Tuesday 8 July 2014

அறிவினாவும் ஐய விடைகளும்!

முத்துநிலவன் அய்யாவின் வலைப்பக்கத்தில் இருபத்தைந்து கேள்விகள் இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்பட்டன. சுவாரசியமானவை.
தெரிந்த விடைகளுக்கு விடையளித்துக் கொண்டே படித்தால் கடைசியில் என் பெயரும் ......!
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும் என்பதில்லை!
கூறும் விடையாவும் சரியாக இருக்க வேண்டுவதும் இல்லை. தவறினைத் திருத்தவும் தெரியாதனவற்றைத் தெளிவுபடுத்தவும் யாவரும் வருக!
திருத்திப் பின்னூட்டமிட முத்துநிலவன் அய்யாவையே அழைக்கிறேன்.


1.    குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன?
      குறளின் அதிகாரங்களைக் குறிக்கும் விதமாக 133 அடி
        2    சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
                                 “ அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத்
             தொகைவகை விரியில்தருவதாகக் கூறிப் பின் இரண்டு அதிகாரங்களை  மட்டும்      கூறியதால்  சிற்றதிகாரம் என்பது நன்னூலுக்குக் காரணப் பெயர்.
  
       3.    அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்வரி இடம்பெற்ற நூல் எது?
          பிரபலமாக கம்ப ராமாயணத்திலிருந்து எடுத்தாளப்படும் மேற்கோள்.
        4.    பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?
        பண்குறித்தும் , இசைவகுத்தோன் குறித்தும் செய்திகளைக் கொண்டுள்ள ஒரே சங்க கால      நூலான பரிபாடல்
        5.    தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது?
              புறநானூறு.
         6.    ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறியவர் யார்?
        “ நன்றே நினைக்கின் நமனில்லை எனத் தொடரும் திருமந்திரத் திருமூலர்.
         7.    சாதி இரண்டொழிய வேறில்லைஎன்ற வரிகள் யாருடையவை?
                 இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார் என முடியும் பிற்கால அவ்வையின் பாட்டு
         8.    பள்ளு நூல்களுல் சிறந்த நூல் எது?
                  முக்கூடற்பள்ளு.
        9.    தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
                 எங்கள் ஊர் வரகனேரி சுப்ரமணிய ஐயர் அவர்களின் குளத்தங்கரை அரசமரம்
     10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது?
                சேரமான் காதலி.
     11. தீ இனிதுஎன்று பாடிய கவிஞர் யார்?
               பாரதியாரின் வசன கவிதை
       12. புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்என்ற கவிஞர் யார்?
                 அப்துல் ரகுமான்
        13. முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளேஎன்ற கவிஞர் யார்?
                           பாரதிதாசனின் நடைபோலத் தோன்றுகிறது.

      14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?
                  அக்கினிப் பிரவேசம்
      15. பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்“  என்றவர் யார்?
                          தெரியவில்லை . ( முத்துநிலவன் அய்யாவின் பின்னூட்டம் காண்க)
      16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
         இல்லையே யெனதா வியற்பகைக்கு மடியேன்எனத் திருத்தொண்டர் தொகைகூறும்      இயற்பகை நாயனார்.
     17. கடவுளும் கந்தசாமியும்சிறுகதை ஆசிரியர் யார்?
              “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்என்னும் தலைப்பு எனில் புதுமைப் பித்தன்.
      18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?
               தெரியவில்லை  ( முத்துநிலவன் அய்யாவின் பின்னூட்டம் காண்க)
     19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?
                 கோபாலகிருட்டின பாரதி
    20. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் யார்?
              தஞ்சை அபிரகாம் பண்டிதர்.
    21. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
             சைவக்கடல் ஆறுமுக நாவலர். தற்பொழுது முனைவர் சரவணன் இவற்றினைத்   தொகுத்துப் பெருநூலாக்கி உள்ளார்.
    22. இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன் வாப்பா” – யார்?
                இவ்வரிகளால் அதிகம் விமர்சிக்கப் பட்ட H G ரசூல்.
    
    23. காவிய காலம் என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
      தமிழ்த்துரோகி எனத் தமிழாய்வியல் அரிச்சுவடி அறியாதோரால் பழிக்கப்பட்ட தமிழின்  தலைசிறந்த ஆய்வாளரும் வழக்கறிஞருமான வையாபுரிப்பிள்ளை.
    24. புதுக்கவிதை சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா“ –என்றவர் யார்?
              மு. மேத்தா / விடைதவறு. (சரியான விடைக்கு
            முத்துநிலவன் அய்யாவின் பின்னூட்டம் காண்க)
     25.  “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?
               இந்த ஒரு கவிதையால் மட்டுமே பேசப்படுகின்ற அரங்கராசன்.  ( அரங்கநாதன்     என்பதே சரி! என் பேராசிரியருள் ஒருவர் அரங்கராசன் சட்டென வந்து விட்டார். பின்னூட்டம் காண்க)
                இதே பொருளில் பாரதிதாசன் மரபுக்கவிதை ஒன்றை இவருக்கு முன்பே எழுதிவிட்டார். ( மேலும் தெளிவிற்கு ( முத்துநிலவன் அய்யாவின் பின்னூட்டம் காண்க)


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

34 comments:

  1. அய்யா, ஒரே மூச்சில் அடித்துத் தள்ளிவிட்டீர்களே!
    அய்யா..நீர் வாசிததது ஆங்கிலம் சுவாசிப்பது தமிழ்தான் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.. ஒரு சில விளக்கம் மட்டும்..
    வினா எண் கள்
    13 இன் விடை - பாரதிதாசனே தான்
    15 -பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரன்
    18. குமரிக்கோட்டம்
    24. வைரமுத்து
    25. சேலம் ம.அரங்கநாதன்
    இவைதான் சரியான விடை என்று நினைக்கிறேன்.
    தவறு எனில் நீங்கள் சொல்லலாம். (உஸ்.. அப்பா.. நிலவா? உனக்கு இது தேவையா..னு அங்க யாரு முணகுறது..ஓ! மனச்சாட்சியா)

    ReplyDelete
  2. 25ஆம் கேள்விக்கான பதிலின் விளக்கம் - பாரதிதாசனின் நாள்மலர்கள் தொகுப்பில் உள்ளது. “இரவில் வாங்கிய இந்திய விடுதலை
    என்று விடியுமோ யார் அறி குவரே?” (ஆக.15,1947)

    ReplyDelete
  3. சேலம் ம.அரங்கநாதன் வேறு கவிதையோ, தொகுப்போ வெளியிட விலலை என்பதும் குறிப்பிடத் தக்கது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம். நீண்டநாள் கழித்து வரும் உங்கள் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சியூட்டுகிறது.
      ஆங்கிலம் வயிற்றுப்பிழைப்பிற்கு. படித்ததும் படிப்பதும் தமிழ்தானே அய்யா!
      பொதுவாகப் போட்டித்தேர்வுக்காக இயந்திரத்தனமான கேள்வி பதில் தயாரிப்பில் நான் உடன்பாடில்லாதவன். பொதுவான வாசிப்பில் சிலவிடயங்களை மனதிருத்தவே நினைக்கிறேன்.
      ஆனால் அவ்வளவு தரவுகளையும் மூலநூலைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் காலம் போதாது. இவ்வழியை மேற்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
      புலவர் கோபிநாத் அவர்களிடம் கணினி - இணைய இணைப்பு இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அவராய் இருந்தால் அனைத்து வினாக்களுக்கும் மிகச் சரியாய் விடையளித்திருக்கக் கூடும். நான் முந்திக் கொண்டு விட்டேன். பாரதிதாசன் பற்றிய பாடல் படித்திருக்கிறேன் . நினைவில் இல்லை. காட்டியதற்கு நன்றி. அரங்கராசன் என்னும் என் தமிழ்ப்பேராசிரயரால் அரங்கராசன் அரங்கநாதன் ஆனார். அவர் குறித்து நீங்கள் கூறிய செய்தி புதிது.பகிர்விற்கு நன்றி!

      Delete
    2. வணக்கம் நண்பரே. “பணியுமாம் என்றும் பெருமை“ என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறீர்கள். கேள்விக்கான சரியான விடையை நினைவூட்டும் வண்ணம் சுருக்கமான விளக்கம் அருமை இதைததான் எனது வகுப்புகளில் செய்வேன். வைரமுத்துவின் (விடை-24) கவிதை, அவர் திரைததுறைக்கு வரும் முன் எழுதிய “திருத்தி எழுதிய தீர்ப்புகள்“ நூலி்ன் முதல் கவிதையின் முதல் இரு வரிகள்.. படித்தவுடன் பச்சக்கென்று நெஞ்சில் ஒட்டி, அவரின் இன்றைய வெற்றிக்கு அன்றே கட்டியம் கூறிய வரிகள். வாழ்த்துகள் நன்றிகள் பாராட்டுகள் நண்பரே.

      Delete
  4. வணக்கம் ஐயா!

    அருமை!..
    அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் இருந்த
    அரிய பல விடயங்கள் உங்கள் பதிலினால் இன்று அறிந்தேன்.

    நல்ல தொகுப்பு!

    முத்துநிலவன் ஐயாவின் முயற்சி மிகமிக நன்று!

    முத்துநிலவன் ஐயாவுக்கும் உங்களுக்கும்
    உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அறிந்தவரும் ஒன்றும் அறியாதவரும் நம்மில் யாருமில்லையே சகோதரி!
      நானும் உங்களிடம் இருந்து அறியக் காத்திருக்கம் உங்களில் ஒருவன்தான்!
      முத்துநிலவன் அய்யா என்னை இணையத்துக் கொணர்ந்தோர். வாழ்த்தும் நன்றியும் அவர்க்குரித்தாகட்டும்!
      கருத்திற்கு நன்றி!

      Delete
  5. 1. 133 அடி

    மற்றவை எல்லாம் தங்களிடம் பல பதில்கள், நல்ல விளக்கங்களுடன் அறிந்து கொண்டோம்! மிக்க நன்றி!

    நாங்களும் எங்கள் சிற்றறிவுக்கு எட்டியவற்றை ஐயாவின் வலைத்தளத்திலேயே கொடுத்திருக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. “பணியுமாம் என்றும் பெருமை“ என்று முத்துநிலவன் அய்யா கூறியது உங்களுக்குத்தான் அறிஞரே!
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக மகிழ்கிறேன்.

      Delete

  6. இப்படித் தான் அறிஞர்களே...
    என்னைப் போன்ற சிறியோர்
    தமிழ் படித்து முன்னேற
    பயிற்சிப் பாடங்கள் வழியே
    ஊட்ட வேண்டும் - இதனால்
    தமிழ் வாழும் என்பேன்!
    " "ஃ" எங்கே பாவிக்கலாம்?
    உயிர் முன் வரும்
    அது, இது இற்கு இடையே
    அஃது, இஃது எனப் பாவிக்கலாமே" என்றவாறு
    இலக்கணக் கேள்விகளும் தரலாமே!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      ஆய்தம் என்னும் எனது பதிவொன்றையும் ,
      இது தொடர்பாக முத்துநிலவன் அய்யாவின் “ திருக்குறளில் தளைப்பிறழ்ச்சி இல்லை பாடபேதம் உண்டு “ எனும் பதிவையையும் பார்க்க வேண்டுகிறேன்.
      பெரியோர் சிறியோர் என்ற பாகுபாடுகள் இல்லை அய்யா!
      அறிஞர் அறியாதோர் என்ற வேறுபாடுமில்லை!
      அறிவைப் பொதுவில் வைப்போம்!
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  7. வணக்கம்
    ஐயா

    அறியாத வினாக்களுக்கு விடை கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இப்படியான வினாக்களை பகிர்வதன் வழி பலர் நல்ல தகவலை அறிய வாய்ப்பாக இருக்கும்
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும் எப்போதும் எல்லார்க்கும் தரும் பின்னூட்டமும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
      நன்றி அய்யா!

      Delete
  8. நல்ல விசயங்களை படித்துக்கொண்டேன், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  9. அறிந்தேன்.... நன்றிகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி வலைச்சித்தரே!

      Delete
  10. ஆஹா! நிலவன் அண்ணா குறள் போல் கொடுத்த வினாக்களுக்கு இத்தனை விரிவான விடை wiki யில் தான் கிடைக்கும் என்ற என் எண்ணத்திற்கு சரியான குட்டு. இதுக்கு மேல நான் பேசினால் அப்புறம் நான் ஒளவையார் பாடிய நல்ல மரம் தான். (இங்க பெரியவங்க பேசிக்கிட்டு இருக்காங்க நாம கிளம்பிட வேண்டியது தான்,ஜூட்) நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. இந்த பெரியவுங்க சின்னவுங்க“ல்லாம் கவிதைக்குக் கிடையாது தாயீ... உன் கவிதைக்கு நான் ரசிகன். உன் தமிழறிவு வளர்ந்தால் கவிதைக்கு நல்லது என்னும் நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

      Delete
    2. கோபிநாத் அய்யாவின் பதிவின் இறுதியில் கேட்டிருந்த வினாவுக்கு விளக்கம் அளித்த பின் ( சரியோ தப்போ! நம்ம வேலையே அடிச்சு உடுறது தானே சகோதரி! ) உதாரணமா என்னடா சொல்லலாமின்னு யோசிச்சப்ப உங்களோட “நல்லமரம்“ தான் கைகொடுத்தது.
      ரொம்ப சந்தோஷம்!

      Delete
  11. போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன். அறியாதன சிலவற்றுக்கு பதிலும், அறிந்த சிலவற்றுக்கு தெளிவும் கிடைத்தன. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் அய்யா நம் நோக்கமும். உடன் பதிவிலேயே பதிலிட்ட நண்பர் விஜூவுக்குத்தான நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தங்களைப் போன்றவர்களின் தேடல் மகிழ்ச்சியளிக்கிறது.

      Delete
    2. அய்யா
      எங்கள் இருவரிடம் மட்டும் பதிலளிக்கச் சொல்லிக் கேட்டிருந்தது.
      நான் அதை முதலில் பார்க்க நேர்ந்தது.
      இவை இரண்டும் தான் உடனடிப் பதிவிற்குக் காரணம்.
      துல்லியமான, தவறோ குழப்பமோ அற்ற தெளிவான பதில்களுடன் சில ஆயிரம் பேரேனும் இணையத்து இருப்பர்.
      எல்லார்க்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை.
      அதைப் பயன்படுத்திக் கொண்டவருள் நான் ஒருவனாய் இருக்கிறேன் அவ்வளவே!
      முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete
  12. 1. 133 அடிகள்
    3. கம்பராமாயணம்
    22. H G ரசூல்


    இவை மூன்றே நானறிந்த பதில்கள் ! அனைத்து பதில்களையும் இங்கு தெரிந்துகொண்டேன். இந்த கேள்விகளின் மூலம் தமிழ் அறிவில் நான் இருக்கும் படியையும், இங்கிருந்து செல்ல வேண்டிய தூரத்தையும் உணர்ந்துகொண்டேன்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை,
      உங்கள் பெயரை நானும் வைத்துக் கொள்ளக் கருதுகிறேன் அண்ணா!
      நானும் சாமான்யனே!

      Delete
  13. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
      குறுகத் தறித்த குறளுக்கு சொந்தக் காரர் வள்ளுவர் எனில்
      “குரலுக்கு“ச் சொந்தக் காரர் நீங்கள் தான் கரந்தையாரே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  14. நான் பெயில் என்று தெரிந்து முத்துநிலவன் அண்ணாவிடம் விடைத்தாளைக் கொடுக்காமல் இங்கு ஓடி வந்துவிட்டேன்...விடைகளை அறிந்தேன்..நன்றி ஐயா.
    மதியமே இங்கு கருத்திட்டேன், அதுவும் எங்கோ ஓடிப் போனதே, என் இணையத்தொடர்பு செய்யும் வேலை :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரி!
      உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
      உங்களின்
      sangamliteratureinenglish.blogspot.com/2014/07/burrow-with-cool-interior.html
      எனும் பதிவிற்குப் பின்னூட்டம் இட்டு விட்டேன். அது பற்றித் தனியே ஒரு பதிவே எழுதலாம் போல! இப்பொழுதுதான் பின்னூட்டங்களில் அதிகம் எழுதக் கூடாது என்று நினைத்தால், உங்களைப் போன்றோரின் பதிவுகள் கண்டபின் எழுதாமலிருக்க முடியவில்லை. முத்துநிலவன் அய்யா சொல்வது போல் அவர் ஒன்றும் அறியாதவரும் அல்லர்.
      நான் சங்கத்தமிழில் அவ்வளவு தேர்ச்சி பெற்றவனும் அல்லன் .எங்களுக்கான இடத்தை விட்டுச் செல்வது அவரது பெருந்தன்மை.
      நான் ஒருசாதாரணத் தமிழ் வாசகன் . இதை இணையத்துச் சன்னல்களின் முன் நின்று உரக்கச் சொல்லுவதில் எனக்கு ஒருதயக்கமும் இல்லை. நிச்சயம் இது அவையடக்கமல்ல!
      ஆங்கிலத்தில் உங்களின் பெயர்ப்புகள் மிக நல்ல முயற்சி!
      தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணிகள்!
      உங்கள் பதிவில் படைக்கும் சங்கத்தமிழ் தாள்களுக்கு எப்போதோ நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்தாகி விட்டது.
      ஒன்றாம் வகுப்புத் தேர்வுகளில் கலந்து கொள்ள உங்களைப் போன்றோர்க்கு அனுமதியில்லை!
      மன்னிக்கவும்!

      Delete
    2. வணக்கம் சகோதரரே.
      உங்கள் பின்னூட்டம் பார்த்துவிட்டேன், மிக்க நன்றி.
      நீங்கள சொல்வது போல முத்துநிலவன் ஐயா தன்னைச் சாதாரணமாய்க் காட்டிக்கொண்டும் நம்மை மேன்மேலும் ஊக்கப்படுத்தியும் உயர்ந்து நிற்கிறார்.
      உங்களின் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள். சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு செய்தாலும் ஒன்றாம் வகுப்புப் பாடமும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.. :) எவ்வளவு இருக்கிறது கற்றுக்கொள்ள, நேரம் தான் திட்டமிடவேண்டும்.
      உங்களின் தளமும் இனித்தொடர்வேன்.
      நன்றி.

      Delete
  15. " இது போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை,
    உங்கள் பெயரை நானும் வைத்துக் கொள்ளக் கருதுகிறேன் அண்ணா!... "

    இதற்குதான் முத்துநிலவன் ஐயா அவர்கள் பதலளித்துவிட்டார்களே....

    “பணியுமாம் என்றும் பெருமை“ என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறீர்கள்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete

  16. வணக்கம்!

    இலக்கணம் கற்றும் இலக்கியம் ஆய்ந்தும்
    தலைக்கனம் இல்லாத் தமிழா்! - கலைமணம்
    வீசம் கவி.சோசப்! மின்னும் வலைவழியே
    பேசும் மொழியனைத்தும் பீடு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கூறறிவில் பாரறியுஞ் சீருடைய பாவலனாய்
      வீறுடைய வெண்பா விளக்கானாய்! - சாறுடைய
      வாக்கிலிடர் போக்குமுயர் நோக்கைமனங் கேட்க‘துயர்
      நீக்கவுனைத் தேக்குமிவன் நெஞ்சு!

      Delete
  17. நடையை வைத்தே கவிஞரை கூறும் உங்கள் வாசிப்பு
    வியப்பு.. விழிகள் வெளியில் வந்துவிட்டது எனக்கு ..
    நல்ல கேள்விகள் அறியவேண்டிய பதில்கள் ..
    www.malartharu.org

    ReplyDelete