேன்.
      நுட்பம் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தான் சரிசெய்ய வேண்டும்.
      கருத்தற்கு நன்றி அய்யா!

      Delete
    2. எனக்கும் அதே பிரச்சனை தான் சகோ நானும் விட்டு விட்டேன்.

      Delete
  13. அன்புள்ள நண்பருக்கு
    பாலோயர் பக்கம் நண்பர் திரு.பாண்டியன் அவர்களின் உதவியால் திறந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. “நிலந்தரு திருவிற்“ பாண்டின் அவர்கள் தான் எனக்கும் உதவிகள் செய்தார்,
      உங்கள் ஊர்க்காரர்,
      சிக் எனப் பிடித்துக்கொள்ளுங்கள்!
      நன்றி!

      Delete
  14. வணக்கம் ஊமைக்கனவுகள் !

    சொல்விளை யாட்டின் சூட்சுமங்கள் நீயெழுத
    முல்லை மணக்கும் முத்தமிழ் தேன்சுரக்கும்
    கல்லுளியும் காணாமல் கலைச்சிற்பம் ஆகும்
    அல்லகன் றகத்துள் சேரும் அறிவு !

    ஆகா என்ன ஒரு அருமையான விளக்கம் எல்லாப்புகழும் புலவனுக்கே என்று சொன்னாலும் எல்லோரும் அறிய தந்த தாங்களுக்கும் புகழ்ச்சிதான்
    புலவரே !

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. 'கள்ளுக்கில் காமத்திற் குண்டென்ற வள்ளுவன்‘உம்
      தெள்ளு தமிழ்ச்சுவையில் தோய்ந்திருந்தால் - கொள்ள‘இரு
      முப்பால் மறந்திருப்பான்! உம்பால் அணுகியபின்
      அப்பால் அகலுபவர் யார்?
      அய்யா!
      புலவரெனில் நீங்கள் புலவர்.
      கவிஞரெனில் நீங்கள் கவிஞர்.
      என்னை அப்படிச் சொல்லும் போது நிஜமாய்க் கூச்சமாய் இருக்கிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
    2. வணக்கம் ஊமைக்கனவுகள் !

      சிந்துக்கள் பாடியென்றன் சிந்தையிலே நாள்தோறும்
      உந்துதல் ஊட்டும்'ஊ மைக்கனவே - வந்தனம்
      செய்கின்றேன் வள்ளல்'உன் செந்தமிழ் வாழ்த்துதரும்
      நெய்தலிளங் காற்றில் நெகிழ்ந்து !

      என் வலையில் உங்களுக்காய் இட்ட கருத்து இது இங்கும் அதையே இடுகின்றேன் இப்போதுதான் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் தாங்கள் தமிழையே வரமாய் கொண்டவர்கள் அரசறிவியல் சிறப்புப் பட்டம் பெற்றேன் ஆனால் இப்போதுதான் சிந்திக்கிறேன் தமிழிலே பட்டப்படிப்பை முடித்திருக்கலாம் என்று !

      புலவரெனில் நீங்கள் புலவர்.
      கவிஞரெனில் நீங்கள் கவிஞர்.

      இது உங்களுக்கு நான் சொல்லவேண்டிய கூற்று நன்றி சகோதரா !

      உன்றன் தன்னடக்கம் தமிழுக்கு கிடைத்த வரம் வாழ்க வளமுடன்

      Delete
  15. விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள். கவி மழையில் நனைய சீக்கிரம் வருகிறேன் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் ok வா தருவீங்க இல்ல. ஹா ஹா ..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வருகைபுரிவதும் கருத்துரைப்பதும் விருதுதானே?
      இன்னும் வேறொரு விருதா?
      நீங்கள் தருவதை மனம் உவந்தேற்கிறேன்.
      நன்றி

      Delete
    2. அடடா இந்த இரு புலவர்களின் தொல்லை தாங்க முடியலைப்பா சாமி ஹா ஹா ஹா இந்த சம்பாசனை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் ரசித்தேன்.
      உண்மையில் இருவருமே எங்கள் அரும் பெரும் பொக்கிசங்களே. ok வா. தங்களால் தமிழ் மணம் பரவும் எங்கும் பரந்து
      அருமையான அந்த நிகழ்வை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோ ஆண்டவன் மகிமையை எண்ணி வியக்கிறேன். ஒரு சொல்லில் தன் பதிலை சொல்ல ஆண்டவனே அதிசயிதிருப்பான். அற்புதம் அற்புதம். எங்கள் அழகு தமிழ் அழியாதிருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் மேலிடுகிறது சகோ வாழ்த்துக்கள்.

      Delete
    3. அடடா இந்த இரு புலவர்களின் தொல்லை தாங்க முடியலைப்பா சாமி//

      இனியா சகோதரி....நாங்களும் ஹஹாஹ்ஹஹ்

      Delete
  16. வலைச்சரத்தின் பணி நிமித்தம் இங்கு வர இயலாமல் போய்விட்டது! ஏனென்றால் தங்கள் பதிவுகளை படிக்க நிறைய நேரம் வேண்டும்....நிதானமாகப் படிக்க வேண்டும்...வாசித்தல் போதாது! அதுதான் காரணம்....

    ஒரு பெயரில் இத்தனை விளக்கங்களா?!! எவ்வளவு அழாக புனைந்துள்ளார் கவிஞர்! இதற்கு பின்னூட்டம் இங்கள் பதிவில் வரும் இன்னும் இரு நாளில்!

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரப் பக்கம் வராததால் அறிய முடியவில்லை அய்யா!
      மன்னியுங்கள்.
      தங்களின் தொடர்வருகைக்கு நன்றி

      Delete

  17. அருமைத் தமிழ்சுவைத்து அள்ளி அளித்தான்
    பெருமை நிறைந்த பெருமாள்! - உருகித்
    திருவேங் கடனைத் தினந்தொழுதேன்! என்றன்
    பெரும்வேம் கடன்போகும் போ்ந்து!

    02.10.2014

    ReplyDelete
  18. தமிழ் இனிக்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete