Monday 2 June 2014

நான் அறிவேன்!




வெட்ட வெளியிடைப் பொட்டல் நிலம்படு
     ஒற்றைப் பனைமரத்தில் - நீ
இட்ட அமுதினைத் தொட்டு ருசித்திடாப்
    பட்டினிக் கூடுகளில் - உனை

முட்டிச் சிறகுகள் முளைத்திடாக் குஞ்சுகள்
    மட்டும் தவமிருக்கும் - நீ
எட்டி நடையிடுவாய் உனக்காயெனை
    வெட்டிப் பலியிடுவேன்!


ஓட்டைப் பானைநான் உன்னை நிரப்புவேன்
     ஒவ்வோர் நொடித் துகளும் - முள்
சாட்டை களால்’அடி! சல்லடை யாய்த்துளை!
      சூட்டின் வலிக்குள் அழும் - மனக்
காட்டை அலைக்கும்’உன் காற்றில் அசைவுறும்
     கீற்றுக் கிளைகள் சொலும் - இந்தப்
பாட்டின் வழியெனை மீட்டும் உன்னுயிர்
     ஸ்பரிசங்கள் நானறிவேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

15 comments:

  1. வணக்கம் ஐயா
    //தோழரின் உயிரக்கம் இப்பாவின்
    வழியே நானறிந்தேன்- உமது
    ஒவ்வொரு வரிகளிலும்
    உன்னுயிர் ஸ்பரிசங்கள் நானுணர்ந்தேன்.
    தொடர்க தோழரே!
    தொட்டுவிடும் தான் நம் இலக்கு
    எட்டிப்பிடிப்போம் இரு கை நீட்டி!!//
    சிறப்பான வரிகள் ரொம்பவே சிந்திக்கவும் வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் ஐயா. தொட்டுவிடும் தூரம் தான் என திருத்திப் படித்துக் கொள்ளவும்.

      Delete
  2. தொட்டுவிடும் தான் நம் இலக்கு என்பது
    இலக்கு வந்து நம்மைத் தொடும் ” ஆக்கம் அதர்வினாய்ச செல்லும் ” என்பது போல் கவித்துவமாகவே உள்ளது. திருத்தம் தேவையில்லையே ஐயா!
    கருத்திட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. அருமை..
    எப்போது எழுதியது இது... ?

    அருமை..

    மேலும்
    உங்கள் கவிதையை குறித்து எங்கள் வீட்டு கவிஞரிடம் பேசிவிட்டு மீண்டும் பதிவிடுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. பதிவிடும் எதுவும் இப்போது எழுதியதில்லை தோழரே!
      ஒருகாலத்தில் ’சுட’சுட எழுதியவைதாம்.
      ஏதேனும் எழுதுதற்காய் பழைய பதிவுகளிலிருந்து எடுத்து விட்டுக்கொண்டிருக்கிறேன். களம்மாறி நெடுநாளாயிற்று.
      ஒரு காலத்தில் என்னால் கவிதை எனக் கருதப்பட்டவை,
      அசையும் சீரும் தளையுமாய்த் தம்மைக் கலைத்து மீண்டும் சொற்களாய் என் களஞ்சியத்திருக்கின்றன. எதற்காகக் காத்திருக்கிறேன் என்பதில் எனக்குத் தெளிவில்லை.
      கருத்திற்கு நன்றி தோழ!

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  5. அடடா....“உனக்காயெனை வெட்டிப் பலியிடுவேன்!“ அடடா.. என்ன உணர்ச்சி வசப்படட நிலை! “தெய்வம்“ பார்த்து வரம்தரா விடினும் “பக்தன்“ பலிகொடுப்பதை நிறுத்துவதே இல்லை்யே அதுதானே இந்த உலகின் முரண்சுவை! அழகு அழகு எழுதிக்கொண்டே இருங்கள் அய்யா. அப்படியே கொஞ்சம் -எல்லாரும் படிக்கத் தயங்காத வடிவமான- புதுக்கவிதைப் பக்கமும் வரவேண்டுகிறேன்...நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      உங்கள் பாராட்டைக் கேட்கும் போது உண்மையில் கூச்சமாயிருக்கும். உங்களுக்குப் பிடித்த காரிகையில் ஒருவரி வருமே
      “ யானா நடாத்துகின் றேனென் றெனக்கே நகைதருமால்
      ஆனா அறிவின வர்கட்கென்னாங் கொலெ னாதரவே“
      என்றாற் போலத்தான் நகைக்குப் பதிலாய்க் கூச்சம்...! தங்களென்மேல் அன்பிற்குப் பெரிதும் கடப்பாடுடையேன். நன்றி.

      Delete
  6. ஆத்தாடி....! எப்படி ஒரு உணர்ச்சி பூர்வமாக எழுதுகிறீர்கள். கருத்தும் இட வேண்டியதாகத் தான் இருக்கிறது. என்றால் இன்னும் ரசிக்க வசதியாக இருக்குமோ என்று தோன்றுகிறது. தங்கள் தரமான கவிதையை கிறுக்குபவர்களால் எப்படி புரியமுடியும்.( என்னை தான் சொல்கிறேன்).மிக்க நன்றி !
    வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      வணக்கம். தங்கள் கவிகள் நன்றாகவே உள்ளன. அதைச் சொல்லச்சற்றுப் படிப்பவன் என்ற முறையில் ஓரளவிற்குத் தகுதி இருப்பதாய் எனக்குநானே கருதிக் கொள்கிறேன்.முத்துநிலவன் அய்யா சொன்னது பொல் புரியும் படியான பதிவுகளை இட என் பழைய பதிவுகளில் தேடுகிறேன். வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள் பல!

      Delete

  7. வணக்கம்

    வெண்டளையில் முற்றும் விளைந்திருந்தால் தேனடையைக்
    கொண்டருளும் இப்பா கொழித்து!

    ருசித்திட என்பதைச் சுவைத்திட என்று எழுதலாமே!

    ஸ்பரிசம் என்பதை
    உற்றறிவு - தொடுவுணா்வு என்று எழுதலாமே

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கமும் நன்றியும். முன்பு எழுதியது. தளை பார்த்து எழுதினேனில்லை. ஏதோ உள்ளே எழுந்த ஓசையைக் கொண்டு எழுதிப் போனதாய் நினைவு. தவறினை வரும் நாளில் திருத்திக் கொள்கிறேன். இனிக் கூடுமானவரை பிறமொழிகளைத் தவிர்ப்பேன். உண்மையில் மேலும் செம்மையுறத்தக்கக் கருத்துக்களைக் கூறியமைக்கு நன்றி!

      Delete
  8. "வெட்ட வெளியிடைப் பொட்டல் நிலம்படு
    ஒற்றைப் பனைமரத்தில் - நீ" என வரும்
    அழகான பாடலைப் படித்தேன்.
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி அய்யா!

      Delete