Monday 30 June 2014

புதையலின் வரைபடம்.



சிறு வயதில் வார்த்தைகளைக் கொண்டு விளையாடி இருப்போம். ஒரு வார்த்தையில் முடியும் சொல்லைக் கொண்டு இன்னொரு வார்த்தையைச் சொல்லுவது. பின் ஒரு பாடலில் முடியும் எழுத்தைக் கொண்டு இன்னொரு பாடலை ஆரம்பிப்பது. திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு தொடர்வது. ஒரு சொல்லைக் கொண்டு பல 
சொற்களை உருவாக்குவது என்பது போலச் சொற்களை வைத்து விளையாடுவது சுவாரசியமான விளையாட்டுதானே.

      அப்படி ஒரு விளையாட்டை அழகிய சொக்கநாத பிள்ளை என்றொரு புலவர் விளையாடுகிறார் . பாடலை ஒரு முறை படித்து விடுங்கள். பின் விளையாட்டைப் பார்க்கலாம்.  

“ முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்!
      முன்னெழுத்(து) இல்லாவிட்டால் பெண்ணே ஆகும்!
  பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம்!
      பிற்பாதி யுடன்முன்னெழுத்(து) இருந்தால் மேகம்!
  சொற்பாகத் தலைகடைசில் மிருகத் தீனி!
      தொடரிரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்றாம்!
  பொற்பார்திண் புயமுத்துச் சாமி மன்னா!
      புகலுவாய் இக்கதையின் ‘புதையல்‘ கண்டே!

இனி இதோ புதையலின் வரைபடம்.
புதையல்
இதுதான் சொக்கநாத பிள்ளை விளையாட எடுத்துக்கொண்ட சொல்.
இனி ஒவ்வாரு வரியாகப் பாடலைப் பார்ப்போம்.

  ‘முற்பாதி போய்விட்டால் இருட்டே ஆகும்‘

புதையல் என்னும் சொல்லின் முதல்பாதி ( புதை + அல்)  ‘புதை‘ என்பது.
அந்த முதல் பாதியை எடுத்துவிட்டால் மீதி இருப்பது ‘ அல் ‘. அல் என்ற சொல்லுக்கு இருட்டு என்பது பொருள். ( அல்லும் பகலும் அயராது உழைத்தான் என்று சொல்வதில்லையா? அதன் பொருளும் இரவும் பகலும் என்பதுதானே!)
இப்பொழுது முற்பாதி போய் இருட்டானவிதம் புரிகிறதா?

“முன்னெழுத்(து) இல்லாவிட்டால் பெண்ணே ஆகும்.“

புதையல் என்பதன் முன்னெழுத்து ‘பு‘ அது இல்லாவிட்டால் மீதி உள்ளது ‘தையல்‘ தையல் என்பது பெண்ணைக் குறிப்பது தானே?

பிற்பாதி போய்விட்டால் ஏவல் சொல்லாம்.“

புதையல் என்பதன் பிற்பாதியில் உள்ள ( புதை + அல்)  பிற்பாதியான ‘அல்‘ என்பது போய் விட்டால் மீதம் உள்ளது ‘ புதை‘ இதை நாம் சொல்லுவது அந்த வேலையை ( புதைப்பதை) இன்னொருவரைச் செய்யுமாறு சொல்லத்தானே? அதுதான் ஏவல் சொல்.

   “பிற்பாதி யுடன்முன்னெழுத்(து) இருந்தால் மேகம்.“

புதையலின் பிற்பாதி ‘அல்‘ அதனுடன் முன்னெழுத்து ‘பு‘ சேர்ந்தால்
( பு +(ய்)+ அல்)  புயல். புயல் என்னும் சொல்லுக்கு மேகம் என்று பொருளுண்டு.

  “சொற்பாகத் தலைகடைசில் மிருகத் தீனி“

புதையலின் தலையெழுத்து ‘பு‘ கடைசி எழுத்து ‘ல்‘ தலை எழுத்தையும் கடைசி யெழுத்தையும் சேர்க்க ‘ புல் ‘  அது ஆடு மாடு போன்ற ஒருசார் மிருகங்களுக்குத் தீனி தானே?

“தொடரிரண்டாம் எழுத்து மாதத்தில் ஒன்றாம்“

புதையல் என்னும் சொல்லின் இரண்டாவதாகத் தொடர்கின்ற எழுத்து, 
‘ தை ‘ தமிழின் பன்னிரு மாதங்களில் ஒன்று.

புதையலைக் கொண்டு இன்னும் வேறேதேனும் சொற்களைத் தோண்டி எடுக்க முடியுமா?
ஒரு சொல்லை வைத்துக் கொண்டு அதன் அமைப்பை மாற்றி மாற்றி இப்படி வெவ்வேறு சொற்களும் பொருளும்  அமையுமாறு கவிதை எழுதுவதை நம் இலக்கண நூல்கள் எழுத்தலங்காரம் என்கின்றன.  நாம் கண்ட சித்திரக்கவிகளுள் இதுவும் ஒரு வகை.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

23 comments:

  1. புதையலைப் பற்றிய தங்களின் தேடலைப் படித்து வியந்தேன். பாராட்டுகள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யாவுக்கு வணக்கம்.
      நானாகப் படைத்தது எதுவுமில்லை அய்யா!
      படித்ததைப் பகிர்ந்தேன். அவ்வளவுதான்.
      தனிப்பாடல் திரட்டில் இந்தப் பாடல் இருந்தது.
      அணியியலில் எழுத்தலங்காரத்திற்கான வரையறை இருந்தது.
      இரண்டையும் இணைத்து எழுதியதுதான் நான் செய்தது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  2. வணக்கம்
    மிக அருமையான இலக்கண விளக்கம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். வருகைக்குக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,
      ( எப்படித்தான் எல்லா வலைப்பூக்களின் பின்னூட்டங்களையும் படித்து உடனுக்குடன் கருத்திடுகிறீர்களோ? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறீர்கள். அந்தக் கலையை எங்களுக்கும் சொல்லித்தாருங்களேன்.)

      Delete
  3. சொல் விளையாட்டு அருமை நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள் புலவர் சொக்கநாதப் பிள்ளைக்கு உரித்தாகட்டும்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழர்!

      Delete
  4. வணக்கம் ஐயா!

    சித்திரக் கவியின் விசித்திரம் கண்டேன்...
    புதையலில் அகப்பட்ட புதையல்கள் அருமை!

    தொடருங்கள் ஐயா!

    என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி வணக்கம்.
      நீங்கள் சகோதரி இனியா, சகோதரி அருணா செல்வம், சகோதரர்கள் சீராளன், சிவக்குமரன் இவர்கள் மரபுக் கவிதைகளைப் பார்த்து மிரண்டுதான் போய் இருக்கிறேன். உண்மையாகவே!
      நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது உங்களிடத்திருந்து.
      கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.
      நன்றி!

      Delete
  5. " எழுத்தலங்காரம் " பற்றிய அருமையான பதிவு.

    ஆங்கிலத்தில் இது போன்ற எழுதலங்காரங்கள் சொல் விளையாட்டாய், எளிமையாய் கற்றுவிக்கப்படுகின்றன ! நாம்தான் எந்த எளிமையையும் ஏற்படுத்த முயலாமல் இலக்கணம் என்றாலே வேப்பங்காய் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டோம் ! எனக்கு தெரிந்த வரையில் தமிழ் இலக்கணத்தை அவ்வப்போது எளிமையாக விளக்கிய ஒரே எழுத்தாளர் சுஜாதா ! அவருக்கு பிறகு அந்த இடம் வெறுமையாகத்தான் இருக்கிறது சகோதரரே... உங்களுக்கு அவரின் எளிமையான நடை கைகூடுகிறது....

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      வணக்கம். எவ்வளவோ இருக்கின்றன படிக்கவும் பகிரவும். பின் விட்டால் சுஜாதாவின் தாசன் ஆகிவிடுவீர்கள் போல.......!?
      அப்படி உங்களை விட்டுவிட முடியுமா?
      சுஜாதாவின் முழுப்புலமையையும் நீங்கள் அறிய,
      பேராசிரியர் . பா. மதிவாணன் எழுதிய “ சங்க இலக்கியத்தில் உரைகளும் கறைகளும் “ என்னும் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாசிக்கத்தான் வேண்டும். மின்னஞ்சலில் முகவரி அனுப்புங்கள். என்னிடமிருக்கிறது. நிச்சயம் அனுப்பிவைக்கிறேன்.
      நீங்கள் படித்துத்துத்தான் தீர வேண்டும்.
      சுஜாதாவின் இடம் வெறுமையாகவே இருந்துவிடட்டும் என்பதுதான் என் விருப்பம்.

      Delete
  6. அருமையான சித்திரக்கவிதையை விளக்கியுள்ளீர்கள் ஐயா.

    நான் இதுவரையில் இப்படியான முறையில் எழுதப்பட்டதைப் படித்ததே இல்லை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே!
      உங்கள் தளத்தில் பல்வேறு வகையான மரபுப்பாடல் வடிவங்கள் காணக்கிடைக்கிடைக்கின்றன. மரபுப்பாக்களி்ல் தேர்ச்சியுற வேண்டும், நல்ல மாதிரி வேண்டும் என்பவர்களுக்கும் நிச்சயம் உங்கள் தளத்தைப் பரிந்துரைக்கலாம். மலைத்துப் போகும் அளவிற்குப் பல்வேறு வடிவ சாத்தியங்களைக் காட்டி வருகிறீர்கள்.
      என் தளத்திற்கு வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  7. வணக்கம் சகோதரா! எழுத்தலங்கரத்தை அருமையாக இலகுவாக விளக்கி யுள்ளீர்கள். இவற்றைகேட்டு வியப்பும் மேலும் அறியும் ஆர்வமும் பெருகுகிறது.நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      வணக்கம். சென்ற பதிவிலேயே உங்கள் பின்னூட்டத்தை மிக எதிர்பார்த்தேன். இங்கு இப்பொழுது உங்களின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. மரபினை வறண்டு போகாமல் காத்து நிலைநிறுத்தும் நீங்கள் உட்பட ஒருசிலரும் என்னைக் கவனிக்காமல் போனால் அப்புறம் நான் என்னாவது?
      உங்கள் அன்புகண்டு நெகிழ்கிறேன்.
      நன்றியுடன்!

      Delete
  8. இதே மாதிரி தொடர்ந்தீங்கான நான் ஏகலைவன் போல் உங்களிடம் இலக்கணமும்,இலக்கியமும் கற்றுகொள்வேன்! நீங்கள் ரசித்தவிதமே பிறரையும் ரசிக்கசெய்கிறது உங்களது விவரணை!!!!! இது அலங்காரம் மட்டுமல்ல அர்த்தமுள்ள பதிவும் கூட :) நன்றி சகோ!!

    ReplyDelete
    Replies
    1. அப்ப விரலைக் கேட்டுவிட வேண்டியது தான்!
      உங்களிடத்திலிருந்தெல்லாம் நானும் நிறைய கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன் சகோதரி!
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  9. ஐயா..!இதுவரை வெளிவராத 'புதையல்களை' வெளிக்கொண்டுவருகிறீர்கள். தங்களுடைய கட்டுரைகளையெல்லாம் தொகுத்துப் புத்தகமாக கொண்டுவந்தால் இலக்கிய உலகம் பயன் பெரும்.ஐயா ,எனக்கு மதிவாணன் ஐயாவின் 'சங்க இலக்கிய உரைகளும் கரைகளும்' புத்தகம் வேண்டுமே...

    ReplyDelete
  10. அய்யா,
    வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் அதைவிடத் தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கும் நன்றிகள்! பேராசியர் மதிவாணன் அவர்களின் “ சங்க இலக்கிய உரைகளும் கரைகளும்“ எனும் நூல் சங்க இலக்கியங்ளுக்கு உரையெழுதப் புகுவோர் கண்டிப்பாகக் காண வேண்டிய பார்வை நூல். “குகன் பதிப்பகம், 5, விவிகே பில்டிங், வடுவூர், மன்னார்குடி, திருவாரூர்-614 019“ என்ற பதிப்பகத்தாரால் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. கிடைக்கும் என நினைக்கிறேன். நேரில் வாய்ப்பிருப்பின் நகல் ஒன்றைத் தருவதில் ஆட்சேபனை இல்லை. அந்நூலில் இருந்து சில செய்திகளைத் தனிப்பதிவாய் எழுத ஆசைப்படுகிறேன்.
    தங்களின் வாசிப்பார்வத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. “குகன் பதிப்பகம், 5, விவிகே பில்டிங், வடுவூர், மன்னார்குடி, திருவாரூர்-614 019“ என்ற பதிப்பகத்தாரால் 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
      தொடர்பு எண் கிடைக்குமா?
      நூல் பெற விழைகிறேன்

      சிவா
      முனைவர் பட்ட ஆய்வாளர்
      தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
      திருவாரூர்

      9751029696

      Delete
  11. ஒரு சொல்லெடுத்து இவ்வாறு இனிமையாய் கவியாக்கி தந்த சொக்கநாதருக்கு கோடானுகோடி நன்றிகள் .........

    அதை அழகாய் எல்லோருக்கும் புரியும் விதத்தில் பகிர்ந்த
    ஊமைக்கனவு ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    படித்தேன் இன்புற்றேன்

    நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  12. மதிக்கின்றேன் உம்கவிதை மாநாட்டின் ஓரம்
    துதிக்கின்ற தொண்டனென நின்றேன்! - உதிக்கின்ற
    எண்ணம் எழுத்தெல்லாம் என்னுயிரே என்றிசைக்கும்
    வண்ணமென ஆனமைக்கும் வாழ்த்து!

    ReplyDelete
  13. உங்களை உயரே பார்த்து வியக்கின்றோம்! எழுத்தலங்காரம் அருமை! மிகவும் அருமையான ஒரு பதிவு!

    தங்களின் எல்லா பதிவுகளையும் வாசித்தாலே...இல்லை..இல்லை...படித்தாலே தமிழில் புலமை வந்துவிடும்! நிச்சயமாக படிக்கின்றோம்! அறிமுகம் ஆனதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசானே!

      Delete