Friday 1 August 2014

படைப்பின் உயிர்.





படைப்பாளியான நீங்கள் உங்கள் படைப்பின் வழியே படிப்பவருக்குள் நுழைந்து அவர்கள் மனத்தை உருக்க வேண்டுமா? மகிழ்வூட்ட வேண்டுமா? சிரிக்கச் செய்ய வேண்டுமா? கண்ணீர் விடச் செய்ய வேண்டுமா? உங்களின் நோக்கம்  எதுவாக இருந்தாலும் அப்படிப் படைப்பொன்றினை ஆக்கத்  தமிழ் இலக்கணம்  வழிசொல்லித் தருகிறது. படைப்பாளி எப்படித் தன் படைப்பை வாசகனுடைய மனதை இடமாகக் கொண்டு இதை நிகழ்த்த இயலும்? தன் அனுபவத்தைப் படைப்பின் வாயிலாகப் படிப்போனின் மனத்தில் இறக்கி வைப்பது எப்படி? திரைப்படங்களில், நாடகங்களில் இது சாத்தியப்படும். சில உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்புகள் பாதிக்கப்பட்டவரால் பகிரப்படும் போது நம் மனதில் கலக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால் எழுத்து வழியாக இதை எப்படிக் கொண்டு செல்வது? தானுணர்ந்த அனுபவத்தை எப்படித் தன் எழுத்தில் இறக்கி வைப்பது? படிப்பவரின் மனம் படிந்து அவர்களின் உணர்வுகளை எப்படித் தொட்டெழுப்புவது? அதற்கென்றே வடிவமைக்கப் பட்டதுதான் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல்.

அது ஒரு ரசனையான இலக்கணப்பகுதி. நம் அனைவருக்கும் உவமை என்பது என்ன எனத் தெரியும். ஒரு பொருளை விளக்க அதனோடு தொடர்புடைய ஒன்றை உதாரணமாகப் பொருத்திக் காட்டுவது. நிலவு போன்ற முகம் என்பது போல. இங்கு நிலவு என்பது முகம் என்னும் பொருளை விளக்க வந்தது. உவமை எப்பொழுதுமே பொருளை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும் நம் இலக்கண நூல்கள்.

ஆனால் அதைவிடச் சிறந்ததாகப்  படைப்போனின் உணர்வுகளைப் படிப்போனின் மனதில் இடம்மாற்றச் செய்யும் கலையை இலக்கணமாகத் தரும் மெய்ப்பாட்டியலைப் படைப்பாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பகுதியாகவே கருதுகிறேன். திரு சாமானியன் மற்றும் திரு.துளசிதரன் அய்யாவின் பதிவுகளைப் படித்ததுதான் இப்பதிவினை எழுதக் காரணமானது என்பதைக் குறித்தாக வேண்டும்.

பொதுவாகக் கூத்தில் ( இன்றைய திரைப்படம் போல )  இத்தகு மெய்ப்பாடுகள் பயின்றுவரவேண்டியது அவசியம். வடமொழியில் இது ரசம் எனப்படும். நவரசம் என்பது இதைத்தான். ஆனால் தமிழிலக்கணம் காட்டும் சுவைகள் வடமொழியாளரின் ரசக்கோட்பாட்டோடு வேறுபடுபவை. முக்கியமான இரண்டு வேறுபாடுகளைச் சொல்ல வேண்டுமானால் வடவரின் மெய்ப்பாடுகள் நடிக்கும் கூத்திற்கானவை. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் என்பது எழுதப்படும் படைப்பிற்கானது.    ( செய்யுளுக்கானது. ). தொல்காப்பிய உரையாசிரியர்கள் மெய்ப்பாட்டை வடமொழி ரசக்கோட்பாட்டோடு ஒட்டியே ஆராய்கிறார்கள். அதனால் அவர்கள்           (இளம்பூரணர், பேராசிரியர்) தாங்கள் கூறும் கருத்தை மெய்ப்பாட்டியலிலேயே மறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. ( இது தனித்த ஆய்விற்குரியது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்) அன்றைய கல்வி மற்றும் சமூகச் சூழலில் அவர்களின் பார்வை அவ்வாறிருந்ததில் ஆச்சரியமில்லை. இரண்டாவது முக்கிய வேறுபாடு வடமொழியில் ரசங்கள் ஒன்பது ( நவரசங்கள் ). தமிழில் எட்டுதான். ஏன் இந்த எட்டு என்பதை ஆராய்ந்தால் தான் தொல்காப்பியர் கூற வருவது இலக்கியப் படைப்பில் உள்ள மெய்ப்பாடுகளைத் தானேயன்றிக் கூத்து மெய்ப்பாடுகளை அல்ல என்பது தெளிவுபடும். ( வரும் பதிவுகளில் இதை விரிவாகக் காண்போம் )
சரி மெய்ப்பாடு மெய்ப்பாடு என்று சொல்லிக் கொண்டிருக்கிறானே மெய்ப்பாடு என்றால் என்ன என்பவர்க்கு,
படைப்பில் படைத்துக்காட்டும் பாத்திரங்களின் உணர்ச்சிகளை,             ( விவரணைகளின் சூழலையும் இதனோடு சேர்க்கலாம்காண்போரும் ( படிப்போரும் ) அடையச் செய்தல். அது கதையாய் இருக்கட்டும் கவிதையாய் இருக்கட்டும்!
உய்ப்போன் செய்தது காண்போர்க்(கு) எய்துதல்
 மெய்ப்பா(டு) எனப மெய்யுணர்ந்தோரே
என்னும் நாடக இலக்கண நூலான செயிற்றியத்தின் வரிகளை இங்கு ஒப்பு நோக்கலாம். உய்ப்போன்படைப்போன். செய்வதுபடைப்பு. காண்போர்வாசிப்போர்.

மெய்ப்பாடு வாசிப்பவனிடம் ஏற்படுத்தும் மாற்றம் சுவை எனப்படுகிறது. சுவை என்பதற்கு இளம்பூரணர் அளிக்கும் விளக்கம் முக்கியமானது.
சுவை என்பது காணப்படு பொருளால் காண்போர் அகத்தில் வருவதோர் விகாரம்
உரையாசிரியர்களின் இப்படிப்பட்ட விளக்கங்களைக் கண்டு நான் அதிர்ந்திருக்கிறேன்.
சலனமற்ற மனத்தோடு ஒரு கதையை / கவிதையை படிக்கத் தொடங்கும் நம்மைத் தன்னுள் இழுக்கும் படியான ஒரு படைப்பு ஏற்படுத்தும் பரபரப்பு, பரவசம், சோகம், சந்தோஷம் எல்லாவற்றையும் நீங்களும் அனுபவித்திருந்தால் இளம்பூரணரின் வரையறையை நீங்களும் என்னோடு வியக்க முடியும்.
விகாரம் என்பது அசிங்கமானது கோரமானது என்ற பொருளுடையது அன்று. இயல்பில் இருந்து மாறுவது எதுவானாலும் அது விகாரம் தான். நீங்கள் முகத்திற்கு பவுடர் போட்டுக்கொள்வது கூட விகாரம் தான். அது உங்கள் இயல்பிலிருந்து நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது. இப்பொழுது யோசித்துப்பாருங்கள் ! ஒரு படைப்பு (காணப்படு பொருள்) உங்களின் இயல்பு நிலையில் இருந்து  உங்களை மாற்ற முடிந்தால் ( காண்போரகத்தில் ஏற்படுத்தும் விகாரம்) அங்குச் சுவை பிறக்கிறது. படிக்கும் போது இருக்கும் நிர்மலமான மனத்தை, படைப்பு மாற்றிவிடுகிறது. ( சில நேரங்களில் அடச்சீ ! இதைப் படிக்க இவ்வளவு மெனக்கெட்டோமே என்று கோபம் கூட வரலாம் )

சரி சுவைகள் என்னென்ன? எல்லாரும் அறிந்தது தான்!
1) நகை (சிரிப்பு)
2) அழுகை
3) இளிவரல் ( துன்பம்)
4) மருட்கைவியப்பு)
5) அச்சம்
6) பெருமிதம் ( கர்வம் )
7) வெகுளி ( கோபம்)
8) உவகை ( மகிழ்ச்சி)

இவற்றுள் சிலவற்றிற்கு வகைகள் உள்ளன. சான்றாகநகைமுறுவலித்து நகுதல் ( புன்னகை ), அளவே சிரித்தல்,( சாதாரணமாகச் சிரிப்பது), பெருகச் சிரித்தல் ( சத்தமாகச் சிரித்தல் ) என மூவகைப்படும். இந்தச் சுவைகளை எப்படிப் படைப்பில் தோற்றுவிக்க முடியும் என்பதற்கும் இலக்கணம் கூறுகிறது தொல்காப்பியம்.ஒவ்வொரு சுவையையும்  உருவாக்க உதவும் நான்கு சூழல்களைக் காட்டுகிறது. சான்றாக நகையை, பிறரைக் கிண்டல் செய்வதாலும், சிறுபிள்ளைத் தனத்தாலும், ஒரு பொருளின் இயல்பை உணரா அறியாமையாலும் ( சேவிங் கிரீமை சாப்பிடுதல் ?!) சொல்லின் இயல்பை உணரா அறியாமையானும் தோற்றுவிக்க முடியும்
எள்ளல் இளமை பேதைமை மடனென்று
சொல்லப் பட்ட நகைநான் கென்ப “ ( தொல்மெய்ப்-4)
என்று சொல்லும் தொல்காப்பியம். இதன் ஒவ்வொன்றற்கும் நீண்ட விளக்கங்கள் உண்டு

ஒரு படைப்பிற்குத் ( செய்யுள் ) தேவையான இன்றியமையாத இருபத்தாறு உறுப்புகளுள் ஒன்றாக மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகிறது.    ( செய்யுளியல். நூற்பா-1)மெய் என்றால் உடல். பாடு என்பதன் பொருள் புலப்படுத்துதல்உடலினால் குறிப்புகளைப் புலப்படுத்துவதுதான் மெய்ப்பாடு எனக் கொள்ளுதல் கூத்திலக்கணம். ஆனால் தொல்காப்பியரின் கருத்தின் படி மெய் என்பது படைப்பு (செய்யுள்) என்றும் படைப்பினால் சுவைகளைப் புலப்படுத்துவது மெய்ப்பாடு. என்றும் கொள்ளுவதே பொருத்தமுடையதாகும்.

படைப்பாளி இதனை அறிந்துதான் தன் படைப்பைப் படைக்க வேண்டும் என்பதில்லை. தன் அனுபவத்தில் கண்டடைவது பயனளிக்கக் கூடியதுதான். முன்னையோரின் அனுபவத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுதல் எளிதானதும், அதைத் தாண்டி அடுத்த தளத்திற்கு நாம் விரைவில்  செல்லத் துணைபுரிவதாக அமையும் என்றும் நான் கருதுகிறேன்.

சொல்வதற்கு நிறைய சுவாரசியமான செய்திகள் மெய்ப்பாட்டியலில் உள்ளன.
ஒன்றே ஒன்று மட்டும் சொல்லுகிறேன்.
அழுகை எனும் மெய்ப்பாட்டைத் தூண்டுவதற்கான காரணிகளுள் ஒன்றாகத் தொல்காப்பியர்வறுமையைக் குறிப்பிடுகிறார்.
வறுமை என்றால் என்ன? நாம் சொல்லிவிடுவோம். கையில காசில்லைன்னா வறுமைங்க! காசிருந்தா செல்வம்.

          அவரிடம் ஏழுதலைமுறைகளுக்கு உட்காந்து சாப்பிடுமளவுக்குச் சொத்திருக்கிறது. சர்க்கரை போட்டு ஒரு கிளாஸ் காப்பி குடிக்க அவருக்கு அவ்வளவு ஆசை! மருத்துவர் சொல்லிவிட்டார். கூடவே கூடாது! உயிருக்கு ஆபத்து ( சுகர் .ஃபிரீ போடலாமோ?- அது வேண்டாம் சர்க்கரைதான் வேண்டும்! ) அந்த சுவைக்காக அவர் தன் சொத்து முழுவதையும் இழக்கவும் தயார்! முடியவில்லை! ஆசை அணை உடைக்கிறது.

அவருக்கு முன்பாக அவரது வீட்டில் வேலைசெய்பவன் நிறைய சர்க்கரை போட்டு, சூடாகக் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். இதை மனதில் கொண்டு பாருங்கள்.
பேராசிரியர் வறுமை என்பதை இப்படி வரையறுக்கிறார்.
வறுமை என்பது போகம் துய்க்கப்பெறாத பற்றுள்ளம்
அனுபவிக்க ஆசை இருக்கும் உள்ளத்தால் அதை அனுபவிக்க முடியாமல் இருந்தால் அதுதான் வறுமை
இங்கு,
வேலைக்காரன் செல்வனாகிவிட்டான்.
செல்வன் வறியவனாகிவிட்டான்.
மெய்ப்பாட்டியல் குறித்து இன்னும் பேசுவோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

33 comments:

  1. நல்ல இலக்கிய விசயங்களை அளித்த நண்பருக்கு நன்றி, நானும் முயற்சிக்கிறேன் இன்றுமுதல்...

    எனது புதியபதிவு ''சுட்டபழம்''

    ReplyDelete
  2. இது இலக்கண விஷயம் கில்லர்ஜி!
    என் பதிவு கூடத் தொல்காப்பியத்திலிருந்து சுட்ட் பழம் தான்!
    படைப்பாளி இதனை அறிந்துதான் தன் படைப்பைப் படைக்க வேண்டும் என்பதில்லை. எனச் சொல்லித் தப்பித்துக் கொண்டுவிட்டேன்.
    நகைச் சுவை உங்களுக்குத்தான் இயல்பாக வருகிறதே!
    இலக்கணம் எதற்கு!
    சுட்ட பழம் நன்றாக இருந்தது! ஸ்ரீபூவு ஞானியாரின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்க என்ன கவலை, ம்ம்?

    ReplyDelete
  3. "படைப்பின் உயிர் தலைப்பை பார்த்ததும் என் கண் முன் படைத்தவன் தான் தெரிந்தான்(இறைவன் என்றாலும் இயற்கை என்றாலும் அவரவர் விருப்பம்)
    தொல்காப்பியரே நேரில் வந்து தொல்லியல் ஆய்வு மேற்க்கொண்டதை போன்று என்ன ஒரு தெளிவான விளக்கம். மேலும் சாமானியரை பற்றி சொல்லியது ஆனந்தத்தை அள்ளித் தந்தது. நன்றி

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. படைப்பதனால் என்பேர் இறைவன்
      என்று சொன்ன கண்ணதாசன் நினைவுக்கு வருகிறான் நண்பரே!
      தொல்லியல் ஆய்வொன்றும் இல்லை.
      புரிந்ததைப் பகிர்கிறேன் அவ்வளவே!
      நன்றி!

      Delete
  4. மெய்ப்பாடு என்ற இலக்கணம் சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி சகோதரரே. இனி என் படைப்புக்களால் மற்றவர் விகாரமடைய வேண்டும் என்று முயற்சிக்கிறேன்.. :) இளம்பூரணரின் உரை மிகவும் பிடித்தது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!
      படைப்புகளால் மாற்றம் நிகழட்டும்!

      Delete
  5. எனது வலைப்பூவில் தங்களின் பின்னூட்டத்துக்கு பதிலளித்துவிட்டு இங்கு வந்தால்...

    "...திரு சாமானியன் ... "

    ஒரு நகைச்சுவை ஞாபகத்துக்கு வருகிறது...

    பாகவதர் ஒருவரின் கச்சேரி... அவர் பாடி முடித்ததும் பார்வையாளர்கள் அனைவரும் "ஒன்ஸ்மோர்" கேட்கிறார்கள் ! அவர் மீன்டும் பாடுகிறார்... மீன்டும் ஒன்ஸ்மோர் ! இது பல முறை தொடர...

    " ரசிகர்களே ! என் திறமை மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு புரிகிறது ! அதற்காக எத்தனை முறைதான் என்னால் ஒன்ஸ்மோர் பாட முடியும் ? " என கேட்கிறார் !

    அதற்கு ரசிகர்கள்,

    " அட ! திறமையா ? நீர் இத்தனை முறை பாடியும் அந்த பாடலை ஒழுங்காக பாடவில்லை ! ஒழுங்காக பாடத்தான் ஒன்ஸ்மோர் கேட்டுகொண்டிருக்கிறோம் ! " என்றார்களாம் !

    தொல்காப்பியத்தை விளக்கினாலாவது இவர் ஒழுங்காக எழுதுகிறாரா என பார்க்கலாம் என முடிவு செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது !

    சும்மா கலாய்ப்பதற்காக சொன்னேன் சகோதரரே !

    மிக அருமையான தலைப்புடன் மெய்ப்பாட்டியல் பற்றி எளிமையாக, சுவாரஸ்யமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். வழக்கம் போலவே இந்த பதிவிலும் உங்களின் மொழியியல் பற்றிய ஆழ்ந்த அறிவு வெளிப்படுகிறது.

    " சலனமற்ற மனத்தோடு ஒரு கதையை / கவிதையை படிக்கத் தொடங்கும் நம்மைத் தன்னுள் இழுக்கும் படியான ஒரு படைப்பு ஏற்படுத்தும் பரபரப்பு, பரவசம், சோகம், சந்தோஷம் எல்லாவற்றையும் நீங்களும் அனுபவித்திருந்தால் இளம்பூரணரின் வரையறையை நீங்களும் என்னோடு வியக்க முடியும்."

    எழுத்து கலையை பற்றி இதற்கு மேலும் எளிமையாய் விளக்க ஒன்றுமில்லை !

    வறுமையை விளக்குவதற்காக நீங்கள் கொடுத்த உதாரணம் அபாரம் !

    " படைப்பாளி இதனை அறிந்துதான் தன் படைப்பைப் படைக்க வேண்டும் என்பதில்லை. தன் அனுவத்தில் கண்டடைவது பயனளிக்கக் கூடியது. முன்னையோரின் அனுபவத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுதல் எளிதானதும் அதைத் தாண்டி அடுத்த தளத்திற்கு நாம் விரைவில் செல்லத் துணைபுரியும் என்றும் நான் கருதுகிறேன். "

    மிகவும் உண்மை.

    எழுத நினைப்பவர்கள், எழுதுபவர்கள் அனைவருக்கும் மிகவும் உபயோகமான பதிவு !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா!
      உங்களின் பதிவையும் திரு. துளசிதரன் அய்யாவின் பதிவினையும் பார்த்த உடன்தான் இப்பதிவினை இடத்தோன்றிற்று. தாங்கள் கூறிய நகைச்சுவை சொல்லின் பொருளை அறியாமல் இருத்தல் என்ற நகைச்சுவையின் களங்கள் ஒன்றிற்கான உதாரணம். என் நினைவிற்குச் சட்டெனஎதுவும் தோன்றாததால் அதற்கு நான் உதாரணம் காட்டவில்லை.
      நீங்கள் காட்டியமைக்கு நன்றி!
      இலக்கணம் கற்று இலக்கியம் படைக்க வேண்டியதில்லை.
      படைப்பாளிகளின் வேலையைச் சற்றுச் சுலபமாக்க முன்னோர்களின் அறிவு துணைசெய்யுமானால் பயன்படுத்திக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது?
      புரியாது எனப் பழக்கப்படுத்தப்பட்டும், புரிந்து கொண்டுவிடக் கூடாது எனக் கற்பிக்கப்பட்டும், புலவர்க்கானது என ஒதுக்கப்பட்டும், கிடக்கின்ற தமிழிலக்கண இலக்கியப் பெரும்பரப்பை நிச்சயம் புரிந்து கொள்ளும் அளவிற்குத் தமிழறிவுள்ள ஏராளமானவரை இணையம் வழியே காணும் போது அவர்களும் பயன்கொள்ள , சிறுசிறு செய்திகள் வாயிலாக நூல முழுவதையும் படிக்கத் தூண்டச் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம்.
      நன்றி!

      Delete
  6. பதிவர்களுக்கான நல்வழிகாட்டல்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    படியுங்கள் இணையுங்கள்
    தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
    http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கவிதைப்போரில் வாகை சூடிட அனைவருக்கும் வாழ்த்துக்கள் யாழ்ப்பாவாணரே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  7. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு படைப்பளியும் அறியவேண்டிய விடயங்களை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... தாங்கள் சொல்வது போல பின்பற்றினால் ஒவ்வொருபடைப்பும்சிறப்படையும் என்பதில் ஐயமில்லை

    என்பக்கம்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...த.ம1வதுவாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தமிழால் உலகை இணைக்கும் உங்களின் முயற்சி வாழ்க! வளர்க!! வெல்க!!!
      நம்புலவன் சொல்லுவது போல்,
      “தமிழுக்குத் தொண்டுசெய்வான் சாவதில்லை!“
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete
  8. ஒவ்வொருவரும் அறிய வேண்டிய உணர வேண்டிய செய்திகளை கொடுத்துள்ளீர்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  9. அருமையானதொரு ”மெய்ப்பாடு” விளக்கம்.

    இந்த விளக்கத்தில் பதிவர் என்னும் பங்கில் என் பதிவுகளில் அதிகமாக - அதிகமாக என்பதைவிட முழுவதுமே பவுடர் பூசாத முகத்தோடேயே வந்திருக்கின்றேன்.
    இலை மறைகாயாகவோ, புனைவுகள், சோடனைகள், அரிதாரம் பூசிக்கொள்ளும் திறமையாகவோ என் பதிவுகள் இருந்ததில்லை எனலாம். வாசகரைக் கவருதல் என்பதை எண்ணத்தில் கொண்டதில்லை. உளக்கிடக்கையே உட்பொருளாக அப்படியே கொட்டிவைத்ததுண்டு.
    அதனால்... சிலரிடம் ஏனிப்படி உன் வலையில் புலம்புகிறாய் என்றும் காரசாரமாக வாங்கிக் கட்டியதும் உண்டு ஐயா!
    மாற்றுவழியைச் சிந்திக்கின்றேன்.

    அவ்வப்போது தங்களிடமிருந்து இப்படியான ஆய்வுகள், நல்விளக்கங்களைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

    நல்ல பகிர்வு! மிக அருமை!
    உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் போலும்.
      இயல்பு - விகாரம் எனச் சொல்லியது படிப்பவரின் மனநிலை மாற்றத்தைத் தான்!
      உங்கள் படைப்பைப் படித்தபின் ஒருவர் அதனால் சிரிக்கவோ, வருந்தவோ முடியும் என்றால் அதுதான் விகாரம்.
      படைப்பவருக்கு அந்த மனநிலை இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம்.
      ஆனால் வாசகன் அடைய வேண்டிய மனநிலையைத் திட்டமிடுதல் மற்றும் தீர்மானித்தல் குறித்துப் படைப்பாளிக்கு உதவும் இலக்கணப் பகுதியாக மெய்ப்பாட்டியலை நான் கண்டதன் பகிர்வே இது. புதினம் மற்றும் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு இது பெரிதும் உதவக்கூடும்.
      நம் எண்ணங்களைப் பாடலாக்கும் போது, அதன் வடிவிற்கேற்ப சில மரபின் வரையறைகளுக்கு உட்பட்டு அமைத்துக் கொள்வதில்லையா அது போல்தான் இதுவும்.
      மற்றபடி தங்களைத் தங்கள் பதிவுகளின் வாயிலாக அறிந்தே இருக்கிறேன்.
      இதற்காக நீங்கள் மாற்று வழியைச் சிந்திக்க வேண்டியதில்லை!
      இளம்பூரணரின் பேராசிரியரின் உரைகளை மறுக்கின்றமைக்காக மரபிலக்கணக்காரர்களால் இந்தப் பதிவு விமர்சனத்திற்கு உள்ளாக்கப் படலாம். அதை நான் வரவேற்கிறேன்.
      நன்றி!

      Delete
    2. வணக்கம் ஐயா!

      மீண்டும் விரிவானதொரு விளக்கம் தந்தீர்கள். அருமை! நன்றியும் கூறுகின்றேன் ஐயா!

      நீங்கள் சுட்டிக் காட்டியது போன்று எனது எழுத்தினால் படிப்பவருக்கு வரக்கூடிய மாற்றமான ’விகாரம்’ சில சயங்களில் ’அகோர’மாகியுள்ளது. அதனாலே ஏனிப்படி எழுதவேண்டும் என்று தனிப்பட்ட முறையில் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளேன். இதனால்தான் மாற்றம் நானும் கொண்டு வர வேண்டுமோ என என்னைச் சிந்திக்கத் தூண்டியது.
      என்னைப் பற்றிய தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி ஐயா!
      தொடர்வோம் வலையுலகில் நம் பணியை...

      வாழ்த்துக்கள் ஐயா!

      Delete
    3. தங்களின் மீள்வருகைக்கு நன்றி சகோதரி!
      இப்பொழுதுதான் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்!
      அகோரம் ஆனதற்கு விமர்சனம் செய்யப்பட்டால் மகிழத்தானே வேண்டும்.
      கோரம்- அவலட்சணம். அகோரம் - அழகு.
      எனவே நீங்கள் நிச்சயமாய்த் தயக்கமின்றித் தொடரலாம்!
      தங்களின் இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா கண்டேன்!
      இதைப் படைக்கக் கூடியவர்களாய்த் தமிழில் நீங்கள் இருவர் மட்டுமே இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
      உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை!
      நன்றி!

      Delete
  10. தங்கள் பதிவு மூலமாக பல நல்ல செய்திகளை அறியமுடிகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் !

      Delete
  11. விஜு ஐயா! முதலில் மிக்க நன்றி எங்கள் பதிவுகளைக் குறித்துச் சொன்னதற்கு!

    மெய்ப்பாட்டியல் பற்றிக் கேள்வி ஞானம் இருந்தது ஆனால் அந்த இலக்கணத்தின் முழு அர்த்தமும், தொல்காப்பிய விளக்கமும் நுட்பமாக அறியும் வாய்ப்புத் தங்களால் கிடைத்தது! முதல் முறை வாசித்தோம். இரண்டாவது முறை படித்தோம். போதவில்லை! இன்னும் படிக்க வேண்டும் அப்போதுதான் இன்னும் முழுமையாக மூளையில் பதிய வைக்க முடியும்! குறித்துக் கொண்டுவிட்டோம்.

    சத்தியமாகச் சொல்கின்றோம்...தங்கள் அறிவிற்கு அருகில் நாங்கள் இல்லை ஐயா!

    வறுமையைக் குறித்து தாங்கள் இறுதியில் சொல்லியிருப்பது உண்மை! நாங்கள் தருமி! என்றால் தாங்கள்?!!!! தருமிக்கு அந்த மண்டபத்தில் உதவியர் யார்? அவர்தான் ஐயா தாங்கள்! உங்களிடம் இருந்து நிறை கற்கின்றோம். இன்னும் நிறைய கற்க வேண்டும்!

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஆசானுக்கு வணக்கம்!
      1994 ஆம் ஆண்டில் நீங்கள் பள்ளியில் கற்பித்தல் பணியில் இருந்திருந்தால் நான் உங்களிடம் படித்திருப்பேன். நீங்கள் சாமானியன் அண்ணா போன்றவர்கள் பன்முக ஆளுமை கொண்டவர்கள். இணையத்து எங்கெங்கு காணினும் இது போல் தமிழின் சகல துறைகளிலும் புகுந்து கலக்கும் பல பதிவர்களைக் காண்கிறேன். நல்ல தமிழ் இணையத்து வாழ்கிறது.
      நேற்று சாமானியன் அவர்களின் ரௌத்திரம் பழகு மற்றும் உங்களுடைய ஒரு Flash Back ஆகிய பதிவுகளில் கோபம், நகைச்சுவை என ஒருசேர இரு கட்டுரைகளைக் கண்டது தான் இப்பதிவின் ஆதாரம். உண்மையில் உங்களின் பதிவினைப் படித்த போது என்னை மறந்து சிரித்து விட்டேன். நம்முடைய தமிழறிஞர்கள் இலக்கணத்தைப் புலமை மரபிற்கு மட்டுமே உரியதெனப் பிரித்து வைத்து விட்டார்கள். உனக்கெல்லாம் எங்கு புரியப்போகிறது? என்றவாறு ! அது மொழியைக் கையாளும் எல்லாருக்கும் பொதுவானது. குறிப்பாகப் படைப்பாளிகளின் கைபிடித்த அழைத்துப் போக அது காத்துக் கிடக்கிறது.நாம் தான் அதை விட்டு விலகி வெகுதூரம் வந்து விட்டோம். அதன் கூறப்படும் பல கருத்துக்கள் இன்று வேண்டப்படாமல் இருக்கலாம். ஆனால் அவை முற்றிலும் வேண்டாமென்று ஒதுக்கிவிட முடியாது. தருமிக்கு உதவியவன் பற்றிய பாடல் ஒன்று உள்ளது .
      “ அக்காளை ஏறுவான் அம்மானைக் கைபிடிப்பான்
      ..சொக்காளைப் பக்கம் சொருகுவான் - நக்கனவன்
      ..ஆட்டை எடுப்பான் ஆலம்பால் உண்டிடுவான்
      ..காட்டில் குடியிருப்பான் காண “
      நான் அவனில்லை அய்யா!
      அதனால் தங்களின் நகைச்சுவையை இந்தப் பதிவிற்கானப் பின்னூட்டத்தின் இறுதியிலும் தொடர்ந்தாகக் கருதிக் கொள்கிறேன்.
      (தவறாய்க் கருதிட இடமுண்டு என்பதால் பாடலின் பொருளைச் சொல்லிவிடுகிறேன். )
      அந்தக் காளையில் ஏறுபவன் ( அக்காளை ஏறுவான்)
      அந்த மானைக் கையில் கொள்பவன் ( அம்மானைக் கைபிடிப்பான்)
      உமையை ஒரு பாகத்தில் கொண்டிருப்பவன்(சொக்காளைப் பக்கம் சொருகுவான் )
      முப்புறமெரித்தவன் (நக்கனவன்)
      (தில்லையில்) நடனமிடுபவன்-(ஆட்டம்) ( ஆட்டை எடுப்பான்)
      ஆலகால விஷத்தை உண்டவன் ( ஆலம் பால் உண்டிடுவான்)
      சுடுகாட்டில் குடியிருப்பவன் ( காட்டில் குடியிருப்பான்)
      நன்றி அய்யா!

      Delete
    2. ஐயா! சாமி! நாங்கள் பெரியவரோ சிறியவரோ....அறிவிற்கு அகவை இல்லை...தங்களுக்கு எங்கள் வணக்கம்! எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! தருமிக்கு உதவியன் பற்றிய பாடலில் முதல் இரண்டு வரிகளும், இறுதி வரியும் புரிந்து விட்டது. (தங்கள் பதிவுகளையும், வலையில் தமிழ் இலக்கியம் எழுதும் பதிவர்களின் எழுத்துக்களைப் படிப்பதினாலும்...கொஞ்சம் தமிழறிவு வளர்ந்துவிட்டது போலும்....) மூன்றாவது வரியில் ஆட்டை. எடுப்பான் புரியாமல் இருந்தது....உங்கள் விளக்கம் புரிய வைத்துவிட்டது! ...இதை தருமிக்கு உதவியவன் பற்றி என்று குறிப்பிடாமல் நீங்கள் சொல்லி இருந்தால்...கண்டிப்பாக உங்கள் விளக்கம் இல்லாமல் அந்த மூன்றும் கூட புரிந்திருக்காது என்பது வேறு விஷயம்...

      மிக்க நன்றி!

      Delete
  12. ஊமைக் கனவு கண்டால் வெளியே சொல்ல முடியாது என்பார்கள் ,நானும் தொல்காப்பியத்தை படித்து புரிந்துக் கொள்ள முடியாது என்றே நினைத்து இருந்தேன் .ஊமைக் கனவுகள் மூலம் புரியும் படி சொல்லி விட்டீர்கள் !
    சுவைகளிலே நான் நகைச் சுவை என்பதால் ,அதுபற்றிய கருத்தை ரசித்து படித்தேன் !
    துளசிதரன் ஜி ,சாமானியன் பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே !

    ReplyDelete
    Replies
    1. அய்யா
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முதலில் நன்றிகள்!
      நீங்களெல்லாம் கடல்!
      நகைச்சுவை பற்றி அடுத்த பதிவொன்றில் தான் சொல்லப் போகிறேன். ஆனால் அதைப் படித்துச் சிரிக்க முடியாது. நீங்களெல்லாம் அதற்கான இலக்கியத்தைப் படைப்பவர்கள்.
      இலக்கணக்காரனை விட இலக்கியக் கலைஞன் உயர்வானவன் .
      எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவது போல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் எழுதப்படுவதாகக் கருதப்படுவதால் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
      நன்றி!

      Delete
    2. இந்த கடல்கூட கற்றுக்கொண்டது கையளவு தானே ,கற்றுக்கவேண்டியது நிறைய இருக்கே...உங்களின் பதிவை ஆசையுடன் எதிர்ப் பார்க்கிறேன் !

      Delete
  13. நிறையா கற்கவும்,புரிந்து கொள்ளவும் வேண்டும். எவ்வளவு அழகாக இலக்கணத்தோடு நிறைய பேர் எழுதுகிறார்கள் என வியந்து இருக்கிறேன். நம்மால் அதுதான் முடியும். தாங்கள் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.நன்றி ஐயா..

    ReplyDelete
    Replies
    1. நுணுக்கம் புலப்படும் வரை எல்லாம் வியப்புத்தான் நண்பரே!
      கற்றுக் கொள்ள முயற்சியும் பயிற்சியும் சற்று ஆர்வமும் இருந்தால் எல்லாம் எல்லார்க்கும் கூடும்.
      ரசனையின் முதற்படியில் இருந்துதான் சுயமான கற்றல் ஆரம்பிக்கிறது.
      வியக்கும் உங்களால் வியப்பிக்கவும் முடியும்!
      தொடர வாழ்த்துக்கள்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  14. அப்பாடா ஒரு மாதிரி வாசித்து முடித்து விட்டேன். என்ன யோசிக்கிறீர்கள்? ஒரு தடவை மட்டும் வாசித்து கருத்து போட முடியாது பல தடவை வாசிக்க வேண்டியிருக்கிறதே. உடனே என் தப்போ என்று எண்ணாதீர்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. என் தப்பு தான் நான் கொஞ்சம் வீக் என்று நினைக்கிறேன்.
    மெய் பாடு பற்றி அறிந்தேன் வறுமையின் விளக்கமும், விகாரத்தின் தன்மையையும் புரிந்து கொண்டேன். வெருளி என்றால் ஒரு வகை கோமாளித் தனம் என்று தான் எண்ணி இருந்தேன் அதுவும் கோபம் என்று தெரிந்தது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்று இவைகளை கற்றுதர விளையும் நெஞ்சே நீ வாழ்க !
    நல்ல விடயம் தொடருங்கள் சகோ ! தொடருகிறேன். வாழ்த்துக்கள் மேலும் வளர.....! இவைகளை வலைச்சர வேலையினால் தவற விட்டு விட்டேன் மன்னிக்கவும். மிகுதியையும் நிச்சயம் பார்ப்பேன்.

    ReplyDelete
  15. ஐயா வணக்கம். பி.லிட். வகுப்பு எனக்கு நினைவில் வந்து விட்டது. எனது இலக்கணப் பேராசிரியர் திரு.ராஜேந்திரன் அவர்கள் எடுத்த அதே தொனியில் தங்களின் எழுத்துகள். அற்புதம். காணப்படு பொருளால் காண்போர் அகத்தின் வருவதோர் உள்ள விகாரம். எப்படிப் பட்ட விளக்கம்? தமிழ் இலக்கணத்தின் அமுதத்தை என்னென்று பகர? முதன்மை மெய்ப்பாடுகளைக் கூறி அப்படியே துணை மெய்ப்பாடுகளையும் பொருத்தி விலாசுங்கள்! அப்படியே லயித்துப் போகிறேன். அருமை அருமை நண்பரே! இந்த ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் பற்றி எண்ணி எண்ணித் துப்புக் கெட்டுப் போனது தான் மிச்சம். "வாளா இருந்து " என்பதில் உணர முடிகிறதா என்று நீங்கள் சொல்லுங்கள். மீண்டும் வருகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. புலவர்க்கு,
      வணக்கம். தமிழ்க் கல்லூரியின் பேராசிரியர்களுடன் என்னை ஒப்பிடுவது தங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
      ஈறுகெட்ட எதிர்றை வினையெச்சம் பற்றி புதிய பதிவில் விளக்கி இருக்கிறேன்.
      பார்த்துக் கணக்கிடுக!

      Delete

  16. வணக்கம்!

    படைப்பின் உயிரில் பகன்றவை நம்தாய்
    கொடையெனக் கொண்டேன் குளிர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  17. சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete