Friday 4 July 2014

பதங்கமாதல்




கண்ணிகளை
உறவுகள்மேல் விரித்து
என்னைப் பிடித்த பின்
வாளும் அம்பும்
குண்டும் ஈட்டியுமாக
அணிவகுப்பொன்றுடன்
சூழ்ந்தே இருக்கிறீர்கள் எப்பொழுதும்! 


என்னிடம்
வெடித்துச்
சிதறவும்
சிதற்றவும்
வரமற்றவோர் உடல்!


இலக்கில் நிறுத்தி
உங்கள் ‘குறி‘ பரிசோதித்துக்கொள்ள
இழப்புச் சூளையுள்
இரும்பாக்கப்பட்டவோர் இதயம்!


ஒருபோதும்,
            நீங்கள் சிரிக்கச் சிரித்து
                   அழ அழுதுகாட்டும்
உங்கள் கண்ணாடி பிம்பம் ஆகேன் நான்!
                   கால்மிதி யாகவும்
                   கண்ணடைத்திருக்கவும்
                   ஆகாதெனக்கு........!


அரியணை வீற்றுத்
தலைவிதி எழுதும்
இரத்தச் செங்கோல்!
அடிமைப் படையணி!
சட்டச் சாமரம்!
கவசச் செருக்கு!
இவ்வளவும்
இன்றிருக்கின்றன உங்களிடம்!


பதிலுக்கு
நீங்கள் அடைய முடியாது
பொறாமை கொள்ள
என்னிடம் இருக்கின்றன,
எம்மைப் பெருக்கும்
என் தாயின் முலைப்பால்!
தந்தையின் வீரம்!


அறம் நாடவும்,
அன்பாளவும்,
கடலோடவும்,
களமாடவும்,
உலகம்
எங்களிடம் கற்றுக்கொண்ட
காலக்கட்டத்தில்,

ஆடுகள் மேய்ந்து போன
உங்கள் ஆண்மை விதைகள் பற்றிய
ஆறொணாத் துயரமும்,
அடங்காக் கோபமும்
என்னில் திரும்பி,
பாம்பின் பற்களில் வழியும்
வெறிநாய் எச்சிலாய்
முகத்துமிழ்ந்து போக
இன்று
ஆயிரம் சொல் சேர்க்கிறீர்கள்!

அறிவேன்!


பதிலாய்,

என்னிடம்.......
ஆகச் சிறிய
ஒரு கவிதை!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

26 comments:

  1. "அறம் நாடவும்,
    அன்பாளவும்,
    கடலோடவும்,
    களமாடவும்,
    உலகம்
    எங்களிடம் கற்றுக்கொண்ட
    காலக்கட்டத்தில்," என
    சிறப்பாகக் காலத்தைக் கணித்து
    எம்மைக் கவிதையின் பால்
    இழுக்கிறீர்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  2. உள்ளத்தின் குமுறல் அருமை நண்பரே....

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!
    ’பதங்கமாதல்’ இன்றுதான் அறிகிறேன் இச் சொல்லை.
    அதை ஆராயவே எனக்கு அறிவு போதவில்லையோ என வருந்தினேன்.

    கவிதையின் ஆழம் விபரிக்க இயலாத ஒன்றாகப்
    பிரமிக்க வைக்கின்றது.

    நிகழ்வுகள் கண்ணில் நிழலாட ஒரு கவி ஓவியம் காட்டியுள்ளீர்கள்!

    தொடருங்கள்! வாழ்த்துகிறேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      வணக்கம்.
      தெளிவில்லாத சொல்லைச் சொல்லிக் குழப்பிவிட்டு விட்டோனோ?
      கவிதையை உணர்தீர்கள் அதுவே தலைப்பின் பொருள்!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
    2. ஐயா வணக்கம்!

      //தெளிவில்லாத சொல்லைச் சொல்லிக் குழப்பிவிட்டு விட்டோனோ?//..

      அப்படி இல்லை ஐயா! தெளிவு - தெரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவாயுள்ளது எனக்கு என்பதுவே உண்மை!

      புதிய சொற்கள் அறிவதில் ஆர்வம் நிறையவே உண்டு.
      தயக்கம் வேண்டாம் பெருந்தகையீர்!
      தொடருங்கள்!...

      வாழ்த்துக்கள்!

      Delete
    3. எனக்கு பதங்கமாதல் மட்டும் தான் சிறு மூளைக்கு எட்டுச்சு:((
      ரொம்ப ஆழமான கவிதை அண்ணா! செல்வராகவன் படம் மாதிரி. ஒரு வரியை மற்றொரு வரியோடு இணைத்துபார்க்க முடியவில்லை. உண்மையை சொல்லப்போனால் இது குறித்து ரொம்ப தாழ்வு மனப்பாமையாய் இருக்கு. அண்ணா நான் என்னோட புரிந்துகொள்ளும் தம்மையை தான் சொல்லுறேன். தப்பா இருந்தா மன்னிச்சுகோங்க .

      Delete
  4. முதலில் பதங்கமாதல் என்றொரு வார்த்தையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    தங்களின் கவியாற்றல் திறன் கண்டு பிரமிக்கிறேன் நண்பரே.
    தொடரட்டும் தங்களது கவிப்பணி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி !
      உங்கள் பாராட்டெல்லாம் கேட்கக் கேட்க எனக்கும் ஏதோ எழுத வருமெனத் தோன்றுகிறது.
      மீண்டும் நன்றி நண்பரே!

      Delete
    2. என்ன!.... உங்களுக்கு எழுத வரும் என்று தோன்றுகிறதா? அடேங்கப்பா யார் அப்படி சொன்னா சாச்ச.. சாச்ச அதெல்லாம் சுட்டுப் போட்டாலும் உங்களுக்கு வராதுங்க. ஹா ஹா ...... நீங்க முயற்சியே பண்ணாதீங்க சரியா....

      Delete
    3. எல்லாமே முத்துக்கள் தான் அள்ளுவதா கிள்ளுவதா எப்படி என்று திகைத்தல்லவா இருக்கிறோம் பிரமிப்பின் உச்சத்தில். தொடருங்கள் வீறு நடையுடன் . என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ....!

      Delete
    4. கடிதோச்சி மெல்ல எறிதல் தானே சகோதரி?

      Delete
  5. சகோதரனே !

    " கவிதையின் ஆழம் விப‌ரிக்க இயலாத ஒன்றாகப்
    பிரமிக்க வைக்கின்றது.

    நிகழ்வுகள் கண்ணில் நிழலாட ஒரு கவி ஓவியம் காட்டியுள்ளீர்கள்! "


    சகோதரி இளமதியின் வார்த்தைகளையே எண்ணமாய் பதிவதைதவிர வேறொன்றும் தோன்றவில்லை !

    " கவி ஈர்ப்பு மையத்திலிருந்து " உங்களை மலைத்துக்கொண்டிருக்கிறேன் !
    " பதங்கமாதல் " சொல்லை முதல்முறையாக அறிகிறேன். ( தெளிவில்லாதச் சொல்லை சொல்லவில்லை, எங்களுக்கு தெரியாத சொல்லை கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள் ! )

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      // ( தெளிவில்லாதச் சொல்லை சொல்லவில்லை, எங்களுக்கு தெரியாத சொல்லை கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள் ! ) //

      ஆமோதிக்கின்றேன் நானும் உங்கள் கருத்தினை...

      உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

      Delete
    2. அண்ணா,
      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      உங்களின் புதிய பதிவைப் படித்து விட்டேன் .
      போதும் போதும் என நீங்கள் திட்டும் அளவிற்குப் பின்னூட்டமும் இட்டு விட்டேன்.
      ஒரு நிலையிலிருந்து வழமையான மற்றொரு நிலைக்குப் போகாமல் நேரடியாக வேறொரு நிலைக்குப் போவதுதான் அண்ணா பதங்கமாதல். ( இந்த விளக்கத்திற்கு சொல்லே பரவாயில்லைன்னு தோணுதில்ல! )
      நனறி சகோதரி!

      Delete
  6. வணக்கம்
    ஐயா.

    புதிய சொல் வீச்சுக் கவிதையை
    உள்ளம் சோர்வடையாமல்
    படித்து மகிழ்தேன் ஐயா.

    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  7. குமுறல் வெளிப்படும் கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி அய்யா!

      Delete
  8. "பதங்கமாதல்" புதிய வார்த்தையாக இருக்கவே முதலில் அகராதியை நோக்கி வார்த்தையின் அர்த்தம் தெரிந்துகொண்ட பின் கவிதையை வாசித்தோம்! புதியதொரு சொல் கற்றோம்! தங்கள் பதிவுகளை வாசித்தால் எங்கள் தமிழ் இன்னும் விரிவடையும்!

    ஆழமிக்க கவிதை! ஆதலால், பலமுறை ஆழத்தினுள் சென்று வெளிவந்தோம்! என்னே தமிழ் மொழி! தங்களிடம் அப்படியே தவழ்கின்றது!

    //ஒருபோதும்,
    நீங்கள் சிரிக்கச் சிரித்து
    அழ அழுதுகாட்டும்
    உங்கள் கண்ணாடி பிம்பம் ஆகேன் நான்!
    கால்மிதி யாகவும்
    கண்ணடைத்திருக்கவும்
    ஆகாதெனக்கு........!//

    அருமையான வரிகள்! மனதின் குமுறல் மட்டுமல்ல....தன்மானமும் எட்டிப்பார்க்கத்தான் செய்கின்றது!

    இப்படியே எங்களுக்குத் தமிழ் கற்றுத் தந்துவிடுங்கள்!

    வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்க்கு,
      நாமனைவரும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் தாம்!
      கற்க நிறைய இருக்கிறது என நினைக்கும் பொழுதே ஒவ்வொரு நிமிடமும் கற்கத் தொடங்கியவர்கள்!
      உங்களோடினணந்து நானும் வருகிறேன்!
      கற்போம் வாருங்கள்!

      Delete

  9. வணக்கம்!

    பதங்கமாதல்?

    பாமரரும் புரிந்து கொள்ளும் வணணம் தலைப்பிடுதல் சிறப்பு!

    அனைத்து வகைத் தலைப்புகளும் தமிழ்மொழியில் அமைதல் நலங்கொடுக்கும்,

    நல்ல தமிழில் நறுந்தலைப்பு வைத்திட்டால்
    வல்ல கவிநான் மகிழ்ந்திடுவேன் - சொல்லுக்குப்
    பஞ்சமா? பண்ணொலிரும் பாட்டொளிரும் பைந்தமிழை
    விஞ்சுமா தேனும் விளம்பு?

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. அருமை தோழர்,
    வேறொன்றும் எழுத வரவில்லை ..
    உங்கள் படைப்புகளை பலமுறை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய படைப்புகள்...
    ஆம் அவை பாடங்களாகவே இருக்கின்றன...
    (ஆசிரியர் நடத்தும் பாடங்கள் அல்ல விருப்புடன் படிக்கும் பாடங்கள்)
    கலக்குங்க ..
    தொடர்க ..
    www.malartharu.org

    ReplyDelete